Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, October 18, 2019

இமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2


கட்டுரை எழுதியவர் - மணிகண்டன்

                  அனைவருக்கும் நமஸ்காரம் இறையருளும் குருவருளும் துணைபுரிய எங்களின் ஹிமாலய பயண அனுபவத்தை பற்றி இங்கு பதிவிடுகிறோம். சுவாமிஜி ஹிமாலய பயண அறிவிப்பு வந்தவுடன் எங்கள் மனம் அடைந்த மகிழ்சிக்கு அளவில்லை. பலநாள் பசியில் இருப்பவருக்கு தேனில் ஊறிய பலாச்சுலை கிடைத்தது போன்று இருந்தது. காசி முக்திநாத் கும்பமேளா பயணத்தில் கலந்து கொள்ளாததால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று சுவாமிஜியிடம் விண்ணப்பித்தோம் சுவாமிஜியின் ஹிமாலய வாட்ஸ்அப் குருப்பில் இணைத்ததும் இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி உரைத்தோம் 

சில நாட்களுக்குப்பிறகு சுவாமிஜி கேதர்நாத் கோவிலை அடைய 4 வழியைக் கூறினார்.

1. குதிரை

2. ஹெலிகாப்டர்

3. டோலி

4. நடத்தல்


இந்த கேள்வி எங்களை சிறிது திகிலடைய செய்தது. இருப்பினும் சுவாமிஜியின் முடிவே எங்களின் வழி எனக் கூறிவிட்டோம். குருப்பில் ஒருவர் சுவாமிஜியே சொல்லுமாறு கேட்டார் அதற்கு சுவாமிஜி பர்வதமலை போன்றது என எங்களுக்கு நடந்துவிட முடியும் என நம்பிக்கை ஊற்றெடுத்தது.


பிறிதொருநாளில் பனிமூடியமலையில் ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ எடுத்த காட்சியை பகிர்ந்து திகிலூட்டினார.; செப்டம்பர் 19 முதல் 25 வரையிலான பயண விவரங்களையும் என்ன கொண்டு வரவேண்டுமென்ற விவரங்களையும் கொடுத்தார். பயணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு தேவையான பொருட்களை வாங்கி பேக்கங் செய்ய ஆரம்பித்தோம். 18ந் தேதி இரவு 12 மணிக்கு முழுவதும் முடித்தோம். இத்தனை நாட்களாக சென்னையில் மழையே இல்லை.ஆனால் இன்றைய இரவிலோ சோ… என மழை கொட்டியது.

காலையில் 7 மணிக்கு செக்கின் செய்ய வேண்டியதால் காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு ஆயத்தமாகி விட்டோம். வுhடகை கார் 6:10க்கு வருமாறு புக் செய்தோம். ஆனால் 6:50க்கு வந்தது. மழையோ நிற்காமல் எங்களை வாழ்த்தி வழியனுப்ப பொழிந்துகொண்டே இருந்தது.

கார் சிறிது மெதுவாகவே ஊர்ந்தது. இதயமோ மிக வேகமாக படபடத்தது. ஒரு வழியாக கார் மிதந்து 7:46க்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தது. 9 மணிக்கு விமானம் சென்னையிலிருந்து ஸ்ஸ்ஸ்… என புறப்பட்டது. 

      விமான பயணம் எனக்கு சிறிது பயமான பிராயணமாகவே இருக்கும். புல வருடங்களுக்கு முன் 2 முறை பயணம் செய்திருக்கிறேன். இதனால் சிறிது பதட்டம் மனதில் இருந்துகொண்டே இருந்தது.நாங்கள் அனைவரும் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தோம். விமானம் மேலே பறக்கத் துவங்கும்முன் கண்களை இறுக்க மூடிய நிலையில் இருந்தேன் பயம் தெரியாமல் இருப்பதற்காக. இருந்தும் விமானம் மேலெழும்போது நெஞ்சம் படபடத்தது. சிறிது நேரத்திற்குப்பின் அமைதி அடைந்தது. இப்பொழுது மரங்கள் வண்டி கட்டிடம் அனைத்தும் சிறிய பொம்மைபோல் தெரிந்தது. பிறகு மேகத்திற்கு மேலே வானத்தில் விமானம் தஞ்சமடைந்தது. மேகங்கள் அனைத்தும் பார்பதற்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் போல இருந்தது. பழைய படங்களில் வருவதுபோல தேவர்களும் நாரதரும் வருகிறார்களா என்ற மாய எண்ணம் எங்களுக்கு வந்துபோனது. 

       அனுவும் திருமதி.அமுதா அவர்களும் சைலன்ட் ரிட்டிரீட்ல் கூறியபடி தியானம் செய்ய முயற்சிக்கலாம் என்றார்கள். அதை ஆமோதித்து அனைவரும் கண்கள் மூடிய நிலையில் சுவாசத்தை விமானத்தின் ஓசையோடு இணைக்க ஆரம்பித்தோம். 2 மணி நேர பயணத்திற்குப்பின் மும்பை விமான நிலையத்தை அடைந்தது. எங்களுடன் கொண்டு வந்திருந்த இட்லியை உண்டு பசியாறினோம். செக்யுரீட்டி செக் முடிந்தவுடன் டேராடூன் விமானத்திற்காகக் காத்திருந்தோம். 13:20 மணிக்கு விமானம் புறப்பட ஆயத்தமானது. இம்முறை கண்கள் மூடிய நிலையில் சுவாசத்தை விமானத்தின் ஓசையோடு இணைக்க ஆரம்பித்தோம். இப்பொழுது மனதில் சிறிதும் பயமில்லை. கவனம் முழுவதும் சுவாசத்துடனும் விமானத்தின் ஓசையோடும் இருந்தது. சிறிது நேரம் கழித்து கண்கள் திறந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தோம். சித்த சாஸ்திரத்தில் சொன்னபடி மேகத்திற்குமேல் மனதை கொண்டு செல்ல முடியாதை இப்பொழுது நேரடியாகக் காண முடிந்தது. பிறகு மேகத்திற்குக் கீழே பறந்தபோது இயற்கையின் அன்னையின் பேரழகைக் காண முடிந்தது. ஆம் டேராடூன் முழுவதும் பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் இருந்தது. மனம் நிரைவடையும் முன்பு விமானம் ஏனோ கோபம் கொண்டு தரையிரங்கியது எங்களுக்கு சிறிது வருத்தமாக இருந்தது. எனினும் சுவாமிஜியின் வரவுக்காக முன்பே தரையிரங்கியது ஆனந்தமே. நாங்கள் கோவை குழுவின் வருகைக்காகக் காத்திருந்தோம். சிங்கபுர் பெங்களுர் குழுக்கள் முன்பே ஹரித்துவார் ஹோட்டல் அறையை அடைந்திருந்தனர்.



சுவாமிஜியின் விமானம் குறித்த நேரத்திலிருந்து 20 நிமிடங்களுக்கு முன்பே டேராடூனில் தரையிரங்கியது. நாங்கள் அனைவரும் சுவாமிஜியை வணங்கினோம். அனைவரும் சிறிய பேருந்து வந்தவுடன் ஹரித்துவார் ஹோட்டல் அறையை அடைந்தோம். அனைவரும் கங்காமாதாவிற்கான ஆர்த்தி காண ஆயத்தமானோம். சிறிய பேருந்து எங்கள் அனைவரையும் சுமந்துகொண்டு கங்கா ஸ்னானம் செய்யுமிடம் நோக்கி ஊர்ந்தது. எங்களுடைய காலதாமத்தினால் கங்காமாதாவிற்கான ஆர்த்தியைக் காணும் பாக்கியம் இழந்தோம். இருப்பினும் கங்கா ஸ்னானம் செய்ய வாய்ப்பளித்த இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி. எங்ஙளின் கங்கா ஆர்த்தி ஏக்கம் கங்கா தீர்த்தக்குளியலில் மறைந்தது. நம் அனைவருக்குமான அன்னை எங்களையும் அரவணைத்தது ஆனந்தமாய் இருந்தது. பிறகு அனைவரும் தங்களுடைய முன்னோர்களுக்கும் தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் சேர்த்து அன்னையிடம் விண்ணப்பம் (ஆர்கியம் ) வைத்தோம். 

   சுவாமிஜி இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவுரைத்தார். “இது எனக்கு மிகவும் நெருக்கமான இடம். நாங்கள் அனைவரும் அதனைக் கருத்தில் கொண்டு நடக்கவேண்டும் என்றார்.” எனக்கு கேதர்னாத் பத்ரினாத் பஞ்ஞ ப்ரயாக் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. சுவாமிஜி எச்சரித்தபடி சரியானபடி நடக்கவேண்டுமென மனதில் வேண்டினேன். நானும் அனுவும் மௌனத்தில் இருப்பது என முடிவெடுத்து அப்பொழுதிலிருந்து முயற்சி செய்ய ஆரம்பித்தோம்.

   20-09-2019 அன்று காலை 5 மணிக்கு ஆயத்தமாகி எங்கள் குழுவான தேவ ப்ரயாக் மற்ற குழுக்களான நந்த ப்ரயாக் கர்ண ப்ரயாக் விஷ்ணு ப்ரயாக் ருத்ர ப்ரயாக் உடன் பேருந்தில் ஏற காத்திருந்தோம். 2 சிறிய பேருந்துகளில் எங்கள் பயணத்தை துவங்கினோம். 2 அரை மணிநேர பயணத்திற்குப் பிறகு வசிஷ்டர் குகை வந்தடைந்தோம். மகாபாரத இதிகாச நினைவலைகள் மோத வசிஷ்டர் தியானம் செய்த இடத்தில் தியானம் செய்ய அனுமதி கிடைத்ததை நாங்கள் அனைவரும் கிடைத்தற்கறிய பாக்கியங்களில் ஒன்றாக எண்ணி தியானம் செய்தோம்.  பிறகு அங்கே அருகில் பிரவாகமாய் பரவியிருந்த கங்கை அன்னையை தரிசித்து நேரம் கடத்தாமல் தேவ ப்ரயாக் வந்தடைந்தோம். ராமர் கோவில் சிறிது தொலைவில் இருந்ததால் நடந்து சென்றோம். படிகட்டில் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தபோது மலைபசு சிரித்தபடி கீழே இறங்கிக்கொண்டிருந்தது. ஒருவழியாக மேலே ஏறி ராமர் தரிசனம் கண்டோம். அங்கிருந்து மெதுவாக கீழே இறங்கி தேவ ப்ரயாக் வந்தடைந்தோம். ஒருபக்கம் பச்சை நிறத்திலும் மறுபக்கம் சாம்பல் நிறத்திலுமாக வந்து சங்கமமாகிறது. 

அலக்நந்தா பாகீரதி சங்கமத்தை தொடர்ந்து கங்கை அன்னையாக உருவெடுக்கிறாள். அங்கே அனைவரும் அன்னையின் மடியில் தவழ்ந்து பிறகு ஆர்கியம் கொடுத்தோம். நேரமின்மையின் காரணமாக அங்கிருந்து புறப்பட்டு வழியில் மதிய உணவை உண்டோம். பிறகு 16:30 மணிக்கு ருத்ர ப்ரயாக் வந்தடைந்தோம். அலக்நந்தாவும் மந்தாகினியும் சங்கமிக்கும் இடம் இதுவாகும். மாலையானாலும் தீர்த்தத்தில் இறங்கும்போது குளிர் தெரியவில்லை. ருத்ர ப்ரயாக் பெயருக்கு ஏற்றாற்போல் ருத்ரமாக பாய்ந்துகொண்டிருந்தது. அதனால் ஒருவர்பின் ஒருவராக தீர்த்தமாடினோம். மாலை 6 மணிக்கு இங்கே கங்கா ஆர்த்தி செய்தார்கள்.  

ஹரித்துவாரில் கங்கா ஆர்த்தியை தவறவிட்டது இங்கே நிறைவேறியது. அங்கிருந்து குப்தகாசி இரவு வந்தடைந்தோம். அங்கே இரவு உணவு உண்டபிறகு சுவாமிஜி 21-09-2019 அன்று காலை 5 மணிக்கு கேதர்நாத் கிளம்புவோம் எனவும் அதிகமான பொருட்களுடன் மலையேற சிரமம் அதனால் ஸ்லீப்பிங் பேக்கும் ஜெர்கின் மற்றும் ஒரு செட் துணியும் எடுத்துக்கொள்ளக் கூறினார். 21-09-2019 காலை 5 மணிக்கு குப்தகாசியிலிருந்து பேருந்தில் கிளம்பினோம். காலை தேவையான உணவை அனைவருக்கும் சிறிய டப்பாவில் கொடுத்திருந்தனர். காலை 8:30 மணிக்கு மலை அடிவாரம் அடைந்தோம். அங்கே அனைவரும் டீ எடுத்துக்கொண்டனர். நானும் அனுவும் டீ சாப்பிடுவதில்லையாதலால் மலைமேல் நடக்க ஆரம்பித்தோம். மலைமேல் ஆக்ஸிஜனின் அளவு குறையும். அதை சமாளிக்க சுவாமிஜி முதல்நாளே நீர் நிரைய குடிக்கவும் திட உணவை குறைவாவும் தேவையற்ற திண்பண்டங்களை தவிர்க்கவும் கூறினார். 

மலையின் படிகட்டுகளில் மெதுவாக ஏறினோம். இமயமலையின் இயற்கை அழகை ரசித்தபடியே மனம் துவளும்போது குருமந்திரத்தை மனதில் கூறியபடியே பயணப்பட்டோம். கங்கை அன்னை வழியெங்கும் எங்களால் தொடமுடியாத தூரத்தில் பாய்ந்துகொண்டிருந்தார். வுழியெங்கும் வானுயர்ந்த மரங்கள் அனைவரையும் வாழ்த்தி மேலேறி வாருங்களென வரவேற்றன. நாங்கள் சற்றுவடையவே ஓரிடத்தில் அமர்ந்தோம். அங்கே எழுமிச்சை சாறு கிடைத்தது. அதை வாங்கி பருகி இளைப்பாறினோம். அப்பொழுது சுவாமிஜியும் சில மாணவர்களும் வந்து எழுமிச்சை சாறு பருகி இளைப்பாறினர். நானும் அனுவும் அங்கிருந்து கிளம்பினோம். அப்பொழுது சுவாமிஜி எங்களிடம் எதற்கு மலையேற உதவும் கம்பை உபயோகப் படுத்தாமல் இருக்கிறீர்கள் என கேட்டார். அதனை ஆமோதித்து நாங்கள் கம்பை ஊன்றி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். ஒருசிலர் டோலியிலும் குதிரையிலும் மலையில் ஏறினர். 

 மெதுவாக இமயமலையின் இயற்கை அழகை ரசித்தபடியே மெல்ல நடந்தோம். ஓரிடத்தில் குதிரையானது முழுதுமாகத் தரையில் படுத்திருந்தது. குதிரையோட்டிகள் செய்வதறியாது அந்த குதிரையின் அருகில் நின்றிருந்தனர். எங்கள் மனம் குருமந்திரம் கூறியபடியே முன்னேறிக்கொண்டிருந்தோம். இன்னொரு இடத்தில் ஒரு பெண்மணி நின்றுகொண்டு கத்திக்கொண்டிருந்தார். அங்கே ஒரு குதிரை ஆக்ரோஷமாக பின்னங்கால்களை உயர்த்தி உதைத்துக் கொண்டிருந்தது. குதிரையோட்டி ஒரு கம்பை வைத்து அடித்துக்கொண்டிருந்தார். நாங்கள் மறு ஓரமாக குருமந்திரத்துடன் முன்னேறிக்கொண்டிருந்தோம். திருமதி.விஜியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் சுவாமிஜியுடன் பேசியபோது சுவாமிஜி இதுவரை 7 கிலோமீட்டரே கடந்துள்ளோமென்றார். எங்களுக்கு சிறிது தலை சுற்றியது. சுவாமிஜியின் நேற்றைய உரையாடலின்போது வேகமாக நடந்தால் 4 மணி நேரத்திலும் மெதுவாக 6 மணி நேரத்திலும் கேதர்நாத் கோயிலை அடையலாமென்றார். அடிவாரத்தில் 16 கி.மீ என இருந்தது. மேலும் வாட்ஸ்அப் குருப்பில் பர்வதமலை போன்றதே என்றார். ஏறக்குறைய கால் பங்கு தூரமே கடந்துள்ளோமென நினைத்தபோது தலை சுற்றியது.

திருமதி.விஜி அவர்கள் அனுவிடம் கடைசி 4 கி.மீ மிகவும் கடினமாக இருக்குமென்றார். அதனால் அவரும் சிலரும் குதிரையில் பயணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இப்பொது எங்கள் மனது சிறிது கலக்கமுற்றது. இருந்தும் வழியில் நடந்தவற்றை பார்த்ததில் நடந்தே செல்வது என நானும் அனுவும் முடிவெடுத்தோம். திரு.வேணு திருமதி.சித்ரா அவர்களும் உண்டபிறகு சுவாமிஜியிடம் கூறி அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து நடந்தோம். 2 கி.மீ கடந்தவுடன் திருமதி.விஜி கூறியபடி கடினமான பாதையாகவே இருந்தது. அனு என்னிடம் திருமதி.விஜி கூறியபடியே குதிரையில் சென்றிருக்கலாமென்றார்கள். சிறிது அங்கே இளைப்பாறிய பிறகு மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். சிறிது துhரம் சென்றபிறகு அனு நடக்க மிகவும் கடினமாக உள்ளது என்றார்கள். எனக்கோ தலை பாரமாகி வலியெடுக்க ஆரம்பித்தது. நான் மௌனத்தில் இருந்ததால் வாய்திறந்து இதைப்பற்றிக் கூறவில்லை.  சுவாசம் இரண்டு நாசி வழியாகவே நடந்தது. இருந்தும் சுவாசக்காற்று எனக்குக் குறைவாகவே இருந்தது. சுவாமிஜி பின்னால் வரும் நம்பிக்கையாலும் மனதில் கூறும் குருமந்திரத்தாலும் நம்பிக்கையுடன் முன்னேறினோம். ஓரிடத்தில் ஒரு பாட்டியுடன் சிலர் குறுக்கு வழியில் வருவதைப் பார்த்தோம். திரு.வேணு அவர்கள் அந்த பாட்டிக்கு உதவும் பொருட்டு தன் கைகொடுத்து தூக்கிவிட முயற்சிசெய்தார். ஆனால் அந்த பாட்டியோ கையை தட்டிவிட்டு அவரே ஏறியது எங்களை பிரமிப்படையச் செய்தது. எங்களுக்குள் நம்மாலும் நடக்கமுடியுமென நம்பிக்கை அதிகரித்தது.


      நாங்கள் சிறிது வேகமாக இப்பொழுது நடக்க ஆரம்பித்திருந்தோம். எனக்கு தலை பாரம் இன்னும் குறையவில்லை. அதனால் நான் நீரை அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஓரிடத்தில் முன்னர் பார்த்த பாட்டியும் அவருடன் வந்திருந்தவர்களும் அமர்ந்திருந்தனர். நாங்கள் ஓய்வெடுக்காமல் வேகமாக நடப்பதைப் பார்த்து அவர்களில் ஒருவர் “மர்னேக்கேளியே ஜாரே க்யா” என கேட்டார். ஆக்ஸிஜன் இங்கு குறைவு அதனால் மெதுவாக ஓய்வெடுத்து செல்லுமாறு வலியுறுத்தினார். நாங்கள் அங்கே சிறிது இளைப்பாறியபோது திரு.டிவிஎஸ் குடும்பம்  திருமதி.விஜி மற்றும் சிலபேர் எங்ளைக் கடந்து சென்றார்கள். அவர்களிடம் எங்களுடைய ஸ்லீப்பிங் பேக்கை கொடுக்க முயற்சி செய்தபோது அவர்களின் குதிரையோட்டி இதை அனுமதிக்கவில்லை. நாங்கள் வேறுவழி இன்றி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். குதிரையில் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தபோது முன்பு பார்த்த குதிரை பற்றிய சம்பவங்களும் அந்த பாட்டியின் முயற்சியும் மனதில் ஓடிய குரு மந்திரமும் நடந்துசெல்லத் தூண்டி நம்பிக்கை ஊட்டின. 

மெதுவாக நாங்கள் நால்வரும் நடக்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் சுவாமிஜியும் சில மாணவர்களும் எங்களைக் கடந்து முன்னேறினார்கள். இப்பொழுது எனக்கு சிறிது பயம் தொற்றிக்கொண்டது. என் தலைபாரம் இன்னும் நீங்கவில்லை. எங்களின் கைகளில் உள்ள பாட்டிலில் நீர் தீர்ந்தபோது அருகில் பாய்ந்த தீர்த்தத்தில் பாட்டிலை நிரப்பிக்கொண்டோம். அங்கு இருந்த குளிரில் இந்தக் குளிர்ந்த தீர்த்தத்தைப் பருகுவது அசௌகரியமாக இருந்தாலும் பருகிய பிறகு சுவாசிப்பதில் சிறிது சௌகரியமாக இருந்தது. அதனால் அடிக்கடி தீர்த்தம் குடித்தோம். ஆங்காங்கே சௌசாலை (கழிப்பிடம்) வைத்திருந்ததால் இயற்கை உபாதையை பற்றிய கவலை இன்றி நடந்தோம். மேலும் வெயிலும் மழைச்சாரலும் மாறி மாறி வந்ததால் நடப்பதற்கு சௌகரியமாக இருந்தது.


            சுவாமிஜி குறுக்குப்பாதை வழியே செல்லலாமென அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். சுவாமிஜி முன்செல்ல அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தோம். நான் களைப்பாய் இருந்ததால் மெதுவாகவே பின்தங்கி நடந்து வந்தேன். இப்போது நாங்கள் நால்வர் தவிர யாரும் இல்லை. எப்படியாவது அனைவருடனும் சென்று சேர்ந்துவிட வேண்டுமென இதயம் மிக வேகமாகப் படபடத்தது. ஆனால் கால்கள் மெதுவாகவே நகர்ந்தன. சுவாமிஜியை பார்க்க முடியாததால் மனது கனத்தது. ஏற்றம் கடினமாக இருந்ததால் மெதுவாகவே நடக்க முடிந்தது. ஒரு கடையில் சுவாமிஜியும் 10 மாணவர்களும் அமர்ந்திருந்தனர். நாங்கள் மகிழ்ச்சியடைந்து அங்கே சென்றோம். 

              ஹரித்துவாரில் குளிரில்லாததால் பலரும் சுவாமிஜியிடம் ஜெர்க்கின் ஸ்லீப்பிங் பேக் எல்லாம் தேவையில்லாமல் கொண்டுவந்திருக்கிறோம் என்றோம். அது முற்றிலும் தவறுயென இப்போது புரிந்தது. ஒரு மாணவர் முகம்கூட தெரியாத அளவிற்கு முழுவதுமாக மூடி உட்கார்ந்திருந்;தார். குளிர் இப்போது ருத்ரதாண்டவமாடியது.  இப்பொழுது இமயமலையின் அழகை முழுமையாக மறைத்து காரிருள் சூழ்ந்தது. திடீரென எங்களின் பேச்சு சப்தத்தைவிட அதிகமாக வெளியே சட சட எனக் கேட்டது. ஆம் அது அடைமழையே. என்ன கோமமென்றுத் தெரியவில்லை. மிகுந்த ஆக்ரோசமாக மழைநீர் மண்ணில் மோதியது. ஒருமணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்துகொண்டிருந்தது. நேரமோ 20:00 மணி காட்டியது

அங்கேயே டென்ட் இருந்ததால் அங்கேயே தங்கலாமெனவும் காலையில் 3 மணிக்கு கிளம்பலாமெனவும் 5 மணியளவில் கேதர்நாத் கோவிலில் புஜையை பார்க்கலாமெனவும் சுவாமிஜி கூறவே அங்கேயே தங்கினோம். அனைவரும் மிக நெருக்கமாக ஸ்லீப்பிங் பேக்கில் படுத்தது அனைவருக்கும் கதகதப்பாக இருந்தது. அனைவரும் காலை 3 மணிக்கு எழுந்து இயற்கை உபாதைகளை முடித்து 3:30க்கு அங்கிருந்து புறப்பட்டோம். 

சுவாமிஜி முன்னால் செல்ல அனைவரும் பின்னால் நடந்தோம். புஜை பார்ப்பதற்காக நிறையபேர் வேகமாக நடந்தனர். நானும் அனுவும் திரு.ஜிவி குடும்பமும் கடைசியாக மெதுவாகவே நடந்தோம். அந்த கடைசி 5 கி.மீ ரில் தங்குவதற்கு எங்கும் டென்ட் இல்லை. மேலும் நடக்கும் வழியில் ஓரிடத்தில் மழையினால் தண்ணீர் தேங்கி திடீரென வெள்ளமாக ஓடுமென்றும்; அதனாலேயே டென்ட்டில் தங்கியதாகவும் சுவாமிஜி கூறியதாக சிலர் கூறினர். சுவாமிஜி ஏன் அந்த தேநீர் கடையில் அமைதியாக அமர்ந்திருந்தாரென்று அப்பொழுதுதான் புரிந்தது. 

         இறையருளுக்கும் குருவருளுக்கும் மனதில் நன்றி என தெரிவித்து குருமந்திரத்தின் துணையுடன் மெதுவாக முன்னேறினோம். இப்பொழுது நான் அனு திரு.ஜிவி குடும்பமும் திரு.வேணு குடும்பமும் திரு.டிவிஎஸ் அவர்களின் புதல்வி அனுவும் ஓரிடத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் ஒன்றாக நடந்தோம். கோவிலை அடைய 3 கி.மீ இருந்தது. தேநீர் அருந்த திரு.வேணு குடும்பமும் திரு.ஜிவி குடும்பமும் நின்று விட்டனர். நாங்கள் 3 பேரும் இப்பொழுது சிறிது வேகமாக முன்னேறி 2 கி.மீ கடந்துவிட்டோம். 22-09-2019 காலை மணி 5:30 ஆகிவிட்டது. இப்போது கோவில் இருக்கும் இடத்தைக் காண முடிந்தது. இருளில் மின்விளக்கு காரணமாக தங்கநிற வெளிச்சத்தில் தெரிந்தது. கோவிலின் அருகில் வர வர படிகட்டுகள் நீண்டு எங்களை நடக்கவிடாமல் தளர்வடைய செய்தன. கால்கள் வலித்ததால் கண்கள் கலங்கியிருந்தன. கடைசி 0.5 கி.மீ கடப்பதற்குள் மனமும் உடலும் மிகவும் சோர்வடைந்துவிட்டது. ஒருவழியாக கோவிலை அடைந்துவிட்டோம். சுவாமிஜி நம் அனைவரையும் வழிநடத்தாவிட்டால் இங்கே வருவதற்கு சாத்தியம் உண்டோ ?!!! பசுவைக் கண்ட கன்றுபோல் சுவாமிஜியை அங்கே கண்டவுன் நன்றி தெரிவிக்கும் பொருட்டு சுவாமிஜியிடம் ஆசிர்வாதம் வாங்கினோம். மடை திறந்த வௌ;ளம்போல் எங்கள் கண்கள் குளமாகின. இப்போது கடவுளை தரிசிக்க வரிசையில் நின்றோம். 30 நிமிடம் கடந்த வேளையில்  கோவிலின் உள்ளே பிரவேசித்துவிட்டோம். 

கேதர்நாத் முக்கோணமும் வட்டமுமான வடிவத்தை வரையறுக்கமுடியாத லிங்கமாக காட்சியளிக்கிறார். அவரை தொட்டு தீர்த்தத்தால் மகிழ்வித்து எங்கள் கரங்களையும் சிரத்தையும் அவர்மேல் வைத்து மனதை அவரிடம் பறிகொடுத்தோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தை விட்டு உடல் நகர்ந்தது. மனமோ இன்னொரு வாய்ப்பு எப்போது கிடைக்குமென தெரியாததால் அங்கேயே இருந்துகொண்டு வர மறுத்தது. அடித்தது 2 மணிநேரம் ஓய்வு 5 நிமிடமா என ஒரு திரைப்படத்தில் கேட்பதுபோல நடந்தது 10 மணிநேரம் இறைவனை தரிசிக்க 5 நிமிடமா என மனது கேட்டது. பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து தியானம் செய்தோம். கோவிலுக்கு பின்புறமுள்ள மலைத்தொடர் அதிகாலையில் தங்க நிறத்தில் காட்சியளித்தது. இப்போதோ பனியையே கம்பளமாக மூடிய மூடுபனியுடன் காட்சியளித்தது.  எல்லோரும் சுவாமிஜியுடன் குருப் புகைப்படம் கேதர்நாத் கோவில் தெரியுமாறு எடுத்துக்கொண்டோம். இப்போதோ அந்த மலைத்தொடரை பனிப்புகையானது முழுவதுமாக மறைத்திருந்தது. பிறகு ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திற்கு அனைவரும் வந்தோம். அன்று மிகுந்த மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர் சேவையை நிறுத்தினார்கள். விரைவில் கீழிறங்கினால் மட்டுமே மற்ற இடங்களையும் காண நேரம் கிடைக்குமென்பதால் அனைவரும் குதிரையில் செல்லலாமென சுவாமிஜி கூற முன்பு குதிரையை பார்த்த நிகழ்ச்சிகளால் என் நெஞ்சம் கலக்கமுற்றது. இந்த நடக்கமுடியாத தூரத்தையே சுவாமிஜி கடக்கவைத்துவிட்டார். இனி குதிரை சவாரிதானே என மனம் சமாதானமடைந்து குதிரை சவாரிக்கு ஆயத்தமானோம்.

நீண்டநேர குதிரை பயணம் ஒரு புதிய அனுபவம். குதிரை மலையின் ஓரத்தில் செல்லும்போது அங்கிருந்து கீழே பார்க்க சற்று பயமாக இருந்தாலும் இமயமலையின் இயற்கை அழகை வர்ணிக்க அளவே இல்லை. பாய்ந்தோடும் தீர்த்தங்கள் எங்கள் மனதையும் கொள்ளை கொண்டு ஓடின. குதிரையின் காலடி ஓசையும் அதன் கழுத்தில் ஆடிய மணியின் ஓசையும் திரு.இளையராஜாவின் இசையைத் தோற்கடித்தன. மனதில் மௌனமாக குருமந்திரம் ஓடிக்கொண்டிருந்தது. அலக்ஸாண்டர் ஓடும் குதிரையிலேயே உறங்குவாரென கேள்விபட்டதுண்டு. நானும் கண்களை மூடி குதிரையின் காலடி ஓசையை கவனிக்க முற்பட்டேன். குதிரை அசைந்து அசைந்து செல்வதால் நானே கீழே சரிவதுபோல உணர்ந்தேன். அது கண்களை மூடி விருட்சாசனம் செய்வதற்கு சமமாக இருந்தது. இடையிடையே குதிரையோட்டி என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் சைகையிலேயே பதிலளித்ததால் அவருக்கு சிறிது புரிந்தும் புரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் அனுவிடம் நான் பேசமாட்டேனா எனக் கேட்டேவிட்டார். ஹிந்தி தெரியாததால் பேசவில்லை என அனு சமாளித்தார். குதிரையோட்டியோ என்னை பரிதாபமாகவே பார்த்தாரென என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில சமயம் குதிரை வேகமெடுக்க குதிரையோட்டி அவர் குரலை உயர்த்த குதிரை அவ்வப்போது வேகமெடுத்தது. திடீரென ஒரு இறக்கத்தில் அவரின் குரலுக்கு பயந்து வேகமெடுக்க முன்னங்காலிடறி கீழே விழ குதிரையிலிருந்து நானும் முதுகுபுறம் தரையில் மோத கீழே விழுந்தேன். 

முதுகில் பேக் மாட்டியிருந்ததால் அடிபடவில்லை. ஆனால் கைபிடியை இறுக்கமாக பிடித்ததால் இடதுகை முறுக்கப்பட்ட நிலையில் முட்டி தரையில் மோத ஊண்றினேன். என் இடது காலோ குதிரையில் கால் வைத்து ஏறுமிடத்தில் சிக்கிக்கொண்டது. என் காலை விடுவிக்கமுடியவில்லை. அந்நிலையில் குதிரை எழுந்து மெதுவாக நகர முயற்சி செய்தது. அதனால் என் இடதுகால் மேலும் முறுக்கிக்கொண்டது. நல்லவேளையாக பின்புறமிருந்த வேறொரு குதிரையோட்டி என் காலை ஒருவழியாக போராடி விடுவித்தார். மெதுவாக எழுந்து ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போதுதான் கவனித்தேன் கேதாரீஸ்வரரின் மகிமையை. நான் வாய் திறந்து கத்தவில்லையென உணர்ந்தேன். நாம் எவ்வாறு இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு இருக்க இறைநிலை அருள்புரிகிறார் என புரிந்தது. சிறிது தூரம் சென்ற உடன் சுவாமிஜி குதிரையிடம் சண்டைபோட்டீர்களோ என என்னிடம் கேட்டார். அப்பொழுதுதான் புரிந்தது இறையருள் மட்டுமல்ல குருவருளும் துணை புரிகிறதென்று. மனதில் குருமந்திரத்துடன் ஒருவழியாக குதிரையில் மலைறயடிவாரம் அடைந்து அனைவரும் வந்தவுடன் பேருந்தை அடைந்தோம். 

குதிரைப் பயணம் பின்வரும் திருமந்திரத்தை நினைவுபடித்தியது.

ஆரியனல்லன் குதிரை இரண்டுள

 வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.


ப்ராணன் என்ற குதிரையை நாம் ஒழுங்காக கையாளாவிட்டால் எப்படி கீழே வீழ்வோம் என புரிந்தது.

     
             காலை சிற்றுண்டி முடித்து பேருந்தில் ஜோஷிமட் வந்தடைந்தோம். பத்மாசனத்தில் உள்ள பத்ரிநாதர் 6 மாதம் பனி காலத்தில் இங்குதான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இப்போது பனி காலமில்லாததால் இங்கு சாளக்கிராமமும் நரசிம்மரையும் தரிசனம் செய்தோம். ஆதி சங்கரர் சிலைக்கு அருகில் அனைவரும் தியானம் செய்தோம். பிறகு அங்கேயுள்ள ராஜராஜேஸ்வரி லட்சுமி தேவியை தரிசனம் செய்தோம். அங்கிருந்து புறப்பட்டு விஷ்ணு ப்ரயாக் அடைந்தோம். இந்த தீர்த்தத்தில் அலக்நந்தாவும் தௌலிகங்காவும் இணைகிறது. அங்கு கீழே இறங்கி தீர்த்தமருகில் சென்றபோது இறந்த ஒருவரின் உடலை எரியுட்ட ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு இடையுறு கொடுக்காமல் அருகில் வேறொரு இடத்தில் குளிக்க ஆயத்தமானோம். அப்போது ஒரு மாணவர் நதியில் இறங்கி 0 டிகிரி உள்ளதாகவும் விரைவாக குளித்து வெளியே வருமாறும் எச்சரித்தார். அதிகக் குளிர் காரணமாக அனைவரும் விரைவாக குளித்து ஆர்கியம் கொடுத்து வெளியேறினோம். பிறகு அங்கே தியானம் செய்தோம். சுவாமிஜி இன்னொரு பக்கத்தில் உள்ள தீர்த்தத்தை தெளிப்பதை பார்த்து அவசரமாக குளிக்குமிடத்தில் பிடித்த தீர்த்தத்தை அங்கே விட்டு விட்டு இந்த இடத்தில் தீர்த்தம் பிடிக்க இறங்கினோம். அங்கே தீர்த்தம் பிடித்தபோது மேலிருந்து ஒருவர் உடலெரித்த சாம்பலையும் முக்கால்வாசி எறிந்த விறகு கட்டையையும் தீர்த்ததில் தள்ளிவிட்டார். அந்த இறந்த உடல் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்திருக்கும். பலபேரால் உயிரோடு உள்ளபோதே பார்க்க வாய்ப்பில்லாமல் ஞானம் முக்தியை நோக்கி பயணிக்காமல் உள்ளார்கள். சொற்ப சிலருக்கே இறந்தபிறகு அவருடல் கங்கையுடன் ஐக்கியமாகும் பாக்கியம் உள்ளது. அந்த உடலின் ஆன்மா  முக்தியை நோக்கி பயணித்திருக்குமென மனது கூறிற்று. தீர்த்தத்தை வணங்கி  அங்கிருந்து கிளம்பினோம். அனைரும் பேருந்தில் பயணித்து பத்ரிநாத் அருகிலுள்ள ஹோட்டல் அறைக்கு வந்து மதிய உணவு உண்டோம். 


பிறகு இந்தியாவின் கடைசி எல்லை கிராமமான மானா பகுதியை பார்க்க சென்றோம். அங்கே சரஸ்வதி தீர்த்தத்தின் ஆரம்பப் பகுதி பீமன் பாலம் கேஷவ் ப்ரயாக் பார்த்தோம். பிறகு கணபதி குகை. அங்கே சுவாமிஜியுடன் சிறு பஜன். இந்த குகையில்தான் வியாசர் கூற கணபதி தன் தந்தத்தை உடைத்து மகாபாரதம் எழுதினார். அங்கிருந்து அரை கி.மீ. மேலே வியாசர் குகை. ஆதிசங்கரரின் குரு இங்கே வியாசரின் பெரிய சிலையை நிறுவியதாகத் தகவல். அங்கே கண்ணை மூடி மனதில் 2 நிமிடம் குருமந்திரம். பிறகு விரைவாக கீழிறங்கி ஹோட்டல் அறைக்கு வந்து பத்ரிநாத் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானோம்.  45 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்த பத்ரிநாதரை தரிசித்தோம். பிறகு கோவில் பிரகாரத்திற்கு வந்து தியானம் செய்தோம். காலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானோம். சிலமணிநேர பயணத்திற்குப் பிறகு நந்த ப்ரயாக் அடைந்தோம். அங்கு அனைவரும் காசியில் நீராடியதுபோல இங்கு நீராடினோம். இந்த தீர்த்தத்தில் நந்தாகினியும் அலக்நந்தாவும் சங்கமமாகிறது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு கர்ண ப்ரயாக் அடைந்தோம். இங்கு அலக்நந்தாவும் பிந்தரும் சங்கமமாகிறது. தீர்த்தத்தில் ஆனந்தமாக நீராடி ஆர்கியம் கொடுத்தோம். 4 மணிக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். ஹரித்வார் ஹோட்டலுக்கு இரவு 2 மணிக்கு வந்தோம். 

அடுத்த நாள் காலை ஹரித்துவாரில் கங்கை அன்னை மறுபடியும் எங்களனைவரையும் அரவணைத்தாள் மழைச் சாரலாக…. இந்த பயணத்தின்போது இமயத்து ஆசான்களின் புத்தகமாகிய சுவாமி ராமா அவர்களைப் பற்றிய வியப்பும் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கு நடந்தே வந்த ஆதிசங்கரரின் மீது பிரமிப்பும் ஏற்பட்டதில் பெரிய வியப்பில்லை. 

   இந்த வாய்ப்பருளிய இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி. மேலும் இதுபோன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென இறையருளையும் குருவருளையும் பிராத்திக்கின்றோம்….

Wednesday, July 3, 2019

முக்திநாத் ஆன்மீக திருப்பயணம்

அடியேனும் மனைவியும் முக்திநாத் ஆன்மீக பயணத்திற்கு தயாரக இருந்தோம். அடியேனுக்குதான் மிகுந்த கனவுகள். முக்திநாத்தை அடைந்தவுடன் உலகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு (அப்பாடா!) ஶ்ரீமன் நாராயனனால் அனுப்பிவைக்கப்படும் புஸ்பக விமானத்தில் ஏறி அமர்ந்து வைகுண்டத்தை வெகு சௌக்கியமாக அடந்ததுவிடலாம் என்ற ஒரு ஆசை, பேராசை! (சுஜாதவின் புதினங்களைப் படித்ததால் வந்த விளைவு)!
சுவாமிஜி பயணத்திற்கு தேவையான பொருட்களுடன், பக்தி (devotion), சுவதயா (team sharing of spiritual knowledge), யோகா (integrity with Divine), இவை மூன்றையும் மறக்காமல் கொண்டு வர அன்புக்கட்டளை இட்டிருந்தார்.

இவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு பல பகீரதப்பிரயணத்தங்களுடன் எங்களின் முக்தியை நோக்கிப்பயணம் இனிதே ஆரம்பமானது. பயணம் ஆரம்பமாகும் இந்த தருணத்தில், குருவை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கிளம்பினோம்.

"தியான மூலம் குருர் மூர்த்தி" The Root of Meditation is the Form of the Guru

பயணப் பாதை - டெல்லி - காத்மாண்டு - பொக்கரா - ஜொம்சொம் - முக்திநாத், மீண்டும் டெல்லி வந்தடைதல்.

22.5.2019

பகலில் டெல்லி வழியாக காத்மாண்டு வந்தடைந்தோம்.  விமான நிலையத்திற்கு வெளியே 'Swami Omkar & group' என்ற பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வாகனத்தில் பயணப் பைகளையும் எங்களையும் ஏற்றக்கொண்டு விடுதி வந்தடைந்தது. விடுதியில் மதிய உணவுக்குப்பின் (அருமையான தமிழக சப்பாடு) சிறிது இளைப்பாறினோம். சுவாமிஜி முன்னமே வந்துவிட்டிருந்தார்.ஓய்வுக்குப் பின், சுவாமிஜியை சந்தித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றோம்.

"பூஜா மூலம் குருர் பதம்" The Root of Worship is the Feet of the Guru.

பிறகு காபி அருந்திவிட்டு (தொடர்ந்து பல பயணம் இருப்பதால் ருசியாக இருந்தாலும், அடக்கமாகவும் சாப்பிட வேண்டியிருந்தது) பசுபதிநாத் கோவிலுக்கு சென்றோம்.

பசுபதிநாத்

உள்கோவிலுக்கு வெளியே இருந்த சிறு கோவில்களையும் லிங்கங்களையும் தரிசித்துவிட்டு அன்பர்கள் சிலர் அங்கிருந்த புரோகிதர் மூலம் சங்கல்ப அர்ச்சனை செய்து கொண்டனர். சிலர் ஜபம் செய்தோம். பிறகு பசுபதிநாத் கோவிலை வந்தடைந்தோம். கோவிலில் நல்ல கூட்டம். பசுபதிநாத்தை பார்த்தபடி பெரிய நந்தி. பசுபதிநாதர் ஒரு லிங்க வடிவில் மொத்தம் நான்கு பக்கங்களும் ஒவ்வொரு பக்கமும் ஒரு அலங்கார சிவ லிங்க ரூபமாகவும், லிங்கத்தின் உச்சியில் ஐந்தாவது அரூபமாகவும் ஐந்து லிங்கங்களாக காட்சி தந்தார். வரிசையில் நின்று ஒவ்வொரு பக்கமுமாக சென்று பசுபதிநாதரை தரிச்சித்தோம்.

பிறகு விடுதிக்கு வந்து இரவு உணவருந்தி விட்டு சுவாமிஜின் சத்சங்கம்.

சத்சங்கத்தின் சுருக்கம்: மோக்ஷம் & முக்தி

மோஷம் புத்த மத வார்த்தை. முக்தி வேத-உபநிஷத்தில் இருந்து வந்தது.புத்த மதம் பற்றற்ற நிலையை, உடம்பிலிருந்து விடுதலை அடைவதை குறிக்கிறது (nirvana or Moksha). அதோடு நின்று விடுகிறது. விடுபட்டு எங்கே செல்கிறோம் என்று பேசுவது இல்லை. ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம் அங்கே இல்லை.

இந்த இடத்தில்தான் வேத-உபநிஷத்துக்கள் முக்தியைப் பற்றி சொல்கிறது.
ஜீவாத்மா பரமாத்மாவைடன் கலப்பதே முக்தி. அப்படி அடைய கூடிய முக்தி நான்கு வகையானதாக இருக்கிறது.

1. சகஜ முக்தி - எந்த சாதனைகளும் செய்யாமல் வாழும் போக்கில் வாழ்ந்துவிட்டு, மூச்சு பிரியும் சமயத்தில் ஆண்டவனை நினைப்பது. குருவருளாளும் இது நடக்கலாம்.

2. ஜீவன் முக்தி(விதேக முக்தி) - அபியாசத்துடனும், வைராக்கியத்துடன் சாதனைகள், கடும் பயிற்சிகள் செய்து உயிருடன் இருக்கும்பொழுதே, இறைவனை அடைந்து விடுவது. மீண்டும் உலக வாழ்க்கைக்கு வராமல் இறைநிலையிலேயே இருப்பவர்கள் ஜீவன்முக்தி அடைந்தவர்கள்.

3. பரம் முக்தி - ஜீவன் முக்தி அடைந்து மீண்டும் உலகிற்கு வந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்கள்.

4. அவதாரம் - தாய் வயிற்றில் பிரசிக்காதவர்கள். ஒரு நோக்கத்தோடு அவதரிப்பவர்கள் (பிரவேசிப்பவர்கள்). உதாரணமாக ஶ்ரீராமர், ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீமச்சீந்தரநாத் (நாத பரம்பரையில் அவதரித்து விஞ்ஞான பைரவ தந்த்ரா மற்றும் பல நூல்களை நம் உயர்வுக்காக எழுதியவர். உடனே இந்த புத்தகங்களை தேட வேண்டாம். அவை கிடைக்கப்பெற்றாலும் குருவருள் இல்லாமல் புரியப்போவதில்லை. அனைத்தையும் தேடி ஓடுவது உலக இயல்பு. இனி குருவருளை வேண்டுவோம், அனைத்தும் கிடைக்கப்பெறும்).

23.5.2019

காலையில் மந்திர ஜபம் செய்ய கோரக்நாத் கோவிலுக்கு சென்றோம். போகும் வழி எல்லாம் சிவ லிங்கங்கள் உள்ள சிறு சிறு கோவில்கள். சுவாமிஜி சொன்னபடி இவை பல நாதர்களின் ஜீவ சமாதிகள். சிவலிங்கம் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு காலப்போக்கில் விஷயம் அறியாதவர்கள் நாதர்களின் ஜீவ சமாதிகளின் அதிர்வுகளை உணர்ந்து உள்வாங்காமல் நிறைய சிவாலயங்கள் என நினைத்து கடந்துசென்றுவிடுகிறார்கள். 

சுவாமிஜின் ஆசீர்வாத்த்தால் எங்களுக்கு தெளிவு பிறந்தது. இவர்களுக்கும் குருவருள் கிடைத்து ஆன்மீக தெளிவு ஏற்படவேண்டும் என்று எல்லாம் வல்ல குருவருளையும் இறையருளையும் பிரார்த்திப்போம்.

கோரக்நாதரின் ஜீவசமாதிக்கு மேலிருந்த கோபுரத்தில் தங்கத்தாமரை இருந்தது.அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு மந்த்ர ஜபம் செய்யும்பொழுது உள்ளேயும் தங்கத்தாமரை தெரிந்தது !

மந்த்ர ஜபம் செய்துவிட்டு கண்களை திறந்து பார்க்கும்பொழுது சுவாமிஜி நடந்து வந்துகொண்டிருந்தார்!

"மந்த்ர மூலம் குருர் வாக்யம்" The Root of Mantra is the Word of the Guru

விடுதிலுக்கு வந்து காலை உணவிற்குப்பின் சிறிய விமானம் மூலம் பொக்காரா வந்தடைந்தோம். சிறிது ஓய்வுக்குப்பின் காபி அருந்திவிட்டு மாலை சத்சங்கம். இந்த சத்சங்கம் அடுத்த நாளைய முக்திநாத் பயணத்திற்கு எல்லோரையும் தயார்படுத்தும் சத்சங்கமாக இருந்தது. பிறகு இரவு உணவு. பின் ஓய்வு.

சத்சங்கத்தின் சுருக்கம் : நாத பாரம்பரியம்

ஆதிநாத் தான் நாதபாரம்பரியத்தின் ஆதிகுரு. இவருடன் இணைந்து ஒன்பது நாதர்கள் நவ நாதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடைய பாரம்பரியத்தில் நாம் வருகிறோம். 

நாதர்கள் தங்களது ஆற்றலை உலக ஷேமத்துக்காக பல இடங்களில் ஸ்தாபித்திருக்கிறார்கள். காசி விஸ்வநாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உள்ள தலங்களும் நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்த தலங்களே. சூட்சுஸமாக ஆற்றலும், வடிவமாக லிங்கங்களும் இருப்பதால் காலப்போக்கில் காரணகாரியங்கள் மறந்துபோய், சிவ தலங்களாக பார்க்கப்படுகின்றன. விஷ்ணு தலங்களாக பார்க்கப்படும் தலங்ளிலும நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்து இருக்ககிறார்கள். உதாரணத்திற்கு ஶ்ரீரங்கநாத், முக்திநாத் (இது ஒரு புத்த மத கோவில்). 

உருவ வழிபாடு கடந்து இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நாதர்களின் ஆற்றலை உணர நாம் முயற்சிக்க வேண்டும். நாதர்கள் இந்தியாவிலும், இந்து மதத்திளும் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிளும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். நாதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் ஒரு கற்பனை செய்து வைத்திருப்பதால் நாம் பல சமயங்களில் நாதர்கள் என்று உணராமல் அவர்களை கடந்து சென்றிருப்போம். விழிப்புணர்வு வேண்டும். இதற்கு அபியாசத்துடனும், வைராக்கியத்துடன் சாதனைகள் செய்யவேண்டும்.

நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்த தலங்களில் கடல் மட்டத்திற்கு சமமாக ராமேஸ்வரம். உச்ச நிலையில் மலை சிகரத்தில் முக்திநாத் அமைந்திருக்கிறது.

24.5.2019

காலை உணவிற்குப்பின் சிறிய விமானம் மூலம் ஜொம்சம் வந்தடைந்தோம்.
விடுதிலுக்கு வந்து குளுருக்கான உடைகள் அணிந்துகொண்டு, கடல் மட்டத்திலிருந்து 3800 மீ உயரத்தில் பயணிக்க இருப்பதால் நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, தண்ணீர் பாட்டில்களும் வாங்கிக்கொண்டு தயாராக இருந்த வாகனத்தில் உடனே முக்திநாத் நோக்கி கிளம்பினோம். 

வண்டி இமய மலை வழியாக சென்றது கண்கொள்ளாக் காட்சி. வழியில் இறங்கி பல போட்டோக்களை க்ளிக் பண்ணிக்கொண்டோம்.  வண்டி கரடு முரடான பாதையில் செல்லக்கூடிய தூரம் வரை சென்றது. பிறகு வண்டியில் இருந்து இறங்கி மேடு போன்ற பாதையில் சுவாமிஜியுடன் நடக்க ஆரம்பித்ததோம். 
இரு பக்கமும் கடைகள், தங்குமிடங்கள், உணவகங்கள் போன்றவை இருந்தன. எங்கள் குழுவில் சிலர் இரு கால்களாளும், சிலர் முக்கால்களுடன் (இரண்டு கால்கள் + ஒரு mountain climbing stick = மூன்று கால்கள்) நடந்தோம். அங்கு வந்திருந்த யாத்ரிகர்களில் சிலர் குதிரைகளில் சவாரி செய்தபடி 'நடந்தார்கள்'.

இப்படி பலவிதமாக ஒரு மணி நேரம் நடந்து வந்து முக்திநாத் அடைந்தபொழுது மனம் குதூகலம் கொண்டது. முக்திநாதரை தரிசிக்கப்போகிறோம், முக்தி அடையப்போகிறோம் என்ற குதூகலம்தான். சுவாமிஜி தரிசன வழிமுறைகளை கூறினார்.

அங்கே 108 தீர்த்தங்கள் இருந்தன. 108 தீர்த்தங்களும் அங்கே 108 பசுவின் வாயில் இருந்து தீர்த்தம் கொட்டுவது போன்ற அமைப்பு (shower tap) கொட்டுமாறு அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு தீர்த்தத்திலும் உடம்பும் முக்கியமாக தலையும் நனையும்படி 108 தீர்த்தங்களையும் ஓடியே கடந்து வந்தோம். காரணம் அவ்வளவு குளிர்.

தீர்த்தமாடிய பிறகு, இரண்டு குளங்கள் இருந்தன. முதலில் பாவக்குளம். அங்கே மூன்று முறை முங்கி எல்லா பாவங்களையும் கழித்தோம். இரண்டாவது புண்ணியகுளம். அங்கேயும் மூன்று முறை முங்கி எல்லா புண்ணியங்களையும் கழித்தோம். பாவபுண்ணியங்கள் இரண்டையும் கழித்தால்தானே பிறப்பிற்ற முக்தி நிலை.

இரண்டு குளங்களுக்கும் பிறகு முக்திநாத் தரிசனம்.

கோவிலில் நல்ல கூட்டம். மெல்ல மெல்ல முன்னேறி நாங்கள் கருவறைக்கு அருகாமையில் வந்துவிட்டோம. முக்திநாத் ஒரு புத்த மதத்தலம். அங்கே புத்தரை (கௌதம புத்தர் அல்ல) விஷ்ணு அம்சமாக முக்திநாதராக தம்பதி சமேதராய் அலங்கரித்திருந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சி. சுவாமிஜியுடன் தம்பதி சமேதர முக்திநாதரை தரிசித்தோம். 

ஆனந்தமயமான தரிசனம். அப்போது சுவாமிஜி சொன்னது நினைவிற்கு வந்தது. விக்கரக வழிபாடு கடந்து ஆற்றலை உணர வேண்டும். அந்த சூழலின் தெய்வீகத்தன்மையை அனுபவவித்து உள்வாங்கி நாதர்களின் ஆற்றலை உணர முயன்றோ(ஓ)ம். 

சுவாமிஜியுடன் உருவமாக முக்திநாதரையும் அருவமாக ஆற்றலையும் தரிசித்தது, சுவாமிஜியே எங்கள் கைகளைப்பிடித்து முக்திநாதரின் கைகளில் ஒப்படைத்துவிட்டதுபோல் ஒரு பிரம்மை ஏற்பட்டது!

"மோக்‌ஷமூலம் குரு கிருபா” The Root of Liberation is the Grace of the Guru


முக்திநாதரை தரிசித்ததவுடன், ஒரு நிழலான இடத்தில் அமர்ந்தோம். தரிசனம் சிறப்பாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உலக நன்மைக்காகவும் சுவாமிஜி மஹாமிருதஞ்சய யாகம் செய்தார். பிறகு கொண்டுவந்திருந்த மதிய உணவை உண்டுவிட்டு இருக்குமிடம் கீழ்நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஐபமாலை, சாலக்கிராமம் போன்றவற்றை ஷாப்பிங் செய்தபடி நடந்து கீழே வந்து சேர்ந்தோம்.

கீழே ஒரு சிறு காப்பி, டீ கடை இருந்தது. அங்கே நுழைந்தால் முக்திநாத் சென்று வந்த 30, 40 யாத்ரீகர்கள் இருந்தனர். எப்படி ? சிலர் அசதியாகவும், சிலர் வாந்தி எடுத்துக்கொண்டும், சிலர் உடல்நலமில்லாமலும் இருந்தனர். பார்ப்பதற்கு டீக்கடை மாதிரி இல்லாமல் சிறிய மருத்துவமனை மாதிரி இருந்தது. ஏன் ? 3800 மீட்டர் கடல் மட்டத்தின் மேலே இருப்பதால் முக்திநாத்தின் தட்ப வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. மேலே செல்ல, செல்ல oxygen குறைந்து மூச்சுவிட சிரமமாக இருப்பதும் சில காரணங்கள். குருவுடன் வந்ததால் அவர் எங்களை பாதுகாப்பாக கரையேற்றவிட்டிருந்தார். குருவிருக்க பயமேன்? சுவாமிஜிக்கு வந்தனமும், நன்றிகளும் 


25.6.2019
காலையிலேயே கிளம்பி விமானம் மூலம் பொக்காரா வந்து விடுதிலை அடைந்து குளித்து காலை உணவிற்குப்பின் பொக்காரா கோவில் சுற்றுலா கிளம்பிணோம். முக்கயமாக குகைக்குள்ளே சென்று தரிசனம் செய்த மஹாதேவ் கோவில் சிறப்பாக இருந்தது.

26.5.2019
விமானம் மூலம் மீண்டும் காத்மாண்டு வந்து விடுதி அடைந்து மதிய உணவு, பிறகு ஓய்வு. இரவு பசுபதிநாத் கோவிலுக்கு சென்று மந்த்ர ஜபம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.



27.5.2019

காலையிலேயே கிளம்பி காத்மண்டு நகர கோவில்களை காண சென்றோம். முக்கயமாக சங்க மகாதேவ் (உலகிலேயே மிக உயரமான நிற்கும் நிலையில் சிவபெருமான் - 114 அடிஉயரம்), டோலேஷ்வர் மஹாதேவ் (கேதார்நாத்தின் தலைப்பாகம் என்று நம்பப்படுகிறது ), சங்குநாராயணன், ஜலநாராயணன் கோவில்கள் கண்டு மகிழ்ந்தோம்.


28.5.2019
காலை கோரக்நாத் கோவில் சென்று மந்த்ர ஜபம். பின் சுவாமிஜின் சத்சங்கம். பிறகு காலை உணவிற்குப்பின் காத்மாண்டு விமான நிலையம் வந்து டெல்லி திரும்பினோம்.

திரும்பி வரும் பயணத்தில் முக்திநாத் சென்ற அன்று நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுப் பார்த்தபோது, அவற்றுக்குள் மறைந்திருந்த ஆன்மீக உண்மைகள் குரு அருளாளும் இறை அருளாளும் தெள்ளத்தெளிவாக ஒரு புதிய ஆன்மீக பரிணாமத்தில் புரியத்தொடங்கின. சுவாமிஜியின் மௌனமான சத்சங்கம் மனதிற்குள் கேட்டது. தெளிவு பிறந்தது. 24.5.2019 நடந்தவற்றை மீண்டும் ஒருமுறை அன்புகூர்ந்து படித்துவிட்டு வாருங்கள்.

நம் பிறவிப்பயன் பிறப்பற்ற நிலையான முக்தி அடைவதே. இதற்கு ஒரு வழி குருவருளுடன் அபியாசத்துடனும் வைராக்கியத்துடனும் சாதனைகள் செய்வது. வாழ்க்கையின் பரபரப்பிரலும், அலைக்கழிப்பிலும் நாம் சில சமயங்களில் சாதனைகளை தற்காலிகமாக நிறுத்திவிடலாம், மறந்துவிடலாம். 

இதை நமக்கு உணர்த்த ஸ்வாமி ஓம்கார் ஃபவுண்டேஷன் சிங்கப்பூர் (SOF) மாத சத்சங்கங்களும், SOF அன்பர்களும் பக்கபலமாக இருக்கிறார்கள். அதோடு குருவும் நம்மை மீண்டும் சரியான ஆன்மீக பயணப் பாதைக்கு கொண்டுவர எப்படிப்பட்ட U-turnயையும் எடுப்பார். 

பாதை கரடுமுரடாக இருந்தாலும் குருவுடன் பயணிப்பத்தால் சௌகர்யமான பயணமே. இப்படி எந்நேரமும் ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் குருவின் சத்சங்கம், அருகாமை, துணையுடன் பயணிக்க, பயணிக்க, நம்மிடம் இருந்து ஆன்மா என்னும் ஒளியை மறைத்துக்கொண்டு இருக்கும் மும்மலங்களான ஆணவம், மாயை, கன்மம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கும் என உணர்தேன்.
மேலும் மும்மலங்களின் ஒழிப்பை, 108 ருட்ராஷங்கள் அடங்கிய ஜபமாலையுடன் செய்யும் குரு மந்த்ரஜபம் துரிதப்படுத்தும். இப்படி குரு மந்த்ர ஜபம் செய்யச்செய்ய ஒரு கட்டத்தில் நம் பாவபுண்ணியங்கலெல்லாம் ஒழ்ந்துவிடும். இவையெல்லாம் கடந்து வந்தால் குருவருளால் ஆன்மா ஒளிபெற்று முக்தி கிட்டும் .

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முக்தியே
- திருமந்திரம் 1598

அன்புடன் ரா.தி.

Wednesday, January 31, 2018

கிரகணம் சில கேள்விகள்

கிரகணம் என்றால் என்ன?
சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழுது கிரகண நேரத்தில் சூரியனின் ஒளி மறைக்கப்பட்டால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் மறைக்கப்பட்டால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறார்கள்.

கிரகணத்தின் முக்கியத்துவம் என்ன?
பூமியினால் ஆனது நம் உடல். சந்திரனால் ஆனது நம் மனது. சூரியனால் ஆனது ஆன்மா. இவை மூன்றும் வான மண்டலத்தில் ஒருங்கிணையும் பொழுது, நம் உள்ளேயும் ஒன்றிணைகிறது. யோகிகள் பல பயிற்சிகள் செய்து அடைய வேண்டிய உடல்,மனம், ஆன்ம ஒருங்கிணைப்பை கிரகண சூழல் தாமாகவே நிகழ்த்துகிறது. இயல்பு வாழ்க்கை நிலையிலேயே கிரகண காலத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உயர் ஆன்மீக நிலையை அடைய கிரகண காலம் பயன்படுகிறது.

கிரகண காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
இயல்பாக நாம் செய்யும் செயல்கள் ஒரு பங்கு விளைவை ஏற்படுத்தும் என்றால் கிரகண காலத்தில் செய்யும் செயல் ஆயிரம் மடங்கு பலன் தரும்.

நம் ஐந்து உணர்வு உறுப்புகளாலும் வெளிமுகமாக செய்யும் செயலை தவிர்த்து உள் முகமாக முயற்சி செய்ய வேண்டும். உணர்வுகள் உள் குவிக்கப்பட்டால் அவை ஆயிரம் மடங்கு குவிந்து தியானம் உருவாகும். இதுவே ஐந்து உணர்வுகளும் சிதறி வெளி முகமாக இருந்தால் அயிரம் மடங்கு சிதறி பாதிப்பை உண்டாக்கும்.

கிரகண காலத்தில் இறை நாமம் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மந்திர தீக்‌ஷை பெற்றவர்கள் மந்திர ஜபம் செய்யலாம். ப்ராணாயமம் மற்றும் தியானம் செய்யலாம். இதனால் மனம் குவிந்து பெரும் தியானம் நிகழும்.

கிரகண காலத்தில் கோவில்கள் மூடி விடுகிறார்களே? கடவுளே கிரகண காலத்தில் சக்தி இழப்பார் என்பதாலா?

கிரகண காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாக பார்ப்பதால் ஏற்படும் விளைவு இது. இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் கலாச்சாரம் வளர்க்கும் இடமாகவும் இருந்தது. ஆடல் பாடல் மற்றும் மொழி வளர்ச்சிக்கு அடையாளமாக இருந்தது. அதனால் கிரகண கால கட்டத்தில் நம் ஐம்புலனுக்கு ஓய்வு கொடுத்து உள் முகமாக திருப்ப வேண்டும் என்பதால் கோவில்களை அடைத்தனர். இதுவே வட நாட்டில் கிரகண காலத்தில் கோவில்கள் அடைக்கப்படுவதில்லை. காரணம் அங்கே கோவில்கள் வழிபாட்டிற்கு மட்டுமே இருந்தது.  மேலும் பல்வேறு ஜீவ நதிகள் இருப்பதால் அதன் அருகே நீராடி ஜபம் செய்ய அவர்களுக்கு வசதி இருப்பதும் ஒரு காரணமாகும்.

உங்கள் நண்பரை அவரின் அலுவலகத்தில் சென்று சந்திக்க செல்கிறீர்கள். அலுவலகம் பூட்டி இருக்கிறது... அந்த நண்பர் உங்கள் வீட்டிலேயே உங்களுக்காக காத்திருக்கிறார் அவர் தன் சக்தியை இழந்துவிட்டார் என அர்த்தமா? கிரகண காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் இறையாற்றல் தன் தனித்தன்மையை இழப்பதில்லை. இறையாற்றல் நமக்குள் இருக்கிறது என உணரும் காலமே அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண நாட்கள் என புரிந்துகொள்ளுங்கள்.

கிரகண காலத்தில் உணவுகள் நஞ்சாக மாறுகிறதா?
கிரகண காலத்தில் கதிர்வீச்சு வருகிறது. உணவில் கதிர்வீச்சு ஏற்பட்டு அது கெட்டுப் போகிறது. கர்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்பது போன்ற விஷயங்களின் பின்புலத்தை ஆராயாமல் பலர் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.  மேல் சொன்ன காரணத்தை ஆராய்ந்தால் இதன் பின்புலம் புரியும். கிரணகாலத்தில் ப்ராணாயமம், ஜபம், தியானம் செய்ய வேண்டி இருப்பதால் அந்த நேரத்தில் உணவு சாப்பிடக் கூடாது. சாப்பாடு உடலில் இருக்கும் சமயம் நம் சக்தி ஜீரணத்திற்கு செல்லுமே தவிர ஆன்மீக பயிற்சிக்கு செல்லாது. 

தினமும் கூட மூன்று வேளை உணவு சாப்பிடும் நேரத்தை கவனியுங்கள். பகலும் இரவும் இணையும் நேரமான சந்தியா(இணைவு) காலத்தில் உணவு சாப்பிடக் கூடாது என்கிறது நம் கலாச்சாரம். சந்தியா காலம் போலவே இதுவும் இணைவு காலம் தான். அதனால் அந்த நேரத்தில் ஆன்மீக பயிற்சி செய்து உணவை தவிர்க்க வேண்டும். இதை தவிர உணவு கெட்டு நஞ்சாகும் , கதிர்வீச்சு என்பது எல்லாம் நம்மை ஆன்மீக பயிற்சிக்கு திருப்ப சொல்லும் பயமுறுத்தும் கருத்துக்கள். பூச்சாண்டிக்கு பயந்து உணவு சாப்பிட்டு வளர்ந்த நாம் , இப்பொழுது கிரணகத்திற்கு பயந்து சாப்பிடுவதில்லை..!

உணவு சாப்பிடும் பொழுது நம் ஐந்து புலன்களும் வெளிமுகமாக இருப்பதால் கிரகண காலத்தில் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். உடல் உறவு, உணவு , சினிமா பார்த்தல் மற்றும் விளையாட்டு இவை நம் புலன்களை வெளிமுகமாக திருப்பிவிடும். அதனால் ஐந்து புலன்களும் சிதறி நம் கட்டுப்பாடுகளை இழக்க நேரிடும்.

முன்பு காலத்தில் சூரிய கிரகண காலத்தில் இயற்கை ஒளி இழந்து இரவு போல அனைத்தும் இருளாக இருக்கும்.

வெளிநாடுகளில் கிரணத்திற்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே?
பல நூறு வருடங்களுக்கு முன்பே பாஸ்கரர், ஆரியபட்டர் போன்றவர்களும் அதற்கு முன்பும் கிரகண கால ஏற்படும் காலத்தை துல்லியமாக கணித்து அதன் அடிப்படையில் பஞ்சாங்கம் உண்டாக்கியவர்கள். அதன் பின் வந்த அறிஞர்கள் கிரணத்தை மேலும் ஆய்வு செய்து அதன் பயன்களை வெளிப்படுத்தினார்கள். மேல்நாட்டினர் இன்னும் கிரகண கணக்கையே முழுமையாக அறியவில்லை. அதனால் நாம் பின்தங்கியவர்கள் அல்ல. அவர்களே மிகவும் பின் தன்ங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

விஷேஷ நாளான பெளர்ணமி, தைபூசம் (31-01-2018) அன்று கிரகணமும் வருகிறதே இதில் ஏதேனும் பிரச்சனைகள் வருமா?
மேலை நாட்டினர்கள் பற்றி உயர்வாக சொன்னீர்கள் அல்லவா? அவர்களின் கல்வி கலாச்சாரத்தை பின்பற்றியதால் வந்த வினையே இது. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் சூரிய கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று அமாவாசையாகவும், சந்திர கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று பெளர்ணமியாகவும் இருக்கும். இதுவே வானிலை நியதி. நாம் மேலைநாட்டு வானிலை படித்ததன் விளைவு நம் சிந்தனைகளை தொலைத்துவிட்டோம். அதனால் சந்திரகிரகணம் வர வேண்டுமானால் அன்று பெளர்ணமியாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

கிரகணம் இன்று கடகம்-  மகரம் போன்ற ராசிகளுக்கும் சில நட்சத்திரத்திற்கும் பிடிக்கும் அதனால் அர்ச்சனை செய்து நிவிர்த்தி பூஜை செய்ய வேண்டும் என ஆலயத்தில் எழுதி இருப்பதை பார்த்தேன். அதன் அடிப்படையில் கிரகணம் முடிந்து சென்று அர்ச்சனை செய்யலாமா?

ஜோதிடம் இவ்வாறு சொல்லுவதில்லை. சிலர் வழிபாட்டு நம்பிக்கையாக இதை செய்கிறார்கள். அந்தணர்கள் முன்னோர்களை வழிபடுவார்கள். தாந்த்ரீகர்கள் வேறு வகையாக வழிபடுவார்கள். உங்களின் நம்பிக்கை மற்றும்  குருவின் வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படுங்கள்.

இன்று தெரியும் சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய நிலவாகவும் நீல நிறமாகவும் தெரியும் என சொன்னார்களே?
நம் நாட்டில் ஆறு வகையான பருவ நிலை இருக்கிறது. ஒரு பருவ நிலை முடிந்து அடுத்த பருவ நிலை துவங்கும் காலத்தில் ஏற்படும் பெளர்ணமி நிலவு பெரிதாக இருக்கும். இதற்கு பூமியின் சுற்றுப்பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் ஒரு காரணமாகும்.
மற்றபடி பெரிய நிலவு , நீல நிறம் என்பதெல்லாம் கற்பனையே. நாம் வசிக்கும் இடத்திறின் தட்பவெட்பம், பருவ நிலை மாறுபாடுகளை பள்ளிக்கல்வியில் சேர்க்காமல் விண்டர், சம்மர் என படிப்பதால் வரும் குழப்பமே இது.

கிரகணம் பற்றிய பிற கட்டுரைகள் : http://vediceye.blogspot.in/2009/07/blog-post_11.html

Wednesday, June 1, 2016

ஜெர்மனியில் கஜமுகன்

இளங்குளிருடன் பெர்லின் நகர காலை விடிந்தது. நான் தங்கி இருந்த அறையின் ஜன்னல் திரையை திறந்து காலை நேரத்தை ரசிக்க துவங்கிய எனக்கு அதிர்ச்சி. என் அறையிலிருந்து பார்க்கும் தூரத்தில் ஒரு  ராஜ கோபுரம் கம்பீரமாக தெரிந்தது. இது பெர்லினா அல்லது கும்பகோணமா என ஒரு முறை என்னை சரி பார்த்துக் கொண்டேன்.

ஐரோப்பிய வரலாற்றில் ஜெர்மனியின் பங்கு மிக அதிகம். உலக அரசியல் மாற்றத்திற்கும் ஜெர்மனியர்கள் பல்வேறு வினைகளை செய்து இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக கிருஸ்துவ மத பிடியில் இயங்கி வந்த ஜெர்மனி உலகப்போர் சமயத்தில் விடுபட்டு இப்பொழுது பின்புலத்தில் மட்டும் மத அரசியலை வைத்துக்கொண்டு இருக்கிறது. புரட்டஸ்டண்ட் கிருஸ்துவம் தோன்றியது இங்கே என்பதால் பெரும்பான்மையானவர்கள் இந்த பிரிவில் இருக்கிறார்கள். உலகப்போருக்கு பின்பும்,  1960க்கு பிறகும் பலர் எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் சுப்பாண்டியின் பாணியில் சொல்வதேன்றால் ‘விலையில்லா யோசிப்பவர்களாக’ (Free Thinker) இருக்கிறார்கள்.

யூத கோவில்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் என பல மதவழிபாட்டுக்கூடங்கள் இருந்தாலும் இன்று வரை நம் கலாச்சாரத்தின் அடிப்படையில் கோவில்கள் இல்லை. அதற்கும் இந்தியர்கள், இந்துக்கள் குறைவு என சொல்லிவிட முடியாது. தனியாக பல இந்து ஆசிரமங்கள் வழிபாட்டுக்கூடங்களை வைத்துள்ளன. அவைகளை ஆகம சாஸ்திர கோவில்கள் என கூற முடியாது. இலங்கை தமிழர்களால் சில தனிக்கோவில்கள் உள்ளன. தனியாரால் கட்டப்பட்டு நம் ஆட்களால் வணங்கப்படும் முருகன் கோவில் ஜெர்மனியில் உண்டு. ஆனால் இவை அனைத்துக்கும் ஜெர்மனிய அரசு எந்த உதவியும் செய்தது இல்லை.  வழிபடவும், வழிபாட்டு மையம் துவங்கவும் ஜெர்மன் அரசு அனுமதி மட்டும் அளித்துள்ளது.

சில வருடங்கள் முன்னால் அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்தது. வேறு என்ன எல்லாம் தேர்தல் கால அறிவிப்புதான். ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில் ஒரு பூங்காவின் அருகே இடம் ஒதுக்கினார்கள். இலங்கை தமிழர்கள் அதிகம் கொண்ட பகுதி என்பதால் அவர்களின் ஆதரவுடன் ஓர் சங்கம் உருவாக்கி தமிழ் கலாச்சார அடிப்படையில் கோவில் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெர்லின் நகரின் மிக அதிக மக்கள் கூடும் இடத்தில் கோவில் அமைவது மகிழ்ச்சியை அளித்தது.


யானை முகன் விநாயகருக்கு திருக்கோவில், ராஜ கோபுரத்துடன் மிக அற்புதமாக உருவாகி வருகிறது. மாமல்லபுரத்திலிருந்து ஸ்தபதி குழு பணி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வந்தேன்.  விரைவில் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிந்து மகிழ்ந்தேன்..

இனி வரும் நாட்களில் ஜெர்மனியில் காலை நேரத்தில் ஸ்பீக்கர் அலறலுடன்...விநாயகனே வினை தீர்ப்பவனே...என சீர்காழி கோவிந்தராஜன் பாடுவார்...

Sunday, March 6, 2016

காசி பயண அனுபவங்கள் - 2016

        இந்த வருடம் காசி பயணம் திட்டம் வகுக்கப்படாமல் நடந்தது. ஐந்து மாதம் முன்பே துவங்கும் திட்டங்கள், ஜனவரி முதல் வாரத்தில் துவங்கி ஜனவரி கடைசி வாரத்தில் முடிந்தது.

  இந்த வருடம் காசி பயணம் வேண்டாம் என முடிவில் இருந்தேன். நான் முடிவு செய்தால் போதுமா? கால பைரவர் அல்லவா நான் வருவதையும் காசியிலிருந்து கிளம்புவதையும் முடிவு செய்கிறார்...!

சில கோவை மாணவர்கள் மற்றும் பல சிங்கை மாணவர்களுடன் என் பயணம் துவங்கியது. அங்கே நிகழ்ந்தவைகளை திரு.கோளப்பன் தமிழிலும், திரு ராம்கோபால் ஆங்கிலத்திலும் நமக்காக தந்திருக்கிறார்கள்.

My Kasi Experience Ram gopal
 

அடுத்து இமாலய மலையை நோக்கி பயணம்....இறையருள் இமையத்தை உணர்த்தட்டும்...!





Thursday, September 24, 2015

முரண்பட்ட குரு

காலையில் பகவத் கீதை வகுப்பு முடிந்ததும் ரிலாக்ஸாக இருந்த குருவிடம் வந்தான் சுப்பாண்டி.

குருஜி ஒரு சந்தேகம் என்றான்...

சொல்லுப்பா என்பது போல பார்த்தார் குருஜி.

“....சில தினத்திற்கு முன் பகவத் கீதை வகுப்பில் அவர் அவர் நிலைப்பாட்டுக்கு ஏற்ப ஒரு பிறப்பிலே பல பிறப்பிலோ இறைவனை அடைகிறார்கள், உதாரணமாக ஒரு ஊரை அடைய சிலர் நடந்து செல்லுகிறார்கள் சிலர் வாகனத்திற் செல்லுகிறார்கள் என சொன்னீர்கள். ஆனால் இன்று பதினாறாம் அத்தியாயத்தில் இதே பிறப்பில் இறைவனை அடைய முடியும் என சொல்லுகிறீர்களே ஏன் இந்த முரண்பாடு? நீங்கள் தான் சில நேரம் முரண்பாட்டுடன் பேசுவீர்கள் என நினைத்தேன். பகவான் கிருஷ்ணரும் இப்படி முரண்படுகிறாரே?” என கேட்டான் சுப்பாண்டி.



சுப்பு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு வழிப்போக்கர் தெருவில் இருப்பவரிடம் கேட்டார், ஐயா இந்த பக்கத்து ஊருக்கு செல்ல எத்தனை நேரம் ஆகும்? தெருவாசி ஒன்றும் பேசாமல் அவரை பார்த்தார். மீண்டும் எத்தனை நேரம் ஆகும்? என கேட்டார். தெருவாசி ஒன்னும் சொல்லவில்லை. வெறுப்படைந்த வழிப்போக்கர் நடக்க துவங்கினார். உடனே அவரை துரத்திக்கொண்டு வந்த தெருவாசி..இன்னும் 30 நிமிடத்தில் சென்று விடலாம் என சொன்னார். வழிப்போக்கர் அதை அங்கேயே சொல்லி இருக்கலாமே என கேட்க, தெருவாசியோ நீங்கள் எத்தனை வேகமாக நடப்பீர்கள் என எனக்கு தெரியாது. நீங்கள் நடந்து சென்ற வேகத்தை வைத்து சொன்னேன் என்றார்.

மெல்லிய புன்னகையுடன் குருஜி விளக்க துவங்கினார், “சுப்பு,  ஒருவர் தெருவில் காருடன் நிற்கிறார். அவரிடம் ஐயா இந்த ஊருக்கு செல்லும் வழி சொல்லுங்கள் என கேட்டு அதன் படி உனது வாகனத்திலோ அல்லது நடந்தோ செல்லுகிறாய் என்றால் அது உன் பொறுப்பு.

இதே ஐயா என்னை உங்கள் காரில் கொண்டு சென்று விடுங்கள் என கேட்டால் அது உன் பொறுப்பல்ல கார் வைத்திருப்பவர் பொறுப்பு. அது போல இறைவனை அடைய நானே முயற்சிக்கிறேன் என்றால் ஒரு பிறப்போ பல பிறப்போ ஆகும். அது உன் முயற்சியும் அதனால் ஏற்படும் அனுபவத்தை பொருத்தது. இதுவே இறைவா நான் உன்னை சரணடைகிறேன் என்னை முக்தி அடைய வை என கேட்டால் அது இறைவன் பொறுப்பு உடனே அவர் இப்பிறவியிலேயே அதை செய்துவிடுவார்..! ”

 குருவும் இறைவனும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள். அதை அவர்கள் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா இல்லை உன் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா என நீ பார்க்காத வரை குரு முரண்பாடாக பேசுவதை போலவே இருக்கும்.

சுப்பாண்டிக்கு புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது...

Friday, April 17, 2015

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க....

அன்று சுப்பாண்டியுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தது.  சொன்ன நேரத்தை விட வழக்கம் போல அரைமணி நேரம் தாமதமாக வந்தான்.

"என்ன சுப்பு லேட்? நம்மளை சந்திக்க காத்திருக்கறவங்க என்ன நினைப்பாங்க? " என கேட்க..எதையும் காதில் வாங்கதது போல...வண்டியை கிளப்பினான்.

சில நிமிட பயணத்தில் ஏதே யோசனையுடன் வண்டி ஓட்டியவன் என்னை சீரியஸாக பார்த்து திரும்பி..."சாமி.. இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு சாமி ?"

"இப்ப லேட்ட போனா அங்க பேசுவாங்க பாரு அவங்க தான் அது" என சொல்லி நிறுத்திக் கொண்டேன்.


இருந்தாலும் மனசு கேட்கவில்லை, அவன் ஏதோ தெரிந்த கொள்ள கேட்டிருப்பானோ என நினைத்து விவரிக்க தொடங்கினேன்...


"சுப்பு... அந்த நாலு பேரு யாருனு பலர் பல வித விளக்கம் கொடுத்திருக்காங்க....சிலர் மாதா, பிதா, குரு,தெய்வம் இவங்க தான் அந்த நாலு பேருனு சொல்றது உண்டு.

தாய், தந்தையை  இப்ப யாரு மதிக்கறா? முதியோர் இல்லம் பெருகிட்டு வரும் இந்த காலத்தில அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கேட்க யார் இருக்கா? தாய் தந்தைக்கே இந்த நிலைனா...குருவையும் தெய்வத்தையும் பத்தி சொல்ல வேண்டியது இல்லை. தாய் தந்தைக்கு முதியோர் இல்லம் போல, குருவுக்கு ஆஸ்ரமம், தெய்வத்திற்கு கோவில்னு இவன் ஒதுக்கிவச்சு வாழும் மனிதன் இவங்க நாலு பேர் பேசும் பேச்சை முக்கியமானதாக எடுத்துக்குவாங்கலானு தெரியலை. இதைவிட இவங்க நாலு பேரும் நாலு விதமா பேச மாட்டாங்க. நம்ம முன்னேற்றத்தை பத்தி மட்டும் பேசுவாங்க. அதனால அந்த நாலு பேரு இவங்களா இருக்க சாத்தியம் இல்லை.

அந்த நாலு பேரு யார்னு ஸ்ரீ க்ரிஷ்ணர் கீதையில் சொல்றார். அதை வேணா உனக்கு சொல்றேன்.



பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம். ஆர்த்தன், ஜிக்யாசூ, அர்த்தார்த்தி, ஞானி இவங்க்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ க்ரிஷ்ணர்.

இதுல ஆர்த்தன் சொல்லப்படறவங்க... அவங்களுக்கு பிரச்சனை வந்தாத்தன் கடவுள் ஞாபகம் வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சனைனா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்த்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க

அர்த்தார்தி சொல்லப்படறவங்க...தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும்...சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் ப்ரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க.  இவங்க வாழ்க்கை சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்ட இவங்களுக்கு போதும்.

ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ...இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம...கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு...ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை.....இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அருள்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க்கையை கடந்த வேண்டுதல் அவங்களோடது.

கடைசியா ஞானி....இவங்க எதையும் வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு ..கடவுளுக்கே வரம்  கொடுப்பாங்கலாம்.

எந்த நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் ஸ்ரீக்ருஷ்ணர். அனைவரும் எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனு சொல்றார்.

இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட.... அதனால இதையே பழமொழியா மாறி வந்திருக்கலாம். ..."


சாதாரணமா  சுப்பாண்டி  கேட்ட கேள்விக்கு பகவத் கீதையிலிருந்து தகவல் எடுத்து சொன்ன திருப்தியில் அவனை பார்த்தேன்.

"நீங்க இந்த நாலுல எது சாமி? "என்றான் சுப்பாண்டி.

வேற யாரு.......ஆர்த்தன் தான் - சாமி இந்த சுப்பாண்டி இப்படி இருக்கானே இவனை சரியாக்கி என்னை காப்பத்துனு உன்னால பிரச்சனை வரும் போது எல்லாம் கடவுளை வேண்டிக்கறனே...அதனால ஆர்த்தன், என சொல்லிவிட்டு அவனை பார்த்தேன்.

கொஞ்சம் லேட்டான பதட்டத்தில இருப்பீங்களேனு ஒரு கேள்வியை கேட்டா, என்ன என்னமோ மொக்க போடறீங்க்களே சாமி..என சொல்லி வண்டியை 'ஓட்டுவதையும்' தொடர்ந்தான் சுப்பாண்டி.

Monday, November 24, 2014

வேதகால வேளாண்மை பகுதி 2

பஞ்ச அங்கங்கள் என கூறப்படும் வாரம், நட்சத்திரம் யோகம் , திதி மற்றும் கரணம் என்பவையே பஞ்சாங்கம் என்பதாகும். பஞ்சாங்கம் என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வானமண்டலத்தில் இருக்கும் இடமும் அவை பயணிக்கும் இடைவேளி கொண்டு கணிக்கப்படுபவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இன்று பெளர்ணமி என திதியின் வரிசையில் கூறினால் சூரியன் சந்திரன் இருவரும் 180 டிகிரியில் எதிர் எதிராக இருக்கிறார்கள் என அர்த்தம்.

 நட்சத்திரத்தில் அஸ்வினி என கூறினால் இன்று சந்திரன் முதல் ராசியான மேஷத்தில் ராசிமண்டலத்தில் பயணிக்கிறார் என பொருள் கொள்ளவேண்டும்.  இந்த ஐந்து விஷயங்களில் வாரம், நட்சத்திரம் ஆகியவற்றை சென்ற பகுதியில் பார்த்தோம். இப்பொழுது யோகம் என்பதை விவரிக்கிறேன்.

யோகம் என்ற வார்த்தையே இதன் செயலை உணர்த்தும். நல்லதொரு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நட்சத்திர யோகத்தை பயன்படுத்துவது சிறந்தது. இந்த நட்சத்திர யோகம்  என்பது பஞ்சாங்கத்தில் காணப்படும் யோகத்தைக் காட்டிலும் வித்தியாசமானது. 

சூரியன் , சந்திரன் இவற்றின் இணைவால் 15 திதிகள் கிடைக்கின்றன. இதை மேலும் பகுக்கும் பொழுது 20 யோகங்கள் கிடைக்கிறது. யோகத்தைப் பகுத்தால் வருவது கரணம். ஆனால் வேதகால வேளாண்மைக்கு கிழமை, நட்சத்திரம், திதி, நட்சத்திரம் யோகம் இவைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். யோகம் , கரணம் ஆகியவை மிகவும் குறுகிய கால அளவீடுகள் என்பதால் இதை பயன்படுத்துவதில்லை. மேலும் திதியை பிரதானமாக பயன்படுத்துவதால் திதியின் உட்பிரிவான யோகம்,கரணத்தை உபயோகிப்பது இல்லை.  ஆனால் பழைய வேளாண்மை ஜோதிட குறிப்பில் அனைத்தும் பயன்படுத்தி வந்தனர். முகூர்த்த சூடாமணி மற்றும் பிருஹத் ஜாதகத்தில் இருக்கும் குறிப்புகள் ஒரு விவசாயி முழுமையான ஜோதிடனாக இருந்தான் என்பதை காட்டுகிறது. 

அன்றைய வாழ்வியல் சூழலில் பள்ளி கல்வியில் ஜோதிடம் / வான சாஸ்திரம் ஒரு பாடமாக இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.  ஆகையால் இங்கே நான் குறிப்பிடுவது வேதகால வேளாண்மையின் முழு தகவல் அல்ல. ஆனால் ஒன்றும் தெரியாமல் உயிரற்ற வேளாண்மை செய்வதற்கு வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதியை வைத்து பல அதிசயங்களை செய்யலாம்.

நட்சத்திர யோகம்  என்பது ஒரு குறிப்பிட்ட (வாரம்) கிழமையில் வரும் நட்சத்திரத்திற்கு இடையே உள்ள இணைவையும் மேன்மையையும் காட்டும். நட்சத்திர யோகங்களில் முக்கியமானது அமிர்த , சித்த , மரண யோகங்கள் இவற்றைக் கொண்டும் வேளாண் பணிகளை செய்யலாம்.

அமிர்த யோகம் :

"மிருதம் " எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு இறப்பு என்று பொருள். "அமிர்தம்" என்றால் இறவா (இறப்பற்ற நிலை) என்று பொருள். எனவே இந்த நாளில் உரமிடுதல் பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற பணிகளைச்  செய்யலாம். 

சித்த யோகம் :

நினைத்த காரியத்தில் வெற்றியடைவதை "காரிய சித்தி" அடைதல் என்பார்கள். 

சித்தி அடைந்தவர்கள் சித்தர் என அழைக்கபடுவார்கள். நமது எண்ணம் நிறை வேற இந்த நாளை பயன்படுத்துவது சிறந்தது.  இந்த நாளில் நீர் பாசன முறையை திட்டமிடுதல் , வேளாண் பணிகளை திட்டமிடுதல் மற்றும் விதைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

மரண யோகம் :

"மரணம்" என்பது இங்கு இறப்பை குறிப்பதில்லை. இந்த நாள் கேடு பலனை கொடுக்கும் என்பது மூடநம்பிக்கை எனலாம். மரணம் என்பது தவறானவற்றை வெளியேற்றுவதை குறிக்கும். களை எடுத்தல், தோட்டத்தை சீர் செய்தல், செடிகளை செதுக்குதல்  ஆகிய கழிவு பணிகளை மரண யோகத்தில் செய்யலாம்.

திதி :

சூரியனும், சந்திரனும்  சூரிய மண்டலத்தில் இணையும் புள்ளியையும், இடைப்பட்ட பாகையையும் குறிப்பது திதி. பஞ்சாங்கத்தில் இருக்கும் பஞ்ச அங்கங்களில் திதிக்கு என சில முக்கியத்துவங்கள் உண்டு.

புராண காலங்களில் கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார் என்றும் ராமர் நவமியில் பிறந்தார் என்றும் திதியை சிறப்பித்து கூறுவார்கள். இதன் மூலம் திதியின் முக்கியத்துவத்தை அறியலாம். திதிகள்  மொத்தம் 15, அமாவாசை துவங்கி பௌர்ணமி வரையிலும் - பௌர்ணமி  துவங்கி அமாவசை வரையிலும் 30 நாட்களுக்கு திதிகள் இருமுறை வருகின்றன. இந்த இருகாலங்களும் முறையே சுக்கில பட்சம் (வளர்பிறை)  மற்றும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) எனலாம். திதிகளும் அதற்குறிய வேளாண் பணிகளும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.


வேளாண் பணிகளை மேற்கண்ட வரிசையிலேயே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்கு ஏற்றது போல திதி வரும் நாளில் செய்தால் நல்லது. சஷ்டி, பஞ்சமி , தசமி, சதுர்தசி இந்த நாட்களில் உரமிடுதல் அவசியம். அமாவசை நாளில் பயிர்களுக்கு அதிகமாக நீர் உற்றுவதும் , பயிர்களுக்கு பௌர்ணமி அன்று நீர் ஊற்றாமல் இருப்பதும் நன்று. ஏகாதசி நாளில் பூமிக்கு அடியில் விளையும் (கிழங்கு- கடலை) பயிர்களை மட்டுமே பாதுகாக்க வேண்டும். பூமிக்கு மேலே விளையும் பயிர்களை ஏகாதசி அன்று பண்படுத்தினால்  பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். 

இன்று கூட அமாவாசை நாளில் பெரும்பாலும் வேளாண்மை பணிகளுக்கு விடுமுறை விடுவது நம் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. இது ஏன் என பலருக்கு தெரிவதில்லை. உண்மையில் நம் முன்னோர்கள் பஞ்சாங்க நுணுக்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான சான்றே இது. பெளர்ணமி அன்றும் அனேகமாக ஒவ்வொரு மாதமும் வழிபாட்டு நாளாக வருவதால் விடுமுறையாக அமைந்துவிடும். உதாரணமாக சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து மாதமும் பெளர்ணமியும் வழிபாட்டுக்கு உரிய நாளாகி விவசாய பணிகளுக்கு விடுமுறையாகி விடும். ஆக அமாவாசை பெளர்ணமி அன்று பூமியின் ஈர்ப்பு விசை ஏற்ற தாழ்வில் இருக்கும் என்பதே விடுமுறைக்கான காரணம்.

செடிகளை சீரமைத்தல், களை எடுத்தல் ஆகிய வேளாண் பணிகளுக்கு  திரியோதசி திதி  சிறந்த நாள்.  மேற்கண்ட தகவல்களைக் கொண்டு சிறந்த முறையில் வேதகால வேளாண்மையை செயல்படுத்த முடியும். கிரக ஆற்றல் இலவசமாக கிடைக்கும் ஒன்று, இதை தக்க முறையில் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையிலிருந்து வேதகால வேளாண்மை எனும் புதிய பரிமாணத்திற்கு மாற்றம் அடையுங்கள். உங்கள் வேளாண்மை யுக்தியை புதிய பாதையில் அமைத்து உலகை வளமாக்குங்கள்.

Wednesday, November 19, 2014

வேதகால வேளாண்மை - பகுதி 1

ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஜோதிட சாஸ்திரத்தை தொகுத்துள்ளேன். அனைத்து மக்களுக்கும் புரியும்படியாக விவசாய விஷயங்களை எளிமையாக கொடுத்துள்ளேன். வேதகால வேளாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.அதில் மேலும் ஆழமாகவும் விவசாய குறிப்புகளுடனும் தகவல்கள் இருக்கும். 

பழங்காலம் தொட்டு ஜோதிடமும் முஹுர்த்த சாஸ்திரமும் விவசாயத்திற்காகவே கண்டறியப்பட்டது. நம் ப்ரணவ பீடத்தில் 2007ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு என தனியே பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். வேளாண்மை பல்கலைகழகத்தில் இது பாடமாகவும் இருக்கிறது. 

இந்த வருடம் பகுத்தறிவு கொண்டவர்கள் என கூறும் பலர் வேளாண்மை பல்கலைகழகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் என கேள்விபட்டேன். நம் கலாச்சாரத்தை  இழிவுபடுத்த மேலை நாட்டின் கலாச்சாரத்தை தாங்கிபிடிக்கும் பகுத்தறிவாளிகள், மேலை நாட்டில் பல வருடமாக BIO Dynamics என பஞ்சாங்கம் கொண்டு விவசாயம் செய்கிறார்களே? அதற்கு மாநாடு வேறு உலகாளாவிய அளவில் நடக்கிறதே? அதற்கு என்ன விளக்கம் சொல்லுவார்கள்? இச்செயலை பார்த்தால் இவைகள் எல்லாம் வேறும் வெறுப்பறிவு பகுத்தறிவல்ல என்பது தெளிகிறது. இதனால் உண்மையை தெளிவுபடுத்தவே இந்த கட்டுரை தொடர். 
----------

ஜோதிட சாஸ்த்திரத்தை பல துறைகளில் பயன்படுத்தினாலும், தற்சமயம் வேளாண் துறையில் பயன்படுத்துவது குறைவே. இயற்கையில் கிடைக்கும் ஆற்றல்களை உபயோகித்து விவசாயம் செய்யும் முறையில் கிரக ஆற்றலை கொண்டும் விவசாயம் செய்யலாம். நம் முன்னோர்கள் இந்த ஆற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கு சான்றுகள் உண்டு.

இயற்கை விவசாயம் என்பது இயற்கையில் உள்ள சக்தியை , உயர் நிலையில் பயன்படுத்தி விளைச்சல் காண்பது என்கிறார்கள். நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சி கொல்லியைக் காட்டிலும் இயற்கையான பஞ்சகவ்வியம் மற்றும் தசகவ்வியத்தைக் கொண்டு வளப்படுத்துகிறார்கள். இந்த சிறப்பான முறையுடன், வேதத்தின் கண் எனக் கூறப்படும் ஜோதிட சாஸ்த்திரத்தையும் இணைத்து பயன்படுத்தினால் புதிய பரிமாணத்திற்கு வேளாண்துறை செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஜோதிட சாஸ்த்திரத்தை இயற்கை விவசாயத்துடன் இணைத்து பயன்படும் இந்த முறை "வேதகால வேளாண்மை"  எனலாம்.

ஜோதிடத்தை பயன்படுத்துவது என்றவுடன் கிரக ஆற்றலை மட்டும் பயன்படுத்துவது என நினைக்க வேண்டாம். ராசி மண்டலம், நட்சத்திர மண்டலம் மற்றும் இதர ஜோதிட குறியீடுகளான திதி, யோகம் என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பிரபஞ்ச ஆற்றலை முழுமையான முறையில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் சூட்சுமங்களை பின்வரும் பகுதிகளில் காண்போம்.

மேல்நாட்டில் சிலர், கிரக ஆற்றலை வேளாண்மைக்கு பயன்படுத்துகிறார்கள். இதற்கு "Bio-Dynamic" முறை என அழைக்கிறார்கள். இது முழுமையான முறை இல்லை. காரணம் , இந்திய ஜோதிட முறையைத் தவிர வேறு எந்த ஜோதிடமுறையிலும் நட்சத்திரங்கள்  எனும் கோட்பாடு இல்லை . நட்சத்திரங்கள் இல்லை என்றாலே திதி மற்றும் ஏனைய பஞ்சாங்க நுணுக்கங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் மேல்நாட்டினர் திதியை முழுமையாக பயன்படுத்தாமல் அமாவாசை, பௌர்ணமியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சனி, ராகு/கேதுவுடன் சந்திரனின் இணைவை ஆராய்கிறார்கள். இந்த முறையை பயன்படுத்தினால் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வேளாண் செயல்களைச் செய்ய முடியும்.


பஞ்சாங்கம்:

பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம். கிமு 5000  வருடத்திற்கு முன்பே பஞ்சாங்கம் கணிக்கும் முறை இருந்ததற்கு சாட்சிகள் உண்டு.  வேத சாஸ்திரத்தின் தோற்றத்தை காலம் எனும் பரிமாணத்தில் அடக்க முடியாது. அத்தகைய  தோற்றமும் முடிவும் இல்லாதது என  கூறப்படும் வேத சாஸ்திரத்தில் அதர்வண வேத பிரிவின் கீழ் "கணிதா" (Ghanitha) எனும் பகுதி  உள்ளது. இதில் கோள்களின் நிலையை துல்லியமாக கணிக்கும் பஞ்சாங்க கணிதம் கூறப்பட்டுள்ளது. வருடத்திற்கு பல கோடி செலவழித்து நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கோள்களின் நிலையை , வெள்ளைதாளும் - எழுதுகோலும் கொடுத்தால் நமது நாட்டு பஞ்சாங்க கணிதர்கள் சில மணி நேரத்தில் கணித்து விடுவார்கள்.

பஞ்சாங்கம் எனும் வடமொழி சொல்லை , ஐந்து அங்கங்களை பற்றி கூறும் நூல் என மொழிபெயர்க்கலாம். வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவையே இதன் பஞ்ச அங்கங்கள் அகும். நமது முன்னோர்கள் பஞ்சாங்கத்தை பயன்படுத்தி வேளாண்மை 
செய்து வந்தார்கள். இந்த முறையை எளிமைப்படுத்தி  நவீன கால வேளாண்மைக்கு ஏற்றவாறு அளித்துள்ளேன். ஜோதிடத்தில் கூறப்படும் கிரகம், நட்சத்திரம், திதி, யோகம் இவற்றை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த பத்து வருடங்களாக பஞ்சாங்கம் கணித்து வெளியிடுகிறோம். 

கிரகம் :

சூரிய மண்டலத்தில் நவகிரகங்கள் சுற்றிவருவது நமது பள்ளி நாட்களில் அறிந்தது தான். இதில் சூரியன் முதல் சனி வரை 7 கிரகங்கள் உருவமாகவும் , ராகு - கேது அருவமாகவும் (உருவமில்லாமல்) சூரிய மண்டலத்தில் உலா வருகிறது. இதை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே கணித்த  நம் முன்னோர்கள் , நவகிரகத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 கிரகங்கள் சூரியன் முதல் சனி வரை ஆட்சிசெய்கிறது. ராகு - கேதுக்கள் தனி ஒரு நாளை ஆட்சி செய்யாமல் ஏழு நாட்களிலும் சக்தியை வழங்குகிறது. சமஸ்கிருதத்தில் கிழமைகளை "வாரம்" என அழைப்பார்கள். வாரநாட்கள் அனைத்தையும் சமஸ்கிருதத்தில் கிரகப்பெயரால் சோம வாரம், மங்கள் வாரம் (திங்கள் கிழமை - செவ்வாய் கிழமை) என அழைக்கிறார்கள். ஒரு கிரகம் குறிக்கும் கிழமையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். 

உதாரணமாக திங்கள் கிழமை அன்று சந்திரனின் அலைவரிசை அதிகமாக இருக்கும்.   

வடமொழி காலண்டர், ஆங்கில காலண்டர் மற்றும் தமிழ் காலண்டர் அனைத்திலும் வார நாட்கள் அனைத்தும் ஒன்று போல  இருப்பதைக் கொண்டு கிரகத் தாக்கத்தின் முக்கியதுவத்தை அறியலாம். இதனை அறிந்த முன்னோர்கள் , அந்த கிரகம் குறிக்கும் வேலையை அதன் ஆற்றல் உள்ள கிழமையில் செய்து வந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என நிருபித்தனர். சனி - நீர் தன்மை கொண்ட கிரகம். அதனால் சனிக்கிழமை உடலில் நீர் சத்து அதிகரித்துக் காணப்படும். எனவே சனிக்கிழமைகளில் ஆண்களுக்கு எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்றார்கள். இதனால் நீர் தன்மையும் - எண்ணெய் தன்மையும் கலக்காமல் , தோல் பகுதி கழிவுகளை எண்ணெய் வெளியேற்றிவிடும். ஆனால் சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று இதைச் செய்தால் சூரியன் உஷ்ணத்தை குறிப்பதால் எண்ணெய் தோல்பகுதியில் இணைந்து கழிவாக மாறி நோய் உண்டாக்கும். 

கிரகங்கள் உடலில் இது போன்ற விளைவை ஏற்படுத்துவது போல தாவரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கிழமையின் அடிப்படையில் தாவரங்களை பராமரிப்பது அவசியம். கிரகங்கள் குறிக்கும் கிழமைகளும் அன்று செய்ய வேண்டிய வேளாண் பணிகளும்  பின்வருமாறு,


வேளாண் செயல்களுக்கு மட்டுமல்லாமல் பயிரிடப்படும் தாவர வகைகளும் கிரகம் சார்ந்து இருந்தால் நல்ல விளைச்சலைத் தரும்.

கிரகங்கள்  பயிர்வகைகள்

சூரியன் தானியம், கோதுமை
சந்திரன் அரிசி வகைகள்
செவ்வாய் மூலிகைச் செடிகள்
புதன் அவரை- துவரை, பருப்பு வகைகள்
குரு பழங்கள் , சதைபற்றுள்ள காய்கறிகள்
சுக்கிரன் பூக்கள், பழங்கள்
சனி கிழங்கு வகைகள் , தென்னை , எண்ணெய் வித்துக்கள்

கிரகத் தன்மைக் கொண்டு செய்யப்படும் செயல் வீணாகாது. மேலும் சில கிரகங்கள் மற்ற கிரகத்தின் தன்மைக்கு எதிர் தன்மை வாய்ந்தது. எனவே ஒரு கிரகம் ஆட்சி செய்யும் நாளில் அதற்கு எதிரான தன்மை உள்ள பணிகளையோ , பயிர்வகைகளையோ செய்தால் வேளாண்மை பாதிக்கும். உதாரணமாக செவ்வாய் அன்று செய்ய வேண்டிய பணிகளை வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ செய்தால் பயிர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புண்டு.  ஒரு கிரகத்திற்கு எதிர் தன்மை உள்ள கிரகம் எது என தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமில்லை. அதற்கு பதிலாக அந்த கிரகம் குறிக்கும் செயலை மட்டும் செய்தாலே மேன்மை கிடைக்கும்.

நட்சத்திரங்கள்

பிரபஞ்சத்தில் 27 நட்சத்திர கூட்டங்கள் உண்டு. இந்த நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களைக் கொண்டே கிரகங்கள் இயங்குகின்றன. எனவே கிரகங்களை காட்டிலும் நட்சத்திரங்களின் ஆற்றல் மிக முக்கியமானது. மின்சார பல்புகள் மின்னாற்றலில் இயங்குவதைப் போல கிரகம் , நட்சத்திர ஆற்றலில் இயங்குகிறது. எனவே நட்சத்திர ஆற்றலைக் கொண்டு வேளாண் செயல்களை செய்தால் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும். 

நட்சத்திரங்கள் 27 நட்சத்திர கூட்டங்களாக பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் ( 9X3=27 நட்சத்திரங்கள்) ஆட்சி செய்கின்றன.  கிரகங்களின் செயல்பாடுகளை  கொண்டு வேளாண் பணிகளை செய்ததைப் போல , நவகிரகங்கள் அதன் தாக்கத்தை இந்த நட்சத்திரங்களுக்கு அளிப்பதால் , விவசாய பணிகளை மேலும் சிறப்பாக செய்யலாம். நட்சத்திரங்களின் மூலம் கிரகங்கள் 

செயல்படுத்தும் வேளாண்மை பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


       வார நாட்களைக் கொண்டு வேளாண்மையை செய்யும் பொழுது ராகு - கேதுவின் செயல்களை முழுமையாக பயன்படுத்த முடியாது. ஆனால் நட்சத்திரங்களைக் கொண்டு வேளாண் பணிகளை செய்தால் ராகு - கேதுவை பயன்படுத்த முடியும். கிழமைகளை பயன்படுத்தும் பொழுது ஏழு தன்மைகள் மட்டுமே கிடைக்கும். கிழமையுடன் நட்சத்திரத்தை யும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிக கிரக அமைப்புகள் ( 27 நட்சத்திரம் X 7 வார நாட்கள் = 189) கிடைக்கும்.  

உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை , உத்திரம் , உத்திராடம் வந்தால் சூரியன் சம்மந்தப்பட்ட வேளாண் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். நட்சத்திரங்களுக்கும் கிழமைகளின் அதிபதிகளுக்கும் எதிர் - எதிர் தன்மை கிடையாது. உதாரணமாக செவ்வாய் கிழமையில் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்- விசாகம் - பூரட்டாதி அமைந்தால் செவ்வாய்க்கு உண்டான உழுதல், செடியை செதுக்குதல் போன்ற பணிகளையும் குருவுக்கு உண்டான விதைத்தல் , விதையை ஊர வைத்தல் , பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற இரு கிரகத்தின் வேலையையும் செய்யலாம். ஆகவே நட்சத்திரங்களையும் கிழமைகளையும் பயன்படுத்தும் பொழுது அதிகமான நற்பயன்களைப் பெற முடியும்.

(தொடரும்)

Wednesday, June 18, 2014

குரு பூர்ணிமா அழைப்பிதழ் 2014

குருவின் அருள்பெற்று ஆன்மீக உயர்நிலை பெற 
அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Friday, May 9, 2014

வாழ்த்தும் அதன் பின்புலமும்

                                                       


இரு மனிதர்கள் சமூகத்தில் சந்திக்கும் பொழுது பரஸ்பரம் வாழ்த்து சொல்லுக்கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் இந்த வாழ்த்தின் பின்புலங்களை யாரும் ஆய்வு செய்வதில்லை. ஒரு சமூகமோ அல்லது இயக்கமோ பரஸ்பரம் தங்களுக்குள் கூறும் வாழ்த்து செய்திகள் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை பற்றியதாக இருக்கும் என்கிறது மனோதத்துவ ஆய்வு.

தற்காலத்தில் குட் மார்னிங் அல்லது குட் டே என உங்கள் மேல் அதிகாரிகளை பார்த்து நீங்கள் சொல்லுவது எனது நாளை கெடுத்துவிடாதே என்பதன் உள்கருத்தாகும். ஆனால் அதை நாம் வெளிப்படையாக சொல்ல முடியாதே? அது போல மதங்கள் சார்ந்தவர்களும் இயக்கங்கள் சார்ந்தவர்களும் தங்களுக்கு கிடைக்காததையும் தேவையானதையுமே பரஸ்பரம் வாழத்தாக பகிர்ந்து கொண்டார்கள்.

உதாரணமாக  நமக்கு தெரிந்த சில மதங்களையும் அதன் வாழ்த்துக்களையும் பார்ப்போம். பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுவதையே இங்கே நான் குறிப்பிடுகிறேன்.

கிருஸ்துவர்கள் “அசிர்வாதம்” (Bless you) என சொல்லுவதுண்டு. ஏசு கிருஸ்து தனது இறுதி நாளில் ஏன் என்னை கைவிட்டீர் என கேட்டதன் காரணமாகவும், அனைவரும் ஆண்டவரின் ஆசி உண்டு என்பதற்காகவும் இப்படி வாழ்த்துகிறார்கள். 

இஸ்லாம் உருவான சூழல் போர் மிகு சூழல் என்பதால் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என வாழ்த்திக்கொண்டார்கள்.

இந்திய மதங்களான சைவமும், வைணவமும்  தென்னிந்தியாவில் ஏற்படும் பொழுது பொருளாதார பின்னடைவு என்பது மக்களின் தன்மையில் இருந்ததால் ‘நாராயணா’ என்றும் ’சிவாய நம’ என்றும் கூறிக்கொண்டார்கள். இதற்கு எல்லா வளமும் பெற்றுக என அர்த்தம் உண்டு.

நமஸ்கார், நமஸ்தே என்பது வடமொழியில் கூறும் வாழ்த்துக்கள். இதற்கு உண்மைக்கு(ஆன்மாவுக்கு) வணக்கம் என அர்த்தம். செல்வ செழிப்பாலும் சுக போகத்தாலும் இந்தியா திளைத்த காலத்தில், உனக்கு ஆன்மா என்ற ஒன்று உண்டு அதை உணரு என வாழ்த்தினார்கள். வேத வரிகளான ருத்ரத்தில் கூட ‘நமஸ்து அஸ்து பகவன்” என ஆன்ம ரூபமாக இருக்கும் இறைவனை வணங்குகிறேன் என்ற வரிகள் உண்டு.

ஜெர்மனியின் நாஜிக்கள் ‘ஹெயில் ஹிட்லர்’ என தங்கள் தலைவர் பெயரை கூறிக் கொண்டார்கள். தங்கள் தலைவனை யாரும் வாழ்த்தவில்லை என்பதே இவர்களின் வாழ்த்தாக வெளிப்பட்டது. இந்த வாழ்த்தை தற்சமய ஜெர்மனியில் சொன்னால் 4 வருட கடுங்காவல் தண்டனை கிடைக்கும். அத்தனை சக்தி வாய்ந்த வாழ்த்து இது. 2 மில்லியன் மனிதர்களை காவு வாங்கிய வாழ்த்து. 

எனக்கு தெரிந்த ஒரு ஆசிரமத்தில் பரஸ்பரம் பார்க்கும் பொழுது “நித்யானந்தம்” என்பார்கள். அவர்களுக்கு நித்யமும் ஆனந்தம் கிடைத்ததா என தெரியவில்லை...!

இப்படியாக தங்களுக்கு இல்லாத ஒன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமே வாழ்த்தாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. யாரையாவது பார்க்கும் பொழுது ஷம்போ மஹாதேவா என  வாழ்த்துவேன். இதற்கு மேலான இறை நிலைக்கு வணக்கம் என்று அர்த்தம்.  ஷம்போ என்பது வெற்று கூச்சல் அதற்கு அர்த்தம் இல்லை. பாமரத்தனமாக சொல்லவேண்டுமானால் இறைவனுக்கு ஓ போடு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படி சொல்வதனால் நமக்குள் ஏற்படும் ஸ்வாச மாற்றம் நமக்கு அறிவு தெளிவை ஏற்படுத்துகிறது. இது என் நம்பிக்கை மட்டுமே.

இந்த வாழ்த்து செய்த வேடிக்கையை கூறுகிறேன் கேளுங்கள். நான் வெளிநாடு செல்லும் நேரத்தில் எனது தொலைபேசியை தானியங்கி பதில் அளிக்கும் நிலையில் (auto voice reply) வைத்துவிட்டு செல்லுவேன். அப்பொழுது யாராவது அழைத்தால் “ஷம்போ மஹாதேவா நான் இந்த நாட்டுக்கு சென்று இருப்பதால் இரண்டு வாரம் கழித்து அழைக்கவும்” என குரல் ஒலிக்கும். அது நானே பேசி பதிவு செய்தது தான். 

இந்தியாவில் சிலருக்கு இந்த விஷயம் புதிது என்பதால் நான் ஊருக்கு வந்தவுடன் பேசும் பொழுது, “ நான் ரெண்டு வாரம் முன்னாடி கூப்பிடிருந்தேன், உங்க அஸிஸ்டெண்ட் மஹாதேவன் ஒருத்தர் தான் பேசினார்” என்பார்கள். அந்த நேரத்தில் எப்படி சமாளிப்பது என குழம்பிப்போவேன். நானும் எத்தனை நாள் தான் சிரிக்காத மாதிரியே நடிக்கிறது? :)

நீங்கள் கூறும் வாழ்த்துக்களை உணர்ந்து கூறுங்கள் என்பதற்கே இதை இங்கே பதிவு செய்கிறேன். இயந்திரத்தனமாக வாழ்த்துவதால் பயனில்லை. தேவையை வாழ்த்தாக வைப்பதைவிட இறை வணக்கத்தை வாழ்த்தாக வையுங்கள். மதம் கடந்து இயக்கங்கள் கடந்து இறைவனை வணங்கும் வாழ்த்தாக இது இருக்கட்டும்.

ஓம் தத் சத்