முன் குறிப்பு: இந்த கட்டுரை பக்தி சார்ந்து எழுதப்பட்டது. உங்களுக்கு பக்தி பூர்வமாக படிக்க விருப்பம் இல்லை எனில் இங்கே சென்று படிக்கவும் 2012ல் உலகம் அழியுமா?
மனிதன் என்றும் பயம் என்னும் அசுர பிடியில் சிக்கித்தவிக்கிறார். ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை குறைய குறைய பயம் எனும் விஷயம் அதிகரிக்கிறது. சுயநலத்துடன் செய்யும் பக்தி கூட பய-பக்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிதே. கடவுள் மேல் நமக்கு இருக்கும் பக்தி பல நிலைகளில் இருக்கலாம்.
ஆஞ்சனேயரை போல கடவுளை எஜமானனாக நினைக்கலாம், அர்ஜுனனை போல வழிகாட்டியாக நினைக்கலாம், குசேலனை போல நண்பனாக நினைக்கலாம் , மீராவை போல காதலனாக நினைக்கலாம். தந்தையாக, தாயாக என பக்தியை எப்படி செய்ய வேண்டும் என பல மஹான்கள் நமக்கு வழிகாட்டி உள்ளனர்.
பயம் என்றும் நம்பிக்கை இன்மையாலும் ஆணவத்தாலும் வரக்கூடியது. தூயபக்தியாளர்களுக்கு பயம் ஏற்படாது என்பதே உண்மை. மாணிக்கவாசகரையும், பிரகலாதனையும் கொடூரமாக துன்புறுத்தும் பொழுது கூட அவர்கள் பயப்படவில்லை. ஏன்? காரணம் அவர்களுக்கு எல்லையில்லா பக்தி இருந்தது.
தற்காலத்தில் சிறிய விஷயம் கூட மக்களுக்கு பயத்தையும் கலவரத்தையும் உண்டாக்குவதன் காரணம் தூய பக்தி என்பது குறைவாக இருப்பதால் தான்.
ஒரு நாத்திகவாதம் கொண்டு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவர் ஒருவர் இருந்தார். தனது வாழ்நாளில் இறைவனை அவர் சிந்தித்ததை விட நிந்தித்ததே அதிகம். ஒரு நாள் இரவு மலைபயணத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். இருட்டு காரணமாக ஒரு வளைவில் தடுமாறி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது. இவர் தூக்கிஎறியப்பட்டார். பல ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு திடீரென கடவுள் பக்தி வந்துவிட்டது. நம்மில் பலரும் இவரை போலத்தான் பிரச்சனையென்றால் தான் பகவானே என்பார்கள்.
கடவுளே என்னை காப்பாற்று காப்பாற்றினால் நீ இருப்பதாக நம்புகிறேன் என வேண்டினார். அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மரக்கிளை ஒன்று குறுக்கிடவே அதை கெட்டியாக பிடித்துகொண்டார். எங்கும் இருள். மரக்கிளையை பிடித்து தொங்கியபடியே உரக்க கேட்டார், “ கடவுளே என்னை காப்பாறுவீர்கள் என நினைத்து முதன் முதலாக உன்னை வேண்டினேன் இதற்கு நீ கொடுத்த பலனா இது? நான் நாத்திகனாக இருந்தாலும் இப்படி மரக்கிளையை பிடித்து இருப்பேனே...” வானில் இருந்து ஒரு குரல் கேட்டது... மனிதனே அந்த கிளையை விட்டுவிடு நான் உன்னை காப்பேன்..”
“என்னது இதையும் விட்டுவிட வேண்டுமா..நல்ல வேடிக்கை..... இதைவிட்டால் விழுந்து சாக வேண்டியது தான் ?” என்றவாறே தெய்வத்தின் குரலை அலட்சியப்படுத்திவிட்டு இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கினான். விடிந்த பிறகு காலையில் பார்த்தால் அவன் தொங்கிகொண்டிருந்தது மலையடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய மரத்தில் அவனுக்கும் பூமிக்கும் ஐந்தடி தூரமே இருந்தது. இந்த மனிதன் போல “நான்” என்னை காப்பாற்றிக்கொள்வேன் என்ற ஆணவம் இருக்கும் வரை பரந்தாமனே நினைத்தாலும் காக்க முடியாது. இது தானே மஹாபாரதத்தில் திரெளபதிக்கும் நடந்தது?
உலகம் முழுவதும் ஒரு செய்தி பரப்பபட்டு வருகிறது. அதாவது டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்று. எனக்கு தெரிந்து இது போன்ற செய்தி என்னையோ முறை பரப்பினார்கள் 2000ஆம் வருடம் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் பலர்.
2012ல் உலகம் அழியப்போகிறது அதனால் கடவுளை வேண்டுங்கள் என்றும் என்னை பின்பற்றுங்கள் என்றும் சொல்லும் நவீன ஆன்மீகவாதிகள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களிடையே பயம்காட்டி ஏமாற்றுவதை தவிர வேறு என்ன சாதிக்க போகிறார்கள்? பயத்தால் உண்டான பக்தி நிலைக்குமா? 2012க்கு பிறகு உலகம் இருந்தால் இவர்களை என்ன செய்யலாம் ?
வட அமெரிக்க கண்டத்தில் இருந்த மாயன் என்ற கலாச்சாரத்தின் நாள் காட்டி 2012ஆம் ஆண்டு வரைதான் இருக்கிறதாம். அதனால் தான் இது போல வதந்திகளை பரப்புகிறார்கள். வெளிநாட்டுக்காரர்களுக்கு மரண பயம் அதிகம். ஆன்மீகத்தில் இல்லாத பாமரன் கூட தான் மரணத்திற்கு பிறகு சொர்க்கத்திலோ நரகத்திலோ வாழ்வேன் என நம்பும் பாரதகலாச்சாரம் நம்முடையது.வெளிநாட்டுக்காரர்களுக்கு மரணத்திற்கு பின் என்ன என தெரியாது அல்லது அவர்கள் கலாச்சாரத்தில் இல்லை. இதனால் எப்பொழுது இறப்பு வரும் என்பதில் அவர்கள் பயத்துடன் இருக்கிறார்கள்.
மனிதன் பிறக்கும் பொழுதே இறக்கப்போகிறான் என்பது தெரிந்தது தான். அதற்காக ஒவ்வொரு நாளும் வருத்தப்படுகிறோமா? அது போலத்தான் எந்த ஒரு தோற்றமும் அழிவிற்கும் தயாராகவே தோன்றுகிறது.
உலகம் அழிந்தால் என்ன? அதற்கு ஏன் பயம் கொள்ளவேண்டும்.பிரளயம் என்ற வார்த்தை அருமையான பொருள் கொண்டது. பிர -லயம் அனைத்து பிரபஞ்ச பொருட்களும் ஆதிசொரூபமான இறைவனுடன் லயமாகிவிடுவது. வேறுபாடு இல்லாமல் இணைந்து விடுவதைத்தான் லயம் என்கிறோம். இறைவனுடன் ஒன்றிணைய ஏன் பயம் கொள்ளவேண்டும்.
நான் என்ற ஆணவம் மிகும் பொழுது தான் அழிவைபற்றிய பயம் உண்டாகும் மேலும் நம்பிக்கையின்மை ஏற்பட்டு பக்தி குறையும் என கூறினேன் அல்லவா ? இந்த கருத்தையும் 2012ல் உலகம் அழியும் செய்தி உண்மையா என்பதற்கும் விடையாக பாகவத புராணத்தில் கதை ஒன்று உண்டு.

பிரம்மா ஆணவத்தின் சொரூபம். அதனால் தான் அவருக்கு கோவில்கள் இல்லை. அவர் படைத்தல் தொழிலை செய்து வந்ததால் தானே உலகில் அனைத்துக்கும் காரணம் என்ற இருமாப்பு கொண்டார்.பிரம்மனின் இருப்பிடம் பரமாத்மாவின் நாபிக்கமலம் அல்லவா?வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவு தாயிக்கு தெரிவது போல பிரம்மனின் கர்வம் ஸ்ரீமன் நாரயணனுக்கு புலப்பட்டது.
பிரம்மனை அழைத்து நானும் நீயும் ஒரு முனிவரை காண செல்ல வேண்டும் என கூறினார். ஆணவத்தில் இருந்த பிரம்மாவோ அலட்சியமாக அவருடன் சென்றார்.
அங்கே உடல் முழுவதும் கரடி போன்று முடிகள் நிறைந்த ஒரு முனிவர் அமர்ந்திருந்தார் அவரின் பெயர் ரோமமுனிவர். அவர் உடல் முழுவதும் முடி இருந்தாலும் வலது கை மணிக்கட்டுவரை முடிகள் இல்லை. இத்தகைய வித்தியாசமான நிலையில் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்த முனிவர் முன் இருவரும் தோன்றினார்கள்.
பரமாத்மாவை கண்டவுடன் விழுந்துவணங்கி அவர்களின் முன் பணிவுடன் நின்றார் ரோமமுனிவர். இறைவா என்க்கு தரிசனம் தந்தமைக்கு நன்றி. நீங்கள் அழைத்திருந்தால் நானே உங்களிடம் வந்திருப்பேன். இந்த எளியவனிடத்தில் வந்த காரணம் அடியேன் தெரிந்துகொள்ளலாம?” என பணிவுடன் கேட்டார்.
பிரம்மன் அருகில் இருப்பதை பார்த்தவாறே ஸ்ரீமந் நாராயணன் ரோமமுனிவரிடம் , “ரோம முனிவரே உங்கள் ஆயுள் காலம் என்ன? அதை தெரிந்து கொள்ளவே யாம் வந்தோம்” என்றார்.
“பிரபோ அண்ட சராச்சரங்கள் அனைத்தும் படைப்பவர் நீங்கள். தாங்கள் அறியாதது ஏதுவும் உண்டா? நீங்களே இக்கேள்வியை கேட்பதால் இதில் ஏதேனும் ஒரு திருவிளையாடல் உண்டு என்பதை உணர முடிகிறது. அதனால் என் ஆயுள் காலத்தை விரிவாகவே கூறுகிறேன்” என்ற ரோம முனிவர் விவரிக்க துவங்கினார்.
காலத்தை பொருத்துதான் ஆயுள் காலம் முடிவு செய்யப்படுகிறது. ஒரு மனிதன் ஒரு நாளில் 21,600 முறை சுவாசம் செய்கிறான். நான்கு சதுர்யுகங்களும் மனிதனின் சுவாசத்தாலேயே தோன்றுகிறது.
கலியுகத்தில் மனிதன் தனது 20 உறுப்புகளில் சுவாசிப்பதால் கலியுகம் 432000 வருடங்கள் (20 X 21600 =4,32,000 வருடங்கள்)
கலியுகத்தின் முன் இருக்கும் மஹாபாரதம் நடந்த துவாபர யுகம் கலியுகத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. (864000 வருடங்கள்).
திருதாயுகம் என்ற ராமாயண யுகம் கலியுகத்தைவிட மூன்று மடங்கும் அதிகமாகவும், துவாபர யுகத்தைவிட இருமடங்கும் கொண்டது. (1296000 வருடங்கள்)
கிருதாயுகம் என்பது கலியுகத்தைவிட நான்கு மடங்கும் திருதாயுகத்தைவிட இருமடங்கும் பெரியது. (1728000 வருடங்கள்).
கிருதாயுகம்,திருதாயுகம்,துவாபர யுகம் மற்றும் கலியுகம் என அனைத்தும் சேர்ந்த நான்கு யுகத்திற்கும் சதுர்யுகம் என பெயர். ஒரு சதுர்யுகம் என்பது பிரம்மாவின் ஒரு நாளின் பகல் பொழுது, நான்கு சதுர்யுகமும் இல்லாத பிரளயகாலம் பிரம்மனின் இரவு பொழுது. ஆகவே சதுர்யுகம் மற்றும் பிரளயம் இணைந்த காலம் பிரம்மனுக்கு ஒரு நாள்.
இது போல ஆயிரம் பிரம்ம நாட்கள் சேர்ந்தது ஒரு கல்பம் என்று பெயர். நூறு கல்பம் சேர்ந்தது மஹாயுகம்.ஒரு மஹாயுகம் பிரம்மனின் முழு ஆயுள் காலம் ஆகும். நூறு மஹாயுகம் கழிந்ததும் மற்றுமொரு பிரம்மாவை பரமாத்மா உண்டாக்குவார்.
மேற்கண்ட கருத்தை ரோம முனிவர் கூறும்பொழுது பிரம்மாவின் முகத்தில் பெருமிதம். தான் எவ்வளவு நீண்ட அயுளை கொண்டவன் என்று நினைத்துக்கொண்டார்.
ரோமமுனிவர் தொடர்ந்தார்....
இப்படிப்பட்டது பிரம்மனின் ஆயுள் காலம் என கூறுப்படுகிறது. அவ்வாறு
ஒரு பிரம்மவுக்கு ஆயுள் முடிந்தால் எனது உடலில் இருக்கும் ஒரு ரோமம் விழுந்துவிடும். எப்பொழுது எனது உடலில் அனைத்து ரோமமும் உதிர்கிறதோ அப்பொழுது எனது ஆயுள் முடிந்துவிடும். எனது வலது கை மணிக்கட்டில் மட்டுமே ரோமம் உதிர்ந்திருக்கிறது. இந்த அற்பனின் ஆயுள் இது தான் பிரபோ என்றார் ரோம முனிவர்.
பிரம்மனுக்கு தலைசுற்றாத குறை. தான் அனைத்தையும் படைப்பவன் தன்னை மிஞ்சிய ஆயுள் இல்லை என நினைத்தவருக்கு இது ஒரு மிகப்பெரிய தாக்கமாக இருந்தது.
இதற்காகத்தானே ஸ்ரீமந்நாராயணன் அவரை இங்கே அழைத்துவந்தார்? பிரம்மனின் மனதில் இருப்பதை அறிந்து கொண்டே அவரை ரோமமுனிவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் இன்னொரு முனிவரிடம் அழைத்து சென்றார்.
அங்கே உடலில் எட்டு இடங்களில் கோணலாக வளைந்த நிலையில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். உடலில் எட்டு இடங்களில் கோணல் இருந்ததால் அவரின் பெயர் அஷ்டவக்ரர்.
ஸ்ரீமந் நாராயணன் அவரிடத்திலும் ரோமமுனிவரிடம் கேட்டது போல ஆயுள் காலத்தை விளக்குமாறு கேட்டார். ரோம முனிவர் சொன்னது போல யுகம் மற்றும் கல்பம் ஆகியவற்றை விளக்கிவிட்டு சொன்னார். ரோமமுனிவர் இருக்கிறாரே அவரின் ஆயுள் முடிந்தால் என் உடம்பில் ஒரு கோணல் சரியாகிவிடும். அது போல எட்டு கோணலும் சரியானால் என் ஆயுள் முடிந்துவிடும் என்றார்..
பிரம்மனுக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. தனது அகந்தை சுக்குநூறாக உடைந்து மெளனமாக ஸ்ரீமந் நாராயணனின் பாதகமலத்தை பற்றினார்.
கலியுகத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். ஐயாயிரத்தி சொச்ச வருடங்களே கடந்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய வருடங்கள் பல உண்டு. பகவானை தியானித்து என்றும் அவரின் நினைவில் இருந்தால் ரோம முனிவர் மற்றும் அஷ்டவக்ரர் போல நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
ஒவ்வொரு முறையும் சுவாசத்தை உள்ளே இழுக்கும் பொழுது பிறக்கிறோம். சுவாசத்தை வெளிவிடும் பொழுது இறக்கிறோம் என சித்தர்கள் பாடலில் சொல்லுகிறார்கள். இறப்புக்கு அப்பால் ஒரு ஞானம் ஒன்று உண்டு அது சத் - சித் -ஆனந்த ரூபமான பரப்பிரம்மமே. இறைவனிடத்தில் பக்தி செய்வோம் தேவையற்ற அஹங்கார பயங்கள் என்ற இருளில் இருந்து வெளியேருவோம்.
சுபவரம் ( 2009 செப்டம்பர் ) - ஆன்மீக மாத இதழில் வெளிவந்த கட்டுரை







