Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label புராணம். Show all posts
Showing posts with label புராணம். Show all posts

Monday, September 14, 2009

2012-ல் உலகம் அழியப்போகிறதா? -பக்தி Version

முன் குறிப்பு: இந்த கட்டுரை பக்தி சார்ந்து எழுதப்பட்டது. உங்களுக்கு பக்தி பூர்வமாக படிக்க விருப்பம் இல்லை எனில் இங்கே சென்று படிக்கவும் 2012ல் உலகம் அழியுமா?

னிதன் என்றும் பயம் என்னும் அசுர பிடியில் சிக்கித்தவிக்கிறார். ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை குறைய குறைய பயம் எனும் விஷயம் அதிகரிக்கிறது. சுயநலத்துடன் செய்யும் பக்தி கூட பய-பக்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிதே. கடவுள் மேல் நமக்கு இருக்கும் பக்தி பல நிலைகளில் இருக்கலாம்.

ஆஞ்சனேயரை போல கடவுளை எஜமானனாக நினைக்கலாம், அர்ஜுனனை போல வழிகாட்டியாக நினைக்கலாம், குசேலனை போல நண்பனாக நினைக்கலாம் , மீராவை போல காதலனாக நினைக்கலாம். தந்தையாக, தாயாக என பக்தியை எப்படி செய்ய வேண்டும் என பல மஹான்கள் நமக்கு வழிகாட்டி உள்ளனர்.

பயம் என்றும் நம்பிக்கை இன்மையாலும் ஆணவத்தாலும் வரக்கூடியது. தூயபக்தியாளர்களுக்கு பயம் ஏற்படாது என்பதே உண்மை. மாணிக்கவாசகரையும், பிரகலாதனையும் கொடூரமாக துன்புறுத்தும் பொழுது கூட அவர்கள் பயப்படவில்லை. ஏன்? காரணம் அவர்களுக்கு எல்லையில்லா பக்தி இருந்தது.

தற்காலத்தில் சிறிய விஷயம் கூட மக்களுக்கு பயத்தையும் கலவரத்தையும் உண்டாக்குவதன் காரணம் தூய பக்தி என்பது குறைவாக இருப்பதால் தான்.

ஒரு நாத்திகவாதம் கொண்டு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவர் ஒருவர் இருந்தார். தனது வாழ்நாளில் இறைவனை அவர் சிந்தித்ததை விட நிந்தித்ததே அதிகம். ஒரு நாள் இரவு மலைபயணத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். இருட்டு காரணமாக ஒரு வளைவில் தடுமாறி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது. இவர் தூக்கிஎறியப்பட்டார். பல ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு திடீரென கடவுள் பக்தி வந்துவிட்டது. நம்மில் பலரும் இவரை போலத்தான் பிரச்சனையென்றால் தான் பகவானே என்பார்கள்.

கடவுளே என்னை காப்பாற்று காப்பாற்றினால் நீ இருப்பதாக நம்புகிறேன் என வேண்டினார். அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மரக்கிளை ஒன்று குறுக்கிடவே அதை கெட்டியாக பிடித்துகொண்டார். எங்கும் இருள். மரக்கிளையை பிடித்து தொங்கியபடியே உரக்க கேட்டார், “ கடவுளே என்னை காப்பாறுவீர்கள் என நினைத்து முதன் முதலாக உன்னை வேண்டினேன் இதற்கு நீ கொடுத்த பலனா இது? நான் நாத்திகனாக இருந்தாலும் இப்படி மரக்கிளையை பிடித்து இருப்பேனே...” வானில் இருந்து ஒரு குரல் கேட்டது... மனிதனே அந்த கிளையை விட்டுவிடு நான் உன்னை காப்பேன்..”

“என்னது இதையும் விட்டுவிட வேண்டுமா..நல்ல வேடிக்கை..... இதைவிட்டால் விழுந்து சாக வேண்டியது தான் ?” என்றவாறே தெய்வத்தின் குரலை அலட்சியப்படுத்திவிட்டு இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கினான். விடிந்த பிறகு காலையில் பார்த்தால் அவன் தொங்கிகொண்டிருந்தது மலையடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய மரத்தில் அவனுக்கும் பூமிக்கும் ஐந்தடி தூரமே இருந்தது. இந்த மனிதன் போல “நான்” என்னை காப்பாற்றிக்கொள்வேன் என்ற ஆணவம் இருக்கும் வரை பரந்தாமனே நினைத்தாலும் காக்க முடியாது. இது தானே மஹாபாரதத்தில் திரெளபதிக்கும் நடந்தது?

உலகம் முழுவதும் ஒரு செய்தி பரப்பபட்டு வருகிறது. அதாவது டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்று. எனக்கு தெரிந்து இது போன்ற செய்தி என்னையோ முறை பரப்பினார்கள் 2000ஆம் வருடம் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் பலர்.

2012ல் உலகம் அழியப்போகிறது அதனால் கடவுளை வேண்டுங்கள் என்றும் என்னை பின்பற்றுங்கள் என்றும் சொல்லும் நவீன ஆன்மீகவாதிகள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களிடையே பயம்காட்டி ஏமாற்றுவதை தவிர வேறு என்ன சாதிக்க போகிறார்கள்? பயத்தால் உண்டான பக்தி நிலைக்குமா? 2012க்கு பிறகு உலகம் இருந்தால் இவர்களை என்ன செய்யலாம் ?

வட அமெரிக்க கண்டத்தில் இருந்த மாயன் என்ற கலாச்சாரத்தின் நாள் காட்டி 2012ஆம் ஆண்டு வரைதான் இருக்கிறதாம். அதனால் தான் இது போல வதந்திகளை பரப்புகிறார்கள். வெளிநாட்டுக்காரர்களுக்கு மரண பயம் அதிகம். ஆன்மீகத்தில் இல்லாத பாமரன் கூட தான் மரணத்திற்கு பிறகு சொர்க்கத்திலோ நரகத்திலோ வாழ்வேன் என நம்பும் பாரதகலாச்சாரம் நம்முடையது.வெளிநாட்டுக்காரர்களுக்கு மரணத்திற்கு பின் என்ன என தெரியாது அல்லது அவர்கள் கலாச்சாரத்தில் இல்லை. இதனால் எப்பொழுது இறப்பு வரும் என்பதில் அவர்கள் பயத்துடன் இருக்கிறார்கள்.

மனிதன் பிறக்கும் பொழுதே இறக்கப்போகிறான் என்பது தெரிந்தது தான். அதற்காக ஒவ்வொரு நாளும் வருத்தப்படுகிறோமா? அது போலத்தான் எந்த ஒரு தோற்றமும் அழிவிற்கும் தயாராகவே தோன்றுகிறது.

உலகம் அழிந்தால் என்ன? அதற்கு ஏன் பயம் கொள்ளவேண்டும்.பிரளயம் என்ற வார்த்தை அருமையான பொருள் கொண்டது. பிர -லயம் அனைத்து பிரபஞ்ச பொருட்களும் ஆதிசொரூபமான இறைவனுடன் லயமாகிவிடுவது. வேறுபாடு இல்லாமல் இணைந்து விடுவதைத்தான் லயம் என்கிறோம். இறைவனுடன் ஒன்றிணைய ஏன் பயம் கொள்ளவேண்டும்.

நான் என்ற ஆணவம் மிகும் பொழுது தான் அழிவைபற்றிய பயம் உண்டாகும் மேலும் நம்பிக்கையின்மை ஏற்பட்டு பக்தி குறையும் என கூறினேன் அல்லவா ? இந்த கருத்தையும் 2012ல் உலகம் அழியும் செய்தி உண்மையா என்பதற்கும் விடையாக பாகவத புராணத்தில் கதை ஒன்று உண்டு.

பிரம்மா ஆணவத்தின் சொரூபம். அதனால் தான் அவருக்கு கோவில்கள் இல்லை. அவர் படைத்தல் தொழிலை செய்து வந்ததால் தானே உலகில் அனைத்துக்கும் காரணம் என்ற இருமாப்பு கொண்டார்.பிரம்மனின் இருப்பிடம் பரமாத்மாவின் நாபிக்கமலம் அல்லவா?வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவு தாயிக்கு தெரிவது போல பிரம்மனின் கர்வம் ஸ்ரீமன் நாரயணனுக்கு புலப்பட்டது.

பிரம்மனை அழைத்து நானும் நீயும் ஒரு முனிவரை காண செல்ல வேண்டும் என கூறினார். ஆணவத்தில் இருந்த பிரம்மாவோ அலட்சியமாக அவருடன் சென்றார்.

அங்கே உடல் முழுவதும் கரடி போன்று முடிகள் நிறைந்த ஒரு முனிவர் அமர்ந்திருந்தார் அவரின் பெயர் ரோமமுனிவர். அவர் உடல் முழுவதும் முடி இருந்தாலும் வலது கை மணிக்கட்டுவரை முடிகள் இல்லை. இத்தகைய வித்தியாசமான நிலையில் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்த முனிவர் முன் இருவரும் தோன்றினார்கள்.

பரமாத்மாவை கண்டவுடன் விழுந்துவணங்கி அவர்களின் முன் பணிவுடன் நின்றார் ரோமமுனிவர். இறைவா என்க்கு தரிசனம் தந்தமைக்கு நன்றி. நீங்கள் அழைத்திருந்தால் நானே உங்களிடம் வந்திருப்பேன். இந்த எளியவனிடத்தில் வந்த காரணம் அடியேன் தெரிந்துகொள்ளலாம?” என பணிவுடன் கேட்டார்.

பிரம்மன் அருகில் இருப்பதை பார்த்தவாறே ஸ்ரீமந் நாராயணன் ரோமமுனிவரிடம் , “ரோம முனிவரே உங்கள் ஆயுள் காலம் என்ன? அதை தெரிந்து கொள்ளவே யாம் வந்தோம்” என்றார்.

“பிரபோ அண்ட சராச்சரங்கள் அனைத்தும் படைப்பவர் நீங்கள். தாங்கள் அறியாதது ஏதுவும் உண்டா? நீங்களே இக்கேள்வியை கேட்பதால் இதில் ஏதேனும் ஒரு திருவிளையாடல் உண்டு என்பதை உணர முடிகிறது. அதனால் என் ஆயுள் காலத்தை விரிவாகவே கூறுகிறேன்” என்ற ரோம முனிவர் விவரிக்க துவங்கினார்.

காலத்தை பொருத்துதான் ஆயுள் காலம் முடிவு செய்யப்படுகிறது. ஒரு மனிதன் ஒரு நாளில் 21,600 முறை சுவாசம் செய்கிறான். நான்கு சதுர்யுகங்களும் மனிதனின் சுவாசத்தாலேயே தோன்றுகிறது.

கலியுகத்தில் மனிதன் தனது 20 உறுப்புகளில் சுவாசிப்பதால் கலியுகம் 432000 வருடங்கள் (20 X 21600 =4,32,000 வருடங்கள்)

கலியுகத்தின் முன் இருக்கும் மஹாபாரதம் நடந்த துவாபர யுகம் கலியுகத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. (864000 வருடங்கள்).

திருதாயுகம் என்ற ராமாயண யுகம் கலியுகத்தைவிட மூன்று மடங்கும் அதிகமாகவும், துவாபர யுகத்தைவிட இருமடங்கும் கொண்டது. (1296000 வருடங்கள்)

கிருதாயுகம் என்பது கலியுகத்தைவிட நான்கு மடங்கும் திருதாயுகத்தைவிட இருமடங்கும் பெரியது. (1728000 வருடங்கள்).

கிருதாயுகம்,திருதாயுகம்,துவாபர யுகம் மற்றும் கலியுகம் என அனைத்தும் சேர்ந்த நான்கு யுகத்திற்கும் சதுர்யுகம் என பெயர். ஒரு சதுர்யுகம் என்பது பிரம்மாவின் ஒரு நாளின் பகல் பொழுது, நான்கு சதுர்யுகமும் இல்லாத பிரளயகாலம் பிரம்மனின் இரவு பொழுது. ஆகவே சதுர்யுகம் மற்றும் பிரளயம் இணைந்த காலம் பிரம்மனுக்கு ஒரு நாள்.

இது போல ஆயிரம் பிரம்ம நாட்கள் சேர்ந்தது ஒரு கல்பம் என்று பெயர். நூறு கல்பம் சேர்ந்தது மஹாயுகம்.ஒரு மஹாயுகம் பிரம்மனின் முழு ஆயுள் காலம் ஆகும். நூறு மஹாயுகம் கழிந்ததும் மற்றுமொரு பிரம்மாவை பரமாத்மா உண்டாக்குவார்.

மேற்கண்ட கருத்தை ரோம முனிவர் கூறும்பொழுது பிரம்மாவின் முகத்தில் பெருமிதம். தான் எவ்வளவு நீண்ட அயுளை கொண்டவன் என்று நினைத்துக்கொண்டார்.

ரோமமுனிவர் தொடர்ந்தார்....

இப்படிப்பட்டது பிரம்மனின் ஆயுள் காலம் என கூறுப்படுகிறது. அவ்வாறு

ஒரு பிரம்மவுக்கு ஆயுள் முடிந்தால் எனது உடலில் இருக்கும் ஒரு ரோமம் விழுந்துவிடும். எப்பொழுது எனது உடலில் அனைத்து ரோமமும் உதிர்கிறதோ அப்பொழுது எனது ஆயுள் முடிந்துவிடும். எனது வலது கை மணிக்கட்டில் மட்டுமே ரோமம் உதிர்ந்திருக்கிறது. இந்த அற்பனின் ஆயுள் இது தான் பிரபோ என்றார் ரோம முனிவர்.


பிரம்மனுக்கு தலைசுற்றாத குறை. தான் அனைத்தையும் படைப்பவன் தன்னை மிஞ்சிய ஆயுள் இல்லை என நினைத்தவருக்கு இது ஒரு மிகப்பெரிய தாக்கமாக இருந்தது.

இதற்காகத்தானே ஸ்ரீமந்நாராயணன் அவரை இங்கே அழைத்துவந்தார்? பிரம்மனின் மனதில் இருப்பதை அறிந்து கொண்டே அவரை ரோமமுனிவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் இன்னொரு முனிவரிடம் அழைத்து சென்றார்.

அங்கே உடலில் எட்டு இடங்களில் கோணலாக வளைந்த நிலையில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். உடலில் எட்டு இடங்களில் கோணல் இருந்ததால் அவரின் பெயர் அஷ்டவக்ரர்.

ஸ்ரீமந் நாராயணன் அவரிடத்திலும் ரோமமுனிவரிடம் கேட்டது போல ஆயுள் காலத்தை விளக்குமாறு கேட்டார். ரோம முனிவர் சொன்னது போல யுகம் மற்றும் கல்பம் ஆகியவற்றை விளக்கிவிட்டு சொன்னார். ரோமமுனிவர் இருக்கிறாரே அவரின் ஆயுள் முடிந்தால் என் உடம்பில் ஒரு கோணல் சரியாகிவிடும். அது போல எட்டு கோணலும் சரியானால் என் ஆயுள் முடிந்துவிடும் என்றார்..


பிரம்மனுக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. தனது அகந்தை சுக்குநூறாக உடைந்து மெளனமாக ஸ்ரீமந் நாராயணனின் பாதகமலத்தை பற்றினார்.

கலியுகத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். ஐயாயிரத்தி சொச்ச வருடங்களே கடந்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய வருடங்கள் பல உண்டு. பகவானை தியானித்து என்றும் அவரின் நினைவில் இருந்தால் ரோம முனிவர் மற்றும் அஷ்டவக்ரர் போல நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

ஒவ்வொரு முறையும் சுவாசத்தை உள்ளே இழுக்கும் பொழுது பிறக்கிறோம். சுவாசத்தை வெளிவிடும் பொழுது இறக்கிறோம் என சித்தர்கள் பாடலில் சொல்லுகிறார்கள். இறப்புக்கு அப்பால் ஒரு ஞானம் ஒன்று உண்டு அது சத் - சித் -ஆனந்த ரூபமான பரப்பிரம்மமே. இறைவனிடத்தில் பக்தி செய்வோம் தேவையற்ற அஹங்கார பயங்கள் என்ற இருளில் இருந்து வெளியேருவோம்.

சுபவரம் (
2009 செப்டம்பர் ) - ஆன்மீக மாத இதழில் வெளிவந்த கட்டுரை

Thursday, August 20, 2009

தெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும்

நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் கணபதி. உயர் நிலையில் இருக்கும் ஞானி ஆகட்டும், சராசரி மனிதனாகட்டும் கணபதியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உருவ நிலையிலும் சரி , பூஜா முறையிலும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம் விநாயகர். புராணங்கள் விநாயகரின் பிறப்பை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறினாலும், உள்ளார்ந்த ஞான நிலையில் கணபதியை புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதபட்டது தான் இந்த கருத்துக்கள்.

பாமரர்கள் புரிந்து கொள்ளுவதற்காக உருவகப்படுத்தபட்ட கதைதான் உமாதேவி தனது குளிக்கும் தருவாயில் விக்னேஷ்வரரை உருவாக்கினார் என்பது. அந்த கதையை உற்று நோக்கினால் சிவன் , சக்தியை காண வரும்பொழுது சிவனை தடுத்து போர் புரியும் பகுதி உண்டு. முடிவில் சிவன் விக்னேஷ்வரரின் தலையை கொய்து பிறகு யானையின் தலையை வைத்ததாக வரலாறு கூறுகிறது.

புராண கதையின் சுவையில் நாம் பக்தியுடன் இருப்பது தவறல்ல, ஆனால் அதை பற்றி சிந்திக்காத முட்டாளாக இருப்பது தவறு. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சக்தி உருவாக்கிய விக்னேஷ்வரர் சிவனை பிரித்தரியாத மூட படைப்பாக இருக்க முடியுமா?

இல்லை சக்தி தான் அவ்வாறு உருவாக்குவாளா? அண்ட சராச்சரத்திற்கும் நாயகனான சிவன் தன் முன் இருக்கும் பாலகன் யார் என தெரியாமல் போர் புரிவாரா? இவை எல்லாம் திருவிளையாடலுக்காக என கொண்டாலும் தலையை கொய்து போடும் அளவிற்கா திருவிளையாடல் நடக்கும்.? எந்த அசுரனையும் வதம் செய்யாலம் அவனுக்கு வரம் மட்டுமே தருபவர் அல்லவா ஈசன்?

புராண கதைகள் அனைத்தும் கூறப்பட்டது உங்கள் மனதில் கணபதியின் உருவம் பதியவேண்டும் என்பதற்கும் உங்களின் பக்தி பெருகவேண்டும் என்பதற்குமே. ஆனால் நாத்திக வாதம் பேசும் சிலர் கணபதியின் உருவை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.

ஒரு வேடிக்கை கதை ஒன்று உண்டு. ஒரு நாத்திகரும், ஆத்திகரும் நண்பர்கள். தினமும் காலையில் ஒன்றாக நடைபயிற்சி செய்பவர்கள். நாத்திகர் கையில் தனது செல்ல நாய் குட்டியை பிடித்தபடி வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் கொள்கையில் வேறுபட்டவர்கள்.


ஆத்திகர் நடைப்பயிற்சியின் இடையே வந்த அரச மர விநாயகரை வழிபட்டு விட்டு நடையை தொடர்ந்தார். அப்பொழுது நாத்திகர் வேடிக்கையாக “நண்பரே இது என்ன முட்டாள் தனம் தினமும் இந்த கல்லை வணங்கலாமா? அதற்கு பதில் உயிர் உள்ள இந்த நாய் குட்டியை வணங்கலாமே. இது தான் என் சாமி..!” என்றார் கிண்டலாக. ஆத்திகர் புன்சிரிப்புடன், “நண்பரே .. உங்கள் நாய் குட்டியை என் சாமி மீதி போடுங்கள். என் சாமியை உங்கள் நாயின் மீது போடுகிறேன். எது சக்தி வாந்தது என தெரியும். சக்தி எதில் இருக்கிறது என முடிவு செய்ய வேண்டியது நாம் தான்..!” என்றார். கடவுளை எந்த பொருளிலும் காணலாம். ஆனால் இதில் தான் நீ காணவேண்டும் என சொல்லுவது அஹங்காரத்தின் அதிகாரமே தவிர வேறொன்றும் அல்ல.

வேடிக்கை கதைகள் இருக்கட்டும் கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?


விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ - உ - ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக்கொண்டே கணபதியின் உருவை நினைத்துப்பாருங்கள்.


ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதாவது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந்திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள்ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான் , சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள்ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?
நான் கடவுள் படத்தை பகடி செய்து நான் உருவாக்கிய நான் விநாயகர்

அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என்கிறார்கள். கணபதி என்ற பெயருக்கு கணங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்களின் அதிபதி எனலாம். உண்மையில் கணம் என்றால் காலத்தின் அளவு கோல். அதனால் காலத்தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக்கூறலாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் - தடைகளை ஏற்படுத்துபவரும் நீக்குபவரும் என பொருள்படும்.

காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகிவிடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.


ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம்.
கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக்கூடியது அல்ல. அதை விவசாயம் செய்ய முடியாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம்புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.

மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமையான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற்று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக்னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட்டுகிறது !

பிள்ளையாருக்கு
பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படைத்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்களை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இருக்கக்கூடாது.

நாடியும் விநாயகரும் :

ஆன்மீகத்தில் இருக்கும் மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன். உடலின் வலது பகுதி மூளையின் இடது பக்கதிலும் ; இடப்பகுதி வலது மூளையாலும் கட்டுபடுத்தப்படுகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.


நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் அமைந்திருக்கிறது.


கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி செய்து விட்டு விநாயகரின் விக்ரஹ மகிமையை கூறவும். விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.

விக்னேஷ்வரர் உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்டவர் அதனால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். பிராணன் இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அரசமரம் மூலம் சுத்தப்படுத்துகிறோம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை அதனால் தான் இது விநாகயர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுவோம். வாருங்கள் ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

Saturday, November 22, 2008

இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?

தேவேந்திரன் என்று அழைக்கப்படும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். வஜ்ராயுதம் தாங்கி தேவலோகத்தில் வசிப்பார் என புராணங்களிலும் , திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம். இந்திரன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது அசுரர்கள் அவரை தோற்கடிப்பார்கள், இறைவனிடம் முறையிட்டு மீண்டும் அப்பதவியை அடைவார் என்பது தானே?

பெண்கள் மேல் மையல் கொள்ளும் இந்திரனாகவும், ரம்பா ஊர்வசி மேனகையின் நடனத்தை காணும் இந்திரன் என அவர் மேல் நமக்கு நல்ல நினைப்பே வரும் அளவுக்கு அவரை பற்றி கதைகள் இல்லை. முனிவரின் மனைவி மேல் மையல், கையை பிடித்து இழுத்தார் என பல வில்லங்கமான கதைகள். அப்படிபட்ட தேவேந்திரன் யார் என பார்ப்போம்.

இந்திய கலாச்சாரத்தில் பலவகையான எழுத்து வகைகள் உண்டு. அவற்றை தெளிவாக தெரிந்து கொண்டால் இந்திரனை அறிய வசதியாக இருக்கும். காவியங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் என்பவையே மூன்று வகையாக எழுத்துவகைகள்.

காவியங்கள் என்பது முழுமையாக கற்பனை கதாப்பத்திரங்களை வைத்து எழுத்தாளர் எழுதும் புதினம் எனலாம்.

உதாரணமாக சகுந்தலம் எனும் காவியம் புனையப்பட்டது. தற்காலத்தில் நாவல் எனும் தன்மை இதற்கு ஒப்பாக சொல்லாம். இதிகாசம் என்பதன் வடமொழி விளக்கம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். “இதி” என்றால் “இவ்வாறு” , ஹாசா என்றால் “நடந்தது”. ஓர் சம்பவம் இவ்வாறு நடத்தது என்பதனை உலகுக்கு உணர்ந்த எழுதப்பட்டது இதிகாசம். ராமாயணம், மஹாபாரதம் என்பவை இதிகாசங்கள்.

புராணங்கள் என்பது சில உயர்நிலையில் உள்ள சூட்சுமமான விஷயங்களை பாமரனுக்கு புரியும் நோக்கில் சுவாரசியமாக கூறும் எழுத்துவகை. டார்வின் தியரி எனும் விஷயத்தை பாமரனுக்கு விளக்கினால் புரியாது என்பதால் அவனுக்கு நெருக்கபான விஷ்யத்தை வைத்து கூறப்பட்டது தசாவதாரம் எனும் புராண கதை. இந்த விஷயம் பாகவதம் எனும் புராணத்தில் இருக்கிறது.

புராணங்களில் வரும் கதைகளையோ, கதையின் உள்நோக்கத்தையோ காணாமல் மேலெழுந்த வாரியாக பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். பாமர நிலையில் இருக்கும் ஒருவனுக்கு உயர் ஞான விஷயத்தை விளக்குவதே புராணங்களின் நோக்கம்.

புராணங்களை தொகுத்து உலகிற்கு அளித்தவர் வியாசர். அவர் தனது ஞான நிலையிலிருந்து இறங்கி சராசரியான மனிதனுக்கு புரியும் நோக்கில் பதினோரு புராணங்களை தொகுத்தார். நீங்கள் பிரம்மாண்டமான விஷயங்களை புரிந்து கொள்ளாதவராக இருந்தால் இந்திரன் என்பவர் தேவலோகத்தில் மனித வடிவில் இருப்பவர் என்றே கற்பனை செய்ய முடியும். இந்திரன் என்பது ஓர் ஆற்றலின் குறிசொல் அவ்வளவே.

மின்சாரத்தை தான் இந்திரன் என உருவகபடுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்திரன் என்பவர் ஒருவர் கிடையாது. தேவந்திர பதவிக்கு பலர் போட்டியிடுவர் என்றும் புராணங்களில் உண்டு.

வருணன் (நீர்), வாயு ( காற்று), அக்னி, சூரியன் மற்றும் பிற தேவர்கள் இந்திரனுக்கு கீழே இருப்பவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் இவர்கள் கீழே இருக்க வேண்டும்? இந்திரன் ஏன் தலைவனாக இருக்க வேண்டும்?

நீர், காற்று, அக்னி, மற்றும் சூரியன் என அனைத்திலிருந்தும் நவீன மனிதன் மின்சாரத்தை தயாரிக்க முடியும். மின்சாரம் அனைத்திலும் பிரதானமாக இருப்பதால், இந்திரன் எனும் மின்சாரம் அனைத்திலும் முதன்மையாக இருக்கிறது.

இந்திரனுக்கு ஆயிரம் கண் என்றும் அது ஏன் எற்பட்டது என்ற விவகாரமான கதையையும் படித்திருப்பீர்கள். மின்சாரத்திற்கு ஓர் முனை செயல்பாடு கிடையாது, பல இணைப்புகளை கொடுக்க கொடுக்க, அனைத்திலும் மின்சாரம் பாயும். இதை உணர வைக்க எப்படிப்பட்ட கதை சொல்ல வேண்டி இருக்கிறது....!

மின்சாரம் என்பது பல பொருட்களுக்கு உற்பத்தி ஆதாரமாக இருக்கிறது. அதனால் தான் உற்பத்தி சம்பந்தமான (உறுப்புகள்) விஷயங்களுக்கு இந்திரனை காரணமாக்குகிறார்கள்.

தொலைகாட்சி மற்றும் இதர சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியும். நவீன காலத்தில் தொலைகாட்சி, கணினி மற்றும் வானொலி தான் ரம்பா, ஊர்வசி மேனகா.

இக்கட்டுரையை வாசிக்கும் சமயம் தியானத்தில் உற்கார்ந்து பாருங்கள், பக்கத்து வீட்டின் டீவி ஒலி, உங்கள் செல்போன் என பல விஷயங்கள் உங்களை இடையூராக்கும். விஸ்வாமித்திரருக்கும் இதே அனுபவம் நேர்ந்தது. இந்திரன் எனும் மின்சாரம் மனிதன் எனும் விஸ்வாமித்திரர்களை தன்னை போல் ஆற்றல் வாய்ந்தவர்களாக மாறாமல் தடுக்க தியானத்திற்கு இடையூரு செய்யும் நோக்கில் தொலைகாட்சி-வானோலி-கைபேசி எனும் ரம்பா-ஊர்வசி-மேனகை அனுப்புகிறார்.

மனித உடலில் கூட மின்சாரம் உண்டு என்கிறது நவீன விஞ்ஞானம். யோக சாஸ்திரமும் மனித உடலின் முதுகெலும்பு பகுதியில் இந்திரன் வசிக்கிறார் என்கிறது. இந்திரனின் கையில் இருப்பது வஜ்ராயும் என்னும் கருவி. மின்னல் என்பதன் வடமொழி சொல்லே வஜ்ரம் என்பதாகும். மின்னலில் எண்ணிலா மின்சார சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்திரன் மின்சார உருவகம் என்பதில் வஜ்ராயுதமே சாட்சி.

தற்காலத்தில் இந்திரன் தனது பதவியை இழந்து மறைந்து கொண்டான். இதனால் அசுரர்கள் அதை தன்வசமாக்கினார்கள். புரியவில்லையா? உங்கள் வீட்டில் 3 மணி நேரம் தினமும் மின்சாரம் இல்லாமல் இருப்பதைதான் சொல்லுகிறேன். அசுரர் கொட்டத்தை அடக்க இறைவனை வேண்டுவோம்.