Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label முக்தி நாத். Show all posts
Showing posts with label முக்தி நாத். Show all posts

Monday, August 26, 2019

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2  - 


    அனுபவ பகிர்வு : விஜி ராம்


பயணம் வேறு யாத்திரை வேறு. பயணத்திற்கு நண்பர்கள் தேவை. யாத்திரைக்கோ குரு மிக அவசியம். புராண தலங்கள், ஆன்மீகதலங்கள் போன்றவை நண்பர்களுடன் செல்வதை விட நம்மை அறிந்த நாம் புரிந்து கொள்ள நினைக்கும் குருவுடன் செல்வது நம்முள் இருக்கும் அறியாமை இருளை நீக்கி, அந்தந்தத்தலங்களை இன்னும் அதிகம் அனுபவிக்க வழிவகுக்கும்.



நான் போக வேண்டும் என்று நினைத்த பெரும்பாலான தலங்கள் குரு மூலமே தரிசித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் நம் எண்ணத்தை சொல்லிவிட்டு மறந்து விடலாம், எப்படியேனும் நம்மை அழைத்து சென்றிடுவார். திருவண்ணாமலை, காசி, அலகாபத், கயா, ஹிமாலயாஸ், தேவப்ரயாகை, கும்பமேளா என்ற அந்த வரிசை இன்னும் அதிகம், 2015 வருடம் முக்திநாத் செல்லும் ஆர்வத்தை செயலாக்கும் போது பூகம்பத்தால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இதோ இந்த மேமாதம் முக்திநாத்தை தரிசிக்கும்  பாக்யம் பெற்றோம். 



முக்தி நாத்: 

நாத பரம்பரையின் பூமி, ஆதிநாதரின் ஆதிக்கபூமி. அங்கே செல்கிறோம் என்ற எண்ணமே மிக உவப்பானதாக இருந்தது. போகும் முன் பார்த்த , படித்த விசயங்கள் அனைத்துமே கொஞ்சம் பீதியளிப்பவையாகவே இருந்தது. ஆனால்  அதைப்பற்றி அதிகம் என்றுமே யோசித்ததில்லை, அழைத்துசெல்பவர் கண்டிப்பாக இவற்றை சரிபடுத்தி நல்ல தரிசனத்துடன் ஆனந்த பயணமாகவே ஆக்குவார். டெல்லி, காத்மாண்டு, போஹ்ரா, ஜோம்சம் என்று தினமுமே குறிப்பிட்ட தூரம்  பயணம்  செய்தே முக்திநாதரை அடைய முடியும். பயணத்திட்டம் நாம் தீட்டலாம், ஆனால் இயற்கையே இறுதி முடிவெடுக்கும். மழை, பனிப்புயல், நிலச்சரிவு, அடிக்கடி நடக்கும் விபத்துகள் என்று அனைத்தையும் தாண்டி இயற்கை நம் பயணத்தின் தன்மையை தீர்மானிக்கும்.  ஆதிநாதர் அனுமதித்து, இயற்கை விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். 

மே 21 நடு இரவு 1 மணி விமானத்தில் டெல்லிக்கு பயணித்து காத்மாண்டு விமானம் ஏறி  மதியம் 2 மணிக்கு காத்மாண்டு விமான நிலையம் அடைந்தோம். காத்மாண்டு நேபாள தலைநகர், மலைப்பிரதேசமே, ஊருக்கு நடுவில் விமான நிலையம், எங்கு சென்றாலும் அதனை சுற்றியே பாதைகள். எங்களுடய பயணமத்திட்டம்  தினமும் காலை ஆரம்பித்து 3வது  நாள் தான் முக்திநாத்தை அடையும்படியானது. 


காத்மாண்டு : ஊர் முழுதும் சாலையோர  ஊதாப்பூக்கள் சிந்தும் மரங்கள், சற்றே அழுக்கான நகரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, பரபரப்பிலும் நிதானமான ஊர்.  காத்மாண்டு அடைந்து மற்ற மாணவர்களும் வந்த பின் மாலை முதலில் சென்ற இடம் பசுபதிநாதர் கோவில் . யுனெஸ்கோவின்  கீழிருக்கும் சின்னமாக அறிவித்திருக்கிறார்கள். பெரிய சுற்றுப்புறத்துடன் , வெறும் செங்கல் கட்டுமானத்துடன் கேரளாவை நினைவுபடுத்தும் கோவில். இந்த பயணம் முழுதும்   துளி வெயில் இன்றி, மழை மேகங்கள் சூழ, அவ்வப்போது மழை சாறலாகவும் பெருமழையாகவும் பெய்து ஆசிர்வதித்துக்கொண்டே இருந்தது. பசுபதிநாதர் கோவில் வலதுபுறத்தில் இருக்கும் புவனேஸ்வரியை தரிசித்து , பசுபதிநாதரை தரிசிக்க வரிசையில் இணைந்த போது மணி 6. 

பசுபதிநாதர்  , லிங்க வடிவில் இருந்தாலும் நான்கு புறமும் முகம் கொண்டு சதுர்முகனாக இருக்கிறார். வழக்கமாக ஒரு கதவு திறந்திருக்கும் தரிசித்து வரலாம், காலையில் 9.30 முதல் 12.30 வரையிலும் மாலை 6.30 மணி முதல் 8 வரையிலும் நான்கு கதவுகளும் திறந்திருக்கும் நாற்புறம் சுற்றி வந்து சிவனை தரிசிக்கலாம். நாங்களும் காத்திருந்து நாற்புறமும் சுற்றி  நாதரை தரிசித்து வரும் போது மழை தூறலாக ஆசிர்வதிக்க ஆரம்பித்திருந்தது. இரவு சிறிய அறிமுக உரையுடன் பிரிந்தோம்.


2 ஆம் நாள் :

 காலை பத்து மணிக்கே எங்களுக்கு போஹ்ரா விமானம். இங்கு கவனிக்க வேண்டியது விமானம் கிளம்ப எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை, வரும்போது வரும், கிளம்பும் போது கிளம்பும், எனவே உங்களுக்கு சொல்லப்பட்ட நேரத்தில் விமான நிலையம் அடைந்து விடுவது நலம். காலை 6 மணிக்கு கோரக்கர் சன்னதிக்கு பயணம். பசுபதிநாதர் கோவிலின் இடதுபுறம் ஒரு சாலை பிரியும் அதில் சிறு குன்று உண்டு, பெரிய பெரிய படிகளில் அநேகம் பேர் ஓடிக்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் இருப்பார்கள், அந்த படிகளில் ஏறி சிறு குன்றின் உச்சியை அடைந்தால் அங்கே வசிக்கிறார் கோரக்கர்.  தலைவரின் அனுமதியுடன் தான் எந்தப்பயணமும் ஆரம்பிக்கவேண்டும், இதோ கோரக்கரை தரிசித்து, அனுமதிபெற்றுக்கொடிருக்கிறோம். மந்திர ஜெபமோடு அந்த சூழல் இன்னொரு முறை மீண்டும் வாய்க்க குருவருள் துணையிருக்கட்டும்.


விமான நிலையம் அடைந்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் போஹ்ரா அடைந்தோம். போஹ்ரா, அழகான சிறிய ஊர். காத்மாண்டு போல் கூட்டமில்லை, மிக மிக இதமான கால நிலை, அழகான ஏரியை சுற்றி அமைதியான பாதையும், ஒரு புறம் கடைகளும், நினைத்த பொழுது வானத்தை பிளந்த மழையும் தூரத்தில் வெள்ளிப்பனி மலையுமாக கண்நிறைந்த ஊர். மாலை சத்சங்கத்தில் முக்திநாத், ஏன் எதற்கு, நாத பரம்பரை, இன்னும் எங்களின் எத்தனையோ கேள்விகளுக்கு  பதிலுரைத்து அடுத்த நாள் பயணத்திற்கு மனதளவில் தயார் படுத்தப்பட்டோம்.



3-ம் நாள் = ஜோம்சம் பயணம் 

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள்,



 ஒரே ஒரு நீண்ட தெரு, அதில் இந்தக்கோடியில் விமானநிலையம் பாதி வழியில் ஹோட்டல், அந்தக்கோடியில் காளிகண்டகி நதி. 8 மணிக்கு  முக்திநாத் செல்ல தயாரானோம். இங்கிருந்து 21 கிலோமீட்டர் பயணம், ஆனால் 2 முதல் 3 மணிநேரம் ஆகும். சாலை என்பது கடைசி 10 கிலோமீட்டருக்கே அதுவரை தண்ணீர் வற்றிய கண்டகி நதியில் பஸ் பயணம். குலுங்கி  விலா எலும்புகள் இடம் மாறுகையில் பாதை தென்பட்டது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி புகைப்படும் எடுத்து மீண்டும் பஸ்ஸில் ஏறி இரண்டு கிலோமீட்டர் போனதுமே கவனித்தேன் என் ஹேண்ட் பேக் காணோம். பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லாமே இருந்தது. ட்ரைவர் உடனே வண்டியை திருப்ப முடியாது என்று மீண்டும் ஒரு கிலோ மீட்டர் போய் வண்டியை திருப்பி நாங்கள் புகைப்படம் எடுத்த இடம் வந்த போது வைத்த இடத்திலேயே என் கைப்பை அநாதையாக கிடந்தது. அதுவரை அந்த ரோட்டில் ஒரு வண்டியோ மனிதனோ கடக்கவில்லை. 



முக்திநாத்  ஆட்டோ ஸ்டேண்ட் எனப்படும் வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடக்க வேண்டும். 2 கிலோமீட்டர் மட்டுமே. நடக்க முடியாதவர்களுக்கு போனி எனப்படும் மட்டக்குதிரை சவாரியும், டோலி எனப்படும் நான்கு பேர் சேர்ந்து தூக்கிசெல்லும் வசதியும் ஹோம்சம்மிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. அப்படி ஒன்றும் கடினமான பாதை அல்ல, கொஞ்சம் படிகள்  கரடுமுரடான பாதை என்று மொத்தமே 2 கிலோமீட்டர் தான். மெதுவாக ஏறலாம்.  கவனிக்க வேண்டியது இங்கு அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கு திறந்து மாலை 4 மணிக்கு மூடப்படும். எலுமிச்சம் பழம் கிடைக்காது. தண்ணீர் தேவைக்கு எடுத்து செல்லவும். குளிர் கொஞ்சம் அதிகம். . 



முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.



சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர்.  மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.


காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்
போஹ்ரா, காலை விமானத்தில் போஹ்ராவை அடைந்ததும் ஆரம்பித்த  மழை  விடாமல் பெய்துகொண்டே இருந்தது. போஹ்ராவில் பார்க்கவேண்டிய இடங்களில் சில, பராஹி கோவில் ( வராஹி கோவில்) ஏரிக்கு நடுவில் அமைந்துள்ளது, படகில்  இந்திய மதிப்பில் போக வர 100 ரூபாய், அழகிய சிறு கோவில், இங்கு கோவில்களில் ஸ்டிக்கர் பொட்டு, கண்ணாடி வளையல் போன்றவைகளை ஸ்வாமிக்கு சமர்பிப்க்கின்றனர். 
குப்தேஸ்வர மஹாதேவ் கேவ் : குகைக்கோவில், தரையிலிருந்து  100 படிகள் வரை கீழிறங்கி சென்றால்  ஆயிரம் வருட பழமையான சிவன் கோவிலும் இன்னும் இறங்கினால் ஆர்பரிக்கும் அருவியையையும் பார்க்கலாம்..
குப்தேஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் உள்ளது டாவிஸ் அருவி. இந்த அருவிதான் குப்தேஸ்வரர் கோவிலுக்குள்ளும் விழுகிறது.
பிந்தியபாஷினி கோவில் : பழைய பஜார் பகுதியில் உள்ள பிந்தி பாஷினி கோவில் முக்கியமான துர்கை ஆலயம். சிவன், கிருஷ்ணர், பஜ்ரங்பலி என்று எல்லாருக்கும் சந்நதி உள்ளது. சிறு குன்று போன்ற இடம். லிப்ட் உண்டு, கட்டணமும் உண்டு.
இந்த இடங்களை பார்த்து , ஓய்வெடுத்து அடுத்த நாள் காத்மாண்டு பயணித்தோம்.

காத்மாண்டு. 
நினைத்ததை விட சுலபமாக, நிறைவான தரிசனம் முக்திநாத்திலும், போஹ்ராவிலும். நாங்கள் காத்மாண்டு அடைந்த பின்னரே அறிந்தோம் அன்றும் அதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முக்திநாத் சேவை பனிப்புயல், கடும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது என்று. ஆதிநாதரின் அருளின்று எங்கள் பயணம் இதுவரை இத்தனை சிறப்பாக இருந்திருக்காது. காத்மாண்டுவில் பார்க்க வேண்டிய சில இடங்கள்

ஸ்வய்ம்பு நாத் : முழுதான ஹிந்துக்கள் நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புத்த மதமும் பரவியிருக்கிறது. ஸ்வம்புநாத் அதில் ஒன்று. சிறு குன்றின் மேல் இருக்கும் புத்த ஆலயம், அருமையான சிற்பக்கலைகளுடன் பெரிய கண்கள் வரையப்பட்ட ஸ்தூபியை வணங்குகின்றனர்.

ஜலநாராயணன் கோவில் : தண்ணீரில் துயில் கொள்ளும் பிரம்மாண்ட  விஷ்ணுவின் கோவில், அதன் சின்ன  அளவு சிலையை வைத்து தினப்படி யாகம் நடத்தப்படுகிறது.

கைலாத்நாத் கோவில் : ஊரைவிட்டு சிறிது தள்ளி இருக்கும் 140 அடி சிவன் கோவில்,, தனியாருக்கு சொந்தமானது.

டோலேஸ்வர் கோவில் : காத்மாண்டுவை சுற்றி பெரும்பாலும் ஹிந்து கோவில்கள், அதில் முக்கியமானது டோலேஸ்வர், மஹாபாரதக்கதைகளில் இடம்பெற்ற பழமை வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

சங்குநாராயணன் கோவில். மலைமேல் இருக்கும் விஷ்ணு கோவில், மிக மிக அழகான சிற்பங்களும் விஷ்ணுபுராண சிலைகளுமாக அழகான இடம்.

இந்த கோவில்கள் அனைத்திலும் ஆள் நடமாட்டம் குறைவு, நுழைவுக்கட்டணம் உண்டு, அனைத்துமே காத்மாண்டுவின் நான்கு திசைகளிலும் தள்ளி அமைந்திருக்கிறது.



காத்மாண்டுவை விட்டு கிளம்பும் நேரம்  வந்துவிட்டது. மீண்டும் பசுபதிநாதரை தரிசித்து, கோரக்கரிடம் நன்றிகூறி தியானித்து , யாத்திரையின் நிறைவு உரையாக ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் சந்தேகம் தெளிந்து அருளாசி வாங்கி டெல்லியை நோக்கி பயணப்படுகிறோம்.
இது ஒரு பயணக்கட்டுரை அல்ல, ஆயிரம் பக்கம் எழுதினாலும் தீராத அனுபவங்கள் அவை. முக்திநாத் போகவேண்டும் என்று நினைப்போருக்கு  இப்படி இருக்கும் என்ற சிறிய வழிகாட்டி. நாதர்களின் பூமியின் அருளையும், அனுபவத்தையும் வார்த்தைகளில் எழுத முடியாது என்றாலும் , எப்போது  படித்தாலும் மீண்டும் அந்த இடங்களுக்கு கண்மூடி மனதளவில் பயணிக்கவும், காளி கண்டகியின் வழியில் முக்திநாதரை தரிசிக்கவும், கோரக்கரை அருகிருந்து உணரவும் ,, மறுபடியும் வாழ்வில் இன்னொரு முறை அவர்களை காணும்  வாய்ப்பினையும் வேண்டவும் ஒரு வழி. மீண்டும் குருஅருள் மனம் வைத்து கோரக்கரையும் நாதபுரியையும் தரிசிக்க அருள்புரியட்டும்.

Wednesday, July 3, 2019

முக்திநாத் ஆன்மீக திருப்பயணம்

அடியேனும் மனைவியும் முக்திநாத் ஆன்மீக பயணத்திற்கு தயாரக இருந்தோம். அடியேனுக்குதான் மிகுந்த கனவுகள். முக்திநாத்தை அடைந்தவுடன் உலகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு (அப்பாடா!) ஶ்ரீமன் நாராயனனால் அனுப்பிவைக்கப்படும் புஸ்பக விமானத்தில் ஏறி அமர்ந்து வைகுண்டத்தை வெகு சௌக்கியமாக அடந்ததுவிடலாம் என்ற ஒரு ஆசை, பேராசை! (சுஜாதவின் புதினங்களைப் படித்ததால் வந்த விளைவு)!
சுவாமிஜி பயணத்திற்கு தேவையான பொருட்களுடன், பக்தி (devotion), சுவதயா (team sharing of spiritual knowledge), யோகா (integrity with Divine), இவை மூன்றையும் மறக்காமல் கொண்டு வர அன்புக்கட்டளை இட்டிருந்தார்.

இவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு பல பகீரதப்பிரயணத்தங்களுடன் எங்களின் முக்தியை நோக்கிப்பயணம் இனிதே ஆரம்பமானது. பயணம் ஆரம்பமாகும் இந்த தருணத்தில், குருவை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கிளம்பினோம்.

"தியான மூலம் குருர் மூர்த்தி" The Root of Meditation is the Form of the Guru

பயணப் பாதை - டெல்லி - காத்மாண்டு - பொக்கரா - ஜொம்சொம் - முக்திநாத், மீண்டும் டெல்லி வந்தடைதல்.

22.5.2019

பகலில் டெல்லி வழியாக காத்மாண்டு வந்தடைந்தோம்.  விமான நிலையத்திற்கு வெளியே 'Swami Omkar & group' என்ற பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வாகனத்தில் பயணப் பைகளையும் எங்களையும் ஏற்றக்கொண்டு விடுதி வந்தடைந்தது. விடுதியில் மதிய உணவுக்குப்பின் (அருமையான தமிழக சப்பாடு) சிறிது இளைப்பாறினோம். சுவாமிஜி முன்னமே வந்துவிட்டிருந்தார்.ஓய்வுக்குப் பின், சுவாமிஜியை சந்தித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றோம்.

"பூஜா மூலம் குருர் பதம்" The Root of Worship is the Feet of the Guru.

பிறகு காபி அருந்திவிட்டு (தொடர்ந்து பல பயணம் இருப்பதால் ருசியாக இருந்தாலும், அடக்கமாகவும் சாப்பிட வேண்டியிருந்தது) பசுபதிநாத் கோவிலுக்கு சென்றோம்.

பசுபதிநாத்

உள்கோவிலுக்கு வெளியே இருந்த சிறு கோவில்களையும் லிங்கங்களையும் தரிசித்துவிட்டு அன்பர்கள் சிலர் அங்கிருந்த புரோகிதர் மூலம் சங்கல்ப அர்ச்சனை செய்து கொண்டனர். சிலர் ஜபம் செய்தோம். பிறகு பசுபதிநாத் கோவிலை வந்தடைந்தோம். கோவிலில் நல்ல கூட்டம். பசுபதிநாத்தை பார்த்தபடி பெரிய நந்தி. பசுபதிநாதர் ஒரு லிங்க வடிவில் மொத்தம் நான்கு பக்கங்களும் ஒவ்வொரு பக்கமும் ஒரு அலங்கார சிவ லிங்க ரூபமாகவும், லிங்கத்தின் உச்சியில் ஐந்தாவது அரூபமாகவும் ஐந்து லிங்கங்களாக காட்சி தந்தார். வரிசையில் நின்று ஒவ்வொரு பக்கமுமாக சென்று பசுபதிநாதரை தரிச்சித்தோம்.

பிறகு விடுதிக்கு வந்து இரவு உணவருந்தி விட்டு சுவாமிஜின் சத்சங்கம்.

சத்சங்கத்தின் சுருக்கம்: மோக்ஷம் & முக்தி

மோஷம் புத்த மத வார்த்தை. முக்தி வேத-உபநிஷத்தில் இருந்து வந்தது.புத்த மதம் பற்றற்ற நிலையை, உடம்பிலிருந்து விடுதலை அடைவதை குறிக்கிறது (nirvana or Moksha). அதோடு நின்று விடுகிறது. விடுபட்டு எங்கே செல்கிறோம் என்று பேசுவது இல்லை. ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம் அங்கே இல்லை.

இந்த இடத்தில்தான் வேத-உபநிஷத்துக்கள் முக்தியைப் பற்றி சொல்கிறது.
ஜீவாத்மா பரமாத்மாவைடன் கலப்பதே முக்தி. அப்படி அடைய கூடிய முக்தி நான்கு வகையானதாக இருக்கிறது.

1. சகஜ முக்தி - எந்த சாதனைகளும் செய்யாமல் வாழும் போக்கில் வாழ்ந்துவிட்டு, மூச்சு பிரியும் சமயத்தில் ஆண்டவனை நினைப்பது. குருவருளாளும் இது நடக்கலாம்.

2. ஜீவன் முக்தி(விதேக முக்தி) - அபியாசத்துடனும், வைராக்கியத்துடன் சாதனைகள், கடும் பயிற்சிகள் செய்து உயிருடன் இருக்கும்பொழுதே, இறைவனை அடைந்து விடுவது. மீண்டும் உலக வாழ்க்கைக்கு வராமல் இறைநிலையிலேயே இருப்பவர்கள் ஜீவன்முக்தி அடைந்தவர்கள்.

3. பரம் முக்தி - ஜீவன் முக்தி அடைந்து மீண்டும் உலகிற்கு வந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்கள்.

4. அவதாரம் - தாய் வயிற்றில் பிரசிக்காதவர்கள். ஒரு நோக்கத்தோடு அவதரிப்பவர்கள் (பிரவேசிப்பவர்கள்). உதாரணமாக ஶ்ரீராமர், ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீமச்சீந்தரநாத் (நாத பரம்பரையில் அவதரித்து விஞ்ஞான பைரவ தந்த்ரா மற்றும் பல நூல்களை நம் உயர்வுக்காக எழுதியவர். உடனே இந்த புத்தகங்களை தேட வேண்டாம். அவை கிடைக்கப்பெற்றாலும் குருவருள் இல்லாமல் புரியப்போவதில்லை. அனைத்தையும் தேடி ஓடுவது உலக இயல்பு. இனி குருவருளை வேண்டுவோம், அனைத்தும் கிடைக்கப்பெறும்).

23.5.2019

காலையில் மந்திர ஜபம் செய்ய கோரக்நாத் கோவிலுக்கு சென்றோம். போகும் வழி எல்லாம் சிவ லிங்கங்கள் உள்ள சிறு சிறு கோவில்கள். சுவாமிஜி சொன்னபடி இவை பல நாதர்களின் ஜீவ சமாதிகள். சிவலிங்கம் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு காலப்போக்கில் விஷயம் அறியாதவர்கள் நாதர்களின் ஜீவ சமாதிகளின் அதிர்வுகளை உணர்ந்து உள்வாங்காமல் நிறைய சிவாலயங்கள் என நினைத்து கடந்துசென்றுவிடுகிறார்கள். 

சுவாமிஜின் ஆசீர்வாத்த்தால் எங்களுக்கு தெளிவு பிறந்தது. இவர்களுக்கும் குருவருள் கிடைத்து ஆன்மீக தெளிவு ஏற்படவேண்டும் என்று எல்லாம் வல்ல குருவருளையும் இறையருளையும் பிரார்த்திப்போம்.

கோரக்நாதரின் ஜீவசமாதிக்கு மேலிருந்த கோபுரத்தில் தங்கத்தாமரை இருந்தது.அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு மந்த்ர ஜபம் செய்யும்பொழுது உள்ளேயும் தங்கத்தாமரை தெரிந்தது !

மந்த்ர ஜபம் செய்துவிட்டு கண்களை திறந்து பார்க்கும்பொழுது சுவாமிஜி நடந்து வந்துகொண்டிருந்தார்!

"மந்த்ர மூலம் குருர் வாக்யம்" The Root of Mantra is the Word of the Guru

விடுதிலுக்கு வந்து காலை உணவிற்குப்பின் சிறிய விமானம் மூலம் பொக்காரா வந்தடைந்தோம். சிறிது ஓய்வுக்குப்பின் காபி அருந்திவிட்டு மாலை சத்சங்கம். இந்த சத்சங்கம் அடுத்த நாளைய முக்திநாத் பயணத்திற்கு எல்லோரையும் தயார்படுத்தும் சத்சங்கமாக இருந்தது. பிறகு இரவு உணவு. பின் ஓய்வு.

சத்சங்கத்தின் சுருக்கம் : நாத பாரம்பரியம்

ஆதிநாத் தான் நாதபாரம்பரியத்தின் ஆதிகுரு. இவருடன் இணைந்து ஒன்பது நாதர்கள் நவ நாதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடைய பாரம்பரியத்தில் நாம் வருகிறோம். 

நாதர்கள் தங்களது ஆற்றலை உலக ஷேமத்துக்காக பல இடங்களில் ஸ்தாபித்திருக்கிறார்கள். காசி விஸ்வநாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உள்ள தலங்களும் நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்த தலங்களே. சூட்சுஸமாக ஆற்றலும், வடிவமாக லிங்கங்களும் இருப்பதால் காலப்போக்கில் காரணகாரியங்கள் மறந்துபோய், சிவ தலங்களாக பார்க்கப்படுகின்றன. விஷ்ணு தலங்களாக பார்க்கப்படும் தலங்ளிலும நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்து இருக்ககிறார்கள். உதாரணத்திற்கு ஶ்ரீரங்கநாத், முக்திநாத் (இது ஒரு புத்த மத கோவில்). 

உருவ வழிபாடு கடந்து இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நாதர்களின் ஆற்றலை உணர நாம் முயற்சிக்க வேண்டும். நாதர்கள் இந்தியாவிலும், இந்து மதத்திளும் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிளும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். நாதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் ஒரு கற்பனை செய்து வைத்திருப்பதால் நாம் பல சமயங்களில் நாதர்கள் என்று உணராமல் அவர்களை கடந்து சென்றிருப்போம். விழிப்புணர்வு வேண்டும். இதற்கு அபியாசத்துடனும், வைராக்கியத்துடன் சாதனைகள் செய்யவேண்டும்.

நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்த தலங்களில் கடல் மட்டத்திற்கு சமமாக ராமேஸ்வரம். உச்ச நிலையில் மலை சிகரத்தில் முக்திநாத் அமைந்திருக்கிறது.

24.5.2019

காலை உணவிற்குப்பின் சிறிய விமானம் மூலம் ஜொம்சம் வந்தடைந்தோம்.
விடுதிலுக்கு வந்து குளுருக்கான உடைகள் அணிந்துகொண்டு, கடல் மட்டத்திலிருந்து 3800 மீ உயரத்தில் பயணிக்க இருப்பதால் நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, தண்ணீர் பாட்டில்களும் வாங்கிக்கொண்டு தயாராக இருந்த வாகனத்தில் உடனே முக்திநாத் நோக்கி கிளம்பினோம். 

வண்டி இமய மலை வழியாக சென்றது கண்கொள்ளாக் காட்சி. வழியில் இறங்கி பல போட்டோக்களை க்ளிக் பண்ணிக்கொண்டோம்.  வண்டி கரடு முரடான பாதையில் செல்லக்கூடிய தூரம் வரை சென்றது. பிறகு வண்டியில் இருந்து இறங்கி மேடு போன்ற பாதையில் சுவாமிஜியுடன் நடக்க ஆரம்பித்ததோம். 
இரு பக்கமும் கடைகள், தங்குமிடங்கள், உணவகங்கள் போன்றவை இருந்தன. எங்கள் குழுவில் சிலர் இரு கால்களாளும், சிலர் முக்கால்களுடன் (இரண்டு கால்கள் + ஒரு mountain climbing stick = மூன்று கால்கள்) நடந்தோம். அங்கு வந்திருந்த யாத்ரிகர்களில் சிலர் குதிரைகளில் சவாரி செய்தபடி 'நடந்தார்கள்'.

இப்படி பலவிதமாக ஒரு மணி நேரம் நடந்து வந்து முக்திநாத் அடைந்தபொழுது மனம் குதூகலம் கொண்டது. முக்திநாதரை தரிசிக்கப்போகிறோம், முக்தி அடையப்போகிறோம் என்ற குதூகலம்தான். சுவாமிஜி தரிசன வழிமுறைகளை கூறினார்.

அங்கே 108 தீர்த்தங்கள் இருந்தன. 108 தீர்த்தங்களும் அங்கே 108 பசுவின் வாயில் இருந்து தீர்த்தம் கொட்டுவது போன்ற அமைப்பு (shower tap) கொட்டுமாறு அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு தீர்த்தத்திலும் உடம்பும் முக்கியமாக தலையும் நனையும்படி 108 தீர்த்தங்களையும் ஓடியே கடந்து வந்தோம். காரணம் அவ்வளவு குளிர்.

தீர்த்தமாடிய பிறகு, இரண்டு குளங்கள் இருந்தன. முதலில் பாவக்குளம். அங்கே மூன்று முறை முங்கி எல்லா பாவங்களையும் கழித்தோம். இரண்டாவது புண்ணியகுளம். அங்கேயும் மூன்று முறை முங்கி எல்லா புண்ணியங்களையும் கழித்தோம். பாவபுண்ணியங்கள் இரண்டையும் கழித்தால்தானே பிறப்பிற்ற முக்தி நிலை.

இரண்டு குளங்களுக்கும் பிறகு முக்திநாத் தரிசனம்.

கோவிலில் நல்ல கூட்டம். மெல்ல மெல்ல முன்னேறி நாங்கள் கருவறைக்கு அருகாமையில் வந்துவிட்டோம. முக்திநாத் ஒரு புத்த மதத்தலம். அங்கே புத்தரை (கௌதம புத்தர் அல்ல) விஷ்ணு அம்சமாக முக்திநாதராக தம்பதி சமேதராய் அலங்கரித்திருந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சி. சுவாமிஜியுடன் தம்பதி சமேதர முக்திநாதரை தரிசித்தோம். 

ஆனந்தமயமான தரிசனம். அப்போது சுவாமிஜி சொன்னது நினைவிற்கு வந்தது. விக்கரக வழிபாடு கடந்து ஆற்றலை உணர வேண்டும். அந்த சூழலின் தெய்வீகத்தன்மையை அனுபவவித்து உள்வாங்கி நாதர்களின் ஆற்றலை உணர முயன்றோ(ஓ)ம். 

சுவாமிஜியுடன் உருவமாக முக்திநாதரையும் அருவமாக ஆற்றலையும் தரிசித்தது, சுவாமிஜியே எங்கள் கைகளைப்பிடித்து முக்திநாதரின் கைகளில் ஒப்படைத்துவிட்டதுபோல் ஒரு பிரம்மை ஏற்பட்டது!

"மோக்‌ஷமூலம் குரு கிருபா” The Root of Liberation is the Grace of the Guru


முக்திநாதரை தரிசித்ததவுடன், ஒரு நிழலான இடத்தில் அமர்ந்தோம். தரிசனம் சிறப்பாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உலக நன்மைக்காகவும் சுவாமிஜி மஹாமிருதஞ்சய யாகம் செய்தார். பிறகு கொண்டுவந்திருந்த மதிய உணவை உண்டுவிட்டு இருக்குமிடம் கீழ்நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஐபமாலை, சாலக்கிராமம் போன்றவற்றை ஷாப்பிங் செய்தபடி நடந்து கீழே வந்து சேர்ந்தோம்.

கீழே ஒரு சிறு காப்பி, டீ கடை இருந்தது. அங்கே நுழைந்தால் முக்திநாத் சென்று வந்த 30, 40 யாத்ரீகர்கள் இருந்தனர். எப்படி ? சிலர் அசதியாகவும், சிலர் வாந்தி எடுத்துக்கொண்டும், சிலர் உடல்நலமில்லாமலும் இருந்தனர். பார்ப்பதற்கு டீக்கடை மாதிரி இல்லாமல் சிறிய மருத்துவமனை மாதிரி இருந்தது. ஏன் ? 3800 மீட்டர் கடல் மட்டத்தின் மேலே இருப்பதால் முக்திநாத்தின் தட்ப வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. மேலே செல்ல, செல்ல oxygen குறைந்து மூச்சுவிட சிரமமாக இருப்பதும் சில காரணங்கள். குருவுடன் வந்ததால் அவர் எங்களை பாதுகாப்பாக கரையேற்றவிட்டிருந்தார். குருவிருக்க பயமேன்? சுவாமிஜிக்கு வந்தனமும், நன்றிகளும் 


25.6.2019
காலையிலேயே கிளம்பி விமானம் மூலம் பொக்காரா வந்து விடுதிலை அடைந்து குளித்து காலை உணவிற்குப்பின் பொக்காரா கோவில் சுற்றுலா கிளம்பிணோம். முக்கயமாக குகைக்குள்ளே சென்று தரிசனம் செய்த மஹாதேவ் கோவில் சிறப்பாக இருந்தது.

26.5.2019
விமானம் மூலம் மீண்டும் காத்மாண்டு வந்து விடுதி அடைந்து மதிய உணவு, பிறகு ஓய்வு. இரவு பசுபதிநாத் கோவிலுக்கு சென்று மந்த்ர ஜபம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.



27.5.2019

காலையிலேயே கிளம்பி காத்மண்டு நகர கோவில்களை காண சென்றோம். முக்கயமாக சங்க மகாதேவ் (உலகிலேயே மிக உயரமான நிற்கும் நிலையில் சிவபெருமான் - 114 அடிஉயரம்), டோலேஷ்வர் மஹாதேவ் (கேதார்நாத்தின் தலைப்பாகம் என்று நம்பப்படுகிறது ), சங்குநாராயணன், ஜலநாராயணன் கோவில்கள் கண்டு மகிழ்ந்தோம்.


28.5.2019
காலை கோரக்நாத் கோவில் சென்று மந்த்ர ஜபம். பின் சுவாமிஜின் சத்சங்கம். பிறகு காலை உணவிற்குப்பின் காத்மாண்டு விமான நிலையம் வந்து டெல்லி திரும்பினோம்.

திரும்பி வரும் பயணத்தில் முக்திநாத் சென்ற அன்று நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுப் பார்த்தபோது, அவற்றுக்குள் மறைந்திருந்த ஆன்மீக உண்மைகள் குரு அருளாளும் இறை அருளாளும் தெள்ளத்தெளிவாக ஒரு புதிய ஆன்மீக பரிணாமத்தில் புரியத்தொடங்கின. சுவாமிஜியின் மௌனமான சத்சங்கம் மனதிற்குள் கேட்டது. தெளிவு பிறந்தது. 24.5.2019 நடந்தவற்றை மீண்டும் ஒருமுறை அன்புகூர்ந்து படித்துவிட்டு வாருங்கள்.

நம் பிறவிப்பயன் பிறப்பற்ற நிலையான முக்தி அடைவதே. இதற்கு ஒரு வழி குருவருளுடன் அபியாசத்துடனும் வைராக்கியத்துடனும் சாதனைகள் செய்வது. வாழ்க்கையின் பரபரப்பிரலும், அலைக்கழிப்பிலும் நாம் சில சமயங்களில் சாதனைகளை தற்காலிகமாக நிறுத்திவிடலாம், மறந்துவிடலாம். 

இதை நமக்கு உணர்த்த ஸ்வாமி ஓம்கார் ஃபவுண்டேஷன் சிங்கப்பூர் (SOF) மாத சத்சங்கங்களும், SOF அன்பர்களும் பக்கபலமாக இருக்கிறார்கள். அதோடு குருவும் நம்மை மீண்டும் சரியான ஆன்மீக பயணப் பாதைக்கு கொண்டுவர எப்படிப்பட்ட U-turnயையும் எடுப்பார். 

பாதை கரடுமுரடாக இருந்தாலும் குருவுடன் பயணிப்பத்தால் சௌகர்யமான பயணமே. இப்படி எந்நேரமும் ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் குருவின் சத்சங்கம், அருகாமை, துணையுடன் பயணிக்க, பயணிக்க, நம்மிடம் இருந்து ஆன்மா என்னும் ஒளியை மறைத்துக்கொண்டு இருக்கும் மும்மலங்களான ஆணவம், மாயை, கன்மம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கும் என உணர்தேன்.
மேலும் மும்மலங்களின் ஒழிப்பை, 108 ருட்ராஷங்கள் அடங்கிய ஜபமாலையுடன் செய்யும் குரு மந்த்ரஜபம் துரிதப்படுத்தும். இப்படி குரு மந்த்ர ஜபம் செய்யச்செய்ய ஒரு கட்டத்தில் நம் பாவபுண்ணியங்கலெல்லாம் ஒழ்ந்துவிடும். இவையெல்லாம் கடந்து வந்தால் குருவருளால் ஆன்மா ஒளிபெற்று முக்தி கிட்டும் .

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முக்தியே
- திருமந்திரம் 1598

அன்புடன் ரா.தி.