Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, October 18, 2019

இமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2


கட்டுரை எழுதியவர் - மணிகண்டன்

                  அனைவருக்கும் நமஸ்காரம் இறையருளும் குருவருளும் துணைபுரிய எங்களின் ஹிமாலய பயண அனுபவத்தை பற்றி இங்கு பதிவிடுகிறோம். சுவாமிஜி ஹிமாலய பயண அறிவிப்பு வந்தவுடன் எங்கள் மனம் அடைந்த மகிழ்சிக்கு அளவில்லை. பலநாள் பசியில் இருப்பவருக்கு தேனில் ஊறிய பலாச்சுலை கிடைத்தது போன்று இருந்தது. காசி முக்திநாத் கும்பமேளா பயணத்தில் கலந்து கொள்ளாததால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று சுவாமிஜியிடம் விண்ணப்பித்தோம் சுவாமிஜியின் ஹிமாலய வாட்ஸ்அப் குருப்பில் இணைத்ததும் இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி உரைத்தோம் 

சில நாட்களுக்குப்பிறகு சுவாமிஜி கேதர்நாத் கோவிலை அடைய 4 வழியைக் கூறினார்.

1. குதிரை

2. ஹெலிகாப்டர்

3. டோலி

4. நடத்தல்


இந்த கேள்வி எங்களை சிறிது திகிலடைய செய்தது. இருப்பினும் சுவாமிஜியின் முடிவே எங்களின் வழி எனக் கூறிவிட்டோம். குருப்பில் ஒருவர் சுவாமிஜியே சொல்லுமாறு கேட்டார் அதற்கு சுவாமிஜி பர்வதமலை போன்றது என எங்களுக்கு நடந்துவிட முடியும் என நம்பிக்கை ஊற்றெடுத்தது.


பிறிதொருநாளில் பனிமூடியமலையில் ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ எடுத்த காட்சியை பகிர்ந்து திகிலூட்டினார.; செப்டம்பர் 19 முதல் 25 வரையிலான பயண விவரங்களையும் என்ன கொண்டு வரவேண்டுமென்ற விவரங்களையும் கொடுத்தார். பயணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு தேவையான பொருட்களை வாங்கி பேக்கங் செய்ய ஆரம்பித்தோம். 18ந் தேதி இரவு 12 மணிக்கு முழுவதும் முடித்தோம். இத்தனை நாட்களாக சென்னையில் மழையே இல்லை.ஆனால் இன்றைய இரவிலோ சோ… என மழை கொட்டியது.

காலையில் 7 மணிக்கு செக்கின் செய்ய வேண்டியதால் காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு ஆயத்தமாகி விட்டோம். வுhடகை கார் 6:10க்கு வருமாறு புக் செய்தோம். ஆனால் 6:50க்கு வந்தது. மழையோ நிற்காமல் எங்களை வாழ்த்தி வழியனுப்ப பொழிந்துகொண்டே இருந்தது.

கார் சிறிது மெதுவாகவே ஊர்ந்தது. இதயமோ மிக வேகமாக படபடத்தது. ஒரு வழியாக கார் மிதந்து 7:46க்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தது. 9 மணிக்கு விமானம் சென்னையிலிருந்து ஸ்ஸ்ஸ்… என புறப்பட்டது. 

      விமான பயணம் எனக்கு சிறிது பயமான பிராயணமாகவே இருக்கும். புல வருடங்களுக்கு முன் 2 முறை பயணம் செய்திருக்கிறேன். இதனால் சிறிது பதட்டம் மனதில் இருந்துகொண்டே இருந்தது.நாங்கள் அனைவரும் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தோம். விமானம் மேலே பறக்கத் துவங்கும்முன் கண்களை இறுக்க மூடிய நிலையில் இருந்தேன் பயம் தெரியாமல் இருப்பதற்காக. இருந்தும் விமானம் மேலெழும்போது நெஞ்சம் படபடத்தது. சிறிது நேரத்திற்குப்பின் அமைதி அடைந்தது. இப்பொழுது மரங்கள் வண்டி கட்டிடம் அனைத்தும் சிறிய பொம்மைபோல் தெரிந்தது. பிறகு மேகத்திற்கு மேலே வானத்தில் விமானம் தஞ்சமடைந்தது. மேகங்கள் அனைத்தும் பார்பதற்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் போல இருந்தது. பழைய படங்களில் வருவதுபோல தேவர்களும் நாரதரும் வருகிறார்களா என்ற மாய எண்ணம் எங்களுக்கு வந்துபோனது. 

       அனுவும் திருமதி.அமுதா அவர்களும் சைலன்ட் ரிட்டிரீட்ல் கூறியபடி தியானம் செய்ய முயற்சிக்கலாம் என்றார்கள். அதை ஆமோதித்து அனைவரும் கண்கள் மூடிய நிலையில் சுவாசத்தை விமானத்தின் ஓசையோடு இணைக்க ஆரம்பித்தோம். 2 மணி நேர பயணத்திற்குப்பின் மும்பை விமான நிலையத்தை அடைந்தது. எங்களுடன் கொண்டு வந்திருந்த இட்லியை உண்டு பசியாறினோம். செக்யுரீட்டி செக் முடிந்தவுடன் டேராடூன் விமானத்திற்காகக் காத்திருந்தோம். 13:20 மணிக்கு விமானம் புறப்பட ஆயத்தமானது. இம்முறை கண்கள் மூடிய நிலையில் சுவாசத்தை விமானத்தின் ஓசையோடு இணைக்க ஆரம்பித்தோம். இப்பொழுது மனதில் சிறிதும் பயமில்லை. கவனம் முழுவதும் சுவாசத்துடனும் விமானத்தின் ஓசையோடும் இருந்தது. சிறிது நேரம் கழித்து கண்கள் திறந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தோம். சித்த சாஸ்திரத்தில் சொன்னபடி மேகத்திற்குமேல் மனதை கொண்டு செல்ல முடியாதை இப்பொழுது நேரடியாகக் காண முடிந்தது. பிறகு மேகத்திற்குக் கீழே பறந்தபோது இயற்கையின் அன்னையின் பேரழகைக் காண முடிந்தது. ஆம் டேராடூன் முழுவதும் பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் இருந்தது. மனம் நிரைவடையும் முன்பு விமானம் ஏனோ கோபம் கொண்டு தரையிரங்கியது எங்களுக்கு சிறிது வருத்தமாக இருந்தது. எனினும் சுவாமிஜியின் வரவுக்காக முன்பே தரையிரங்கியது ஆனந்தமே. நாங்கள் கோவை குழுவின் வருகைக்காகக் காத்திருந்தோம். சிங்கபுர் பெங்களுர் குழுக்கள் முன்பே ஹரித்துவார் ஹோட்டல் அறையை அடைந்திருந்தனர்.



சுவாமிஜியின் விமானம் குறித்த நேரத்திலிருந்து 20 நிமிடங்களுக்கு முன்பே டேராடூனில் தரையிரங்கியது. நாங்கள் அனைவரும் சுவாமிஜியை வணங்கினோம். அனைவரும் சிறிய பேருந்து வந்தவுடன் ஹரித்துவார் ஹோட்டல் அறையை அடைந்தோம். அனைவரும் கங்காமாதாவிற்கான ஆர்த்தி காண ஆயத்தமானோம். சிறிய பேருந்து எங்கள் அனைவரையும் சுமந்துகொண்டு கங்கா ஸ்னானம் செய்யுமிடம் நோக்கி ஊர்ந்தது. எங்களுடைய காலதாமத்தினால் கங்காமாதாவிற்கான ஆர்த்தியைக் காணும் பாக்கியம் இழந்தோம். இருப்பினும் கங்கா ஸ்னானம் செய்ய வாய்ப்பளித்த இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி. எங்ஙளின் கங்கா ஆர்த்தி ஏக்கம் கங்கா தீர்த்தக்குளியலில் மறைந்தது. நம் அனைவருக்குமான அன்னை எங்களையும் அரவணைத்தது ஆனந்தமாய் இருந்தது. பிறகு அனைவரும் தங்களுடைய முன்னோர்களுக்கும் தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் சேர்த்து அன்னையிடம் விண்ணப்பம் (ஆர்கியம் ) வைத்தோம். 

   சுவாமிஜி இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவுரைத்தார். “இது எனக்கு மிகவும் நெருக்கமான இடம். நாங்கள் அனைவரும் அதனைக் கருத்தில் கொண்டு நடக்கவேண்டும் என்றார்.” எனக்கு கேதர்னாத் பத்ரினாத் பஞ்ஞ ப்ரயாக் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. சுவாமிஜி எச்சரித்தபடி சரியானபடி நடக்கவேண்டுமென மனதில் வேண்டினேன். நானும் அனுவும் மௌனத்தில் இருப்பது என முடிவெடுத்து அப்பொழுதிலிருந்து முயற்சி செய்ய ஆரம்பித்தோம்.

   20-09-2019 அன்று காலை 5 மணிக்கு ஆயத்தமாகி எங்கள் குழுவான தேவ ப்ரயாக் மற்ற குழுக்களான நந்த ப்ரயாக் கர்ண ப்ரயாக் விஷ்ணு ப்ரயாக் ருத்ர ப்ரயாக் உடன் பேருந்தில் ஏற காத்திருந்தோம். 2 சிறிய பேருந்துகளில் எங்கள் பயணத்தை துவங்கினோம். 2 அரை மணிநேர பயணத்திற்குப் பிறகு வசிஷ்டர் குகை வந்தடைந்தோம். மகாபாரத இதிகாச நினைவலைகள் மோத வசிஷ்டர் தியானம் செய்த இடத்தில் தியானம் செய்ய அனுமதி கிடைத்ததை நாங்கள் அனைவரும் கிடைத்தற்கறிய பாக்கியங்களில் ஒன்றாக எண்ணி தியானம் செய்தோம்.  பிறகு அங்கே அருகில் பிரவாகமாய் பரவியிருந்த கங்கை அன்னையை தரிசித்து நேரம் கடத்தாமல் தேவ ப்ரயாக் வந்தடைந்தோம். ராமர் கோவில் சிறிது தொலைவில் இருந்ததால் நடந்து சென்றோம். படிகட்டில் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தபோது மலைபசு சிரித்தபடி கீழே இறங்கிக்கொண்டிருந்தது. ஒருவழியாக மேலே ஏறி ராமர் தரிசனம் கண்டோம். அங்கிருந்து மெதுவாக கீழே இறங்கி தேவ ப்ரயாக் வந்தடைந்தோம். ஒருபக்கம் பச்சை நிறத்திலும் மறுபக்கம் சாம்பல் நிறத்திலுமாக வந்து சங்கமமாகிறது. 

அலக்நந்தா பாகீரதி சங்கமத்தை தொடர்ந்து கங்கை அன்னையாக உருவெடுக்கிறாள். அங்கே அனைவரும் அன்னையின் மடியில் தவழ்ந்து பிறகு ஆர்கியம் கொடுத்தோம். நேரமின்மையின் காரணமாக அங்கிருந்து புறப்பட்டு வழியில் மதிய உணவை உண்டோம். பிறகு 16:30 மணிக்கு ருத்ர ப்ரயாக் வந்தடைந்தோம். அலக்நந்தாவும் மந்தாகினியும் சங்கமிக்கும் இடம் இதுவாகும். மாலையானாலும் தீர்த்தத்தில் இறங்கும்போது குளிர் தெரியவில்லை. ருத்ர ப்ரயாக் பெயருக்கு ஏற்றாற்போல் ருத்ரமாக பாய்ந்துகொண்டிருந்தது. அதனால் ஒருவர்பின் ஒருவராக தீர்த்தமாடினோம். மாலை 6 மணிக்கு இங்கே கங்கா ஆர்த்தி செய்தார்கள்.  

ஹரித்துவாரில் கங்கா ஆர்த்தியை தவறவிட்டது இங்கே நிறைவேறியது. அங்கிருந்து குப்தகாசி இரவு வந்தடைந்தோம். அங்கே இரவு உணவு உண்டபிறகு சுவாமிஜி 21-09-2019 அன்று காலை 5 மணிக்கு கேதர்நாத் கிளம்புவோம் எனவும் அதிகமான பொருட்களுடன் மலையேற சிரமம் அதனால் ஸ்லீப்பிங் பேக்கும் ஜெர்கின் மற்றும் ஒரு செட் துணியும் எடுத்துக்கொள்ளக் கூறினார். 21-09-2019 காலை 5 மணிக்கு குப்தகாசியிலிருந்து பேருந்தில் கிளம்பினோம். காலை தேவையான உணவை அனைவருக்கும் சிறிய டப்பாவில் கொடுத்திருந்தனர். காலை 8:30 மணிக்கு மலை அடிவாரம் அடைந்தோம். அங்கே அனைவரும் டீ எடுத்துக்கொண்டனர். நானும் அனுவும் டீ சாப்பிடுவதில்லையாதலால் மலைமேல் நடக்க ஆரம்பித்தோம். மலைமேல் ஆக்ஸிஜனின் அளவு குறையும். அதை சமாளிக்க சுவாமிஜி முதல்நாளே நீர் நிரைய குடிக்கவும் திட உணவை குறைவாவும் தேவையற்ற திண்பண்டங்களை தவிர்க்கவும் கூறினார். 

மலையின் படிகட்டுகளில் மெதுவாக ஏறினோம். இமயமலையின் இயற்கை அழகை ரசித்தபடியே மனம் துவளும்போது குருமந்திரத்தை மனதில் கூறியபடியே பயணப்பட்டோம். கங்கை அன்னை வழியெங்கும் எங்களால் தொடமுடியாத தூரத்தில் பாய்ந்துகொண்டிருந்தார். வுழியெங்கும் வானுயர்ந்த மரங்கள் அனைவரையும் வாழ்த்தி மேலேறி வாருங்களென வரவேற்றன. நாங்கள் சற்றுவடையவே ஓரிடத்தில் அமர்ந்தோம். அங்கே எழுமிச்சை சாறு கிடைத்தது. அதை வாங்கி பருகி இளைப்பாறினோம். அப்பொழுது சுவாமிஜியும் சில மாணவர்களும் வந்து எழுமிச்சை சாறு பருகி இளைப்பாறினர். நானும் அனுவும் அங்கிருந்து கிளம்பினோம். அப்பொழுது சுவாமிஜி எங்களிடம் எதற்கு மலையேற உதவும் கம்பை உபயோகப் படுத்தாமல் இருக்கிறீர்கள் என கேட்டார். அதனை ஆமோதித்து நாங்கள் கம்பை ஊன்றி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். ஒருசிலர் டோலியிலும் குதிரையிலும் மலையில் ஏறினர். 

 மெதுவாக இமயமலையின் இயற்கை அழகை ரசித்தபடியே மெல்ல நடந்தோம். ஓரிடத்தில் குதிரையானது முழுதுமாகத் தரையில் படுத்திருந்தது. குதிரையோட்டிகள் செய்வதறியாது அந்த குதிரையின் அருகில் நின்றிருந்தனர். எங்கள் மனம் குருமந்திரம் கூறியபடியே முன்னேறிக்கொண்டிருந்தோம். இன்னொரு இடத்தில் ஒரு பெண்மணி நின்றுகொண்டு கத்திக்கொண்டிருந்தார். அங்கே ஒரு குதிரை ஆக்ரோஷமாக பின்னங்கால்களை உயர்த்தி உதைத்துக் கொண்டிருந்தது. குதிரையோட்டி ஒரு கம்பை வைத்து அடித்துக்கொண்டிருந்தார். நாங்கள் மறு ஓரமாக குருமந்திரத்துடன் முன்னேறிக்கொண்டிருந்தோம். திருமதி.விஜியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் சுவாமிஜியுடன் பேசியபோது சுவாமிஜி இதுவரை 7 கிலோமீட்டரே கடந்துள்ளோமென்றார். எங்களுக்கு சிறிது தலை சுற்றியது. சுவாமிஜியின் நேற்றைய உரையாடலின்போது வேகமாக நடந்தால் 4 மணி நேரத்திலும் மெதுவாக 6 மணி நேரத்திலும் கேதர்நாத் கோயிலை அடையலாமென்றார். அடிவாரத்தில் 16 கி.மீ என இருந்தது. மேலும் வாட்ஸ்அப் குருப்பில் பர்வதமலை போன்றதே என்றார். ஏறக்குறைய கால் பங்கு தூரமே கடந்துள்ளோமென நினைத்தபோது தலை சுற்றியது.

திருமதி.விஜி அவர்கள் அனுவிடம் கடைசி 4 கி.மீ மிகவும் கடினமாக இருக்குமென்றார். அதனால் அவரும் சிலரும் குதிரையில் பயணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இப்பொது எங்கள் மனது சிறிது கலக்கமுற்றது. இருந்தும் வழியில் நடந்தவற்றை பார்த்ததில் நடந்தே செல்வது என நானும் அனுவும் முடிவெடுத்தோம். திரு.வேணு திருமதி.சித்ரா அவர்களும் உண்டபிறகு சுவாமிஜியிடம் கூறி அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து நடந்தோம். 2 கி.மீ கடந்தவுடன் திருமதி.விஜி கூறியபடி கடினமான பாதையாகவே இருந்தது. அனு என்னிடம் திருமதி.விஜி கூறியபடியே குதிரையில் சென்றிருக்கலாமென்றார்கள். சிறிது அங்கே இளைப்பாறிய பிறகு மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். சிறிது துhரம் சென்றபிறகு அனு நடக்க மிகவும் கடினமாக உள்ளது என்றார்கள். எனக்கோ தலை பாரமாகி வலியெடுக்க ஆரம்பித்தது. நான் மௌனத்தில் இருந்ததால் வாய்திறந்து இதைப்பற்றிக் கூறவில்லை.  சுவாசம் இரண்டு நாசி வழியாகவே நடந்தது. இருந்தும் சுவாசக்காற்று எனக்குக் குறைவாகவே இருந்தது. சுவாமிஜி பின்னால் வரும் நம்பிக்கையாலும் மனதில் கூறும் குருமந்திரத்தாலும் நம்பிக்கையுடன் முன்னேறினோம். ஓரிடத்தில் ஒரு பாட்டியுடன் சிலர் குறுக்கு வழியில் வருவதைப் பார்த்தோம். திரு.வேணு அவர்கள் அந்த பாட்டிக்கு உதவும் பொருட்டு தன் கைகொடுத்து தூக்கிவிட முயற்சிசெய்தார். ஆனால் அந்த பாட்டியோ கையை தட்டிவிட்டு அவரே ஏறியது எங்களை பிரமிப்படையச் செய்தது. எங்களுக்குள் நம்மாலும் நடக்கமுடியுமென நம்பிக்கை அதிகரித்தது.


      நாங்கள் சிறிது வேகமாக இப்பொழுது நடக்க ஆரம்பித்திருந்தோம். எனக்கு தலை பாரம் இன்னும் குறையவில்லை. அதனால் நான் நீரை அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஓரிடத்தில் முன்னர் பார்த்த பாட்டியும் அவருடன் வந்திருந்தவர்களும் அமர்ந்திருந்தனர். நாங்கள் ஓய்வெடுக்காமல் வேகமாக நடப்பதைப் பார்த்து அவர்களில் ஒருவர் “மர்னேக்கேளியே ஜாரே க்யா” என கேட்டார். ஆக்ஸிஜன் இங்கு குறைவு அதனால் மெதுவாக ஓய்வெடுத்து செல்லுமாறு வலியுறுத்தினார். நாங்கள் அங்கே சிறிது இளைப்பாறியபோது திரு.டிவிஎஸ் குடும்பம்  திருமதி.விஜி மற்றும் சிலபேர் எங்ளைக் கடந்து சென்றார்கள். அவர்களிடம் எங்களுடைய ஸ்லீப்பிங் பேக்கை கொடுக்க முயற்சி செய்தபோது அவர்களின் குதிரையோட்டி இதை அனுமதிக்கவில்லை. நாங்கள் வேறுவழி இன்றி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். குதிரையில் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தபோது முன்பு பார்த்த குதிரை பற்றிய சம்பவங்களும் அந்த பாட்டியின் முயற்சியும் மனதில் ஓடிய குரு மந்திரமும் நடந்துசெல்லத் தூண்டி நம்பிக்கை ஊட்டின. 

மெதுவாக நாங்கள் நால்வரும் நடக்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் சுவாமிஜியும் சில மாணவர்களும் எங்களைக் கடந்து முன்னேறினார்கள். இப்பொழுது எனக்கு சிறிது பயம் தொற்றிக்கொண்டது. என் தலைபாரம் இன்னும் நீங்கவில்லை. எங்களின் கைகளில் உள்ள பாட்டிலில் நீர் தீர்ந்தபோது அருகில் பாய்ந்த தீர்த்தத்தில் பாட்டிலை நிரப்பிக்கொண்டோம். அங்கு இருந்த குளிரில் இந்தக் குளிர்ந்த தீர்த்தத்தைப் பருகுவது அசௌகரியமாக இருந்தாலும் பருகிய பிறகு சுவாசிப்பதில் சிறிது சௌகரியமாக இருந்தது. அதனால் அடிக்கடி தீர்த்தம் குடித்தோம். ஆங்காங்கே சௌசாலை (கழிப்பிடம்) வைத்திருந்ததால் இயற்கை உபாதையை பற்றிய கவலை இன்றி நடந்தோம். மேலும் வெயிலும் மழைச்சாரலும் மாறி மாறி வந்ததால் நடப்பதற்கு சௌகரியமாக இருந்தது.


            சுவாமிஜி குறுக்குப்பாதை வழியே செல்லலாமென அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். சுவாமிஜி முன்செல்ல அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தோம். நான் களைப்பாய் இருந்ததால் மெதுவாகவே பின்தங்கி நடந்து வந்தேன். இப்போது நாங்கள் நால்வர் தவிர யாரும் இல்லை. எப்படியாவது அனைவருடனும் சென்று சேர்ந்துவிட வேண்டுமென இதயம் மிக வேகமாகப் படபடத்தது. ஆனால் கால்கள் மெதுவாகவே நகர்ந்தன. சுவாமிஜியை பார்க்க முடியாததால் மனது கனத்தது. ஏற்றம் கடினமாக இருந்ததால் மெதுவாகவே நடக்க முடிந்தது. ஒரு கடையில் சுவாமிஜியும் 10 மாணவர்களும் அமர்ந்திருந்தனர். நாங்கள் மகிழ்ச்சியடைந்து அங்கே சென்றோம். 

              ஹரித்துவாரில் குளிரில்லாததால் பலரும் சுவாமிஜியிடம் ஜெர்க்கின் ஸ்லீப்பிங் பேக் எல்லாம் தேவையில்லாமல் கொண்டுவந்திருக்கிறோம் என்றோம். அது முற்றிலும் தவறுயென இப்போது புரிந்தது. ஒரு மாணவர் முகம்கூட தெரியாத அளவிற்கு முழுவதுமாக மூடி உட்கார்ந்திருந்;தார். குளிர் இப்போது ருத்ரதாண்டவமாடியது.  இப்பொழுது இமயமலையின் அழகை முழுமையாக மறைத்து காரிருள் சூழ்ந்தது. திடீரென எங்களின் பேச்சு சப்தத்தைவிட அதிகமாக வெளியே சட சட எனக் கேட்டது. ஆம் அது அடைமழையே. என்ன கோமமென்றுத் தெரியவில்லை. மிகுந்த ஆக்ரோசமாக மழைநீர் மண்ணில் மோதியது. ஒருமணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்துகொண்டிருந்தது. நேரமோ 20:00 மணி காட்டியது

அங்கேயே டென்ட் இருந்ததால் அங்கேயே தங்கலாமெனவும் காலையில் 3 மணிக்கு கிளம்பலாமெனவும் 5 மணியளவில் கேதர்நாத் கோவிலில் புஜையை பார்க்கலாமெனவும் சுவாமிஜி கூறவே அங்கேயே தங்கினோம். அனைவரும் மிக நெருக்கமாக ஸ்லீப்பிங் பேக்கில் படுத்தது அனைவருக்கும் கதகதப்பாக இருந்தது. அனைவரும் காலை 3 மணிக்கு எழுந்து இயற்கை உபாதைகளை முடித்து 3:30க்கு அங்கிருந்து புறப்பட்டோம். 

சுவாமிஜி முன்னால் செல்ல அனைவரும் பின்னால் நடந்தோம். புஜை பார்ப்பதற்காக நிறையபேர் வேகமாக நடந்தனர். நானும் அனுவும் திரு.ஜிவி குடும்பமும் கடைசியாக மெதுவாகவே நடந்தோம். அந்த கடைசி 5 கி.மீ ரில் தங்குவதற்கு எங்கும் டென்ட் இல்லை. மேலும் நடக்கும் வழியில் ஓரிடத்தில் மழையினால் தண்ணீர் தேங்கி திடீரென வெள்ளமாக ஓடுமென்றும்; அதனாலேயே டென்ட்டில் தங்கியதாகவும் சுவாமிஜி கூறியதாக சிலர் கூறினர். சுவாமிஜி ஏன் அந்த தேநீர் கடையில் அமைதியாக அமர்ந்திருந்தாரென்று அப்பொழுதுதான் புரிந்தது. 

         இறையருளுக்கும் குருவருளுக்கும் மனதில் நன்றி என தெரிவித்து குருமந்திரத்தின் துணையுடன் மெதுவாக முன்னேறினோம். இப்பொழுது நான் அனு திரு.ஜிவி குடும்பமும் திரு.வேணு குடும்பமும் திரு.டிவிஎஸ் அவர்களின் புதல்வி அனுவும் ஓரிடத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் ஒன்றாக நடந்தோம். கோவிலை அடைய 3 கி.மீ இருந்தது. தேநீர் அருந்த திரு.வேணு குடும்பமும் திரு.ஜிவி குடும்பமும் நின்று விட்டனர். நாங்கள் 3 பேரும் இப்பொழுது சிறிது வேகமாக முன்னேறி 2 கி.மீ கடந்துவிட்டோம். 22-09-2019 காலை மணி 5:30 ஆகிவிட்டது. இப்போது கோவில் இருக்கும் இடத்தைக் காண முடிந்தது. இருளில் மின்விளக்கு காரணமாக தங்கநிற வெளிச்சத்தில் தெரிந்தது. கோவிலின் அருகில் வர வர படிகட்டுகள் நீண்டு எங்களை நடக்கவிடாமல் தளர்வடைய செய்தன. கால்கள் வலித்ததால் கண்கள் கலங்கியிருந்தன. கடைசி 0.5 கி.மீ கடப்பதற்குள் மனமும் உடலும் மிகவும் சோர்வடைந்துவிட்டது. ஒருவழியாக கோவிலை அடைந்துவிட்டோம். சுவாமிஜி நம் அனைவரையும் வழிநடத்தாவிட்டால் இங்கே வருவதற்கு சாத்தியம் உண்டோ ?!!! பசுவைக் கண்ட கன்றுபோல் சுவாமிஜியை அங்கே கண்டவுன் நன்றி தெரிவிக்கும் பொருட்டு சுவாமிஜியிடம் ஆசிர்வாதம் வாங்கினோம். மடை திறந்த வௌ;ளம்போல் எங்கள் கண்கள் குளமாகின. இப்போது கடவுளை தரிசிக்க வரிசையில் நின்றோம். 30 நிமிடம் கடந்த வேளையில்  கோவிலின் உள்ளே பிரவேசித்துவிட்டோம். 

கேதர்நாத் முக்கோணமும் வட்டமுமான வடிவத்தை வரையறுக்கமுடியாத லிங்கமாக காட்சியளிக்கிறார். அவரை தொட்டு தீர்த்தத்தால் மகிழ்வித்து எங்கள் கரங்களையும் சிரத்தையும் அவர்மேல் வைத்து மனதை அவரிடம் பறிகொடுத்தோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தை விட்டு உடல் நகர்ந்தது. மனமோ இன்னொரு வாய்ப்பு எப்போது கிடைக்குமென தெரியாததால் அங்கேயே இருந்துகொண்டு வர மறுத்தது. அடித்தது 2 மணிநேரம் ஓய்வு 5 நிமிடமா என ஒரு திரைப்படத்தில் கேட்பதுபோல நடந்தது 10 மணிநேரம் இறைவனை தரிசிக்க 5 நிமிடமா என மனது கேட்டது. பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து தியானம் செய்தோம். கோவிலுக்கு பின்புறமுள்ள மலைத்தொடர் அதிகாலையில் தங்க நிறத்தில் காட்சியளித்தது. இப்போதோ பனியையே கம்பளமாக மூடிய மூடுபனியுடன் காட்சியளித்தது.  எல்லோரும் சுவாமிஜியுடன் குருப் புகைப்படம் கேதர்நாத் கோவில் தெரியுமாறு எடுத்துக்கொண்டோம். இப்போதோ அந்த மலைத்தொடரை பனிப்புகையானது முழுவதுமாக மறைத்திருந்தது. பிறகு ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திற்கு அனைவரும் வந்தோம். அன்று மிகுந்த மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர் சேவையை நிறுத்தினார்கள். விரைவில் கீழிறங்கினால் மட்டுமே மற்ற இடங்களையும் காண நேரம் கிடைக்குமென்பதால் அனைவரும் குதிரையில் செல்லலாமென சுவாமிஜி கூற முன்பு குதிரையை பார்த்த நிகழ்ச்சிகளால் என் நெஞ்சம் கலக்கமுற்றது. இந்த நடக்கமுடியாத தூரத்தையே சுவாமிஜி கடக்கவைத்துவிட்டார். இனி குதிரை சவாரிதானே என மனம் சமாதானமடைந்து குதிரை சவாரிக்கு ஆயத்தமானோம்.

நீண்டநேர குதிரை பயணம் ஒரு புதிய அனுபவம். குதிரை மலையின் ஓரத்தில் செல்லும்போது அங்கிருந்து கீழே பார்க்க சற்று பயமாக இருந்தாலும் இமயமலையின் இயற்கை அழகை வர்ணிக்க அளவே இல்லை. பாய்ந்தோடும் தீர்த்தங்கள் எங்கள் மனதையும் கொள்ளை கொண்டு ஓடின. குதிரையின் காலடி ஓசையும் அதன் கழுத்தில் ஆடிய மணியின் ஓசையும் திரு.இளையராஜாவின் இசையைத் தோற்கடித்தன. மனதில் மௌனமாக குருமந்திரம் ஓடிக்கொண்டிருந்தது. அலக்ஸாண்டர் ஓடும் குதிரையிலேயே உறங்குவாரென கேள்விபட்டதுண்டு. நானும் கண்களை மூடி குதிரையின் காலடி ஓசையை கவனிக்க முற்பட்டேன். குதிரை அசைந்து அசைந்து செல்வதால் நானே கீழே சரிவதுபோல உணர்ந்தேன். அது கண்களை மூடி விருட்சாசனம் செய்வதற்கு சமமாக இருந்தது. இடையிடையே குதிரையோட்டி என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் சைகையிலேயே பதிலளித்ததால் அவருக்கு சிறிது புரிந்தும் புரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் அனுவிடம் நான் பேசமாட்டேனா எனக் கேட்டேவிட்டார். ஹிந்தி தெரியாததால் பேசவில்லை என அனு சமாளித்தார். குதிரையோட்டியோ என்னை பரிதாபமாகவே பார்த்தாரென என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில சமயம் குதிரை வேகமெடுக்க குதிரையோட்டி அவர் குரலை உயர்த்த குதிரை அவ்வப்போது வேகமெடுத்தது. திடீரென ஒரு இறக்கத்தில் அவரின் குரலுக்கு பயந்து வேகமெடுக்க முன்னங்காலிடறி கீழே விழ குதிரையிலிருந்து நானும் முதுகுபுறம் தரையில் மோத கீழே விழுந்தேன். 

முதுகில் பேக் மாட்டியிருந்ததால் அடிபடவில்லை. ஆனால் கைபிடியை இறுக்கமாக பிடித்ததால் இடதுகை முறுக்கப்பட்ட நிலையில் முட்டி தரையில் மோத ஊண்றினேன். என் இடது காலோ குதிரையில் கால் வைத்து ஏறுமிடத்தில் சிக்கிக்கொண்டது. என் காலை விடுவிக்கமுடியவில்லை. அந்நிலையில் குதிரை எழுந்து மெதுவாக நகர முயற்சி செய்தது. அதனால் என் இடதுகால் மேலும் முறுக்கிக்கொண்டது. நல்லவேளையாக பின்புறமிருந்த வேறொரு குதிரையோட்டி என் காலை ஒருவழியாக போராடி விடுவித்தார். மெதுவாக எழுந்து ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போதுதான் கவனித்தேன் கேதாரீஸ்வரரின் மகிமையை. நான் வாய் திறந்து கத்தவில்லையென உணர்ந்தேன். நாம் எவ்வாறு இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு இருக்க இறைநிலை அருள்புரிகிறார் என புரிந்தது. சிறிது தூரம் சென்ற உடன் சுவாமிஜி குதிரையிடம் சண்டைபோட்டீர்களோ என என்னிடம் கேட்டார். அப்பொழுதுதான் புரிந்தது இறையருள் மட்டுமல்ல குருவருளும் துணை புரிகிறதென்று. மனதில் குருமந்திரத்துடன் ஒருவழியாக குதிரையில் மலைறயடிவாரம் அடைந்து அனைவரும் வந்தவுடன் பேருந்தை அடைந்தோம். 

குதிரைப் பயணம் பின்வரும் திருமந்திரத்தை நினைவுபடித்தியது.

ஆரியனல்லன் குதிரை இரண்டுள

 வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.


ப்ராணன் என்ற குதிரையை நாம் ஒழுங்காக கையாளாவிட்டால் எப்படி கீழே வீழ்வோம் என புரிந்தது.

     
             காலை சிற்றுண்டி முடித்து பேருந்தில் ஜோஷிமட் வந்தடைந்தோம். பத்மாசனத்தில் உள்ள பத்ரிநாதர் 6 மாதம் பனி காலத்தில் இங்குதான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இப்போது பனி காலமில்லாததால் இங்கு சாளக்கிராமமும் நரசிம்மரையும் தரிசனம் செய்தோம். ஆதி சங்கரர் சிலைக்கு அருகில் அனைவரும் தியானம் செய்தோம். பிறகு அங்கேயுள்ள ராஜராஜேஸ்வரி லட்சுமி தேவியை தரிசனம் செய்தோம். அங்கிருந்து புறப்பட்டு விஷ்ணு ப்ரயாக் அடைந்தோம். இந்த தீர்த்தத்தில் அலக்நந்தாவும் தௌலிகங்காவும் இணைகிறது. அங்கு கீழே இறங்கி தீர்த்தமருகில் சென்றபோது இறந்த ஒருவரின் உடலை எரியுட்ட ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு இடையுறு கொடுக்காமல் அருகில் வேறொரு இடத்தில் குளிக்க ஆயத்தமானோம். அப்போது ஒரு மாணவர் நதியில் இறங்கி 0 டிகிரி உள்ளதாகவும் விரைவாக குளித்து வெளியே வருமாறும் எச்சரித்தார். அதிகக் குளிர் காரணமாக அனைவரும் விரைவாக குளித்து ஆர்கியம் கொடுத்து வெளியேறினோம். பிறகு அங்கே தியானம் செய்தோம். சுவாமிஜி இன்னொரு பக்கத்தில் உள்ள தீர்த்தத்தை தெளிப்பதை பார்த்து அவசரமாக குளிக்குமிடத்தில் பிடித்த தீர்த்தத்தை அங்கே விட்டு விட்டு இந்த இடத்தில் தீர்த்தம் பிடிக்க இறங்கினோம். அங்கே தீர்த்தம் பிடித்தபோது மேலிருந்து ஒருவர் உடலெரித்த சாம்பலையும் முக்கால்வாசி எறிந்த விறகு கட்டையையும் தீர்த்ததில் தள்ளிவிட்டார். அந்த இறந்த உடல் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்திருக்கும். பலபேரால் உயிரோடு உள்ளபோதே பார்க்க வாய்ப்பில்லாமல் ஞானம் முக்தியை நோக்கி பயணிக்காமல் உள்ளார்கள். சொற்ப சிலருக்கே இறந்தபிறகு அவருடல் கங்கையுடன் ஐக்கியமாகும் பாக்கியம் உள்ளது. அந்த உடலின் ஆன்மா  முக்தியை நோக்கி பயணித்திருக்குமென மனது கூறிற்று. தீர்த்தத்தை வணங்கி  அங்கிருந்து கிளம்பினோம். அனைரும் பேருந்தில் பயணித்து பத்ரிநாத் அருகிலுள்ள ஹோட்டல் அறைக்கு வந்து மதிய உணவு உண்டோம். 


பிறகு இந்தியாவின் கடைசி எல்லை கிராமமான மானா பகுதியை பார்க்க சென்றோம். அங்கே சரஸ்வதி தீர்த்தத்தின் ஆரம்பப் பகுதி பீமன் பாலம் கேஷவ் ப்ரயாக் பார்த்தோம். பிறகு கணபதி குகை. அங்கே சுவாமிஜியுடன் சிறு பஜன். இந்த குகையில்தான் வியாசர் கூற கணபதி தன் தந்தத்தை உடைத்து மகாபாரதம் எழுதினார். அங்கிருந்து அரை கி.மீ. மேலே வியாசர் குகை. ஆதிசங்கரரின் குரு இங்கே வியாசரின் பெரிய சிலையை நிறுவியதாகத் தகவல். அங்கே கண்ணை மூடி மனதில் 2 நிமிடம் குருமந்திரம். பிறகு விரைவாக கீழிறங்கி ஹோட்டல் அறைக்கு வந்து பத்ரிநாத் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானோம்.  45 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்த பத்ரிநாதரை தரிசித்தோம். பிறகு கோவில் பிரகாரத்திற்கு வந்து தியானம் செய்தோம். காலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானோம். சிலமணிநேர பயணத்திற்குப் பிறகு நந்த ப்ரயாக் அடைந்தோம். அங்கு அனைவரும் காசியில் நீராடியதுபோல இங்கு நீராடினோம். இந்த தீர்த்தத்தில் நந்தாகினியும் அலக்நந்தாவும் சங்கமமாகிறது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு கர்ண ப்ரயாக் அடைந்தோம். இங்கு அலக்நந்தாவும் பிந்தரும் சங்கமமாகிறது. தீர்த்தத்தில் ஆனந்தமாக நீராடி ஆர்கியம் கொடுத்தோம். 4 மணிக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். ஹரித்வார் ஹோட்டலுக்கு இரவு 2 மணிக்கு வந்தோம். 

அடுத்த நாள் காலை ஹரித்துவாரில் கங்கை அன்னை மறுபடியும் எங்களனைவரையும் அரவணைத்தாள் மழைச் சாரலாக…. இந்த பயணத்தின்போது இமயத்து ஆசான்களின் புத்தகமாகிய சுவாமி ராமா அவர்களைப் பற்றிய வியப்பும் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கு நடந்தே வந்த ஆதிசங்கரரின் மீது பிரமிப்பும் ஏற்பட்டதில் பெரிய வியப்பில்லை. 

   இந்த வாய்ப்பருளிய இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி. மேலும் இதுபோன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென இறையருளையும் குருவருளையும் பிராத்திக்கின்றோம்….

Monday, October 14, 2019

இமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்

ஆன்மீக பயணக் கட்டுரை - விஜி ராம்
ஆன்மீக பயணங்கள் எதற்கு? இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறான் என்றால் தனியாக ஒரு பயணம் எதற்கு?
யோகாச்சார்யா வகுப்புகளில் சாமி அவரோட யாத்திரை, ஹிமாலயா அனுபவங்கள், கங்கை, பிரயாகை பற்றியெல்லாம் அப்பப்ப சொல்லுவார். அதிலும் காசி பயணங்களில் இருளில், படித்துறையில்  கங்கை பாகிரதியாக பூமிக்கு வந்த நிகழ்வை  அவரின் மொழியில் கேக்கும் போது நாமும் கங்கையுடன் கிளம்பி வருவோம். அப்போதிருந்தே பிரயாகை பற்றிய அவரின் அனுபவங்களும் விவரிப்பும் என்னைக்காவது நமக்கு வாய்க்குமான்னு ஏங்க வைத்திருக்கிறது. முக்திநாத் பயணத்தின் போது கேதார்நாத் போகும் எண்ணத்தை அவர் தெரிவித்தவுடன் முதல் ஆளாக கை தூக்கிவைத்தேன்.
உண்மையில் நீங்கள் ஆன்மிக உயர்நிலையை அடைய அதீதமாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. குருவுடன் பயணப்படுவதே அனைத்திலும் பெரிய சாதனையாகவும், முயற்சியாகவும் எனக்கு தோனுகிறது. எத்தனை பணம், வசதி, வாய்ப்புகள் இருக்கலாம், நீங்க சொன்ன வேலையை செய்து முடிக்க ஆட்களும் இருக்கலாம், இவை எதுவும் ஒரு குருவுடன் பயணிப்பதற்கு ஈடாகாது.  குருவுடன் பயணிக்கும் போது எந்த விதமான சாதகங்களும் தேவையில்லை, அவரை பார்த்துக்கொண்டோ, அவர் மொழி கேட்டுக்கொண்டோ இருப்பதே போதுமானது. குரு எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார், நாம் தான் அகமும் புறமும் கண்களை உபயோகிக்காமலே இருக்கிறோம். கேதார்நாத் பயணமும் குருவழி வாய்த்தது முன்வினைப்பயனே.

ஒரு வார பயணமாக கேதார்நாத் கிளம்புகிறோம், பஞ்ச பிரயாகைகளில் ஸ்நானம் செய்து, கேதாரீஸ்வர்ரையும், பத்ரி நாராயணனையும் தரிசித்து திரும்புவது திட்டம். திட்டமிட்டதெல்லாம் நடந்தது, ஆனால் அதற்கு நடுவில் நிகழ்ந்தவை அனைத்துமே வாழ்நாள் பாடங்கள். காலை பதினொரு மணிக்கு ஹைதராபாத் சென்று அங்கிருந்து டேராடூன், டேராடூனிலிருந்து ஹரித்துவார் சென்றடையும்போது இரவு 7 மணி.  கங்கா ஆரத்தி முடிந்திருக்கும் என்றாலும் கங்கையை தரிசிக்கலாமே என்று கிளம்பினோம்/. எங்களுக்கு முன்பாகவும், முதல் நாளும் வந்திருந்த அனைத்து மாணவர்களும் சேர்ந்து கங்கையை கண்டு, தரிசித்து ஸ்நானம் செய்து தங்கியிருந்த இடத்திற்கு வந்து அடுத்தநாள் முதல் மேற்க்கொள்ளப்போகும் பயணத்தை குறித்து ஒரு சிறு அறிமுக உரையுடன் ஓய்வெடுக்க சென்றோம்.
எதிர்பாராத அதிர்ஷ்ட பரிசு எப்போதாவது கிடைக்கும் போது அதன் சந்தோசமே தனிதான். அப்படி அடித்த அதிர்ஷ்டம் தான் வசிஷ்ட குகை. எங்கள் பயணத்திட்டத்தில் உடனே இல்லாமல் இருந்தது, ஆனாலும் காலையில் முதல் தரிசனமாக வசிஷ்ட குகை. சில இடங்கள் உங்களை மீண்டும் மீண்டும் வசிகரிக்கும், அந்த இடமும் அதன் வாசனையும் அங்கிருக்கும் சூழலும் உங்களை மயக்கும், அது போன்ற இடம் எனக்கு வஷிஷ்ட குகை. வசிஷ்ட குகையில் குடியிருக்கும் இறைவனை தரிசித்து மந்திரஜெபம் முடித்ததும் காலை உணவும் அங்கேயே முடித்து தேவப்பிரயாகை நோக்கி பயணிக்கிறோம்.

பஞ்ச பிரயாகைகள்
தென்னிந்தியாவில் கோவிலும் விக்ரகங்களும் புனிதமானவை என்றால் வட இந்தியாவில் நதி தீரங்களே சிறப்பானவை. அதிலும் பிரயாகை எனப்படும் நதிகளின் சங்கமிக்கும் இடங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாகவும்சிறப்பானவையாகவும் இருக்கிறது.

வேதகாலங்களில் ரிஷிகள் வருடக்கணக்கில் தவமிருப்பார்களாம், இறைவன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் பஞ்ச பிரயாகைகளில் நீராடும் வரம் வேண்டுவார்களாம். எந்த தவமும் செய்யாமல், கேட்ட நிகழ்வுகளை அடிக்கடி மனக்கண்ணால் யோசித்து, என்றேனும் வாய்ப்பு வரும் என்று காத்திருந்த பஞ்ச பிரயாகையை நிஜத்தில் தரிசித்து அதில் நீராடப்போகிறோம் என்பதே மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். 2016 ஆண்டு இதே போல் பிரயாகைக்கு திட்டமிட்டு சென்றிருந்தோம். கடும் மழை காரணமாக தேவப்பிரயாகையுடன் திரும்பினோம்.  இந்த பயணங்களால் அறியப்படும் நீதி திட்டமிடுவதுடன் நம் வேலை முடிந்தது. நிறைவேற்றுவது இயற்கையின் பெருங்கருணையே.
தேவப்பிரயாகை
எல்லா இடங்களிலும் கங்கையை முன்னிருந்த்தியே எங்கள் யாத்திரை அமையும், இம்முறை கங்கையின் மூலத்தை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. முதலில் தேவப்பிரயாகை.  சடோபந்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும்கௌமுகியிலிருந்து பாய்ந்தோடி வரும் பாகீரதியும் சங்கமித்து இங்கிருந்து தான் கங்கையாக பெயர் பெறுகிறார். கலங்கிய நிறத்தில் அலக்நந்தாவும்இளம் பச்சை நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கும் இடம் அத்தனை அற்புதம். காணக்கண்கள் போதாது, மனமெல்லாம் நதியாகவே பிரவாகிக்கும். தேவப்பிரயாகை மூன்று நதிகள் சங்கமிக்கிறது. அலக்நந்தாவும், பாகீரதியும் கண்களுக்கு தெரிந்தும், பிரயாகையில் குடியிருக்கும் நெட்டுக்குத்தலான படிகளில் ஏறி சென்றால் அழகான அமைதியான ராமர் கோவில். பெரியாழ்வார் ரகுநாதனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடி, “கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டமெனும் கடிநகர் என்று புகழ்கிறார்கோவிலுக்குள் பாசுரங்கள் பதியப்பட்டுள்ளன. எங்கு சென்றாலும் தமிழ் மணக்கிறது.


ருத்ரபிரயாகை.

இது ’அலக்நந்தா’ நதியும் ‘மந்தாகினி’ நதியும் சங்கமிக்கும் இடம். இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாலும்ருத்ர வீணையில் இசை மீட்டியதாலும் இவ்விடம் ருத்ர பிரயாகை என்று வழங்கப்படுகிறது. நாரதர் தன் கர்வத்தால் தவறிழைத்து சிவனிடம் வீணையை வேண்டிய இடம். ருத்ரம் என்ற பெயருக்கு ஏற்பவே இங்கு இரு நதிகளும் பெரும் சப்தத்துடனும் ஆக்ரோசமாகவும் சந்திக்கின்றன. ஆனால் அதையும் தாண்டி அங்கு தெய்வீகமே தெரிகிறது. நதிக்கரையில் அமர்ந்து மந்திரஜெபம் செய்யும்போது நதியின் சப்தமும் குரு மந்திரம் போன்றே தோன்றியது. ஏனோ என்னை பெற்றவர்கள் நினைவு வந்தது. இதுபோன்ற ஒன்று இருக்கிறது என்றோ அங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றோ எதுவுமே தெரியாமல் இயற்கையோடு கலந்துவிட்டனர். இந்த பிரணவ பீடமோ, ஸ்வாமி ஓம்காரோ என் வாழ்க்கையில் வந்திராவிட்டால் நானும் அதே போல தானே. நன்றி அனைத்திற்கும்.

ருத்ரபிரயாகையிலிருந்து கிளம்பி குப்தகாசியை அடைகிறோம். நள்ளிரவிற்க்கும் மேலானதால் ஓய்வென்பது சிறிது நேரமே, விடியற்காலையில் கேதார்நாதரை தரிசிக்க கிளம்பவேண்டும்.

கேதாராஸ்ரமம்.

கேதார் – என் வாழ்நாளில் மறக்கமுடியாத யாத்திரை, இன்னொரு முறை செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியாது. ஆனாலும் இதுவே என் கடைசி நிமிடம் வரை நினைவிருக்கும். குப்தகாசியிலிருந்து சிதாபூர் பஸ் நிலையம் வரை நம் வண்டி போகும், அதன் பிறகு சோனாப்ரயாக் வரை ஜீப், அங்கிருந்து கவுரிகுண்ட் எனப்படும் கேதாரத்தின் அடிவாரம் வரை ஜீப். மொத்தம் இரண்டு ஜீப் பயணம். இரண்டுக்கும் நடுவிலும் குறைந்தது ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் நடையும் இருக்கும்.
 கனவொன்று நிஜமாகிறது. இதோ கேதாரமலையில் நடக்க ஆரம்பிக்கிறோம். கவுரி குண்ட்டில் வென்னீர் ஊற்று இருக்கிறது. 2013 பெய்த பேய் மழையில் இங்கு புவியியல் அமைப்பே மாறி நிறைய ஊற்றுகள் அழிந்துவிட்டன. நாங்கள் அங்கு குளிக்கவில்லை. பார்த்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறோம். எல்லா மலைக்கோவில்களையும் போல் இங்கும் குதிரைகளில் போகலாம், ஹெலிகாப்டரில் போகலாம், டோலி எனப்படும் நால்வர் சுமந்து செல்லும் தொட்டில் போன்ற பயணமும் உண்டு, ஒரே ஒருவர் தேயிலை கூடை போல உங்களை சுமந்தும் செல்வார்கள். நாங்கள் மொத்தம் 40 பேர், 9 பேர் முன்கூட்டியே ஹெலிகாப்டரில் புக் பண்ணியிருந்தோம்.  மற்றவர்கள் நடக்கலாம் என்று ஆரம்பித்தோம். ஒரே மாதிரி நடக்க உடியாது என்பதால். 8 கி, மீ தூரத்தில் இருக்கும் பீம் பாலியில் சந்திக்கலாம் என்று குழுவாக பிரிந்தனர். சிறிது நேரத்தில் நான் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தேன். சுற்றியும் அருவிகள், நேராக ஆகாயத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறதோ என்னும் அழகில், இன்னொரு பக்கம் காதடைக்கும் சத்தத்தில் ஆர்பரித்து ஓடும் நதி.  அதையெல்லாம் எழுத்தில் கொண்டுவர முடியாது. நெட்டுக்குத்தலான பாதை, சில இடங்களில் படிகள், சில இடங்களில் கற்கள், குதிரைகள் அவற்றீன் சாணம், அங்கன்னு ரெயின் ஷெல்டர்னு அரைக்கிலோ மீட்டருக்கு ஒன்னு. இது எதுக்கு இத்தனைன்னு யோசிச்சிட்டே மற்றவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தாயிற்று. இதற்கு மேல் குதிரையில் போகலாம் நு தோணியது. என்னுடன் சிலரும் வர விருப்பம் தெரிவிக்க, குதிரைக்கு காத்திருந்தோம். அன்னைக்கு அங்கு எதோ அதிகாரிகளின் ஆய்வு நாளாம், 12 மணிக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்பதாலும் ஒரு நாளைக்கு குதிரை இருமுறைதான் போக வேண்டும் என்பதாலும் எங்களுக்கு குதிரையே கிடைக்கவில்லை. மழை வேறு கொட்டித்தீர்த்தது. ஏற்கனவே மழையில், அருவியில்னு ஷூ நனைந்து கால்கள் இழுக்க ஆரம்பித்திருந்தது.   

ஒருவழியாக 2 மணி நேர காத்திருப்புக்கு பின் உறுதியா குதிரை கிடைக்காது நடக்கலாம்னு மீண்டும் ஆரம்பித்தோம்.  மேலும் மூன்று கிலோ மீட்டர் நடந்ததும் கேதார் 6 கிலோ மீட்டர்னு போர்ட். சிறிது ஓய்வு எடுக்கலாம்னு உக்கார்ந்ததும் எங்கிருந்தோ நாலு அழகான குதிரைகள்டன் இரண்டு பசங்க வந்தாங்க. மாலை 5 மணி ஆகியிருந்தது. வருவார்களோன்னு தயக்கத்துடன் கேட்டதும் வருவதாக ஒத்துக்கொள்ளவே அங்கிருந்து குதிரையில் சென்றோம். நேரமாகஆக விரைவாக இருட்டியது. சரியாக குதிரை ஸ்டேண்டில் நாங்கள் இறங்கியதும் வானத்தை உடைத்து பெய்த மழையில் சிறிது அரண்டுவிட்டோம். குதிரை ஸ்டாண்டிலிருந்து கேதார் ஆலயத்திற்கு 2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். வழி இல்லை, வெறும் கற்கள் மட்டுமே, கீழே விழுந்தால் நேரா கபால மோட்சத்துடன் கைலாயம். (அதானே பக்கம்) மழை விட்டதும் மெதுவாக நடந்து நாங்கள் தங்க வேண்டிய இடத்தை அடைந்த பின் தான் தெரிந்தது. ஹெலிகாப்டரில் வந்தவர்கள் திரும்பி செல்லவில்லை, நடந்து வந்த மற்றவர்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று. ஸ்வாமியிடமிருந்தும் மற்றவர்களிடமிருதும் வெகுநேரத்திற்கு பிறகே தகவல், மழையில் சிக்கியதால் அவர்கள் பாதியில் தங்கி காலையில் வருவதாக. களைப்பும் பதட்டமுமாக, மழையும் மைனஸ் டிகிரி குளிருமாக தூங்காத இரவு விடியக்காத்திருந்தோம். காலை 5.45க்கு கோவிலுக்கு வந்துவிட்டதாக ஸ்வாமிஜியின் மெசேஜ் பார்த்ததும் அடுத்த இரண்டாவது நிமிடம் அங்கிருந்தோம். திவயமான கேதார் நாதர் தரிசனத்திற்கு பிறகு மனம் பெரும் ஆசுவாசமாகியிருந்தது.


சுற்றிலும் பனிச்சிகரங்கள், நடுவே அடிமுடிகாணா பரம்பொருள். ஒரு நிம்மதியுடன் மந்திரஜெபம் செய்ய கோவில் சுற்றுசுவரில் நல்ல இடமாக பார்த்து உக்கார்ந்தேன். உக்காரும் போது ஹெலிகாப்டரில் போகலாம், இது எதுக்கு இத்தனை ரிஸ்க் என்று பலதும் எண்ணிக்கொண்டே மந்திரஜெபம் செய்ய ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் கண்விழித்து பார்த்தால் என் அருகில் பத்து ரூபாய் நோட்டு. யாரோ தர்மம் செய்திருக்கிறார்கள். பார்த்ததும் சிரிப்பு அடக்கமுடியவில்லை. அடுத்த நொடியே இது எதற்கு எனக்குன்னு மூன்று நாட்கள் தொடர்ந்து யோசனையாகவே இருந்தது. எதற்காக இருந்தாலும் அந்த இடத்தில் என்னுடைய ஈகோவோ என்னவோ அது கொஞ்சம் அடிவாங்கியது தான்.  என்னதான் இருக்கட்டும் இறைவன் இடும் பிச்சைதான் எல்லாமே என்று சொல்லாமல் சொன்னது. முறையாக தினம் ஒரு கோவிலுக்கோ நாலு வேளை பூஜையோ செய்யாத ஆள் நான், இப்ப வரைக்கும். ஆனால் நான் இருந்த நிலையிலிருந்து இன்றிருக்கும் நிலை என்றோ என் பெற்றோரோ நானோ செய்த எதோ ஒரு நல்ல செயல், அல்லது இதோ இந்த மாதிரி இறையின் பிச்சை. நினைக்க நினைக்க கொஞ்ச நாட்களாக என்னை உறுத்திக்கொண்டிருந்த சில பல விசயங்கள் பற்றி தெளிவாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது. அதே போல் இனிவரும் நாட்களின் எது எனக்கு தேவை, எதை நோக்கி நான் செல்லவேண்டும், முயற்சிக்கவாவது வேண்டும்னு புரிந்தது. நன்றி இறையே!

அனைவரும் வந்து தரிசனம் ஆனதும் கீழே இறங்க ஹெலிகாப்டரில் சென்றவர்கள் தவிர அனைவரும் குதிரையில் கிளம்பினோம். நானும் ஸ்வாமிஜியும் முன்னதாக இறங்குகிறோம். குதிரையில் இறங்குவது உசுரை கையில் பிடித்துக்கொண்டு வருவதுதான். சுற்றிலும் அடர்ந்த மலைக்காடும் வான் முட்டும் சிகரங்கள் அவற்றின் நடுவில் ஓம் என்னும் எழுத்து பாறையாக இருப்பதும் அதை சுற்று அருவி அதே வடிவில் வருவதும் ஸ்வாமிஜி காட்டிய போது இதயம் நின்று துடித்தது. ரிஷிகேஷில் ஏறும் போதே நினைத்தேன், இந்த இயற்கையை யாரும் எதுவும் கொண்டு அடக்க முடியாதுன்னு. கேதார் ஏறும் போது, இமயம் எத்தனையோ அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் தன்னுள் வைத்திருக்கிறதுன்னு நினைச்சிட்டே இருந்தேன். இதோ இந்த ஓம் காட்சி எதையாவது எனக்கு சொல்ல வருதா? வேற யாராவது சொன்னா நம்புவார்களா? யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் கண்ணாற கண்டேன், இனியொரு முறை இங்கு வரும் வாய்ப்பிருந்தால் நின்று நிதானமாக தரிசிப்பேன்..மாலை 5 மணிக்கு குப்தகாசியை அடைந்து உணவருந்தி உடனே பத்ரி நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறோம். பிப்பல்கோட்டி சென்று தங்கி மீண்டும் துவங்குவோம்.

பிப்பல் கோட்டி
நள்ளிரவிற்கும் மேல் ஆனது இங்கு சென்று சேர காலையில் உணவை முடித்து பத்ரி கிளம்புகிறோம். நடுவில் ஜோஷி மட் எனப்படும் திருப்பிரிதி , திவ்யதேசங்களில் ஒன்றான தலம் உள்ளது, நரசிம்மர் சாளக்கிராம வடிவில் இருக்கிறார்.  பத்ரியில் குளிர்காலங்களில் ஆலயம் மூடப்படும் போது பத்ரிநாராயணன் இங்கு தான் ஆறு மாதம் இருப்பார். அருகிலேயே பழைய கோவில் உள்ளது, அங்குள்ள அஷ்ட புஜ விநாயகரும், நவதுர்க்கையும் விஷ்ணுவும் கற்சிற்பங்கள் என்றாலும் நேரில் இருப்பது போல் அத்தனை உயிர்ப்புடன் இருக்கின்றனர். ஜோஷி மட் தரிசித்து விஷ்ணு பிரயாகை அடைகிறோம்.

 விஷ்ணு பிரயாகை :
பிரயாகைகள் அனைத்துமே குறைந்தது ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.. நெட்டுக்குத்தலான படிகளில் ஏறி இறங்க வேண்டும். விஷ்ணு பிரயாகையில் இறங்கி போட்டா எடுக்கும் போது கவனிக்கவில்லை, எதிர் வெயிலாக இருந்தது. கீழே பார்த்தால் இறந்தவரை எரித்துக்கொண்டிருந்தனர். ஒரு நிமிடம்  நடுக்கமாகிவிட்டது. அப்பா அம்மா, நெருங்கிய உறவினர்கள்னு நிறைய பேரை வாரிக்கொடுத்தாச்சு, மின் மயானத்தில் கடைசி சாம்பல் கிடைக்கும் வரை உக்காந்திருக்கேன். காசியில் மணிகர்ணிகாவில் அமைதியான நிறைய உடல்கள் எரிவதை பார்த்ததும் உண்டு. ஆனால் இது , உடல் எரிகிறது உறவினர் ஒருவரும் அருகில் இல்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆக்ரோசமான நதி. விஷ்ணு பிரயாகையில் நதிப்பிரவாகம் மைனஸ் டிகிரியில் ஓடுகிறது. காலை வைத்ததும் மறத்து போகும் குளிர், உடனே ஸ்நானம் செய்து, மீண்டும் அங்கிருந்த கோவிலுக்கு சென்று நதி நோக்கி அமர்ந்து வெகுநேரம் உடல் எரிவதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆணோ பெண்ணோ, எத்தனை ஆசை, விருப்பம், கோபம், வன்மம், சாதனை, பெருமை  என்னவெல்லாமோ இருந்திருக்கும். பெயர் கூட இருந்திருக்கும்.  எத்தனையோ பேர், எத்தனையோ முறை, எத்தனையோ நோக்கங்களுக்காக  அழைத்திருப்பார்கள், இந்த உடலும் ஏகப்பட்ட உடல் எரிவதை பார்த்திருக்கும், என்றேனும் இப்படி நதிக்கரையில் யாருமில்லாமல் எரிவோம் என்று நினைத்திருக்குமா?  அதை பார்த்துட்டு இன்னொரு உடல் அதிர்ந்து புலம்புவதை அறியுமோ? முழுதும் எரிந்தபின் சாம்பல் கூட இல்லாமல் இழுத்து நதியில் விடுகின்றனர். அந்த நதி ஓடும் வேகத்திற்கு எதுமே தங்காது, நொடியில் அந்த இடம் சுத்தமானது, கண்ணுக்கெட்டும் தூரம் வரை எரிந்த எந்த அடையாளமும் இல்லை. இந்த யாத்திரையில் எல்லாரும் அறிந்த உண்மையை பொட்டில் அடித்து புரியவைத்த இடமிது. அலக்நத்தாவுடன் தவுலிகங்கா சங்கமிக்கும் இடம்.. நன்றி கங்கையே!!!


மானா வில்லேஜ்

மாலை 4 மணிக்கு மணா வில்லேஜ் எனப்படும் இந்தியாவின் கடைசி கிராமத்தை அடைகிறோம். இங்குதான் சரஸ்வதி நதி உற்பத்தி ஆகி பூமிக்கு மேல் தெரிகிறது.  பீமன் பாறை என்னும் பெரிய பாறையும் இருக்கிறது. பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் வழியில் சரஸ்வதி நதியை கடக்க பெரிய பாறையை எடுத்து வீசியதாகவும் அது பாலம் போல ஆனதாகவும் கூறப்படுகிறது. மலையில் எங்கோ ஓரிடத்திலிருந்து சரஸ்வதி வெகு உற்சாகத்துடன், கவலையற்ற கன்னிகைபோல் ஆர்பரித்து  துள்ளிகுதித்து வருகிறார். மிகப்பிரம்மாண்டமாகவும் சிறிது அச்சமூட்டுவதாகவும் அவரின் தோற்றமுள்ளது. வியாசரும் விநாயகரும் மஹாபாரதம் எழுதும் போது சரஸ்வதியின் இந்த அதீத உற்சாக கூச்சலால் இடையூறு ஏற்பட்டு வியாசர் சரஸ்வதியை சத்தமின்றி  பூமிக்குள் பாய சாபமிட்டாராம். சரஸ்வதிக்கென்று ஒரு கோவிலும் உண்டு, அவரை  தரிசித்து கொஞ்சம் மேலே இருக்கும் விநாயகர் குகைக்கு சென்று அங்கிருக்கும் கணபதியை தரிசித்து இன்னும் நெட்டுகுத்தலாக ஏறும் பாதையில் ஏறி வியாச குகையில் அவரையும் தரிசித்து பத்ரி திரும்புகிறோம்.

பத்ரிநாத் : பத்ரி விஷால் : பத்ரி நாராயணன்
பத்ரி என்றால் இலந்தை பழமாம், ஒரு காலத்தில் இலந்தை பழங்கள் சூழ்ந்த வனப்பகுதி, நரநாராயணர்கள் தவமிருந்த தால் ஒரு புறம் நரநாராயண மலையும், மறுபுறம் நீலகண்ட மலையும் சூழ முன்னே தப்த குண்டம் எனப்படும் வென்னீர் ஊற்றில் குளித்து பத்ரிநாராயணனை தரிசிக்கின்றனர். நாங்கள் இரவு 7 மணிக்கு சென்றதால் குளிக்க முடியவில்லை, கடும் குளிரும் காரணம். விஷ்ணு சகஸ்கரநாமாவளி பூஜைக்கு முன்பதிவு செய்திருந்தோம். கிட்டதட்ட 40 நிமிடங்கள் இறைவனுக்கு முன் அமர்ந்து நாங்கள் 40 பேர் மட்டும் கண் குளிர, மனம் குளிர, செவி குளிர பத்ரிநாராயணனை தரிசித்தோம். ஏக இறையை என்ன பெயரில் அழைத்தாலும் ஆதம திருப்தியும், அமைதியும் தருவதே அந்த பரம்பொருளை வணக்கும் நோக்கம். வணங்கி தங்கியிருந்த இடத்திற்கு வந்து, இரவு சத்சங்கம் முடித்து ஓய்வெடுத்தோம்.  கர்ணபிரயாகை, நந்த பிரயாகையை தரிசிக்க விடியற்காலையில் கிளம்பினோம்.

நந்த பிரயாகை
கடும் காய்ச்சல், ஜலதோசம், உடல் வலின்னு பஸ்ஸில் ஏறீயதும் மயக்கமாதிரி ஒரு தூக்கத்திற்கு போயிட்டேன். கண்ணைத்திறந்தால் நந்த பிரயாகையில் நிற்கிறோம். இறங்கி போய் குளிக்க முடியுமான்னு ஒரு நிமிடம் யோசிச்சேன். ஒரே ஒரு நிமிசம் தான், போற உசுரு பிரயாகையில் போகட்டும்னு கிளம்பினேன். அப்படி ஒரு நிமிடம் யோசித்ததற்கு பலன், கால் தடுமாறி கீழே விழுந்து கணுக்கால் வீங்கிருச்சு. வழி தவறி அரைகிலோமீட்டர் படி இறங்கி ஏறி ஒரு வழியா வெகு தூரம் நடந்து நந்த பிரயாகை சென்றடைந்தோம். பனி உருகிய நதி தான், ஆனாலும் பக்கத்தில் போனதும் பரவசமானது. இனி என்று கிடைக்கும் இந்த வாய்ப்புன்னு டக்குனு இறங்கிட்டேன். ஒரே ஒரு குளியலில் உடம்பின் வலியும் போனது, புத்துணர்ச்சியாகவும் இருந்தது. அலக் நந்தாவுடன் நந்தாகினி நதி சங்கமிக்கும் இடம், கிருஷ்னனின் வளர்ப்பு தந்தை நந்த கோபன் அரசாண்ட இடம், எல்லா பிரயாகைகள் போல் இங்கும் கோவில் உள்ளது

கர்ணபிரயாகை
நந்த பிரயாகையிலிருந்து 22 கிமீ தூரத்தில் கர்ணபிரயாகை உள்ளது. கர்ணனுக்கு கவச குண்டலங்கள் கிடைத்த இடம், அலக்நந்தாவுடன் பிண்டார் நதி சங்கமிக்கும் இடம். பெரிய படித்துறையும் ஒரு பக்கம் ஆர்பரிக்கும் அலக்நந்தாவும் இன்னொரு புறம் அமைதியான பிந்தார் நதியும் சற்றூ தொலைவில் சேருகின்றனர். கர்ணனுக்கும் தேவிக்கும் கோவில் உள்ளது.  மாலையானது, மதிய உணவை முடித்து ஹரித்துவார் சென்றடைகிறோம். விடியற்காலை 3 மணி ஆகிவிட்டது.

ஹரித்துவார்
2016-ல் பஞ்ச பிரயாகையை பார்க்க வந்து மழையின் காரணமாக ஹரித்துவார் ரிஷிகேஷில் தங்கி குளிரக்குளிர கங்கையை தரிசித்து மகிழ்ந்திருக்கிறோம். காலையில் கங்கை தரிசனத்துடன் தசமஹா வித்யா பீடமும், சக்தி பீடத்தில் ஒன்றுமான சதி தேவி கோவிலை அடைந்து தரிசனம் செய்து, இந்த யாத்திரையை நல்லபடியாக முடித்து வைத்த இறையருளுக்கு நன்றி சொல்லி கோவை திரும்பினோம். இந்த இடங்களுக்கெல்லாம் போக நினைப்பவர்கள் நல்ல உடல்நிலையுடன், நன்றாக நடக்கும் தன்மையிலிருக்கும் போதே செல்வது நல்லது. பின்னாளில் இருக்கும் இடத்திலிருந்து மனதில் தரிசித்தால் போதும். வயதான பின் இங்கெல்லாம் செல்வது சிறிது கடினமே
ஆன்மீக பயணங்கள் எதற்கு? இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறான் என்றால் தனியாக ஒரு பயணம் எதற்கு?
இந்த கேள்விக்கெல்லாம் முழுதான பதில் இல்லாவிட்டாலும் ஓரளவு இந்த யாத்திரையில் தெரிந்து கொண்டேன். ஆன்மீகமும் ஒரு அனுபவமே. மதம் சார்ந்த நம்பிக்கைகள் அதிகமில்லாவிட்டாலும், நம்மிலும் மேம்பட்ட ஒரு சக்தி இருப்பதிலும் அது நம்மை எல்லாவிதத்திலும் வழி நடத்துகிறது என்பதிலும் பெரு நம்பிக்கை உண்டு. போலியான பக்தியோ சிரத்தையோ தேவையில்லை. மனம் எதை நினைத்து, எதை நோக்கி பயணிக்கிறதோ அது எவ்வழியேனும் நிறைவேறும். ஆன்மீகமும் ஒரு அனுபவமே, எதையாவது என் அனுபவம் என்று விவரிக்க முயன்றால் குருடர்கள் சேர்ந்து யானையை அறிந்து கொண்டதைப்போல் ஆகிவிடும்.  ஆன்மீகமும் அனுபவமே, கலர்கலராக படங்களில் வழிபடுவதோ, ஒரு தீப ஒளியை மட்டும் வணங்குவதோ அது தனிமனித விருப்பம். அந்த அனுபவத்தை விவரிப்பது கடினம். வருங்காலத்திலும் இது போன்ற யாத்திரைகளில் பங்கேற்க குருவருள் ஆசிபுரியட்டும். நாம் குருவின் அருகில் இருந்தால் சடங்குகளோ ஆன்மீக பயிற்சியோ தேவையில்லை, குருவின் இருப்பே அனைத்தும் செய்யும். 
குரு எப்போதும் கற்றுக்கொடுப்பதில்லை, தனது வாழ்கை அனைவருக்கும் போதிக்கிறார். குரு நம்மை எதை செய்ய சொல்கிறாரோ அதுவே பெரிய ஆன்மீக செயல், இந்த யாத்திரையில், இந்த அனுபவங்கள் அனைத்தும் குரு மூலம் எனக்கு அளிக்கப்பட்டிருப்பது என் வரையில் ஆகப்பெறும் அனுபவமே. இதற்காக என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.