Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, September 9, 2009

பழைய பஞ்சாங்கம் 09-09-2009

நடப்பது நல்லதற்கே.

சென்ற வருடம் இதே நாளில் தான் அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றது. ஆமாம் நான் இந்த வலைப்பக்கத்தை துவங்கினேன். எந்த
ஒரு திட்டமோ, கட்டமைப்போ இல்லாமல் நமக்கு தெரிந்த உண்மையை பிறருக்கு சென்று கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. ஆன்மீகம் - ஜோதிடம் என்ற பெயரில் மனதில் ஏற்படும் சுயமாயத்தோற்றத்தை கிழித்து நிதர்சனத்தை புகுத்தும் முகமாக பயணித்துவருகிறேன். ஜோதிடத்திற்காக துவக்கபட்டது, நீ எப்படி ஜோதிடம் தவிர பிற விஷயங்களை எழுதலாம் என கேட்டதால் சாஸ்திரத்திற்காக தொடருகிறது. அகோரிகள், ஸ்ரீ சக்ர புரி போன்ற தொடர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவுகளாக அமைந்தது.

முதலில் குரு கதைகள் எழுத மட்டுமே வந்த நான், இந்த வலைதளத்தால் அந்த குருகதைகளை மிகவும் தாமதமாக எழுதுகிறேன். சாஸ்திரம் பற்றிய திரட்டு என்னை அதிகமாக ஆக்கிரமித்தது.

வலைதளத்தில் எழுதுவதில் இருக்கும் சில நன்மை தீமைகள் உண்டு.

நன்மை : எனது பிம்மத்தை மனதில் கொள்ளாமல் நடுநிலையாக விமர்சனம் வருவது. தாங்கள் படித்தவிஷயத்தை என்னிடம் பேசும் பொழுது நினைவுபடுத்துவது.

தீமை : மிக முக்கியமாக சென்று சேர வேண்டும் என எழுதிய பதிவுகளை மக்கள் சீண்டாமல் போவது. ”மொக்கை” பதிவுகள் அதிகமாக மக்களை கவர்வது.


ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!

ஹேப்பி பர்த் டே வேதிக் ஐ...!

---------------------------------------------------------------------
கோளாறு...!

சென்ற வாரம் வட இந்திய புனித ஸ்தலங்களுக்கு சென்று இருந்தேன். சுப்பாண்டியும் என்னுடன் பயணித்தான். ரிஷிகேஷ் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கங்கையை சுட்டிக்காட்டி“ஸ்வாமிஜி ரிஷிகேஷில் ஆறு இருக்கும்னு சொன்னீங்க, இங்க ஒன்னுதான் இருக்கு. ஏமாத்திட்டீங்களே ஸ்வாமி..” என்றான். நான் ஒன்றும் பேசவில்லை. தியானம் செய்யும் முன் மனசை கெடுத்துக்கலாமா? பொறுமையாக சென்றுவிட்டேன்.

ரிஷிகேஷில் இருந்து நாற்பது கி.மீ தூரத்தில் தேவ ப்ரயாக் என்ற ஊர் உண்டு. பாகீரதி என்ற பெயரில் ஓடும் நதியும், அல்காநந்தா என்ற நதியும் இணைந்து சங்கமித்து இங்கிருந்து தான் கங்கை என்ற பெயரில் நதி உருவாகிறது. இரு நதியும் சங்கமிக்கும் இடத்திற்கு சென்றதும் சுப்பாண்டியை பார்த்து, “சுப்பு இங்க பாரு பாதி ஆறு ஓடுது” என்றேன். சுப்பாண்டி என்னை குழப்பத்துடன் பார்த்தான்.

”பாகீரதியும், அல்காநந்தாவும் இணைந்து கங்கையாக மூணா ஓடுது அப்போ ஆறுல பாதிதானே?” என்றேன். என்ன செய்யறது நாமளும் சில நேரத்தில சுப்பாண்டி ஆக வேண்டி இருக்கு.....!

----------------------------------------------------------------------
பிரதி வலது :) (Copy Right)

ஒரு பிரபல பதிவர் சாட்டில் (உரையாடியில்) வந்து, “நீங்க எல்லாம் என்ன எழுதறீங்க. ஒருத்தர் பாருங்க ருத்திராட்ஷம் பற்றி அருமையா எழுதி இருக்கார்” என அதன் சுட்டியைக் கொடுத்தார். அங்கே சென்று பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம் இந்த வலைதளத்தில் வந்த ருத்திராட்ஷம் பற்றிய கட்டுரையை அப்படியே காப்பி செய்து அங்கே பேஸ்ட் செய்திருந்தார் அந்த புண்ணியவான்.

அவருக்கு தனி மடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிறகு அதை நீக்கி விட்டார். வேறு யார் எல்லாம் இதில் இருக்கும் தகவல்களை பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.

அது இருக்கட்டும்... தகவலை ஒருவர் சொல்லாமல் எடுப்பதைகாட்டிலும், எனது கட்டுரையை பிற வலைதளத்தில் வந்த பிறகுதான் "அருமையா எழுதி இருக்கார்னு சொல்ல வேண்டுமா?” நீங்க எல்லாம் முழுமையா என் கட்டுரையை படிக்கிறீங்களா தங்கங்களே?

இன்னொரு பதிவர் ஒரு படி மேல போயி, ஸ்ரீ சக்ர புரி காப்பிரயிட்குள்ள வருமா? என்றார். ஏன் என கேட்டேன். “அது தான் நீங்க எழுதலயே?” என்றார். ஸ்ஸ்....பா..... இந்த வலையுலக பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா...

---------------------------------------------------------------------------
யாவர்குமாம் இறைவனுக்கு ஒர் இட்லி..!

ஒரு கவிஞர் எழுதிய முற்போக்கு கவிதையை என்னிடம் காட்டினார் எனது மாணவர். கவிதையின் வரிகள் முழுமையாக நினைவில்லை, அதன் சாராம்சம் இதுதான். சிவனின் திருவிளையாடலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு ஒன்று உண்டு.

முதியவளுக்கு பதிலாக தான் வேலை செய்வதாக கூறி, அவளிடம் இட்லியை சாப்'பிட்டு', வேலை செய்யாமல் உறங்கிவிடுவார் சிவன். அரசன் வந்து அவரை தண்டிக்க பிரம்பால் முதுகில் அடிக்க, உலக உயிர்கள் அனைத்திற்கும் முதுகில் பிரம்படி விழும். இந்த நிகழ்வை பற்றி அந்த கவிஞர் கவிதையில் எழுப்பி இருந்த கேள்வி என்னவென்றால் ,” பிரம்படி மட்டும் அனைவருக்கும் கிடைத்தது, இட்லி சிவனுக்கு மட்டும் ஏன் கிடைத்தது? அதுவும் அனைவருக்கும் சென்று இருக்க வேண்டும் அல்லவா?” (யாருக்காவது அந்த கவிதை வரிகள் தெரிந்தால் சொல்லலாம்)

கவிதை ஸ்வாரஸ்யமாக இருக்க நிகழ்வுன் சாரத்தை விட்டுவிட்டார்கள். என் மாணவனிடம் சொன்னேன், “சூரியன் ஒளிரும் பகல்வேளையில் திடீரென இருள் சூழ்தால் அதிசயம், சூரியன் மீண்டும் மீண்டும் ஒளிர்ந்தால் அதிசயம் அல்ல. அது போல உலக உயிர்களுக்கு என்றும் உணவை அளித்துவருபவன் ஈஸ்வரன். அதனால் அவன் உண்டு அனைத்து உயிர்களுக்கும் நிறைவு ஏற்படுவது எப்பொழுதும் நடந்தவண்ணம் இருக்கிறது. ஆதாவது பகல் போல. பிரம்படி என்பது திடீரென இரவு வருவது போல. அதனால் தான் ஒரு கணம் அனைவருக்கும் உணர முடிந்தது. மேலும் இதில் இருக்கும் உள் கருத்தை தெரிந்துகொள், நீ இறைவனுக்கு எதை கொடுக்கிறாயோ, அது உனக்கும், உன் சுற்றதிற்கும் பன்மடங்காக திருப்பி கொடுக்கப்படுகிறது. அது பிரம்படியாக இருந்தாலும்....” என்றேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

-----------------------------------------------------------------------
ஆன்மீக கடி ஜோக்

அந்த ஈ மிகவும் பரபரப்பாக இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு கைகளை பிசைந்து கொண்டும் இருந்தது. காரணம் ஈயின் துணைவிக்கு இன்று பிரசவம். சில நிமிடம் பரபரப்புடனேயே கழிந்தது. பிறகு நர்ஸ் வந்து “வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்றாள்.

குழந்தையை பார்க்க உள்ளே சென்ற ஈக்கு ஒரே அதிர்ச்சி. அனைவரும் குழந்தையை வணங்கி பூஜை செய்து கொண்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா?

அது “ஈ-சன்”

Monday, September 7, 2009

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

டிஸ்கோ லோகுவின் கடைக்கு வந்தான் மெண்டல் பாஸ்கர்.

“என்னடா காலையிலேயே வந்துட்டே...” இது டிஸ்கோ லோகு.

இருங்கள்...இவனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? டிஸ்கோ லோகு. என்றவுடன் தொப்பியில் ஒரு கையும் கால்சட்டையின் ஜிப்பில் ஒரு கையும் வைத்து மூன் வாக் போவான் என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு அதிகப்பிரசங்கி...! நகரின் மையத்தில் மணவறை அலங்காரம், சீரியல் லைட்டிங் செய்யும் கடைவைத்திருப்பவன். அதனால் இவன் பெயர் 'டிஸ்கோ' லோகு.

மெண்டல் பாஸ்கர் இவனின் உற்ற சகா. மெண்டல் பாஸ்கர் என்றவுடன் ஒரு அரை லூஸை நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களுக்கு நூறு மார்க். அவன் அப்படித்தான். திடீரென உணர்ச்சிவசப்படுவான் ஏன் எதுக்கு என அவனுக்கே தெரியாது.

இருவருக்கும் முழுநேரத்தொழில் பக்தியை பரப்புவது. உபதொழில் டிஸ்கோ டெக்கரேஷன்.

காலையில் டீ குடித்துவிட்டு பைக்கில் நகரை உலா வருவார்கள். காரணம் என்ன தெரியுமா? எல்லாம் ஆன்மீக தேடல்தான். நகரில் புதிதாக யாராவது ஆன்மீகவாதி வருவதாக போஸ்டர் பேனர் இருந்தால் அதை பார்த்து குறித்துகொள்ளுவார்கள். பிறகு அவரிடம் சென்று ஆசி பெறுவார்கள். அல்லது யோக பயிற்சி கற்றுக்கொள்வார்கள். தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும்


ஆன்மீகவாதியின் மகிமைகளை விளக்குவார்கள். ஆன்மீகவாதியின் படத்தை வைத்து பூஜித்து தினமும் பக்தி மணம் கமழ பஜன் செய்வார்கள். இது எல்லாம் அடுத்த ஆன்மீகவாதி பற்றிய போஸ்டர் ஒட்டும்வரை நடக்கும்.

புதிய ஆன்மீகவாதியை பின்பற்ற துவங்கியதும் பழைய ஆட்களை சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்வது இவர்களின் வாடிக்கை. இல்லை என்றால் இவர்களின் நண்பர்கள் புதியவரை பின்பற்றமாட்டார்களே?

தனது இருதயம் கோளாறு , ஒரு ஆன்மீகவாதி சொஸ்தபடுத்தியதாகவும் லோகு அடிக்கடி வெளியே சொல்லுவான். உண்மையின் அவனுக்கு ஒரு கேடும் இல்லை. இப்படி சொன்னால் தானே தான் வழிபடும் ஆன்மீகவாதியை பிறர் மதிப்பார்கள்?

மெண்டல் பாஸ்கர் இதற்கு ஒரு படிமேல். ஒரு ஆன்மீகவாதியை பார்க்க பேருந்து ஏறினானாம், டிரைவர் சீட்டில் அந்த ஆன்மீகவாதியே உட்கார்ந்து 'வாடா என் மகனே' என அழைத்திருக்கிறார். உடனே அவன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, உங்களை காண கிளம்பினேன் நீங்களே இங்க இருக்கீங்களே என கூறி பேருந்திலிருந்து இறங்கி திரும்பி ஊருக்கு வந்துவிட்டான். வரும்பொழுது மறக்காமல் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆசிரமத்திற்கு போன் செய்து ஆன்மீக குரு அங்கேயும் இருக்கிறாரா என கேட்டுகொண்டான். இரண்டு இடத்தில் காட்சி கொடுத்தால் தானே அதிசயம்?

இப்படியே இருவரும் செய்வதால் டிஸ்கோ லோகுவும், மெண்டல் பாஸ்கரும் நாட்டாமையின் தீர்ப்பு இல்லாமலே ஊரில் ஒதுக்கிவைக்கபட்டனர். ஆனால் இருவரும் தாங்கள் ஆன்மீக முன்னேற்றத்தால் மக்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதாக எண்ணிக்கொண்டார்கள்.

ஆன்மீக பெருவெள்ளத்தில் இப்படி அவர்கள் மூழ்கி திளைக்கும் ஒரு காலை நேரத்தில் தான் மெண்டல் பாஸ்கர் , லோகுவின் கடைக்குவந்தான்...

“ஒன்னும் இல்லைடா மச்சான், இன்னைக்கு காலையில நம்ம வீட்டு பக்கம் ஒரு பேனர் பார்த்தேன். ஒரு ஸ்வாமிஜீ நம்ம ஊருக்கு வரார். அவரை சந்திச்சாலே வாழ்க்கையில் பல அதிசயம் நடக்குதாம். கேட்ட வரத்தை கொடுப்பாராம்...”

“போடா லூஸு... இதை எல்லாம் நம்புவாங்களா?”.. என்றான் டிஸ்கோ லோகு.

லோகு இப்படித்தான் முதலில் நம்பமாட்டான், குதர்க்கமாக பேசுவான். நம்பிவிட்டான் என்றால், அதை அவனே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள மாட்டான். அவன் பின்பற்றும் சாமியார் ஒருவரை இன்னும் பரோலில் சந்தித்துவருகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“லோகு நம்புடா, இப்படி அவநம்பிக்கையா இருந்து நல்ல சான்ஸ்சை மிஸ் பண்ணிடாத.”

”டேய் பாஸ்கி, கேட்டது எல்லாம் கிடைச்சா மனுஷனுக்கு ஆணவம் வந்துடும்னு நீ படிச்சது இல்லையா?”

”அதெல்லாம் ரொம்ப பழைய தத்துவம்டா... இது புதுசு கண்ணா புதுசு. பாரதியாரே வரம் கேட்டுருக்கார் தெரியுமா?”

”அப்படியா? என்னடா வரம் கேட்டார்” என்றான் டிஸ்கோ லோகு.

பாரதியார் பாடல்கள் புத்தகத்தை எடுத்து உரக்க படிக்கதுவங்கினான் மெண்டல் பஸ்கர்.


நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
நீலி என்னியல்பு அறியாயோ?

தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

“டேய் பாஸ்கி ...நிறுத்து..... ” இடைமறித்தான் லோகு.

“இது ஒரு சினிமாவில வரும் வசனம். கமல் பேசுவார். யாரை ஏமாத்த பார்க்கற?”

“கஷ்டம்டா லோகு, இது பாரதியார் பாடல். இதில் இருக்கிறதை தாண்டா அவர் பேசினார்...”

”சரி மேல படி....”


நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.

கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!

ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!

பழைய சரித்திர படத்தில் வரும் வசனத்தை போல ஏற்ற இறக்கத்துடன் படித்து முடித்தான் மெண்டல் பாஸ்கர்.

“கேட்டியாடா லோகு பாரதியார் என்ன எல்லாம் கேட்டர்னு...? நாமும் அந்த ஸ்வாமிஜீ கிட்ட கேட்பமா?”

“பாரதியார் கேட்டது இருக்கட்டும். காளி தேவி அவருக்கு இதெல்லாம் கொடுத்தாளா?”

“லோகு நீ வர வர நாத்திகன் மாதிரி பேசர...”

“பாஸ்கி காளிகிட்ட இவ்வளவு அவர் கெஞ்சி, மிரட்டி கேட்டே கிடைக்கல, இந்த ஸ்வாமி கிட்ட கேட்ட கிடைக்குமா?”

“இவர் சாதாரண ஸ்வாமிஜீ இல்லை”

“பின்ன? குருவா?”

“இல்லை”

“இறைவனின் தூதரா?”

“இல்லை”

“பின்ன யாரு. சொல்லித்தொலை”

“அவரே கடவுள் தாண்டா”

“..........................................”
டிஸ்கோ லோகு ஒன்றும் பேசாமல் மெண்டல் பாஸ்கரை பார்த்தான்.


”பாரதியார் ரொம்ப காலம் முன்னாடி வாழ்ந்துட்டார். இப்போ வாழ்ந்திருந்தா ஸ்வாமிஜீயின் நிகழ்ச்சிக்கு வந்து இந்த பாட்டை பாடிருந்தா அவருக்கு எல்லாம் கிடைச்சுருக்கும்”

“அப்படிங்கற?.. சரி நாம போலாம்.”

--------------------------------------------------------------
டுத்த நாள் நகரின் ஒதுக்குபுறமாக இருந்த அந்த பொருட்காட்சி அரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டிஸ்கோ லோகு தனது செல்வாக்கை பயன்படுத்தி முன்வரிசையில் சென்று அமர்ந்தான். மெண்டல் பாஸ்கருக்கு உற்சாகம் தாங்கவில்லை.வரிசையாக ஸ்வாமிஜீயிடம் சென்று அனைவரும் வரம் வாங்கிகொண்டிருந்தார்கள். மெண்டல் பாஸ்கரின் முறை வந்தது. பரபரப்புடன் சென்று அவரை கட்டி அணைத்துகொண்டான். கண்ணீர்விட்டு அழுதான். அவன் கிளப்பிய ஓலம் அங்கே பாடிய பஜனையால் அமுக்கபட்டது. அவனை தேற்றிய ஸ்வாமிஜீ உனக்கு என்ன வேண்டும் என கேட்டார்.

‘நீங்கள் எப்பொழுதும் என்னுடன் இருக்க வேண்டும்” என்றான் மெண்டல் பாஸ்கர்.

ஸ்வாமிஜி அவனுக்கு அவரின் பெரிய படத்தை கொடுத்தார். ”இதை வைத்துக்கொள். நான் உன்னுடன் எப்பொழுதும் இருப்பேன்” என்றார்.மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தான் பாஸ்கர்.

கவனிக்கவும்...வெறும் பாஸ்கர்.

ஸ்வாமிஜீயின் படமும், இவனின் அடைமொழியும் பரிமாற்றம் அடைந்திருந்தது....!

அடுத்து டிஸ்கோ லோகுவின் முறை....

அவரின் முன் முழந்தாளிட்டு நின்றான் டிஸ்கோ லோகு....

சுற்றியும் பார்த்தான்... ஸ்வாமிஜீயின் சிஷ்யர்கள் அவரின் அருகில் அதிகமாக இருந்தார்கள். டிஸ்கோ லோகுவின் முகத்தை பார்த்த ஸ்வாமி அவனின் உள்ள கிடக்கையை புரிந்து கொண்டு அனைவரையும் விலகி நிற்க சொன்னார்.

டிஸ்கோ லோகு தனது வரத்தை கேட்க துவங்கினான்.....

“ஸ்வாமி நீங்க போன வருஷம் வந்த போதும் சரி, இப்போ வந்திருக்கும் பொழுதும் சரி.... உங்க மேடை அலங்காரம் எல்லாம் நான் தான் செஞ்சேன்.... ஆனா உங்க ஆளுக எனக்கு பேமெண்ட் கொடுக்கல... நீங்க தான் ஸ்வாமி எனக்கு அது கிடைக்க வரம் கொடுக்கனும்”

ஸ்வாமிஜீ அவனை பார்த்தார்.....தனது சட்டை பாக்கெட்டில் இருந்து விசிடிங் கார்ட் எடுத்து அவரிடம் கொடுத்தான் டிஸ்கோ லோகு.

ஸ்வாமிஜீயும் அவர் அருகில் இருந்த நகரின் பெரிய மனிதரை அழைத்து அதை கொடுத்தார். பெரிய மனிதர் டிஸ்கோ லோகுவை பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமி தனது கைகளில் வரம் அருளினார்.

கடவுளின் வரத்தால்.....டிஸ்கோ லோகு தன்யன் ஆனான்

நீங்களும் முயற்சி செய்யுங்கள்....
உங்கள் வாழ்க்கையும் வரங்களால் நிரப்பப்படலாம்.

கேளுங்கள் கொடுக்கப்படும்...
தட்டுங்கள் திறக்கபடும்...!

---------------------------------------------------------
டிஸ்கி 1 : படத்தில் இருப்பவர் மாடல் மட்டுமே. அவருக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. :))

டிஸ்கி 2: இந்த புனைவு யாரையும் குறிப்பது அல்ல.
..!

ஸ்ரீ சக்ர புரி - சிறு விளக்கம்

பரமாத்மாவின் பிரதிபிம்பங்களுக்கு,

கடந்த ஒரு மாதகாலமாக ஸ்ரீ சக்ர புரி என்ற தொடரை படித்து ரசித்து கருத்துக்கள் பகிர்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஸ்ரீ சக்ர புரி என்ற இந்த தொடரை பற்றியும் இதற்கு பின்புலத்தில் வேலை செய்த விஷயங்களை பற்றியும் விளக்க விரும்புகிறேன்.

முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இத்தொடரை நான் எழுதவில்லை...!

எனது உணர்வு நிலையில் எழுதினால் என்னால் இவ்வாறு எழுத முடியாது என்பதே உண்மை. இந்த வலைதளத்தில் இருக்கும் பிற கட்டுரையின் வடிவத்திற்கும், எழுது நடைக்கும் ஸ்ரீ சக்ர புரி தொடரில் உள்ள வடிவத்திற்கும் உள்ள வித்தியாசம் படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

உணர்வு நிலையில் எழுதி இருந்தால் நான் பல பகுதிகளை எழுதி இருக்க மாட்டேன். முக்கியமாக என்னை பற்றிய விஷயங்களை...!

ஸ்ரீ சக்ர புரி தொடரை பொருத்த வரை நான் ஒரு எழுது கோலாகவே இருந்தேன். படித்து ரசித்த உங்களுக்கும் எழுதுகோலான எனக்கும் என்ன வித்தியாசம் என்றால்.. முதலில் படிக்கும் பாக்கியமும், அதை சிறு மாற்றம் செய்து பதிவேற்றம் செய்யும் வேலை ஆகியவை தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. உங்களை போலவே சுவாரசியமாகவும், அடுத்த பகுதிக்காகவும் நான் காத்திருந்தேன் என்பதே உண்மை.

அதில் இருக்கும் சில விஷயங்களை திருத்தம் செய்ய நான் 'புத்திசாலிதனத்தை' பயன்படுத்தியதால் சிறு குழப்பமும் விளைந்தது. அவை அனைத்தும் அதன் அருளால் மேம்பட்டது.

திருவண்ணாமலை என்னும் இடத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் நோக்கில் மட்டுமே அந்த தொடர் எழுதபடவில்லை என படித்த உங்களுக்கு புரிந்திருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியவாரே உணவு ஊட்டுவது போல நம்மை அறியாமல் நாடிகள், சாஸ்திரங்களும் தெரிந்து கொண்டோம் அல்லவா?

நல்ல விமர்சனங்களை போல என் மேல் அன்புடன் பலரும் விமர்சனம் செய்தார்கள். அவர்களின் விருப்பபடியும் எனது விருப்பதினாலும் இனிவரும் கட்டுரைகளில் எனது ஆன்மீக அனுபவங்களை வெளிப்படையாக எழுதுவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என வேண்டுகிறேன்.


இவன்
உங்கள் அன்பன்
ஸ்வாமி ஓம்கார்

Saturday, September 5, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15

ஆன்மீகம் என்பது உலக மக்களிடயே மத ரீதியாக பரவி இருப்பதால் அவர்களுக்கு உள் நிலையும் முழுமையாடையாமல் இருக்கிறது. அதனால் தான் ஸ்ரீ சக்ர புரி போன்ற இடங்களில் எப்பொழுதும் மஹான்கள் தோன்றி ஆன்மீக பேராற்றல் குறையாத வண்ணம் இருக்க செய்கிறார்கள்.

ஜீவன் முக்தர்களான இவர்களின் ஆற்றல் ஏந்த வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சென்று சேருகிறது. ஏழை - பணக்காரன், ஆண்-பெண், ஜாதி-மதம் போன்ற வித்தியாசங்கள் இவர்களின் சன்னிதியில் இருப்பதில்லை.

பகவான் ரமண மஹரிஷியை புரிந்துகொள்ளாத பலர் அவர் பிராமணர்களுக்கு ஆசிரமம் நடத்தியதாக சொல்லுவார்கள். இவர்களின் அறியாமைக்கு விலங்குகளை கூட ஒப்பிட்டு விலங்குகளை அசிங்கபடுத்த கூடாது. பிரட்டீஷ் காலத்தில் வாழ்ந்த கட்டுபெட்டிதனமான பிராமண சமூகம் பிற ஜாதி மதத்தினரை அருகில் வரவோ தொட்டு பேசவோ அனுமதிக்க மாட்டார்கள். முக்கியமாக அவர்களை சமமாக வைத்து பேசமாட்டார்கள். ஆனால் பகவான் ரமணர் தனது ஆழந்த ஆன்மீக ஆற்றலால் பல்லாயிர கணக்கான கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள வெளிநாட்டினரை திருவண்ணாமலைக்கு ஈர்த்தார்.

அந்த வெளிநாட்டினரில் சிலர் ரமணரின் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டு அங்கேயே முக்தி அடைந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாது அருணாச்சலா. இவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியில் போர் புரிந்தவர். பிறகு ரமணரின் தரிசனத்தால் தன்னிலை உணர்ந்து ஐரோப்பாவிலிருந்து வந்து ரமணாஸ்ரமத்தில் தஞ்சம் அடைந்தார். ஐரோப்பியரானாலும் தமிழ் பயின்று ரமணரின் மேல் வெண்பா பாடும் அளவுக்கு சாது அருணாச்சலா அவர்களின் ஆன்மீக வாழ்க்கை அமைந்தது. ரமணாஸ்ரமத்தில் பின் புறம் , கந்தாஸ்ரமம் போகும் வாயிலின் அருகில் இவரின் சமாதி இருக்கிறது.

சாதுக்களுக்கு மட்டும் அல்ல, காகம், குரங்கு, பசுமாடு மற்றும் மயில் ஆகியவற்றிற்கும் பகவான் ரமணர் முக்தி அளித்து ரமணாஸ்ரமத்திலேயே சமாதி எழுப்பி இருக்கிறார்கள். ஞானிகளின் முன் யாவரும் ஒர் நிலையில் இருக்கிறோம் என்பதை ரமணரின் சன்னிதியே மாபெரும் சாட்சியாகும்.

திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டினர் ஆன்மீக உணர்வு இல்லாமல் சுற்றுலா நோக்குடன் வந்தாலும் ஏதோ ஒரு சக்தி அவர்களை புரட்டி போட்டுவிடுகிறது. வந்தவுடன் பத்து நாட்கள் அவர்களின் செயல் சுருங்கி மிகவும் மெளனத்தில் இயற்கையாகவே இருப்பார்கள். அவர்களின் இயக்கம் மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும். எனது ஐரோப்பிய மாணவர்களிடமும், வேறு சிலரிடமும் நான் நேரடியாக உணர்ந்த விஷயம் இது. பிறகு அவர்களிடம் விசாரித்தால் ஆனந்த கண்ணீரை தவிர பதில் எதுவும் இருக்காது.

ஸ்ரீ சக்ர புரிக்கு வரும் வெளிநாட்டினர் தங்களுக்குள் இருக்கும் நற்பண்புகள், அன்பு, சேவை இவற்றை யாரும் கற்றுதராமலே உணருகிறார்கள். தங்கள் நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்க் கூட அவற்றை விட்டு விட்டு இங்கே பிறருக்கு சேவை செய்ய வந்து விடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு ஐரோப்பிய இளைஞன் சைக்கிளில் மரகன்றுகளும் தண்ணீர் டிரம்முடன் தினமும் பயணிப்பார்.

மரக்கன்றை நட்டு நீர் ஊற்றி வளர்ப்பது அவரின் சேவை. திருவண்ணாமலை மற்றும் கிரிவல பகுதி இவ்வளவு பசுமையாக இருக்க அவர் அதிகபட்ச காரணம் என்பேன். ரமணாஸ்ரமத்தின் அருகில் சிறிய இடத்தில் அவர் மரக்கன்றுகளை வளர்க்கிறார். நீங்கள் அவரிடம் மரகன்றை இலவசமாக வாங்கி சென்றால் எங்கே வைக்கிறீர்கள் என கேட்டு அடுத்த நாள் சைக்கிளில் அதற்கும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார். யாரிடமும் உதவி பெறாமல் தனிமனிதனாக பல ஆண்டுகளாக இவர் இயங்கிவருகிறார். பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறோம் என தினசரியில் விளம்பரம் செய்யும் ஆன்மீகவாதிகளை காணும் பொழுது இந்த ஐரோப்பிய இளைஞனை நினைத்துக்கொள்வேன்.

திருவண்ணாமலையை பார்த்துக்கொண்டிருப்பது என்பதே தியானம் என சில பகுதிகளுக்கு முன் கூறினேன் அல்லவா? சில வெளிநாட்டினர் திருவண்ணாமலையை தினமும் காணும் நோக்குடன் அருணச்சலா லைவ் என்ற இணைய தளத்தை நடத்திவருகிறார்கள். இதில் தினமும் அருணச்சல மலையின் வெவ்வேறு வடிவங்களை நேரடி ஒளிபரப்பாக தருகிறார்கள். நீங்களும் தினமும் உங்கள் வீட்டில் இருந்தபடியே அருணாச்சலனை தரிசிக்கவேண்டுமா இதோ இணைப்பு. நினைத்தாலே முக்தி தரும் ஸ்ரீசக்ர புரியை தினமும் பார்த்தவாரே இருப்பது பெரும் பேறு அல்லவா?

திரு ரிச்சர்ட் என்பவர் அவரின் மனைவியுடன் அருணாச்சலத்தில் தங்கி எளிமையாக வாழ்ந்துவருகிறார். அவரின் வலைதளத்தில் ஸ்ரீசக்ர புரியின் ஒவ்வொரு அடியையும் ஆங்கிலத்தில் அவர் எழுதும் அமைப்பு சிறப்பு. தனது பெயரை கூட ரிச்சர்ட் அருணாச்சலா என மாற்றிவிட்டார் இவர். இவரின் வலையை படிக்க இங்கே சுட்டவும்.


தனது பிறந்த நாள் அன்று சாதுக்களுக்கு அன்னம் கொடுக்கிறார் ரிச்சர்ட் அருணாச்சலா.
அதை பின்னால் இருந்து பார்ப்பவர் யார் என தெரிகிறதா :) ?


மேற்கண்ட செயல்களை நம் ஆட்கள் செய்யவில்லை என்பதில் எனக்கு வருத்தும் உண்டு. பெளர்ணமி கிரிவலத்தில் சாப்பிட்ட மக்காசோள வில்லை, கடலை தோல், கரும்பு சக்கை மற்றும் மண்ணின் எதிரி பிளஸ்டிக் ஆகியவற்றை ஸ்ரீசக்ர புரியில் போடுவதை தவிர நம்மவர்கள் எதுவும் செய்யவில்லை. நமக்கு எப்பொழுதும் ஒரு விஷயம் கையில் இருக்கும் பொழுது அருமை தெரியாது.

பிரிட்டீஷ்காரர்களின் ஆதிக்கம் வரும் வரை நாட்டின் மேல் நமக்கு பற்றுவந்ததா என்ன? அது போல நாம் ஸ்ரீ சக்ர புரியை அனைவரும் உணரும் பொழுது காலம் கடந்திருக்கும்.

கடந்த மூன்று நாட்களாக இருந்த ஆனந்த நிலை என்னில் நிலைபெற்றவண்ணம் இருந்தது. கோவைக்கு திரும்ப செல்லும் முன் நான் வந்து இறங்கிய ரமணாஸ்ரமத்தின் முன் மண்டபத்தின் முகப்பில் அமர்ந்திருந்தேன். ஒரு ஐரோப்பியருடன் பேசியவாறே நடந்து சென்றார் நம் ஊர்காரர். அவர் ஐரோப்பிய ஆசாமி சொன்னது இதுதான். “ பிலிப் நீங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் ரமணருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ரமணர் அனைத்தையும் துறந்தவர். நியம அனுஷ்டானங்கள் அவருக்கு கிடையாது....” நான் மெல்ல என்னுள் சிரித்தேன்.

நான் மெல்ல சிரிப்பைதை கண்ட அந்த பிலிப் என்ற ஐரோப்பியர் அவருடன் வந்தவரிடம் ஒருநிமிடம் என சொல்லிவிட்டு. ஸ்வாமி நீங்கள் சிரித்ததன் காரணம் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா? என கேட்டார்.

“பிலிப் பகவான் ரமணர் சராசரி மனிதனால்
புரிந்துகொள்ள முடியாதவர். அவர் இப்படித்தான் என சொல்ல நாம் ரமணராக இருக்க வேண்டும். ஸ்ரீ சக்ரம் என்பது தற்காலத்தில் சிலரால் தவறாக சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ரமணர் உபாசனை செய்ய வில்லை என்றாலும், ஸ்ரீ சக்ரத்தின் மையமான ஸ்ரீ மேரு ஒன்றை ரமணாஸ்ரமத்தில் நிறுவி அதில் தனது ஆற்றலை நிலை படித்தி இருக்கிறார். தனது பூத உடலை உதிர்த்தாலும் தனது ஆற்றலால் என்றும் இங்கே நிறைந்து இருக்கிறார் ” என்றேன்.


எங்கே எங்கே என இருவரும் ஆர்வமாக கேட்க, மாத்ரூ பூதேஸ்வரர் ஆலயத்தில் ரமணரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீமேருவை காண்பித்தேன். இன்றும் ரமணாஸ்ரமத்தில் தமிழ் மாத முதல் நாளும், பெளர்ணமி அன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் அனைவரும் பார்க்குமாறு ஸ்ரீ மேருவை பூஜிக்கிறார்கள் என விளக்கிவிட்டு அவர்கள் ஸ்ரீமேருவை வணங்கியபடி இருக்க நான் திரும்பி மெல்ல நடந்தேன்.

ரமணாஸ்ரம வாயிலில் வந்து நின்றேன். பின்னாலேயே
பிலிப் வந்து ,”ஸ்வாமி உங்களுக்கு ஸ்ரீ சக்ரம் பற்றி ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார். “எனக்கு அவ்வளவாக தெரியாது நான் இப்பொழுது கோவைக்கு செல்லுகிறேன். வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எனக்கு தெரிந்ததை பேசுவோம்” என்றேன்.

பிலிப் என்னை விடுவதாக இல்லை. நான் பேருந்துக்காக காத்திருப்பதை பார்த்து, தனது வாகன ஓட்டியுடன் தனது காரை என்னிடத்தில்
ஓட்டிவந்து,”ஸ்வாமி இந்தியாவின் எந்த மூலைக்கு செல்லுவதாக இருந்தாலும் உங்களை கொண்டு விடுகிறேன். என்னுடன் பயணத்தி படியே ஸ்ரீசக்ரத்தை பற்றி சொல்லுங்கள் என்றார். அவருடன் அன்று இரவு ஸ்ரீ சக்ரத்தின் தன்மையை விளக்கியபடியே அங்கிருந்து கோவை வந்தடைந்தேன்.

உங்களின் கருத்துக்களை கேட்டபிறகு மிக பிரம்மாண்டமாக ஸ்ரீ சக்ரத்தை உருவாக்க வேண்டும் என தோன்றுகிறது ஸ்வாமி என்றார் பிலிப். நான் புன்னகைத்தவாறே உங்களுக்கு அந்த வேலை பளு தேவை இல்லை என கூறி இந்த தொடரின் முதல் பகுதியை விளக்க துவங்கினேன்...

ஸ்ரீ சக்ர புரி என்றும் முடியாது. துவங்க மட்டுமே செய்யும்...!

|| ஓம் நமோ பகவதே அருணாச்சலேஷ்வராயா ||