Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, January 27, 2020

மஹாயாகம் 2020 நிகழ்வு

நமது மாணவர் ஒருவர் 10 ஜனவரி 2020 அன்று நடந்த மஹா யாகத்தில் கலந்துகொண்டு அனுபவங்களை விவரிக்கிறார்.


இதுவே நாங்கள் நேரடியாக கலந்து கொண்ட முதல் மஹாயாகம். சுவாமிஜியின் ஆசிகளோடு மஹாயாகத்துடன் 2020க்குள் காலடி எடுத்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சுவாமிஜியின் சொற்களில் மஹாயாகம் - "இறையுனர்வை உணரும் ஒரு உன்னத வேள்வி. மார்கழி மாதம் பௌர்ணமி திருநாளில் ஒரு லட்சத்து எட்டு முறை பஞ்சாட்ச்சர மந்திரடத்துடன் மஹாயாகம் நடைபெறுகிறது. தனிமனிதனின் ஆன்மீக முன்னேற்றம், வாழ்க்கைவளம், மனத்தெளிவினை பெற்று மேலோங்கி வாழ வழிவகுக்கும் ஓர் சிறந்த நாள்"




                  
காலை ஆறரை மணிக்கு மஹாயாகம் நிகழ்ச்சி ஆரம்பமானது.முதலில் யாகசாலையில் விநாயகரை எழுந்ததருளச் செய்தார் சுவாமிஜி. பிறகு யாகசாலைக்கு ஒருபுறம் அமைந்திருந்த கூடாரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தார் சுவாமிஜி. அடுத்ததாக யாகசாலைக்கு இன்னொருபுறம் அமைந்திருந்த கோசாலையில் வீற்றிருந்த ஒரு பசு மற்றும் கன்றுகுட்டிக்கு கோபூஜை செய்துவிட்டு அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பசுக்கள் சூழ்ந்த கிருஷ்ணன் தூப தீபாராதனை செய்தார் சுவாமிஜி. கோபூஜை என்றவுடன் சுவாமிஜி கர்ம தந்த்ராவில் விழுப்புணர்வூட்டிய நமது கர்மாவை மாற்றம் செய்யும் விருஷ்ஷிகதானம், கோதானம் நினைவில் வந்து சென்றது.

மீண்டும் யாகசாலைக்கு வந்து தசமஹாவித்யா போன்ற அமைப்பில் இருந்த பத்து புள்ளிகளில் விளக்கேற்றி, கலச பூஜை மூலமாக எல்லா நதிகளையும் கலசங்களில் ஆவாகனம் செய்து பிறகு குரு பூஜை செய்தார் சுவாமிஜி. பிறகு தந்வந்திரி மந்திரம், மஹா மந்திரம் உட்பட பல மந்திரங்கள் ஓதப்பட்டபின் 100,008 எண்ணிக்கை கேட்டதைக் கொடுக்கும் பஞ்ச்சாட்சர மந்திர ஜெபத்தை ஆரம்பித்தார் சுவாமிஜி.

யாகசாலைக்கு ஒரு பக்கத்தில் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்த கூடாரத்தில் யாகசாலைக்கு இரு புறமுமாக மந்திர சாஸ்திரம் கற்ற சகோதர, சகோதரிகள் சுவாமிஜியுடன் பஞ்ச்சாட்சர மந்திரத்தை ஜெயித்தார்கள். சகோதரர்கள் நாத கேந்திராவில் கொடுக்கப்பட்ட தூய வெள்ளை வேஷ்டியும் மேல்துண்டும் போர்த்திக்கொண்டும், சகோதரிகள் தங்க ஜரிகையிட்ட தூய வெள்ளை சேலை உடுத்திக்கொண்டும் பஞ்ச்சாட்சர மந்திரம் ஜெபம் செய்தது நேர்த்தியாகவும், ஆன்மீக ஒழுங்குடனும், அந்த சூழ்நிலையின் இறைத்தன்மையை மேலும் மெருகூட்டுவதாகவும் இருந்தது.

யாகசாலைக்கு இன்னொரு பக்கத்தில் இருந்த கூடாரத்தில் மற்ற ஏனைய சகோதர சகோதரிகள் சுவாமிஜியுடன் பஞ்ச்சாட்சர மந்திரத்தை ஜெயித்தார்கள். இப்படி ஜபம் செய்து கொண்டிருந்தபோது ஒவ்வொருவராக சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பிரசாதமும் வழங்கப்பட்டது.

மஹாயாகம் என்ற நிகழ்வு தாந்திரீக முறைப்படி அன்றி வேதகால முறைப்படி செய்யப்படுவதால் எல்லோரும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பக்கத்து கூடாரங்களில் இருந்த நாத கேந்திராவின் கடைகளில் வேண்டியவற்றை வாங்கிக்கொண்டோம். 

முதல் கூடாரம் வருகையை பதிவு செய்யும் இடம் மற்றும் நன்கொடை வழங்கும் இடம். இரண்டாவது கூடாரம் நாத கேந்திராவின் மூலிகை பொருட்கள், மூலிகை சோப், மூலிகை பற்பொடி மற்றும் மூலிகை எண்ணெய்  போன்றவை விற்பனையில் இருந்தன. மூன்றாவது கூடாரத்தில் நாத கேந்திரா டி சர்ட், ஜபமாலைப்பைகள் போன்றவை விற்பனையில் இருந்தன. நான்காவது கூடாரத்தில் சுடச்சுட டீ, காப்பி வழங்கப்பட்டது.


இன்னுமொரு கூடாரத்தில் மஹாயாகம் சிறப்பாக பூர்த்தியான பிறகு, நாதகேந்திராவின் calenderகள் வினியோகிக்கப்பட்டன.

ஏன் இதை விவரமாக சொல்கிறேன் என்றால், எங்களில் பலர் முழு நேரமாக மஹாமந்திர ஜபம் செய்கையில், இங்கிருந்த volunteers மஹாயாகத்தில் கலந்துகொண்ட சிறிது நேரம் தவிர்த்து, மற்றும் சிற்றுண்டி சாப்பிட்ட சிறிது நேரம் தவிர்த்து, காலை 6.30 மணியிலிருந்து மாலை சுமார் 4.30 மணி வரை, கடமையே கண்ணாய், உதட்டில் எப்பொழுதும் புன்னகையுடன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சேவையை சிறந்த கர்ம வீர்ர்களாய் குரு சேவையாய் மிக சிறப்பாக செய்தார்கள். அடுத்த தடவை குருசேவை செய்ய இறையருளும் குருவருளும் அருள்புரிய வேண்டும்.

மறுபடியும் கூடாரத்திற்கு வந்து அமர்ந்து பஞ்ச்சாட்சர மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தோம். பதினொன்றறை மணி போல் சுவாமிஜி யாகசாலையில் இருந்து எழுந்து வந்து சிவலிங்கத்திற்கு ஒரு 30-45 நிமிடங்களுக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார்.

முதலில் பால் அபிஷேகம். பிறகு நீரால் சுத்தப்படுத்தி அடுத்து விபூதி, குங்குமம், சந்தனம் போன்று பல பொருட்களால் அபிஷேகம் செய்து பன்னீர் அபிஷேகத்தோடு நிறைவு செய்து, அலங்காரம் பண்ணி, தீபாராதனை காட்டி மீண்டும் யாகசாலைக்கு வந்தார் சுவாமிஜி. மந்திர ஜபம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. யாகம் நிறைவு பெறுவதற்கு சற்று முன்பாக, எல்லோரும் வரிசையில் நின்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட யாக பொருளை யாக குண்டத்தில் சேர்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.



சுமார் ஒரு மணியைப்போல் 100,008 பஞ்ச்சாட்சர மந்திர ஜபம் பூர்த்தி அடைந்த உடன், சுவாமிஜி யாக குண்டத்திற்கு தீபம் காட்டி பிறகு சிவலிங்கத்திற்கும் தீபாராதனை காட்டிய பிறகு மஹாயாகம் பூர்த்தி அடைந்தது.

பிறகு எல்லோரும் வரிசையில் நின்று சுவாமிஜின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டு தீர்த்தம் வாங்கிக்கொண்டோம்.

கலச பூஜை மூலமாக எல்லா நதிகளையும் கலசங்களில் ஆவாகனம் செய்து பிறகு அது தீர்த்தமாக கொடுக்கப்படும்போது நோய்நாசினியாய் செயல்படுகிறது. மேலும் ஜலம் மந்திரங்களால் சக்தியூட்டப்பட்டபிறகு மாற்றமடையும் தன்மைகளைப்பற்றி சுவாமிஜி முன்பே விளக்கி இருக்கிறார்.

பிறகு எங்களில் பலர் அங்கேயே அமர்ந்து குரு மந்திர ஜபம் செய்தோம்.
பின்னர் மதிய உணவு. 3.30 மணியைப்போல கோ தானத்திற்கு பெயர் கொடுத்தவர்கள் கோதானம் செய்தனர்.
4-5.30 சிறார்களின் நிகழ்ச்சி
5.30-7 சுவாமிஜின் சத்சங்கம்
7 இரவு உணவு, நிகழ்ச்சி நிறைவு.

நாதகேந்திராவில் இருந்த முழு நேரமும் மனம் லேசாக, அமைதியாக இருந்ததை உணர முடிந்தது. அங்கே ஒன்று குவிக்கப்பட்ட இறையாற்றல் எல்லா திக்குகளிலும் தெய்வீகத்தண்மையை படரவிட்டது போன்று தோன்றியது. சுவாமிஜியின் ஆசிகளுடன் அங்கு வியாபித்திருந்த இறையாற்றலையும் உள்வாங்கிக்கொண்டு நாதகேந்திராவிலிருந்து கிளம்பினோம்.

எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய குருவருளுக்கும், இறையருளுக்கும் கோடி நன்றிகள்.

அன்புடன்
ரா.தி. (RT)

அடுத்த மஹாயாகம் 2020 டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும்.