கடவுளுடன் நேரடியாக மனிதன் உரையாட தேவப்பிரசன்னம் ஓர் வழி என முன்பு கூறினேன். இறைவனே நேரடியாக கோவில் எத்தகைய சூழல் அமைக்க வேண்டும் என சொல்லுவது மிகவும் சிறப்பல்லவா? தமிழக கோவில்களில் ஆகம சாஸ்திரம் என்று கோவில் நிர்மாணம் செய்யும் சட்டம் உண்டு. இச்சாஸ்திரம் தற்சமய தமிழக கோவில்களில் 30 சதவீதம் கூட கடைபிடிப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது.
கேரள கோவில்களில் ஆகமம் வேலை செய்யாது. பரசுராமரின் வழி வந்தவர்கள் மந்திர, தந்திர பாதைகளில் செல்வதால் அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தை தேவப்பிரசன்னம் என்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். தேவப்பிரசன்னம் என்பதே ஒரு தாந்ரீக முறை தான்.
தாந்த்ரீக முறைகளில் எப்பொழுதும் ஒரு குறை இருக்கும். சராசரி மனிதன் உண்மையான தாந்த்ரீகரை கண்டாலும் போலியானவரை கண்டாலும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது. நம் ஆட்களுக்கு மோடி மஸ்தானும் தாந்த்ரீகன் தான், செய்வினை செய்பவனும் தாந்த்ரீகன் தான்- இவர்கள் இருவருமே தாந்த்ரீகர்கள் இல்லை என்பதே நமக்கு தெரியாது.
இதுபோலவே கோவிலில் பிரசன்னம் பார்ப்பவர்கள் எல்லோரையும் நாம் தேவப்பிரசன்னம் பார்ப்பவர்கள் என முடிவு செய்கிறோம்.
சபரி மலை மற்றும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் நடந்த பிரசன்னம் உண்மையா?
டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சீசன் நடைபெறும். அப்பொழுது பிரபலமாகாத சில பாடகர்கள் சபாக்களுக்கு தாங்களே காசு கொடுத்து அல்லது சிபாரிசு மூலம் கச்சேரி செய்வார்கள். இதனால் தங்களுக்கு புகழ் வெளிச்சம் கிட்டும் என்பது அவர்களின் எண்ணம். அப்படி செய்தாலும் திறமை இருப்பவனையே உலகம் பேசும். திறமையற்றவனை அத்தருணத்தில் பேசும் அப்புறம் உலகம் மறந்துவிடும்.
அதுபோலத்தான் சிலர் சிபாரிசின் பேரிலும், பணம் மூலமும் இக்கோவில்களில் பிரசன்னம் பார்த்தார்கள். அனைத்தும் வீணானது. கோவில் நிர்வாகத்தின் கோளாரால் வந்த வினை. தேவனுக்கு பிரசன்னம் பார்க்கச் சொன்னால் ஜெயமாலாவிற்கு பிரசன்னம் பார்க்கிறார்கள் நம் ஜோதிட மேதைகள்.ஒரு மாநில முதல்வருக்கு ஜோதிடம் பார்த்தவர் என்பதற்காக அவருக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும் அறிவு வந்துவிடுமா? கோவிலின் பெயரும், ஜோதிடரின் பெயரும் கெட்டது தான் மிச்சம். திருவனந்த புரத்திலும் கோவில்காரர்களின் முடிவே அங்கே தேவப்பிரசன்ன பலனாக கூறப்படுகிறது. நமக்கு தேவனா முக்கியம்? புதையல் தானே முக்கியம்...!
இவர்கள் செய்யும் தவறுகள் நீண்டு கொண்டே செல்லுகிறது... முடிவு இறைவனின் கையில்...
கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம். அங்கே தேவப்பிரசன்னம் வைக்கப்பட்டால் அப்பலன்களை சொல்ல ஒரு திருமண மண்டபத்தை எடுத்து அதில் ஐநூறுக்கும் மேம்பட்ட ஜோதிடர்கள் கலந்து ஆலோசிப்பார்கள். நன்றாக ஜோதிடம் தெரிந்த ஆட்கள் அங்கே இருந்தாலே தலை வெடித்துவிடும். ஒவ்வொருவரும் சாஸ்திரத்தை கரும்பு சக்கை பிழிவதை போல பிழிந்து எடுப்பார்கள். இப்படி பட்ட நிகழ்வுகளை பார்த்து பழகி பங்கெடுத்தவர்களுக்கு தேவப்பிரசன்னம் என்ற பெயரில் போலியாக செய்பவர்களை கண்டால் என்ன தோன்றும்?
நம் சாஸ்திரங்களை இன்றும் நாம் இழந்துவிடவில்லை. வரும் காலத்தில் நம் சந்ததியினருக்கு வழங்க நாம் ஒரு சதவிகிதமேனும் முயல வேண்டும்.
ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்பில் தேவப்பிரசன்னம் மூலம் கோவிலின் ஆற்றலை மேம்படுத்தும் செயல் செய்துவருகிறோம். நீங்கள் சார்ந்த கோவில்களுக்கு ஏதேனும் தேவப்பிரசன்னம் மூலம் உதவி வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள். இறையாணையாக ஏற்று உதவுகிறோம்.
-பிரசன்னாகியது-







