Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Friday, February 11, 2022

குருவின் அருள்

ஒரு உயிர் தனக்கு குரு கிருபை கிடைப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறது. உண்மையில் குருவின் அனுக்கம் உடனடியாக அனைவருக்கும் கிடைப்பதில்லை.

ஓர் உயிர் குருவை அடைய குறைந்தபட்டம் ஐந்து பிறவிகளை எடுக்கிறது. முதல் பிறப்பில் குருவின் சிறப்புகளை செவியின் மூலம் பிறர் சொல்லுவதை கேட்கிறது.  அதன் காரணமாக இரண்டாம் பிறப்பில் குருவை கண்களால் பார்த்து தரிசனம் பெறுகிறது. தரிசனத்தின் காரணமாக மூன்றாம் பிறப்பில் குருவுடன் ஏதோ ஒரு உயிரினமாக பிறந்து உணவை பகிர்ந்து ருசிக்கும் பிறப்பு அமைகிறது. 

 ருசி உணர்ந்ததன் காரணமாக நான்காம் பிறப்பில் மேலும் அருகாமையில் பிறந்து குருவின் தொடுதலும் ஆசீர்வாத ஸ்பரிசங்களையும் பெறுகிறது. இவற்றின் காரணமாக ஐந்தாம் பிறப்பில் குருவின் அருள் பெற்று தனது சுவாசத்தை மேம்படுத்தி அந்த உயிர் உயர்நிலையை அடைகிறது. 

ஆன்மாவில் குருவை உணர அந்த உயிர் தனது ஐந்து புலன்களின் வழியே சிறிது சிறிதாக உள்வாங்கி நிலைபெறுகிறது. இதற்கு ஐந்து பிறவிகளோ அல்லது ஆயிரம் பிறவிகளோ தேவைப்படலாம். குருவின் அனுக்கம் கிடைக்கபெறுவது அரிது. பலர் குருவின் கிருபை என்பது எளிதில் கிடைக்கும் விஷயமாக கருதுகிறார்கள். குருவின் அருகாமை கிடைக்க பல்வேறு பிறப்பை கடந்து வந்திருக்கும் கடும் பயணம் அவர்களுக்கு நினைவில் இருப்பதில்லை. குரு ஒரு சிஷ்யனை உணரும் பொழுது அவனின் பயண காலத்தையும் சிஷ்யனின் உயிர் கடந்த வடிவங்களுடனேயே அவனை உணர்கிறார். இப்பிறப்பில் ஆன்மாவின் பயணத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை சுய சிந்தனையில் உணர்ந்து நம் குருவின் ஆசிகளை பெறுவோம்.


கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியல் வந்தணு கானே

-திருமந்திரம் 2051

ரசவாதியின் கையில் கிடைக்கபெற்ற இரும்பானது தங்கமாக மாறும். ஒருகாலத்திலும் அந்த தங்கம் மீண்டும் இரும்பாகாது. அது போல குருவின் அருள் முழுமையாக பெற்றவனுக்கு அடுத்த பிறப்பு என ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை.

Monday, August 26, 2019

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2  - 


    அனுபவ பகிர்வு : விஜி ராம்


பயணம் வேறு யாத்திரை வேறு. பயணத்திற்கு நண்பர்கள் தேவை. யாத்திரைக்கோ குரு மிக அவசியம். புராண தலங்கள், ஆன்மீகதலங்கள் போன்றவை நண்பர்களுடன் செல்வதை விட நம்மை அறிந்த நாம் புரிந்து கொள்ள நினைக்கும் குருவுடன் செல்வது நம்முள் இருக்கும் அறியாமை இருளை நீக்கி, அந்தந்தத்தலங்களை இன்னும் அதிகம் அனுபவிக்க வழிவகுக்கும்.



நான் போக வேண்டும் என்று நினைத்த பெரும்பாலான தலங்கள் குரு மூலமே தரிசித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் நம் எண்ணத்தை சொல்லிவிட்டு மறந்து விடலாம், எப்படியேனும் நம்மை அழைத்து சென்றிடுவார். திருவண்ணாமலை, காசி, அலகாபத், கயா, ஹிமாலயாஸ், தேவப்ரயாகை, கும்பமேளா என்ற அந்த வரிசை இன்னும் அதிகம், 2015 வருடம் முக்திநாத் செல்லும் ஆர்வத்தை செயலாக்கும் போது பூகம்பத்தால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இதோ இந்த மேமாதம் முக்திநாத்தை தரிசிக்கும்  பாக்யம் பெற்றோம். 



முக்தி நாத்: 

நாத பரம்பரையின் பூமி, ஆதிநாதரின் ஆதிக்கபூமி. அங்கே செல்கிறோம் என்ற எண்ணமே மிக உவப்பானதாக இருந்தது. போகும் முன் பார்த்த , படித்த விசயங்கள் அனைத்துமே கொஞ்சம் பீதியளிப்பவையாகவே இருந்தது. ஆனால்  அதைப்பற்றி அதிகம் என்றுமே யோசித்ததில்லை, அழைத்துசெல்பவர் கண்டிப்பாக இவற்றை சரிபடுத்தி நல்ல தரிசனத்துடன் ஆனந்த பயணமாகவே ஆக்குவார். டெல்லி, காத்மாண்டு, போஹ்ரா, ஜோம்சம் என்று தினமுமே குறிப்பிட்ட தூரம்  பயணம்  செய்தே முக்திநாதரை அடைய முடியும். பயணத்திட்டம் நாம் தீட்டலாம், ஆனால் இயற்கையே இறுதி முடிவெடுக்கும். மழை, பனிப்புயல், நிலச்சரிவு, அடிக்கடி நடக்கும் விபத்துகள் என்று அனைத்தையும் தாண்டி இயற்கை நம் பயணத்தின் தன்மையை தீர்மானிக்கும்.  ஆதிநாதர் அனுமதித்து, இயற்கை விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். 

மே 21 நடு இரவு 1 மணி விமானத்தில் டெல்லிக்கு பயணித்து காத்மாண்டு விமானம் ஏறி  மதியம் 2 மணிக்கு காத்மாண்டு விமான நிலையம் அடைந்தோம். காத்மாண்டு நேபாள தலைநகர், மலைப்பிரதேசமே, ஊருக்கு நடுவில் விமான நிலையம், எங்கு சென்றாலும் அதனை சுற்றியே பாதைகள். எங்களுடய பயணமத்திட்டம்  தினமும் காலை ஆரம்பித்து 3வது  நாள் தான் முக்திநாத்தை அடையும்படியானது. 


காத்மாண்டு : ஊர் முழுதும் சாலையோர  ஊதாப்பூக்கள் சிந்தும் மரங்கள், சற்றே அழுக்கான நகரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, பரபரப்பிலும் நிதானமான ஊர்.  காத்மாண்டு அடைந்து மற்ற மாணவர்களும் வந்த பின் மாலை முதலில் சென்ற இடம் பசுபதிநாதர் கோவில் . யுனெஸ்கோவின்  கீழிருக்கும் சின்னமாக அறிவித்திருக்கிறார்கள். பெரிய சுற்றுப்புறத்துடன் , வெறும் செங்கல் கட்டுமானத்துடன் கேரளாவை நினைவுபடுத்தும் கோவில். இந்த பயணம் முழுதும்   துளி வெயில் இன்றி, மழை மேகங்கள் சூழ, அவ்வப்போது மழை சாறலாகவும் பெருமழையாகவும் பெய்து ஆசிர்வதித்துக்கொண்டே இருந்தது. பசுபதிநாதர் கோவில் வலதுபுறத்தில் இருக்கும் புவனேஸ்வரியை தரிசித்து , பசுபதிநாதரை தரிசிக்க வரிசையில் இணைந்த போது மணி 6. 

பசுபதிநாதர்  , லிங்க வடிவில் இருந்தாலும் நான்கு புறமும் முகம் கொண்டு சதுர்முகனாக இருக்கிறார். வழக்கமாக ஒரு கதவு திறந்திருக்கும் தரிசித்து வரலாம், காலையில் 9.30 முதல் 12.30 வரையிலும் மாலை 6.30 மணி முதல் 8 வரையிலும் நான்கு கதவுகளும் திறந்திருக்கும் நாற்புறம் சுற்றி வந்து சிவனை தரிசிக்கலாம். நாங்களும் காத்திருந்து நாற்புறமும் சுற்றி  நாதரை தரிசித்து வரும் போது மழை தூறலாக ஆசிர்வதிக்க ஆரம்பித்திருந்தது. இரவு சிறிய அறிமுக உரையுடன் பிரிந்தோம்.


2 ஆம் நாள் :

 காலை பத்து மணிக்கே எங்களுக்கு போஹ்ரா விமானம். இங்கு கவனிக்க வேண்டியது விமானம் கிளம்ப எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை, வரும்போது வரும், கிளம்பும் போது கிளம்பும், எனவே உங்களுக்கு சொல்லப்பட்ட நேரத்தில் விமான நிலையம் அடைந்து விடுவது நலம். காலை 6 மணிக்கு கோரக்கர் சன்னதிக்கு பயணம். பசுபதிநாதர் கோவிலின் இடதுபுறம் ஒரு சாலை பிரியும் அதில் சிறு குன்று உண்டு, பெரிய பெரிய படிகளில் அநேகம் பேர் ஓடிக்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் இருப்பார்கள், அந்த படிகளில் ஏறி சிறு குன்றின் உச்சியை அடைந்தால் அங்கே வசிக்கிறார் கோரக்கர்.  தலைவரின் அனுமதியுடன் தான் எந்தப்பயணமும் ஆரம்பிக்கவேண்டும், இதோ கோரக்கரை தரிசித்து, அனுமதிபெற்றுக்கொடிருக்கிறோம். மந்திர ஜெபமோடு அந்த சூழல் இன்னொரு முறை மீண்டும் வாய்க்க குருவருள் துணையிருக்கட்டும்.


விமான நிலையம் அடைந்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் போஹ்ரா அடைந்தோம். போஹ்ரா, அழகான சிறிய ஊர். காத்மாண்டு போல் கூட்டமில்லை, மிக மிக இதமான கால நிலை, அழகான ஏரியை சுற்றி அமைதியான பாதையும், ஒரு புறம் கடைகளும், நினைத்த பொழுது வானத்தை பிளந்த மழையும் தூரத்தில் வெள்ளிப்பனி மலையுமாக கண்நிறைந்த ஊர். மாலை சத்சங்கத்தில் முக்திநாத், ஏன் எதற்கு, நாத பரம்பரை, இன்னும் எங்களின் எத்தனையோ கேள்விகளுக்கு  பதிலுரைத்து அடுத்த நாள் பயணத்திற்கு மனதளவில் தயார் படுத்தப்பட்டோம்.



3-ம் நாள் = ஜோம்சம் பயணம் 

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள்,



 ஒரே ஒரு நீண்ட தெரு, அதில் இந்தக்கோடியில் விமானநிலையம் பாதி வழியில் ஹோட்டல், அந்தக்கோடியில் காளிகண்டகி நதி. 8 மணிக்கு  முக்திநாத் செல்ல தயாரானோம். இங்கிருந்து 21 கிலோமீட்டர் பயணம், ஆனால் 2 முதல் 3 மணிநேரம் ஆகும். சாலை என்பது கடைசி 10 கிலோமீட்டருக்கே அதுவரை தண்ணீர் வற்றிய கண்டகி நதியில் பஸ் பயணம். குலுங்கி  விலா எலும்புகள் இடம் மாறுகையில் பாதை தென்பட்டது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி புகைப்படும் எடுத்து மீண்டும் பஸ்ஸில் ஏறி இரண்டு கிலோமீட்டர் போனதுமே கவனித்தேன் என் ஹேண்ட் பேக் காணோம். பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லாமே இருந்தது. ட்ரைவர் உடனே வண்டியை திருப்ப முடியாது என்று மீண்டும் ஒரு கிலோ மீட்டர் போய் வண்டியை திருப்பி நாங்கள் புகைப்படம் எடுத்த இடம் வந்த போது வைத்த இடத்திலேயே என் கைப்பை அநாதையாக கிடந்தது. அதுவரை அந்த ரோட்டில் ஒரு வண்டியோ மனிதனோ கடக்கவில்லை. 



முக்திநாத்  ஆட்டோ ஸ்டேண்ட் எனப்படும் வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடக்க வேண்டும். 2 கிலோமீட்டர் மட்டுமே. நடக்க முடியாதவர்களுக்கு போனி எனப்படும் மட்டக்குதிரை சவாரியும், டோலி எனப்படும் நான்கு பேர் சேர்ந்து தூக்கிசெல்லும் வசதியும் ஹோம்சம்மிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. அப்படி ஒன்றும் கடினமான பாதை அல்ல, கொஞ்சம் படிகள்  கரடுமுரடான பாதை என்று மொத்தமே 2 கிலோமீட்டர் தான். மெதுவாக ஏறலாம்.  கவனிக்க வேண்டியது இங்கு அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கு திறந்து மாலை 4 மணிக்கு மூடப்படும். எலுமிச்சம் பழம் கிடைக்காது. தண்ணீர் தேவைக்கு எடுத்து செல்லவும். குளிர் கொஞ்சம் அதிகம். . 



முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.



சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர்.  மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.


காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்
போஹ்ரா, காலை விமானத்தில் போஹ்ராவை அடைந்ததும் ஆரம்பித்த  மழை  விடாமல் பெய்துகொண்டே இருந்தது. போஹ்ராவில் பார்க்கவேண்டிய இடங்களில் சில, பராஹி கோவில் ( வராஹி கோவில்) ஏரிக்கு நடுவில் அமைந்துள்ளது, படகில்  இந்திய மதிப்பில் போக வர 100 ரூபாய், அழகிய சிறு கோவில், இங்கு கோவில்களில் ஸ்டிக்கர் பொட்டு, கண்ணாடி வளையல் போன்றவைகளை ஸ்வாமிக்கு சமர்பிப்க்கின்றனர். 
குப்தேஸ்வர மஹாதேவ் கேவ் : குகைக்கோவில், தரையிலிருந்து  100 படிகள் வரை கீழிறங்கி சென்றால்  ஆயிரம் வருட பழமையான சிவன் கோவிலும் இன்னும் இறங்கினால் ஆர்பரிக்கும் அருவியையையும் பார்க்கலாம்..
குப்தேஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் உள்ளது டாவிஸ் அருவி. இந்த அருவிதான் குப்தேஸ்வரர் கோவிலுக்குள்ளும் விழுகிறது.
பிந்தியபாஷினி கோவில் : பழைய பஜார் பகுதியில் உள்ள பிந்தி பாஷினி கோவில் முக்கியமான துர்கை ஆலயம். சிவன், கிருஷ்ணர், பஜ்ரங்பலி என்று எல்லாருக்கும் சந்நதி உள்ளது. சிறு குன்று போன்ற இடம். லிப்ட் உண்டு, கட்டணமும் உண்டு.
இந்த இடங்களை பார்த்து , ஓய்வெடுத்து அடுத்த நாள் காத்மாண்டு பயணித்தோம்.

காத்மாண்டு. 
நினைத்ததை விட சுலபமாக, நிறைவான தரிசனம் முக்திநாத்திலும், போஹ்ராவிலும். நாங்கள் காத்மாண்டு அடைந்த பின்னரே அறிந்தோம் அன்றும் அதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முக்திநாத் சேவை பனிப்புயல், கடும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது என்று. ஆதிநாதரின் அருளின்று எங்கள் பயணம் இதுவரை இத்தனை சிறப்பாக இருந்திருக்காது. காத்மாண்டுவில் பார்க்க வேண்டிய சில இடங்கள்

ஸ்வய்ம்பு நாத் : முழுதான ஹிந்துக்கள் நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புத்த மதமும் பரவியிருக்கிறது. ஸ்வம்புநாத் அதில் ஒன்று. சிறு குன்றின் மேல் இருக்கும் புத்த ஆலயம், அருமையான சிற்பக்கலைகளுடன் பெரிய கண்கள் வரையப்பட்ட ஸ்தூபியை வணங்குகின்றனர்.

ஜலநாராயணன் கோவில் : தண்ணீரில் துயில் கொள்ளும் பிரம்மாண்ட  விஷ்ணுவின் கோவில், அதன் சின்ன  அளவு சிலையை வைத்து தினப்படி யாகம் நடத்தப்படுகிறது.

கைலாத்நாத் கோவில் : ஊரைவிட்டு சிறிது தள்ளி இருக்கும் 140 அடி சிவன் கோவில்,, தனியாருக்கு சொந்தமானது.

டோலேஸ்வர் கோவில் : காத்மாண்டுவை சுற்றி பெரும்பாலும் ஹிந்து கோவில்கள், அதில் முக்கியமானது டோலேஸ்வர், மஹாபாரதக்கதைகளில் இடம்பெற்ற பழமை வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

சங்குநாராயணன் கோவில். மலைமேல் இருக்கும் விஷ்ணு கோவில், மிக மிக அழகான சிற்பங்களும் விஷ்ணுபுராண சிலைகளுமாக அழகான இடம்.

இந்த கோவில்கள் அனைத்திலும் ஆள் நடமாட்டம் குறைவு, நுழைவுக்கட்டணம் உண்டு, அனைத்துமே காத்மாண்டுவின் நான்கு திசைகளிலும் தள்ளி அமைந்திருக்கிறது.



காத்மாண்டுவை விட்டு கிளம்பும் நேரம்  வந்துவிட்டது. மீண்டும் பசுபதிநாதரை தரிசித்து, கோரக்கரிடம் நன்றிகூறி தியானித்து , யாத்திரையின் நிறைவு உரையாக ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் சந்தேகம் தெளிந்து அருளாசி வாங்கி டெல்லியை நோக்கி பயணப்படுகிறோம்.
இது ஒரு பயணக்கட்டுரை அல்ல, ஆயிரம் பக்கம் எழுதினாலும் தீராத அனுபவங்கள் அவை. முக்திநாத் போகவேண்டும் என்று நினைப்போருக்கு  இப்படி இருக்கும் என்ற சிறிய வழிகாட்டி. நாதர்களின் பூமியின் அருளையும், அனுபவத்தையும் வார்த்தைகளில் எழுத முடியாது என்றாலும் , எப்போது  படித்தாலும் மீண்டும் அந்த இடங்களுக்கு கண்மூடி மனதளவில் பயணிக்கவும், காளி கண்டகியின் வழியில் முக்திநாதரை தரிசிக்கவும், கோரக்கரை அருகிருந்து உணரவும் ,, மறுபடியும் வாழ்வில் இன்னொரு முறை அவர்களை காணும்  வாய்ப்பினையும் வேண்டவும் ஒரு வழி. மீண்டும் குருஅருள் மனம் வைத்து கோரக்கரையும் நாதபுரியையும் தரிசிக்க அருள்புரியட்டும்.

Tuesday, July 19, 2016

ப்ராணாயாம ரகசியங்கள் - ஒலி பதிவு

அனைவருக்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்

ப்ராணாயாம ரகசியங்கள் என்ற உரை  இங்கே ஒலிவடிவில் அளிக்கிறேன்.
வாழ்வில் ப்ராணாயமத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

உரையின் நடுவில் அளிக்கும் பயிற்சியை செய்து பாருங்கள், ஸ்வாசத்தின் முக்கியத்துவம் உடலின் அமைப்பை பயன்படுத்துவதன் அவசியம் உணர முடியும்.



20 ஜூலை 2016 அன்று ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையில் குருபூர்ணிமா விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு குருவருள் பெற பேரன்புடன் அழைக்கிறோம்.


Thursday, September 24, 2015

முரண்பட்ட குரு

காலையில் பகவத் கீதை வகுப்பு முடிந்ததும் ரிலாக்ஸாக இருந்த குருவிடம் வந்தான் சுப்பாண்டி.

குருஜி ஒரு சந்தேகம் என்றான்...

சொல்லுப்பா என்பது போல பார்த்தார் குருஜி.

“....சில தினத்திற்கு முன் பகவத் கீதை வகுப்பில் அவர் அவர் நிலைப்பாட்டுக்கு ஏற்ப ஒரு பிறப்பிலே பல பிறப்பிலோ இறைவனை அடைகிறார்கள், உதாரணமாக ஒரு ஊரை அடைய சிலர் நடந்து செல்லுகிறார்கள் சிலர் வாகனத்திற் செல்லுகிறார்கள் என சொன்னீர்கள். ஆனால் இன்று பதினாறாம் அத்தியாயத்தில் இதே பிறப்பில் இறைவனை அடைய முடியும் என சொல்லுகிறீர்களே ஏன் இந்த முரண்பாடு? நீங்கள் தான் சில நேரம் முரண்பாட்டுடன் பேசுவீர்கள் என நினைத்தேன். பகவான் கிருஷ்ணரும் இப்படி முரண்படுகிறாரே?” என கேட்டான் சுப்பாண்டி.



சுப்பு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு வழிப்போக்கர் தெருவில் இருப்பவரிடம் கேட்டார், ஐயா இந்த பக்கத்து ஊருக்கு செல்ல எத்தனை நேரம் ஆகும்? தெருவாசி ஒன்றும் பேசாமல் அவரை பார்த்தார். மீண்டும் எத்தனை நேரம் ஆகும்? என கேட்டார். தெருவாசி ஒன்னும் சொல்லவில்லை. வெறுப்படைந்த வழிப்போக்கர் நடக்க துவங்கினார். உடனே அவரை துரத்திக்கொண்டு வந்த தெருவாசி..இன்னும் 30 நிமிடத்தில் சென்று விடலாம் என சொன்னார். வழிப்போக்கர் அதை அங்கேயே சொல்லி இருக்கலாமே என கேட்க, தெருவாசியோ நீங்கள் எத்தனை வேகமாக நடப்பீர்கள் என எனக்கு தெரியாது. நீங்கள் நடந்து சென்ற வேகத்தை வைத்து சொன்னேன் என்றார்.

மெல்லிய புன்னகையுடன் குருஜி விளக்க துவங்கினார், “சுப்பு,  ஒருவர் தெருவில் காருடன் நிற்கிறார். அவரிடம் ஐயா இந்த ஊருக்கு செல்லும் வழி சொல்லுங்கள் என கேட்டு அதன் படி உனது வாகனத்திலோ அல்லது நடந்தோ செல்லுகிறாய் என்றால் அது உன் பொறுப்பு.

இதே ஐயா என்னை உங்கள் காரில் கொண்டு சென்று விடுங்கள் என கேட்டால் அது உன் பொறுப்பல்ல கார் வைத்திருப்பவர் பொறுப்பு. அது போல இறைவனை அடைய நானே முயற்சிக்கிறேன் என்றால் ஒரு பிறப்போ பல பிறப்போ ஆகும். அது உன் முயற்சியும் அதனால் ஏற்படும் அனுபவத்தை பொருத்தது. இதுவே இறைவா நான் உன்னை சரணடைகிறேன் என்னை முக்தி அடைய வை என கேட்டால் அது இறைவன் பொறுப்பு உடனே அவர் இப்பிறவியிலேயே அதை செய்துவிடுவார்..! ”

 குருவும் இறைவனும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள். அதை அவர்கள் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா இல்லை உன் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா என நீ பார்க்காத வரை குரு முரண்பாடாக பேசுவதை போலவே இருக்கும்.

சுப்பாண்டிக்கு புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது...

Thursday, February 5, 2015

உத்தவ சுப்பாண்டி


பாகவத புராணத்தின் கடைசி பகுதியில் வருவது உத்தவ கீதை. 125 வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டு பூலகை விட்டு வைகுண்டம் செல்லுவதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தயாராகிறார்.

இச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரின் நீண்ட கால நண்பர் மற்றும் மந்திரியாக இருக்கும் உத்தவர் ஆயிரம் கேள்விகளுக்கு மேல் யோகம், ஞானம், மோட்சம் என பல விஷயங்களை பற்றி கேட்கிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில் உத்தவ கீதையாகும்.

ஆயிரம் கேள்விகளுக்கு மேல் கடந்த பிறகு உத்தவர் சில   நொடிகள் மெளனமாக இருக்கிறார். உடனே கிருஷ்ணர், " உத்தவா உனக்கு சந்தேகம் தீர்ந்ததா என கேட்கிறார்". 

உத்தவர் புன்னகையுடன், "ஸ்ரீ கிருஷ்ணா உன்னுடன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது முதல் வாழ்ந்து வருகிறேன். சிறுவயது  முதல் இந்த நாள் வரை நம் நட்பு தொடர்கிறது. நான் உனக்கு சித்தப்பா மகனும் கூட..! உன் ராஜபரிபாலனத்தில் எனக்கு மந்திரி பதவி அளித்து உன்னுடன் இருக்க செய்து மேலும் என்னை உனக்கு  நெருக்கமானவனாக மாற்றினாய். இத்தனை காலம் முழுமையான பகவத் செரூபமான உன்னுடன் வாழ்ந்துவிட்டு எனக்கு எப்படி சந்தேகம் வரும்? எனக்கு சந்தேகம் என்பதே இல்லை. எப்பொழுதும் இருக்காது...!" என்றார்.

ஸ்ரீகிருஷ்ணர் ஆச்சரியத்துடன் பார்த்து, "அப்படியானால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை ஏனப்ப எழுப்பினாய்?" எனக் கேட்டார்.

உத்தவர் பக்தி நிறைந்த கண்களில் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக பார்த்தவண்ணம் கூறினார்....

"நான் கேட்ட கேள்விகளின் பதில் எனக்கு முன்பே தெரியும். இன்ன கேள்விக்கு இப்படித்தான் உமது பதில் இருக்கும் , அதற்கு இப்படி உதாரணம் சொல்வீர்கள் என்பது வரை எனக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும் இப்படிப்பட்ட கேள்வி கேட்டால் தான் நீங்களும் பதில் சொல்வீர்கள். அதை காரணமாக வைத்து உங்களுடன் சில மணி நேரம் செலவிடலாம். பகவானாகிய உங்களின் சாநித்தியத்தை நாங்கள் மெளனமாக பார்த்து எத்தனை காலம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் உங்களுக்கு சில நிமிடங்களில் எங்களின் இருப்பு சலித்துவிடலாம். அடுத்த பக்தர்களை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் இப்படி கேள்வி கேட்டால் அதன் காரணமாக எங்களுடன் இருப்பீர்களே அதனால் தான் கேட்டேன்" என நீண்ட விளக்கம் அளித்தான்.

இதை ரசித்த வண்ணம் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்ல தயாரானார்..

இப்படித்தான் எனக்கும்......! 

நான் தலை போகும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பொழுது சுப்பாண்டி ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் கேட்ப்பான். சுற்றம் சூழல் எதையும் பார்க்க மாட்டான். கேட்டுவிட்டு பெருமையாக ஒரு பார்வை வேறு பார்ப்பான். அந்த கேள்விக்கு நான் பல முறை பதில் சொல்லி இருப்பேன். இவன் இருக்கும் பொழுது யாராவது அந்த கேள்வியை கேட்டு அதற்கு பதில்  சொல்லி இருப்பேன். ஆனாலும் அவன் கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு காரணம் உத்தவர் போல என்னுடன் இருக்க வேண்டும் என்ற பக்தி என நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் சுப்பாண்டிக்கு பக்தியை விட ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ் என்ற வியாதி என்றே நான் சந்தேகப்படுகிறேன்.

நீங்களும் நேரம் இருந்தால் உத்தவ கீதை படித்து அதன் சாரத்தை நன்றாக புரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமானவரிடம் கேள்வி கேளுங்கள்...

இனி தெரிந்து கொண்டே யாராவது கேள்வி கேட்டால் மனதுக்குள் இப்படி சொல்லி கொள்ளலாம்........

-தட் உத்தவ கீதை மொமேண்ட்..!

Wednesday, June 18, 2014

குரு பூர்ணிமா அழைப்பிதழ் 2014

குருவின் அருள்பெற்று ஆன்மீக உயர்நிலை பெற 
அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Wednesday, November 13, 2013

பகவான் செய்த தவறு...!

அந்த மஹானின் வாழ்க்கை சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தேன். மஹானின் பெயரை சொல்லும் பொழுது அவரின் பெயருடன் “பகவான்” என சேர்த்து சொன்னேன்.

என் மாணவர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் நீங்கள் எப்படி மனித உருவில் இருப்பவரை பகவான் என சொல்லலாம். இது மிகத் தவறான முன் உதாரணம்.... பகவன் பகவான் தான்.. மனிதனாக முடியுமா? இப்படித்தான் தன்னை தானே பலர் கடவுளாக்கி வியாபாரம் செய்கிறார்கள் என நீண்ட உரை நிகழ்த்தினார்.

அவர் முடிக்கும் வரை காத்திருந்தேன்.

பின்னால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப்படத்தை காட்டி... யார் இவர்? என கேட்டேன்.

நீங்க தான் ஸ்வாமிஜி என்றார்.

ஒரே ஒரு முறை என் உருவத்தை அச்சிட்டதால் இந்த பேப்பர் நான் ஆகும் பொழுது..பல முறை இறைவன் பிரவேசித்த உடல் பகவான் ஆகாதா ? என்றேன்..

 “பகவானே.....!” என்றார்...

Thursday, July 18, 2013

குருபூர்ணிமா 2013

அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்


Thursday, April 5, 2012

ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி

பரணி பாடுவது என்பது தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளில் ஒன்று. ஆயிரம் யானைகளை அடக்கி வேட்டையாடும் அரசனின் வீரத்தை போற்றுவதற்கு பாடுவதே பரணி என்பதாகும்.

அத்தகைய வீர இலக்கிய பாடல் தன்மையை தன் குருவை போற்றுவதற்கு பாடினார் ஒருவர்.

ஆயிரம் யானைகளை அடக்கினால் பரணி பாடுவார்கள். நீ அயிரம் பரணி பாடுவதற்கு தகுதியானவன் என பொருள் கொண்ட பாடல் அது...

இத்தகைய உருவகத்தை பல்வேறு புலவர்கள் கொண்ட சபை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

வழக்காடு மன்றத்தில் குரு ஆஜராக வேண்டும் என்றும் தன் வீரத்தை நிரூபித்தால் அப்பாடலைஏற்கிறோம் என்றும் புலவர்கள் கூறினார்கள்.

வழக்கு நடக்கும் நாள் வந்தது.

அனைவரும் கூடி இருந்தார்கள். வழக்காடு மன்றம் சலசலப்புடன் இருந்தது. நீதிபதிகளும் அவர்களுக்குள்இந்த விசித்திர வழக்கு பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

வழக்காடுமன்றத்தின் வாயிலில் அந்த வாகனம் வந்து நின்றது.
குரு அதிலிருந்து அமைதியாக இறங்கினார்.

மன்றத்தின் நடுவில் இருந்த  நாற்காலியில் வந்து அமர்ந்தார். கண்களை மூடினார்.

அனைவரும் சலசலப்பற்று சிலைகள் போல உறைந்து நின்றார்கள்.
பல மணிநேரம் சென்றது. வழக்காடு மன்றத்தில் ஒரு சலனமும் இல்லை.

பிறகு குரு தன் கண் இமைகளை சிமிட்டினார். அனைவரும் சுய நினைவுக்கு வந்தனர்.
நினைவு பெற்று பின்பும் அவர்களின் உள் பேரமைதி சூழ்ந்த வண்ணம் இருந்தது.

இவரை தலைவனாக கொண்டு பரணி பாடியது சரியே. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என நீதிபதிகள் தீர்ப்பை கூறினார்கள்.

வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான வீரம் என புலவர்கள் உணர்ந்து கொண்டனர்.

இன்று மஹாவீர் ஜெயந்தி...!

Sunday, July 10, 2011

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்


விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2

Thursday, August 19, 2010

தீக்‌ஷை

உலகில் எத்தனையோ உறவு முறைகள் உண்டு. உங்கள் ஆசைகளையும் கனவுகளை நிறைவேற்றும் உறவு முறைகள், உங்கள் கடமைகளையும் உரிமைகளையும் உணர்த்தும் உறவு முறைகள் என பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவற்றிற்கு அப்பாற்பட்டு ஓர் உறவு நிலை உண்டு.

அது குரு சிஷ்ய உறவு என்பதாகும். உண்மையில் குரு சிஷ்ய இணைவு என்பது உறவு முறை என்று கூறக்கூடாது. இது உறவு முறை அல்ல உயிர் முறை. தன் உயிரின் மூலம் எங்கே இருக்கிறது என அறிய வழிகாட்டும் ஒருவர் குரு. அப்படி பார்த்தால் இது உயிர் முறை தானே? உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உறவு முறைகள் எதோ ஒரு சுய நலத்தின் அடிப்படையில் இயங்கும். சுய நலத்தின் சதவிகிதம் வேறுபடுமே தவிர தன்னலமற்ற உறவு இருக்கவே முடியாது. ஆனால் குரு என்பவர் தன்னலமற்ற கருணையை என்றும் பொழிபவராக இருக்கிறார்.

தற்காலத்தில் குரு சிஷ்ய உறவு முறை மற்றும் குருவின் தன்மை ஆகியவை கேலிக்கு உண்டான விஷயமாகிவிட்டது. சுயநல சிஷ்யர்கள் சுயநலமிக்க போலி ஆன்மீகவாதிகளை நாடி செல்லுவதால் இன்னிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் சின்ன பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆன்மீகவாதியை நாடும் இவர்கள் பிறகு இவர்களை குரு என நினைத்துக் கொள்ளுகிறார்கள்.

குரு தன்மை என்பதை பற்றிய போதிய அறிவில்லாததால் பார்ப்பவர்களை எல்லாம் குரு என்பார்கள் சிலர். பள்ளியில் கற்றுக்கொடுத்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கூட குரு என அழைப்பார்கள். குரு வேண்டுமானால் ஆசிரியராக இருக்கலாம். ஆசிரியர்கள் என்றும் குருவாகிவிட முடியாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆசிரியர் உங்கள் அறிவை வளர்ப்பவர். குரு உங்களின் உயிரை வளர்ப்பவர். உங்களின் உள்ளே ஒளியை வழங்கி அறியாமையை போக்குபவர். ஆச்சாரியன் என்ற வார்த்தை ஆசிரியரை குறிக்கும். மஹாபாரதத்தில் அர்ச்சுனனின் பாத்திரத்தை உணர்ந்தால் இக்கருத்தை புரிந்துகொள்ளலாம். வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார் அர்ச்சுனனுக்கு ஆச்சாரியார், ஞானத்தை வழங்கிய ஸ்ரீகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு குரு.

உங்களின் உலகப்பார்வையை மாற்றி உயிர்ப்பிக்கச் செய்பவர் குரு. இந்த உயிர்ப்பிக்கும் தன்மைக்கு தீக்‌ஷை என பெயர். வடமொழி சொல்லான தீக்‌ஷா என்ற வார்த்தை தமிழில் தீக்‌ஷை/ தீச்சை / தீட்டை என பல வழிகளில் அழைக்கப்படுகிறது.

குரு அனைவருக்கும் தீட்ஷை அளிப்பதில்லை. ஒரு ஆன்மா ஆன்மீக உயர் நிலை காண தயார் நிலையில் இருப்பதை கண்டு அதற்கு மட்டுமே குருவால் தீட்ஷை வழங்க முடியும். தீட்ஷை என்றால் என்ன என பலருக்கு தெரியாததால் பல்வேறு போலிகள் தீட்சை கொடுக்கிறேன் என ஏமாற்றுகிறார்கள்.

குரு தன் ஆன்மாவால் உங்கள் ஆன்மாவை தீண்டி உணரச் செய்வதை தீக்‌ஷை என கூறலாம். தீட்ஷையில் பல்வேறு முறைகள் மற்றும் வகைகள் உண்டு.

தீட்ஷை மூன்று வகையாக அளிக்கப்படுவதாக தத்தாத்ரேய புராணம் கூறுகிறது. அவை ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மோன தீட்சை என்பதாகும்.


குரு தன் உடல் அங்கங்களால் சிஷ்யனை தொட்டு கொடுப்பது ஸ்பரிச தீட்சை. பசு தன் கன்றை நாவால் தடவி பேனுவது இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.


குரு தன் கண்களால் சிஷ்யனை முழுமையாக பார்த்து கொடுக்கும் தீட்சைக்கு நயன தீட்சை என பெயர். தாய் வாத்து தனது குழந்தைகளை வாயால் எதையும் கூறாமல் கண் பார்வையிலேயே வழி நடத்திச் செல்லுவது இதற்கு சரியான உதாரணம்.



சிஷ்யன் குருவிற்கு அருகில் இல்லாமல் வெவ்வேறு இடத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலும் தன் ஞான பலத்தால் தீட்சை அளிப்பது மோன தீட்சை எனப்படும். ஆமை ஆழ்கடலில் உணவு தேடிக்கொண்டிருந்தாலும் அதன் நுட்பமான மனதால் கடற்கரையில்இருக்கும் குஞ்சுகளை தொடர்பு கொண்டிருக்குமாம். அவற்றிற்கான உணவு நேரம் வந்ததும் கடற்கரைக்கு வந்துவிடும் என்பார்கள். ஆமையின் தன்மையில் இந்த தீட்சை செயல்படுகிறது.

இவ்வாறு மூன்று நிலையில் அளிக்கப்படும் தீட்சை பல்வேறு தேவைகளுக்காக அளிக்கப்படுகிறது. மந்திர தீட்சை, யோக தீட்சை, ஆன்ம தீட்சை, ஞான தீட்சை, மெளன தீட்சை, சன்யாச தீட்சை என காரணங்கள் நீண்டு கொண்டே செல்லும்.

தற்சமயம் பத்திரிகைகளில் கடன் தொல்லை நீங்க, புதிய வேலை கிடைக்க, நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க என்ற பல்வேறு அற்புத காரணங்களுக்கு தீட்சை தருகிறார்கள். ஒன்று புரிந்துகொள்ளுங்கள்.... தீட்சை அக உலகுக்கு தரப்படுவது, புற உலகுக்கு அல்ல. உங்களுக்குள் பெரும் அணு குண்டு வெடிப்பு நிகழச்செய்யும் தீட்சையை விடுத்து இது போன்ற சின்ன காரியங்களுக்கு தீட்சை வழங்குபவர்கள் தரமானவர்களாக இருப்பார்களா சிந்தியுங்கள்.

தீட்சை வாங்க வேண்டும் என்றல்லாம் கட்டாயம் இல்லை. நாம் ஒருவரை அனுகி தீட்சை தாருங்கள் என கேட்க வேண்டியது அவசியமும் அல்ல. தீட்சை என்பது ஞானம் எனும் வேள்விக்கு ஊற்றப்படும் நெய்.

குரு அருள் அனைவருக்கும் கிடைக்கும் தன்மை உண்டு. அக்காலத்தில் குருவின் அருள் உங்களை தீட்சை பெறும் நிலைக்கு உயர்த்தும்.

தீட்சை சார்ந்து பல்வேறு நபர்களை நான் சந்தித்து உள்ளேன். நான் இவரிடம் தீட்சை வாங்கினேன், நான் ஒன்றுக்கு மேம்பட்ட நபர்களிடம் தீட்சை வாங்கினேன். இவர்கள் எல்லாம் ஆன்மீகத்தில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என தங்களின் தீட்சையை பெருமையாக கூறுவார்கள். தீட்சை அளிப்பது என்பது உங்களுக்கும் உங்கள் குருவுக்குமான தனிப்பட்ட விஷயம்.

இதை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பது ஆணவமே. அப்படி வெளிப்படுத்தும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் தீட்சை வாங்கும் அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை என பொருள்.

இன்னும் சிலரோ உங்களுக்கு பணம் (டொனேஷன்) கொடுக்கிறோம் தீட்சை தாருங்கள் என கேட்பார்கள். அவர்களுக்கு தீட்சை என்பது ரூபாய்க்கு இரண்டு கிடைக்கும் பொருள். இவர்கள் எப்பொழுதும் திருந்தப் போவது இல்லை. எதிர்வரும் காலத்தில் குருவை கடத்தி கொண்டு போய் தீட்சை கேட்டாலும் கேட்பார்கள்.

சுயநலம் மற்றும் ஆணவம் என்ற விழித்திரை உங்களுக்கு இருக்கும் வரை குரு உங்களுக்கு தீட்சை அளிக்கமாட்டார். விழித்திரையின்றி முழுமையாக கண் திறக்க முயலுங்கள் குரு உங்களுக்கு முன் நிற்பது தெரியும்.

குருவருள் உங்களை வழிநடத்தட்டும்.

மந்திர தீட்சை பற்றிய குரு கதை படிக்க இங்கே சொடுக்கவும்.



Friday, July 23, 2010

டிவிட்டரில் குரு - சிஷ்யன்

எழுத்து என்பது பல்முக வடிவம் கொண்ட ஊடகம். முன்பு பனை ஓலை, கல்வெட்டு, செப்பு பட்டையம் என பல்வேறு வடிவில் இருந்த எழுத்து அறிவியல் முன்னேற்றத்தால் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக செய்தி பரிமாற்றத்தின் இடைவெளியும் குறைந்து மக்கள் செய்தியால் நிரம்பி வழியும் நிலைக்கு நம் ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் மனிதன் கடக்கும் செய்தியை எடுத்துக் கொண்டால் அவனின் மூளையின் வேகத்திற்கு இணையாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

ஊடகத்தின் பரிமாணமாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முறை தற்சமயம் பரவலாக இருக்கிறது. அரசாங்கம் கூட குறுஞ்செய்தி பயன்படுத்தி விழிப்புணர்வு செய்தியை கொடுக்க துவங்கி உள்ளது.
பலர் இதனால் கெடுதல் உண்டாகிறது என்றும் மனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

உண்மையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இருக்கும் எந்த ஒரு ஊடகத்தையும் அற வழியில் பயன்படுத்தினோமானால் அதனால் அந்த ஊடகத்திற்கும் நமக்கும் கேடில்லை.

முதலில் இணையம் தோன்றிய காலத்தில் ஆன்மீகவாதிகள் இணையத்தை பயன்படுத்தலாமா என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இன்றோ வலைதளம் இல்லாத ஆன்மீக குழு என்பதே இல்லை என்பது நிதர்சனம்.

மின்னஞ்சலை கூட ஆன்மீகவாதிகள் பயன்படுத்தலாமா? அதில் ‘அட்டாச்மெண்ட்’ உண்டே என்றல்லாம் சிந்தித்த புத்திசாலிகள் பலர் உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மக்களால் அதிகம் நுகரப்படும் ஊடகங்களை ஆன்மீகத்திற்காக பயன்படுத்தினால் தவறு இல்லை என்பது எனது கருத்து.

ஒரு ஊடகம் மக்களை கெடுக்கிறது என கூக்குரல் எழுப்புவதைக் காட்டிலும் அந்த ஊடகத்தை நல்வழியில் பயன்படுத்தி காட்டுவதே ஆன்மீகவாதிகளுக்கு அழகு.

இப்படி நான் கொண்ட கருத்துக்களால் டிவிட்டர் (twitter.com) என்ற சேவையை பயன்படுத்த துவங்கினேன். 140 எழுத்தில் நம் கூற விரும்பும் கருத்தை கூறிவிடலாம். இது செல் போன் குறுஞ்செய்திக்கு ஒப்பானது.
உலகில் பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. சிலர் நான் காலையில் எழுந்தேன், காப்பி குடித்தேன் என தங்களின் செயல்களை எழுதுகிறார்கள். சிலர் உத்தியோக விஷயங்களை கூறுகிறார்கள். பலர் நண்பர்களுடன் பேசி மகிழ்கிறார்கள்.

நமக்குத்தான் மேற்கண்ட விஷயங்கள் வராதே...! அதனால் குரு சிஷ்ய கதைகளை டிவிட்டரில் எழுத துவங்கிவிட்டேன். 140 எழுத்துக்குள் குறுங்கதையாகவும் அதுவே குரு கதையாகவும் இருக்க வேண்டும் என்ற சவாலில் சில கதைகள் எழுதி விட்டேன். அவற்றில் ஒரு டஜன் கதைகள் உங்களுக்காக...
>--------------------------
அற்புதமான தருணம் எது என்ற கேட்ட சிஷ்யனிடம் கூறினேன்.”நான் இல்லாமல் போவது” என்னை கொன்றான் சிஷ்யன்..! #1

தினமும் வேதம் படித்த சிஷ்யனின் வேத புத்தகத்தை பிடுங்கி எரித்தேன். தீய்ந்து கருகிய வாசம் வந்தது. சிஷ்யனின் உள்ளே நறுமணம் வீசத்துவங்கியது- #2

குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டும் என கேட்டான். தட்டி எழுப்ப அது என்ன எருமை மாடா? என்றேன் என் எருமை மாடு சிஷ்யனிடம். #3

எங்கும் கடவுள் நிறைந்திருக்க கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்றால் சிஷ்யன். அங்கும் இருக்கிறார என காண் என்றார் குரு..! #4

தலை முடியை மழித்தால் ஆன்மீகவாதியாகி விடுவேனா என கேட்டான் சிஷ்யன்.நார் உறிக்கப்பட்ட தேங்காய் ஒன்றை காட்டி,ஆன்மீக தேங்காய் என்றார் குரு- #5

ஞானம் அடைய குரு தேவையா என கேட்டான் சிஷ்யன். புன்சிரிப்புடன்,” குருவை அடைய ஞானம் தேவை” என்றார் குரு. #6

சிஷ்யன் : ஆன்மீகமாக இருக்க வெங்காயம் பூண்டு தவிர்க்க வேண்டுமா? குரு-இறைவன் படைப்புகளை ஒதுக்கும் ஆணவம் இருக்கும் நீ எப்படி ஆன்மீகனாவாய்? #7

குடும்ப நபர்களை காட்டிலும் உங்கள் மேல் எனக்கு ஈடுபாடு வர என்ன காரணம் குருவே என்றான் சிஷ்யன்.குரு:அவர்கள் இரத்த உறவுகள், நாம் உயிர் உறவுகள்#8

சிஷ்யன்:உருவவழிபாடு தேவையா? குரு : உன்னை நீ உடலாக நினைக்கும் வரை உருவம் வேண்டும். உடலை கடந்தால் அனைத்தும் அருவமே. ஏன் என்றால் தத்வமஸி..!#9

சிஷ்யன்:மனிதனுக்கு மட்டும் தானே குரு தேவைப்படுகிறார். விலங்குகளுக்கு குரு உண்டா?குரு:மனிதன் என்ற ஆணவம் உனக்கு.ஆகையால் கூறியும் பயனில்லை.#11

சிஷ்யன் : குருவே நான் என்று குரு நிலை அடைவேன்? குரு : என்று நீ சிஷ்யன் ஆகிறாயோ அன்றே அது முடிவாகும். #12

--------------------

Thursday, July 22, 2010

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்

விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2

Tuesday, July 7, 2009

குரு பூர்ணிமா

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

திருமந்திரம் - 139.





இதை விட இன்று சொல்ல என்ன இருக்கிறது?

Thursday, June 25, 2009

வாருங்கள் குருவினை ஆராதிப்போம்

குரு பூர்ணிமா விழா ப்ரணவ பீடத்தில் ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் குரு பூர்ணிமா ஜூலை மாதம் 6ஆம் தேதி திங்கள் கிழமை அமைகிறது. அன்று மாலை 6 மணிக்கு ப்ரணவ பீடத்தில் சிறப்பு தியானம் மற்றும் ஆராதனைகள் உண்டு. குருவருள் பெற குருவினை அன்று தியானிப்போம்.

(படத்தின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கலாம் )

கோவை நகரத்தின் மையத்தில் இருக்கும் ப்ரணவ பீடத்தின் கிளையில் விழா நடைபெறும். இந்த அழைப்பை ஏற்று அனைவரும் இதில் கலந்து கொள்ள உளமார அழைக்கிறோம்.


குருபூர்ணிமா சிறப்புகள் அறிய இங்கே அழுத்தவும்.

Saturday, June 20, 2009

குரு பூர்ணிமா பகுதி - இரண்டு

குருபூர்ணிமா அன்று குரு தீட்சை பெற்ற சாதகன் அந்த பிறப்பில் தனது ஆன்ம உயர்வை பெற முடியாவிட்டாலும் அடுத்துவரும் பிறப்புகளில் முக்தி அடைய குருவின் அருள் தானாகவே தொடர்ந்து வருகிறது.

குருவானவர் யார், எப்படிப்பட்டவர் என பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளேன். இன்னும் விளக்கினாலும் திருப்தி ஏற்படாது. குரு வரையறைக்குள் அடங்காதவர், பரம்பொருள் என்பது நிதர்சனம். ஆனால் சிஷ்யனாகவே குருவை பின்பற்றுபவர் சில வரையறையில் இருக்க வேண்டியது அவசியம்.

குரு பரம்பரையும், குருவை நாடிச்செல்லும் செயலும் பல வருடங்களாக விடுபட்டதால் நமக்கு எவ்வாறு குருவிடம் அணுகவேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது. குரு உங்களின் உள்ளே இருக்கும் சக்திதான், ஆனால் அதற்கு போலியான மரியாதை தருவதோ அதே சமயம் அலட்சியப்படுத்துவதோ மாபெரும் பாவச்செயலாகும். ஆன்ம உயர்வுக்கு பாடுபடும் சாதகன், குருவிடம் எப்படி நடந்துகொள்ளகூடாது என்பதை ஓர் கதை மூலம் காணலாம்.

ஒரு வயதான முனிவர் ஊரின் எல்லையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்துவந்தார். அவருக்கு மகா சோம்பேறியான சிஷ்யன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இரவு இருவரும் படுக்கைக்கு சென்றார்கள். குரு கூறினார் " சிஷ்யா, வெளியே மழை பெய்கிறது என நினைக்கிறேன். நமது ஆடைகள் நனைந்துவிடும். அதை எடுத்துக்கொண்டு வா" என்றார். சோம்பேறி சிஷ்யன் "இப்பொழுது ஆசிரமத்திற்குள் வந்த பூனையை தொட்டுப் பார்த்தேன், அதன் மேல் ஈரம் இல்லை எனவே வெளியே மழை பெய்யவில்லை குருதேவா" என்றான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் குரு சிஷ்யனை பார்த்து கூறினார் " கதவை மூடிவிட்டு வா, தூங்கலாம்" என்றார். "நாம் என்ன செல்வந்தர்களா குருவே, திருடர்கள் வந்து அபகரிக்க, கதவை திறந்துவைத்தாலும் இழப்பதற்கு என்ன இருக்கிரது நம்மிடம் ?" என்றான் சிஷ்யன். மீண்டும் குரு கூறினார், "அந்த விளக்கையாவது அனைத்துவிட்டு வா" என்றார். "குருவே, இரு வேலைகளை நான் செய்தேன். இந்த ஒரு வேலையாவது நீங்கள் செய்யக்கூடாதா?" என்று கேட்டான் சோம்பேறி சிஷ்யன்.

நவீன கால சிஷ்யர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தாங்கள் ஒரு துரும்பையும் அசைக்கமாட்டோ ம். ஆனால் குரு தங்களுக்கு வாரி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்படிபட்டவரா நீங்கள் ? அப்படியென்றால் உடனே மாறிவிடுங்கள். இல்லையென்றால் திருமூலர் போல குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழியில் விழ வேண்டிவரும். சரி சிஷ்யன் எப்படித்தான் இருக்கவேண்டும் என கேட்பது புரிகிறது. இதற்கும் ஒரு கதை மூலம் விளக்கம் பெறலாம்.

குருவை அடைய ஒருவன் ஒருசில குணங்களை பெற்றவனாக இருக்கவேண்டும். அதேபோல சில குணங்களை களைந்தவனாக இருக்கவேண்டும். இன்னும் விளகமாக சொல்ல வேண்டுமானால் கீழ்படிதல், கற்றுக்கொள்ளும் ஆர்வம், நேர்மை குருவை பூஜிக்கும் தன்மை எனும் குணங்களை கொண்டவனாகவும், பிறரை துன்புறுத்துதல், சந்தேகம், ஆணவம், பொருளாசை என துன்பங்களை ஏற்படுத்தும் குணங்களற்றவனாகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவர் சிஷ்யனுக்கோ அவர் மேல் சந்தேகம். தன்னைப் போலவே வாழும் இவர் எப்படி ஞானியாக இருக்க முடியும் ? என தன்னிறைவு அற்று இருந்தான். இருவரும் ஒரு நாள் வேறு ஊருக்கு பயணமானார்கள். பயணத்தின் இடையே வன பகுதி குறுக்கிட்டது. சிஷ்யன் கேட்டான், "குருவே தாங்கள் முக்காலும் உணர்ந்த ஞானி என கூறிகிறார்கள். இதை சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவை" . அவனை புன்முறுவலுடன் பார்த்த குரு "தாராளமாக சோதனை செய்" என்றார்.

நடைபாதையில் இருந்த சிறிய செடியை காண்பித்து சிஷ்யன் கேட்டான் " குருவே இதன் எதிர்காலத்தை கூறமுடியுமா?" என்றான். அந்த சிறு செடியை கூர்ந்து பார்த்த குரு கூறினார். "இந்த செடி வளர்ந்து பிரம்மாண்டமான விருட்சமாக மாறும்" என்றார்.

வில்லங்கமான சிரிப்புடன் குருவை பார்த்த சிஷ்யன் அந்த சிறு செடியை வேறுடன் பிடிங்கி தூர எறிந்தான். " இப்பொழுது எப்படி இந்த செடி முளைக்கும் குருதேவா?" என குருவை தோற்கடித்த மகிழ்ச்சியில் கேட்டான். பதில் எதுவும் கூறாமல் ஞானி பயணத்தை தொடர்ந்தார். சென்ற இடத்தில் எல்லாம் நான் குருவை தோற்கடித்தேன் என கூறி மகிழ்ந்தான் சிஷ்யன். பல வருடங்கள் கழிந்தன. குருவும், சிஷ்யனும் மீண்டும் தங்களின் ஆசிரமத்திற்கு பயணமானார்கள். அதே வனப்பகுதியை கடக்கும் பொழுது சிஷ்யன் அந்த செடியை பார்த்தான். சிஷ்யன் வேருடன் பிடுங்கி எறிந்த இடத்தில் சாய்வாக வேர் விட்டு மரமாக வளர்ந்திருந்தது அந்தசெடி. அவனின் முகத்தை புன்னகையுடன் பார்த்த குரு எந்த வார்த்தைகளும் கூறாமல் சிஷ்யனை கடந்து சென்றார்.

எனது மாணவர்களில் சிலர் நான் கூறும் கருத்தில் சந்தேகம் அடைவதுண்டு. அவ நம்பிக்கை கொண்ட மாணவருக்கு மேற்கண்ட கதையை சொல்லும் போது அந்த மாணவர் சொன்னார் " அந்த சிஷ்யன் ஒரு அறிவுகெட்டவன், நானாக இருந்தால் அந்த செடியை துண்டு துண்டாக அல்லவா ஆக்கியிருப்பேன்" என்றார். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவர்களின் அறியாமையை கண்டு ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவர்கள் சாரத்தை விட்டுவிட்டு இவர்களின் புத்திசாலித்தனத்தில் தொங்குபவர்கள்.

முழுமையான நிலையில் இருபவர்கள் செய்யும் தவறு கூட நன்மையை மட்டுமே தரும் என்கிறது வேதம். குரு செய்வது தவறு என தெரிந்தாலும் அதன் மூலம் ஏற்படும் நன்மையை ஆய்பவனே சிறந்த சிஷ்யனாக இருப்பான். உண்மையில் குருவிற்கு நன்மை மற்றும் தீமை என்பது கிடையாது. அறியாமையால் காண்பவருக்கே அது நன்மை அல்லது தவறு என கற்பிதம் ஏற்படுகிறது. குரு தன்மையில் இருப்பவர்களுக்கு தனக்கென செயல்களோ, கர்ம வினையோ இருப்பதில்லை. தங்கள் உடலையும், மனதையும் கருவிகளாக்கி இறைவனின் இயக்கத்தை வெளிப்படுத்துவார்கள். இறைவனின் செயல்கள் அவர்கள் மூலம் வெளிப்படுத்துவதால் அவர்கள் எவ்வாறு நன்மையோ, தீமையோ செய்யமுடியும் ? ஒலி பெருக்கியில் ஒலி வருவது ஒலி பெருக்கியால் அல்ல. ஒலியை மைக் மூலமாக யார் பேசினார்களோ அவர்கள் மூலம் தான்.

ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய ஓர் செவி வழி கதையுண்டு. ஓர் நாள் கோபியர்கள் எங்கு தேடியும் பகவானை காணவில்லை. வெகு நேரம் கழித்து ஸ்ரீ கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் வந்தார். பரம புருஷரை பார்த்த கோபிகள், " கிருஷ்ணா! எங்களிடம் உனக்கு ஏற்பட்டதை விட பன்மடங்கு பரம சந்தோசத்தில் இருக்கிறாயே, எங்களை விட பக்தி செலுத்தும் வேறு கோபிகைகளுடன் சென்றாயோ?" என கேட்டனர். "கோபிகளே! யமுனை ஆற்றின் மறுகரையில் எனது குருநாதர் துர்வாசர் வந்தார். அவரை தரிசித்துவிட்டு வருகிறேன்" என்றார் வசுதேவ புத்திரன். "கேசவா! எங்களை விட பரமசுகம் அளிக்கும் உனது குருவை நாங்கள் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. நாங்கள் இனிப்புகளை தயார் செய்து கொண்டு வருகிறோம். எங்களுக்கு குருவின் இருப்பிடத்தை அடைய வழி சொல்லு பரமாத்மா" என்றனர் கோபிகைகள்.

அந்த காலத்தில் குரு மற்றும் ஆன்மீக பெரியார்களை சந்திக்கும்பொழுது பழம் அல்லது இனிப்புகளை வாங்கி செல்வார்கள். மகான்கள் சிறிது இனிப்பை எடுத்துக்கொண்டு அவற்றை பிறருக்கு பகிர்ந்தளிப்பார்கள். அதை பிரசாதமாக ஏற்றுக்கொள்வது மரபு. தற்சமயம் கலியுகமல்லவா? அதனால் குருமார்கள் இனிப்புடன் சிஷ்யர்களை துரத்துகிறார்கள்.

கோபியர்கள் பலவகையான இனிப்புகளை தயாரித்து தலையில் பெரும் கூடையின் யமுனை ஆற்றங்கரைக்கு வந்தனர். முரளிதரன், தனது புல்லாங்குழலில் தேவ காந்தாரத்தை வாசித்துக்கொண்டிருந்தார். யமுனை ஆற்றில் வெள்ளம் இயல்பைவிடஅதிகமாக பெருக்கெடுத்து ஓடியது. "முகுந்தா என்ன இது சோதனை? உனது குரு துர்வாசரைக் காண யமுனை தடையாக இருக்கிறதே இதற்கு நீ உதவக்கூடாதா?" என சரண் புகுந்தனர். கள்ள புன்னகை பூத்த காளிங்க நர்த்தனன் "கோபிகைகளே இதற்கு எளிய வழி ஒன்று உண்டு. யமுனையிடம் சென்று, "கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி" என உரக்க மூன்று முறை சொல்லுங்கள் யமுனை வழிவிடும்" என்றார். கோபிகைகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மாதவா இது என்ன வேடிக்கை? நீ பிரம்மச்சாரி என சொல்வதே வேடிக்கையானது, என்றும் பிரம்மச்சாரி என கூறுங்கள் என்று சொல்கிறாயே எங்களுக்கு உதவும் எண்ணத்தில் சொல்கிறாயா இல்லை உனது லீலையில் இதுவும் ஒன்றா?" என கேட்டனர்.

கோவிந்தன் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கவே அனைவரும் யமுனையிடம் சென்று "கிருஷ்ணர் நித்ய பிரம்மச்சாரி" என மும்முறை கூறினார்கள். உடனே யமுனை இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது. கோபியர்கள் உற்சாகத்துடன் மறுகரையில் அமர்ந்திருந்த துர்வாச முனிவரை தரிசித்தனர்.

தாங்கள் கொண்டு வந்த இனிப்பை அவரிடம் கொடுத்தனர். ஆனால் மரபுக்கு மீறி துர்வாசர் அனைத்து இனிப்புகளையும் சாப்பிட்டுவிட்டார். இனிப்பு கூடைகள் அனைத்தும் காலியாக இருந்தது. கோபத்துக்கு பெயர்போனவர் துர்வாசர், அவரின் சாபத்திற்கு பயந்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை. தரிசனம் முடிந்ததும் யமுனையை கடக்க மீண்டும் அந்த மந்திரத்தை கூறினார்கள் கோபியர்கள், யமுனை வழிவிடவில்லை. கோபிகைகள் துர்வாசரிடம் சென்று "குருதேவா, யமுனையை கடக்க மாதவன் எங்களுக்கு ஓர் வழி கூறினான். அதை மீண்டும் கூறி யமுனையை கடக்க முயற்சித்தோம் முடியவில்லை. பெருக்கெடுத்து ஓடும் யமுனையை கடக்க உதவுங்களேன்" என்றனர்.

கோபியர்களைப் பார்த்த துர்வாச மகரிஷி "கோபிகைகளே! துர்வாசன் நித்ய உபவாசி என கூறுங்கள் யமுனை வழிவிடும்" என்றார். தாங்கள் கொண்டுவந்த பத்துபேருக்கான இனிப்புகள் அனைத்தையும் ஒரே ஆளாக சாப்பிட்டு விட்டு, என்றும் விரதம் இருப்பவர் என சொல்ல சொல்கிறாரே என கோபிகைகள் குழம்பினர். கிருஷ்ணனின் கருத்தையே ஏற்றுக்கொள்ள தயங்கிய கோபியர்களுக்கு துர்வாசரின் கருத்து சற்று மிகையாகவே பட்டது. இருந்தாலும் கிருஷ்ணனின் குருவல்லவா! இவர் சொல்வதிலும் உண்மை இருக்கும் என எண்ணி மூன்று முறை உச்சரித்தனர். யமுனை வழிவிட்டது. மறுகரைக்கு வந்த கோபியர்கள் கிருஷ்ணனை கண்டனர். அவனது பவளவாயில் இனிப்பு தின்ற சுவடுகள் இருந்தது. தங்களை வைத்து ரமணன் லீலை புரிந்ததை கோபியர்கள் உணர்ந்தனர்.

இக்கதை மூலம் ஞானியர்களுக்கு கர்ம தொடர்பு இல்லை என்பதையும், பரமார்த்த சொருபமே அவர்களின் இயக்கத்திற்கு காரணம் என்பதையும் உணருங்கள். மேற்கண்ட ஸ்ரீ கிருஷ்ணரின் கதையை படிப்பதன் மூலம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் உள்ள அவரின் பெயர்களை உச்சரித்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. உங்களை அறியாமலேயே உங்களின் அறியாமையை போக்கும் தன்மை குரு என்ற நிலைக்கு உண்டு.

அவதார புருஷர்களாகிய ஸ்ரீ ராமருக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் தாங்கள் பரமாத்மா என உணர குரு தேவைப்பட்டனர். இறை நிலையாக இருக்கும் குரு நிலை, இறைநிலையை காட்டிலும் மேலானது. குருவை சிந்திப்போம், குருவருள் பெறுவோம்.
-----------------------------------------------

குருபூர்ணிமா

ஜூலை மாதம் 6ஆம் தேதி ஏற்படுகிறது.
அன்று குருவை தியானித்து இருள் விலக்குங்கள்.