Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label மந்திரம். Show all posts
Showing posts with label மந்திரம். Show all posts

Saturday, December 31, 2011

மஹா யாகம்

மஹா யாகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Monday, July 20, 2009

ஓம் சிவ சிவ ஓம்

ஒலி என்பது ஆற்றலின் ஒரு வகை. மாண்டூக்கிய உபநிஷத் ஒலியால் பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளின் உள்ளும் ஒலி நிறைந்திருக்கிறது. சங்கை எடுத்து காதில் வைத்து பார்த்தால் ஒருவித ஒலி கேட்கும். கடல் அலைகளில் ஒலி உண்டு. நமது ஸ்வாசத்திற்கும் ஒலி உண்டு.

அதனால் தான் இறைவனை 'நாதப்பிரம்மம்' என்கிறார்கள். மத சடங்குகள் செய்யும் பொழுது எல்லா மதத்திலும் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் தன்மை செய்கிறார்கள்.


ஜூன் 6ஆம் தேதி நடந்த குருபூர்ணிமா அன்று பல நாம ஜெபங்கள் மற்றும் பஜன் நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட நாம ஜபத்தை மட்டும் இங்கு உங்களுக்கு கொடுக்கிறேன்.

Shiva Shiva Om.mp3


இந்த மந்திரம் உடலின் ஆதாரங்களையும் நாடிகளையும் தட்டிஎழுப்பி உங்களை இயக்கநிலைக்கு மாற்றும். இயல்பாக கண்களை மூடி கேளுங்கள். ஒரு விதமான அலை அசைவு உங்களுக்குள் இருக்கும். இதை கேட்டு ஒரு நாள் முடிவடைவதற்குள் உங்களை அறியாமல் ஒருமுறை உங்கள் மனதில் இந்த மந்திரம் வந்து செல்லும்.

கடவுளை காட்டிலும் கடவுளின் நாமம் பெரிது என்றார்கள். காரணம் கடவுளுடன் நம்மை இணைப்பது கடவுளின் நாமம்.

Monday, March 2, 2009

மந்திர சக்தி - பகுதி இரண்டு


சென்ற பகுதியின் தொடர்ச்சி...

ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார். தானே ஒரு மந்திரத்தை ஜெபம் செய்தால் அது சித்தி அளிக்குமா எனதெரியாமலேயே ஜெபம் செய்ய வேண்டிவரும். அது எப்படி மந்திரம் ஒரு மனிதனுக்கு பயன்படுவது மற்றொருவருக்கு பயன்படாமல் போகும். எல்லோருமே மனிதர்கள் தானே என உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம். .....

ஒரு அரசனுக்கு தனது மந்திரியின் மேல் ஒரு சந்தேகம். மந்திரியின் புத்தி சாதுர்யத்திற்கு அவர் செய்யும் மந்திர ஜெபமே காரணம் என எண்ணினார். தானும் மந்திர ஜெபம் செய்தால் மந்திரியைப் போல புத்தியை அடையலாம் என நினைத்தான். ஒரு நாள் மந்திரியிடம் தனது ஆவலை தெரிவிக்க, மந்திரியோ, அரசனான நீங்கள் சரியான அதிகாரி இல்லை. உங்களுக்கு மந்திர ஜெபம் சித்திக்காது என்றான்.

அரசன் தனது அஹங்காரத்தாலும், அதிகார மோக உச்சத்திற்கு சென்றான். உன்னால் அந்த மந்திரத்தை கூற முடியுமா, முடியாதா? என கோபமாக கேட்டான். உடனே மந்திரி அருகில் இருந்த காவலரைப் பார்த்து இவரை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என கட்டளையிட்டார். காவல் வீரர்கள் அரசனை குழப்பமாக பார்க்க அரசன்கோபத்தின் உச்சத்திற்கு சென்று "முட்டாளே ! முதலில் இந்த மதிகெட்ட மந்திரியை சிறையில் அடையுங்கள்" என்றார். உடனே காவலர்கள் மந்திரியை சிறை பிடித்தனர்.

புன்னகை பூத்தவாரே மந்திரி கூறினார். "அரசே நான் கூறிய அதே வார்த்தையைத் தான் நீங்களும் கூறினீர்கள். உங்கள் வார்த்தைக்கு கீழ்படிந்தவர்கள், என் வார்த்தைக்கு கீழ்படியவில்லை. அது போன்றதே மந்திர ஜெபம்; நான் கூறினால் சித்திக்கும் மந்திர ஜெபம் நீங்கள் கூறினால் சித்திக்காது. தவறை உணர்ந்த அரசன் தான் அதற்கு அதிகாரி அல்ல என்பதையும் அறிந்தான்.


இந்த கதை மூலம் நாம் உணர வேண்டிய விஷயம் நாம் எந்த மந்திரத்திற்கு அதிகாரியோ, அதை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். மேலும் அதை உணர்ந்த குருவிடம் தீட்சையாக பெறவேண்டும். மந்திர ஜெபம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஜெபிக்கப்பட வேண்டும். உலக நன்மைக்காக, முக்தியை வேண்டி, உடல் குறைகளை போக்க, சித்திகளை பெற என நோக்கம் வேறுபட்டாலும் மந்திர ஜெபம் எனும் செயல் ஒன்று தான்.

மந்திர ஜெபம் செய்து நோக்கம் பூர்த்தி அடைவதை சித்தி அடைதல் என்பார்கள். மந்திர சித்தி அடைதல் இயல்பாக ஏற்படும் ஓர் விளைவு. முக்தியை வேண்டி மந்திர ஜெபம் செய்தால் நம்முடைய கூர்மையான எண்ணம், ஜெபிக்கும் முறை, நம்பிக்கையை பொறுத்து மந்திர சித்தி ஏற்படும்.



ஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் மந்திர சாதனை பயிற்சியையும், மந்திர சித்தி அடைதலையும் எளிய உதாரணத்தில் விளக்குவார். குரு என்பவர் ஓர் பீஜ மந்திரத்தை கொடுப்பது என்பது பாலில் ஒருதுளி தயிரை சேர்ப்பது போன்றது. பால் போன்ற சிஷ்யனின் உள்நிலையில் ஓர் சிறிய மந்திரம் அவனை தயிராக மாற்றும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்தால், தயிரை மத்தால் கடைவதை போல கடைந்து கடைசியில் வெண்ணையாக அவனது மந்திர சித்தி கிடைக்கும். இதை பக்குவமாக ஆன்மீகம் எனும் தன்மையில் உருக்கினால் என்றும் அழியாத முக்தி எனும் நெய் கிடைக்கும். மந்திர யோகத்தை இதை விட எளிமையாக கூறமுடியாது என எண்ணுகிறேன்.


மந்திர ஜெபம் செய்யும் முறை மிகவும் முக்கியமானது.

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.





3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.


4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.





5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.


வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.


6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.


7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.


8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.

9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.

வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஜெபத்தால் ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை ஏற்படும். நோய் உள்ளவர்களுக்கு அருகில் இருந்து ஜெபம் செய்தால் அவர்களுக்கு உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். மேலும் மந்திர ஜெபத்தை பிறர் நலனுக்கு பயன்படுத்தினால் மிக வேகமாக செயல்படும்.


மந்திர சாஸ்திரத்தை பற்றி விவரித்து சொன்னால் பல விஷயங்களை கூறலாம். மதங்கள் சடங்குகளை கடந்த மெய் ஞானத்தின் திறவுகோலான மந்திர யோகத்தை குருவின் மூலம் பெற்று உள் நிலையில் பூரணத்துவம் பெறுவோம்.

Saturday, February 28, 2009

மந்திர சக்தி


மந்திர சக்தி
- முதிர்வு பெற்ற அதிர்வு.

வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது. ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்.

அறியாமை கொண்ட மனதுடன் ஆராய்ந்தால் ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் [ப்ரயோகம்] மற்றும் பயிற்சியே [சாதனா] முக்கியம்.

மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.



மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது. கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.

ஞான யோகிகள் மந்திர ஜெபத்தை ஆதரிப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்வதை விட்டு மந்திர ஜெபம் செய்வதால் என்ன பலன்? என்பது அவர்களின் கருத்து. மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். ஞான விசாரத்தின் நோக்கமும் இதுவே. அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம். உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.

பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.


தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.



பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு. மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம். இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர். பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.




மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார். தானே ஒரு மந்திரத்தை ஜெபம் செய்தால் அது சித்தி அளிக்குமா எனதெரியாமலேயே ஜெபம் செய்ய வேண்டிவரும். அது எப்படி மந்திரம் ஒரு மனிதனுக்கு பயன்படுவது மற்றொருவருக்கு பயன்படாமல் போகும். எல்லோருமே மனிதர்கள் தானே என உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம்.

அதை அடுத்த பதிவில் பார்ப்போமா?

(தொடரும் )

Tuesday, October 28, 2008

இன்று கேட்க ஒரு மந்திரம்

அனைவருக்கும் வணக்கம்,

இனி வரும் காலங்களில் ஒலி மூலம் பதிவுகள் அமைக்கலாம் என இருக்கிறேன் .

அதன் துவக்கமாக ஓர் மந்திரம்.


பிரபஞ்ச பிரார்த்தனைகள்





பொருள் :

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் தன்னிறைவுடனும், அமைதியுடனும், முழுமையுடனும் , சுபிக்ஷமாகவும் இருக்க வேண்டும்.