Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label இந்திரன். Show all posts
Showing posts with label இந்திரன். Show all posts

Saturday, November 22, 2008

இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?

தேவேந்திரன் என்று அழைக்கப்படும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். வஜ்ராயுதம் தாங்கி தேவலோகத்தில் வசிப்பார் என புராணங்களிலும் , திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம். இந்திரன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது அசுரர்கள் அவரை தோற்கடிப்பார்கள், இறைவனிடம் முறையிட்டு மீண்டும் அப்பதவியை அடைவார் என்பது தானே?

பெண்கள் மேல் மையல் கொள்ளும் இந்திரனாகவும், ரம்பா ஊர்வசி மேனகையின் நடனத்தை காணும் இந்திரன் என அவர் மேல் நமக்கு நல்ல நினைப்பே வரும் அளவுக்கு அவரை பற்றி கதைகள் இல்லை. முனிவரின் மனைவி மேல் மையல், கையை பிடித்து இழுத்தார் என பல வில்லங்கமான கதைகள். அப்படிபட்ட தேவேந்திரன் யார் என பார்ப்போம்.

இந்திய கலாச்சாரத்தில் பலவகையான எழுத்து வகைகள் உண்டு. அவற்றை தெளிவாக தெரிந்து கொண்டால் இந்திரனை அறிய வசதியாக இருக்கும். காவியங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் என்பவையே மூன்று வகையாக எழுத்துவகைகள்.

காவியங்கள் என்பது முழுமையாக கற்பனை கதாப்பத்திரங்களை வைத்து எழுத்தாளர் எழுதும் புதினம் எனலாம்.

உதாரணமாக சகுந்தலம் எனும் காவியம் புனையப்பட்டது. தற்காலத்தில் நாவல் எனும் தன்மை இதற்கு ஒப்பாக சொல்லாம். இதிகாசம் என்பதன் வடமொழி விளக்கம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். “இதி” என்றால் “இவ்வாறு” , ஹாசா என்றால் “நடந்தது”. ஓர் சம்பவம் இவ்வாறு நடத்தது என்பதனை உலகுக்கு உணர்ந்த எழுதப்பட்டது இதிகாசம். ராமாயணம், மஹாபாரதம் என்பவை இதிகாசங்கள்.

புராணங்கள் என்பது சில உயர்நிலையில் உள்ள சூட்சுமமான விஷயங்களை பாமரனுக்கு புரியும் நோக்கில் சுவாரசியமாக கூறும் எழுத்துவகை. டார்வின் தியரி எனும் விஷயத்தை பாமரனுக்கு விளக்கினால் புரியாது என்பதால் அவனுக்கு நெருக்கபான விஷ்யத்தை வைத்து கூறப்பட்டது தசாவதாரம் எனும் புராண கதை. இந்த விஷயம் பாகவதம் எனும் புராணத்தில் இருக்கிறது.

புராணங்களில் வரும் கதைகளையோ, கதையின் உள்நோக்கத்தையோ காணாமல் மேலெழுந்த வாரியாக பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். பாமர நிலையில் இருக்கும் ஒருவனுக்கு உயர் ஞான விஷயத்தை விளக்குவதே புராணங்களின் நோக்கம்.

புராணங்களை தொகுத்து உலகிற்கு அளித்தவர் வியாசர். அவர் தனது ஞான நிலையிலிருந்து இறங்கி சராசரியான மனிதனுக்கு புரியும் நோக்கில் பதினோரு புராணங்களை தொகுத்தார். நீங்கள் பிரம்மாண்டமான விஷயங்களை புரிந்து கொள்ளாதவராக இருந்தால் இந்திரன் என்பவர் தேவலோகத்தில் மனித வடிவில் இருப்பவர் என்றே கற்பனை செய்ய முடியும். இந்திரன் என்பது ஓர் ஆற்றலின் குறிசொல் அவ்வளவே.

மின்சாரத்தை தான் இந்திரன் என உருவகபடுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்திரன் என்பவர் ஒருவர் கிடையாது. தேவந்திர பதவிக்கு பலர் போட்டியிடுவர் என்றும் புராணங்களில் உண்டு.

வருணன் (நீர்), வாயு ( காற்று), அக்னி, சூரியன் மற்றும் பிற தேவர்கள் இந்திரனுக்கு கீழே இருப்பவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் இவர்கள் கீழே இருக்க வேண்டும்? இந்திரன் ஏன் தலைவனாக இருக்க வேண்டும்?

நீர், காற்று, அக்னி, மற்றும் சூரியன் என அனைத்திலிருந்தும் நவீன மனிதன் மின்சாரத்தை தயாரிக்க முடியும். மின்சாரம் அனைத்திலும் பிரதானமாக இருப்பதால், இந்திரன் எனும் மின்சாரம் அனைத்திலும் முதன்மையாக இருக்கிறது.

இந்திரனுக்கு ஆயிரம் கண் என்றும் அது ஏன் எற்பட்டது என்ற விவகாரமான கதையையும் படித்திருப்பீர்கள். மின்சாரத்திற்கு ஓர் முனை செயல்பாடு கிடையாது, பல இணைப்புகளை கொடுக்க கொடுக்க, அனைத்திலும் மின்சாரம் பாயும். இதை உணர வைக்க எப்படிப்பட்ட கதை சொல்ல வேண்டி இருக்கிறது....!

மின்சாரம் என்பது பல பொருட்களுக்கு உற்பத்தி ஆதாரமாக இருக்கிறது. அதனால் தான் உற்பத்தி சம்பந்தமான (உறுப்புகள்) விஷயங்களுக்கு இந்திரனை காரணமாக்குகிறார்கள்.

தொலைகாட்சி மற்றும் இதர சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியும். நவீன காலத்தில் தொலைகாட்சி, கணினி மற்றும் வானொலி தான் ரம்பா, ஊர்வசி மேனகா.

இக்கட்டுரையை வாசிக்கும் சமயம் தியானத்தில் உற்கார்ந்து பாருங்கள், பக்கத்து வீட்டின் டீவி ஒலி, உங்கள் செல்போன் என பல விஷயங்கள் உங்களை இடையூராக்கும். விஸ்வாமித்திரருக்கும் இதே அனுபவம் நேர்ந்தது. இந்திரன் எனும் மின்சாரம் மனிதன் எனும் விஸ்வாமித்திரர்களை தன்னை போல் ஆற்றல் வாய்ந்தவர்களாக மாறாமல் தடுக்க தியானத்திற்கு இடையூரு செய்யும் நோக்கில் தொலைகாட்சி-வானோலி-கைபேசி எனும் ரம்பா-ஊர்வசி-மேனகை அனுப்புகிறார்.

மனித உடலில் கூட மின்சாரம் உண்டு என்கிறது நவீன விஞ்ஞானம். யோக சாஸ்திரமும் மனித உடலின் முதுகெலும்பு பகுதியில் இந்திரன் வசிக்கிறார் என்கிறது. இந்திரனின் கையில் இருப்பது வஜ்ராயும் என்னும் கருவி. மின்னல் என்பதன் வடமொழி சொல்லே வஜ்ரம் என்பதாகும். மின்னலில் எண்ணிலா மின்சார சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்திரன் மின்சார உருவகம் என்பதில் வஜ்ராயுதமே சாட்சி.

தற்காலத்தில் இந்திரன் தனது பதவியை இழந்து மறைந்து கொண்டான். இதனால் அசுரர்கள் அதை தன்வசமாக்கினார்கள். புரியவில்லையா? உங்கள் வீட்டில் 3 மணி நேரம் தினமும் மின்சாரம் இல்லாமல் இருப்பதைதான் சொல்லுகிறேன். அசுரர் கொட்டத்தை அடக்க இறைவனை வேண்டுவோம்.