Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, March 31, 2010

தவளை சொன்ன வேதம்




க்ரோக்....க்ரோக்...

மனுசங்களா வணக்கம். நான் தான் ஞானம் பெற்ற தவளை பேசறேன்.
தவளைக்கு எப்படி ஞானம் கிடைக்கும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

ஆன்மீகத்தில மேல வர தியானம், யோகா எல்லாம் செஞ்சு கோவிலுக்கு எல்லாம் போயி கஷ்டப்பட்டும் எங்களுக்கு ஞானம் வரலை. ஆப்ட்ரால் நீ ஒரு தவள உனக்கு எப்படி ஞானம் வந்துச்சுனு நீங்க பொறாமையில் கேட்பீங்க.

மனுசனுங்க மட்டும் தான் ஞானம் அடையனும், மிச்ச உயிர்கள் எல்லாம் ஞானம் அடையாதுனு நினைக்கறது உங்க ஆணவம் தானே? அந்த ஆணவம் இருந்தா நீங்க எப்படி ஞானம் அடையமுடியும்?

வேதகாலத்தில் எத்தனையோ மிருகங்கள் ஞானம் அடைந்து ஞானிகளாகி வேதகருத்துக்களையும், ஞானக்கருத்துக்களையும் சொல்லி இருக்காங்க.

ஞானியான மிருகம் சொன்ன விஷயத்தை அறியாமையில் இருக்கிற மனுசனால ஏத்துக்க முடியாதுனு ஞான மிருகங்களுக்கும் மனுச உருவம் கொடுத்துட்டாங்க.

புலி ஆன்மீகமா இருந்துச்சு அதற்கு வியாக்ரபாதர் என பெயர் கொடுத்துட்டாங்க, பாம்பு ஞானம் அடைஞ்சுது அதற்கு பதஞ்சலினு பேரு கொடுத்து மனுச உருவம் கொடுத்துட்டாங்க. மீன் ஞானியா வாழ்ந்துச்சு அதுக்கு மச்ச முனினு பேரு.

இதுமாதிரி மனுசங்க மிருகம் ஞானம் அடைஞ்சாலும் தங்களை மாதிரி உருவம் கொடுத்ததால எங்களுக்கு மதிப்பில்லாம போச்சு. நம்புங்க விலங்குகளுக்கும் ஆன்மீகம் இருக்கு, எல்லா உயிரும் ஞானம் அடையலாம்.

பாருங்க தவளையா இருக்கும் எனக்கு ஞானம் வந்து வேத கருத்துக்கள் எனக்குள்ள வர ஆரம்பிச்சுடுச்சு. இதை வெளியே சொன்னா என்னை தவளை முனி என கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. வட மொழியில் மாண்டுக்யம்-னா தவளை. என்னை மாண்டுக்கிய மகரிஷினு இப்பவே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்ப இன்னாதுக்கு என் சுய விளம்பரம்னு கேட்கறீங்களா?
பிரபஞ்ச ஒலியில் கிடைச்ச வேத கருத்துக்களை உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.

இந்த பிரபஞ்சத்தில எல்லா விஷயம் உருவாகிறதுக்கும் ஒலி காரணமா இருக்கு. “ஓம்” அப்படினு சொல்லுவோம்ல? அந்த சப்தம் தான் அனைத்துக்கும் காரணம்.

ஓம் சப்தம் பிரபஞ்சத்தில் கிளம்பினவுடனே அதிலிருந்து எல்லாம் விஷயமும் வெளிப்பட ஆரம்பிச்சுடுச்சு.

ஓம்-னா அது ப்ரணவ மந்திரம் சொல்லுவாங்க. ஓம் என்ற சப்தம் ஒரே சப்தம் கிடையாது. அ - உ - ம அப்படிங்கற மூனு ஒலியோட கூட்டணிதான் ஓம்.

அ அப்படினு ஆரம்பிச்சு உ-னு நீண்டு ம்-னு முடிச்சா அதுக்கு ஓம்னு முழுசா கேட்கும்.

அ ஒலி உருவாக்கிறதை குறிக்கும், உ-னா வளர்ச்சியை குறிக்கும். ம்-னா முடிவை குறிக்கும்.
அதனாலத்தான் அ- பிரம்மா, உ-னா விஷ்ணு, ம்-னா சிவன்னு சொல்லுவாங்க.

உண்மையில் இறைவனுக்கு உருவம் கிடையாது. அ-உ-ம வை குறிக்க உருவம் கொடுத்து வழிபடுறாங்க. ஓம்- ஒலிதான் இறைவன். அதன் உற்பகுதிகள் இறைவனின் செயலாக இருக்கு.

பிரபஞ்சம் பஞ்சபூதத்தால ஆனதுனு சொல்லுவாங்க. பஞ்ச பூதம் எதனால ஆனது தெரியுமா?

அ-உ-ம மூலம் மூன்று பூதமும், மூனு சப்தத்திற்கு இடையே சின்னதா கோடு போட்டிருக்கேனே அதிலிருந்து அடுத்த ரெண்டு பூதம்னு மொத்தம் பஞ்ச பூதம் உருவாச்சு.

வேதங்களும் அப்படித்தான் உருவாச்சு, அ சப்தத்தில் ரிக்வேதமும், உ சப்தத்தில் யஹூர் வேதமும், ம் என்பது சாம வேதமாகவும் இருக்கு. இதன் தொடர்ச்சிய அனைத்து சப்தங்களின் இணைப்பா இருக்கிறது தான் அதர்வணம்.

நீங்க மூச்சு எடுக்கிறீங்களே அதுக்கும் ஓம் தான் காரணம். அ என்ற நிலையில் உள்மூச்சும், உ என்ற நிலையில் மூச்சை உள்ளே நிறுத்தி, ம் என்ற நிலையில் மூச்சை வெளியிடுவீங்க.


அ-உ-மவில் சிந்திச்சா எல்லா விஷயமும் இதில் உருவாகி இருக்கு என புரியும்.

சமஸ்கிருதத்தை தேவ பாஷை என சொல்லுவாங்க. இதை கேட்டு நம்ம மக்கள் அப்ப நாங்க பேசறது கேவலமான பாஷையா என வேட்டியை மடிச்சு கட்டிகிட்டு வருவாங்க.

சமஸ்கிருதம் மட்டும் அல்ல தமிழும் தேவ பாஷைதான். அதனாலதான் ஞானிகள் பாட இரண்டு மொழியை மட்டுமே பயன்படுத்துறாங்க.

கல்தோன்றி மண் தோன்றா காலம் கொண்ட மூத்த மொழி தமிழ்னு ஸ்கூல் பாடத்தில் படிச்சிருப்பீங்க. கல்தோன்றா காலம்னா பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்து மொழி இருக்குனு அர்த்தம். பிரபஞ்சம் ஒருவாக ஓம் என்ற சப்தம் காரணம் என்பதால ஓம் என்பதே தமிழ் என புரிஞ்சுக்குங்க.

உங்க மொழி தெய்வீக மொழியான தெரிஞ்சுக்க ஒரு ஆராய்ச்சி செய்வோம்.

அ ஒலி உருவாக்கிறதை குறிக்கும், உ-னா வளர்ச்சியை குறிக்கும். ம்-னா முடிவை குறிக்கும்னு முன்னாடி சொன்னேன். இதை நினைவில் வச்சுக்குங்க.

நம்ம மொழியில் இருக்கும் உருவாக்ககூடிய பெயர் சொல்லை பார்த்தால் அ சப்தம் வருவது போல இருக்கும். உதாரணம் குழந்தையை உருவாக்குபவர்கள், அம்மா, அப்பா. முடிவும் ஆரம்பமும் அ சப்தம் வருதா?

அதனால தமிழில் பிரம்மாவுக்கு அயன் அப்படினு பேரு. உங்களுக்கு சினிமா ஞாபகம் வந்தா அது என் தப்பில்லை.

நிர்வகிக்கும் விஷயத்திற்கும் வளர்ச்சிக்கும் உ சப்தம் வரும். மக்கள் வாழும் இடம்- ஊர், நிரந்திரமாக இருப்பது ஊறுகாய். ஊரணி, உட்காருவது. உணவு என வளர்ச்சி சம்பந்தபட்ட விஷயங்கள் உ சப்தம் கேட்குது.

ம சப்தம் முடிவு நிலையை குறிக்கும். மரணம், மகிழ்ச்சி, மன்னிப்பு, மறத்தல் என ம சப்தம் தற்காலிக முடிவு-இறுதி நிலையை குறிக்கும்.

எந்த மொழி அ-உ-மவின் அடிப்படையில் இருக்கோ அந்த மொழி தேவ மொழி அல்லது தெய்வீக மொழினு புரிஞ்சுக்கோங்க.

வடமொழியில் மாத்ரு, பிதா என அ-சப்தமும், குரூ - என்ற உ சப்தமும், தேவம் - என இறுதி நிலையையும் குறிக்கும்.

அதனாலத்தான் தமிழும் தெய்வீக மொழினு சொல்லறோம். ஓங்காரத்தின் சப்தம் வந்தா எந்த மொழியிம் தெய்வீகம் தானே?

உங்க மொழியை தெய்வீகமாக்கனும்னா அ-உ-ம சப்தம் வர மாதிரி பயன்படுத்துங்க.

அ சப்தம் பிரம்மாவை முதல் உருவாக்கும் இறைவனோட அம்சம் இல்லையா? அதனால அனைத்து மதத்திலும் இறைவனை அழைக்கும் சப்தம் அ-வில் துவங்கும். கவனிச்சு பாருங்க.

அம்மாவை வாய் நிறைய அம்மானு கூப்பிடுங்க. மம்மினு கூப்பிட்ட முடிவு நிலை வந்துடும். மம்மினு எகிப்துல இருக்கிற பொணத்துக்கு பேரு இருக்கு. ம-னு ஆரம்பிச்சதால அது இறுதி நிலையில் இருக்கு.

நம்ம வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அ-உ-ம காரணமா இருக்கு. அதை விழிப்புணர்வோட கவனிச்சா நீங்க பூச்சியா இருந்தா கூட ஞானம் அடையலாம். மனுசனா இருக்கனும்னு அவசியம் இல்லை. ஓங்காரத்தை கவனிக்கலைனா நீங்க மனுசனா இருந்தும் பிரயோஜனம் இல்லை..

திருமூலர் என்கிட்ட கத்துக்கிட்டுதான் திருமந்திரத்தில இந்த விஷயத்தை பிட் அடிச்சுருக்காரு.
நீங்களே கேளுங்க..

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628

-------------------------

குறிப்பு :

மாண்டூக்ய உபநிஷத் என்னும் பேரறிவை எளிமையான நடையில் விளக்கும் முயற்சி இது. உபநிஷத்தை எப்படி இவ்வாறு கூறலாம் என சில வேத வித்துக்கள் பொங்க வாய்ப்புண்டு. அவர்களிடம் நான் வேண்டுவது எல்லாம் ஒன்றுதான். நீங்க கோபத்தில் சாபம் கொடுக்க எண்ணினால்,

“கோடான கோடி பிறவிகள் ஈனமான பிறவியாகிய ஓம்காராகவே பிறந்து இறக்க கடவது” என சபிக்கவும். தன்யனாவேன்..!

Monday, March 29, 2010

ஞானம்


என்றும் நிகழாதது என்றும் நிகழாது என நினைக்கும்
பொழுதுதே நிகழ்ந்தது.

அனைத்து அனுக்களும் தன்
ஈர்ப்பை விடுவித்து பரமணுத்துகள்களாக குவிந்து மெளனமாகியது.

குவிந்துகிடக்கும் இயல்பில் தன்முனைப்பு பேதங்களை காணவில்லை.
குவிந்துகிடப்பதை எங்கும் விரிந்த ஓரொளிப் பேரின்பம் காண்ணுற்றது.

அனுக்கருவின் அசைவில்லா நிலையில்
கரு பிளந்து வெடித்த ஆற்றலில் கரு அறுந்தது

அகத்தே நிகழ்ந்ததை புறத்தே கண்டதும்
நிகழ்ந்தது என்றும் நிகழாதது என்றது சுயம்.



Wednesday, March 24, 2010

துறவிகள் நிறைந்த நகரம் - சிங்கப்பூர்...!

குரு சிஷ்யர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். குருகுலத்திற்கு வெளியே ஒருவன் கைகளில் மதுவுடன், ஒரு மாதுவை அணைத்தவாறு தள்ளாடி வந்துகொண்டிருந்தான். அவனை கண்ட குரு உடனே எழுந்து அவன் முன் சென்று அவனுக்கு மாலை அணிவித்தார். அவனையும் அந்த பெண்ணையும் மூன்று முறை வலம் வந்து விழுந்து வணங்கினார்.

இதை கண்ட சிஷ்யர்களுக்கு பயங்கிர அதிர்ச்சி. என்ன நம் குரு இவ்வாறு செய்கிறாரே என்று. சிஷ்யர்களின் கேள்விக்குறியான முகம் கண்டு குருவே விளக்க துவங்கினார், “சிஷ்யர்களே நாம் இறை நிலை பேரின்பம் வேண்டும் என்பதற்காக சிற்றின்பத்தை துறந்து துறவிகளாக இருக்கிறோம். ஆனால் இவர்களோ சிற்றின்பத்திறாக மேலான பேரின்பத்தையே துறந்திருக்கிறார்கள். பேரின்பத்தையே துறந்த இவர்கள் தானே உண்மையான துறவிகள்?” என்றார்.
குரு கதைகள் என்ற வலைதளத்தில் நான் எழுதிய இக்கதையை கொண்டு சிந்தித்தால் சிங்கப்பூர் துறவிகள் நிறைந்த நாடு என கூறலாம்.

புலால் உணவு, மது, சுற்றுலா, கேளிக்கை என எனக்கு கொஞ்சமும் சம்பந்தப்படாத இடமாக இருந்தது சிங்கப்பூர். இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த எறும்பு சென்ற கதையை சுருக்கமாக கூறுகிறேன்.



கடந்த மார்ச் 10 ஆம் தேதி சிங்கையை நோக்கி பயணம் செய்தேன். என்னுடன் பிரபல பதிவர் கேபிள் சங்கர் உடன் வந்தார். எதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பதை போல பல தளங்களில் சுவாரசியமான பேச்சுடன் பயணம் துவங்கி, சிங்கையை அடைந்தோம். இரவு சிங்கப்பூர் அடைந்ததும் எங்களை வரவேற்க திரளாக இணைய எழுத்தாள நண்பர்கள் வந்திருந்தனர். பின்னிரவு நேரத்திலும் எங்களை வரவேற்க வந்த அவர்களின் அன்பு நெகிழச்செய்தது. அப்பொழுது துவங்கிய பாச மழை இன்று நான் திரும்பி வரும் வரை இடைவிடாமல் பொழிந்துகொண்டே இருந்தது.

இந்த ஆன்மீக பயணத்திற்கு உறுதுணையாக இருந்த கோவி.கண்ணன், வைரவன், வெற்றிக்கதிரவன், ஜெகதீசன் மற்றும் சிங்கை பதிவர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவிக்கிறேன். நான் எழுதிய சில குப்பைகளுக்கே உங்களை போன்ற நட்புகிடைக்கிறது என எண்ணும் பொழுது மகிழ்கிறேன். மேலும் சிறப்பாக எழுதி உங்களை போன்ற நட்புகளை மேலும் மேலும் பெறவேண்டும்.

காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்பூர். ஆகவே இதை நான் தொடராக எழுதி உங்களை கொல்லப்போவதில்லை. சுருக்கமாக சிங்கப்பூர் பயணத்தில் நான் கண்டவற்றை புள்ளிகளாக தருகிறேன்.


ஊர் கதை அளந்து விடு....

  • சிங்கப்பூர் அற்புதமான நகரம். வானளாவிய கட்டிடங்கள், நம்மை விட குறைந்த உயரத்தில் மக்கள், சமூக ஒழுக்கமும் கட்டுப்பாட்டில் நம்மை விட உயர்ந்து நிற்கும் சமூகம் என ரசிக்க எத்தனையோ இருக்கிறது.

  • சிங்க - பூரா என்ற சமஸ்கிருத பெயர் கொண்டே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது சிங்கப்பூர். தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது என பார்க்கும் பொழுது, பாரத் என அழைக்கவும், தமிழை ஆட்சிமொழியாக இல்லாத சூழலும் நினைக்கையில் கவலை அளித்தது.

  • மக்கள் பணம் செய்ய தேனிக்கள் போல ஓடுகிறார்கள். பறக்கிறார்கள். தங்கள் செய்ய வேண்டியதை மறந்து பொருளாதாரத்தால் மட்டுமே இயங்குகிறார்கள். இதில் சம்பாதிக்க சென்ற நம் தமிழர்களும் அடங்குவர்.

  • போக்குவரத்திற்கு உள்ள மெட்ரோ ரயில் சிறப்பாக செயல்படுகிறது. தில்லி நகரில் நான் இதை நன்கு பயன்படுத்தி பழகியதால் சுலபமாக இருந்தது. இந்தியாவிலும் உலகத்தரமான மெட்ரோ ரயில் தலைநகரில் உண்டு என்பதை நினைக்க பெருமையாக இருந்தது.

  • எலக்ட்ரானிக் கருவிகள், வீடு, அறையின் அளவு என அனைத்தும் சிறியதாக இருந்தது. சின்ன சின்னதாக செய்வது அவர்களின் இயல்பு என நினைக்கிறேன். அனைத்தும் சின்னதாக இருப்பது போல இந்தியாவும் சின்னதாக சிங்கையில் காட்சி அளிக்கிறது. லிட்டில் இந்தியா..!

  • நம் ஊரில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் அனைத்து பொருளும் இங்கே ஒரு டாலருக்கு கிடைக்கிறது. :) எனக்கு சிங்கை பொருளாதார ரீதியாக எளிமையான நாடாக தெரியவில்லை. நன்றாக பொருளீட்டுபவர்களுக்கு நல்ல நகரம். இந்தியாவில் சம்பாதித்து அங்கே செலவு செய்வது முட்டாள் தனம். இதை எதிர்மறையாக செய்யலாம். இதைதான் நம் ஆட்கள் அங்கே வேலைக்கு சென்று செய்கிறார்கள்.

  • சமூக விதிமுறைகளும், தண்டனையும் கடுமையாக இருக்கிறது. பெண்கள் முழுமையான சுகந்திரத்தில் இருக்கிறார்கள். பலதரப்பட்ட நாடுகளின் மக்கள் ஒன்றினைந்து வாழ்வதால் ஒரு பூங்கொத்துபோல நாடு காட்சி அளிக்கிறது.

  • இன்முகத்துடன் அனைவரும் உதவும் தன்மையில் இருக்கிறார்கள். குறைந்த பரப்பளவில் நாடு இருப்பதால் அவர்களின் முன்னேற்றம் விரைவாக இருந்தது என நினைக்கிறேன். விரிந்த பொருளாதார கொள்கையும், குறைந்த பரப்பளவும் நம் நாட்டு இருந்தால் இதைவிட எழில் மிகு தேசமாக உருவாகி இருக்கும்.

சொந்த கதை ஏதும் இல்லையா?


  • சிங்கப்பூர் சென்றதும் முதல் நிகழ்ச்சி திருமந்திர சொற்பொழிவு. ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டிருந்தாலும், சில சூழல் காரணமாக மக்கள் வரவில்லை பதிவர்கள் பலர் வந்து கூட்டத்தை கூட்டினார்கள். இதன் மூலம் அரசியல்வாதிகள் கூட்டணி வைக்கும் ரகசியம் தெரிந்து கொண்டேன்.
  • பதிவர்கள் போக செல்வகுமார், செந்தில் வேலன், முரளி மற்றும் மேலும் சிலர் தங்கள் வாசகர்கள் என அறிமுகமானார்கள். இந்த வலைதளத்தை படிக்கும் வாசகர்களாம். என்னத்தை சொல்ல... இன்னும் என்னை இந்த உலகம் நம்புது.
  • அறிவியலில் கேப்ளர் விளைவு என கூறுவது போல சிங்கையில் சென்ற இடமெல்லாம் நித்ய விளைவு இருந்தது.
  • நாம் தங்கி இருந்த இடத்திற்கு பெயர் “தானா மேரா”.இது மலாய் மொழி சொல்லாக இருந்தாலும் இந்தியில் இது உன் இடம் என கூறுவது போல இருந்தது.
  • இந்தியாவில் இருக்கும் பொழுது ஏதாவது பரபரப்பாக வேலை இருக்கும். அதற்காக தினமும் 22 மணிநேரம் உழைக்கிறேன் என டுமீல் விட தயாராக இல்லை :) சிங்கப்பூர் ஒரு விடுமுறை நாட்களாகவே இருந்தது. பரபரப்பான சிங்கப்பூரில் தளர்வாக வேலைபார்த்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

  • திங்கள் முதல் வெள்ளி வரை மாலை நேரத்தில் திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் மட்டும் எடுத்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கேலங் சிவன் கோவில் என்ற இடத்தில் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மிகசிறப்பாக கட்டி இருக்கிறார்கள். இக்கோவிலின் அருகில் இருக்கும் புத்தர் கோவிலும் அருமையாக இருந்தது. கேலங் என்ற இவ்விடத்தில் சிவன் கோவில், புத்தர் கோவில் மற்றும் மசூதிக்கு சென்று வந்ததன் மூலம் நான் சன்மார்க்கத்தை நிலைநாட்டினேன்.

  • கேலங் சிவன் கோவிலில் தினமும் மாலை 7 முதல் 9 வரை திருமந்திரம் அலசினோம். கோவிலின் உள்ளே இருக்கும் அர்த்த மண்டபத்தில் தென் திசைபார்த்து அமர்ந்திருக்க, விளக்கம் கேட்பவர்கள் வட திசை பார்த்து அமர்ந்திருந்தார்கள். தக்‌ஷணா மூர்த்தியும் சானகாதி முனிவர்களும் இப்படித்தான் அமர்ந்திருப்பார்களோ என எண்ணத்தோன்றியது. தின்ன தின்ன திகட்டாத தித்திப்பான திருமந்திரத்தை சுவைபட சுவைத்தோம்

  • திருமந்திரத்திற்கு நான்கு ஐந்து நபர்கள் தான் வருகிறார்கள் என என் மாணவர் வருத்தப்பட்டார். பகவத் கீதையை உபதேசிக்க பகவான் கிருஷ்ணனுக்கே ஒருவர் தான் கிடைத்தார். எனக்கு நான்கு பேர் கிடைத்திருக்கிறார்கள் என எண்ணி மகிழ்கிறேன் என்றேன்.

  • இந்தியாவில் பலர் என்னை மிகவும் மரியாதையாக நடத்துவதாக எண்ணி இயல்பாக பழகவிடமாட்டார்கள். இணையவழி எழுத்தாளர்களுடன் நான் முன்பிருந்தே இதை செய்யாமல் கட்டுடைத்ததால் இயல்பாக பழகமுடிந்தது. ஆனாலும் இன்னும் அவர்கள் கொஞ்சம் மாறவேண்டி இருக்கிறது. எப்பொழுதும் அவர்களே எனக்காக பணம் தருவது, பரிசுகள் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் மிகவும் மகிழ்வேன்.

  • சிங்கப்பூர் பயணத்தில் சிறப்பான ஒரு விஷயத்தை வழங்கினாலும் அது பலருக்கு சென்று அடையவில்லை என்ற எண்ணம் உண்டு. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களின் வேலை நேரம் மற்றும் பணம் விரயம் என்பதை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது. அடுத்த முறை சுப்பாண்டியை களத்தில் இறக்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும் என நினைக்கிறேன்.

முடிவா என்ன சொல்ல வர்ரே?

வேற என்ன ஒரு ஜென்கதை தான்..

ஒரு அரசர் தனது பூந்தோட்டத்தை ஒரு ஜென்குருவிடம் காண்பிக்க எண்ணி அவரை அழைத்தார். பலவருடங்களாக தோட்டக்கலையில் உயர்ந்த ஆட்களை கொண்டு அரசன் உருவாக்கிய தோட்டம் அது. ஜென்குரு தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு தோட்டம் நன்றாக இல்லை என்றார். அரசனுக்கு மன வருத்தம் ஏற்பட்டது. என்ன குறை என கேட்டான். தோட்டம் என்றால் இலை தளை, சருகுகள் என கீழே விழுந்து கிடக்கும் அது இயற்கையானது. ஆனால் நீ சருகுகளை அப்புறப்படுத்தி மிகவும் தூய்மைபடுத்தி வைத்திருப்பதால் அதன் அழகு கெட்டுவிட்டது என்றார் ஜென் குரு. ஓடி சென்று மரங்களை உலுக்கினான் அரசன் சருகுகள் உதிர்ந்து குப்பையானது தோட்டம். ஜென் குரு கூறினார், “அற்புதமான தோட்டம்”.

அரசன் உருவாக்கிய தோட்டத்தை போல சிங்கப்பூர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. ஆனால் இயற்கையாக இல்லை. தெருக்கள், கட்டிடங்கள் உருவாக்கி மக்கள் அதை பயன்படுத்தாமல் இருப்பதை போல மிகத்தூய்மையாக காட்சி அளிக்கிறது.

இந்த ஜென்கதையை நினைத்தவாறே இந்தியா வந்தடைந்தேன். கையில் இருந்த காகிதத்தை கிழித்து தெருவில் வீசி, அதன் அருகே காறி உமிழ்ந்து என் இந்திய வாழ்க்கையை துவக்கினேன்.

Tuesday, March 9, 2010

பழைய பஞ்சாங்கம் - 09 மார்ச் 2010

பிச்சகாரி வாங்குங்கள்

கடந்த ஒரு மாதம் டெல்லியில் இருந்தேன். என் டெல்லி மாணவர் திரு.பிரேம் விஸ்வநாத் என்பவரின் அன்பாலும் அவர் குடும்பத்தின் அரவணைப்பாலும் மகிழ்ந்தேன். ஒரு நாள் மாலை அவர்கள் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சின் நடுவே பிச்காரி வாங்கவேண்டும் என பேசிக்கொண்டார்கள். விதவிதமான பிச்காரி என்றும் நாளை கட்டாயம் தேவை என்றும் அவர்களுக்குள் பேசிக்கொண்ட பொழுது குழம்பிப்போனேன். ஆதரவு அற்று பிச்சை எடுக்கும் பெண்களை இவர்கள் தத்து எடுப்பார்கள் என நினைத்து விபரம் கேட்டேன்.



ஹோலி பண்டிகைக்கு பிறர் மேல் வண்ணம் தெளிக்க நம் ஊரில் பூச்சி மருந்து அடிப்பார்களே அது போன்ற ஒரு வஸ்து தான் “pichkari”. பீச்சும் குழாய் போன்ற இந்த கருவிக்கு பிச்காரி என்று பெயர் என விபரம் கூறினார்கள். நல்ல வேளை சுப்பாண்டி என்னுடன் வரவில்லை என நினைத்துக் கொண்டேன்.

---------------------------

டில்லி பதிவர்கள் சந்திப்பு

வலைதளத்தில் எழுத துவங்கியதன் பயன் பல சகோதர சகோதரிகளின் நட்பு கிடைக்கப் பெற்றேன். டெல்லியில் வலை எழுத்தாளர்கள் சிலரை சந்திக்க முடிந்தது. நான் வரும் தகவல்கள் தெரிந்து பலர் முக்கிய பணிகளில் பிஸியானர்கள் என்பது கூடுதல் செய்தி :) இறை சக்தி அவர்களை காப்பாற்றி இருக்கிறது :)

அன்று சந்தித்தவர்களில் திரு.வெங்கட் நாகராஜ், சகோதரி.முத்துலட்சுமி, முனைவர் எம்.ஏ சுசீலா , திரு.செல்வக்குமார் மற்றும் சந்திர புவன் என்ற சிலர் என் நினைவில் இருக்கிறார்கள்.

இடமிருந்து வலமாக :
வெங்கட் நாகராஜ், இவருக்கு பெயர் தேவையில்லை, செல்வகுமார், சந்திர புவன், முனைவர் சுசீலா.
சகோதரி முத்துலட்சுமி இதில் அருவமாக இருக்கிறார் :)


முனைவர் சுசிலா இலக்கிய ஆர்வம் மிக்கவராக இருந்தார். நான் சீரியஸாக எழுதாமல் லைட் வெயினாக (light vein) எழுதுவதாகவும், இலக்கியம், ஆழ்ந்த ஆன்மீகம் என எழுதுவதில்லை என குறிப்பிட்டார். நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம், பிரம்ம சூத்திரம் என நான் ஆரம்பித்தால் வலையுலகம் தாங்குமா என தெரியாது :) இங்கே திருமந்திரத்திற்கே தெரிச்சு ஓடுகிறார்கள்...:)

டெல்லி பதிவர்கள் பேசியதில் குறிப்பாக பதிவுலகம், டெல்லி வாழ்க்கை, டெல்லி வாழ் தமிழர்களின் ஜாதீய போக்கு என பலவிஷயங்களை விவரித்தார்கள். பதிவர்களின் பேச்சில் சகோதரி முத்துலட்சுமியின் பேச்சு என் காதுகளில் இன்னும் ரிங்காரிக்கிறது. சகோதரியின் வீட்டில் அனைவரும் பதிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி பதிவர்கள் தமிழகம் வந்தால் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது.

பதிவர் சந்திப்பு நடந்த கோவிலில் பிரசாதம் கொடுக்க துவங்கியதும் கூட்டத்தை கலைத்தோம்.
----------------

சிங்கையில் ஸ்வாமி ஓம்கார்


இந்தியாவுக்கு ஒரு பத்து நாட்கள் சுபிக்‌ஷம் அளிக்கலாம் என நினைத்து சிங்கை செல்லுகிறேன். சிங்கை மாணவர் வைரவன் மற்றும் பதிவுலக நண்பர் கோவியார் ஆகியோரின் சீரிய முயற்சியால் சிங்கை செல்லும் சூழல் சாத்தியபட்டது. அவருக்கும் இவ்விஷயத்திற்கு வித்திட்ட வடுவூர் குமார் அவர்களுக்கும் என் நன்றிகள். சிங்கை சென்று வந்து பயணம் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

தினமும் திருமந்திர சொற்பொழிவு உண்டு. அதை பற்றியும் குறிப்புகள் வலையேற்றுகிறேன்.
மேலும் சிங்கை நிகழ்ச்சிகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
--------------

ஜென் கவிதை

தூரிகையின் நுனி
அசைய வண்ணங்கள் வெளிப்பட்டது.

ஓவியமே வண்ணமயமாகி
ஓவியன் நிறமற்று நிற்கிறான்.

நிறத்தால் நிறைந்த ஓவியத்தில்
தூரிகை இருப்பதில்லை.

தூரிகை அடுத்த ஓவியத்திற்கு
தயாராகி விடுகிறது.

Wednesday, March 3, 2010

பரமஹம்ஸா....

உயர்வு தாழ்வு, வேற்றுமை-ஒற்றுமை, நல்லது-கெட்டது என ஆன்மீகத்தில் பிரிவுகள் இல்லை. ஆனால் உலகம் என்ற குளத்தில் உணர்வுகள் என்ற சகதியில் பல உயிர்கள் வாழுகிறது. அவற்றில் உன்னை பிரித்தரிய வேண்டாமா? புழுக்களை உண்ணும் மீன்கள், பிற மீன்களையே உண்ணும் மீன்கள், சப்தம் எழுப்பும் தவளைகள், தவளைகளை தின்னும் பாம்புகள், இறைக்காக காத்திருக்கும் கொக்குகள் என பல்லுயிர் பள்ளமாக இருக்கிறது இக்குளம்.

இத்தகைய உயிர்களுக்கு உன்னை ஒப்பிடலாமா?

இந்த குளத்தில் தாமரை உண்டு. அதில் சகதிகள் இருப்பதில்லை. அதனால் அது ஆன்மீக பொருளாக கருதுகிறார்கள். உற்றுப்பார்...

அந்த தாமரையிலும் அதன் தண்டுப்பகுதி சகதியில் ஊன்றியே மேல் எழுந்து நிற்கிறது. தாமரையிலும் சகதி உண்டு, குளத்தின் நீர் சில துளிகள் அதன் மேல் ஒட்டும் தன்மை உண்டு.


அதனால் தான் உன்னை அம்ஸம் என்கிறேன். அம்ஸ என்றால் அன்னம் என பெயர். அன்னத்தை பார்த்திருக்கிறாயா? வெளிர் வெண்மை நிறத்தில் கால்களிலும் மூக்கிலும் மட்டும் செந்நிறத்துடன் உலாவருமே அந்த அம்ஸம்.

அதன் மேல் ஒரு துளி கசடு இருக்காது. சகதிகள் அதன் மேல் ஒட்டாத வண்ணம் இறைவன் படைத்துள்ளான். இதனால் தானே தமிழில் கூட ஒரு விஷயத்தை அழகாக இருக்கிறது என்பதற்கு அம்ஸமாக இருக்கிறது என்கிறார்கள்?

நம் ஊரில் பல கட்டுக்கதைகள் உண்டு. அம்ஸம் பாலையும் நீரையும் பிரித்து குடிக்கும் என்பார்கள். அது கற்பனையாக இருந்தாலும் ஆன்ம-உண்மையில் எது கலக்கபட்டாலும் அதை பிரித்து அறிபவன் அம்ஸத்தின் அம்ஸம் என கூறலாம் தானே?

அப்பழுக்கற்ற விஷயத்தை அம்ஸம் எனலாம். ரசிகர்களில் மிகவும் உயர்வானவனை பரம ரசிகன் என்பார்கள். அதுபோல அம்ஸத்தின் இயல்பில் உச்சமான உள் தூய்மை அடைந்தவனை பரமஹம்ஸன் என்பார்கள் என்பது உனக்கு தெரியுமா?

ஆன்மீகவாழ்வில் மிக எளிமையாக வாழ்ந்து தன் சிஷ்யன் நாரேந்திரன் மூலம் உலகுக்கு தெரியவந்த ராமகிருஷ்ணர் கூட தன்னை பரமஹம்ஸன் என அழைப்பதை விரும்பவில்லை. அதனால் தான் இச்சொல் அவரின் இயற்பெயருக்கு பின்னால் இருக்கிறது.

உன்னிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எந்த அம்ஸமும் தன்னை அம்ஸம் என கூறிக்கொண்டதில்லை. எந்த அம்ஸத்தின் தலைவரும் தன்னை பரமஹம்ஸம் என பிரகடனப்படுத்தியதில்லை.

நம்மிடைய வாழ்ந்த பல
பரமஹம்ஸர்கள் பிறப்பிலேயே பரமஹம்ஸர்களாக இருந்தார்கள். பல பரமஹம்ஸர்கள் பரமஹம்ஸர்கள் என தெரியாமலேயே இறைவனில் இணைது இருக்கிறார்கள். பரமஹம்ஸமாக இருந்துகொண்டு சகதியில் இருக்கக்கூடாதா பலர் கேட்கலாம்.


சகதியில் உழன்றதால் தானே மீனும்,தவளையும், பாம்புகளும் தாமரையும் நீருக்கு அடியில் வாழ்கிறது?

பரமஹம்ஸமான நீ, நீருக்கு மேல் அல்லவா வாழும் இயல்பு கொண்டவன்?

பரிசுத்தத்தின் உச்சமான பரமஹம்ஸமாக இருக்க தேவையில்லை, குறைந்தபட்சம் தாமரையாக இருக்கப்பழகு. குளத்தில் இருக்கும் புழுவாகிவிடாதே..


Tuesday, March 2, 2010

காசி சுவாசி - பகுதி 13

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே
----------------------------------------------------------திருமந்திரம் 512

நம்மில் பலருக்கு காசி என்றவுடன் பல்வேறு முன்கருத்துக்கள் உண்டு. சினிமாவோ, தொலைக்காட்சியோ, கதைகளோ காட்டும் காசியை நம்புகிறோம். பலருக்கு காசி என்றதும் அது என்னவோ வயசான பிறகு சென்று தங்கள் பாவத்தை கரைக்க வேண்டிய இடம் என நினைத்துவிடுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் காசியின் ஒரு படித்துறையில் அமர்ந்திருந்த பொழுது நான் கண்ட காட்சியை விவரிக்கிறேன்.

காலை 6 மணி இருக்கும், கங்கையின் படித்துறையில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டவாறு விடியலை வரவேற்க வேண்டுமானால் உங்கள் கண்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். கங்கையின் மேலே விழும் சூரிய கதிர்களை நான் ரசிக்கும் தருணத்தில் இரு முதியவர்கள் கைகளை பிடித்தபடி வந்தனர். ஒருவருக்கு சுமார் 80வயதும், ஒருவருக்கு 60 வயதுக்கு மேலும் இருக்கலாம்.

படித்துறையில் யாரும் இல்லை. இருவரும் எனக்கு அருகில் தங்கள் துணிகளை வைத்துவிட்டு என்னை பார்த்தார்கள். பிறகு மிகவும் வயதான முதியவர் நீர் இருக்கும் படிக்கு முன்படியில் அமர்ந்து கொண்டார். குறைந்த வயது முதியவர் அவரின் காதுகளில் கைகளை வைத்து காதுக்கு அருகே குனிந்தார்.

காங்கைக் கரையில் காதின் அருகே இவ்வாறு கைகளை வைத்து மந்திர உபதேசம் வழங்குவது இயல்பு. மந்திர உபதேசம் செய்வதற்கு நான் இடைஞ்சலாக இருக்க விரும்பாமல் சில அடிகள் நகர்ந்து உட்கார எண்ணி எழுந்தேன். அப்பொழுது அந்த வயது குறைந்த முதியவர் மற்றொருவரின் காதில் மட்டுமல்ல பலருக்கு கேட்கும் விதத்தில் உரக்க கூறிய மந்திரம் என்ன தெரியுமா?

”படியில் பாசம் அதிகமா இருக்கும், பார்த்து காலை வையுங்க”

இப்பொழுது சொல்லுங்கள் கங்கையையும், காசியையும் அனுபவிக்க சரியான வயது எது? வயது முதிர்ந்த காலத்தில் நடக்கவும், பார்க்கவும் திறன் குறைந்த சூழலில் அங்கே சென்று என்ன செய்யப் போகிறோம்?

புலன்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படும் பொழுது அங்கே சென்று அனுபவித்து ஆன்மீக அனுபவங்களை பெற்று வர வேண்டாமா? பிறகு முதிர்ந்த வயதில் மீண்டும் சென்று அங்கே கிடைக்கப்பெற்ற ஆன்மீகத்தை அசைபோட வேண்டாமா?


கங்கை ஆறு பல்லாயிரக்கணக்கான வருடங்களாக காசியை ஸ்பரிசித்து வருகிறது. அங்கே வருபவர்களை எல்லாம் ஒரு பிரதி எடுத்துக்கொள்ளும். உங்கள் உடலை மட்டும் பிரதியாக்குவதில்லை. உங்களின் ஆன்மாவையும் பிரதியாக்குகிறது. ஒருவர் கங்கையின் முன் அமர்ந்து கங்கையை ஆழமாக கவனித்தால் கங்கை அவர்களின் ஆன்மாவின் ஆழத்திற்கு ஊடுருவுகிறாள். உங்களின் முற்பிறவி வாசனைகளையும், ஞாபக அடுக்குகளையும் நினைவுபடுத்தி உங்களின் பூர்வ ஜென்மங்களை தூசு தட்டும். கங்கை உங்களை பல நூற்றாண்டுகளாக கவனித்து வருகிறாளே..!

காசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்பது பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். காசிக்கு சென்றால் மட்டும் அப்படி என்ன விசேஷம்? காசி என்ற நகரில் நம் உடலில் இருக்கும் ஐந்து வித ப்ராணனும் ஒரு வித கட்டுப்பாட்டில் இருக்கும். அங்கே சென்று நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு வைராக்கியத்தின் உச்சமாக செயல்படுத்த முடியும். அதனால் அங்கே அப்பழக்கம் தோன்றியது.

உண்மையில் காசியில்
சென்று எதையும் விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. திடமாக ஒரு முடிவு உங்கள் வாழ்க்கையின் நீங்கள் எடுத்து அதன்படி செயல்பட வேண்டுமானால் காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரில் அந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் உங்கள் முடிவு ஆன்மாவில் பதியப்பட்டு உங்கள் மனம் தடம் மாறினாலும் அம்முடிவு மாறாது.

நம் உடலில் இருக்கும் ஐந்து பிராணன்கள் மட்டுமல்ல சூழலில் இருக்கும் ப்ராணன்களும் கட்டுக்குள் வருகிறது. இதை சுட்டிக்காட்டவே முதல் பகுதியில் காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்களை பட்டியலிட்டு இருந்தேன்.

காசி நகரில் சுவாசம் மூலம் கடத்தப்படும் ப்ராணனை விட அங்கே இருப்பதால் கிடைக்கப்பெறும் ப்ராணன் அளவற்றது.அதனால் தான் இக்கருத்தை குறிப்பால் உணர்த்த இந்த தொடரின் சித்திர வடிவை அமைத்தேன்.


காசியில் நீங்கள் சுவாசிக்க வேண்டாம் அங்கே காசி வாசியாக இருந்தாலே ப்ராணன் உட்புகும்.

நேரம் கடக்கிறது... இன்னும் தாமதிக்காதீர்கள். காசியை அனுபவிக்க புறப்படுங்கள்.


- ஓம் தத் சத் -