சிறப்பான திறமையை கொண்டவர்களை பாரதம் எப்பொழுதும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் திறமையை பாராட்டும் அனைத்து துறையிலும் இவர்கள் ஒருவரேனும் இருப்பார்கள். நோபல் பரிசு முதல் ஆஸ்கார் வரை எந்த பட்டியல் எடுத்தலும் அதில் நம்மவர்கள் இடம் பிடிக்க தவறுவதில்லை. மேற்கத்திய நாடுகளுக்கு பாரதத்தின் மேல் ஓர் அபிமானம் வர இதுவும் ஓர் காரணம் என சொல்லலாம். ராமன் விளைவோ ரஹமான் விளைவோ அவர்களுக்கு வித்தியாசம் இல்லை காரணம் அவர்கள் சிறப்பானவற்றை ரசிக்க தவறுவதில்லை.
திறமைசாலிகளுக்கு பணமோ புகழோ நோக்கமல்ல. மக்கள் தங்களை ரசிக்கிறார்கள் என்பதை விட வேறு எதுவும் தேவையில்லை. ஒரு திறமைசாலிக்கு உலகின் உயர்விருதை கொடுத்துவிட்டு மக்கள் உங்களை ரசிக்கவில்லை என சொன்னால், அதைவிட துன்பம் அவருக்கு இல்லை என சொல்லாம். மாற்றாக.. விருதுகள் கொடுக்கப்படாமல் இருந்தாலும் மக்களின் உயிரில் கலந்திருந்தால் திறமைசாலிகளுக்கு தினமும் விருதுகள் கிடைத்த மகிழ்ச்சி உண்டாகும்.
சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்பவர் திறமையான நாடகங்களை நடத்தி மக்களின் மனதில் நின்றவர். நாடக உலகின் தந்தை என போற்றப்பட்டவர். அவருக்கு உலகின் எந்த உயர்விருதும் கிடைக்கவில்லை. அவரின் திறமையால் தமிழகம் இன்னும் திறமையான திரை துறை சார்ந்தவர்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் திரையுலகில் யாருக்கு விருது கிடைத்தாலும் சங்கரதாஸருக்கு கிடைத்து என்றே சொல்லவேண்டும்.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சிலர் விருது பெற்று புகழ் அடைகிறார்கள். சிலரால் விருதுகள் புகழடைகிறது.
ஆஸ்கார் பரிசு எனும் அகாடமி அவார்டுகள் ஒருவரின் திறமைக்காக கொடுக்கப்படும் பரிசாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் உலக மக்கள் கவனத்திற்கு ஓர் திறமையாளர் வருகிறார் என்றால் ஆஸ்கார் தேவைப்படுகிறது என சொல்லலாம். முன்பு சொன்னது போல ஆஸ்காருக்கு புகழ் சேர்க்க திரு ஏ ஆர் ரஹ்மானுக்கு இரண்டு பரிந்துரைகள் உள்ளன. இந்த சூழலில் அவரின் பிறப்பு ஜாதகத்தை ஆராயவேண்டும் என தோன்றியது.
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த நேர தகவல்கள் தெளிவற்ற நிலையில் இருந்ததால் பல ஜோதிட முறைகளின் துணைகொண்டு அவரின் ஜாதகத்தை உருவாக்கி உள்ளேன். இவரின் ஜாதகம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
பெயர் : ஏ ஆர் ரஹ்மான்
தேதி : 6-ஜனவரி-1966
நேரம் : 18:42 ISD
இடம் : சென்னை

கடக லக்னத்தில் பிறந்திருக்கிறார்.ஒருவர் கலைத்துறையில் புகழ் பெற 3,5 மற்றும் 11ஆம் வீடுகள் தொடர்பு தேவை. அதன் படி 5ஆம் மற்றும் 10ஆம் வீட்டுக்கு உண்டான செவ்வாய் 7ஆம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்துள்ளார்.
லக்னாதிபதி சந்திரன் 12ஆம் பாவகத்தில் இருப்பதும் சனிக்கு திரிகோணத்தில் இருப்பதாலும் அவரின் இயற்ப்பெயரை மாற்றும் சூழல் ஏற்பட்டது. மேலோட்டமாக ஜோதிடத்தை அறிந்தவர்கள் இவரின் ஜாதகத்தை பார்த்தால், பல தோஷங்கள் இருப்பதாக சொல்லி வாதிடுவார்க்ள். உண்மையில் நட்சத்திர நிலை வைத்து ஆராய்ந்தோமானால் அனைத்து கிரகங்களும் மேன்மையை கொடுக்கிறது.
நடப்பு தசா நாதன் சனி 1991 முதல் இவருக்கு சிறப்பான மேம்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். சனி தசா 2010 மார்ச் மாதம் வரை இருக்கிறது. சனிதசா நடந்தால் அலறி ஓடும் கனவான்களே பாருங்கள் இவரை. ஒளவை சொன்னது போல இளமையில் வறுமை கண்டவருக்கு செல்வ வருமையை கொடுத்தது சனி தசா காலமே.
சனிதசா கலத்திற்கு பிறகு வரும் புதன் தசா காலம் இவரின் புகழை மேலும் ஓங்கச் செய்யும். புதன் தசா காலத்தில் சனிதசாவில் சாதித்ததெல்லாம் எள் அளவே என சொல்லுவார்கள்.
ஆஸ்கார் கிடைக்குமா?
பிப்ரவரி 22ஆம் தேதி ஆஸ்கார் விருதுகள் வெளியிடப்படுகிறது. இவர் பெயர் இரண்டு நிலைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் ஜாதக ரீதியாக சனிதசா, குரு புக்தி மற்றும் சுக்கிரன் அந்திர காலம் நடைபெறுகிறது. சனி,குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இவருக்கு சாதக பலனை தரும் அமைப்பில் இருக்கிறது. கோச்சார கிரகங்கள் சிறிது சாதகமற்று இருப்பதால் அவருக்கு முழுமையான மேன்மை கிடைக்காது என சொல்லலாம். கிடைக்க வேண்டிய இரண்டில் ஒரு விருது கிடைக்க வாய்ப்புண்டு. முடிவாக சொல்லவேண்டுமானால் ஆஸ்கார் இவருக்கு கிடைத்து ஆஸ்கார் விருது புகழ்பெறும்.
ஜோதிட ரீதியாக ஆய்வு தேவையா?
ஆஸ்கார் விருது பலமுறை முயற்சி செய்து கிடைக்காதவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு பல அரசியல் காரணம் சொல்லப்பட்டாலும் உண்மையில் ஒருவருக்கு கிரக பலன் இல்லையென்றால் கிடைப்பது சிரமமாகி விடுகிறது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?
ஜோதிடத்தை தாண்டி ஒரு வரி சொல்லவேண்டுமானால்...
எல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்..




