Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, January 31, 2018

கிரகணம் சில கேள்விகள்

கிரகணம் என்றால் என்ன?
சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழுது கிரகண நேரத்தில் சூரியனின் ஒளி மறைக்கப்பட்டால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் மறைக்கப்பட்டால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறார்கள்.

கிரகணத்தின் முக்கியத்துவம் என்ன?
பூமியினால் ஆனது நம் உடல். சந்திரனால் ஆனது நம் மனது. சூரியனால் ஆனது ஆன்மா. இவை மூன்றும் வான மண்டலத்தில் ஒருங்கிணையும் பொழுது, நம் உள்ளேயும் ஒன்றிணைகிறது. யோகிகள் பல பயிற்சிகள் செய்து அடைய வேண்டிய உடல்,மனம், ஆன்ம ஒருங்கிணைப்பை கிரகண சூழல் தாமாகவே நிகழ்த்துகிறது. இயல்பு வாழ்க்கை நிலையிலேயே கிரகண காலத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உயர் ஆன்மீக நிலையை அடைய கிரகண காலம் பயன்படுகிறது.

கிரகண காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
இயல்பாக நாம் செய்யும் செயல்கள் ஒரு பங்கு விளைவை ஏற்படுத்தும் என்றால் கிரகண காலத்தில் செய்யும் செயல் ஆயிரம் மடங்கு பலன் தரும்.

நம் ஐந்து உணர்வு உறுப்புகளாலும் வெளிமுகமாக செய்யும் செயலை தவிர்த்து உள் முகமாக முயற்சி செய்ய வேண்டும். உணர்வுகள் உள் குவிக்கப்பட்டால் அவை ஆயிரம் மடங்கு குவிந்து தியானம் உருவாகும். இதுவே ஐந்து உணர்வுகளும் சிதறி வெளி முகமாக இருந்தால் அயிரம் மடங்கு சிதறி பாதிப்பை உண்டாக்கும்.

கிரகண காலத்தில் இறை நாமம் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மந்திர தீக்‌ஷை பெற்றவர்கள் மந்திர ஜபம் செய்யலாம். ப்ராணாயமம் மற்றும் தியானம் செய்யலாம். இதனால் மனம் குவிந்து பெரும் தியானம் நிகழும்.

கிரகண காலத்தில் கோவில்கள் மூடி விடுகிறார்களே? கடவுளே கிரகண காலத்தில் சக்தி இழப்பார் என்பதாலா?

கிரகண காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாக பார்ப்பதால் ஏற்படும் விளைவு இது. இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் கலாச்சாரம் வளர்க்கும் இடமாகவும் இருந்தது. ஆடல் பாடல் மற்றும் மொழி வளர்ச்சிக்கு அடையாளமாக இருந்தது. அதனால் கிரகண கால கட்டத்தில் நம் ஐம்புலனுக்கு ஓய்வு கொடுத்து உள் முகமாக திருப்ப வேண்டும் என்பதால் கோவில்களை அடைத்தனர். இதுவே வட நாட்டில் கிரகண காலத்தில் கோவில்கள் அடைக்கப்படுவதில்லை. காரணம் அங்கே கோவில்கள் வழிபாட்டிற்கு மட்டுமே இருந்தது.  மேலும் பல்வேறு ஜீவ நதிகள் இருப்பதால் அதன் அருகே நீராடி ஜபம் செய்ய அவர்களுக்கு வசதி இருப்பதும் ஒரு காரணமாகும்.

உங்கள் நண்பரை அவரின் அலுவலகத்தில் சென்று சந்திக்க செல்கிறீர்கள். அலுவலகம் பூட்டி இருக்கிறது... அந்த நண்பர் உங்கள் வீட்டிலேயே உங்களுக்காக காத்திருக்கிறார் அவர் தன் சக்தியை இழந்துவிட்டார் என அர்த்தமா? கிரகண காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் இறையாற்றல் தன் தனித்தன்மையை இழப்பதில்லை. இறையாற்றல் நமக்குள் இருக்கிறது என உணரும் காலமே அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண நாட்கள் என புரிந்துகொள்ளுங்கள்.

கிரகண காலத்தில் உணவுகள் நஞ்சாக மாறுகிறதா?
கிரகண காலத்தில் கதிர்வீச்சு வருகிறது. உணவில் கதிர்வீச்சு ஏற்பட்டு அது கெட்டுப் போகிறது. கர்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்பது போன்ற விஷயங்களின் பின்புலத்தை ஆராயாமல் பலர் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.  மேல் சொன்ன காரணத்தை ஆராய்ந்தால் இதன் பின்புலம் புரியும். கிரணகாலத்தில் ப்ராணாயமம், ஜபம், தியானம் செய்ய வேண்டி இருப்பதால் அந்த நேரத்தில் உணவு சாப்பிடக் கூடாது. சாப்பாடு உடலில் இருக்கும் சமயம் நம் சக்தி ஜீரணத்திற்கு செல்லுமே தவிர ஆன்மீக பயிற்சிக்கு செல்லாது. 

தினமும் கூட மூன்று வேளை உணவு சாப்பிடும் நேரத்தை கவனியுங்கள். பகலும் இரவும் இணையும் நேரமான சந்தியா(இணைவு) காலத்தில் உணவு சாப்பிடக் கூடாது என்கிறது நம் கலாச்சாரம். சந்தியா காலம் போலவே இதுவும் இணைவு காலம் தான். அதனால் அந்த நேரத்தில் ஆன்மீக பயிற்சி செய்து உணவை தவிர்க்க வேண்டும். இதை தவிர உணவு கெட்டு நஞ்சாகும் , கதிர்வீச்சு என்பது எல்லாம் நம்மை ஆன்மீக பயிற்சிக்கு திருப்ப சொல்லும் பயமுறுத்தும் கருத்துக்கள். பூச்சாண்டிக்கு பயந்து உணவு சாப்பிட்டு வளர்ந்த நாம் , இப்பொழுது கிரணகத்திற்கு பயந்து சாப்பிடுவதில்லை..!

உணவு சாப்பிடும் பொழுது நம் ஐந்து புலன்களும் வெளிமுகமாக இருப்பதால் கிரகண காலத்தில் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். உடல் உறவு, உணவு , சினிமா பார்த்தல் மற்றும் விளையாட்டு இவை நம் புலன்களை வெளிமுகமாக திருப்பிவிடும். அதனால் ஐந்து புலன்களும் சிதறி நம் கட்டுப்பாடுகளை இழக்க நேரிடும்.

முன்பு காலத்தில் சூரிய கிரகண காலத்தில் இயற்கை ஒளி இழந்து இரவு போல அனைத்தும் இருளாக இருக்கும்.

வெளிநாடுகளில் கிரணத்திற்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே?
பல நூறு வருடங்களுக்கு முன்பே பாஸ்கரர், ஆரியபட்டர் போன்றவர்களும் அதற்கு முன்பும் கிரகண கால ஏற்படும் காலத்தை துல்லியமாக கணித்து அதன் அடிப்படையில் பஞ்சாங்கம் உண்டாக்கியவர்கள். அதன் பின் வந்த அறிஞர்கள் கிரணத்தை மேலும் ஆய்வு செய்து அதன் பயன்களை வெளிப்படுத்தினார்கள். மேல்நாட்டினர் இன்னும் கிரகண கணக்கையே முழுமையாக அறியவில்லை. அதனால் நாம் பின்தங்கியவர்கள் அல்ல. அவர்களே மிகவும் பின் தன்ங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

விஷேஷ நாளான பெளர்ணமி, தைபூசம் (31-01-2018) அன்று கிரகணமும் வருகிறதே இதில் ஏதேனும் பிரச்சனைகள் வருமா?
மேலை நாட்டினர்கள் பற்றி உயர்வாக சொன்னீர்கள் அல்லவா? அவர்களின் கல்வி கலாச்சாரத்தை பின்பற்றியதால் வந்த வினையே இது. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் சூரிய கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று அமாவாசையாகவும், சந்திர கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று பெளர்ணமியாகவும் இருக்கும். இதுவே வானிலை நியதி. நாம் மேலைநாட்டு வானிலை படித்ததன் விளைவு நம் சிந்தனைகளை தொலைத்துவிட்டோம். அதனால் சந்திரகிரகணம் வர வேண்டுமானால் அன்று பெளர்ணமியாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

கிரகணம் இன்று கடகம்-  மகரம் போன்ற ராசிகளுக்கும் சில நட்சத்திரத்திற்கும் பிடிக்கும் அதனால் அர்ச்சனை செய்து நிவிர்த்தி பூஜை செய்ய வேண்டும் என ஆலயத்தில் எழுதி இருப்பதை பார்த்தேன். அதன் அடிப்படையில் கிரகணம் முடிந்து சென்று அர்ச்சனை செய்யலாமா?

ஜோதிடம் இவ்வாறு சொல்லுவதில்லை. சிலர் வழிபாட்டு நம்பிக்கையாக இதை செய்கிறார்கள். அந்தணர்கள் முன்னோர்களை வழிபடுவார்கள். தாந்த்ரீகர்கள் வேறு வகையாக வழிபடுவார்கள். உங்களின் நம்பிக்கை மற்றும்  குருவின் வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படுங்கள்.

இன்று தெரியும் சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய நிலவாகவும் நீல நிறமாகவும் தெரியும் என சொன்னார்களே?
நம் நாட்டில் ஆறு வகையான பருவ நிலை இருக்கிறது. ஒரு பருவ நிலை முடிந்து அடுத்த பருவ நிலை துவங்கும் காலத்தில் ஏற்படும் பெளர்ணமி நிலவு பெரிதாக இருக்கும். இதற்கு பூமியின் சுற்றுப்பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் ஒரு காரணமாகும்.
மற்றபடி பெரிய நிலவு , நீல நிறம் என்பதெல்லாம் கற்பனையே. நாம் வசிக்கும் இடத்திறின் தட்பவெட்பம், பருவ நிலை மாறுபாடுகளை பள்ளிக்கல்வியில் சேர்க்காமல் விண்டர், சம்மர் என படிப்பதால் வரும் குழப்பமே இது.

கிரகணம் பற்றிய பிற கட்டுரைகள் : http://vediceye.blogspot.in/2009/07/blog-post_11.html