Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts
Saturday, August 9, 2014
Tuesday, May 13, 2014
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 11
வெறுமை. என்னை சுற்றி உள்ள பாலைவன சமவெளியில் மட்டுமல்ல. என் உள்ளேயும் வெறுமை. வாழ்வின் விளும்பில் நிற்கிறோம். உதவி செய்ய ஒரு சிறு எறும்பு கூட கண் முன் இல்லை.
ஆண்டவா என்னை காப்பாற்று என கதறலாம். ஆனால் அப்படி ப்ரார்த்தனை செய்து பழக்கமற்றவன். சுயநலமாக எதற்கும் இறைவனை வேண்டியது இல்லை. அதனால் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் காப்பாற்று என எப்படி வேண்டுவது? அப்படி கேட்டு செய்வதாக இருந்தால் அது என்ன இறைவன்? நான் இறை ஆற்றல் துணையில்லாமல் இங்கே வர முடியுமா? அப்படி இருக்க நான் வேண்டி தான் அவர் என்னை காக்க வேண்டுமா? இப்படி பல தர்க்கங்கள் ஏழுந்து பிறகு அடங்கி மனம் வெறுமையானது. இது தான் ஜென் நிலையோ?
காரின் முன் புறம் ஏறி அமர்ந்துவிட்டேன். சுப்பாண்டி கற்களை எடுத்து தூர வீசி கொண்டிருந்தான். ராம தாசி செய்வது அறியாது எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
நேரம் கருப்பு சர்ப்பம் போல மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. முழுமையான இருள் கவிழ்ந்தது. மெல்லிய குளிர் உடலை துளைக்க துவங்கியது. கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு கார் டயரில் உடலை வெப்பத்திற்காக அணைத்து உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி. பார்க்க பரிதாபமாக இருந்தது.
சில நிமிடங்கள் கடந்திருக்கும், காரின் உள் கூரையில் இருக்கும் சிறிய விளக்கின் ஒளி மட்டுமே இருந்தது. வேறு சலனங்கள் இல்லை.
“சாமீ...அங்க பாருங்க...” என்றான் சுப்பாண்டி.
தூரத்தில் இரண்டு வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தது. சில நிமிடங்களில் அது பெரிதாக தெரிய துவங்கியது. அருகே வர வர அது பெரிய ட்ரக் என்பது புரிய துவங்கியது.
அந்த வண்டியின் வெளிச்சத்தை விட சுப்பாண்டியின் முகத்தில் வெளிச்சம் அதிகமாகியது. மிக அருகே வந்து அந்த வாகனம் நின்றது.
அர்ஜண்டினாவின் அதிக மின் அழுத்த கேபிள் இணைப்பு வழங்கும் மின்சார இலாகாவின் வாகனம். அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்து இராமதாசியுடன் ஸ்பானீஷித்தார்கள்.
பாலைவனத்தின் ஓரத்தில் மின்சார கோபுரம் அமைத்து வேலை செய்யும் பொழுது தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி சமவெளியின் நடுவே தெரிவதை கண்டு ஏதேனும் அதிசயம் இருக்கும் என நினைத்து 80 கி.மீ பயணித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்ததோ பிரபஞ்ச அதிசயமான நான், ராமதாசி பின்னே சுப்பாண்டியும்...!
அந்த வண்டியின் பின்னால் இந்த வண்டியை கட்டி இழுத்து செல்ல துவங்கினார்கள். பல கேள்விகளுடன் என்னை சுப்பாண்டி பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் கேட்கவில்லை. நானும் ஏதும் பேசும் நிலையில் இல்லை.
வண்டி எங்களை இழுத்துக்கொண்டு 40 கி.மீ சென்று இருக்கும். திடீரென முன் சென்ற வாகனம் சமிக்கை செய்து நின்றது. வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ராம தாசி வண்டியை பிரேக் பிடித்து நிறுத்த, மின் இலாகா வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி எங்கள் அருகே வந்தார். அவர் பேசியதை மொழிபெயர்த்தார் ராமதாசி.
“மன்னிக்கவும், நீங்க எல்லாரும் சாப்பிடாமல் ரொம்ப நேரம் பாலைவனத்தில் இருந்திருப்பீங்க. சாப்பிடறீங்களா தண்ணி வேணுமானு கேக்காம உங்களை கூப்பிட்டு வந்துட்டோம். இந்தாங்க தண்ணீர் பாட்டில். நீங்க நல்ல பசியில் இருப்பீங்க. எங்க கிட்ட நல்ல மாமிசம் இருக்கும் உணவு எதுவும் இல்லை. நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்கன்ன என்னிடம் வெஜிட்டபிள் சாண்ட்விச் இருக்கு. தரட்டுமா?”
ஆ..வ்வ்வ்........பெருங்குரல் எடுத்து சுப்பாண்டி அழுக...நான் கைகளால் தொழுக... ராமதாசி உணவு பெற்றுக்கொண்டு வந்தார். பச்சை தண்ணீர் கேட்டால் கூட அதில் இரண்டு மாட்டு மாமிச துண்டுகளை இட்டு கொடுக்கும் அர்ஜண்டினாவில் , சைவ உணவு பார்ப்பதே அரிது. வெளி இடங்களில் இல்லை என்றே சொல்லலாம். அப்படி இருக்க பாலைவனத்தில் அதுவும் வேறு ஒருவர் சைவ உணவை எங்களுக்கு அளிக்கிறார். இதை என்னவென்று சொல்ல ?
காரில் இருந்த சிறிய விளக்கு 80 கி.மீட்டர் தூரம் தெரிந்திருக்குமா? அப்படி தெரிந்தாலும் யாராவது வந்து பார்க்க முயற்சிப்பார்களா? இது எப்படி சாத்தியமாயிற்று ? இப்படி பல கேள்விகள் மனதில்...
அன்றைக்கு அந்த ரொட்டியில் எங்கள் எழுதி இருந்தது...! வேறு என்ன சொல்லி கேள்வி அம்புகள் கொண்ட மனதை சமாதனம் செய்வது?
இப்படியாக நாங்கள் உயிர்த்தப்பி மீண்டும் முக்கிய சாலைக்கு வந்து அந்த மின்சார இலாக்கவினர் விடைபெற்றனர். இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. எப்படி இது சாத்தியம் என சுப்பாண்டி என்னை இன்னும் கேட்கப்படாத கேள்வியாக கண்ணில் அந்த கேள்வியை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறான்.
மீண்டும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஜிபிஎஸ் துணையுடன் பயணம் தொடர்ந்தது...
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Sunday, March 23, 2014
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 10
காரின் ஆடியோவில் வேத மந்திரம் ஒலிக்க.. இரண்டு பக்கமும் இயற்கை விரிந்தோங்கி இருக்க...140 கிலோமீட்டர் வேகத்தில் எங்கள் கார் பயணித்துக் கொண்டிருந்தது.
துவாபர யுகம் துவங்கி ஞானிகளே சாரதிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப நான் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். மலைகளில் நடந்து பயணித்த களைப்பில் ராம தாஸியும் சுப்பாண்டியும் உறங்கிவிட்டார்கள்.
ஜிபிஸ் காட்டும் திசையில் நான் வேத மந்திரங்களை கேட்டபடியே ஓட்டிவந்தேன். ஒரு 70 கிலோமீட்டர் பாலைவனத்தில் ஓட்டி இருப்பேன்.
சுற்றிலும் வெளி...என்றால் கட்டிடங்களோ, மலைகளோ, கற்களோ இல்லை.. மைதானம் போல பரந்து விரிந்த சமவெளி போன்ற இடத்தில் சிறு செடிகள் மட்டும்... பறவைகளோ, விலங்குகளோ, பூச்சிகளோ எதுவும் இல்லை...வேற்று கிரகம் போன்ற உணர்வு...இப்படி ரசித்தபடியே வந்த எனக்கு திடீரென தார் சாலை முடிந்து வெறும் மண் சாலை மட்டுமே தொடர்ந்து வந்தது நெருடலாக இருந்தது.
வழிகாட்டும் ஜிபிஸ் கருவியை பார்த்தேன். நேராக போக வேண்டும் என சொல்லியது. இன்னும் விரைவாக ஆக்ஸிலேட்டரை அழுத்தினேன். மண் தளத்தில் சமவெளியில் கார் தூசியை கிளப்பிய வண்ணம் பறந்தது. மேலும் 10 கிலோமீட்டர் சென்று இருப்பேன். கார் ஒரு அடி கூட நகரவில்லை. அப்படியே நின்றுவிட்டது. மண் தரையில் நாலு சக்கரங்களும் புதைந்து பெரும் தூசி மண்டலத்தை கிளப்பிவிட்டு உறுமிக்கொண்டே கார் நின்றது.
சப்தம் கேட்டு விழித்த ராம தாசியும் சுப்பாண்டியும் என்னை மேலும் கீழும் பார்த்தனர்.
வண்டியை விட்டு இறங்கி நானும் சுப்பாண்டியும் தள்ள ராம தாசி வண்டியை எடுக்க முயற்சி செய்தார். ரெண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் மெல்ல பின்னோக்கி வந்து சம தளத்தில் ஏறி நின்றது.
காரை மண் குழியிலிருந்து மீட்க போராடியதில் பெட்ரோல் முழுவதும் தீர்ந்து பெட்ரோல் காட்டும் கருவியின் முள் E என்ற பகுதியை காட்டி எங்கள் விதியுடன் சேர்ந்து ஈ என இளித்தது.
குளிருக்கான உடை கைவசம் இல்லை. அது சுப்பாண்டி புறப்படும் பொழுதே தூக்கி வீசிவிட்டு வந்துவிட்டான். காரில் இருக்கும் ஹீட்டரை போட வழியில்லை காரணம் எரிபொருள் தீர்ந்துவிட்டது.
திரும்ப 80 கிலோமீட்டர் நடந்து சென்றால் தான் உண்டு. அதற்குள் குளிரிலோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ சுருண்டு விழுந்து இறந்து விட வாய்ப்பு உண்டு. கைவசம் உணவும் தண்ணீரும் இல்லை.
இப்படி யோசனையில் இருக்கும் பொழுது சுப்பாண்டி டென்ஷனுடன் ,“ இதுக்கு தான் சாமி ஜீபிஸ் எல்லாம் நம்பி வரக்கூடாதுனு சொல்றது. பாருங்க எப்படி வந்து மாட்டீட்டோம்...நாம் செத்தா கூட யாருக்கும் எங்க இருக்கோம்னு தெரியாது” என புலம்ப துவங்கினான்.
புறப்படும் பொழுது, “கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும்,” என சுப்பாண்டி சொன்னதன் அர்த்தம் தெளிவாக புரிந்தது.
காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து கலக்கத்துடன் யோசனையில் ஆழ்ந்தேன்.
ஐந்து நிமிடம் கூட கடந்து இருக்காது...
“என்ன சாமி இப்படி உட்கார்ந்தா போதுமா? என்ன செய்ய போறோம்னு சொல்லுங்க.. எனக்கு வேற பசிக்குது... எப்பவும் ஆண்டவன் காப்பாத்துவான்னு சொல்லுவீங்களே...காப்பாத்த சொல்லுங்க சாமி” என சுப்பாண்டி கலவரத்திலும் கிண்டல் செய்தான்.
பசி......இயலாமை....சோர்வு.....மற்றும் குழப்பத்துடன் மூன்று பேரும் காருடன் நிற்க...சூரியன் தன் பணி முடிந்து மறைய...எங்கும் இருள் சூழ்ந்தது....!
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Monday, January 20, 2014
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 9
இந்தியாவில் உள்ள இமாலய மலை தொடர்களில் நிறைய வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. குளிரின் நடுவே அத்தகைய வெந்நீர் ஊற்றுக்களில் குளித்தால் ஏற்படும் அனுபவம் சுவையானது.
ஆனால் இங்கே ஆண்டிஸ் மலைத்தொடரில் இருக்கும் வெந்நீர் ஊற்றை காண சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வெந்நீர் ஊற்றுக்கள் கந்த அமிலத்தால் ஆனது. கந்த அமிலத்தின் புகையும் அதன் கரைசலும் பாறைகளில் கலந்து ஓடிவருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு இதில் மக்கள் குளிக்கும் வண்ணம் இந்த கந்தக ஊற்று குகையில் ஓர் ஹோட்டல் வைத்திருந்தார்கள் என கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்தேன்.
கந்தக நீர் ஊற்றுக்கு அருகே கந்தக படிமங்களால் ஆன ஓர் பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் முன்பு மக்கள் நடந்து சென்று குகையை அடைந்திருக்கிறார்கள். ஆனால் தற்சமயம் அதன் பலம் குறைந்ததால் அதன் மேல் மக்கள் நடக்க அனுமதி இல்லை. இந்த வெந்நீர் ஊற்றின் அருகே வாழும் உயிரினங்கள் தங்கள் இயற்கையான குணத்தை மாற்றிக் கொண்டு வெப்பத்தை தாங்கும் வண்ணம் இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இச்செயலை டார்வின் கண்டறிந்து பரிணாம கொள்கையை கண்டறிந்திருக்கிறார்.
சார்லஸ் டார்வின் என்றவுடன் பலர் அவரை ஓர் விஞ்ஞானியாகவே கருதுகிறார்கள். அவர் ஓரு கிருஸ்துவ மத ஆய்வாளராக பணியாற்றியவர். பரிணாம கொள்கை அவர் இருந்த மதத்திற்கு எதிரானதாக கருதி அவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தனர். அவர் ஓர் சிறந்த ஓவியரும் கூட. இந்த இயற்கை சூழலை தன் கைப்பட வரைந்தும் இருக்கிறார். அவர் வரைந்த ஓவியம் அருகே இருக்கும் ஓர் தங்கும் விடுதியில் இருந்தது. அதை கண்டு களித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அவர் கண்ட காட்சிகளை எல்லாம் அவர் ஓவியமாக பதிவு செய்தார்.
இப்படி சுவாரசியமாகவும் அறிவு தளத்திலும் பயணம் சென்றுகொண்டிருந்தது. அடுத்து நாங்கள் வான ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இந்த இடத்திலிருந்து ஜஸ்ட் 300 கி.மீட்டர்தான் என்றார்கள். வழக்கம் போல GPS-ல் வழித்தடத்தை சரி செய்துவிட்டு நான் ஓட்டத்துவங்கினேன்.
செல்லும் வழியில் ஓர் செக் போஸ்ட் எதிர்பட அங்கே இருந்த காவலர் வண்டியை ஓரங்கட்டினார். இந்தியாவில் இப்படி ஓரம் கட்டினால் நாம் இறங்கி அருகே இருக்கும் மரத்தின் பக்கம் சென்று யாருக்கும் தெரியாமல் காந்தி படத்தை அளித்தால் காவலரும் நாட்டுப்பற்றுடன் தேச தந்தையை வணங்கி வழியனுப்பி வைப்பார். அர்ஜண்டினாவில் என்ன சம்பிரதாயம் என தெரியவில்லை. நான் குழப்பத்தில் இருக்க அவர் அருகே வந்து செம்மொழியாம் ஸ்பேனிஷ் மொழியில் “ஏதேனும் பழங்கள் வைத்திருக்கிறீகளா?” என கேட்டார்.
இவர் ஏன் பழங்களை பற்றி கேட்கிறார். இவங்க ஊரில் இது ஏதோ லஞ்சம் கேட்கும் சங்கேத பாஷையோ என நினைத்து, என் மாணவி ராமதாஸியை கேட்க, அவர் எனக்கு விளக்கம் அளித்தார். அர்ஜண்டினாவின் மாநிலங்கள் சுயாட்சியில் இயங்குவதால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பழம் காய்கறிகளை தனி நபர்கள் கொண்டு செல்லுவதற்கு தடை செய்து இருக்கிறார்கள். மேலும் சுகாதரம் கருதியும் சில நோய் தடுப்பு காரணத்தால் இந்த தடை அங்கே விதிக்கப்பட்டிருக்கிறது என விளக்கினார். அந்த போலீஸ்காரரரிடம் சுப்பாண்டியை காண்பித்து இந்த ஞானப்பழம் தவிர வேறு எதுவும் இல்லை என்றேன்.
காரின் உள்ளே சோதனை செய்துவிட்டு ரெண்டு அடி திரும்பி நடந்தவர், மீண்டும் திரும்பி.... கார் ஓட்டிக்கொண்டிருக்கும் என்னை பார்த்து, இவரை பார்த்தால் நம் நாட்டுக்காரர் போல தெரியவில்லையே, லைசன்ஸ் இருக்கா? என்றார். நான் சுப்பாண்டியை பார்க்க சுப்பாண்டி என்னை பார்க்க, நிலமையை புரிந்து கொண்டது போல ராம தாஸியும் காரைவிட்டு இறங்கி போலிஸ்காரரை தனியாக கூட்டு சென்று ஏதே ஸ்பேனீஷில் விளக்கி கொண்டிருந்தார்.
சில நிமிடம் கழித்து ஒன்றும் புரியாமல் நான் ராமதாஸியிடம் விபரம் கேட்க, உங்களிடம் லைசன்ஸ் இல்லை, ஆனால் இவர் ஒரு பெரிய ஸ்வாமி, அதனால் லைசன்ஸ் கேட்காதீர்கள் என விளக்கி கொண்டிருந்தேன் என்றார். நான் புன்சிரிப்புடன் என் பையில் இருந்து இண்டர்நாஷனல் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்து காண்பித்தேன். உலகின் குடியரசு மொத்தம் 249 குடியரசு நாடுகளில் 210 நாடுகளில் வாகனம் ஓட்டும் அனுமதி வாங்கி இருப்பார் என அந்த போலீஸ்காரர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ராமதாஸியும் மகிழ்ச்சியுடன் இவரிடம் லைசன்ஸ் இருப்பது எனக்கு தெரியவில்லை என போலீஸ்காரரிடம் கூறி அவரிடம் இருந்து விடைபெற்று கிளம்பினோம்.
மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம், “என்னிடம் லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என தெரியாமல் எப்படி என்னை கார் ஓட்ட அனுமதித்தீர்கள்?” என ராம தாஸியிடம் கேட்டேன். “நீங்கள் என் குரு, உங்களுடன் பயணம் செய்வது என்பது மட்டுமே என் எண்ணம், எல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என வந்துவிட்டேன். நான் அந்த போலீஸ்காரரிடம் பேசும் பொழுது கூட என்னை சட்டத்திற்கு புறம்பாக செல்ல விடாமல், லைசன்சுடன் நீங்கள் நிற்கிறீர்கள் பார்த்தீர்களாஸ்வாமிஜி...என்றார்.
இப்படி ஓரு சரணாகதி நிலையில் எனக்கு ஒரு சிஷ்யையா? என்ன சொல்லுவது என தெரியாமல் பயணத்தை தொடர்ந்தேன்.
இப்படி ஓரு சரணாகதி நிலையில் எனக்கு ஒரு சிஷ்யையா? என்ன சொல்லுவது என தெரியாமல் பயணத்தை தொடர்ந்தேன்.
சில கி.மீட்டர் பயணித்திருப்போம்,
“ஸ்வாமிஜி இத்தனை நாள் ஓம்-காரா இருந்த நீங்க இப்ப அர்ஜண்டினாவில் அப்கிரேட்யிட்டீங்களே” என சுப்பாண்டி காட்டிய திசையில் பார்த்தால் அங்கே ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. அதன் பெயர்....ஓம் பஸ்...!
இப்படியாக எங்கள் பயணம் நகைச்சுவையுடன் நகர்ந்தாலும் இனி சில கிலோமீட்டர்களில் கலவரம் காத்திருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது...
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Sunday, January 5, 2014
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 8
முழங்கால் அளவு இருக்கும் பெரிய காலணிகள். கயிறுகள் மற்றும் உலர் பழங்கள் என நானும் சுப்பாண்டியும் எங்கள் பையில் திணித்துக் கொண்டோம்.
உலகின் இரண்டாவது பெரிய சிகரம் மற்றும் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய சிகரம் என்றால் சும்மாவா? மலையேற்றங்களும் பாறையில் லாவகமா ஏறுவதை பயிற்சி செய்திருப்பதால் சமாளித்துவிடலாம் என நினைத்து கிளம்பினோம்.
வில்லிபுத்ரர் எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு அவரின் ஆசிரியர் பணிக்கு சென்றுவிட்டார். மலைச்சிகரம் மிக அருகே என்றார்கள். விசாரித்ததில் 150கி.மீ. தூரம். இங்கே 200 , 300 கி.மீ எல்லாம் அருகே என்கிறார்கள். அரை மணி நேர பயணம் தான் என அவர்கள் குறிப்பிட்டாலே 200 கிமீ. என புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஞானம் பின்னர்தான் கிடைத்தது. சென்னைக்கு மிக அருகே என விளம்பரப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொஞ்சமும் சளைக்காதவர்கள்.
மலைஏற்றம் என்பதால் இம்முறை ராமதாசியை கார் ஓட்ட சொல்லிவிட்டு நானும் சுப்பாண்டியும் பின் சீட்டில் அடைக்கலமானோம். பின்ன இரண்டாவது சிகரம் ஏறுவதற்கு ஆற்றலை சேமிக்க வேண்டாமா? கார் ஓட்டி வீணாக்கினால் அப்புறம் மலை ஏற ஆற்றல் வேண்டாமா?
சுற்றிலும் பல்வேறு வண்ணங்களில் மலைத்தொடர்கள். அகண்ட சாலைகள் , தூய்மையான காற்று என பயணம் துவங்கிய சில மணி நேரத்தில் நானும் சுப்பாண்டியும் தூங்கிப்போனோம்.
சில மணி நேர பயணத்திற்கு பின் வாகனம் நின்றது. நாங்களும் கண் விளித்தோம். அவசர அவசரமாக தூக்க கலக்கத்துடன் எழுந்த எங்களை ராமதாசி அசுவாசப்படுத்தினார். பின்னர் காரின் வலதுபக்க கண்ணாடியை இறக்கி ஸ்வாமி இதோ நாம் சிகரத்தின் அருகே வந்துவிட்டோம் என ஜன்னல் வழியாக கண்பித்தார்.
சிகரத்தின் அருகே சென்று பார்க்கும் வரை சாலைகள் அமைத்திருக்கிறார்கள். மலை ஏறவோ பாறைகளில் கயிறு கட்டி ஏறவோ தேவையில்லை...! சிகரத்தை கண்டு ரசிக்கவும் அதன் மேல் செல்லவும் கேபிள் கார்கள் உண்டு. கார் நிறுத்தும் இடத்தில் நாம் பசியாற பிசா முதல் அனைத்து உணவும் கிடைக்கும் வகையில் உணவகங்களும் உண்டு. மலையேற்றத்திற்கு நாங்கள் கொண்டுவந்த கயிறையும் உலர் பழங்களையும் நைசாக மறைத்துவிட்டு...ராமதாசியுடன் சென்றோம். நாம் அசிங்கப்படுவது இது முதல்முறையா என்ன? :))
கேபிள் கார் பவனி வரும் இடம்.
மலையின் உச்சியை அடையும் ஒற்றையடி பாதை. (படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்த்தால் ஒரு ஆரஞ்சு கலர் உடையுடன்
பொடியாக ஒர் உருவம் தெரியும்)
பொடியாக ஒர் உருவம் தெரியும்)
அர்ஜண்டினாவின் உணவில் மாமிசம் இல்லாமல் பெற்றுக்கொண்டு, உணவகத்தின் வாசலில் அமர்ந்து சிகரத்தை ரசித்தவாறே சாப்பிட்டோம். பிறகு மெல்ல நடந்து சிகரத்தின் அருகே சென்று கண்டு களித்தோம். பிரம்மாண்ட மலைக்கு அருகே நம்மை கொண்டு செல்லும் பொழுது நாம் சிறு துரும்பு நம்மை நினைக்க வைக்கிறது இயற்கை. ஆணவம் அழிந்து பிரபஞ்ச துகளாக நாம் நம்மை அறியும் தருணம் அது.
அடுத்து நாங்கள் செல்ல திட்டமிட்ட இடம் மிகவும் முக்கியமானது. பரிணாம கொள்கையை ஆய்வு செய்ய சார்லஸ் டார்வின் தென் அமெரிக்காவின் பல இடங்களில் முகாம் அமைத்தார். அதில் ஓர் வென்னீர் ஊற்றுக்களுடன் இருக்கும் இயற்கை சூழ்ந்த இடம் அது. அங்கே செல்லும் வரை ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமே என நினைத்திருந்த டார்வினின் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்த பயணம் அது.
சிகரத்தின் உச்சியில்...
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Friday, January 3, 2014
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து பகுதி 7
வில்லிபுத்திரரின் கவனிப்பில் மகிழ்ந்து அவரின் இல்லத்தில் அந்த மாலை உணவருந்தி விட்டு இரவு உறக்கத்திற்கு முன் வீட்டுக்கு வெளியே வந்தால் 5 டிகிரி குளிர். மாலை வரும் பொழுது 30 டிகிரி வெயில் அதன் சுவடே இல்லாமல் உறங்க போயிருந்தது.
வீட்டின் வெளியே அக்னியை மூட்டி அதன் அருகே அமர்ந்திருந்தார் வில்லி. மேலே நட்சத்திர மண்டலங்கள் தெளிவான ஒரு காட்சியை காட்டிக்கொண்டிருந்தன.
வில்லியின் வாழ்க்கை தன்மையையும் அவரின் ஆன்மீகத்தை பற்றியும் கேட்க அவர் தனது கதையை ஸ்பானீஷ் மொழியில் விளக்கினார்.
ஒரு சாதாரண டிஸ்கோ கிள்ப் மேலாளராக இருந்தவர் பத்து வருடம் முன் இந்தியாவுக்கு வந்து சாயிபாபாவை சந்தித்து இருக்கிறார். அவருக்கு உள்ளே ஒரு மாற்றம் ஏற்பட்டு தன் பணிகளை துறந்து தனிமையில் தன்னை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார். டிஸ்கோ மேலாளராக இருக்கும் பொழுது பொருளாதார நிலையில் உயரத்தில் வாழ்ந்திருக்கிறார். பிறகு அவரின் இம்மாற்றம் மிக சராசரிக்கும் கீழ் வாழ வைத்திருக்கிறது. அருகே ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுக்கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
சாய் பாபாவை தனது மனதில் குருவாக கொண்டு ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், அனைத்து இந்திய ஆன்மீக நூல்களையும் கற்று, சைவ உணவு பழக்கத்தில் இருந்து கொண்டு ஆன்மீக நிலையை உணர தனது வாழ்க்கையை மாற்றுக்கொண்டு இருக்கிறார் என தெரிய வந்த பொழுது ஆச்சரியம் அடைந்தேன்.
சாய்பாபாவின் மேல் பல முரண்பட்ட கருத்துக்கள் பலர் கொண்டுருந்தாலும் இத்தகைய மனிதர்களின் உள் தன்மையை மாற்றம் செய்ததற்கு அவரை நாம் பாராட்டலாம்.
சில வருடம் முன் இந்தியா சென்ற வில்லி புத்திரரின் தோழர் ஒருவர் அங்கிருந்து இந்திய கடவுளின் சிலையை கொண்டுவந்திருக்கிறார். வில்லி புத்திரரும் அவர் தோழரும் இணைந்து கோவில் போன்று ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைத்திருக்கிறார்கள்.
அதிகாலையில் நீங்கள் கோவிலை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். காரணம் இயற்கை முறையில் கட்டபட்ட வில்லிபுத்திரரின் வீட்டில் மின்சாரம் இல்லை. சூரிய ஒளியில் இயங்கும் பல்ப் மட்டுமே இருக்கிறது.
சூரிய ஒளிவராத ஆண்டிஸ் மலை அடிவாரத்தில் ஒருவர் சூரிய ஒளி பல்ப் வைத்திருக்கிறார். ஆனால் நாம் இந்தியாவில் முழுமையான சூரிய ஒளி கிடைத்தும் அதை வீணாக்குகிறோம் என்பதை உணர்ந்து வெட்கமடைந்தேன்.
அதிகாலை புலர்ந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்ததும் நான் கண்ட காட்சியை மொழியாலும் வார்த்தையாலும் விவரிக்க முடியாது.
சுற்றிலும் மலைத்தொடர் பல்வேறு வண்ணங்களில் ஒரு புறம் சூரியன் மறுபுறம் சந்திரன். சிறிய ஓடையின் ஓசை...சுற்றிலும் சமவெளி என ஓர் கனவு உலகில் வாழ்வதை போல இருந்தது.
வில்லி புத்திரர் கட்டிய கோவிலுக்குள் நிழைந்தால் அங்கே பாராசக்தி இருக்கிறார். பர்வதம் என்ற மலை சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இவள் இங்கே பார்வதியாகி காட்சி தருகிறாள்.
வெறும் காட்சி பொருளாக இருந்த அம்பிகையை ப்ராண பரதிஷ்டா என்ற முறையில் ஆற்றல் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு வழிபாட்டு முறைகளையும் வில்லிக்கு சொல்லிக்கொடுத்தேன்.
தனது குரு பத்து வருடத்திற்கு முன் யோக வாசிஷ்டத்தை கையில் கொடுத்து, அம்பிகைக்கு கோவில் கட்டு, உன்னை தேடி இந்தியாவிலிருந்து ஒருவன் வந்து அம்பிகையின் ஆற்றலை உணர்த்துவார் என சொல்லி அனுப்பினார் என வில்லி சொன்னதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. நீங்களும் தயவு செய்து நம்பாதீர்கள்.
எளிய காலை உணவுக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய மலை சிகரத்தை காண காரை முடுக்கினோம்.
அக்கோன்காகுவா .....இது தான் அந்த சிகரத்தின் பெயர்...
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Tuesday, December 10, 2013
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 6
ஏன் காரில் பயணிக்கிறீர்கள் அங்கே ரயில் விமானம் எதுவும் இல்லையா என பலர் கேட்டிருந்தார்கள். ரயில் பயணங்கள் இந்தியாவை போல உலகில் வேறு எங்கும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஜண்டினாவின் மக்கள் தொகை காரணமாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகவும் அர்ஜண்டினா அரசு ரயில் சேவையை 1980ல் நிறுத்திவிட்டது. மேலும் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் விமான சேவை குறைவு. எந்த ஊருக்கும் தலைநகரை தொடாமல் விமானத்தில் பயணிக்க முடியாது. உதாரணமாக நீங்கள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் செல்ல வேண்டுமானால், சென்னை-டெல்லி சென்று அங்கிருந்து டெல்லி-பெங்களூரு செல்ல வேண்டும். அனைத்து நகரின் விமான சேவையும் பியோனிஸ் ஏரிஸ் தலைநகரை மையம் கொண்டே இருக்கிறது.
காரின் கிலோமீட்டர் காட்டும் கருவியின் இறுதி எண்களில் பூஜ்ஜியங்கள் கடக்க கடக்க...வெளியே சூழலும் மாறத் துவங்கியது. சுற்றியும் சமவெளி...கண்களுக்கு உயிரினமே காணக்கிடைக்காத சமவெளி. எங்கள் சாலை நீளமாக பல கிலோமீட்டரை ஒரே காட்சியாக காட்டிக்கொண்டிருந்தது. காரின் இன்ஜின் சப்தத்தை தவிர வேறு சப்தங்கள் இல்லை...!
வெளியே மட்டுமல்ல என் மனதின் உள்ளேயும் நிசப்தம் கூடி இருந்தது. மெல்ல என் ஆணவம் தன் தலையை சிலிர்ப்பி எழுந்து அமர்ந்தது.
ஆன்மீக வளம் மிக்க இந்தியாவிலிருந்து ஆன்மீகமே இல்லாத இந்த பூமியில் ஆன்மீகத்தை பரப்ப வந்திருக்கிறேன். இந்த மக்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ என சொல்லி அந்த ஆணவம் என் தலையில் ஏறி ஆடத் துவங்கியது.
“என்னை நன்றாக படைத்தனன்” - தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே என சொன்ன திருமூலரை விடவா ஆணவம் வந்துவுடப்போகிறது? இருந்தாலும் விஷம் என்பது ஒரு துளி போதுமே?
இப்படி என்னை பற்றி நானே பீற்றிக்கொண்டு இருக்கும் சமயம் 800 கிலோமீட்டர் கடந்து விட்டிருந்தேன்.
மலைகளும் பனிசிகரங்களும் தெரியத் துவங்கின, சூரியன் மறைந்து இருள் சூழ துவங்கியது. “ஸ்வாமி, உலகின் இரண்டாவது பெரிய சிகரம் நோக்கி செல்லுகிறோம். அதற்கு முன் இங்கே மலை அடிவாரத்தில் என் நண்பர் இருக்கிறார். அவர் வீட்டில் இன்று இரவு தங்கி நாளை பயணம் செய்யலாமா?” என ராம தாஸி கேட்டார்.
“அதனால் என்ன பேஷாக தங்கிவிடலாம். அவருக்கு ஆன்மீகத்தில் சில விஷயங்களை கத்துக்கொடுத்து அவரையும் மேம்படுத்தலாமே” என்றேன். இது நான் சொல்லவில்லை. உள்ளே இருந்த அது சொல்லியது.
“ஆமாம் சாமி. இவங்களை என்னை மாதிரி முன்னேத்துங்க” இது சுப்பாண்டியின் துணைக்குரல்.
GPS காட்டிய வழியில் ராமதாஸியின் நண்பர் வீட்டின் முன் நிறுத்திய எனக்கு பேரதிர்ச்சி...!
அங்கே ஒரு அழகிய இந்திய கோவிலும் அருகே ஒரு குடில் போன்ற ஆசிரமும் இருந்தது. அந்த குடிலின் முகப்பில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கையில் ஒரு புத்தகம்...அதன் தலைப்பு...
“யோக வாசிஷ்டம் - ஞானத்தின் திறவுகோல்”
”படார்...” ஆம் இது நீங்கள் நினைத்தது போல இறைவன் சுத்தியால் அடித்து நொறுக்கிய சப்தம் தான் அது...
ஆழ்ந்து ஆன்மீக அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே படித்து புரிந்துகொள்ளும் புத்தகம் இது. வசிஷ்டர் தன் மாணவரான ஸ்ரீராமருக்கு நீ ஒரு அவதாரம், மனிதன் அல்ல என ஞானம் வழங்கிய கருத்துக்கள் நிறைந்த புத்தகம் அது....!
பல்லாயிரம் கிமீ கடந்து இந்திய கலாச்சாரத்தின் நிழல் விழுகாத இடத்தில் ஒருவர் யோக வாசிஷ்டம் படித்துக்கொண்டிருந்தது என்னால் தாங்க முடியவில்லை. ஆணவத்தால் என் புகைச்சலை அடக்கிக் கொண்டேன்.
வில்லி..என்ற அந்த எளிய மனிதர் எங்களை வரவேற்று தங்க இடமும் அறுசுவை உணவும் அளித்தார். அவரை செல்லமாக வில்லி புத்திரர் என அழைப்போம்.
ஏதோ ஒரு நாள் , இந்திய ஆன்மீகவாதி ஒருவர் என் இல்லத்தில் தங்குவார் என தெரிந்து அவருக்காக ஒரு அறையைகட்டி இருக்கிறேன். தற்சமயம்
அதில் என் குரு இருக்கிறார். அவருடன் நீங்கள் தங்கிக்கொள்ளுங்கள் என கூறி என்னை அழைத்து சென்றார். நானும் சுப்பாண்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
மிகவும் குறுகுறுப்பாக நானும் சுப்பாண்டியும் அவரின் குருவை காண சென்றோம். வில்லிபுத்திரரின் குரு புகைப்படமாக இருந்தார்.படத்தை பார்த்ததும் சுப்பாண்டி நெளிய துவங்கினான்.
அறையில் வில்லிபுத்திரரின் குரு “உன்னை யாரடா இங்கே வரச்சொன்னது?” என கேட்பது போல அவரின் படம் அமைந்திருந்தது.
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Tuesday, December 3, 2013
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 5
உலகின் இரண்டாவது பெரிய சிகரம்...உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் மலைக்கு சுப்பாண்டியுடன் செல்ல திட்டம்.
அவ்வழியே பயணிக்கும் பொழுது உலகின் சிறந்த வான் ஆராய்ச்சி கூடத்தை கண்டு களிப்பதும் ( நாங்களும் ஜோசியம் படிச்சிருக்கொம் இல்லையா? - சுப்பாண்டியின் டயலாக் இது...! ), நிலவு பள்ளத்தாக்கு என்ற உலகின் முதல் உயிர் வாழ்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என திட்டம் மிக அற்புதமாக தீட்டப்பட்டது.
சில நூறு கிலோமீட்டர் தூரமே காரில் பயணித்து பழக்கம் உள்ள நான் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வாகனம் ஓட்ட வேண்டுமானால் மிகவும் தேர்ச்சி தேவை...குழப்புத்துடன் அமர்ந்திருந்தேன்.
ஜெர்மனியில் உலகின் அதிவேக சாலை என்ற பகுதியில் 220 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டி இருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் 90 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. 20 நிமிடத்தில் நீங்கள் கோவையிலிருந்து ஈரோடு சென்று விடலாம் என நினைத்தால் வியப்பாக இருக்கிறதா? ஆம் அது போன்ற தொலைவை ஜெர்மனியில் 20 நிமிடத்தில் கடக்கலாம். ஆனல் இங்கே விஷயம் வேறு அதிவேகம் சாத்தியமல்ல மேலும் இது சில நூறு கிலோமீட்டரும் அல்ல. சில ஆயிரம் கிலோமீட்டர்கள்....ஐந்து நாள் பயணம்....!
என் உதவிக்கு என் அர்ஜண்டினாவின் பிரதான மாணவி ராமதாசி வந்தார். அவரின் இயற்பெயர் வேறு. நாம் கூப்பிடுவதற்கு எளிமையாக இருக்க இப்பெயர். ராமனுக்கு தாசர்கள் உண்டு. அதாவது ஆஞ்சனேயரும், சுக்ரீவன் மற்றும் விபீஷணன் ஆகியோரை குறிப்பிடலாம். தாசிகள் என்றால் அதுவும் ராமனுக்கு என சொல்லும் பொழுது கொஞ்சம் முரணாக தெரிகிறதா?
ராமனுக்கு ஆஞ்சனேயரை போல பெண் உருவில் தாசர்கள் உண்டு. அவள் தான் சபரி. ஸ்ரீ ராமனின் வருகைக்காக காத்திருந்து, வந்தவுடன் ராமனின் நாக்கின் சுவை உணர்ந்து தான் புசித்து பின் அளித்த ராம தாசி.
அது போல என் அர்ஜண்டினாவின் வருகைக்கும், எனது உணவு பழக்கத்தையும் உணர்ந்து ஓர் தாய் போல என்னை பார்த்துக்கொண்டார்.
நம்மில் பலர் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வாய் கிழிய பேசினாலும், அதை பின்பற்றுவதில்லை. என்னிடம் பயின்றதை தம் மக்களும் பயில வேண்டும் என என்னை வரவேற்று ஏற்பாடுகளில் என்னை ஆச்சரியப்படுத்தியவர் ராமதாசி.
ஸ்பானிஷ் மொழியில் பத்திரிகை நடத்தி அதில் எனக்கென ஒரு பக்கம் ஒதுக்கி என் செயல்களை எழுதி வந்திருக்கிறார். அர்ஜண்டினா தெருக்களில் வலம் வரும் பொழுது “ஹோலா ஸுவாமிய்” என மக்கள் அவர்கள் உச்சரிப்பில் என்னை அழைக்க காரணமாக இருந்தவர்.
கார் பயணத்தில் தானும் ஓட்டுவதாக கூறி இணைந்து கொண்டார். மேலும் ஸ்பானீஸ் மொழி தெரிந்தவர் ஒருவர் உடன் இருப்பது அர்ஜண்டினாவில் அவசியம் என்பதால் சரி என்றேன். அவரும், நானும் பின்னே நம் சுப்பாண்டியும் இப்பயணத்தை துவக்கினோம்.
“சாமி மூணு பேரா போறோமே போற காரியம் வெளங்குமா?” எனக்கேட்டான் சுப்பாண்டி. அவனுக்கு தெரியாது இவன் ஒருவனுடன் போலானே எந்த காரியமும் விளங்காது என்று.
பயணங்கள் மலைப்பாதை, அடந்த காடு மற்றும் பாலைவனம் ஆகியவை ஊடுருவி செல்லுவதால் பயண பாதையை உணர மேப் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
சில மணிநேரம் சுப்பாண்டியை காணவில்லை. பிறகு கையில் ஒரு கருவியுடன் வந்தான்.
என்ன சுப்பு இது என கேட்டேன். “ஸ்வாமி கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும், நம்ம இருக்கும் தெருவில் டாக்ஸி ட்ரைவரிடம் இரவல் வாங்கிட்டேன்” என்றான். மொழி தெரியாத ஊரிலும் நம் ஆட்களின் இரவல் மொழி அபாரமானது என உணர்ந்தேன்.
சாமி காரில் வலது காலை வச்சு ஏறி இருக்கீங்க...... சூப்பர் சாமி...! என என்னை உற்சாகப்படுத்தினான். ஆம். ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்திய நாடுகள் தவிர பிற நாடுகளில் இடது பக்கம் தான் கார் ஓட்ட வேண்டும். அதனால் வலது காலை உள் வைத்தே வாகனத்தில் ஏற வேண்டும்.
புதிய வாகன சூழல், இடது பக்க ஓட்டும் தன்மை, அருகே சுப்பாண்டி, பின்புறம் ராமதாசி என பயணங்கள் துவங்கியது.
“கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும்,” என எந்த முகூர்த்தத்தில் கூறினானோ தெரியவில்லை.... கடைசியில் எங்களுக்கு கடவுள் தான் வழிகாட்டினார் ...!
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Saturday, November 30, 2013
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 4
சிறைச்சாலை அழைப்பை ஏற்று நான் அங்கிருப்பவர்களை பார்க்க சென்றேன். இந்திய சிறைச்சாலைகளை கண்ட எனக்கு அர்ஜண்டினா சிறைச்சாலை மிகவும் பிரம்மிப்பை உண்டாக்கியது. அமைச்சர்கள் தங்கும் விருந்தினர் மாளிகைக்கு ஒப்பாக இருந்தது அந்த சிறைச்சாலை.
மேலும் அங்கே அடைபட்டவர்களுக்கு சகல வசதிகளும் உண்டு. சகல வசதிகள் என்றால் டெலிபோன், செல்போன், இன்ட்ரநெட் , உணவு, உடை முதல் அனைத்தும் அவர்கள் முடிவு செய்யலாம்.
சிலர் இண்டர்நெட் மூலம் வியாபாரம் செய்து வருமாணம் பார்க்கும் அளவுக்கு சிறையில் சுகந்திரம் உண்டு. தினமும் ஃபேஸ்புக் மூலம் குடும்பத்தினருடன் பேசிக்கொள்கிறார்கள்.
நானும் சுப்பாண்டியும் குழப்பம் அடைந்தோம். இதுக்கு ஏன் சிறைச்சாலைனு பேரு வச்சாங்க ஹோட்டல்னு பேர்வைக்கலாம் என்றான் சுப்பாண்டி.
மனித உரிமையை மதித்தல் என்றால் என்ன என தெளிவாக தெரிந்துகொண்டோம். தண்டனை என்பது வெளியே உலாவக்கூடாது என்பது தானே தவிர இவர்களை அடிமையாகவோ விலங்காகவோ வைத்திருப்பதில்லை என விளக்கினார் சிறை அதிகாரி. இவர்கள் விளையாடுகிறார்கள், சிலர் புகைபிடிக்கிறார்கள் என சிறைச்சாலைக்குள் வந்த உணர்வே எனக்கு ஏற்படவில்லை. ஏதோ ஒரு கிளப்பில் நுழைந்த உணர்வு மட்டுமே இருந்தது.
இங்கே சிறைச்சாலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். கைதிகளுக்கு அல்ல..!
குழுமி இருந்த கைதிகளுடன் உரையாற்றினேன். அவர்களில் ஒருவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி தத்துவங்களை படித்து தன் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் என்றும் சிறையில் இருந்தாலும் அவரின் கருத்துக்களால் விடுதலையாக உணர்கிறேன் என்றும் கூறினார். ஆயுள் தண்டனை கைதியான அவர் ஜே.கிருஷ்ண மூர்த்தியை பற்றி கூறியது மகிழ்வானதாக இருந்தது.
ஆயுள் தண்டனை கைதிகள் கேள்விகளை கேட்க துவங்கினார்கள். முதல் கேள்வியே சிறப்பாக கேட்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளராக என் மாணவி இருக்க எங்கள் உரையாடலை கீழே
தொகுத்துள்ளேன்.
“எங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்”
“என்னுள் ஒருவனாக நினைக்கிறேன். வித்தியாசமாக நினைக்க ஒன்றும் இல்லை”
“ நாங்கள் கொடூரமான பாவம் செய்து சிறையில் அடைபட்டிருப்பவர்கள் அல்லவா?”
“அனைவரும் சிறையில் தான் இருக்கிறார்கள் நீங்கள் மட்டுமல்ல. சிலர் சுவரால் எழுப்பப்பட்ட சிறையில் கைதிகள். சிலர் உணர்வால் எழுப்பபட்டா ஐந்து புலன் சிறையின் கைதிகள். வித்தியாசம் அவ்வளவுதான். உங்களை போலவே அவர்களும் நன்னடத்தையால் ஒரு நாள் விடுதலை ஆவார்கள்” என்றேன்.உள்ளம் நெகிழ்ந்து கண்ணீருடன் என்னை அணைத்துக் கொண்டனர்.
உணர்ச்சிபெருக்காக ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்தது இந்த சந்திப்பு.
ஆன்மீக வழிகாட்டுதல் செய்துவிட்டு, அவர்களை என்னுடன் இணைந்து இறை பாடல் பாடி ஆடி மகிழ்ந்து கிளம்பினோம்.
சிறை அதிகாரிகள் இவர்கள் அனைவரும் இத்தனை மகிழ்ச்சியாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை என கூறினார்கள்.
விடை பெற்று கிளம்பும் பொழுது “ஏஞ்சாமி கோவையில் இருக்கும் சிறைச்சாலைக்கு எல்லாம் நீங்க போறதில்லை” என கேட்டான் சுப்பாண்டி.
நான் அவனை ஏற இறங்க பார்க்க...
“இல்ல சாமி பெரிய ஆன்மீகவாதிகள் எல்லாம் சிறைச்சாலை, திவிரவாதிகளுக்கு போயி யோக சொல்லி கொடுத்து திருத்தறாங்களே. அதுபோல நீங்க செய்ய மாட்டீங்களானு கேட்டேன்” என்றான்.
அதில் ஓர் உள்குத்து இருப்பதை உணர்ந்தாலும், “ நமக்கு சிறைச்சாலைக்குள்ள எதுக்குப்பா போயி கத்துதரனும்? வெளிய கத்து தந்து யாரும் உள்ள போகாம பார்த்துக்கிட்டா போதும்” என சீரியஸாக பதில் கூறினேன்.
இப்படியாக நாங்கள் வந்து ஒரு வாரம் பொதுமக்களுக்கு தியான பயிற்சிகளும், சிறைச்சாலை சந்திப்புமாக சென்றது. அடுத்த வாரங்களில் மத்திய அர்ஜண்டினாவில் உள்ள லா ர்யோகா என்ற இடத்தில் பயிற்சி கொடுக்க செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அந்த நகரம் 1300 கிலோமீட்டர் தூரம் இருந்தது. போக்குவரத்து பஸ் மட்டுமே. இங்கே இரயில் மற்றும் இதர போக்குவரத்துக்கள் இல்லை.
என்னுடன் இருந்த பிற அர்ஜண்டின மாணவிகள், “இந்த இடம் வரை செல்லும் நீங்கள் அருகே உள்ள பிற இடங்களுக்கு எல்லாம் செல்லலாமே” என யோசனை கூறினார்கள். அதை கேட்ட சுப்பாண்டி ,”சாமி சாமி நாம போலாஞ்சாமி” என கேட்க துவங்கினான்.
காரில் சென்றால்தான் இந்த இடங்களுக்கு செல்ல முடியும் என காரில் பயணம் உறுதி செய்யப்பட்டது. இப்படியாக நாங்கள் திட்டமிட்டு செல்ல வேண்டிய நகரங்களை பட்டியலிட்டால் மொத்தம் ஐயாயிரம் கிலோமிட்டர் தூரம் வந்தது.
அதிர்ச்சியுடன்.....என்னாது ஐயாயிரம் கிலோமீட்டர் காரிலா? யாருடா சுப்பாண்டி ட்ரைவ் செய்வா? என கேட்டேன்.
சுப்பாண்டியின் விரல் என்னை நோக்கி சுட்டிக்காட்டியது..
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Thursday, November 28, 2013
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 3
எங்கள் காரில் ஏறிக்கொண்டு எங்களுடன் பயணம் செய்ய துவங்கினார் அகஸ்டின்.அவர் தான் எங்கள் பார்வையற்ற மொழிபெயர்ப்பாளர்.
மாலை பொதுக்கூட்டத்திற்கு முன் பரஸ்பரம் அறிமுகமும் பேச்சின் சாரத்தையும் புரிந்துகொள்ள அவரை சந்திக்க எண்ணி இருந்தேன்.
அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து அவரை கூட்டிக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம். அறிமுகப்படுத்திவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். வாகனத்தை என் மற்றொரு அர்ஜண்டினா மாணவி ஓட்டிக் கொண்டிருந்தார்.
என்னை பற்றியும் எனது பணிகளை பற்றியும் அகஸ்டினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பேச்சின் நடுவே சடாரென வாகன ஓட்டியிடம் திரும்பி , “அடுத்த வரும் தெருவில் வலதுபக்கம் திரும்புங்கள்” என சொல்லி என்னிடம் பேச்சை தொடர்ந்தார்.
நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எப்படி உங்களால் முடிகிறது என கேட்கும் முன், “அங்...அப்படியே வலதுபக்கம் மூணாவது வீட்டில், யெஸ் இங்கதான் நிறுத்துங்க..” என சொல்லி காரிலிருந்து இறங்கி தன் வீட்டிக்குள் சென்றார்.
இவர் யார் கைகளையும் பற்றிக்கொள்வதில்லை. பிறப்பிலிருந்தே கண்கள் தெரியாதவர். பல இசைக்கருவிகளை இசைக்கிறார். மேலும் நகரின் முக்கிய இசைக்குழுவில் இருக்கிறார். தான் பார்வையற்றவர் என்பதில் தாழ்ச்சி இல்லாமல், யாரும் அவரின் உடல் குறையை குறிப்பிடாமல் இருக்க எப்பொழுதும் நகைச்சுவையுடன் இருக்கிறார். மாலை நேர பொதுக்கூட்டத்தில் சிறப்பாக மொழிபெயர்த்தார்.
எப்படி கண்களால் பார்ப்பது போல அனைத்தையும் செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், “உங்களுக்கு கண்கள் இருக்கிறது அதனால் அந்த உறுப்பால் மட்டும் பார்க்கிறீர்கள். எனக்கு இல்லாததால் பிற நான்கு புலன்களால் பார்க்கிறேன். உங்கள் எல்லோரையும் விட எனக்கு பார்வை அதிகம்” என்றார்.
அவரின் வார்த்தைகள் பல விஷயங்களை சுட்டிகாட்டியது.
விடைபெறும் பொழுது, “ஸ்வாமி, ஆங்கிலத்தில் சந்தித்து விட்டு பிரியும் பொழுது சீயூ என சொல்லுவார்கள். நான் சீமீ என சொல்லி பிரிகிறேன்.ஏனென்றால் என்னால் உங்களை பார்க்க முடியாது” நகைச்சுவையுடன் விடைபெற்றார்.
ஓர் உறுப்பில் மட்டும் பார்க்கும் நான் குருடன் அல்லவா? நான்கு புலனால் உணரும் அவர் பார்வையற்றவர் தானே?
எங்கள் பொதுக்கூட்டமும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக சென்றதால் நாளிதழ்களும் தொலைக்காட்சியிலும் செய்திகளாயின. மக்களின் கவனம் அதிகரித்தது. தெருக்களில் நான் நடந்து சென்றாலே “இந்தியன் ஸ்வாமி” என என்னை அரவணைத்து மகிழ்ந்தனர். இதனால் அர்ஜண்டினாவின் பல்வேறு பகுதிலிருந்தும் நிகழ்ச்சிகள் நடத்த அழைப்புகள் வந்தது.
அப்படிப்பட்ட அழைப்புகள் மின்னஞ்சலில் வந்தது. அவற்றை பரிசீலித்து கொண்டிருந்தேன். அவற்றில் ஒரு சுவாரசியமான அழைப்பு இருந்தது.
“அனைவரும் உங்களை பார்க்க விரும்புகிறார்கள். நாங்கள் உங்களை பார்க்க வர இயலாது. நீங்கள் எங்களுடன் உரையாடி மாலை பொழுதை செலவளிக்க வருவீர்களா?”
இப்படிக்கு
ஆயுள் கைதிகள்
மத்திய சிறைச்சாலை,
சாண்டா ரோசா நகரம், அர்ஜண்டினா
பல்வேறு அதிகார மையங்களின் அழைப்பை தவிர்த்துவிட்டு இவர்களை சந்திக்க சென்ற எனக்கு பல்வேறு ஆச்சரியம் காத்திருந்தது.
சிறைச்சாலைக்கு செல்ல வாகனத்தில் ஏறியதும் , சுப்பாண்டி வாகனத்தின் கதவை மூடாமல் தலையையும் உடலையும் வெளியே நீட்டியபடி , “ஏய் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயில்லு போறேன்” சப்தமாக கூவியபடி வந்தான்...
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Monday, November 18, 2013
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 2
சனி பிடிச்சா ஒட்டகத்தில் போனாலும் தெருநாய் வந்து கடிக்கும் என சொல்லுவார்கள். அது போல எனது அர்ஜண்டினா பயணத்தில் எனக்கு துணையாக சுப்பாண்டி. தனியாக நானே என்னை சமாளிக்க முடியாமல் இருக்க..இதில் எக்ஸ்ட்ரா லக்கேஜ்ஜாக சுப்பாண்டியும் என்னுடன் இருக்க பிரச்சனை இருமடங்கு என்பதைவிட பல மடங்கு என்றே சொல்லவேண்டும்.
அர்ஜண்டினாவின் தலைநகரம் பியோனிஸ் ஏரிஸ். இது தென் அமெரிக்காவின் பாரிஸ் என அழைக்கப்படுகிறது. இங்கே தான் நான் வந்து இறங்கினேன்.
குடியுரிமை சோதனை முடித்து, எனது பெட்டி பைகளை எடுத்துக்கொண்டு விமான நிலைய கலால் சோதனை சாவடிக்கு அருகே வந்தால் பெரிய வரிசையில் மக்கள் நின்று இருந்தார்கள். ஸ்பானீஷ்
தெரியாத குறைக்கு நானும் வரிசையில் நின்றேன். எனக்கு பின்னால் சுப்பாண்டி..
வரிசை அதிகாரியின் அருகே செல்ல செல்ல புரிந்தது இது கலால் சோதனை இல்லை ஆயுத சோதனை என புரிந்து திடுக்கிட்டோம். கையில் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாகிகள் சகிதம் மக்கள் சோதனை சாவடியில் நிற்கிறார்கள். இங்கே ஆயுதங்களை பெட்டி படுக்கை போல விமானத்தில் எடுத்து செல்லலாம். மீண்டும் அதை நாட்டுக்குள் வரும் பொழுது குறிப்பேட்டில் எழுதிவிட்டு எடுத்து செல்ல வேண்டும்.
எங்கள் முறை வந்தது- தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை திரட்டி, “டு யூ ஹாவ் எனி வெப்பன்ஸ்?” என்றார் அதிகாரி. நாங்க
ஊதா கலர் ரிப்பனையே பார்த்ததில்லை இதில் வெப்பனாம்.. என்றான் சுப்பாண்டி.
எங்களின் நிராயுத பாணி நிலையை விளக்கிவிட்டு கடந்தோம். கடந்து செல்லுகையில் அருகே வைக்கப்பட்டிருந்த யாரும் உரிமை கோராத துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லன்சர்கள் கொஞ்சம் பீதியை உண்டு செய்தது.
தலைநகரிலிருந்து 600 கிலோமீட்டர் தூரம் உள்ள லா பம்ப்பா என்ற இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். மீண்டும் அபிநய சரஸ்வதியாகி ஒரு டாக்ஸியை பிடித்து மீண்டும் 6 மணி நேர பயணம்.
இங்கே சாலைகள் எல்லாம் ஒரே நேர் கொட்டில் இருக்கிறது. குறைந்த பட்சம் 50 முதல் 60 கிலோ மீட்டருக்கு வளைவுகள் இல்லாத வீதிகள். எங்களை கூட்டிவந்த டாக்ஸி ட்ரைவர் முன் இருக்கை அருகே ஒரு சின்ன டீவி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்த்த வண்ணம் வந்தார். இந்தியாவில் நான் பயணிக்கும் பொழுது ட்ரைவர் செல்போனில் பேசினாலே ஓரமா நிறுத்து என அலறுவேன். இவரின் செய்கை வெறுப்பூட்டவே ஏன் டீவி பார்க்கிறீர்கள் என கேட்டேன்.
தூர பயணத்தில் திருப்பம் இல்லாமல் இருப்பதால் தூங்கிவிடுவாராம். அதை தவிர்க்கவே இந்த டிவி என்றார். ஐயா நல்லா டிவியை போட்டுக்கோ என சொல்ல வைத்தது அர்ஜண்டினா சாலைகள்.
லா பம்ப்பா மாகாணத்தில் வந்து இறங்கியதும் பெரிய வரவேற்பு நிகழ்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனது தென் அமெரிக்க மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மேலும் இந்த மாகாணத்திற்கு வரும் முதல் இந்திய ஆன்மீகவாதி என கூறி அந்த மேயர் வரவேற்றார்.
பொது நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்தும் சிறப்பாக இருந்தது.
உங்கள் பொது நிகழ்ச்சியையும் பயிற்சி வகுப்பையும் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்கிறோம். நகர மையத்தில் நீங்கள் சென்றுவிட்டு திரும்பும் பொழுது அவரை சந்திக்கலாம் என சொன்னார்கள்.
எங்கள் நகர உலா முடித்துவிட்டு வருகையில் கையில் குச்சியுடன் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று இருந்தார்.
கண்கள் பார்வையில்லாத அந்த நபர் எங்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ய போகிறாராம்....!
நாம் பரதநாட்டியம் ஆடியே பல விஷயங்களை புரியவைக்க முடியும் என நம்பிகொண்டிருந்த எனக்கு, இங்கே பார்வையற்றவர் காத்திருந்தது
ஏமாற்றமே...இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்தேன்.
இன்று மாலை நகர மையத்தில் உள்ள அரங்கில் பொதுக்கூட்டம்...இவரை புரியவைத்து என்ன பேசி... அப்புறம் மக்கள் புரிந்துகொண்டு.. விளங்கும் என நினைத்துக்கொண்டேன்...
அந்த பார்வையற்றவரை சந்தித்த இந்த குருடன் கதையை நாளை சொல்கிறேன்.
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து....
இந்த வருடம் பயணத்திற்கான வருடம் என என் தசா புக்தி சொன்னதோ என்னமோ..பெட்டியுடன் சுற்றியபடியே இருக்கிறேன்.
கும்பமேளாவில் துவங்கிய பயணம் டெல்லி, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா எங்கே நிற்கும் என தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதோ இப்பொழுது தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அர்ஜண்டினாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
கம்போடியாவை பற்றி ஒரு தொடர் எழுதவேண்டும் என எண்ணுவதற்குள் அர்ஜண்டினாவில் அடைக்கலமாகி விட்டேன்.
இந்தியாவிலிருந்து இங்கே வருவதற்கு மிக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும்.
வட அமெரிக்காவை போல இது பொருளாதார செழுமையான நாடு அல்ல. மேலும் அதிக விமான போக்குவரத்தும் கிடையாது.
முழுமையாக இரண்டு நாட்கள் வெவ்வேறு நாடுகள் வழியாக சென்றால் தான் அர்ஜண்டினாவை வந்து அடைய முடியும்.
தென் அமெரிக்க கண்டம் பிரேசில், அர்ஜண்டினா, பெரு,சிலே, பொலிவியா, பரகுவே, உருகுவே, வெனிசுலா, கொலம்பியா ஆகிய நாடுகளை கொண்டது. இதில் பிரேசில் தவிர பிற நாடுகள் 200 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் மக்களால் ஆக்கிரமிக்கபட்டு ஸ்பெனீஷ் கலாச்சாரம் வேர் ஊன்றி நிற்கிறது. பிரேசில் போர்ச்சிகீசியர்களால் ஆளப்பட்டு போர்ச்சிகீஸ் மொழி பேசுப்படும் கலாச்சாரமாக இருக்கிறது.
நிற்க... இது என்ன விக்கிபிடியா பக்கமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இருங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.
கோவையிலிருந்து...பயணம் துவங்கி டெல்லி, துபாய், ரியோடிஜனிரோ(பிரேசில்) பிறகு போனிஸ் ஏரிஸ் என்ற அர்ஜண்டினா தலைநகரத்திற்கு வந்து சேர்ந்தேன். படிக்கும் பொழுதே மூச்சு முட்டுகிறதா?
பயணித்தவனை நினைத்துப் பாருங்கள்.
இப்படிபட்ட அர்ஜண்டினாவுக்கு பயணம் செய்ய துவங்கும் பொழுது புதிய மக்கள் கலாச்சாரம் என ஒன்றும் தெரியாது. தமிழே நமக்கு தாளம் என்பதால் ஸ்பேனீஷ் பற்றி சொல்ல வேண்டாம். அர்ஜண்டினா செல்லும் பொழுது அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் எதுவும் தெரியாது.
கால்பந்து எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் மரடோனாவும், நம் ஊர் புரட்சி புலிகளின் சட்டையில் பார்த்த சேகுவாரோவை மட்டுமே தெரியும்.
துபாய் விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு ஐரோப்பியர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். உணவகத்தில் பரத நாட்டியம் ஆடாத குறையாக சைவ உணவு கேட்டு வாங்கிவந்ததை பார்த்து எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். அர்ஜண்டினா என்றேன். உலகின் சிறந்த நகைச்சுவையை கேட்டது போல புரண்டு சிரித்துவிட்டு, “அர்ஜண்டினாவில் அசையாமல் அமர்ந்திருந்தா உங்களையே பன்னுக்குள் வைச்சு பர்கர்னு சாப்பிருவாங்க.... அந்த ஊரில் சைவ சாப்பாட்டு பழக்கத்துடன் போய் என்ன செய்ய போறீங்க ” என பீதியை கிளப்பினார். இனி ஒரு மாதம் இருக்க வேண்டிய நாட்டை பற்றி நல்ல கருத்து இது என நினைத்துக்கொண்டேன்.
இப்படி பல முன் உரைகளை கடந்து அரைத்தூக்கத்துடன் அர்ஜண்டினாவில் நான் கால் வைக்கும் பொழுது தெரியாது அது பல சுவாரஸ்யங்களை எனக்காக புதைத்து வைத்திருக்கிறது என்று...
(அன்பு பெருகும்)
விளக்கம்
அர்ஜண்டீனா,
ஆன்மீகம்,
கலாச்சாரம்,
தொடர்,
பயணம்
Monday, October 7, 2013
ஆன்மீக பயணங்கள் ஓர் அறிவிப்பு
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்
இறையருள் நிறைந்த இடங்களுக்கு பயணம் செய்வது ப்ரணவ பீடத்தில் வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு. இனி வரும் மாதங்களில் ஆன்மீக பயணமாக மட்டும் இல்லாமல் தியான நிகழ்வாகவும் நடத்த எண்ணி உள்ளோம். வரும் டிசம்பர் மாத இறுதியில் திருவண்ணாமலை மற்றும் பர்வத மலை பயணம் செல்ல இருக்கிறோம். மேலும் ஜனவரி 2014ல் காசி யாத்ரையும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணங்களின் விபரம் கீழே கொடுத்துள்ளேன்.
டிசம்பர் 2013
அருணாச்சல தியான முகாம்
திருவண்ணாமலை திருத்தலத்தில் மூன்று நாட்கள் தியான முகாம் நடைபெற உள்ளது. இந்த திருப்பயணத்தில் எளிய தியான பயிற்சிகள், சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் ஆகியவை நடைபெறும். கிரிவலம் செல்லுதல் மற்றும் அருணாச்சல மலையில் உச்சியில் உள்ள அருணாச்சல பாத தரிசனம் ஆகியவையும் நிகழும்.
டிசம்பர் 25ஆம் தேதி துவங்கும் இப்பயணம் 27ஆம் தேதி முடிவடையும்.
28ஆம் தேதி சனிக்கிழமை பர்வதமலை பயணம். 29ஆம் தேதி ஞாயிறு அன்று திருவண்ணாமலை திரும்புதல்.
அருணாச்சலை தியான முகாமில் கலந்து கொள்பவர்கள் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கலந்து கொள்ளலாம். அல்லது 29 ஆம் தேதிவரை பர்வதமலை பயணத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.
பர்வதமலை பயணம் மட்டும் 28,29ஆம் தேதிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பினும் அனுமதி உண்டு.
20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
மிக செளகரியமான சூழ்நிலையில் தங்குமிடம், போக்குவரத்து வாகனம் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்படும்.
டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்பவர்களுக்கே அனுமதி உண்டு.
தியான முகாமில் பங்கு பெற அடிப்படை தகுதிகள் :
1. ப்ரணவ பீடத்தின் ஏதேனும் ஒரு ஆன்மீக பயிற்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். (ப்ராண வித்யா, மந்திர சாஸ்திரம் , யோக பயிற்சி)
2. ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
3. திருவாண்ணாமலை மலையேற்றம், பர்வதமலை ஏற்றம் ஆகியவை செய்ய உடல் பலம் மற்றும் ஆரோக்கியம் அவசியம்.
-----------------------------------
காசி யாத்ரா 2014
ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 வரை ஆறு நாள் பயணமாக காசி யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.
காசி யாத்ரா என்பது அலகாபாத் என்கிற திரிவேணி சங்கமம், காசி புண்ணிய பூமி மற்றும் கயா ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடுவதை உள்ளடங்கியது.
ஆற்றல் பெற்ற இவ்விடங்களில் தன்வந்திரி ஹோமம் மற்றும் காசியில் மஹா மிருதியன்ஜெய ஹோமம் ஆகியவை நடைபெறும்.
முழுமையான மந்திர ஆற்றல் நிறைந்த இவ்விடங்களுக்கு சென்று ஸ்வாமி
ஓம்கார் அவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீக அனுபவம் பெறலாம்.
25 டிசம்பர் 2013க்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும்.
காசி யத்ராவில் பங்கு பெற அடிப்படை தகுதிகள் :
1. ப்ரணவ பீடத்தின் மந்திர சாஸ்திர பயிற்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அன்பர்களின் நலனுக்காக டிசம்பர் முதல் வாரம் மந்திர சாஸ்திர பயிற்சி கோவையில் நடைபெறும். அதில் கலந்து மந்திர தீட்சை பெற்று பிறகு ஜனவரில் காசி யாத்திரையில் கலந்துகொள்ளலாம்.
2. ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
3. ஜனவரியில் தை அமாவாசையை முன்னிட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அச்சமயம் அங்கே தட்பவெப்பம் மிக குளிர்ந்த சூழல் இருக்கும். பனியும், அதிக குளிரும் தாங்கும் பக்குவம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
--------------------------
மேற்கண்ட பயணங்களில் கலந்துகொள்பவர்கள் மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்யும் முறைகளையும், பயண கட்டணம் மற்றும் இதர தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்மீக பயணத்திற்கு தொடர்புடைய கட்டுரைகள்
விளக்கம்
ஆன்மீகம்,
காசி பயண அனுபவம்,
திருவண்ணாமலை,
பயணம்
Wednesday, August 29, 2012
ஸ்ரீசக்ர புரி ஆன்மீக பயணம் 2012
ஸ்ரீ சக்ர புரி என்ற திருவண்ணாமலைக்கு ப்ரணவ பீடம் சார்பாக ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 6,7 ஆம் தேதிகளில் ( வியாழன்,வெள்ளி ) இரண்டு நாட்கள் பயணம் இருக்கும்.
திருவண்ணாமலையில் ஆன்மீக அதிர்வுகொண்ட இடங்களை தரிசிப்பது அங்கே தியானிப்பது முக்கிய நோக்கமாக கொண்டு பயணம் செய்ய இருக்கிறோம்.
பயணக்கட்டணம் 4500/- ரூபாய். இதில் தங்கும் இடம், மூன்றுவேளை உணவு, நகரத்தின் உள் பயண செலவுகள் ஆகியவை அடங்கும்.
20 நபர்களுக்கு மட்டுமே இடம் உண்டு. இப்பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இது சுற்றுலா அல்ல, ஆன்மீகப்பயணம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தியானம் மற்றும் ஆன்மீக உணர்வு உணர முயற்சி செய்பவர்களுக்கானது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
விருப்பம் உள்ளவர்கள் swamiomkar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து முன்பதிவு செய்யவும். முன்பதிவு செய்தவர்களில் இருந்து 20 நபர்களை தேர்ந்தெடுத்து அழைத்து செல்லுவோம்.
விளக்கம்
திருவண்ணாமலை,
பயணம்,
ஸ்ரீசக்ர புரி
Thursday, June 7, 2012
தென்கைலாய திருப்பயணம் - 2012
அருள்நிறைந்த ஆன்மாக்களுக்கு,
ஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.
தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரிமலையில் இறையருளால் பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
வரும் ஜூன் மாதம் 23,24ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) இரு நாட்கள்மலைப்பயணம் இருக்கும்.
தென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.
இதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...!
இப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது.
எல்லோரும் கலந்து கொள்ளலாமா? -இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.
1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்
2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்
3) பெண்கள்
4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்.
மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.
23ஆம் தேதி மாலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (24ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.
இருபது நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 15ஆம்
தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.
முன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.
நீங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இப்பயணத்தில் பங்குபெற நினைக்கிறீர்களா? இப்பயணத்திற்கான போக்குவரத்து செலவு மற்றும் உணவு ஆகியவற்றை நீங்கள் நன்கொடையாக அளிக்கலாம்.
நம்முள் இருக்கும் இறையருளை இயற்கையின் திருநடனத்தால் உணர வாருங்கள்...!
விளக்கம்
ஆன்மீகம்,
தென்கைலாயம்,
பயணம்
Tuesday, February 21, 2012
காசித் திருப்பயண அனுபவம் பகுதி 3
சுப்ரமணியன் முத்துக்கிருஷ்ணன் - மதுரை
உண்மையான துவக்கம்:
ஆதி சங்கரர் அருளிய காசி பற்றிய மூன்று அருமையான படைப்புகளான பஜ கோவிந்தம், காசி பஞ்சகம் மற்றும் மணிகர்ணிகாஷ்டகம் ஆகியவற்றின்அறிமுகத்துடன் (சுவாமிகள் அனுப்பியவை) எங்கள் காசித் திருப்பயணம் முன்னதாகவே துவங்கிவிட்டது.. உண்மையிலேயே காசி, கங்கை, கயை,விஸ்வநாதர், மணிகர்ணிகை என்ற தீர்த்த கரை, பார்வதி, சிவன் மற்றும் பிரயாகை இவைகள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய விளக்கங்களும்அருமையான துவக்கம். (இவைகளை அனைவரும் படித்துப் பயன் பெற வெளியிட்டு அருளுமாறு ஸ்வாமிகளை எல்லோர் சார்பிலும் வேண்டிக்கொள்கிறேன். இனி இக்கட்டுரை மூலம் காசிக்கு மீண்டும் ஒருமுறை சென்று வரலாம்.. வாருங்கள் ...
காசி வாசிகளானது:
17 ஜனவரி காலை சுமார் எட்டு மணிக்கு கோவையிலிருந்து சுவாமிஜியுடன் எங்களுக்கு வெகு முன்னதாகவே வந்திருந்த குழுவினருடன் காசி புகை வண்டிநிலையத்தில் இணைந்து கொண்டோம்..
காசியின் குளிரா அல்லது வயிரென்னும் அடுப்போ அல்லது புகை வண்டி நிலையத்தின் தாக்கமோ .. எதுவென்று தெரியவில்லை.. அனைவர் வாயிலிருந்தும்புகை வந்து கொண்டிருந்தது... இருந்தாலும் சிலர் இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்பது போல வழக்கமான உடையுடன் காணப்பட்டார்கள்..
(இரண்டொரு நாட்களில் அவர்கள் அருகில் சென்று பார்த்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு நான்கைந்து உடைகளுக்கு உள்ளே தஞ்சம் அடைந்தனர் :)
[கட்டுரையாளர் சுப்பிரமணியனின் நிலையை புகைப்படத்தில் தெரிந்துகொள்ளலாம் :)) ]
ஆட்டோக்கள் உதவியுடனும், மேலும் குறுகலான சந்துகள் வழியே சிறிது நடந்தும், தங்குமிடமான குமாரசுவாமி மடத்தை வந்தடைந்தோம். தங்கி இருந்தஇடத்திற்கு மிகச்சில அடி தூரத்தில் கங்கை பிரவாகமாய் ஓடிகொண்டிருந்தது.. மிகவும் அருமையான இடம்.. " ஹனுமாருக்கு துணியோ பொருளோவழங்குவதாக 'வேண்டுதல்' செய்து கொண்ட அன்பர்கள் மட்டும் தங்கள் அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து கொள்ளலாம்" என்ற எச்சரிக்கைவழங்கப்பட்டது.. இது வெளியே ஜன்னலில் ஆங்காங்கு தொங்கிகொண்டிருந்த ஹனுமான் சுவாமிகளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.. குளிருக்கு ஏதுவானகாரமான காலை உணவு கிடைத்தது..
இந்த குளிரில் கங்கையிலா.. என்று யோசித்துக் கொண்டிருந்த சிலருக்கு இனிப்பாக சுவாமிகளின் அறிவிப்பு .. "சாப்பிட்ட உடன் குளிப்பது நல்லதல்ல. ஆகவே ஒரு மணி நேரம் கழித்து 11 :30 மணிக்கு குளிக்கலாம்" என்பதுதான் அது.. 11 :30 மணிக்கு மதுரையைப்போல மொட்டை வெயில் அடிக்கும். எனவே நீண்ட நேரம் குளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. வெப்ப நிலையில் ஒன்றும்பெரிய மாற்றம் இல்லை.. மெகா சைஸ் பிரீசருக்குள் இருந்து உற்பத்தியாகி ஓடுகிறதோ என்று என்னும்படி ஓடிக் கொண்டிருந்தது..
கங்கையில் நீராடியது:
ஒருவாறாக மனதைத் திடப்படுத்தி படிக்கட்டுகளில் கங்கைக்குள் இறங்கியபோது நண்பர்கள் சொன்ன மந்திரம் .. " படியில் பார்த்து காலை வையுங்க .. பாசம் அதிகம்.." (வாழ்கையின்) பாசம் பற்றிய எச்சரிக்கையோ !! :) .... மிகவும் ஆனந்தமாக குளிரைச் சரணடைந்து நீண்ட நேரம் நீராடினோம்... சுவாமிஜிஎங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள கங்கையில் மூழ்கியவாறு ஜபம் (ஜல ஜபம்) செய்த பேறுபெற்றோம். புண்ணிய தலங்களில்எல்லாம் உயர்ந்ததான காசியில், நதிகளில் எல்லாம் சிறந்ததான கங்கையில், பிராணிகளில் உயர்வானதான பசுக்களின் அருகாமையில், கேதார நாதர் கோவில்படித்துறையில், புண்ணிய நாட்களில் (தை அமாவசையிலும்), அருள் வடிவான குருவின் அருகில் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு கங்கையில் நீராடியதும், ஜல ஜெபம் செய்ததும் பெறற்கரிய பேறு அல்லவா.. இன்னும் ஒரு வாரம், காலையும் மாலையும் இப்பேறு பெறுவோம்என்று அப்போது அறியவில்லை..
காசியில் மூர்த்தியினும்(விஸ்வநாதர்) தீர்த்தம் (கங்கை) முக்கியமானது என்பது ஸ்வாமிகள் வாக்கு. எனவே இத்திருப்பயணத்தில்காலையும் மாலையும் கங்கையில் நீராடுவதே முக்கியமாக அமைந்தது..
காசியில் தெய்வ தரிசனம் செய்தது:
விஸ்வநாதர், விசாலாக்ஷி மற்றும் அன்னபூரணி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றோம். பின்னர் தினமும் காலையும் மாலையும் விஸ்வநாதர்மற்றும் அன்னபூரணி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றோம். ஞான வைரக்யத்தை அளிக்கும் படி வேண்டிகொண்டோம். ஞானக்கேணி தரிசித்துதீர்த்தம் பெற்றோம். அருகில் ஸ்தல விருட்சம் தரிசித்தோம். விஸ்வநாதர் கோவில் நந்தி வேறு திசை நோக்கி அமைந்திருந்ததைக் கண்டோம். நம் கையினால்எடுத்து வந்த கங்கை நீரால் விஸ்வநாதரை அபிஷேகம் செய்யும் வாய்ப்பும், நாம் கொண்டு வந்த குங்குமத்தால் அன்னபூரணி சன்னதியில் உள்ள ஸ்ரீ மேருவைஅர்ச்சிக்கும் வாய்ப்பும் பெற்றோம்.
ஞான வைராக்கியத்தை வாங்க
கடையில் நிற்கும் திரு.சுப்பிரமணியன் :))
அன்னபூரணி உறையும் அன்னதானக் கூடத்தில் அருமையான உணவை பிரசாதமாக உண்ணும் வாய்ப்பும் சில நாட்கள் பெற்றோம். டிரஸ்ட் அமைத்துஏற்பாடு செய்திருக்கிறார்கள்...இதற்கு நன்கொடை அளிக்கும் வாய்ப்பு உங்கள் வாழ்நாளில் அமையுமானால் அதை நழுவ விடாதீர்கள்.. கோவில் வாசல்பகுதிகளில் பூக்கடைகள் இருந்தன. ஒரு சிறிது கூட பூ வாசனை என்பதே அங்கு இல்லை. டூ மச் ஆக நீங்கள் நினைத்தாலும் இதுதான் உண்மை. தினமும்கேதார் நாதருக்கு கங்கையால் அபிஷேகம் செய்து ஜெபம் செய்துதான் அன்றைய நாள் துவங்கியது. மந்திர சாஸ்திரத்திற்கு உலகிலேயே புகழ் பெற்ற காசிநகரில் மக்கள் மாலையும் கையுமாக ஜெபம் செய்வதை மிகவும் சாதாரணமாகக் காணலாம். ஊருக்கு திரும்பியதும் காசி எப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த இடம்என்பதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.
வித்யாச்சல்:
காசியிலிருந்து சுமார் 4 மணி நேரம் பயணம் செய்து 'வித்யா விலாசினி' அன்னை வாசம் செய்யும் 'வித்யாச்சல்' வந்தடைந்தோம். இது ஒரு முக்கியமான சக்திபீடம். இங்கே இருந்த விக்ரகங்கள் எல்லாம் வித்தியாசமாகத் தென்பட்டது.. சுமார் 12 அடி நீளம் 12 அடி அகலம் 12 அடி ஆழம் உடைய மிகப் பெரிய ஹோமகுண்டம் அங்கே இருந்தது.. அதன் அருகே ஜபம் செய்தோம். இன்றும் இக்கோவிலில் மிருக பலி செய்யும் வழக்கம் இருப்பதை அறிந்து கொண்டோம். முற்காலங்களில் இந்த பெரிய ஹோம குண்டத்தில் பெரிய மாடு போன்ற மிருகங்கள் கயிற்றின் மூலம் மேலிருந்து யாக ஹவிசாக இறக்கப்ப்படுமாம். அதைஹோம குண்டத்தில் நெருப்பிலிருந்து வளையல்கள் அணிந்த அன்னையின் கைகள் பெற்றுக்கொள்ளுமாம்.
சீதா மட்:
வித்யாச்சலில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து இந்த இடத்திற்கு வந்தோம். சீதை என்ற 'ப்ருக்ரிதி'யின் அம்சம் பூமி என்ற'ப்ருக்ரிதி'யின் அம்சத்துடன் இணைவதைக் குறிக்கும், சீதை பூமிக்குள் போகும் நிகழ்வு நிகழ்ந்த இடமாக இது நம்பப்படுகிறது. மிகவும் சமிபத்தில் இங்கேகோவில் எழுப்பி இருக்கிறார்கள். இந்த இடமே இயற்கை சூழ்ந்த ரம்மியமான இடமாக சிறு குளம் போன்றதற்கு நடுவே இருந்தது. இங்கே சீதை பூமிக்குள்போகும் நிகழ்வை தத்ரூபமாக சிலை வடிவில் செய்து வைத்து இருக்கிறார்கள். இந்த ஒன்றை மட்டும் பார்ப்பதற்கே கூட இங்கே போய் வரலாம். அத்துணைஅருமை. நுழைவுப் பகுதியில் சுமார் 30 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் நமக்கு விஸ்வ ரூப தரிசனம் தருகிறார்.
கயை :
விஷ்ணுவின் பாதமாக வணங்கப்படும் கயையை தரிசித்தோம். (காசியிலிருந்து சுமார் 4 மணி நேர பயணம்). உடன் வந்தவர்கள் தர்ப்பணம் செய்தார்கள். அதற்கு மிகவும் விசேஷமான இடமாம். இங்கே ஒரு நதி ஓடுவதாகவும், அது சீதையின் சாபத்தால் பூமிக்குக் கீழே ஓடுவதாகவும் சொன்னார்கள். ஏறக்குறையஅது அப்படித்தான் காணப்பட்டது. இந்தப் பிரதேசமெல்லாம் பீகாரில் இருக்கிறது.
திரி-வேணி-சங்கமம் @ சங்கம்:
ஜவஹர்லால் நேரு பிறந்த ஊரான அலஹாபாத் நகரில் இது இருக்கிறது. இல்லை.. இங்கேதான் நேரு பிறந்தார். :) கங்கை-யமுனை-சரஸ்வதி என்ற மூன்றுநதிகளின் சங்கமம் இந்த இடமாகும். ஸ்வாமிஜி கூறியது, " கங்கை-யமுனை-சரஸ்வதி ஆகிய இவை நம் பூமியாகிய உடலில் பிங்கள-இடா -சுஷும்னா நாடிகளையும்(பிண்டத்தில்), சூரியன்-சந்திரன்-குரு ஆகிய கிரகங்களையும் (அண்டத்தில்) குறிக்கிறது. கிரகங்களின் இயக்கமும், உடலின் நாடிச்சலனமும், நதிகள்சங்கமிக்கும் இடங்களும் தொடர்புடையது. இந்த இடத்தில் குளிக்கும் போது (எந்த வித பயிற்சியோ பிற முயற்சியோ இன்றி) இயல்பாகவே நாடிச்சலனம்உண்டாகி சுஷும்னா நாடியில் இருக்கலாம். 12 வருடங்களுக்கு ஒரு முறை (குரு - சூரியன் - பூமி ஆகியவை குறிப்பிட்ட ராசிகளில் இருக்கும் தருணமான) மஹா கும்ப மேளாவின் போதும் உலகில் இந்த குறிப்பிட இடத்தில் இதற்கான சூழல் உண்டாகிறது.
இது தவிர ஒவ்வொருவருடமும் இதற்கு நெருக்கமான கிரக அமைப்பு இது போல வரக்கூடிய சுமார் இரண்டு வார காலத்தை 'மகா மேளா'வாகக் கொண்டாடுவார்கள். இப்போதுநாம் வந்திருக்கும் இந்த தருணமும் அப்படிப்பட்ட ஒரு மகா மேளா தருணம்தான். " ஆற்றின் நடுவே மணலை குவித்து இடுப்பளவு ஆழம் இருக்கும்படி செய்துஇருக்கிறார்கள். படகில் ஆற்றின் நடுவே சென்று குளித்தோம். அப்போது சூரிய அஸ்தமனம் துவங்கியது. படகிலேயே 'தன்வந்த்ரி' ஹோமம் செய்தது மிகவும் வித்தியாசமான மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. இங்கே ஆதி சங்கரருக்கு சுமார் மூன்று மாடி உள்ள கோவில் இருக்கிறது. கோவிலின் வாசலில் அவர்வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வான 'மண்டனமிச்ரர் மற்றும் அவர் மனைவி 'சாரதா' வுடன் வாதம் செய்து வெற்றி பெற்ற இடத்தில் அந்த காட்சி சிற்பமாகவைக்கப்பட்டு இருந்தது.
அந்த பகுதியில் ஸ்வாமிஜி ஒரு சாதுவை எங்களுக்கு காட்டினார். அவர் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியின் மேல் இருந்த இடத்தை அறை போல அமைத்துக் கொண்டிருந்தார். அவர் உணவு உண்பதோ அல்லது அந்த இடத்தை விட்டு இறங்கி வருவதோ இல்லை என்றும் மஹா கும்பமேளாவின் போது பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை, சாதுக்கள் குளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த ஒரு நாள் மட்டும் அந்த இடத்தில் இருந்து கீழே இறங்கி வந்து குளித்துவிட்டு மீண்டும் அங்கேயே சென்று அமர்ந்து கொள்வார் என்று கூறினார். உணவின் மேல் அதிகம் பற்று கொண்ட என் வயிற்றை நான் கடிந்து கொண்டேன்.
அடுத்த வருடம் மஹா கும்பமேளா என்றும், சுமார் இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கே கூடுவார்கள் என்றும் கூறினார். தாமும் தனியே வரத் திட்டமிட்டுள்ளதாகவும், எங்களில் யாரேனும் வந்தால் அவரை எப்படி கண்டுபிடித்து சந்திப்பது என்ற உபாயத்தையும் கூறினார். சிலருக்கு தலை சுற்றியது.
ஒன்றுமட்டும் உண்மை. இறைவா!! இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பை மட்டும் எங்களுக்கு அருள்வாயாக.. அந்தக் கூட்டத்தில் ஸ்வாமிஜியை சந்திப்பது ஒன்றும் நமக்கு கடினமல்ல. ஏனெனில் எங்களுக்கு வேண்டுமானால் எங்கள் குருவை கண்டுபிடிக்கும் திறன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் குருவோஏற்கனவே, பல நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்த பூமியில், அவர்களுக்கு மத்தியில் நம்மை சரியாகக் கண்டு பிடித்து நமக்கு அருள்செய்தவர் அன்றோ!! அப்படிப் பட்டவருக்கு சில லட்சம் பேருக்கு நடுவே நம்மைக் கண்டு பிடிப்பதா கடினம்? (காசியில் தொலைந்தவர்கள் உட்பட). ஆகவே இறைவா!! இதில்கலந்து கொள்ளும் வாய்ப்பை மட்டும் எங்களுக்கு அருள்வாயாக..சந்திப்பை ஸ்வாமிஜி பார்த்து கொள்வார்கள்.. :)
புத்த கயா:
புத்தர் ஞானோதயம் பெற்ற போதி மரத்தின் கீழ் அவருக்கு ஒரு கோவில் எழுப்பி இருக்கிறார்கள். இது ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாகஇருந்ததாகவும் பின்னர் பௌத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் கேள்வி. இரண்டு முறை வெட்டப் பட்ட பிறகும் உள்ளதே தற்போது உள்ள இந்த போதிமரம். இந்த போதி மரத்தின் கிளையின் ஒரே பகுதியை எடுத்து இலங்கையிலும் அதிலிருந்து ஒரு கிளையை எடுத்து மதுரையிலும் வளர்வதாக அறிந்தோம். மதுரைவாசிகள் அது எந்த இடம் என்று அறிவீர்களா? புத்த துறவிகள் கைலாய மலையை விழுந்து வணங்கி வலம் வருவதற்கு இங்கே முதலில் அதேபோல செய்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். பயிற்சியில் வெற்றி பெற்றால் அடுத்தது இமாலய முயற்சி !! இங்கே சில முக்கியமான புத்த துறவிகளின்சமாதிகளும் உள்ளது. சில துறவிகள் கூட்டமாகவும் சிலர் தனித் தனியாகவும் சமாதி ஆகி உள்ளார்கள். புத்தரின் பாதம் இங்கே கல் வடிவில் வைக்கப்பட்டுள்ளது. புத்தருடைய தத்துவங்களை பாடல் வடிவில் சில அன்பர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அநேகர் அதைச் சுற்றி அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த இடத்தில் சிறிது நேரம் தியானம் செய்தோம்.
சாரநாத்:
இங்கே ஒரு சைனீஸ் புத்த கோவிலுக்கு சென்றோம். அங்கே புத்தர் பற்றியும் சாரநாத் ஸ்தூபி பற்றியும் பல குறிப்புகள் கண்டோம். புத்தரின் 24 போதனைகளை ஆரங்களாகக் கொண்ட சக்கரத்தின் சிலையும் நான்கு புறமும் முகம் கொண்ட சிங்கத்தின் சிலையும் இருந்தது. பின்பு அங்கேஉள்ள புத்த கோவிலுக்கு சென்றோம். இது போதி தர்மருடைய கோவில் என்றும் கேள்வி. புத்தர் முதன்முதலில் தம் சீடர்களுக்கு (மௌனமாகவே) உபதேசம்செய்த இடத்தைப் பார்த்தோம். சாரநாத் ஸ்தூபியையும் கண்ணுற்றோம். இது பல முறை சிதைக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஒருஅருங்காட்சியகம் உள்ளது.
கால பைரவர் கோவில்:
காசியே கால பைரவரின் கட்டுப்பாட்டில் உள்ளது அன்றோ!!. கூட்டம் கடுமையாக இருந்தது. பூசை தொடங்கும் போது ஒரு மெகா சைஸ் உடுக்கை ஒன்றுஅடித்தார்கள். அதன் சப்தமே வித்யாசமாக, நமக்குள் எதோ செய்வது போல இருந்தது. தரிசனம் முடித்து அங்கே எல்லாரும் காசி கயிறு வாங்கிக்கொண்டோம்.
மேற்கண்ட கோவில்கள் தவிர காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு ஹனுமான் கோவில், பிர்லா மந்திர், துளசிதாசர் இராமாயணம் எழுதிய துளசி மானஸ் மந்திர், துர்க்கா மந்திர் ஆகியவற்றை தரிசித்தோம்.
துர்க்கா கோவில் விவேகானந்தரின் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற ஒரு கோவில் இது. அவர் இக்கோவிலில் இருந்த போது ஒரு குரங்கு திடீரென்று அவரை துரத்தஆரம்பித்தது. அவரும் ஓட ஆரம்பித்தார். சிறிது தூரம் சென்றதும் நான் எதற்காக ஓட வேண்டும் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அவர் திரும்பி அதைசந்திக்கத் தயார் ஆனார். அப்போது அது அங்கே காணப்பட வில்லை. மனமாகிய குரங்கை எதிர்த்து வென்றதும் இந்த துர்கையின் அருளால்தான்.
கங்கா ஆரத்தி:
தினமும் மாலை இங்கே கங்கையை வணங்கும் முகமாக கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடை பெறுகிறது. ஐந்தாறு பேர்கள் ஒன்று போல சடங்கு வடிவில் பூஜைகள்செய்கிறார்கள். பின்னியில் அருமையான குரலில் பஜனை செய்கிறார்கள். பார்க்க வேண்டிய ஒன்று.
மணிகர்ணிகா காட்:
இந்த படித்துறை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு படித்துறையைப்பற்றி மட்டும் அவர் பாடி இருப்பது இதன் பெருமையை உணர்த்தும். இங்கே ஒருவருடையஉடல் எரிக்கப்படும் போது கால பைரவரே அவருக்கு உபதேசம் செய்து முக்தி அளிப்பதாக நம்பிக்கை. நாங்கள் தை அமாவாசை இரவு அங்கே சென்றோம். சுமார் 12 பிணங்கள் அங்கே எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்தன. நான் அருகில் சென்று பார்த்தேன். ஒரு சிறிது கூட நாற்றமே இல்லை. எல்லா உடல்களும்முழுமையாக எரியூட்டப் பட்டு சாம்பலாக்கப் பட்டிருந்தன. அகோரி என்ற பெயரில் யாரும் பிணம் திண்பதையோ அல்லது உடல்கள் அரைகுறையாகஎரியூட்டப்பட்டு நதியில் வந்ததையோ நான் காணவே இல்லை. இல்லை. இல்லை.
வயிறே வைகுண்டம் :
வயிற்றை நம்பி அதற்காகவே வாழ்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள் .. காசியில் அருமையான தமிழ் நாட்டு உணவு வகைகளை மிகவும் அன்புடன்பரிமாறும் இடங்களில் (எனக்குத் தெரிந்த) இரண்டினை உங்களுக்குச் சொல்கிறேன். முதலாவது, நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் ('நாட் கோட் சத்தர்'என்று நாகரீமாக கூறும்படி கேட்டுகொள்ளப் படுகிறீர்கள்..) இரண்டாவது குமாரசுவாமி மடத்திற்கு எதிரே உள்ள உணவகம். வடஇந்திய கடுகு எண்ணெய்உணவு வகைகளிலிருந்து உங்கள் நாக்கு, வயிறு மற்றும் உயிர் ஆகியவற்றைக் காப்பாற்றும், பசிப்பிணி போக்கும் மருத்துவ மனைகள் இவை.. (பின்குறிப்பு:அந்தந்த ஊர்களில் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவு வகையே அந்த இடத்தில் வாழ சாலச் சிறந்தது என்பது ஸ்வாமிகள் வாக்கு.) காசியில் பசுக்கள்அதிகம் (??). எனவே பால், நெய் பண்டங்கள் மிகவும் குறைந்த விலையிலும் நல்ல தரத்திலும் கிடைக்கிறது.
நிறைவும் தொடக்கமும்:
அலுவலகப் பணிகளால் ஒரு நாள் முன்னதாக தை அமாவாசை (திங்கள் அன்று) கிளம்ப வேண்டியதாயிற்று. தை அமாவாசை அன்று 'மரணத்தை வெல்லும்முயற்சியில் வெற்றி பெற' மஹா ம்ருத்யுன்ஜெய ஹோமம் செய்யப்பட்டது. கலந்துகொண்டது எங்கள் பெரும் பேறு. பின்னர் 'அர்க்யம்' செய்ததுடன் அதுநிறைவு பெற்றது. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்கு பிரசாத பொருட்கள் வாங்குவதுடன் நிறைவடைந்தது.. காசி விட்டு செல்லவும்,ஸ்வாமிஜியை விட்டு செல்லவும், சத்சங்கம் முதலியவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டாததும் சிறிது வருத்தமாக இருந்தாலும் இந்த இனியநினைவுகளை மீண்டும் நினைப்பதின் மூலம் அது குறையப் பெற்றோம். பயணம் இனிதே நிறைவு பெறும் போது தான், ஸ்வாமிஜி பயணத்திற்கு முன்னர்அனுப்பிய, ஆதி சங்கரரின், காசி பஞ்சக சுலோகங்களின் பொருள் நினைவுக்கு வந்தது.
1. மனதில் (லௌகீக விஷயங்களைப்பற்றி) ஈடுபாட்டுக் குறைவும், நிம்மதியும், மணிகர்ணிகை என்ற தீர்த்த கரையும் வேறல்லவே!ஜ்ஞானமே பிரவாஹமாகவும், ஆத்ம சுத்தியே கங்கையாகவும் ஆத்ம ஸ்வரூபமே காசியாகவும் ஆக நானே காசிதானே
2. இந்த்ர ஜால வித்தையைப் போன்று இந்த உலக விவகாரம் மனம் தோன்றிய படி தோற்றுவிக்கப் பட்டது தானே. உண்மையில் சத், சித், ஆனந்தம் என்றுபரமாத்மா ஸ்வரூபமே ஆன ஆத்ம ஸ்வரூபமே அந்த காசியாக உள்ளது. ஆகவே நானும் காசியும் ஒன்றேதான்.
3 . ஐந்து கோசங்களில் மிளிரும் புத்தியே ஒவ்வொரு மனித தேஹமாகிய கோவிலில் விளங்கும் பார்வதீ தேவியானவள்.ஒவ்வொரு அந்தராத்மாவேசாக்ஷியான சிவன். ஆத்ம ஸ்வரூபமே காசி.
4 . காசி ஷேத்ரமேன்பது எனது சரீரமே. எங்கும் பரவியுள்ள ஜ்ஞானமே கங்கை. எனது பக்தியும் சிரத்தையுமே கயை. பிரயாகக்ஷேத்ரம் என்பது எனதுகுருவின் சரணங்களை மனதில் தியானிக்கும் பேறுதான்.
5 . துரீயமான விச்வநாதர் யார்? அதுவும் ஒவ்வொரு மனதிலுரையும் ஸாக்ஷியான அந்தராத்மாதானே.. இவ்வாறு எனது சரீரத்திலேயே எல்லா தீர்த்தங்களும்இருக்கையில் வேறு புதிதாக தீர்த்தம் ஏது?
இப்படி இருக்க, உண்மையான காசியையும், கங்கையையும், மணிகர்ணிகையையும், பிரயாகையையும், கையையையும், விச்வநாதரையும், சிவனையும்,பார்வதியையும் எனக்குள்ளே தரிசிக்க, ஸ்வாமிஜி அவர்களால் அருளப்பட்ட இந்தப் பயணத்தை அதற்கான துவக்கமாகக் கருதுகிறேன்.
|| குருவே சரணம் ||
விளக்கம்
காசி பயண அனுபவம்,
பயணம்
Subscribe to:
Posts (Atom)















