Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

Saturday, August 9, 2014

ஸ்வாமி ஓம்கார் சிங்கப்பூர் வகுப்புகள்

சிங்கப்பூர் ஆன்மீக அன்பர்களின் வேண்டுகொளுக்கு இணங்க ஸ்வாமி ஓம்கார் ஆன்மீக பயிற்சிகளை கற்றுக்கொடுக்கிறார். மேலும் விபரங்களுக்கு இமெயில் தொடர்புகொள்ளுங்கள்.

Wednesday, March 24, 2010

துறவிகள் நிறைந்த நகரம் - சிங்கப்பூர்...!

குரு சிஷ்யர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். குருகுலத்திற்கு வெளியே ஒருவன் கைகளில் மதுவுடன், ஒரு மாதுவை அணைத்தவாறு தள்ளாடி வந்துகொண்டிருந்தான். அவனை கண்ட குரு உடனே எழுந்து அவன் முன் சென்று அவனுக்கு மாலை அணிவித்தார். அவனையும் அந்த பெண்ணையும் மூன்று முறை வலம் வந்து விழுந்து வணங்கினார்.

இதை கண்ட சிஷ்யர்களுக்கு பயங்கிர அதிர்ச்சி. என்ன நம் குரு இவ்வாறு செய்கிறாரே என்று. சிஷ்யர்களின் கேள்விக்குறியான முகம் கண்டு குருவே விளக்க துவங்கினார், “சிஷ்யர்களே நாம் இறை நிலை பேரின்பம் வேண்டும் என்பதற்காக சிற்றின்பத்தை துறந்து துறவிகளாக இருக்கிறோம். ஆனால் இவர்களோ சிற்றின்பத்திறாக மேலான பேரின்பத்தையே துறந்திருக்கிறார்கள். பேரின்பத்தையே துறந்த இவர்கள் தானே உண்மையான துறவிகள்?” என்றார்.
குரு கதைகள் என்ற வலைதளத்தில் நான் எழுதிய இக்கதையை கொண்டு சிந்தித்தால் சிங்கப்பூர் துறவிகள் நிறைந்த நாடு என கூறலாம்.

புலால் உணவு, மது, சுற்றுலா, கேளிக்கை என எனக்கு கொஞ்சமும் சம்பந்தப்படாத இடமாக இருந்தது சிங்கப்பூர். இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த எறும்பு சென்ற கதையை சுருக்கமாக கூறுகிறேன்.



கடந்த மார்ச் 10 ஆம் தேதி சிங்கையை நோக்கி பயணம் செய்தேன். என்னுடன் பிரபல பதிவர் கேபிள் சங்கர் உடன் வந்தார். எதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பதை போல பல தளங்களில் சுவாரசியமான பேச்சுடன் பயணம் துவங்கி, சிங்கையை அடைந்தோம். இரவு சிங்கப்பூர் அடைந்ததும் எங்களை வரவேற்க திரளாக இணைய எழுத்தாள நண்பர்கள் வந்திருந்தனர். பின்னிரவு நேரத்திலும் எங்களை வரவேற்க வந்த அவர்களின் அன்பு நெகிழச்செய்தது. அப்பொழுது துவங்கிய பாச மழை இன்று நான் திரும்பி வரும் வரை இடைவிடாமல் பொழிந்துகொண்டே இருந்தது.

இந்த ஆன்மீக பயணத்திற்கு உறுதுணையாக இருந்த கோவி.கண்ணன், வைரவன், வெற்றிக்கதிரவன், ஜெகதீசன் மற்றும் சிங்கை பதிவர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவிக்கிறேன். நான் எழுதிய சில குப்பைகளுக்கே உங்களை போன்ற நட்புகிடைக்கிறது என எண்ணும் பொழுது மகிழ்கிறேன். மேலும் சிறப்பாக எழுதி உங்களை போன்ற நட்புகளை மேலும் மேலும் பெறவேண்டும்.

காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்பூர். ஆகவே இதை நான் தொடராக எழுதி உங்களை கொல்லப்போவதில்லை. சுருக்கமாக சிங்கப்பூர் பயணத்தில் நான் கண்டவற்றை புள்ளிகளாக தருகிறேன்.


ஊர் கதை அளந்து விடு....

  • சிங்கப்பூர் அற்புதமான நகரம். வானளாவிய கட்டிடங்கள், நம்மை விட குறைந்த உயரத்தில் மக்கள், சமூக ஒழுக்கமும் கட்டுப்பாட்டில் நம்மை விட உயர்ந்து நிற்கும் சமூகம் என ரசிக்க எத்தனையோ இருக்கிறது.

  • சிங்க - பூரா என்ற சமஸ்கிருத பெயர் கொண்டே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது சிங்கப்பூர். தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது என பார்க்கும் பொழுது, பாரத் என அழைக்கவும், தமிழை ஆட்சிமொழியாக இல்லாத சூழலும் நினைக்கையில் கவலை அளித்தது.

  • மக்கள் பணம் செய்ய தேனிக்கள் போல ஓடுகிறார்கள். பறக்கிறார்கள். தங்கள் செய்ய வேண்டியதை மறந்து பொருளாதாரத்தால் மட்டுமே இயங்குகிறார்கள். இதில் சம்பாதிக்க சென்ற நம் தமிழர்களும் அடங்குவர்.

  • போக்குவரத்திற்கு உள்ள மெட்ரோ ரயில் சிறப்பாக செயல்படுகிறது. தில்லி நகரில் நான் இதை நன்கு பயன்படுத்தி பழகியதால் சுலபமாக இருந்தது. இந்தியாவிலும் உலகத்தரமான மெட்ரோ ரயில் தலைநகரில் உண்டு என்பதை நினைக்க பெருமையாக இருந்தது.

  • எலக்ட்ரானிக் கருவிகள், வீடு, அறையின் அளவு என அனைத்தும் சிறியதாக இருந்தது. சின்ன சின்னதாக செய்வது அவர்களின் இயல்பு என நினைக்கிறேன். அனைத்தும் சின்னதாக இருப்பது போல இந்தியாவும் சின்னதாக சிங்கையில் காட்சி அளிக்கிறது. லிட்டில் இந்தியா..!

  • நம் ஊரில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் அனைத்து பொருளும் இங்கே ஒரு டாலருக்கு கிடைக்கிறது. :) எனக்கு சிங்கை பொருளாதார ரீதியாக எளிமையான நாடாக தெரியவில்லை. நன்றாக பொருளீட்டுபவர்களுக்கு நல்ல நகரம். இந்தியாவில் சம்பாதித்து அங்கே செலவு செய்வது முட்டாள் தனம். இதை எதிர்மறையாக செய்யலாம். இதைதான் நம் ஆட்கள் அங்கே வேலைக்கு சென்று செய்கிறார்கள்.

  • சமூக விதிமுறைகளும், தண்டனையும் கடுமையாக இருக்கிறது. பெண்கள் முழுமையான சுகந்திரத்தில் இருக்கிறார்கள். பலதரப்பட்ட நாடுகளின் மக்கள் ஒன்றினைந்து வாழ்வதால் ஒரு பூங்கொத்துபோல நாடு காட்சி அளிக்கிறது.

  • இன்முகத்துடன் அனைவரும் உதவும் தன்மையில் இருக்கிறார்கள். குறைந்த பரப்பளவில் நாடு இருப்பதால் அவர்களின் முன்னேற்றம் விரைவாக இருந்தது என நினைக்கிறேன். விரிந்த பொருளாதார கொள்கையும், குறைந்த பரப்பளவும் நம் நாட்டு இருந்தால் இதைவிட எழில் மிகு தேசமாக உருவாகி இருக்கும்.

சொந்த கதை ஏதும் இல்லையா?


  • சிங்கப்பூர் சென்றதும் முதல் நிகழ்ச்சி திருமந்திர சொற்பொழிவு. ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டிருந்தாலும், சில சூழல் காரணமாக மக்கள் வரவில்லை பதிவர்கள் பலர் வந்து கூட்டத்தை கூட்டினார்கள். இதன் மூலம் அரசியல்வாதிகள் கூட்டணி வைக்கும் ரகசியம் தெரிந்து கொண்டேன்.
  • பதிவர்கள் போக செல்வகுமார், செந்தில் வேலன், முரளி மற்றும் மேலும் சிலர் தங்கள் வாசகர்கள் என அறிமுகமானார்கள். இந்த வலைதளத்தை படிக்கும் வாசகர்களாம். என்னத்தை சொல்ல... இன்னும் என்னை இந்த உலகம் நம்புது.
  • அறிவியலில் கேப்ளர் விளைவு என கூறுவது போல சிங்கையில் சென்ற இடமெல்லாம் நித்ய விளைவு இருந்தது.
  • நாம் தங்கி இருந்த இடத்திற்கு பெயர் “தானா மேரா”.இது மலாய் மொழி சொல்லாக இருந்தாலும் இந்தியில் இது உன் இடம் என கூறுவது போல இருந்தது.
  • இந்தியாவில் இருக்கும் பொழுது ஏதாவது பரபரப்பாக வேலை இருக்கும். அதற்காக தினமும் 22 மணிநேரம் உழைக்கிறேன் என டுமீல் விட தயாராக இல்லை :) சிங்கப்பூர் ஒரு விடுமுறை நாட்களாகவே இருந்தது. பரபரப்பான சிங்கப்பூரில் தளர்வாக வேலைபார்த்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

  • திங்கள் முதல் வெள்ளி வரை மாலை நேரத்தில் திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் மட்டும் எடுத்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கேலங் சிவன் கோவில் என்ற இடத்தில் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மிகசிறப்பாக கட்டி இருக்கிறார்கள். இக்கோவிலின் அருகில் இருக்கும் புத்தர் கோவிலும் அருமையாக இருந்தது. கேலங் என்ற இவ்விடத்தில் சிவன் கோவில், புத்தர் கோவில் மற்றும் மசூதிக்கு சென்று வந்ததன் மூலம் நான் சன்மார்க்கத்தை நிலைநாட்டினேன்.

  • கேலங் சிவன் கோவிலில் தினமும் மாலை 7 முதல் 9 வரை திருமந்திரம் அலசினோம். கோவிலின் உள்ளே இருக்கும் அர்த்த மண்டபத்தில் தென் திசைபார்த்து அமர்ந்திருக்க, விளக்கம் கேட்பவர்கள் வட திசை பார்த்து அமர்ந்திருந்தார்கள். தக்‌ஷணா மூர்த்தியும் சானகாதி முனிவர்களும் இப்படித்தான் அமர்ந்திருப்பார்களோ என எண்ணத்தோன்றியது. தின்ன தின்ன திகட்டாத தித்திப்பான திருமந்திரத்தை சுவைபட சுவைத்தோம்

  • திருமந்திரத்திற்கு நான்கு ஐந்து நபர்கள் தான் வருகிறார்கள் என என் மாணவர் வருத்தப்பட்டார். பகவத் கீதையை உபதேசிக்க பகவான் கிருஷ்ணனுக்கே ஒருவர் தான் கிடைத்தார். எனக்கு நான்கு பேர் கிடைத்திருக்கிறார்கள் என எண்ணி மகிழ்கிறேன் என்றேன்.

  • இந்தியாவில் பலர் என்னை மிகவும் மரியாதையாக நடத்துவதாக எண்ணி இயல்பாக பழகவிடமாட்டார்கள். இணையவழி எழுத்தாளர்களுடன் நான் முன்பிருந்தே இதை செய்யாமல் கட்டுடைத்ததால் இயல்பாக பழகமுடிந்தது. ஆனாலும் இன்னும் அவர்கள் கொஞ்சம் மாறவேண்டி இருக்கிறது. எப்பொழுதும் அவர்களே எனக்காக பணம் தருவது, பரிசுகள் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் மிகவும் மகிழ்வேன்.

  • சிங்கப்பூர் பயணத்தில் சிறப்பான ஒரு விஷயத்தை வழங்கினாலும் அது பலருக்கு சென்று அடையவில்லை என்ற எண்ணம் உண்டு. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களின் வேலை நேரம் மற்றும் பணம் விரயம் என்பதை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது. அடுத்த முறை சுப்பாண்டியை களத்தில் இறக்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும் என நினைக்கிறேன்.

முடிவா என்ன சொல்ல வர்ரே?

வேற என்ன ஒரு ஜென்கதை தான்..

ஒரு அரசர் தனது பூந்தோட்டத்தை ஒரு ஜென்குருவிடம் காண்பிக்க எண்ணி அவரை அழைத்தார். பலவருடங்களாக தோட்டக்கலையில் உயர்ந்த ஆட்களை கொண்டு அரசன் உருவாக்கிய தோட்டம் அது. ஜென்குரு தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு தோட்டம் நன்றாக இல்லை என்றார். அரசனுக்கு மன வருத்தம் ஏற்பட்டது. என்ன குறை என கேட்டான். தோட்டம் என்றால் இலை தளை, சருகுகள் என கீழே விழுந்து கிடக்கும் அது இயற்கையானது. ஆனால் நீ சருகுகளை அப்புறப்படுத்தி மிகவும் தூய்மைபடுத்தி வைத்திருப்பதால் அதன் அழகு கெட்டுவிட்டது என்றார் ஜென் குரு. ஓடி சென்று மரங்களை உலுக்கினான் அரசன் சருகுகள் உதிர்ந்து குப்பையானது தோட்டம். ஜென் குரு கூறினார், “அற்புதமான தோட்டம்”.

அரசன் உருவாக்கிய தோட்டத்தை போல சிங்கப்பூர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. ஆனால் இயற்கையாக இல்லை. தெருக்கள், கட்டிடங்கள் உருவாக்கி மக்கள் அதை பயன்படுத்தாமல் இருப்பதை போல மிகத்தூய்மையாக காட்சி அளிக்கிறது.

இந்த ஜென்கதையை நினைத்தவாறே இந்தியா வந்தடைந்தேன். கையில் இருந்த காகிதத்தை கிழித்து தெருவில் வீசி, அதன் அருகே காறி உமிழ்ந்து என் இந்திய வாழ்க்கையை துவக்கினேன்.