Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Tuesday, November 15, 2016

விஸ்வாமித்ர டயட்...!

இணையத்தில் டயட் என பல விஷயங்கள் பேசப்படுவதால் என் பங்குக்கு புதிய டயட் முறையை உலக மக்களுக்கு தெரிவிக்கவே ‘விஸ்வாமித்ர டயட்’ பற்றி சொல்லுகிறேன்.

மேலைநாட்டுக்காரங்கள் சொன்ன பல டயட் வகைகள் அசைவத்தை தூக்கிபிடிக்கிறது. ஆனால் டயட் என்றாலே மாமிசம் சாப்பிடாதே என சொல்லுகிறது இந்திய டயட் முறைகள். எளிய உணவு பருப்பும் கஞ்சியும் சாப்பிடுங்கள் என சொன்ன டயட் முறைகளை பின்பற்றுவதைவிட வாய்க்கு ருசியாக வெண்ணையில் வாட்டிய மாமிசத்தை சாப்பிடு என டயட் பலருக்கு பிடிக்காமல் போகுமா? ஆனால் விஸ்வாமித்ர டயட் இதில முற்றிலும் மாறுபட்டது.

உடல் எடை குறைக்க வேண்டுமா?
நோய் தீர வேண்டுமா?
2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வேண்டுமா?
பக்கத்துவீட்டுக்காரருடன் சண்டை தீர வேண்டுமா?
வருமானம் அதிகரிக்க வேண்டுமா ?

பயன்படுத்துவீர் விஸ்வாமித்ர டயட்...!

இதெல்லாம் எப்படி தீரும் என கேள்வி உங்களுக்கு உதயமாகலாம்.

முதலில் விஸ்வாமித்ர டயட் பற்றி பார்ப்போம்.

ரிஷி விஸ்வாமித்ரர் நம் புராணங்களிலும் இதிஹாசங்களிலும் நிறைந்தவர். பரசுராமரும் இவரும் ஒரே சூழலில் பிறந்தவர்கள் என இவரின் பிறப்பு முதல் விளக்கம் சொல்ல ஆசைதான்.
நமக்கு ஈசனின் லீலா வினோதங்களையே திருவிளையாடல் படம் பார்த்துத்தானே தெரிந்துகொள்கிறோம். அது மாதிரியே விஸ்வாமித்ரரை பற்றியும் ராஜரிஷி என்ற அற்புத திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விஸ்வாமித்ரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான் இந்த டயட்டுக்கு தூண்டுகோல்.

ஒருமுறை பாரத தேசம் முழுவதும் பட்டினியும் பஞ்சமும் பரவியது. மழையில்லாமல், வேளாண்மை இல்லாமல் மக்கள் உணவுக்காக கஷ்டப்பட்டனர். அந்த சமயத்தில் விஸ்வாமித்ரர் பயணம் செய்து பக்கத்து தேசத்துக்கு சென்று இருந்தார்.  அவர் திரும்பி பாரத தேசத்துக்குள் நுழைந்தால் தர்மம் குன்றி, பஞ்சம் பரவி இருப்பதை கண்டார்.

பிரம்ம ரிஷிக்கு யாரும் உரிய மரியாதை செய்யவில்லை. தனக்கே இங்கே வாழும் சூழல் இல்லாத நிலையில் பிரம்ம ரிஷிக்கு எப்படி உணவு கொடுத்து மரியாதை செய்வது என அனைவரும் விலகி சென்றனர்.

பாரத தேசத்தில் பல இடங்களில் சென்ற விஸ்வாமித்ரர் உணவு சாப்பிடாத காரணத்தால் பலம் குன்றி கீழே விழுந்தார். அவர் அருகே ஒரு நாய் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உணவுக்காக காத்திருந்தது. எலும்பும் தோலுமாக இருந்த விஸ்வாமித்ரரை சாப்பிட அது எண்ணியது. ராஜரிஷி உயிருடன் இருந்ததால் சாப்பிட முடியாமல் நாய் உயிர்விட்டது.. சில நாட்கள் கொடூர பசியுடன் காத்திருந்த விஸ்வாமித்ரர் இறந்த நாய்க்கு யாரும் உரிமைகொண்டாடவில்லை என்பதால் அதை உண்டு தன் உயிரை மேம்படுத்தினார். இறந்து சில நாட்கள் ஆனதால் நாய் உடல் அழுகி இருந்தது.  இருந்தாலும் தனது உயிர் தாங்கி உடலுடன் நம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தர்மம் அவரை இச்செயலை செய்ய தூண்டியது.


என்னய்யா இது டயட் என்று இறந்து அழுகிய நாயை சாப்பிட சொல்கிறீர்களா? என கேட்ப்பது புரிகிறது.

சிலர் இதையும் சாப்பிட விரும்புகிறார்கள் என்பது வேறு விஷயம். விஸ்வாமித்ரர் இப்படி உணவு சாப்பிடாதும் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் வரவில்லை. ஜீவகாருண்யத்தை கடைபிடிக்கும் ஒரு மாமுனிவர் மாமிசம் சாப்பிட்டால் பாவம் சேரும் ஆனால் விஸ்வாமித்ரருக்கு ஒன்றும் நேரவில்லை. காரணம் அவர் உணவை மூன்று நாட்கள் கவனமாக கண்டு ஆத்ம விழிப்புணர்வுடன் சாப்பிட்டார் என்பதே இதில் நாம் பார்க்க வேண்டிய உட்கருத்து.

ஒரு லட்சியத்தை நிர்ணயம் செய்து கொண்டு (உங்கள் மொழியில் - கோல்) விழிப்புணர்வுடன் நீங்கள் விரும்புவதை சாப்பிட்டு அந்த லட்சியத்தை அடைவதையே விஸ்வாமித்ர டயட் என்கிறோம்.

மூன்று வேளையோ அல்லது ஆறு வேளையோ எப்பொழுது எத்தகைய உணவு பொருளை சாப்பிட்டாலும், முழு கவனத்துடன் இதை நான் சாப்பிடுகிறேன்-இந்த உணவில் இத்தகைய சத்துக்கள் உண்டு. இதில் இத்தனை பாதகம் உண்டு என ஆய்வு செய்து கவனம் முழுவதும் உணவில்  இருக்குமாறு விழிப்புணர்வுடன் உட்கொள்ளுங்கள்.

உங்கள் எடை 100 கிலோவா? அதை 70 கிலோவாக மாற்ற வேண்டுமா? சுலபம். இருக்கவே இருக்கு விஸ்வாமித்ர டயட்.

மூன்று மாதம் லட்சியம் வைத்திக்கொள்ளுங்கள். 

தினமும் காலையில் சுப்ரபாதம் (இதை முதலில் பாடியவர் விஸ்வாமித்ரர்தான் என்பது எத்தினி பேருக்கு தெரியும்?) இசைக்கும் வேளையில் எழுந்து என் லட்சியம் இது இன்று முழுவதும் உணவை லட்சியம் நிறைவேறவே சாப்பிடுகிறேன் என விழிப்புணர்வுடன் சொல்லுங்கள்.

தண்ணீர் அருந்தும் பொழுது, பலகாரம் சாப்பிடும் பொழுது என எப்பொழுதும் இந்த கவனம் இருக்கட்டும். 

கவனம் சிதறாமல் இருக்க வலது கை மணிக்கட்டில் ஒரு காசி கயிற்றில் உள்புறமாக சிறிய அட்டைகாகிததில் உங்கள் லட்சியத்தை கட்டி தொங்கவிடலாம்...!

ஒவ்வொரு கவளம் சாப்பிடும் பொழுதும் இந்த காதிக அட்டை நினைவூட்டி உங்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும்.

விஸ்வாமித்ர டயட் சொல்லுவதெல்லாம் இது தான், நீங்கள் விழிப்புணர்வுடன் சாப்பிடாத காரணத்தால் உடல் மற்றும் மனதில் பிரச்சனை வந்தது. விழிப்புணர்வுடன் மனதை உணவில் வைத்து சாப்பிடுங்கள் நீங்கள் நினைத்த ஆரோக்கியம் மற்றும் பெருவாழ்வு பெறுவீர்கள்.

கொழுப்பு டயட், கார்ப் டயட் என எதை எடுத்தாலும் எடுப்பவருக்கு இதை சார்ந்து தான் உணவு உண்கிறோம் என தெரியாதவறை அந்த டயட் அவர் உடலில் செயல்படாது. எத்தனையோ வகை டயட் மற்றும் ஹீலிங் முறை பின்பற்றினாலும் அனைத்தும் விழிப்புணர்வு என்ற தளத்தில் செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆகவே இந்திர லோகத்திலிருந்து உங்கள் தவத்தை கலைக்க தேவ கன்னிகளை பலர் அனுப்பலாம். அதில் சபலமடையாமல் விழிப்புணர்வுடன் இருங்கள்.

Friday, February 3, 2012

புற்றுநோய் விழிப்புணர்வு யோக பயிற்சி..!


நவநாகரீகம் என்ற பெயரிலும், உலகமயமாக்கல் என்ற பெயரிலும் நாம் பெற்ற பலன்கள் ஏராளம். ஆனால் நாம் இழந்தது ஒன்றே ஒன்று தான். அதன் பெயர் ஆரோக்கியம்..!

முன்பு நம் வீட்டில் அதிகபட்சமாக கேஸ் அடுப்பில் உணவு சமைப்போம். தற்சமயம் மைக்ரோவேவ் அவன் இருந்தால் தான் மதிப்பு என ஆகிவிட்டது.

என் குழந்தை கப் நூடுல்ஸ் தான் விரும்பி சாப்பிடுவான் என சொல்லுவதால் பல தாய்மார்கள் நவீன தாய்மார்களாக ஜொலிக்கிறார்கள்,

எலுமிச்சை அடங்கிய சோப் பாரில் தான் நாம் பாத்திரம் துலக்குவோம். அதே சமயம் எண்ணை பிசுக்கு போக அலுமினிய கம்பிகள் கொண்ட ஸ்க்ரபர்கள்.

இதனால் நாம் வரவேற்பது என்ன தெரியுமா? புற்றுநோய்...! 

புற்றுநோய் வந்தப் பிறகு “நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என புலம்புகிறார்கள்.

அடிப்படையில் உங்கள் வாழ்க்கை தன்மையால் நீங்களே உங்கள் உடலுக்கு பாவம் செய்து விட்டீர்கள் என அப்பொழுது பதில் சொல்லி பிரயோஜனம் இல்லை..

இத்தகைய வாழ்வியல் குறைபாடுகள் அகற்றி நல்ல யோக பயிற்சியுடன் முழுமையான ஆரோக்கியம் பெற நேசம் மற்றும் ப்ரணவ பீடம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

உங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கிய குடும்பம் என்ற நிலையை அடையுங்கள்.

அனுமதி இலவசம்
வாழ்வியலில் சிறிது மாற்றம் செய்து புற்றுநோயை விரட்டுங்கள்...!