மானச சஞ்சரரே....பிரம்ம நீ.....மாஅ...னச சஞ்சரரே.... இன்னைக்கு நித்யஸ்ரீ கலக்கிட்டாபோ.. கச்சேரின்னா இன்னைக்கு நடந்ததான் ஓய்...கச்சேரி என்றவாறே உள்ளே நுழைந்தார் சேஷூ என்கிற சேஷாத்ரி ஐய்யர்.
எங்கள் தெருவில் அனைவரும் கதிகலங்க வைக்கும் ஒருவர் . வாய்நிறைய வெற்றிலை சீவல், வாயை ரயில் எஞ்சின் புகைபோக்கி போல உயர்த்தி, இரண்டு கைகளிலும் பூணலை இழுத்து பிடித்து முதுகு சொறிந்தவண்ணம் அவர் பேசுவதை பார்த்தாலே நமக்கு லேசாக முதுகில் நமைச்சல் வரும்.
எப்படிபட்ட கூட்டமாக இருந்தாலும் இவர் சென்றால் சிதறி ஓடிவிடுவார்கள். அதனால் சேஷூ மாமாவுக்கு செல்லமாக நாங்கள் வைத்த பெயர் புரட்சி வீரன் சே..! தனக்கு தெரியாததே கிடையாது என்பது போன்ற அலட்டல் அவரிடம் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கும். இதனல் சிலர் இவரை விக்கிப்பிடியா என்பது போல சேஷூபிடியா என்றும் அழைப்பார்கள்.
“என்னடா பசங்களா...வேலைவெட்டிக்கு போகாமல் பேசிண்டு இருக்கேள்... அரசியலா கிரிகெட்டா ?”என எங்கள் கூட்டத்தினுள் தனது கொரில்லா தாக்குதலை துவக்கினார் சே..!
“ஆமாண்டா இவரு நம்ம ஊரு கலெக்டரு...நாம தாண்டா வெட்டிப்பசங்க” என முணுமுணுத்தான் கோயிந்து.
“என்னடா குட்டி ராஸ்கல் முணுமுணுக்கறே...நானும் உங்களோட சேர்ந்து பேசிண்டு இருக்காலாம்னு பார்த்தா அசடு மாதிரி நிக்கறேள்?”
பொறுமை இழந்த நான், “மாமா நாங்க வேல்ட் கப் புட்பால் பத்தி பேசிண்டு இருக்கோம்” என்றேன்.
“பேஷா....பேசுங்கோ நானும் கேட்கறேன். எனக்கு தெரிஞ்சதையும் சொல்றேன்..நண்ணா இருக்குமோல்யோ?”
“அது என்ன நண்ணா இருக்குமோல்யோ? நல்லா இருக்குமா இல்லையா? தெளிவா சொல்லுங்கோ மாமா” என்றான் கோவிந்து. இன்று அவன் சரியான பார்மில் இருப்பது புரிந்தது.
“அசமந்தமா பேசாதேடா... உனக்கு என்ன டீம் ரொம்ப இஷ்டம், சொல்லு..” “நாங்க எல்லோரும் ஜெர்மனி ரசிகர்கள் மாமா..ஆனா அவாதான் தோத்துட்டா” என்றேன் நான்.
“பேஷ் நானும் தாண்டா. நம்ம தாயாதிகள் ரசிகரா இருக்கேள். எனக்கு சங்கடம் தான் போங்கோ”
“ஏம்மாமா கெட்டவார்த்தையில திட்டரேள்” என்றான் கோவிந்து.
“கோயிந்தூ...தாயாதிகள்னா உங்க பாஷையில பங்காளிகள்னு அர்த்தம்டா..”
“ஜெர்மன்காரங்க எப்படி மாமா நம்ம பங்காளிகள் ஆக முடியும்? ”
“ஜெர்மனியிலிருந்து தாண்டா ஆரியர்கள் எல்லாம் சிந்து நதி வழியா வந்து இந்தியாவில குடியேரினா தெரியுமோ? நம்ம கலர் எங்கிருந்து வந்துதுனு தெரியுமோ? எல்லாம் மேடின் ஜெர்மன். அதனால தான் பிராமணனை ‘சர்மாணி - சர்மா’ என சாஸ்திரம் சொல்லுது. ஜெர்மனிங்கிரதோட திரிபு இது புரிஞ்சுதோ? அதனால தாண்ட வைதீக சாஸ்திரத்தையெல்லாம் அவா இன்னும் கொண்டாடரா. ”
“மாமா புட்பாலை பத்தி பேசினா நீங்க ஜாதி கலவரமே செய்வீங்க போல இருக்கே...ஆமாம் மாமா டிவியில பார்த்தேளா? அக்டொபஸ் எல்லாம் யாரு ஜெயிப்பானு சொல்லிடுது. நீங்க ஜோதிட புலி ஆச்சே உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கோ?”
மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித்திழுக்கும் விதமா கேள்வியை கேட்டான் கோயிந்து.
“எந்த டீவியிலடா காமிச்சான்? நான் பாக்குற எம் டிவியில அது வரலையே...”
எல்லோரும் தலையில் அடுத்துக்கொண்டனர்..
“சரி சரி ரொம்ப சங்கடப்படாதீங்கோடா பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பானு சொல்லறேன். நான் யாரு ஜோதிட சாம்ராட், ஜோதிட வித்வபூஷன் பட்டமல்லாம் வாங்கிருக்கேன்”
“டேய் பாருங்கடா மாமாவே சொல்லிட்டார். வாங்கிருக்காராம். யாரும் குடுக்கலையாம்”
“அம்பி கோயிந்து உனக்கு என்னமாதிரியே குயிக்திடா.. நேத்து நான் பிரம்ம முஹூர்த்தத்தில பஞ்சாங்கம் பார்த்ததில் நெதர்லாந்தும் ஸ்பெயினும் மோதர பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பா தெரியுமோ?” என சொல்லி நிறுத்தினார்..
அனைவரும் அவர் முகத்தை பார்த்தோம்.
“என்னடா பார்க்கரேள் எனக்கு சில்லி கோபி வாங்கி கொடுப்பேன்னு சொல்லுங்கோ அப்பத்தான் சொல்லுவேன்”
அனைவரும் நொந்து கொண்டோம். ஜோசியத்தை சில்லி கோபிக்கு தர முடிவு செய்த சேஷூ மாமாவிடம் கோரசாக “சரிமாமா சொல்லுங்கோ” என்றோம்.
தனது வெற்றிலை சீவலை உமிழ்ந்துவிட்டு.. “ஸ்பெயின் சுண்டக்காய் மாதிரி நெதர்லாந்தை ஜெச்சுடுவா பாரேன். இல்லைனா நான் வெத்தலை சீவலை விட்டுடுரேன்” என்றார்.
“ஏன் மாமா உங்களுக்கு நெதர்லாந்து பிடிக்காதா?” எனக்கேட்டோம். “அசடுகளா எனக்கு காவி டிரஸ் போட்டுண்டவாளை பிடிக்காதுடா.... நானெல்லாம் ஆச்சாரியாளை அரஸ்டு பண்ணும் போதே அடுத்த வேளைக்கு பருப்பு உசிலி வைக்கலாமானு பேசிண்டு இருந்தவன்...என்னாண்ட வந்து காவி போட்ட நெதர்லாந்துகாரணை பத்தி பேசிரையே நன்னவா இருக்கு?”
“அது சரி மாமா மூன்றாவது இடத்திற்கு இன்னைக்கு போட்டி இருக்கே அதில் ஜெர்மனி தானே ஜெயிக்கும்...அவாதான் உங்க பங்காளிகள் ஆச்சே...” என்றான் கோயிந்து.
“இல்லையோ பின்ன.. அவாளோட ஸ்டைல் அப்படி” என மாமா துவங்க.... அச்சமயம் ஒரு பெண் எங்களை கடந்து சென்றாள்.
“யாரு அது பரிமளமா? ஆடி விஷேஷத்திற்கு வீட்டுக்கு அனுப்புச்சுட்டாளா? உன் ஹஸ்பெண்டு பாவமாச்சேடி....:” என தன் தொழிலை அங்கே துவங்கினார்...
நாங்கள் விடுதலையானோம்..!






