முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தவமாக செய்து வந்த அக்னிஹோத்ரம் நாளடைவில் நம் சமுதாயத்தில் இல்லாத நிலைக்கு வந்ததற்கு வரலாற்று மற்றும் நம் நாகரீக மாற்றம் முக்கிய காரணம்.
தற்காலத்தில் அக்னி ஹோத்ரத்தை உணர்ந்தவர்கள் அவற்றை விட்டு விலகுவதில்லை. மேலும் வெளிநாட்டினர் அக்னி ஹோத்ரத்தை பற்றி மிகவும் ஆழ்ந்த தெளிவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அக்னி ஹோத்ரம் என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்க சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அக்னிஹோத்ரம் செய்வதை நிறுத்துவதில்லை.
ஹோமா தெராபி என்ற பெயரில் அக்னிஹோத்ரத்தை அழைக்கிறார்கள். நோய் குணமாக்கும் மருந்தாக அக்னிஹோத்ரம் அவர்களுக்கு பயன்படுகிறது. ஹோமா யோகா, இண்டியன் ஹோமா, ஃபயர் யோகா என்ற பெயரில் அக்னிஹோத்ரம் வியாபரம் ஆக்கப்படுவதும் உண்டு. நாம்
சுத்தமாக பயன்படுத்தாத நல்ல விஷயத்தை மற்றொருவர் வியாபார நோக்கிலாவது பயன்படுத்துகிறார்களே என மனதை தேற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.
முன்பு இந்திய நாட்டினர்கள் கையில் ஒரு சிறிய பானையுடன் இருப்பார்கள். அந்த பானையில் எப்பொழுதும் நெருப்பு சாம்பல் பூத்த வண்ணம் இருக்கும். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அதை கொண்டு செல்லுவார்கள். அக்னிஹோத்ரம் செய்யும் வேளை நெருங்கும் பொழுது அந்த பானையிலிருந்து நெருப்பை எடுத்து பயன்படுத்துவார்கள். அக்னி ஹோத்ரம் முடிந்ததும் அக்னியை மீண்டும் அதில் சேர்த்து விடுவார்கள். இவ்வாறு வாழும் அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஈம சடங்கில் அவரின் மகன் அல்லது பேரன் அந்த பானையை ஏந்தி முன்னால் செல்லுவான். அந்த அக்னியை கொண்டே அவர் உடல் சாம்பலாகும். பின்பு அந்த பானையை ஏந்தி வந்த மகன் அல்லது பேரன் அந்த அக்னிஹோத்ரத்தை துவங்குவான்.
தற்காலத்தில் யாரும் அக்னி ஹோத்ரம் பின் பற்றாததால் இறந்தவுடன் வீட்டின் முன் சில விறகுகளை வைத்து தீயிட்டு பிறகு அதை மயானத்திற்கு எடுத்து செல்லுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா? அக்னியை ஏன் சவ ஊர்வலத்தின் முன் கொண்டு செல்லும் சடங்கு வந்தது என்று?
இப்படி ஏகப்பட்ட மெய்ஞான விஷயங்கள் நம்மில் சடங்காகி செத்துக்கிடக்கிறது என்பதே உண்மை.
எனது அனுபவத்தில் அக்னிஹோத்திரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். என் வாழ்க்கை அமைப்பு தினமும் அக்னிஹோத்ரம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் சூழலுக்கு தக்க அக்னிஹோத்ரத்தை நானும் பயன்படுத்துகிறேன். மேலை நாட்டினரால் அழைக்கப்படும் ஹோமா பார்மிங் என்ற முறை அக்னிஹோத்ரத்தை கொண்டு விவசாயம் செய்யும் முறையாகும்.
விவசாய நிலங்களில் அக்னி ஹோத்ரம் செய்து அதன் சாம்பலை நிலங்களில் தூவுவதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி இல்லாமல் அதிக சத்துடன் பயிர்கள் வளருகிறது. இது என் அனுபவத்திலும், வேளாண் பல்கலைகழக ஆய்விலும் கண்ட உண்மை.
விவசாய நிலங்களில் அக்னிஹோத்ரம் செய்வதால் சுற்றுச்சூழலால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும் பயிர்களுக்கு உதவும் உயிர்கள் அங்கே வளரத்துவங்கும்.
ஓசோன் அதிகமான சூழல் பயிர்களுக்கு மிக நல்லது என்பது அடிப்படையாகவே வேளண்மையில் இருக்கும் கோட்ப்பாடு. அப்படி இருக்க ஓசோனை பெருக்கும் அக்னிஹோத்ரம் விவசாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.
ஆற்றங்கரை ஓரம் குடில் அமைத்து அக்னி ஹோத்ரத்தை மக்களுக்கு பயிற்றுவித்து வந்த காலம் சென்று கணினியில் கால்களை ஆட்டிக்கொண்டு கற்றுக்கொள்ளுகிறோம். இதை ஒரு கருத்தாக மற்றும் வைத்துக்கொள்ளாமல் வாழ்வில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
கணினியை பயன்படுத்தும் நண்பர்களுக்காக அக்னி ஹோத்ரம் மென்பொருள் (சாஃப்ட்வேர்) இலவசமாக கிடைக்கிறது. இங்கே கிளிக் செய்யவும்.
இதை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இந்த மென்பொருள் அக்னிஹோத்ரம் செய்ய பல்வேறு வகையில் உதவியாக இருக்கும்.
விவசாயம் சார்ந்தோ அல்லது தனிபட்ட வாழ்க்கையிலோ அக்னி ஹோத்ரம் செய்ய ஆர்வம் கொண்டு அவற்றை முறையாக கற்றுக்கொள்ள நினைத்தால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
அக்னியால் இணைவோம்.. இந்த அகிலத்தை காப்போம்
|| ஓம் தத் சத் ||












