Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label கால்பந்து. Show all posts
Showing posts with label கால்பந்து. Show all posts

Saturday, July 10, 2010

சேஷூவும் உலகக் கோப்பை இறுதி போட்டியும்...

மானச சஞ்சரரே....பிரம்ம நீ.....மாஅ...னச சஞ்சரரே.... இன்னைக்கு நித்யஸ்ரீ கலக்கிட்டாபோ.. கச்சேரின்னா இன்னைக்கு நடந்ததான் ஓய்...கச்சேரி என்றவாறே உள்ளே நுழைந்தார் சேஷூ என்கிற சேஷாத்ரி ஐய்யர்.

எங்கள் தெருவில் அனைவரும் கதிகலங்க வைக்கும் ஒருவர் . வாய்நிறைய வெற்றிலை சீவல், வாயை ரயில் எஞ்சின் புகைபோக்கி போல உயர்த்தி, இரண்டு கைகளிலும் பூணலை இழுத்து பிடித்து முதுகு சொறிந்தவண்ணம் அவர் பேசுவதை பார்த்தாலே நமக்கு லேசாக முதுகில் நமைச்சல் வரும்.

எப்படிபட்ட கூட்டமாக இருந்தாலும் இவர் சென்றால் சிதறி ஓடிவிடுவார்கள். அதனால் சேஷூ மாமாவுக்கு செல்லமாக நாங்கள் வைத்த பெயர் புரட்சி வீரன் சே..! தனக்கு தெரியாததே கிடையாது என்பது போன்ற அலட்டல் அவரிடம் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கும். இதனல் சிலர் இவரை விக்கிப்பிடியா என்பது போல சேஷூபிடியா என்றும் அழைப்பார்கள்.

“என்னடா பசங்களா...வேலைவெட்டிக்கு போகாமல் பேசிண்டு இருக்கேள்... அரசியலா கிரிகெட்டா ?”என எங்கள் கூட்டத்தினுள் தனது கொரில்லா தாக்குதலை துவக்கினார் சே..!

“ஆமாண்டா இவரு நம்ம ஊரு கலெக்டரு...நாம தாண்டா வெட்டிப்பசங்க” என முணுமுணுத்தான் கோயிந்து.

“என்னடா குட்டி ராஸ்கல் முணுமுணுக்கறே...நானும் உங்களோட சேர்ந்து பேசிண்டு இருக்காலாம்னு பார்த்தா அசடு மாதிரி நிக்கறேள்?”

பொறுமை இழந்த நான், “மாமா நாங்க வேல்ட் கப் புட்பால் பத்தி பேசிண்டு இருக்கோம்” என்றேன்.

“பேஷா....பேசுங்கோ நானும் கேட்கறேன். எனக்கு தெரிஞ்சதையும் சொல்றேன்..நண்ணா இருக்குமோல்யோ?”

“அது என்ன நண்ணா இருக்குமோல்யோ? நல்லா இருக்குமா இல்லையா? தெளிவா சொல்லுங்கோ மாமா” என்றான் கோவிந்து. இன்று அவன் சரியான பார்மில் இருப்பது புரிந்தது.

“அசமந்தமா பேசாதேடா... உனக்கு என்ன டீம் ரொம்ப இஷ்டம், சொல்லு..” “நாங்க எல்லோரும் ஜெர்மனி ரசிகர்கள் மாமா..ஆனா அவாதான் தோத்துட்டா” என்றேன் நான்.

“பேஷ் நானும் தாண்டா. நம்ம தாயாதிகள் ரசிகரா இருக்கேள். எனக்கு சங்கடம் தான் போங்கோ”

“ஏம்மாமா கெட்டவார்த்தையில திட்டரேள்” என்றான் கோவிந்து.

“கோயிந்தூ...தாயாதிகள்னா உங்க பாஷையில பங்காளிகள்னு அர்த்தம்டா..”

“ஜெர்மன்காரங்க எப்படி மாமா நம்ம பங்காளிகள் ஆக முடியும்? ”

“ஜெர்மனியிலிருந்து தாண்டா ஆரியர்கள் எல்லாம் சிந்து நதி வழியா வந்து இந்தியாவில குடியேரினா தெரியுமோ? நம்ம கலர் எங்கிருந்து வந்துதுனு தெரியுமோ? எல்லாம் மேடின் ஜெர்மன். அதனால தான் பிராமணனை ‘சர்மாணி - சர்மா’ என சாஸ்திரம் சொல்லுது. ஜெர்மனிங்கிரதோட திரிபு இது புரிஞ்சுதோ? அதனால தாண்ட வைதீக சாஸ்திரத்தையெல்லாம் அவா இன்னும் கொண்டாடரா. ”

“மாமா புட்பாலை பத்தி பேசினா நீங்க ஜாதி கலவரமே செய்வீங்க போல இருக்கே...ஆமாம் மாமா டிவியில பார்த்தேளா? அக்டொபஸ் எல்லாம் யாரு ஜெயிப்பானு சொல்லிடுது. நீங்க ஜோதிட புலி ஆச்சே உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கோ?”

மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித்திழுக்கும் விதமா கேள்வியை கேட்டான் கோயிந்து.

“எந்த டீவியிலடா காமிச்சான்? நான் பாக்குற எம் டிவியில அது வரலையே...”

எல்லோரும் தலையில் அடுத்துக்கொண்டனர்..

“சரி சரி ரொம்ப சங்கடப்படாதீங்கோடா பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பானு சொல்லறேன். நான் யாரு ஜோதிட சாம்ராட், ஜோதிட வித்வபூஷன் பட்டமல்லாம் வாங்கிருக்கேன்”

“டேய் பாருங்கடா மாமாவே சொல்லிட்டார். வாங்கிருக்காராம். யாரும் குடுக்கலையாம்”

“அம்பி கோயிந்து உனக்கு என்னமாதிரியே குயிக்திடா.. நேத்து நான் பிரம்ம முஹூர்த்தத்தில பஞ்சாங்கம் பார்த்ததில் நெதர்லாந்தும் ஸ்பெயினும் மோதர பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பா தெரியுமோ?” என சொல்லி நிறுத்தினார்..

அனைவரும் அவர் முகத்தை பார்த்தோம்.

“என்னடா பார்க்கரேள் எனக்கு சில்லி கோபி வாங்கி கொடுப்பேன்னு சொல்லுங்கோ அப்பத்தான் சொல்லுவேன்”

அனைவரும் நொந்து கொண்டோம். ஜோசியத்தை சில்லி கோபிக்கு தர முடிவு செய்த சேஷூ மாமாவிடம் கோரசாக “சரிமாமா சொல்லுங்கோ” என்றோம்.

தனது வெற்றிலை சீவலை உமிழ்ந்துவிட்டு.. “ஸ்பெயின் சுண்டக்காய் மாதிரி நெதர்லாந்தை ஜெச்சுடுவா பாரேன். இல்லைனா நான் வெத்தலை சீவலை விட்டுடுரேன்” என்றார்.

“ஏன் மாமா உங்களுக்கு நெதர்லாந்து பிடிக்காதா?” எனக்கேட்டோம். “அசடுகளா எனக்கு காவி டிரஸ் போட்டுண்டவாளை பிடிக்காதுடா.... நானெல்லாம் ஆச்சாரியாளை அரஸ்டு பண்ணும் போதே அடுத்த வேளைக்கு பருப்பு உசிலி வைக்கலாமானு பேசிண்டு இருந்தவன்...என்னாண்ட வந்து காவி போட்ட நெதர்லாந்துகாரணை பத்தி பேசிரையே நன்னவா இருக்கு?”

“அது சரி மாமா மூன்றாவது இடத்திற்கு இன்னைக்கு போட்டி இருக்கே அதில் ஜெர்மனி தானே ஜெயிக்கும்...அவாதான் உங்க பங்காளிகள் ஆச்சே...” என்றான் கோயிந்து.

“இல்லையோ பின்ன.. அவாளோட ஸ்டைல் அப்படி” என மாமா துவங்க.... அச்சமயம் ஒரு பெண் எங்களை கடந்து சென்றாள்.

“யாரு அது பரிமளமா? ஆடி விஷேஷத்திற்கு வீட்டுக்கு அனுப்புச்சுட்டாளா? உன் ஹஸ்பெண்டு பாவமாச்சேடி....:” என தன் தொழிலை அங்கே துவங்கினார்...

நாங்கள் விடுதலையானோம்..!

Wednesday, July 7, 2010

மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி

என் நண்பனின் கட்டாயத்தால் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அமைதியான இடங்களை ஏன் மயான அமைதி என சொல்லுகிறார்கள் என அன்று தான் புரிந்தது. காரணம் நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் மயானம்.

இரவு சுமார் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென சலங்கை சத்தம் கேட்கத்துவங்கியது. வயதான தோற்றம் கொண்ட ஒருவர் நீண்ட தலை முடியும் முன் வழுக்கையுமாக வந்துகொண்டிருந்தார். அனைவரும் அடக்கத்துடன் கைகட்டி நின்றிருந்தனர்.

அவர் தான் மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி..!

கையில் இருந்த பெரிய அரிவாள் ஒன்றை வைத்துக்கொண்டு ஆவேசம் வந்தவராக ஆடினார். சில நிமிடங்கள் ஆட்டம் ஆடி ஓய்து அமர்ந்தார். அவருக்கு எனர்ஜி டிரிக்காக ஏதோ ஒரு மிருகத்தின் ரத்தம் கொடுக்கப்பட்டது.

“டேய் வாங்கடா வாங்க என்ன பிரச்சனைடா உங்களுக்கு...” என வெற்றிலை போடாமலே சிவந்த வாயால் கர்ஜித்தார்.

எனக்கு முன்னால் இருந்த நண்பன் மூன்றடி உயரம் குறைந்து பென்குயின் போல் நடந்து அவர் முன் சென்றான். அவ்வளவு அடக்கமாம்..!

“சாமி..அது வந்து தொழில்ல.....”

நிறுத்து என்பது போல கை காட்டிவிட்டு தன் பக்கம் இருந்த ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் கருப்பு மையை வட்டமாக வரைந்தார். அதை உற்றுபார்த்தார்..

“உன் தொழில்ல போட்டி இருக்கு. உங்கூட இருக்கறவன் எதிராளிக்கு சாதகமா இருக்கான்.

சொல்லு அவனை என்ன செய்யலாம்? ஒரு கை விளங்காம போக கட்டிடுவோமா? 150 ரூபாய் வெட்டு..” என பொரிந்தார்.

“அதெல்லாம் நானே பாத்துக்கறேன் சாமீ...” என அவர் முன் சில நூறு ரூபாய்களை வைத்தான். நானும் அவனும் திரும்பி நடக்க துவங்கினோம்.

“டேய்.. நில்லுங்கடா... உன் கூட வந்தவனுக்கு என்ன பிரச்சனை” என என்னை பார்த்தவாரே நண்பனிடம் கேட்டார்.

“அவனுக்கு ஒன்னும் இல்லை சாமீ..எங்கூட சும்மாத்தான் வந்தான்” என்றான் அடக்கவாதி.

“அவனை பார்த்தா ஏதோ கேட்பான் போல இருக்கு...நீ அவனை கேக்க சொல்லு...” என்றார் குடமுருட்டி..

கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும்... “சாமீ எனக்கு ரெண்டே கேள்வி தான். கேட்கட்டுமா?” என்றேன்.

“ம்ம்ம்..” என்றார் மா.மே.கு.குப்புசாமி.

“இன்னைக்கு (7-ஜூலை) ஜெர்மனி- ஸ்பெயின் மோதும் அரையிறுதி போட்டியில யாரு ஜெயிப்பாங்க?”

மீண்டும் புதிய மையை கண்ணாடியில் தடவி என்னையும் கண்ணாடியையும் மாறி மாறி பார்த்தார். தனது எனர்ஜி டிரிங்கை ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்...

“என்னவிட இவனுங்க நல்லா ஆடுவாங்கடா...ஆடுவாங்க... சரியான போட்டி.. சமமா விளையாடுவானுங்க. மறக்காம பாரு..ஆனா ஜெர்மனிக்கு கஷ்டகாலம்.எவனோ குட்டிச்சாத்தனை ஏவி விட்டுருக்கான். அவனுங்களுக்கு மந்திரிச்சு கட்டினா சரியாயிடும். விளையாட்டு மைதானத்தில பலி கொடுத்து பூஜை செஞ்சா ஜெயிப்பானுங்க... இல்லைனா தோத்து போயி ரத்தங்கக்கிடுவானுங்க...” என்றார்.

“சாமி விளையாட்டு நடக்கிறது வெளிநாட்டுல உங்களை கூட்டிகிட்டு போக நேரம் இல்லை” என்றான் என் நண்பன். இவன் அடக்கத்திற்கும் கடமை உணர்ச்சிக்கும் அளவே இல்லையா என்பது போல பார்த்தேன்.

“ஒன்னோட ரெண்டாவது கேள்வி என்ன?” என்னை பார்த்து கேட்டார்.

“சாமி கண்ணாடியில மை தேச்சு எல்லாத்தையும் பார்க்கறீங்களே, நானும் வீட்டுக்கு போயி எங்க வீட்டு கண்ணாடியில மை போட்டா இது எல்லாம் தெரியுமா? எனக்கு இந்த மை எப்படி செய்யறதுனு சொல்லி கொடுங்களேன்..”

“டேய் இது எல்லாம் சாதாரண விஷயமில்லை... சித்திரை மாசம், பெளர்ணமிக்கு மழையில்லாத நாளில் கொல்லி மலைக்கு மேல போயி அங்கே கர்ப்பமா இருக்கிற குரங்கோட உச்சி தலைமுடியை எடுத்து வந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திர உரு ஏத்தி அதை கருக்கி செஞ்ச மை இது. அப்படி நீயும் செஞ்சா எல்லாம் இதில் தெரியும்.”

“இதுக்கு ஒரே வார்த்தையில முட்டாப்பயலே எதுனா இருந்தா என்கிட்டையே வந்து கேளுனு சொல்லி இருக்கலாம்” என மனதுக்குள் நினைத்தவாறே கிளம்பினோம்.

Tuesday, July 6, 2010

ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...

நெற்றியில் டிராபிக் சிக்னலில் தெரியும் சிவப்பு விளக்குக்கு நிகரான பொட்டு, உலகில் மஞ்சள் தட்டுப்பாடுக்கு இவரின் முகத்தில் இருக்கும் மஞ்சளின் அளவு ஒரு காரணம் என கூறும் அளவுக்கு மங்கள முகம். முகத்தை முன்புறம் பார்க்கும் பொழுதே தலைக்கு பின்னால் இருக்கும் கனகாம்பர பூ தெரியும் அளவுக்கு அலங்காரம் என்ற தோற்றத்தில் அந்த வயதான பெண் கையில் ஒரு சிறு குச்சியுடன் அனுகினாள்.

"ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... தம்பி உனக்கு விரைவில் ஒரு பெண் உன் வாழ்க்கையில் வரப்போறா..."

நண்பர்களுடன் கடற்கரையில் சிறிது நேரம் கூட உட்காரவிடாமல் இவர்கள் செய்யும் இம்சை அளவில்லாதது என நினைத்தவாறே வேறுபுறம் திரும்பினேன். அந்த பெண் விடுவதாக இல்லை.

“ஏந்தம்பி திரும்பிட்டே.. உன்னை பத்தி எல்லாம் சொல்றேன் தம்பி.. சரியா இருந்தா மட்டும் காசு கொடு”

என் நண்பன் கோவிந்து குசும்புடன் அவளை திரும்பி பார்த்து பேச்சு கொடுத்தான்.

“ஏம்மா என்னை பத்தி நீ சொல்லா அதற்கு நான் ஏம்மா காசு கொடுக்கனும்? என்னை பத்திதான் எனக்கே தெரியுமே? அதைப்போயி நான் காசு கொடுத்து வேற தெரிஞ்சுக்கனுமா?”

ஓ இவன் பொழுது போக்க முடிவு செய்துவிட்டான் இவனை ஒன்னும் செய்ய முடியாது என நானும் கவனிக்க துவங்கினேன்.

“தம்பிக்கு வேற என்ன தெரிஞ்சுக்கனும்னு சொல்லுங்க ஜக்கம்மாகிட்ட கேட்டு சொல்றேன்”

“ஜக்கம்மா கிட்ட கேட்டு எல்லாம் சொல்லவேணாம். முடிஞ்சா ஜக்கம்மாவை எங்க கூட அனுப்பி வை. வேணுங்கறப்ப நாங்களே கேட்டுக்கறோம்.”

“தம்பி வாயில சனி இருக்கு போல...ஜெய் ஜக்கம்மா” என்றவாறே கோயிந்து தலையில் குச்சியை வைக்க, கோவிந்து மயங்கி சரிந்தான்.

நாங்கள் பதட்டமானோம். “என்னம்மா இப்படி செஞ்சுட்டீங்க...”

“ஜக்கம்மாவா எகத்தாளம் பேசினா இதுதான் கதி. என்கிட்ட ஏதாவது குறிகேளு அப்பத்தான் இவனை எழுப்பிவிடுவேன்”

“காசு வேணும்னா கொடுக்கறோம் இவனை எழுப்பிவிடுமா...தாயே”

“ஜக்கம்மா பிச்சை எடுக்காது. குறிகேட்டு காசு கொடுத்துட்டுப்போ...”

பீச்சில் உலாத்தும் ஜக்கம்மாவின் மேன்மையான கொள்கை எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.

“அம்மா இன்னைக்கு( 6 ஜூலை ) உலகக்கோப்பை கால்பந்து போட்டியில உருகிவே நாடும், நெதர்லாந்தும் போட்டி போடறாங்க. அதில் யாரு ஜெயிப்பானு சொல்லு”

கண்களை மூடி ம்ம்ம்ம்ம்ம் என வாயில் சப்தம் எழுப்பினாள் அந்த பெண். பிறகு கண்களை விரித்து எங்களை பார்த்து“உருகுவே இன்னைக்கு தோத்து போயிடும்” என்றாள்.

என் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு வந்த பணத்தை அவள் கையில் திணித்தேன். மீண்டும் குச்சியால் கோவிந்தை தட்டினாள். அவன் எழுந்து உட்கார்ந்து என்ன நடந்தது என்பது போல பேந்த பேந்த முழித்தான்.

அவனை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என்னது உங்களுக்கு ஜக்கம்மா சொல்லுவதில் நம்பிக்கையில்லையா? அந்த குச்சியுடன் உங்ககிட்ட வந்தா தெரியும்...


Saturday, July 3, 2010

கிளி ஜோஸியரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்..!

நேற்று வீதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிளி ஜோதிடர் எதிர்ப்பட்டார். ஐயா எதிர்காலம் பார்க்கறீங்களா என்றார்.

ஜோதிடரே எனக்கு எந்த ஒரு விஷயத்திலும் எதிரா இருக்க பிடிக்காது. இணக்கமா வேணும்னா இருப்பேன். எதிர்-காலம் வேண்டாம் என்றேன்.

ஐயா நீங்க கிளிக்கு வேலை கொடுத்தா அதுக்கு நான் ரெண்டு நெல் மணி போடுவேன். உங்க புண்ணியத்தில அது சாப்பிடும் என்றார்.

சரி நான் பார்க்குறேன், ஆனால் என்னை பற்றி அல்ல. உலக கால்பந்து போட்டி பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு உன் கிளியிடம் சீட்டு எடுக்கச்சொல் என்றேன்.

கிளிக்கு நெல் கிடைத்தால் போதும் என தன் விரிப்பை விரிந்து சீட்டுக்களை அடுக்கினார்.


நான் முதல் கேள்வி கேட்டேன் “இன்று (3-ஜூலை) நடக்கும் அர்ஜெண்டினா - ஜெர்மனி போட்டியில் யாரு வெற்றி பெறுவார்கள்?”

கிளி என்னை சைடாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தத்தி தத்தி சென்று ஒரு சீட்டை எடுத்து கொடுத்தது. அதில் தாமஸ் முல்லர் என்பவரின் புகைப்படம் இருந்தது. அவர் ஜெர்மனி அணியின் முதன்மை வீரர். ஓ கிளி ஜெர்மனி வெற்றி பெரும் என்கிறதே..!

இவ்வளவு சூட்டிப்பான கிளியை நான் கண்டதில்லை. அதனால் என் அடுத்த கேள்வியை கேட்டேன், “கிளியே இன்று பராகுவே மற்றும் ஸ்பெயின் அணி விளையாடும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்”?

தன்னை தானே ஒரு முறை சுற்றிக்கொண்டு மீண்டும் சீட்டின் வரிசையில் தேடத்துவங்கியது கிளி. முடிவில் ஒரு சீட்டை எடுத்து தந்தது. அதில் பராகுவே அணி தலைவர் டென்னிஸ் கண்ஸா படம் இருந்தது. கிளியின் ஜோதிட அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது..!

அப்படியானால் கால் இறுதி போட்டியில் ஜெர்மனி பராகுவே நாட்டை சந்திக்கும் போலும் என நினைத்துக் கொண்டேன்.

“கிளியே நீ கூறியவை சரியாக இருந்தால் நாளை இறுதி போட்டியில் விளையாடும் அணி பற்றி உன்னிடம் கேட்கிறேன். இந்தா சில நெல்மணிகள்” என அதன் முன் வீசினேன்.

என்ன தான் உலக கோப்பை அணிகள் பற்றி கூறினாலும் கிளிக்கு கிடைக்கப் போவது என்னவோ நெல்மணிகள் தான்.

நெல் மணிகளை சந்தோஷத்துடன் கொத்தும் கிளியிடம், “கிளியே இந்தியா என்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடும் என கூறுகிறாயா?” என கேட்டேன்.

நெல் மணிகளை என் முன் காறி உமிழ்ந்துவிட்டு கூண்டுக்குள் சென்று அடைபட்டது கிளி...!