Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, December 31, 2011

மஹா யாகம்

மஹா யாகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Friday, December 16, 2011

திரிகுண ரஹஸ்யம் - பகுதி 2

இந்திய சித்தாந்தங்கள் கூறுவதில் இறைவனின் செயல் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். இச்செயலில் தலைவனாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என பிரிக்கிறார்கள். இவ்வாறு இறை நிலை தன் தன்மையை மூன்றாக பிரித்தால் தான் உருவ நிலைக்கு வர முடியும்.

குணமற்ற நிலையில் இருப்பதை நிர்குணம் என்கிறோம். மூன்று குணங்களும் இல்லாமல் இறைவன் நிர்குண பிரம்மமாக இருந்து பிறகு தன் செயலால் முக்குண நிலையை அடைகிறார். எப்பொழுது பிரம்மம் திரிகுண நிலைக்கு வருகிறதோ அந்த நொடியே பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது.

இந்திய கலாச்சாரத்தில் ஆறு வகை சமயம் (ஷண்மார்கம்) என கூறும் பிரிவுகளில் ஓவ்வொரு சமயமும் மூன்று தன்மையுடனேயே விளங்கிகிறது.

கணபதியம் என்ற விநாயகர் வழிபாட்டில் அவர் சித்தி-புத்தியுடன் மூன்று எண்ணிக்கையில் இருக்கிறார்.

கெளமாரம் என்ற சுப்ரமணியர் வழிபாட்டில் வள்ளி தெய்வானையுடன் முருகனையும், வைணவ முறையில் பூமி நீளா சமேத பெருமாளாகவும், சாக்த முறையான அம்பாள் வழிபாட்டில் லக்‌ஷ்மி, சரஸ்வதி, பார்வதியாகவும் மூன்று எண்ணிக்கையாக இறைவனை வணங்குகிறார்கள். சைவர்கள் சிவன், மஹேஸ்வரன், ருத்திரன் என்ற மூன்று நிலையில் சிவனை வணங்குகிறார்கள். சூரிய வழிபாடு செய்பவர்கள் சாயா மற்றும் மாயாவுடன் ஆதித்தியனான சூரியனை வணங்குகிறார்கள்.

சமணர்களிலும், ஜைனர்களில் கொள்கையும் மூன்று எண்ணிக்கையில் இருந்து திரிகுணத்தை பிரதிபலிக்கிறது.

கிருஸ்துவ வழிபாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியாக முக்குணங்கள் வெளிப்படுகின்றன.

இவ்வாறு உலக மதங்கள் மூக்குணங்களை கொண்டிருக்கின்றன. எனினும் சில மதங்கள் முக்குண பேதமில்லாமல் நிர்குண பிரம்மத்தை கூறினாலும், அதை பின்பற்றுபவர்கள் மூன்று பிரிவாக பிரிந்து திரிகுணத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இறைவனில் இந்த முக்குண நிலை அந்த முக்குணத்துடனே பெருக்கம் அடைவதால் நவக்கிரகங்கள் உருவாகிறது (3X3=9). அந்த நவ நிலையுடன் மீண்டும் திரிகுண பெருக்கம் ஏற்படுவதால் நட்சத்திர மண்டலம் ஏற்படுகிறது (9X3=27).

நவக்கிரகங்களாக வெளிப்பட்ட திரிகுண தொடர்ச்சியாக நவ ரசங்கள், ரத்தினங்கள் என உலகியல் பொருட்கள் வகைப்படுத்தப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்ல ஏனைய சாஸ்திரங்கள் இந்த மூன்று நிலை சார்ந்தே இருக்கிறது.

கால நிலையில் கூட ஆறு காலங்கள் (ருது) முக்குணத்திற்கு இரண்டு என்ற வீதத்தில் இயங்குகிறது. காலை, இரவு மற்றும் சந்தியாக்காலம் என ஓர் நாள் மூன்று தன்மையை கொண்டதாக இருக்கிறது.

நம் உண்ணும் உணவு முறை காலை உணவு சாத்வீகத்தையும், மதிய உணவு ரஜோ குணத்தையும் இரவு உணவு தமோ குணத்தையும் காட்டுகிறது. உணவின் தன்மையில் எளிமையான உணவுகள் சாத்வீகத்தையும், மசாலா-கார உணவுகள் ரஜோ குணத்தையும், பழைய உணவுகள் மற்றும் அசைவம் தமோ குணத்தையும் வெளிப்படுத்துகிறது.

திரிகுண நிலை பற்றி போதிய அளவுக்கு தெளிவு பெற்றோம். இம்மூன்று குணத்தில் எத்தகைய குண நிலை சிறந்தது என முன்பு பார்த்தோம். சாத்வீக நிலை அனைவருக்கும் பொதுவானதாகவும் துன்பம் விளைவிக்காத நிலையும் கொண்டது என்றாலும் சாத்வீக நிலையிலேயே எப்பொழுதும் இருப்பது சாத்தியமா என சிந்திக்க வேண்டும்.

அப்படியானால் எந்த குணத்தில் இருந்தால் நல்லது?

(தொடரும்)

-------- தமோ குணம் / திரிகுணம் (2/3)--------

Sunday, November 27, 2011

திரிகுண ரஹஸ்யம்


தற்சமயம் 3 பற்றிய பேச்சு ஊருக்குள் பிரபலமாக இருப்பதால் நாமும் மூன்று பற்றி பேசுவோம். வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு. கவலைப்படாதீர்கள் நான் நியூமராலஜி பற்றி பேசப்போவதில்லை.


இறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.


மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.

மூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.

தனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.

தன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.

இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.

சவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.

விலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.

காலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.

கனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.

இயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.
உதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.

பரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.

நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.

மனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.

யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.

நம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.

மேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.

நீரில் பால் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும். ஆனால் எண்ணெயில் நீர் சேர்த்தால் முழுமையாக இணையாமல் வேறுபட்டே நிற்கும். அதுபோல சாத்வீக நிலையில் இருப்பவர்கள் ரஜோ குணத்துடன் இணைந்து செயல்பட முடியும், ஆனால் தமோ குணத்துடன் இணைந்தாலும் முற்றிலும் இணைந்து செயல்பட முடியாது என்பதை இந்த உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.

மூன்று குணங்கள் உலக மதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமா?

(தொடரும்)
-------- ரஜோ குணம் / திரிகுணம் (1/3)--------

Friday, November 11, 2011

பழைய பஞ்சாங்கம் 11-11-11 @11.11

நல்உள்ளங்களுக்கு நன்றி

ஆன்மீக கல்வியை சிறந்த முறையிலும் பொருளாதார சுமை இல்லாமலும் கொடுக்க வேண்டும் அதற்கு உதவுங்கள் என கேட்டிருந்தேன். சின்ன அளவில் கோரிக்கை வைத்ததற்கே பலர் உதவ முன் வந்தார்கள். அதன் சுட்டி இங்கே : உதவி

வெளிநாட்டிலிருந்து உதவி செய்த சிவப்பிரகாசம், ஞானவேல், வித்யா, கீதா, ஆனந்த் ஆகியோருக்கு என் பேரன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொருளாதார ரீதியாக உதவி செய்தவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருப்பவர்கள் என்பதே இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். மேலும் ஐரோப்பா, அமெரிக்காவில் பயிற்சி நடத்த வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்தியாவில் யாரும் பயிற்சி நடப்பதற்கோ அல்லது வேறு உதவிகளையோ இன்னும் செய்யவில்லை. மேலோட்டமாக விசாரித்ததுடன் சரி...!

உள்நாட்டில் இருப்பவர்களிடம் உதவி பெறும் யோகம் என்னிடம் இல்லை என நினைக்கிறேன். இதற்காக நான் வெளிநாட்டில் வசித்து பிறகு இங்கே இருப்பவர்களிடம் உதவி பெறலாம் என நினைக்கிறேன்...!

பயிற்சி கொடுத்தால் கட்டணம் என்கிறார்கள். இலவசமாக கொடுத்தால் யாரும் அதற்கு உதவவில்லை... என்ன செய்ய? வள்ளலார் கடை விரித்தே கொள்வாரில்லை.. நான் எல்லாம் எம்மாத்திரம்..?
--------------------

பிணத்தீட்டு

திருவண்ணாமலைக்கு தென் திசை முழுவதும் சுடுகாடாக இருந்தது. இப்பொழுதும் அப்படித்தான். சுடுகாட்டிற்கு மத்தியில் தான் ரமணாஸிரமம் அமைந்திருந்தது. ஊரில் யாராவது இறந்துவிட்டால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்பகுதிக்கு எடுத்து வந்து அவர் அவர் குல வழக்கப்படி எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள்.

அந்தகாலத்தில் வாகன வசதியில்லாததால் பிணத்தை சுமக்க சிலர் இருப்பார்கள். இவர்கள் ஈமக்கிரியை முடிந்ததும் ரமணாஸ்ரமம் வந்து இளைப்பாரிவிட்டு செல்வார்கள். ஒரு நாள் ஆசிரமத்தில் இருக்கும் ஒருவர் இரண்டு வெளிநபர்களுடன் வாக்குவாதம் செய்வதை ரமணர் கண்டார். அவர்களுக்கு அருகே சென்று வெளிநபர்களிடம் என்ன என விசாரித்தார்.

தாங்கள் பிணம் சுமந்து வந்தோம், உச்சி வேளை என்பதால் மிகவும் களைப்பாக இருக்கிறது, உணவுக்கு ஆசிரமத்தில் மணி அடித்தார்கள். சாப்பிடலாம் என உள்ளே நுழைந்தால் இவர் தீட்டு என எங்களை உள்ளே விடவில்லை என்றனர். ரமணர் அவர்களை சாப்பிட உடனே உணவு கூடத்திற்கு போகச் சொன்னார்.

பிறகு ஆசிரமவாசியிடம், “தினமும் நாம நம்ம உடம்புங்கிற பிணத்தை தூக்கிட்டு இருக்கோம். அதுவே தீட்டு தானே? நானும் நீயும் தீட்டான ஆட்கள் தான்” என்றார்.

-----------------------------------------------------------
அழகிய தமிழ் மகன்

சில மாதங்களுக்கு முன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நடுவில் ஒரு நிறுத்தம் வந்ததும், வெளியே சென்று சில நிமிடம் நிற்பதற்காக இறங்கினேன். மீண்டும் ரயில் கிளம்பும் பொழுது வண்டியில் ஏறுவதற்கு வாசல் படிக்கு அருகே சென்றால் வழியை அடைத்துக்கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

“எக்ஸ்க்கியூஸ்மீ...” என சொல்லிவிட்டு வழிவிடுவார் என நினைத்தால் அவ்வழியே அடைத்துக் கொண்டு கண்களை உருட்டி என்னை பார்த்துக் கொண்டிருந்தார். “நீங்க தமிழில் பேசமாட்டீங்களோ?” என்றவரை கவனித்தால்... கலைந்த தலை, பலநாள் தாடி, நீல நிற ஜீன்ஸ், கருப்பு டீ-சர்ட்டில் சேக்குவாரோ படம் என அவர் இருந்த நிலையை பார்த்ததும் இன்னைக்கு இவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது.

“தமிழன் கிட்ட தமிழ்ல பேசுங்க.. அமெரிக்காவிலா இருக்கீங்க? தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கறதே உங்கள மாதிரி எக்ஸ்க்கியூஸ்மீ ஆட்கள் தான்..” என்றார்.

அதற்குள் ரயில் நகரத்துவங்கியது அதனுள் ஏறியபடியே அவருடன் பேசத்துவங்கினேன், “ஐயா, தமிழ் கலாச்சாரம்னு சொல்றீங்களே... எந்த தமிழன் டீ-சர்ட்டும், ஜீன்ஸும் போட்டிருந்தான்? கிராப்பு வெட்டி இருந்தான்? என்னை பாருங்க மேல ஒரு வேட்டி கீழ ஒரு வேட்டி, தலை மழிச்சிருக்கேன். காதில் கடுக்கன் போட்டிருக்கேன். நாக்கில் மட்டும் தமிழ் இருந்தா பத்தாது தம்பி, கலாச்சாரம் நம்மளோட எல்லா செயலிலும் இருக்கனும். நீங்க ஜீன்ஸ், டீசர்ட் போடலைனா நான் ஏன் உங்க கிட்ட ஆங்கிலத்தில பேசப் போறேன்? தமிழ் கலாச்சாரத்தை மொழியில் மட்டும் கடைபிடிக்கனும்னு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லி தந்திருக்காங்க. கலாச்சாரம் மொழியில் மட்டும் அல்ல, உடை, உணவு அப்புறம் நம்ம செயல் இதில் எல்லாம் இருக்கு” என என் பிரசங்கத்தை முடித்தேன்.

“சாமி நீங்க சொல்லும் போது தான் கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி” என சொல்லி திரும்பி நடக்கத் துவங்கினார். அப்பொழுது என் மொபைல் போன் ”பிரம்மம் ஒக்கட்டே...” என்று சுந்திர தெலுங்கு ஒலிக்கத் துவங்கியது. அவர் திரும்பி முறைக்கும் முன் மாயமானேன், :)
------------------------------

எல்லாம் உங்க புண்ணியம்

என்னிடம் சிலர் நலமா என கேட்டால், “எல்லாம் உங்க புண்ணியத்தில நலமா இருக்கேன்” என்பேன். உடனே “எனக்கு எங்க புண்ணியம்..” என அலுத்துக்கொள்வார்கள். தங்களின் புண்ணியத்தை கூட பிறருக்காக கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால் மேலும் புண்ணியம் தானே ஏற்படும்? ஆன்மீகத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு புண்ணியமும் கிடையாது. காரணம் இறைவன் என்னை இயக்குகிறான் என்னால் எதுவும் நடப்பதில்லை என்ற சரணாகதி நிலையில் இருப்பதே ஆன்மீகம். எதையும் நான் செய்கிறேன் என இல்லாத நிலையில் எனக்கு எப்படி பாவமும் புண்ணியமும் வரக்கூடும்? ஆனால் என்னிடம் நலமா என கேட்பவர்கள் இறைவனின் வடிவமாக நினைத்து எல்லாம் உங்க புண்ணியம் என்கிறேன். ஆனால் அவர்கள் புண்ணியத்தை தர மறுக்கிறார்கள்.

இப்ப சொல்லுங்க இது பாவமா புண்ணியமா?

--------------------------------------

ஜென்

கண்களின் கண்கவர் காட்சியும்
நாசியின் நல்நறுமணமும்
காதில் விழும் இன்னிசையும்
உண்ட உணவின் அற்புத ருசியும்
மனையாளின் ஸ்பரிசமும்
அனுபவிக்கும் ஷணத்தில்
அனுபவம் வெளியில் இருந்து கிடைப்பதில்லை
அனைத்தும் உள்ளிருந்தே கிளர்ந்தது என
உணர்ந்து என்னையே காணவும்,
முகரவும், கேட்கவும், சுவைக்கவும்
துவங்கி ஸ்பரிசித்து வருகிறேன்.

Wednesday, November 9, 2011

www.அகஸ்திரை பாரு.com

சுப்பாண்டி சில நாட்களாக என்னை கண்டும் காணாதது போல இருந்தான். அவனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கேட்டதில் அதிர்ச்சி தகவலை தந்தான் சுப்பாண்டி. இண்டர்நெட்டில் ஏதோ தேடிக்கொண்டிருக்கும் பொழுது அகஸ்தியரை நேரில் காணும் மந்திரம் ஒரு வெப்சைட்டில் இருந்ததாகவும் அது எப்படி சொல்ல வேண்டும் என்ற வழிமுறையும் கொடுக்கப்பட்டுருந்தது என்றான். நானும் சுவாரசியம் அடைந்து, என்ன மந்திரம் அது என கேட்க, முகத்தை ஏதோ சீக்கு வந்த கோழி போல வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். ஏனப்பா என்னாச்சு என்றேன்...சும்மா கேட்டா சொல்லிடுவோமா? அதுக்கு எல்லாம் தட்சணை தரணும் என்றான்.

என்ன கொடுமை என தலையில் அடித்துக்கொண்டு என்ன தட்சணை என கேட்க, 101 ரூபாய் என்றான். நானும் அவன் கையில் கொடுத்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பவ்வியமாக மந்திர உபதேசம் கேட்க தயாராக நின்றேன். என் காதின் அருகே வந்து....

டபிள்யூ டபிள்யூ டபிள்யூ அகஸ்தியரை பாரு டாட் காம் என கூறிவிட்டு சென்றான். அவன் கூறிய வெப்சைட்டில் இருந்த மந்திரம் சுமாராக இப்படி இருந்தது... “அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வா வா” என துவங்கி கொஞ்சம் டெரரான மந்திரமாக இருந்தது. மந்திரம் 1008 முறை தினமும் கூறிவர வேண்டும். 41 நாள் சொல்ல வேண்டும், இப்படி பத்தியம் இருக்க வேண்டும் என பல கன்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டிருந்தது. இது பத்தாது என்று அகஸ்தியர் 41ஆம் நாள் முடிவில் நம் முன் தோன்றும் பொழுது எப்படி இருப்பார் என அவரின் அங்க லட்சணத்தையும் கூறி இருந்தார்கள்.

நமக்கு மந்திரம் சொல்லுவது, பத்தியம் இருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நம்ம சீனியரிடம் அவரின் அனுபவத்தை கேட்க எண்ணினேன்.

சுப்பாண்டி நீ இந்த அகஸ்திய மந்திரத்தை சொன்னியா? 41 நாள் விரதம் எல்லாம் இருக்கனுமாமே? நீ அகஸ்தியரை பார்த்தியா? என கேட்டேன்.

தன் அகஸ்திய அனுபவங்களை கூற துவங்கினான் சுப்பாண்டி...
“ஓ முதல் நாள் தொடங்கி தினமும் பத்தியம் இருந்து காலையில் சூரிய உதயம் முன்னாடி அந்த மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவ சொன்னேன். அதுவும் வாய்விட்டு - அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வாவா சொல்லும் பொழுது ஒரு வைப்பிரேஷன் தெரிஞ்சுது...” என்றான்.

அப்புறம் கடைசி நாள் அகஸ்தியர் வந்தாரா? - இது நான்.

“கடைசி நாள் நான் சொல்லி முடிச்சுட்டு மெல்ல கண் திறந்தா அங்கே இரண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க..”

“சூப்பர் சுப்பு.. எப்படியோ ஸித்தி பண்ணிட்ட..”

“நீங்க வேற சாமி .....பஞ்சாப் சர்தார்ஜி ரெண்டு பேர் எம் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. யாரு நீங்கனு கேட்டேன். ஒருத்தர் அங் சிங்-காம், இன்னொருத்தன் மங் சிங்-காம்.” என சொல்லி தான் பெற்ற அனுபவத்தை கதறலுடன் முடித்தான் சுப்பாண்டி.

எனக்கு 101 ரூபாய் நஷ்டம்..!

------------------------------------------------------------
டிஸ்கி :

மந்திரங்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் குருவழியில் பெறுவதே சிறந்தது. சில இணையதளங்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

அகஸ்திரயை, வசிஷ்டரை காணும் மந்திரம் என கூறி அவர்கள் இந்த உயரம் இருப்பார்கள் தாடி வைத்திருப்பார்கள். கையில் கமண்டலம் இருக்கும். என விவரித்து இந்த மந்திரம் சொன்னால் அவர்கள் தெரிவார்கள் என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும்.

மந்திரம் உபதேசிப்பவர்கள் மந்திரத்தை மட்டுமே கூறுவார்கள். அதன் விளைவை கூற மாட்டார்கள். கூறினால் நீங்கள் கற்பனையில் நடந்ததாகவே நினைப்பீர்கள் பிறகு ஆன்மீகத்தின் உண்மையை உணராமல் கற்பனை உலகில் வாழ்வீர்கள்.

அகஸ்தியரையும் பதினெட்டு சித்தர்களையும் காணும் மந்திரம் சொல்லுவதை விட, இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது. அதற்கான மந்திரத்தை சொல்லி அந்த உயர் பொருளை கண்டீர்களானால் பதினெட்டு சித்தர்களும் உங்களை காண வருவார்கள். நீங்கள் அவர்களை பார்க்க பத்தியம் இருக்க வேண்டியதில்லை..!

Tuesday, November 1, 2011

வானில் கேட்ட அசிரிரீ

போஸ்ட் ஆபீஸில் தபால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி என்னை உற்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரை பார்த்ததும் புன்னகையுடன் என்னிடம் வந்து...

”நீங்க....அந்த”

“ஆமாம்.. ப்ரணவ பீடம்..சொல்லுங்க..”

”அது இல்லைங்க...நீங்க....ச்சே சரியா ஞாபகம் வரலை...”

“வேதிக் ஐ ப்ளாக் எழுதரவனும் நாந்தான்..அத்தானே நீங்க கேட்கனும்?..”

“ம்..இல்லை.. தொண்டையில நிற்குது ஞாபகம் வரல...ச்சே..”

“பதட்டப்படாம யோசிங்க.. எம் பேரு ஸ்வாமி ஓம்கார்”

“ம். இப்ப ஞாபகம் வருது ... அந்த தி....”

“ஆமா.ஆமா..தினம் தினம் திருமந்திரம் புத்தகம் எழுதுனது நாந்தான்”

“அது இல்லைங்க.. திலகாவோட மச்சினன் தானே நீங்க?”

"................................."

அப்பொழுது கேட்ட அசிரிரீ “ எத்தனை வாட்டி ஆணவம் அழிக்க உதவினாலும் நீ திருந்தமாட்ட...”

Saturday, October 22, 2011

காலில் விழும் கலாச்சாரம்

நம்ம ஊரில் காலில் விழும் கலாச்சாரம் என்பது பெருகி வருகிறது. சென்ற மே மாதம் முதல் நாட்டில் காலில் விழுந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

உலகில் இருக்கும் மிக மோசமான பழக்கங்களில் ஒன்று காலில் விழுவது. மிக காட்டுமிராண்டித்தனமான செயல் காலில் விழுவது என்பதை மறுக்க முடியாது. ஏன் என இந்த கட்டுரை முடிவில் தெரிந்து கொள்வீர்கள்...!

எந்த விலங்கும் மற்றொரு விலங்கின் காலில் விழுவதில்லை. பூச்சிகள் கூட மற்றொரு பூச்சியின் காலில் விழுவதில்லை. சிலந்திக்கு எட்டு கால்கள் இருந்தும் அதன் காலில் எந்த ஒரு பூச்சியும் விழுவதில்லை என்பதன் மூலம் பூச்சிகள் எப்படிபட்ட விழிப்புணர்வு நிலையில் இருக்கிறது என்பது உணர முடியும். சரி சரி... நீங்கள் பொறுமை இழக்கும் முன் விஷயத்திற்கு வருகிறேன் :)

அனைத்து மனிதர்களும் சமமாக பாவிக்க வேண்டும் எனும் பொழுது எதற்கு மற்றொருவன் காலில் விழ வேண்டும்? விலங்குகளும் பிற உயிரினமும் ஆணவம் மிகுந்து திரிவதில்லை. நானே உலகை காக்கிறேன் என சொல்லி இயற்கை வளங்களை அழிப்பதில்லை. அதனால் விலங்குகளுக்கு காலில் விழும் அவசியம் இல்லை..!

வணங்குதல் என்ற செயல் ஒரு மனிதனை இறைவனாக்குகிறது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள் வணங்கப்படுபவன் இறைவனாவதில்லை. வணங்குபவனே இறைவனாகிறான்..!

எப்பொழுது நாம் பிற விஷயத்தை வணங்குகிறோமோ அப்பொழுது நாம் நம் அகந்தை நீங்கி நான் வணங்கப்படும் பொருளை விட எளியவன் என்ற எண்ணம் வருகிறது. நான் முற்றிலும் சரணாகதி அடைகிறேன் என்பதே வணங்குதலின் அடிப்படை செயல். ஒருவர் தன் அகந்தையை சரணாகதி செய்துவிட்டால் மீதம் இருப்பது இறைநிலை என்ற சுத்த ஆன்ம உணர்வு தானே? அதனால் தான் கூறினேன் வணங்குபவன் இறைவனாகிறான் என்று.. இப்பொழுது புரிந்ததா?

மஹாபாரதத்தில் ஒரு காட்சி. மிகவும் சோகமான தருணம் அது. திரெளபதியை மானபங்கம் செய்ய துச்சாதனன் தூக்கிவந்து அவளின் துகிலை உரிக்க துவங்குகிறான். பலர் முன் அவமானப்படாமல் இருக்க தன் கையை உடல் மேல் வைத்து தன் மானத்தை காக்கிறாள் திரெளபதி. கணவர்கள் கூடி இருக்க, பெரியோர்கள் முன்னிலையில் இந்த அவச்செயல் நடைபெறுகிறது, தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து முடியாத நிலையில் திரெளபதி பரமாத்மாவை அழைக்கிறாள். இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ‘க்ருஷ்ணா...!” என்ற ஒரு குரல் எழுப்புகிறாள். நடந்த மற்றவை உங்களுக்கே தெரியுமே?

தான் என்ற அகந்தை இருக்கும் வரை அவளை யாரும் காக்க முடியவில்லை. தன் கையை உயர்த்தி சரணடைந்ததும் அவள் காக்கப்பட்டாள். அதுபோல உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுகிறேன் என நீங்கள் நினைக்கும் வரை உங்களை நீங்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும். இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அனைத்தையும் இறைநிலை பார்த்துக்கொள்ளும்.

ஆனால் சரணாகதி அடைதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் என நினைத்துவிடாதீர்கள். உலகில் மிகக்கடினமான காரியம் சரணாகதி அடைதல். ஆன்மீக பயிற்சிகளும் தியானமும் முடிவில் இந்த நிலைக்கே நம்மை இட்டுச்செல்லுகிறது. சரணாகதி அடைய நம்மை படிப்படியாக தயார் செய்வதே அனைத்து ஆன்மீக பயிற்சிக்கும் அடிப்படை என்பது உங்களுக்கு தெரியுமா?

சரணாகதி கடினம் என்கிறேன் அல்லவா? அதை பயிற்சி செய்து பார்ப்போம். இறைவன் நம் அனைவருக்கும் உணவு அளிக்கிறான். நம் உணவு என்பது இறைவன் நமக்கு அளிக்கும் பிச்சை என்பதை நீங்கள் நம்பினால் இப்பயிற்சிக்கு நீங்கள் சரியானவர். வாருங்கள் முயற்சிப்போம். நீங்கள் முன் பின் போகாத ஊருக்கு செல்லுங்கள். அவ்வூர் பாஷை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் உத்தமம். அங்கே சென்று ஓர் இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் சென்ற இடம் வழிபாட்டு ஸ்தலமாக இருக்க வேண்டும் என்பதில்லை. யாரிடமும் நீங்கள் பேசவேண்டாம். அமைதியாக உங்களை கவனித்துக்கொண்டு இருங்கள். தினமும் படியளக்கும் இறைவன் நமக்கு ஏதேனும் செய்வாரா என பார்ப்போம்...! முழு சரணாகதி நிலையில் இருந்தாலே இதை உங்களால் பயிற்சி செய்ய முடியும். இது சவால்..

புராண கதை கொண்ட சினிமாவில் இறைவன் அனைவருக்கும் படியளப்பவன் என கூறி ஒரு பெட்டியில் எறும்பை அடைத்து வைத்திருப்பார்கள். முடிவில் அப்பெட்டியை திறந்தால் அதன் வாயில் ஒரு சிறு பருக்கு இருப்பதை காட்டுவார்கள். பார்த்ததுண்டா? எறும்புக்கு பதில் நம்மை அவ்விடத்தில் வைத்துப்பாருங்கள். உங்களின் ஆணவ அளவு என்ன சரணாகதிக்கு நீங்கள் எவ்வளவு தயார் என புரியும். ஒரு பைத்தியக்காரன் இச்செயலை செய்ததை ஸ்ரீசக்ர புரி தொடரில் முன்பு படித்திருப்பீர்கள்.

இறைவனை உணர வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தால் தான் ஒருவனால் சரணாகதி அடைய முடியும். சரணாகதி அடையாமல் ஆன்மீகத்தில் எதையும் சாதிக்க முடியாது.

புகழ்பெற்ற ஜென் கதை ஒன்று கேள்விபட்டிருப்பீர்கள். ஒருவர் ஜென் குருவிடம் வந்து நான் இதை கற்றேன், இதில் புலமை பெற்றேன் என கூறிக் கொண்டு தனக்கு ஜென் தன்மையை போதிக்கும் படி கேட்பார். அவருக்கு தேனீர் வழங்கும் ஜென் குரு அந்த கோப்பை நிறைந்து வழிய வழிய தேனீர் ஊற்றுவார். முதலில் உன் கோப்பையை காலி செய்தாலேயே நான் புதிதாக நிரப்ப முடியும் என்பது அதன் அர்த்தம். அதுபோல இறை அனுபூதி உணர ஆணவத்தை காலி செய்தால் போதுமானது.


கோவையில் உள்ள வெள்ளிங்கிரி மலை 1800 அடி உயரத்தில் இருக்கும் ஏழு மலைகளின் தொகுப்பு. சாதாரணமாக இம்மலைக்கு சென்று வர முடியாது. உடல் நன்றாக இருப்பவர்களே தடுமாறி விடுவார்கள். அதனால் மலைக்கு மேல் செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த மலைக்கு வந்து வழிபடுபவர்களுக்கு ஓர் விசித்திர பழக்கம் உண்டு.

மலைக்கு மேல் சென்று திரும்பி வரும் ஆண்களின் கால்களில் அடிவாரத்தில் இருக்கும் பெண்கள் விழுந்து வணங்குவார்கள். அதுவும் முன் பின் தெரியாத ஆண்களின் கால்களில் பெண்கள் விழுந்து வணங்குவார்கள். தங்கள் காலில் விழுந்தால் தான் கஷ்டப்பட்டு மலை ஏறிய புண்ணியம் அவர்களுக்கு போய்விடும் என ஆண்கள் ஓடுவார்கள். இது வெள்ளிங்கிரியில் பங்குனி முதல் வைகாசி வரை இயல்பாக நடக்கும் காட்சி.

ஒரு முறை நான் வெள்ளிங்கிரி சென்று திரும்பும் பொழுது என்னுடன் வந்தவர் இந்த செயலை கண்டு மிகவும் கோபம் கொண்டார். பெண்களுக்கு சம உரிமை இல்லையா? அவர்கள் ஏன் மலை ஏறக்கூடாது? பெண்கள் விமானமே ஓட்டும் காலம் இது என தன் பெண் உரிமை பிரச்சாரத்தை துவங்கினார்.

அப்பொழுது நான் கூறினேன், “ ஆண்களுக்கு ஆணவம் அதிகமையா... அதனால் தான் அதை அடித்து நொறுக்க ஏழுமலைக்கு மேல் சென்று திரும்ப வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் நின்ற இடத்தில் வணங்குவதாலேயே தங்களின் ஆணவத்தை தொலைத்துவிடுகிறார்கள். இப்பொழுது சொல் யாருக்கு அதிக உரிமை கொடுத்திருக்கிறார்கள் என்று” என கேட்டேன்.

வெள்ளிங்கிரி மலை ஏறி உடல் நொந்து போயிருக்கும் பொழுதும் தன் ஆணவம் கரையாமல் பெண் உரிமை பேசியவரின் ஆணவம் என் விளக்கத்தால் நொந்து போனது.

ஆன்மீக சூழலில் இருப்பதால் பலர் என் கால்களில் விழுவதுண்டு. அவர்களை நான் தடுப்பதில்லை. ஒரு மனிதன் தான் சரணாகதி அடைய முயற்சி செய்யும் பொழுது அதை நாம் தடுக்கலாமா? தூண்டத்தானே வேண்டும்?

ஒருவர் என்னை வணங்குகிறார் என்றால் என் உடலையோ என் தோற்றத்தையோ வணங்குவதில்லை. மாறாக இறையாற்றல் கொண்ட ஆன்மாவை வணங்குகிறார். ஆன்மா என்பது ஆளுக்கு ஆள் வேறுபடாது. உங்களுக்குள் இருப்பதே என்னுள்ளும் இருக்கிறது. அதனால் என்னை வணங்குபவர்களை தன்னையே வணங்குகிறார்கள்.

சில ஆன்மீகவாதிகள் பிறர் காலில் விழுந்து வணங்க அனுமதிப்பதில்லை. இதற்கு பல காரணம் இருந்தாலும் அடிப்படையாக இருக்கும் காரணம் விசித்திரமானது. வணங்கும் பொழுது அனைத்தையும் உன்னிடம் கொடுத்து சரணாகதி அடைகிறேன் என் ஒருவர் சொல்லும் பொழுது அவரின் கர்மவினையும் அதனுள் அடக்கம் அல்லவா? அதனால் ஆன்மீகவாதிகள் பிறரின் கர்மா தனக்கு வந்துவிடும் என நினைத்துகாலில் விழ அனுமதிப்பதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் காலில் விழுந்து வணங்கினால் தன் கர்ம வினைகளை அதிகரித்து தான் கர்மவால் பாதிக்கப்படுவோம் என்பதே அவர்களின் சோசியலிஷத்திற்கு காரணம் என்பதை அவர்களுடன் பழகும் பொழுது புரிந்து கொண்டேன்.

பல்லாயிரக்கணக்கானவர் கர்மவினை முதல்கொண்டு அனைத்தையும் கொடுத்து சரணாகதி அடைகிறார்கள் என்றால் அவர்கள் அனைவரையும் இறைநிலை பெறச்செய்யும் இச்செயலால் எனக்கு பல்லாயிரக்கணக்கான பாவங்களும் கர்மவினைகளும் வந்தால் அதைபற்றி எனக்கு கவலை இல்லை..!

இறைவன் தன்னை பிறர் அடைய என்னை படிக்கட்டாக படைத்திருக்கிறான் என நினைத்து பெருமை கொள்வேன். அதைவிடுத்து என் காலில் விழுந்து வணங்காதீர்கள் என என்னை காத்துக்கொள்ள மாட்டேன்.

அதேபோல என்னை சிலர் வணங்கினாலும் , அவர்கள் அருகில் இருப்பவர்கள் வணங்கமாட்டார்கள். அவர்களை நான் நிர்பந்திப்பதில்லை. சரணாகதி என்பது அனைவருக்கும் ஒரே இடத்தில் நடப்பதில்லை..!

கிருஷ்ணனை காண சென்ற அர்ஜுனனும் துரியோதனனும் என்ன செய்தார்கள்? அர்ஜுனன் காலின் அருகே அமர்ந்தான், துரியோதனனன் தலைக்கு அருகே அமர்ந்தான். காலின் அருகே இருந்தவனுக்கு உபதேசம் கொடுக்கப்பட்டது.

நான் யாருக்கும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் என களம் இறங்குவதில்லை. ஒருவர் என்னை வணங்கினால் அவர் சரணாகதி அடைய நான் கருவியாக இருக்கிறேன். அவ்வளவே..!

மற்றபடி நான் வரம் தருவதோ அல்லது அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைப்பதோ இல்லை.
தன் அகந்தையை என் காலில் இட்டு சென்றவனுக்கு என்ன வரம் தருவது? அவனே இறைவனாகிவிட்டானே...! இறைவனுக்கே யாரேனும் வரம் தருவார்களா?

பாருங்கள் காலில் விழும் கலாச்சாரம் என்ற காட்டுமிராண்டித்தனத்தை பேசத்துவங்கி என்ன என்னவோ உளறிக் கொண்டிருக்கிறேன்.

நாகரீகம் என்ற பெயரில் இயற்கை வளங்களையும் சக மனித நேயத்தையும் அழித்த நம்மைவிட காட்டை நேசித்து வாழ்ந்த் காட்டுமிராண்டிகள் மேலானவர்கள் தானே?

நான் உயர்ந்தவன் பிறர் காட்டுமிராண்டிகள் என கூற உங்களை தூண்டுவது எது என பாருங்கள் அதை யாரிடமாவது கொடுத்து உங்களை காலியான கோப்பை ஆக்கிக்கொள்ளுங்கள்.

இத்தனை சொல்லியும் நான் யார் காலிலாவது விழுவேன் என நீங்கள் அடம் பிடித்தால் , ஒருவர் காலில் விழும் முன் சிந்தியுங்கள். உங்களை தாழ்ந்தவர் என்றோ அல்லது உங்களை தன்மானமற்ற அடிமையாக எண்ணுபவர்கள் காலில் விழாதீர்கள். அது வணங்குதல் என்ற சரணாகதி தத்துவத்தை நீங்கள் அசிங்கப்படுத்தும் செயல்.
உங்களை தாழ்வாக நினைக்காதவர்கள் காலில் விழலாம் என கூறினேன் அல்லவா? யார் அவர்கள்? நம் பெற்றோர்கள் தம் குழந்தையை குறைவாக எண்ண மாட்டார்கள். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? நம் ஆசிரியர்கள் நம்மை என்றும் தாழ்வாக எண்ண மாட்டார்கள். ஆன்மீக உயர்வு கொண்டவர்கள். அனைத்தையும் ஆன்மாவாக பார்க்கக் கூடியவர்கள் என்பதால் இவர்களையும் நாம் வணங்கலாம்

சுருங்கச்சொன்னால் மாதா,பிதா, குரு தெய்வம் இவற்றை வணங்குகள். இவர்களை வணங்காமல் எதை வணங்கினாலும் நீங்கள் ஆன்மீக உயர்வு பெறப்போவதில்லை.

வேறு ஒருவரை நீங்கள் வணங்கினால் ஆன்மீகத்தில் உயர்வு பெற முடியாது. வேண்டுமானால் நீங்கள் அமைச்சர் ஆகலாம்...! என் வாழ்த்துக்கள்.

Sunday, October 16, 2011

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தான் சுப்பாண்டி திடீரென சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்புவான். சுப்பாண்டியின் கேள்வியால் நிலை குலைந்து போவேன். சமாளித்து மீண்டும் வருவதற்குள் வேறு ஒரு கேள்வியை வீசுவான். இது சுப்பாண்டியின் இயல்பு.

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மும்பைக்கு பயணமாக தயார் நிலையில் இருக்கும் பொழுது திருநெல்வேலி இருட்டுகடை அல்வா பற்றிய கேள்வி எழுப்புவான். உபநிஷத் பற்றிய வகுப்பில் டிவி சீரியலின் அடுத்த எப்பிசோடு என்ன ஆகும் என முகத்தை குழந்தை போல வைத்து கொண்டு விவாதிப்பான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். என் பின்னே பிரசன்னமான சுப்பாண்டி, “சாமி எனக்கு ஒரு சந்தேகம்..” என துவங்கினான் அன்றைய தொழிலை.

என்ன...? என்பது போல பார்த்தேன்.

“கால பைரவர்னா யாரு சாமி?”

“கால பைரவர்ன யாரு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி பைரவர்னா யார்ருனு தெரிஞ்சுக்க சுப்பு..” என்றவாரு தொடர்ந்தேன்.

“இறைவனோட முழுமையான நிலைக்கு பெயர் பைரவம். தொன்மையானவர் என்பது பொருள். வட மொழியில ‘வ’ என்கிற ஓசை பிரயோகம் அதிகமா இருக்காது. ‘வ’ இருக்கும் இடத்தில் எல்லாம் அவங்க ‘பா’ என்கிற ஓசையை பயன்படுத்துவாங்க.

வடையை அவங்க படானு சொல்லுவாங்க. வசந்தியை பசந்தினு சொல்லுவாங்க. அதுபோல வைரவன் என்பதை வடமொழியில் பைரவன்னு சொல்லுவாங்க. வைரம் என்றால் எது தொன்மையாக இருக்கிறதோ, மிகவும் திடமானது /இறுதியானது என்ற அர்த்தம் சொல்லலாம். பூமியில் இருக்கும் பொருட்கள் பூமி அடுக்குக்குகளின் அழுத்தத்தால் நிலக்கரியாகி பிறகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வைரமாகிவிடும். வைர நிலைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேறு வடிவம் பெறாது. இதுவே இறுதி நிலை. அவ்வாறு இறைவனின் இறுதி நிலையாக வணங்கப்படுவது வைரவ ரூபம்.

இறைவன் முழுமையானவன், இறுதி உண்மையானவன் என்பதால் காசி மாநகரில் சில ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் இறைவனை வணங்குவார்கள்.காசி நகரமே இவர் தான் என்றும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். தத்வமஸி எனும் மஹாவாக்கியத்தை உணரும் வகையில் இருக்கும் இறைவனின் சொரூபம் வைரவர்(பைரவர்). தமிழ் நாட்டில் வைரவன் கோவில் என்ற தலம் இவருக்காகவே இருக்கும் திருத்தலம். வட மாநிலங்களில் பைவரனுக்கு திருத்தலம் தனியே இருப்பது குறைவு. அகோரிகள் மற்றும் சில வகை ஆன்மீகவாதிகள் பைரவரை தங்களின் குருவாகவும், தாங்களே பைரவர்களாகவும் உணர்ந்து கொள்வார்கள்.

இறைவனின் ஆண் தன்மை பைரவன் என்றும் பெண் தன்மை பைரவி என்றும் கூறுவார்கள். இவர்கள் முழுமையான நிலையில் இருப்பதால் ஆடைகள் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள். தங்களை பைரவர்களாக உணரும் அகோரிகளும் அதனால் தான் ஆடை அணிவதில்லை. எல்லா உயிரிலும் இறைவன் இயங்குகிறான் என்ற உணர்வில் விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோக பாரம்பரியத்தில் முதல் குரு பைரவர் ஆகும். அவர் தன் சிஷ்யை பைரவிக்கு முதல் முதலாக தியானத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒன்று இரண்டு தியான முறையல்ல... மொத்தம் நூற்றி பதினோரு வகை தியானத்தை கற்றுக்கொடுக்கிறார்.

அனைத்து தியானமும் இணைந்த நூலுக்கு விஞ்ஞான பைரவ தந்த்ரா என்று பெயர். இதுவே நம் நாட்டின் முதல் யோக நூலாகும்.

தந்திரீக முறை பயிற்சியிலும் ஆன்மீக உயர்நிலை பயிற்சியிலும் பைரவரே குருவாகவும் இறைவனாகவும் இருக்கிறார். முதலில் கோவில்களில் பைரவர் இல்லாமல் இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு தாந்திரீக வழிபாட்டு முறையும் கோவில் சடங்குகளுக்குள் வரும்பொழுது பைரவருக்கு சன்னிதி ஏற்படுத்திவிட்டார்கள்.

எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையுங்கள் என்பதை குறிக்கும் அடையாளமாக பைரவருடன் நாய் இருப்பது போன்று விக்ரஹம் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய் எப்படி எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறதோ அதுபோல கால விரையம் செய்யாமல்இறைநிலையை விழிப்புடன் இருந்து ஞானம் பெறவேண்டும் என்பதே கால

பைரவரின் உடன் இருக்கும் நாய் வடிவம் உணர்த்துகிறது. பைரவ தரிசனம் பெற்றவர்கள் அல்லது உபாசகர்கள் நாய்கள் புடைசூழ வலம் வருவார்கள். அல்லது நாய்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். நாத பாரம்பரியம் என்ற ஆன்மீகவாதிகள் அனேகர் நாயுடன் இருப்பதை காணலாம். தத்தாத்ரேய பாரம்பரியம் என்பது நாத பாரம்பரியமே. அவ்வழி வருபவர்கள் நாயும் இவர்களும் வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். சீரடி சாய்பாபா மற்றும் யோகி ராம் சூரத் குமார் இவர்களை உதாரணமாக கூறலாம்.

சரியான குரு வழிகாட்டுதலுடன் மந்திர ஜபம் செய்யும் பொழுது கால பைரவ தரிசனம் பெறலாம். அவ்வாறு செய்யாமல் தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் சன்னிதியில் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையும் ஒவ்வொருவனும் கால பைரவன் தான். காலத்தை வைரம் போல நிலைப்படுத்தி காலத்தை கடந்து என்றும் சாஸ்வதமாக இருப்பவன் கால பைரவன் தானே?

கால பைரவர் பல்வேறு ரூபத்தில் இருக்கிறார். சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், ஞான பைரவர், சஞ்சார பைரவர் என பல்வேறு நிலையை சொல்லுவார்கள்.”

என்று என்சைக்ளோபிடியா போல நீண்ட உரையாற்றிவிட்டு.. “ஏன் சுப்பாண்டி திடீர்னு இந்த கேள்வி- கால பைரவர் மேல அவ்வளவு பக்தியா?” என கேட்டேன்.

“இல்ல சாமி.. உங்கள பார்க்க வரும் போது ஒரு லாரியில் கால பைரவர் துணைனு எழுதி இருந்துச்சு.. அத்தான் சும்மா கேட்டேன்” என்றான் கூலாக.

சொன்ன மொத்த விஷயமும் வேஸ்டு என நினைத்துக் கொண்டேன்.
“சாமி நீங்க பேசின விஷயத்தில நேரம் போனதே தெரியல. பருங்க ராத்திரி பத்து மணி ஆயிடுச்சு நான் கிளம்பரேன் நாளைக்கு பார்ப்போம்” என கூறி தனது இருசக்கிர வாகனத்தில் பறந்தான் சுப்பாண்டி.

நானும் இரவு பணிகளை முடித்து படுக்கை தயார் செய்து படுத்தேன். திடீரென வீட்டுக்கு வெளியே காலடியோசை கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். யாரோ வீட்டுக்குள் வாசல் கேட்டின் வழியே எகிறி குதித்துக் கொண்டிருந்தார்கள்.

டார்ச்சுடன் கதவை திறந்து “யாரு அது..?” என கேட்டு டார்ச் வெளிச்சம் பாய்ச்சினேன்.நடுங்கியபடி சுப்பாண்டி நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு சுப்பு ? என்ன பிரச்சனை” என கேட்டேன்.

“சாமி காலபைரவர் தரிசனம் கிடைச்சுடுச்சு சாமி....” என கூறி ஓவென அழுதான்.

“என்னப்பா சொல்ற? அழுவாம சொல்லு”...

சில நிமிடத்திற்கு பிறகு கூறத் தொடங்கினான்.

“சாமி...உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பினேனா... ரெண்டு தெரு தாண்டிருக்க மாட்டேன் தெருநாய் எல்லாம் ஒன்னுகூடி என்னை தொரத்த ஆரம்பிச்சுடுச்சு.. நானும் வண்டியை ஸ்பீடா ஓட்டினா அதுங்களும் என் ஸ்பீடுக்கு கூடவே வருந்துங்க. என்னதான் நாய் பைரவர்னு நீங்க சொன்னாலும் அதுங்க அப்படி ஓடிவந்தா என்னோட அடிவயித்துல ஒரு கிலிவருது சாமி... நானும் பல தெரு ஓட்டி தப்பிச்சிருலாம்னு பார்த்தேன். ம்ஹூம் அதுங்களும் விடுறதா இல்லை. அதுல ஒரு கருப்பு பைரவர் சாமி.

பார்க்கவே படுபயங்கரமா கடவா பல்லு தெரிய என்னை தொரத்துச்சு.... அதுவும் என் கெண்டக்கால பார்த்து விடாம தொரத்துச்சு சாமி.. அப்பத்தான் புரிஞ்சுது இது சாதாரண பைரவர் இல்ல கால பைரவர்னு.. அப்பத்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு பைரவர்ல கால பாத்து வர பைரவர் தானே சாமி கால பைரவர்....?”

இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!

Wednesday, October 12, 2011

தேவ பிரசன்னம் - பகுதி 8

கடவுளுடன் நேரடியாக மனிதன் உரையாட தேவப்பிரசன்னம் ஓர் வழி என முன்பு கூறினேன். இறைவனே நேரடியாக கோவில் எத்தகைய சூழல் அமைக்க வேண்டும் என சொல்லுவது மிகவும் சிறப்பல்லவா? தமிழக கோவில்களில் ஆகம சாஸ்திரம் என்று கோவில் நிர்மாணம் செய்யும் சட்டம் உண்டு. இச்சாஸ்திரம் தற்சமய தமிழக கோவில்களில் 30 சதவீதம் கூட கடைபிடிப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது.

கேரள கோவில்களில் ஆகமம் வேலை செய்யாது. பரசுராமரின் வழி வந்தவர்கள் மந்திர, தந்திர பாதைகளில் செல்வதால் அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தை தேவப்பிரசன்னம் என்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். தேவப்பிரசன்னம் என்பதே ஒரு தாந்ரீக முறை தான்.

தாந்த்ரீக முறைகளில் எப்பொழுதும் ஒரு குறை இருக்கும். சராசரி மனிதன் உண்மையான தாந்த்ரீகரை கண்டாலும் போலியானவரை கண்டாலும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது. நம் ஆட்களுக்கு மோடி மஸ்தானும் தாந்த்ரீகன் தான், செய்வினை செய்பவனும் தாந்த்ரீகன் தான்- இவர்கள் இருவருமே தாந்த்ரீகர்கள் இல்லை என்பதே நமக்கு தெரியாது.

இதுபோலவே கோவிலில் பிரசன்னம் பார்ப்பவர்கள் எல்லோரையும் நாம் தேவப்பிரசன்னம் பார்ப்பவர்கள் என முடிவு செய்கிறோம்.

சபரி மலை மற்றும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் நடந்த பிரசன்னம் உண்மையா?

டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சீசன் நடைபெறும். அப்பொழுது பிரபலமாகாத சில பாடகர்கள் சபாக்களுக்கு தாங்களே காசு கொடுத்து அல்லது சிபாரிசு மூலம் கச்சேரி செய்வார்கள். இதனால் தங்களுக்கு புகழ் வெளிச்சம் கிட்டும் என்பது அவர்களின் எண்ணம். அப்படி செய்தாலும் திறமை இருப்பவனையே உலகம் பேசும். திறமையற்றவனை அத்தருணத்தில் பேசும் அப்புறம் உலகம் மறந்துவிடும்.

அதுபோலத்தான் சிலர் சிபாரிசின் பேரிலும், பணம் மூலமும் இக்கோவில்களில் பிரசன்னம் பார்த்தார்கள். அனைத்தும் வீணானது. கோவில் நிர்வாகத்தின் கோளாரால் வந்த வினை. தேவனுக்கு பிரசன்னம் பார்க்கச் சொன்னால் ஜெயமாலாவிற்கு பிரசன்னம் பார்க்கிறார்கள் நம் ஜோதிட மேதைகள்.ஒரு மாநில முதல்வருக்கு ஜோதிடம் பார்த்தவர் என்பதற்காக அவருக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும் அறிவு வந்துவிடுமா? கோவிலின் பெயரும், ஜோதிடரின் பெயரும் கெட்டது தான் மிச்சம். திருவனந்த புரத்திலும் கோவில்காரர்களின் முடிவே அங்கே தேவப்பிரசன்ன பலனாக கூறப்படுகிறது. நமக்கு தேவனா முக்கியம்? புதையல் தானே முக்கியம்...!

இவர்கள் செய்யும் தவறுகள் நீண்டு கொண்டே செல்லுகிறது... முடிவு இறைவனின் கையில்...

கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம். அங்கே தேவப்பிரசன்னம் வைக்கப்பட்டால் அப்பலன்களை சொல்ல ஒரு திருமண மண்டபத்தை எடுத்து அதில் ஐநூறுக்கும் மேம்பட்ட ஜோதிடர்கள் கலந்து ஆலோசிப்பார்கள். நன்றாக ஜோதிடம் தெரிந்த ஆட்கள் அங்கே இருந்தாலே தலை வெடித்துவிடும். ஒவ்வொருவரும் சாஸ்திரத்தை கரும்பு சக்கை பிழிவதை போல பிழிந்து எடுப்பார்கள். இப்படி பட்ட நிகழ்வுகளை பார்த்து பழகி பங்கெடுத்தவர்களுக்கு தேவப்பிரசன்னம் என்ற பெயரில் போலியாக செய்பவர்களை கண்டால் என்ன தோன்றும்?

நம் சாஸ்திரங்களை இன்றும் நாம் இழந்துவிடவில்லை. வரும் காலத்தில் நம் சந்ததியினருக்கு வழங்க நாம் ஒரு சதவிகிதமேனும் முயல வேண்டும்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்பில் தேவப்பிரசன்னம் மூலம் கோவிலின் ஆற்றலை மேம்படுத்தும் செயல் செய்துவருகிறோம். நீங்கள் சார்ந்த கோவில்களுக்கு ஏதேனும் தேவப்பிரசன்னம் மூலம் உதவி வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள். இறையாணையாக ஏற்று உதவுகிறோம்.

-பிரசன்னாகியது-

Monday, October 3, 2011

தேவப்பிரசன்னம் - 7

கோபம், மோகம், தாபம் மற்றும் பொறாமை போன்ற குணங்கள் நம் இயற்கை இயல்பு இல்லை. எப்பொழுது ஒருவரின் அஹங்காரத்தை நீங்கள் அவமதிக்கிறீர்களோ அப்பொழுது கோபம் என்பது அஹங்காரத்தின் பதிலாக இருக்கும். அஹங்காரத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடும் பொழுது மோகம் ஏற்படும். அஹங்காரத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிடில் தாபம் ஏற்படும். அஹங்காரம் தனக்கு கிடைத்ததை பிற அஹங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொறாமை ஏற்படும். பார்த்தீர்களா இந்த அஹங்காரம் எத்தகை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இயல்பில் ஆனந்தமான நமக்கு இந்த அஹங்காரத்தாலேயே குழப்பங்கள் கூடுகிறது.

தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிடக்குழுவினர் ஆன்மீகத்தைவிட ஆணவம் அதிகமாக இருந்தது. தாங்கள் கணித்தவை தவறாகுமா என ஒரு மிதப்பு அவர்களிடம் இருந்தது. அந்த ஆணவக்கோட்டையின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தார் அந்த பொதுநபர்.

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?” என கேள்வியை மட்டும் அவர் எழுப்பவில்லை.. ஜோதிடர்களின் ஆணவத்தையும் தட்டி எழுப்பிவிட்டார்.

தன் நிலையை மறந்து அந்த ஜோதிட குழு தலைவர், “அதிகப்பிரசங்கி தனத்திற்கு இது இடமல்ல. சாஸ்திரங்கள் பயின்ற எங்களுக்கு உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்ய நேரம் இல்லை” என கூறி முகத்தை திருப்பிக்கொண்டார்.

“சாஸ்திரம் உங்களுக்குள் சென்றதும் உங்களையே மறந்துவிடும் நீங்கள்.. எங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியுமா?”என கூறிய அந்த நபர் பின்பு தொடர்ந்து பேசத் துவங்கினார்....

“பிரசன்னத்தில் 8ஆம் வீட்டில் ராகு அமர்ந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை எப்படி விதவைப்பெண் அசுத்தம் செய்தாள் என கணித்தீர்கள்.? 10ஆம் வீடு தலைமை பூஜாரியை (மேல்சாந்தி) குறிக்கும். அப்படியானால் அவர் 8ஆம் வீட்டில் உள்ள ராகுவுடன் தொடர்பு கொள்கிறார். ஆக ராகு என்ற விதவைக்கு களங்கம் மேல் சாந்தி தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்லுகிறீர்கள். சில நாட்களுக்கு முன் சூரிய உதய கால பூஜை முடிந்ததும் ஒரு விதவை பெண் மேல் சாந்தியிடம் அர்ச்சனை செய்ய வந்தார். காலையில் விதவையை சந்திப்பதா? என நினைத்து அவரை அவமதித்துவிட்டார் மேல்சாந்தி. இச்செயலே பிரசன்னத்தில் வெளிப்பட்டிருக்கிறது.இறைவன் முன் அனைவரும் சமம் அல்லவா? மேல் சாந்தியிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்” என ஒரே மூச்சில் முழங்கிவிட்டு அசுவாசமானார்.

அனைவரின் பார்வையும் மேல்சாந்தி மேல் திரும்பியது. உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவர் ஜோதிட குழுவினரின் முன் கைகூப்பி நின்றார். அவரின் தலை கவிழ்ப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை காட்டியது.

தங்களுக்கு தெரியாத விஷயத்தை அற்புதமாக சுட்டிகாட்டியவரை நோக்கி திரும்பினார் அங்கே வெற்றிடமே இருந்தது. அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள்.

விதவைப் பெண்ணை அவமதித்த செயலுக்கு பிராயச்சித்தமாக அப்பெண்ணை கோவில் தலைவராக்கி தினமும் அவளுக்கே முதல் மரியாதை செய்தார்கள்.

ஜோதிடர்களும் தங்கள் தவறு செய்தால் தலையில் அடித்து சொல்லித்தர ஒருவர் இருக்கிறார் என மனம் மகிழ்ந்தார்கள்...

தேவப்பிரசன்னம் என்பது இறைவனுடன் உறவாடும் ஒரு செயல் என்பதால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஒவ்வொரு ஷணமும் அதியம் நிறைந்தது. இக்கருத்தை அனுபவித்தாலே புரிந்துகொள்ள முடியும்.

சாமீ...இவ்வளவு அதிசயம்னு சொல்றீங்களே அப்ப சபரிமலையில நடந்த தேவப்பிரசன்னம்... திருவனந்தபுரத்தில நடந்த தேவப்பிரசன்னம் பத்தி சொல்லுங்க... அது எல்லாம் உண்மையா?

ஹீ..ஹி...ஹீ...

(பிரசன்னமாகும்)

Tuesday, September 20, 2011

திருமந்திரம் எனும் அருமந்திரம்

வாழ்வியலில் திருமந்திரம்

நம் அன்றாட வாழ்க்கையில் திருமந்திரம் என்ற தலைப்பில் சென்ற சனிக்கிழமை (17-09-2011) அன்று சிங்கப்பூர் குவீன்ஸ்வே முனீஸ்வரன் ஆலயத்தில் சொற்பொழிவு நடைபெற்றது.

நம் வேதத்தின் கண்மணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே ஒலி வடிவில் அளிக்கிறேன்.

மற்றும் ஒரு லிங்க்

Saturday, September 17, 2011

தேவப்பிரசன்னம் - பகுதி 6

ஜாதக சக்கரத்தில் பன்னிரெண்டு வீடுகள் இருப்பது நீங்கள் பார்த்திருக்கலாம். மனிதனுக்கு பன்னிரெண்டு வீடுகளில் ஏற்படும் பலன்களை ஜோதிடர் ஆய்வு செய்வார். லக்னம், தனம், தைரியம், சுகம் என பல்வேறு தன்மைகளில் ஜோதிடம் மனித வாழ்க்கையை பன்னிரெண்டு வகையான அடிப்படையில் பிரிக்கிறது.

மனிதவாழ்க்கையை போலவே தேவப்பிரசன்னத்தில் பன்னிரெண்டு வீடுகள் கோவிலின் தன்மையை இவ்வாறு குறிக்கும்

முதல் வீடு - கோவிலில் இருக்கும் இறைவனின் தன்மை
இரண்டாம் வீடு - கோவிலின் பொருளாதர நிலை
மூன்றாம் வீடு - பிரசாதம் செய்பவர் அல்லது மடப்பள்ளி
நான்காம் வீடு - கோவிலுக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் அலங்கார பொருட்கள்
ஐந்தாம் வீடு - இறை அருள் இருக்கும் தன்மை (சாநித்யம்)
ஆறாம் வீடு - கோவிலில் நடக்கும் தவறான செயல்கள்.
ஏழாம் வீடு - பக்தர்கள், கோவிலில் வழிபடுபவர்கள்
எட்டாம் வீடு - கோவிலில் நடக்கும் திடீர்செயல்கள் மற்றும் அசுத்தம்
ஒன்பதாம் வீடு - கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்
பத்தாம் வீடு - கோவில் பூஜாரி, மேல் சாந்தி
பதினோராம் வீடு - கோவிலில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள்
பன்னிரெண்டாம் வீடு - கோவிலில் இருக்கும் பழமையான பொருட்கள் மற்றும் பாரம்பரிய தன்மை

இக்கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்திருக்கும் கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப பலன் கூறுவார்கள்.

சரி மனிதனுக்கு பார்க்க ஜாதகம் இருக்கும். இறைவனுக்கு எப்படி பார்ப்பது? இறைவனுக்கு ஜாதகம் கிடையாதே? அவன் பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில் இருப்பவன் ஆயிற்றே என உங்களுக்கு தோன்றலாம். அதனால் தான் பிறப்பு ஜாதகம் பார்க்காமல் பிரசன்ன முறையில் கணிக்கப்படுகிறது. அதனால் இதற்கு தேவப்பிரசன்னம் என்கிறோம்.

தேவப்பிரசன்னம் செய்ய முதலில் யாகங்கள் செய்து, ஜாதக சக்கரத்தை கோவிலின் வடக்கு பகுதியில் வரைந்து கொள்வார்கள். பிறகு இறைவனை ஜாதக சக்கரத்தின் மையத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அச்சமயம் கோவில் கருவறையை பூட்டிவிடுவார்கள். இறை ஆற்றல் ஜாதக சக்கரத்தில் இருக்கும் அதனால் கருவறையை மூடிவிடும் சம்ப்பிரதாயம் உண்டு.

ஓம் என ஒரு பக்கம் எழுதப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு காசு, சில பூக்கள் மற்றும் அக்‌ஷதை இவற்றை ஒரு குழந்தையின் கையில் அளிப்பார்கள். கூட்டத்தில் உள்ள 11 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து 12 ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு ராசிகட்டத்தில் வைக்க சொல்லுவார்கள். மூன்று முறை ராசி கட்டத்தை வலம் வந்து அந்த குழந்தை எந்த ராசியில் கையில் உள்ள காசை
வைக்கிறதோ அதுவே லக்னம் என கொள்ளப்படும்.

காசு இருக்கும் ராசி முதல் வீடாக கொண்டு பண்ணிரண்டு ராசிகளின் பலன்களை கிரகிப்பார்கள். இச்செயலை ஒரு பல ஜோதிடர்கள் கொண்ட குழு செய்வார்கள்.இவ்வாறு ஒரு கோவிலில் ஜோதிடர்கள் தேவப்பிரசன்னம் பார்க்கும் பொழுது எட்டாம் இடத்தில் ராகு என்ற கிரகம் இருந்து, அந்த கிரகத்தை பத்தாம் வீட்டில் உள்ள கிரகத்துடன் தொடர்பு கொண்டதால் கோவிலில் அசுத்தம் நடைபெற்றுள்ளது என முடிவு செய்தார்கள்.

ராகு என்ற கிரகம் அமர்ந்து அது பெண் ராசியாக இருந்ததால் விதவை பெண் ஒருவரால் இவ்வகை அசுத்தம் நடைபெற்றிருக்கும் என்று முடிவு செய்து அதை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்கள். மேலும் கோவில் நிர்வாகிகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் இக்கூட்டத்தில் இருக்கும் விதவைப்பெண்கள் யாரேனும் இவ்வாறு அசுத்தம் செய்திருந்தால் மனம் உவந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

திடீரென அக்கூட்டத்திலிருந்து வந்த ஒருவர், ஜோதிடக்குழுவை பார்த்து. அது எப்படி நீங்கள் விதவை பெண்ணால் அசுத்தம் என கூற முடியும்? என கேட்டார். பார்க்க ஒரு சாதாரண குடியானவன் இப்படி கேள்வி கேட்டதும் குழம்பினார்கள் ஜோதிடர்கள். உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா என கேட்டனர்.

அந்த குடியானவர் சொன்னார் ,

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?”

(பிரசன்னமாகும்)

Friday, September 16, 2011

வாழ்வியலில் திருமந்திரம்

திருமந்திரம் பற்றிய சொற்பொழிவு நாளை மாலை சிங்காப்பூரில் நடைபெறுகிறது.
வாழ்வியலில் திருமந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றுக்கிறேன்.
அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக ஆனந்தை பருக அன்புடன் அழைக்கிறோம்

நாள் : செப்டம்பர் 17 (சனி) நேரம் : 7.30 மாலை
இடம் : குவீன்ஸ்வே முனீஸ்வரன் ஆலயம், சிங்கப்பூர்

Tuesday, August 30, 2011

தேவப்பிரசன்னம் பகுதி 5

தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும். சாதாரண மனிதனுக்கே ஜோதிடம் பார்க்க ஜோதிடர் எத்தனையோ சூத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அல்லவா? அப்படிப் பார்த்தால் கடவுளுக்கே ஜோதிடம் பார்க்க எவ்வளவு ஆற்றலுடன் பார்க்க வேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

ஜோதிடரிடம் நாம் ஆருடம் பார்க்க செல்லும் பொழுது நாம் வரும் நேரத்தை கொண்டு அவர் கிரகங்களை கணிப்பார். நாம் அவரின் இடம் விட்டு அகன்றதும் ஜோதிடர் நம்மை பற்றிய விஷயங்களை விட்டு அடுத்தவருக்கு ஜோதிடர் பார்ப்பார்.

ஆனால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தை கோவில்களில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்பதி நியதி. எளிமையாக சொல்லுவதானால் மனிதன் ஜோதிடரை தேடி செல்ல வேண்டும், தேவப்பிரசன்னத்தில் ஜோதிடர் கடவுளை தேடிப்போக வேண்டும்...!

கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம், அச்சமயம் நடக்கும் சம்பவங்கள் (நிமித்தம்) துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார். அவர் வீடு முதல் வீடு வரை நடந்த நிகழ்வுகள் கோவிலில் ஏற்பட்ட ஆருடம் இவை அனைத்தையும் ஒன்றினைத்து அடுத்த நாள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில் தேவப்பிரசன்னம் குழுவாகத்தான் பார்ப்பார்கள் என்றேன் அல்லவா? அவ்வாறு குழுவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் வீடு முதல் வீடு வரை நிகழ்வுகளை கவனிப்பார்கள். வெவ்வேறு ஊரில் இருந்து வந்து செல்லும் ஜோதிடர்களுக்கு, அடுத்த நாள் அனைவரும் கூடி விவாதிக்கும் பொழுது எல்லோருக்கும் நடந்த சம்பவம் மிகச்சரியாக ஒன்று போலவே இருக்கும். அனைவரும் பார்த்தது, கேட்டது, பேசியது என ஏதோ புரோக்கிராம் செய்தது போல இருக்கும்...!

நிமித்த அடிப்படையில் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருப்பதை கொண்டு இயற்கை அனைவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு கருத்தை கூற விரும்புகிறது என கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.

உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அசிங்கமான அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள். கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாள் பிறகு இரு நாட்கள் எடுத்துக்கொண்டு ஜோதிட குழு விவாதம் செய்யும். பிறகு அவர்கள் செய்த ஆய்வை பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பது நியதி. கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் சார்ந்த ஆட்களிடமோ பிரசன்ன பலன்களை தனியே கூறக்கூடாது. அவர்களையும் பொதுமக்களுடன் நிற்க சொல்லியே கூற வேண்டும் என்பது தேவப்பிரசன்னம் கூறும் நியதியாகும்.

ஜோதிடர்கள் குழு கூறும் பலன்களை பொதுமக்களுக்குள் அமர்ந்திருக்கும் ஜோதிடம் தெரிந்தவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதற்கு ஜோதிட குழு தக்க பதில் கூற வேண்டும்.

நாங்கள் தேவப்பிரசன்னமே பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் என ஆணவம் இல்லாமல், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு மிகப்பணிவுடன் பதில் கூற வேண்டும்.

லக்னத்தில் இவ்வாறு கிரகம் இருந்ததற்கு இன்ன பலன் என நீங்கள் கூறுகிறீர்கள் ஏன் இப்பலன் இவ்வாறு இருக்கக்கூடாது என ஒருவர் கேள்வி எழுப்பினால், ஏன் அவ்வாறு செயல்படாது என மிகவும் தன்மையாக விளக்க வேண்டும்.

உனக்கு ஜோதிடம் எந்த அளவு தெரியும்? இதையெல்லாம் கேள்வி என்று கேட்கிறாயா என அவர்களை கேட்கும் அதிகாரம் ஜோதிடர்களுக்கு இல்லை..! ஏன் என்றால் தேவப்பிரசன்னம் என்ற பணி செய்ய வந்தவர்களே தவிர அவர்கள் இறைவன் கிடையாதே..!

ஒரு முறை தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிட குழு ஒரு தவறு செய்துவிட்டது. அத்தவறு மிகவும் முட்டாள் தனமானது. ஆனால் மனிதர்கள் தங்கள் மூளையால் கண்டுபிடிக்க முடியாத சிக்கல் கொண்டது..! ஜோதிடக்குழு பொதுமக்களின் முன்னிலையில் பலன் விளக்கும் பொழுது அதை ஒருவர் கண்டறிந்து ஜோதிடர்களை சரியாக்கினார்.

மனிதனால் கண்டறிய முடியாததை ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் வேறு யாராக இருக்க முடியும்?

(பிரசன்னமாகும்)

Sunday, August 28, 2011

தேவப்பிரசன்னம் பகுதி 4


“அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!” என அந்த ஜோதிடர் கூறியவுடன் ஊர் மக்கள் திகைத்தார்கள்.

நீங்கள் வெளியூரை சேர்ந்தவர் கொடி ஏற்றும் பொழுது ஏதேனும் விபரீதம் நடந்தால் எங்கள் ஊருக்கு அது அவப்பெயராக ஆகிவிடும். மேலும் சாஸ்திரம் கற்ற உங்களுக்கு விபரீதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

“நானாக இம்முடிவை எடுக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்தியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இறைவனின் சன்னிதியில் நடக்கும் இறப்புக்கு ஒரு விடையை நாம் கண்டறிய வேண்டும். என்னை கொடியேற்ற அனுமதியுங்கள்” என ஜோதிடர் கூறினார்.

திருவிழா கொடியேற்றும் நாளும் வந்தது. கோவில் புதுபொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. ஊர் மக்கள் பக்தியுடனும் ஒருவித பய உணர்வுடன் குழுமி இருந்தனர். கோவிலின் உள்ளே கொடி பூஜை செய்யப்பட்டது. செண்டை மேழம் முழுங்க, துந்துபிகளும் கொம்பும் ஒலிக்க கொடி கோவிலின் பலிபீடம் அருகே கொண்டு வரப்பட்டது.
கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.

வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.

என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்”

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார்.


“இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.

யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். ” எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.

“தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.

கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்” என்றார்.

பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.

தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.

இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்.

மேற்சொன்ன சம்பவத்தின் பொழுது நானும் ஜோதிடக்குழுவில் ஒரு நபராக இருக்கும் அனுபவம் வாய்க்கப்பெற்றேன். தேவப்பிரசன்னம் என்னும் சாஸ்திரத்தை கற்றும் அதை அனுபவ ரீதியாக உணர்ந்தும் கொண்டதாலேயே உங்களுடன் இக்கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிகிறது.

சரி...தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது? படிபடியாக விளக்குகிறேன்..

(பிரசன்னமாகும்)