Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label சுபவரம். Show all posts
Showing posts with label சுபவரம். Show all posts

Tuesday, November 9, 2010

சத் - சித் - ஆனந்தம்

பத்தி எழுத்து (column writingg) என்பது இலக்கிய வழக்கில் மிகவும் பிரசித்தி. எதை பத்தியும் எழுத தெரியாதவர்கள் பத்தி எழுத வருவார்கள் என வேடிக்கையாக பலர் கூறுவார்கள். சுவையான செய்திகளை துணுக்காக இல்லாமல் ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் வழங்குவதில் எழுத்தாளனுடைய ஆளுமை பத்தி எழுத்தில் வெளிப்படும்.

தமிழ் எழுத்துலகில் சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஞானி என பலர் வார இதழ்களில் இது போன்ற பத்தி எழுத்துக்களை எழுதினார்கள். சில புகழ்பெற்ற எழுத்தாளர் தன் வலை பக்கத்தில் “பழைய பஞ்சாங்கம்” என்ற பெயரில் பத்தி எழுத்து எழுதுவது உங்களுக்கு தெரிந்ததே..! :))

சுபவரம் என்ற ஆன்மீக மாத இதழில் ஆன்மீகத்தை பற்றி எழுதி கொண்டிருந்த நான், ஆன்மீக பத்தி எழுத துவங்கிவிட்டேன். சத்-சித்-ஆனந்தம் என்ற தலைப்பில் மூன்று முக்கியமான கருத்துக்களை எழுதுகிறேன். சென்ற மாதத்திலிருந்து இந்த பகுதி வெளியிடப்படுகிறது. உங்களின் பார்வைக்காக அந்த கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள். நான் பத்தி எழுத லாயக்கா என உங்கள் விமர்சனம் மூலம் அறிந்து கொள்கிறேன்.

-------------------------------------------
சத் - சித் - ஆனந்தம்

இறைவனின் முழுமையான சொரூபம் எது என்ற கேள்விக்கு சத் சித் ஆனந்த ரூபம் என்பார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சத் சித் ஆனந்தம் என்றால் விளக்கம் தெரியும் ?

உண்மையில் சத் சித் ஆனந்தம் என்பதை இணைத்து சச்சிதானந்தம் என தமிழ் வழக்கில் கூறுவார்கள். பலருக்கு இயற்பெயர் கூட இவ்வாறு இருப்பதுண்டு. இக்கருத்தை விளக்க வேதத்தையும், வேதாந்தத்தையும் மேற்கோள் காட்டி பேசினால் மணிக்கணக்காக பேசலாம். முழுமையான இந்த சொல்லை விளக்க ஆயுள் போதாது. ஏன் தெரியுமா?

இறைவன் என்ற பிரம்மாண்டத்தை சில மணித்துளிகளில் விளக்க முடியுமா?

இது திருப்பதி லட்டுவை ஒரே வாயில் எறும்பு சாப்பிட முயற்சிக்கும் செயல் அல்லவா?அந்த எறும்பு ஒரே கவளமாக சாப்பிட முடியாவிட்டாலும் ஒவ்வொரு பருக்காக சுவைத்து உண்ண முடியும். அப்படி இனி வரும் இதழ்களில் சத்- சித் - ஆனந்தம் என்ற தெய்வீக ப்ரசாதத்தை சுவைத்து உங்கள் வாழ்க்கையில் ஒளிமையமாக்கி கொள்ளுங்கள்.

சத்
---

லிங்க ரூபம் என்பது பலருக்கு சிவனின் திருமேனி, இறைவனின் உருவம். ஆனால் வெளிநாட்டினரும், தொல்லியல் நிபுணர்களும் இது இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறது என்கிறார்கள். வெளிப்படையாக சொல்வதென்றால் பலர் லிங்கத்தை பார்த்து கேலி செய்வதும் உண்டு. உண்மையில் லிங்க ரூபம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறதா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக கேட்பதற்கோ பயம். காரணம் நாம் விரும்பி வணங்கும் இறைவனின் உருவை பற்றி கேள்வி கேட்டு, பிறகு ஆமாம் இது இனப்பெருக்க உறுப்பைத்தான் குறிக்கிறது என சொல்லிவிட்டார்களானால் என்ன செய்ய?
மருந்தை சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என சொன்ன கதையாக லிங்கத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இது ஞாபகம் வருமே? அப்பறம் எங்கே சாமி கும்பிடுவது என எண்ணுபவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
கவனியுங்கள். லிங்க உருவம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிப்பதில்லை. லிங்கம் என்ற வார்த்தை ஆணின் உறுப்பை குறிக்க தமிழில் பயன்படுத்தப்படுகிறதே தவிர இதற்கும் சிவ லிங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அப்படியானால் லிங்கம் என்பது என்ன?
பஞ்ச பூதத்தால் உருவாக்கப்படும் எந்த ஒரு பொருளின் அடைப்படை உருவமும் லிங்கம் என்கிற நீண்ட உருளை வடிவமாகும். கோழி முட்டையின் வடிவம், மழை துளியின் வடிவம், நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களின் வடிவம், தாவரத்தின் விதைவடிவம் என எந்த பொருளின் அடிப்படை கோள வடிவமாக இருக்கும்.

மனித உடலின் அடிப்படையாக ‘செல்’ இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு செல்லின் வடிவமும், அதன் உட்கருவின் வடிவமும் நீண்ட கோள வடிவமே. இவ்வாறு கோளவடிவில் இருக்கும் இறையாற்றல் கொண்ட லிங்க வடிவத்திற்கு பாண லிங்கம் என்பார்கள். சமஸ்கிருதத்தில் பாணம் என்றால் குண்டு அல்லது புல்லட் என பெயர். பாணம் தொடுப்பது,அம்பு எய்வது என கேள்விபட்டிருப்பீர்கள். பாண லிங்கம் என்பது பார்க்க கோழி முட்டையை போல நீண்டு முனைகள் குவிந்து இருக்கும்.

ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் இத்தகைய லிங்க ரூபங்களை காணலாம்.

அனேக கோவில்களில் இருக்கும் லிங்கம் பாண லிங்க ரூபமாக இல்லாமல் முழுமையான மூன்று பிரிவுகளுடன் இருக்கிறது. லிங்கம், ஆவுடையார் மற்றும் லிங்க பீடம் என இவற்றை விளக்கலாம்.

உருவமற்ற ப்ரணவ மந்திரமான ஓம் என்ற ஓசையின் உருவ நிலையே லிங்கம் என்கிறார் திருமூலர். ஓம் என்ற ப்ரணவ மந்திரம் அ-உ-ம என்ற மூன்று ஓசைகளால் ஆனது. அ என்பது லிங்க பீடத்தையும், உ என்பது ஆவுடையாரையும், மஎன்பது லிங்கத்தையும் குறிக்கிறது. லிங்கம் மூம்மூர்த்திகள் என்ற பிரம்ம விஷ்ணு மற்றும் மஹேஷ்வரனின் ரூபம் என விளக்குகிறார். இவ்விளக்கம் கொண்ட திருமந்திரத்தை பார்ப்போமா?

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
- திருமந்திரம் - 1752

இனி லிங்கத்தை பற்றி யாராவது கேட்டால் உண்மையை விளக்குவீர்கள் தானே?
----
சித்
---
மிகவும் பிரசித்திபெற்ற கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. வரிசையில் இறைவனை வணங்க அனைவரும் போட்டா போட்டி நடத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவ்வளவு அவசரம் இல்லை என்பதால் மெதுவாக ஒதுங்கி கூட்டம் குறையும் வரை காத்திருக்க துவங்கினேன்.

ப்ரார்த்தனை முடித்துவிட்டு வந்த சிறுவன் ஒருவன் கையில் இருந்த குங்கும பிரசாதத்தை தூணில் கொட்டினான். அவனை கூப்பிட்டு, “தம்பி ஏன் இப்படி செய்கிறாய்?” என கேட்டேன். “சாமி கும்பிட்டுட்டு எல்லாரும் இதைத்தான் செஞ்சாங்க அத்தான் நானும் செஞ்சேன்” என்றான்.

அவனின் பதில் சுளீர் என என்னுள் தைத்தது. தவறு அவனுடையது அல்ல என உணர்ந்து, “தம்பி உங்க பள்ளியில் தூய்மை பற்றி எதுவும் சொல்லித்தரலையா? உங்க வீட்டில் சாப்பிட்டது போக மீதம் இருந்தால் சுவர்,ஜன்னலில் கொட்டி வைப்பாயா? கோவில் என்பது நம் வீட்டை விட மேலான விஷயம் அல்லவா?” என கேட்டேன்.

ஏதோ புரியாத பாஷையில் பேசியது போல என்னை மலங்க மலங்க பார்த்து விட்டு ஓடிவிட்டான். கூட்டம் குறைய துவங்கியதும் நானும் தரிசனத்திற்கு சென்றுவிட்டேன். பிறகு பிரகாரம் சுற்றி வெளியே வரும் பொழுது கையில் சிறிய காகிதத்தையும், துணியையும் வைத்துக்கொண்டு தூண் மற்றும் தரையை சுத்தம் செய்துகொண்டிருந்தான் அந்த சிறுவன்....!

இந்த காலத்தில் பெரியவர்கள் தான் சித்தம் கலங்கி இருக்கிறார்கள்.

சிறுவர்களும், இளைஞர்களும் கூறும் வழியில் கூறினால் ஆக்கப்பூர்வமாக இருக்கிறார்கள் என புரிந்து கொண்டேன். இனிமேல் நாமும் கோவில் ப்ரசாதங்களை கண்ட இடங்களில் போடாமல் இருப்போமா?

ஆனந்தம்
-----------

மனிதன் ஒரு விசித்திரமான உயிரினம். ஏன் இப்படி கூறுகிறேன் தெரியுமா? மிருகங்கள் உணவை தேடும், பறவைகள் வாழிடத்தை தேடும் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவையெல்லாம் தன்னிடம் இல்லாததை தேடுகிறது.

ஆனால் மனிதன் மட்டுமே தன்னிடம் இருப்பதையே தேடுவான். வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

ஆனந்தம் என்பது நமக்குள் எப்பொழுதும் இருந்தாலும் நாம் அதை தேடி ஓடுவோம். ஆணவம் என்பது ஆனந்தத்தை மறைக்கும் ஒரு திரையாக நம்மில் இருப்பதால் நம்மில் இருக்கும் ஆனந்தம் வெளியே எங்கோ இருப்பதாக நினைக்க வைத்து மனம் நம்மை ஏமாற்றிவிடுகிறது. நம்மில்

முழுமையாக ஆனந்தம் இல்லாத பொழுது ஆனந்தம் குறையும் இடத்தில் ஆணவம் நிறைந்து கொள்ளுகிறது.

சிலர் இதை புரிந்துகொள்ளாமல் இறைவனிடம் ஏதே ஒன்றை கொடுத்து அதற்கு பலனாக மற்றொன்றை பெற நினைப்பார்கள். சிதறு தேங்காய் உடைக்கிறேன், அபிஷேகம் செய்கிறேன் என துவங்கி ஆடு மாடு பலி இடுவது வரை செய்கிறார்கள்.

ஆசிரியர் ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்ததும் உங்களுக்கு காணிக்கையாக A முதல் Z வரை எழுத்துக்களை கொடுக்கிறேன் என ஒரு மாணவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிபட்ட செயல் தான் இறைவன் படைத்ததையே இறைவனுக்கு வழங்குவதும் என பலருக்கு புரிவதில்லை.

ஒரு புகழ் பெற்ற ஞானியை பார்க்க அந்த ஊரின் செல்வந்தர் வந்திருந்தார். அதிக நீர் பொங்கி ஓடும் ஆற்றங்கரை அருகே இருக்கும் சிறிய பாறையில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் ஞானி. அவரின் முன் ஒரு பட்டுத்துணியை விரித்து இரண்டு வைர கற்களை வைத்துவிட்டு விழுந்து வணங்கினார் செல்வந்தர்.
மெல்ல கண்களை திறந்த ஞானி என்ன வேண்டும் என்பது போல பார்த்தார். உங்களுக்கு காணிக்கையாக விலை உயர்ந்த வைரங்களை கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு ஞானத்தை போதியுங்கள் என்றார்.

கண்களை மூடு என்பது போல சைகை செய்தார் ஞானி. கண்கள் மூடியபடி சில நிமிஷங்கள் கரைந்தது. செல்வந்தர் சிறிது நேரம் கழித்து கண்கள் மெல்ல திறந்து பார்த்தால் ஞானியின் முன் ஒரே ஒரு வைரம் மட்டுமே இருந்தது.

“ஞான குருவே இரண்டு வைரம் உங்களுக்கு கொடுத்தேன். ஒரு வைரம் காணவில்லையே எங்கே?” என கேட்டார் செல்வந்தர்.

ஞானியோ சைகையால் ஆற்றில் வீசி விட்டேன் என காண்பித்தார். அதிர்ச்சியடைந்த செல்வந்தர், “என்ன ஆற்றில் வீசிவிட்டீர்களா எங்கே எறிந்தீர்கள்?” என்றார்.

பதட்டமடையாமல் ஞானி மற்றொரு வைரத்தை எடுத்து ஆற்றின் மையத்தில் வீசி, “இங்கே தான்” என சுட்டிகாட்டினார்.

இந்த செல்வந்தர் பிரம்ம ஞானத்தை இரண்டு வைரக்கல்லில் விலை பேசியது போல நாமும் நம் வாழ்க்கையில் அடைய வேண்டிய பெரிய விஷயங்களுக்கு சில்லறைத்தனமான பொருட்களை கடவுளுக்கு கொடுக்கிறோம்.

இறைவன் நமக்கு அருள்வதையே தொழிலாக கொண்டவன் என்றும் நாம் இறைவனிடத்தில் பெருவதையே வாழ்வின் அடைப்படையாக கொண்டவர்கள் என்பதை உணர்ந்தோம் என்றால் என்றும் ஆனந்தம் தானே?
--------------------
- நன்றி சுபவரம் அக்டோபர் 2010

Thursday, May 21, 2009

விசேஷ கால தாத்பர்யம்

நமது கலாச்சாரம் சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது. சனாதன தர்மம் என்பது அனைத்து செயலிலும் பரமாத்ம சொரூபத்தை காண்டு அதில் ஆழ்வது என எளிமையாக கூறலாம். உலகில் எந்த கலாச்சாரத்திலும் இல்லாத எளிமையும் கட்டுபாடற்ற தன்மையும் தான் நமது தர்மத்தை காக்கிறது என சொல்லலாம்.

இயற்கை நம்மை இரு துருவங்களில் பயணம் செய்ய சொல்லுகிறது. பிறப்பு இறப்பு, இரவு பகல், நன்மை தீமை, ஏற்ற தாழ்வு என எதிலும் இருமை இருப்பதை நாம் காண முடியும். ஆனால் இந்த இரு துருவங்களில் பயணிக்காமல் மைய்யத்தில் இருப்பது ஆன்மீகம். பிறப்பு இறப்பு இல்லாமல் முக்தி எனும் நிலை அடைவது ஆன்மீக வாழ்க்கை என சொல்லலாம். இந்த இரு துருவ நிலையில் வாழாமல் இறைவனுடன் ஒருமித்த நிலையில் வாழ கற்றுக் கொடுப்பது தான் நமது விசேஷ காலங்களின் நோக்கம்.

விரதம் இருந்து பட்டினி கிடப்பதும், அன்னாதானம் செய்து உண்பதும் என இரு தன்மைகளையும் நமது விசேஷ தினங்கள் கொண்டிருக்கின்றன. நீண்ட முடி வளர்ப்பதும் கடவுளுக்காக அதை காணிக்கை ஆக்குவதும் என இருதன்மைகள் கொண்டு நம்மை இறைவனுடன் ஒருமிக்க செய்கிறது இந்த நாட்கள். விசேஷ தினங்கள் என நமது முன்னோர்களால் முடிவு செய்யப்பட்ட நாட்களுக்கு பின்னால் பல்வேறான தத்துவங்கள் உண்டு.

விரதகாலங்களில் உண்ணும் உணவு, செய்யும் செயல் மற்றும் கால நிலை என அனைத்திலும் ஒரு வாழ்வியல் தத்துவங்களை வடிவமைத்த கலாச்சாரம் நம்முடையது.

நமது உடல் என்பது “பிண்டம்” இந்த பிரபஞ்சம் என்பது “அண்டம்” இதை இணைப்பதால் ஏற்படுவது ஆன்மீக ஞானம். இணைக்காமல் வாழும் நிலையின் பெயர் அஞ்ஞானம். அண்டத்தில் உள்ளது இந்த பிண்டத்திலும் உள்ளது எனும் கூற்றுக்கு நிகராக, பிரபஞ்ச ஆற்றலின் அதிர்வை நமது உடலில் நிலைபெறும் வகையில் அமைக்கப்பட்டது தான் நமது விஷேட தினங்கள்.

விசேஷ காலத்தை உற்று நோக்கினால் அதனுள் ஆன்மீகம், அறிவியல் மற்றும் மெய்ஞானம் என அனைத்தும் புதைந்திருக்கிறது.

திருவிழாக்களில் யானை, குதிரை, ஆடு என பல மிருகங்கள் மனிதனுடன் உலாவரும். ஆனால் அவற்றிக்கு தெரியாது இங்கே என்ன கொண்டட்டம் நடக்கிறது என்று. அது போல நாகரீகம் என்ற பெயரில் மனிதன் தனது சுயத்தன்மையை இழந்து சான்றோர்களில் தன்மை புரியாமல் இயங்க
துவங்கிவிட்டான். இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல் நாம் கொண்டாடப்படும் தினங்கள் எப்படி நம்மை ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொடுக்கும்?

விசேஷ காலமும் சூரிய சந்திரர்களும் :

வேத சாஸ்திரம் நமது பிரபஞ்சத்தில் பல சூரியன் இருக்கிறது என சொல்லுகிறது. துவாதச ஆதித்யர் எனும் பதம் பன்னிரு சூரியன் கொண்டது இந்த பிரபஞ்சம் என்கிறது. சூரியனின் ஆற்றல் அக்னி சொரூபமானது என்பதால் தான் சன்மதங்களை ஸ்தாபிதம் செய்த ஆதிசங்கரர் அதனுள் சூரிய வழிபாட்டை அமைத்தார்.

சைவம், வைணவம், கெளமாரம் (முருகன் வழிபாடு), கணபதியம் ( விநாயகர் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு) என பிரித்த பிறகு சூரிய வழிபாடு என்றும் ஆறாவதாக சங்கரர் அமைத்தார். ஆனாலும் நாளடைவில் அனைத்து வழிபாட்டு முறையிலும் சூரிய வழிபாடு ஒன்று இணைந்து விட்டது.

வேதத்தில் சூரியன் நமது ஆன்மாவை குறிப்பதாகவும், சந்திரன் நமது மனதை குறிப்பதாக சொல்லபடுகிறது. சூரியன் சந்திர நிலைகள் பஞ்சாங்கத்தில் திதியாகவோ , வாரமாகவோ நட்சத்திரமாகவோ அமைகிறது. அதனால் நமது ஆன்மாவும் மனதும் தூய்மை பெற்று மேன்மை அடையும் நாட்களில் திருநாட்களை நமது முன்னோர்கள் தொகுத்தார்கள்.

ஸ்ரீக்ருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என சொன்னாலும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவரின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம். காரணம் அந்த குறிப்பிட்ட நாளில் இருக்கும் பிரபஞ்சத்தின் கிரக நிலைகள் நம்மை ஸ்ரீகிருஷணரின் பாதகமலத்தை அடையச்செய்யும் வல்லமை வாய்ந்தது.

ஸ்ரீ ராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கு ஏது பிறப்பு? அவர்கள் நித்தியமானவர்கள் அல்லவா? இருந்தாலும் அந்த புண்ணிய தினம் கொண்டாட காரணம் நமது ஆன்மீக முன்னேற்றம் அடையத்தான்.

சூரியன் சந்திரன் இடையே இருக்கும் இடைவெளி திதி என அழைக்கப்படுகிறது. அமாவாசை, பெளர்ணமி எனும் திதிகள் அம்மனை வழிபடவும், சிவனை வழிபடவும் இருக்கிறது. மேலும் சதுர்த்தி விநாயகருக்கும், ஷஷ்டி ஸ்ப்ரமணியருக்கும், ஏகாதசி மாஹாவிஷ்ணுக்கும் ஏற்ற திதிகள் என கூறப்படிகிறது.

ஒரு குறிப்பிட்ட திதிகள் அன்று நாம் வழிபடும்பொழுது சூரியனாகிய ஆன்மாவும், சந்திரனாகிய மனதும் ஒன்றினைந்து நமது உடலில் ஆன்மீக மேம்பாட்டை ஏற்படுத்துகிறது. திதிகள் போல நட்சத்திரங்களுக்கும் சிறப்பு உண்டு.

திருவாதிரை, மகம், உத்திரம் மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நமது வழிபாட்டு நட்சத்திரங்களாக கொண்டாடுகிறோம். மேற்கண்ட நட்சத்திரங்கள் வரிசையாக படித்தால் இதில் என்ன விசேஷம் இருக்கு என உங்களுக்கு தோன்றலாம்.

ஆருத்திரா தரிசனம், மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் என அடைமொழியுடன் சொன்னால் அன்றைய தினத்தின் சிறப்பை உங்களால் உணர முடியும்.

பெளர்ணமியும் உள்நிலையும் :

முழு நிலவு எப்பொழுதும் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பெளர்ணமி அன்று சூரியன் சந்திரன் இருவரும் சூரிய மண்டலத்தில் நேர்கோட்டில் அமைவதால் நமது உடலிலும் சூரிய சந்திர கலைகள் நேர்கோட்டில் இயங்குகிறது. சந்திரமாம்ச மாத நாள்காட்டிகளில் பெளர்ணமியை மாதத்தின் முதல் நாள் என சொல்லுகிறார்கள்.

ஒரு வருடத்திற்கு மொத்தம் பன்னிரெண்டு பெளர்ணமி வருகிறது. சில பெளர்ணமி மட்டும் அல்லாமல் அனைத்து பெளர்ணமியையும் விசேட தினங்களாக நாம் கொண்டாடி வருகிறோம், சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் நமக்கு ஆன்மீக வழிகாட்டுதலை செய்கிறது.

பெளர்ணமி தேவியின் சொரூபமாக வணங்கிய அபிராமிபட்டருக்கு , அம்பாள் பூரண சந்திரனாக காட்சி அளித்த நிகழ்ச்சியை நினைத்துபாருங்கள். உள்ளார்ந்த பக்தியில் இந்த பிண்டத்திலிருந்து வணங்கினால் தேவி அந்த அண்டத்தையே மாற்றுவாள்.

அமாவாசை ஆளவற்ற ஆற்றலும் :

முழுநிலவு என்பது பூரணத்துவம் என்பதை காட்டுவதால் அதற்கு பூர்ணிமா என பெயர். நிலவு அற்ற நிலை அமாவாசை அல்லது சூன்ய நிலை என கூறலாம். சந்திரன் அண்டத்தில் மனதை குறிப்பதாக கூறினேன். அமாவாசை அன்று சந்திரன் இல்லாத நிலை, ஆன்மீகத்தின் உயர்நிலையான மனமற்ற நிலையை காட்டுகிறது.

அமாவாசை எப்படி ஏற்படுகிறது என்பதை உணர்த்த மஹாபாரத கதை ஒன்றை கேட்டிருப்பீர்கள். அமாவாசை அன்று ஒரு செயலை செய்யவேண்டும் என ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பஞ்சபாண்டவர்கள் அமாவாசைக்கு நிறைய நாள் இருக்கிறதே என வருத்தப்படுகிறார்கள். உடனே ஸ்ரீகிருஷ்ணர் ஆற்றங்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க துவங்குகிறார். இதை கண்ட சூரியனும்- சந்திரனும் குழப்பம் அடைகிறார்கள். கிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் கொடுக்கிறார் என்றால் தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோம் என எண்ணி இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை பார்க்க வருகிறார்கள்.

சூரிய சந்திரர்கள் ஸ்ரீக்ருஷ்ணரை பார்த்து கேட்கிறார்கள் ஐயா இன்று அமாவாசை இல்லையே ஏன் தர்ப்பணம் செய்கிறீர்கள் ? பரமாத்மா புன்னகையுடன் கூறினார், “சூரியனும் சந்திரனும் எப்பொழுது ஒன்றாக இருக்கிறார்களோ அன்று அமாவாசை, இன்று என் முன்னால் இருவரும் இணைந்திருக்கிறீர்களே,ஆகையால் அமாவாசை தானே?” என்றார்

பரமாத்மாவின் அருகாமையில் இருந்தால் அவரின் ஆற்றலால் தினம் தினம் முழுமையான நாளாக மாற்றம் அடையும்.

ஆன்மா மற்றும் மனம் எனும் தாத்பரியத்தில் சூரியன் சந்திரன் செயல்படும் பொழுது அண்டத்தில் சூரியன் மற்றும் சந்திரன் இணைந்து இருக்கும் நாள் தான் அமாவாசை. அதாவது ஆன்மாவில் மனம் ஒடுங்கிய நாள் இது என புரிந்துகொள்ளுங்கள். மனமற்ற நிலையில் நமது முன்னோர்களின் ஆன்மாவிற்கும் நமது ஆன்மாவிற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யும் நாள் அமாவாசை.

உத்திராயணம் மற்றும் தட்சிணாயனம் துவங்கும் மாதமாகிய தை மற்றும் ஆடிமாதம் அமாவாசைக்கு சிறப்பு உண்டு. அதே போல் புரட்டாசி மற்றும் ஐப்பசி அமாவாசைகளுக்கும் சிறப்பை கூற காரணம் உண்டு. வானியல் ரீதியாக புரட்டாசி மற்றும் ஐப்பசி காலத்தில் சூரியனிடமிருந்து பூமி அதிக தொலைவில் இருக்கும். ஆன்மாவாகிய சூரியனின் பலத்தை பெற அமாவாசை அன்று ப்ரார்த்தனை செய்கிறோம். ஐப்பசி அமாவாசைக்கு முன் தினம் நாம் திபாவளி கொண்டாடி உடலை மேம்படுத்திகொள்வது அதனால் தான்.

விசேட கால உணவும், உடையும் :

நமது பாரத தேசத்தில் சீதோஷண நிலை இடத்திற்கு இடம் மாறுமடும். கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப உடை மற்றும் உணவை உற்கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியம் என்பது ஆன்மீகத்திற்கு மிக அவசியமானது அல்லவா ?

கோடைகாலத்தில் அதற்கு ஏற்ப எளிய உணவும், குளிர்காலத்தில் திண்ம உணவும் உற்கொள்ளுவதற்கு ஏற்ப நமது விசேட நாட்கள் அமைந்துள்ளது. எத்தகைய உணவாக இருந்தாலும் அவற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்பதால் நமக்கு ஆன்ம பலம் கூடுகிறது.

தெற்கில் கோவிலில் பூஜை செய்பவர் மேல்சட்டை அணிந்திருக்க மாட்டார், வடக்கில் தனது உடல் முழுவதும் உடை அணிந்திருப்பார். கலாச்சாரம் ஒன்றானாலும் நமக்கு கால நிலைக்கு ஏற்ப உடை சம்பிரதாயம் உண்டு.

தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு அன்று புத்தாடை உடுத்தியும் அந்த கால நிலைக்கு ஏற்ற உணவை உண்டும் நம்மை மேம்மடுத்திகொள்வது இதன் நோக்கமாகும்.

உள்ளம் பெருங்கோவில் ஊண் உடம்பே ஆலையம் என்கிறார் திருமூலர், இறைவனை நாம் வணங்கி வழிபடுவது நமது உடலில் இருந்து துவங்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் தாத்பரியம்.

நமது பாரத தேசத்தில் மஹான்களும், யோகிகளும் குறிப்பிட்ட நாளில் அவதரித்து , குறிப்பிட்ட நாளில் ச்மாதி கொள்கிறார்கள். அன்றைய நாளில் அவர்களை பூஜித்து தியானித்தால் அவர்களின் ஆசியும் ஆற்றலும் நம்மில் உறையும்.

தற்சமயம் மக்கள் விசேஷ நாட்களை நல்ல நாட்கள் என எண்ணி அதில் சுபகாரியங்களை துவக்குகிறார்கள். உண்மையில் விசேஷ நாட்கள் விரத நாட்களை சுபகாரியம் துவக்க பயன்படுத்த கூடாது. அன்று இறைவழிபாடு செய்து விரதம் இருப்பதற்காக ஒதுக்கப்பட்ட நாட்களாகும்.

இனிவரும் காலங்களில் விஷேடங்களை ஒரு விடுமுறைநாளாக கருதி தொலைக்காட்சியில் தொலைத்துவிடாமல், அதன் உள்ளார்ந்த கருத்தை உணர்ந்து பிறருக்கும் எழுத்துரையுங்கள். அண்டத்தில் இருக்கும் பரமாத்மா சொரூபத்தை இந்த பிண்டத்தில் ஜீவாத்ம நிலையில் வழிபடுங்கள்.

டிஸ்கி : இந்த கட்டுரை மே மாத “சுப வரம்” எனும் ஆன்மீக மாத இதழில் வெளிவந்தது.