Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, December 30, 2009

காசி சுவாசி - பகுதி 3

தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் மி
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே மிமி

தேவர்களின் தலைவன் வணங்கும் திருவடியை கொண்டவரும், சந்திரனை போன்ற ஒளி பொருந்திய யஜ்ந்ஞோபவீதம் கொண்ட கருணை மிகுந்தவரும், யோகிகளால் வணங்கப்படும் யோகியர்களின் தலைவனும், உடலில் ஆடைகள் இன்றி திகம்பர நிலையில் காசி மாநகரில் இருக்கும் கால பைரவரை நான் வணங்குகிறேன்.
- ஆதிசங்கரர், கால பைரவ அஷ்டகம்

------------------------------------------------------

இறைவனை மூல சக்தியாக கண்டால் ஒன்று தான். ஆனால் இறை சக்தி செயல்படும் பொழுது பல்வேறு சக்தியாக மாற்றமடைகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அனுக்களால் ஆனது. அனு என்பது இதன் மூலம். ஆனால் அனைத்து பொருளும் ஒன்று போலவே இருப்பது இல்லை அல்லவா?

”கால பைரவ்” என வட மொழியில் கூறப்படும் காலபைரவர் என்ற இறை சக்தி மூல சக்தியின் பரதிபிம்பம் என்றாலும் தனித்துவமானது. காசி என்ற நகரத்தின் முழுமையான கடவுள் கால பைரவர். ஞானத்தின் வடிவமாகவும் ஞானிகளுக்கு எல்லாம் முதல் ஞானியாகவும் இருக்கும் இறைவனே கால பைரவன்.
அகோரிகள் தங்களையே இறைவனாக வணங்குபவர்கள். ஆனாலும் அவர்கள் தங்களை காலபைரவனாகவே வணங்குகிறார்கள். காலத்தை கடந்து நிற்பவர்களும், ஞானத்தை உணர்ந்து இருப்பவர்களும் கால பைரவர்கள் தான்.

நாய் காலபைரவரின் வாகனம் என்பார்கள். என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் தன்மை நாயாக உருவகப்படுத்தபடுகிறது. ஆடையில்லாமல் இருப்பதே கால பைரவரின் தன்மை என்றாலும் சில கோவில்களில் கருப்பு ஆடை அணிவிக்கிறார்கள்.

கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது. இந்த கருத்தை நினைவில் கொள்ளுங்கள் பின்னால் இதற்கு வேலை இருக்கிறது.

கால பைரவரின் தன்மை அறியாமையை ஒழித்து ஞானத்தை வணங்குவதாகும். ஆணவம் மற்றும் மாயை என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு தகுந்த நிலையில் உணர்வுகொள்ள செய்து ஞானத்தை வழங்குவார். ஆனால் காலபைரவரிடம் சாத்வீகமான அனுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. அவரின் ஒவ்வொரு செயலும் அதிரடியாகவே இருக்கும்.

ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி சொல்லுகிறார் என கொள்வோம். அந்த செய்தியை அனைவரும் கூடி கேட்பார்களா என கூற முடியாது. இதே ஒருவர் சில சாகசங்களை மக்கள் முன் செய்து அதிரடியாக ஒரு செய்தியை கூறினால் பாமர மக்களுக்கு அந்த செய்தி சென்று அடையும். கால பைரவர் ஞானம் வழங்கும் நிலை இந்த இரண்டாம் வகையை சார்ந்தது.

அகோரிகளின் ஆதி குரு காலபைரவர். அகோரிகள் தங்களை காலபைரவ ரூபமாகவே நினைக்கிறார்கள். அதனால் அகோரிகளின் சில செயல்பாடுகள் மக்களின் அறியாமையை அதிரடியாக சுட்டிகாட்டுவது போல இருக்கும். சிலர் அதில் அருவருப்படைவார்கள் சிலர் அகோரிகளை விட்டு ஓடிவிடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் நான் காசி பயணத்தில் கண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அருவெறுப்பு அடையக்கூடியவர்கள் அடுத்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது.

கங்கை கரையில் நான் அமர்ந்திருக்கும் பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு அகோரி அமர்ந்திருந்தார். வெளி ஊரிலிருந்து வரும் சிலர் அகோரியை கடந்து செல்லும் பொழுது வணங்கிவிட்டு சென்றார்கள். அவரும் அதை தவிர்த்து வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டார். ஆனாலும் மக்கள் விடுவதாக இல்லை. சிலர் அவரை வணங்குவதை பார்த்த மேலும் சிலர் அந்த அகோரியை வணங்க துவங்கினார்கள். ஆனால் அனைவர் முன்னிலையில் யாரும் சற்று எதிர்பாராத சூழலில் அருகில் இருந்த மலத்தின் ஒருபகுதியை கைகளில் எடுத்து சுவையாக உண்ணத் துவங்கினார் அந்த அகோரி. அவ்வளவுதான் அங்கே ஒரு ஈ காக்கா இல்லை. வணங்கத்தக்க ஒருவர் மலம் தின்றுகொண்டிருந்தால் நம் மக்கள் புனிதராக பார்க்குமா? சொல்லி புரியவைப்பதில்லை அகோரிகள்...!

ஒளரங்கசீப் காலத்தில் செல்வம் கொள்ளை என்பதை தாண்டி மத திணிப்பு மற்றும் மதப்போர்கள் நடந்துகொண்டிருந்தது. காசியை இஸ்லாமிய புனித நகரமாக மாற்ற முயற்சி செய்துவந்தார் ஒளரங்கசீப். ஒருபுறம் கடினமான போர் தந்திரம் மற்றும் பிரம்மாண்டமான போர் படை என ஒளரங்கசீப் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை மற்றும் அவர்களின் குழப்பம் விளைவிக்கும் செய்கை ஆகியவற்றால் முகலாய சக்ரவர்த்தியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

காசியில் சந்துகளை கட்டி குழப்பம் விளைவித்தனர். சிலர் எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்களை அமைத்து அதை வணங்கினார்கள். இதனால் ஒளரங்கசீப் குழப்பம் அடைந்தார். முடிவில் சில சூழ்சிகளும் தந்திரங்களை செய்து விஸ்வநாதர் கோவிலை கண்டுபிடித்து முற்றிலும் சிதைத்தார். அங்கே இந்த சுயம்பு சிவலிங்கத்தை சுக்குநூறாக்கினார்.

விஸ்வநாதர் கோவில் சிதைக்கவருகிறார்கள் என்றும் கைமீறி போகிறது என்பதையும் தெரிந்துகொண்ட சிலர் சுயம்பு லிங்கத்தை எடுத்து கோவிலுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் வீசிவிட்டார்கள். சுயம்பு லிங்கம் இருந்த இடத்தில் வேறு ஒரு பாணலிங்கம் வைக்கப்பட்டது.

ஒளரங்கசீப் சிதைத்தது சுயம்புலிங்கத்தை அல்ல..!

சிதைத்தது மட்டுமல்லாமல் விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் பெரிய மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்தினார் ஒளரங்கசீப். இன்று விஸ்வநாதர் கோவில் என மக்கள் வழிபடும் இடம் முன்பு விஸ்வநாதர் கோவில் இருந்த இடம் அல்ல. முன்பு மூலஸ்தானத்தை பார்த்து இருந்த நந்தி இப்பொழுது மசூதியை பார்த்து நிற்கிறது.


ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட படம்.விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதி. புகைப்படத்தின் வலது கோடியில் சிதிலம் அடைந்த கோவில் கோபுரம் தெரியும்.
தற்சமயம் இருக்கும் காசி விஸ்வநாதர் தங்க கோபுரம். பின்புறம் மசூதி.

நந்திக்கு அருகில் இருக்கும் கிணற்றில்தான்
இன்றும் விஸ்வநாதர் இருக்கிறார். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை பல முறை சிதைத்து மறுபடியும் மறுபடியும் கட்டபட்டது விஸ்வநாதர் கோவில். முகலாய பேரரசு வீழ்ந்ததும் தற்சமயம் இருக்கும் விஸ்வநாதர் கோவில் வடிவம் பெற்றது. இன்றும் அந்த கேணிக்கும், மசூதிக்கும் துணை ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அரசியலில் இன்றளவுக்கு சிவன் முக்கிய துருப்பு சீட்டு இல்லை. இருந்தால் ராம ஜென்ம பூமி என்பதற்கு பதில் நம் ஆட்கள் சிவ ரவுத்திர பூமி என கூவ துவங்கி இருப்பார்கள்.

ஞானகேணி பழைய படம்.கேணியின் வலது பக்கம் மசூதி,
இடது பக்கம் கோவில் என இரண்டுக்கும் மையத்தில் அமைந்துள்ளது.


விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் கேணியை ஞானக்கேணி என கூறுகிறார்கள். இதில் இருக்கும் நீர் தீர்த்தமாக குடித்தால் ஞானம்
கிடைக்கும் அறிவு பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விஸ்வநாதர் கோவிலை பூஜிப்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் பாண்டாக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வரும் மக்களிடம் பணம் பறிப்பது, மேலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வது போன்ற துவேஷங்களை செய்து வந்தனர்.

கங்கையில் குளித்துவிட்டு சிறிது நீரை எடுத்து வந்து விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது
பக்தர்களின் வழக்கமாக இருந்தது. அதற்கு மிகப்பெரிய வரிசையாகவும், நீர் அபிஷேகம் செய்வதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை என்றும் மக்கள் நம்பத்துவங்கினார்கள். இவ்வாறு அறியாமை பெறுக விஸ்வநாதர் கோவிலை பூஜை செய்துவந்தவர்களும் காரணமாக இருந்தார்கள்.

மக்களின் அறியாமையை அதிரடியாக போக்கும் தன்மை கொண்டவர்கள்தான் அகோரிகள் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு வேளை வந்தது. ஞான கேணியில் இருக்கும் விஸ்வநாதரை கண்டுகொள்ளாமல் மக்கள் தங்கள் விஸ்வநாதரை பூஜிக்கிறோம் என்ற அகந்தை மற்றும் அறியாமையில் இருப்பதை கண்ட அந்த அகோரி கூட்டமாக இருந்த விஸ்வந்தாரர் கோவிலுக்குள் சென்று அந்த காரியத்தை செய்தார்.

அனைவர் முன்னிலையிலும் திடீரென சிறுநீரை நேராக சிவலிங்கத்தின் மேல் செலுத்தினார். அனைவரும் அறுவெறுப்படைந்து வெளியேரினார்கள். தனது கையில் இருக்கும் சங்கை எடுத்து மிகவும் சப்தமாக ஒலி எழுப்பி பிறகு கூறினார்....

உங்களுக்குள் இருக்கும் விஸ்வநாதரை வணங்கு....
உன் ஞானம் என்ற கங்கையால் அபிஷேகம் செய்..

இவ்வாறு கூறிவிட்டு ஒடி மறைந்தார் அந்த அகோரி. அனைவரும் உணரத்துவங்கினார்கள்.

இன்று மக்கள் வணங்கும் விஸ்வநாதர்.

அகோரிகளின் குழுவை அகடா என கூறுவார்கள். அகோரிகளின் இந்த குழுவை தவிர அகோரிகளின் ஆற்றல் பெற்றவர்கள் பலர்
இருக்கிறார்கள். அகோரிகள் தங்களின் ஆற்றலை பிறருக்குள் செலுத்தி அவர்களை கருவியாக்கி சமூகத்தை தூய்மையாக்குவார்கள்.

காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்...! கருப்பு என்பது சமூகத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல காலபைரவரின் நிறம் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காசி நகரமே காலபைரவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காசி நகருக்கு சென்று திரும்பும் எவரும் ஏதோ ஒருவிதத்தில் தங்களுக்குள் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்வார்கள்.

அகோரிகளின் அதிரடிக்கு மேலே சில உதாரணங்கள் கூறினேன். இதைவிட ஆதிசங்கரருக்கே ஒரு அகோரி ஆப்பு வைத்தார். வாருங்கள் கங்கையின் சலனத்தை ரசித்தவாறே அந்த சம்பவத்தை கூறுகிறேன்...கேளுங்கள்..

(...சுவாசிப்பேன்)

சிரிப்பு டிஸ்கி: விஸ்வநாதர் கோவில் கிணற்றின் பெயரை ஜம்புள் செய்தால் என்னை பிறர் செல்லமாக கூப்பிடும் பெயர் இருக்கும் :)

[படங்கள் உதவி : விக்கிபிடியா]

Tuesday, December 29, 2009

தினம் தினம் திருமந்திரம் - புத்தகம் ஓர் அறிமுகம்

திருமந்திரம் என பலராலும் அழைக்கப்படும் சதாசிவ மந்திரம் என்ற நூலுக்கு எளிய விளக்கம் அளித்துள்ளேன். சதாசிவ மந்திரம் என்பது ஆன்மீகத்தின் உயர் நிலையில் எழுதப்படாமல் ஆன்மீக உச்ச நிலையில் எழுத்தப்பட்டது. இந்த நூலுக்கு பல நூற்றாண்டுகளாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை சைவ சிந்தாந்தம் அல்லது இந்து சமயம் என்ற வட்டத்தின் உள்ளேயே அமைந்திருந்தது.

ஒரு வரையறையில் அடைக்கப்படாமல் தினம் தினம்
திருமந்திரம் ஒரு வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது. ஆன்மீக கண்ணோட்டம் கொண்டு ஒவ்வொரு மந்திரங்களும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் தேவையான விளக்கங்கள் இதில் இருக்கிறது. ஜாதி,மத மற்றும் இனம் கடந்த நிலையில் திருமந்திரம் விளக்கபட்டிருப்பது இந்த நூலில் மட்டுமே என கூறலாம்.

3088 திருமந்திரங்கள் இருப்பதாக கூறினாலும் திருமூலர் காலத்திற்கு பிறகு பல மாற்றங்கள் அதில் செய்யப்பட்டன. திருமூலரின் திருமந்திரத்தில் 3000 திருமந்திரங்களையும் படிக்க வேண்டிய சூழலில் நாம் இல்லை. அதனால் 3000 திருமந்திரத்தில் இருந்து 366 திருமந்திரம் மட்டும் தேர்வு செய்து விளக்கி உள்ளேன். இதனால் தேதி வாரியாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு திருமந்திரம் என அமைப்பில் வடிவமைக்கபட்டுள்ளது.

3000 திருமந்திரங்களை படிக்க இந்த 366 மந்திரங்கள் தூண்டுகோலாக அமையும் என கூறலாம். திருமந்திரத்தில் யோகம் செய்யும் முறை, சித்துக்கள் அடையும் தன்மை, சமாதி செய்யும் முறை, சன்யாசம் என பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இவை சம்சார வாழ்க்கைக்குள் இருப்பவர்களுக்கு தேவையில்லை. தினம் தினம் திருமந்திர புத்தகத்தில் இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உதவும் நிலையில் திருமந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கி பயன்பெறுவது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறைந்த எண்ணிக்கையில் முதல் பதிப்பு அமைகிறது என்பதால் சில நூறு பிரதிகளே வெளி விற்பனைக்கு இருக்கிறது.


இந்த புத்தகத்தை அச்சுடும் பணியை நம் சக பதிவர் திரு வடகரை வேலன் அவர்கள் செய்கிறார். அவருக்கு என் நன்றிகள்.

வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி ஒன்றாம் தேதி “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு நிகழ்சிகள் துவங்கும்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முகவரி :

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை
பொன்னுரங்கம் சாலை கிழக்கு,
ஆர் எஸ் புரம், கோவை.

தொலைபேசி :99 44 2 333 55

கோவையை சேர்ந்த பதிவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யவில்லை. அதற்கான விளக்கம் விரைவில் கிடைக்கும்.

Friday, December 25, 2009

காசி சுவாசி - பகுதி 2

யஸ்யாமிதம் கல்பிதமிந்த்ரஜாலம்
சராசரம் பாதி மனோ விலாஸம் மி
ஸச்சித்ஸுகைகா பரமாத்மாரூபா
ஸா காசிதாஹம் நிஜபோதரூபா மிமி

இந்திர ஜாலம் போல இந்த உலகமானது நம் மனதில் மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. இவை அனைத்தும் மனம் போன போக்கில் தோற்றுவிக்கபட்டது. பரமாத்மாவின் சத்- சித்- ஆனந்த ரூபமே காசி நகரம். ஆகவே நான் காசியாக இருக்கிறேன்...!

-ஆதிசங்கரர்.

----------------------------------------------

உலகின் புகழ் பெற்ற நகரங்களில் தொன்மையானது என காசியை கூறலாம். காசி என்பது எந்த மதத்திற்கும் சார்ந்த நகரம் அல்ல. இந்த செய்தி உங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருக்கலாம்.

இந்துக்கள்,ஜைனர்கள்,சமணர்கள்,முகமதியர்கள், சீக்கியர்கள் என ஆசிய கண்டத்தின் அனைத்து மதத்தினருக்கும் ஒருவித இறைவழிபாடு செய்யும் முக்கிய நகரமாக வாரணாசி விளங்குகிறது.

இந்துக்களின் திருமணத்தில் காசி யாத்திரை என்ற ஒரு நிகழ்வு உண்டு. அதாவது ஒருவர் தனது வாழ்க்கையை துறந்து சன்யாசம் பெற்றுக்கொள்ளும் செயலை குறியீடாக சொல்லுவது காசியாத்திரை. பிறகு மணமகனின் மனதை மாற்றி திருமணம் செய்வது போல இந்த நிகழ்வை செய்வார்கள். முன்காலத்தில் உணர்வு பூர்வமாக இருக்கும் ஒரு நிகழ்வு, தற்பொழுது உணர்வற்று வெறும் சடங்காக இருக்கிறது. நம் கோவிலில் முன்பு பக்தியுடன் செய்யும் பூஜைகள் நாளடைவில் இவ்வாறு சடங்காக மாற்றம் கொள்வது உண்டு.

காசி யாத்திரை என்ற இந்த சடங்கை திருமணத்திலிருந்து தப்பிக்க மண மகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு என வேடிக்கையாக சொல்லுவார்கள்.

வாரணாசியின் நகர வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. நகரம் முழுவதுமே ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கும் சிறுவர்களுக்கான வலைவிளையாட்டு போன்று பல சந்துகள் கொண்டது. சாலைகள் என்பதே கிடையாது. அனைத்தும் சந்துகள் தான். உங்கள் இரு கைகளையும் அகல விரித்துக்கொண்டு நடுவில் நின்றீர்கள் என்றால் உங்கள் உள்ளங்கையில் சலையின் இரு புறமும் தட்டுப்படும். அவ்வளவு குறுகிய சந்துகள். ஒருவிதத்தில் வாரணாசியின் அமைப்பில் சுவாரசியம் கூட்டுவது இந்த சந்துகள் தான்.

ஒரு தூய்மையான காசி தெரு

பழம்பெரும் நகரம் எல்லாம் நாளடைவில் கட்டிட ஆக்கிரமிப்புகளால் குறுகும் என நாம் அறிவோம். ஆனால் காசிநகரம் இதிலும் வித்தியாசமானது. ஆக்கிரமிப்பு இருக்க கூடாது என்பதற்காக இங்கே கட்டிடங்கள் கட்டபட்டது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் காசி குறுகிய சந்துகளால் ஆனது அல்ல.

ஆப்கான் தேசத்தவர்களின் படையெடுப்பால் இந்தியாவில் பல நகரங்கள் கொள்ளையடிக்கபட்டது. அதில் குஜராத்தில் உள்ள சோமநாத் கோவிலும், காசியில் உள்ள விஸ்வநாத் கோவிலும் முக்கியமானது. இவ்வாறு தொடர் கொள்ளையால் கோவில்கள் சிதைக்கபட்டு, அதில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயின. சில முட்டாள் ஆப்கான் அரசர்கள் இஸ்லாமியத்தை கடைபிடிக்கிறேன் என பல கோவில்களில் இருக்கும் மூர்த்தங்களை மூர்க்கமாக சிதைத்தார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன் இந்தியாவின் ஜோதிர்லிங்க கோவில்கள் மிகவும் சிறப்பன செல்வ நிலையில் இருந்தன. இதனால் கோவிலை அழித்த மாதிரியும் ஆயிற்று செல்வம் கிடைத்த மாதிரியும் ஆயிற்று என அத்துமீறல்களை செய்தார்கள்.

காசி என்ற நகரில் விஸ்வநாதர் கோவில் ஜோதிர் லிங்கத்தில் ஒன்று மற்றும் முதன்மையானது. அதனால் அதில் செல்வத்தின் அளவு அதிகமாகவும், மக்கள் வணங்குவது அதிகமாகவும் இருந்தது. இதனால் அங்கே கொள்ளையடிக்க வந்த ஒளரங்க சீப் போன்றவர்கள் முதலில் சிதைக்க நினைத்தது விஸ்வநாதர் கோவிலையும் அதன் உள் இருக்கும் விஸ்வநாதரின் லிங்கத்தையும் தான்.
சுகந்திரமான சன்யாசியும், சட்டத்தில் அடைக்கபட்ட சம்சாரியும்
என்ற தலைப்பில் ஒரு உலகப்புகழ் புகைப்பட கலைஞர் எடுத்த படம். :))


முகமதிய அரசர்களின் படை நெருங்கக் கூடாது என்பதற்கும் எளிதில் அடையாளம் கண்டறியக்கூடாது என்பதற்கும் பல சந்துகள் மற்றும் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து விஸ்வநாதர் இருக்கும் இடத்தை மறைத்தார்கள். காசியின் முக்கியவீதியில் இருந்து எந்த பக்கம்

திரும்பினாலும் சந்துகளாகவே இருக்கும். அனைத்தும் ஒன்று போலவே இருக்கும். மக்கள் தங்கள் கோவிலை காப்பாற்ற செய்த இந்த முயற்சிகள் சில காலம் கைகொடுத்தது. முக்கிய வீதியிலிருந்து கோவில் இருக்கும் இடம் வரை இரண்டு கிமீ தூரம் சந்துகள்தான். சிறிய கார் கூட செல்ல முடியாது. சரக்கு எடுத்து செல்லும் மூன்று சக்கர சைக்கிள் சென்றாலே எதிரில் வருபவர்கள் நடக்க முடியாது.

எனக்கு பிடித்த சந்துகளில் இதுவும் ஒன்று

காசியில் இந்த நகர கட்டமைப்பு உலகின் எந்த பகுதியிலும் இல்லை என்பது சிறப்பு. இந்த வீதிகளில் நடந்தால் இதற்கு முன் எப்பொழுதோ இங்கே வந்தது போன்ற உணர்வு இருக்கும். புதிய இடமாக இருக்காது. இந்த திருப்பத்தில் வலது பக்கம் திரும்பினால் இன்ன இடம் என்பது போல எல்லாம் பழகிய இடமாக இருக்கும். சந்துகள் எல்லாம் வளைவுகளாக இருந்தாலும் இந்த வலையினுள் தான் விஸ்வநாதரும் இருக்கிறார்.

இப்படி மக்கள் பிறரிடம் இருந்து பாதுகாத்து வைத்து புனிதமாக வணங்கி வந்த விஸ்வநாதருக்கு வந்தது ஒரு சங்கடம். ஆறுகால பூஜை நடந்து வந்த லிங்க திருமேனியின் மேல் ஒரு அகோரி என்ன செய்தார் தெரியுமா?

நின்ற வாக்கில் சிறுநீறு கழித்தார்...!

அவரை திட்டிக்கொண்டிருங்கள்..... மீண்டும்....

(சுவாசிப்பேன்...)

Wednesday, December 23, 2009

காசி சுவாசி - பகுதி 1

காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்.

நாம் பயணம் செய்யப்போவது இரண்டாம் நகரமான ஆன்மீக நகரம். கங்கை நதியின் பயணத்திற்கு ஏற்ப கரையில் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 350க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. இவற்றை காஹட் (Ghat) என அழைக்கிறார்கள். ஒவ்வொரு காஹட்க்கும் ஒரு பின்புலமும் காரணமும் இருக்கிறது. படித்துறைகளை மூன்று வகையாக பிரித்திவிடலாம். அரசர்கள் கட்டிய படித்துறை, ஆன்மீக மடங்கள் கட்டிய படித்துறை மற்றும் பொதுமக்களுக்கான படித்துறை என வகைப்படுத்தலாம். இதில் ஆன்மீக மடங்களின் படித்துறை பொதுமக்களின் படித்துறையாகவே பயன்படுத்தபடுகிறது.

விஷேஷ காலத்தில் மட்டும் ஆன்மீக மடாதிபதிகள் அவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசர்களின் படித்துறை என்பது அரசர் மட்டுமே பயன்படுத்தும் அமைப்பாக இருந்துவந்தது. தற்காலத்தில் அரசர்கள் மற்றும் முடியாட்சி இல்லாத காரணமாக இவை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
காசியில் அதிகாலை தியானம் முடிந்ததும் நான் கண்ட காட்சி.

குடும்பமோ வேறு நபர்களோ அதிகமாக படித்துறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அரசர்களின் படித்துறை என்றவுடன் ஒன்று தான் என நினைத்துவிடக்கூடாது. பாரத தேசத்தின் பல அரசர்கள் இங்கே தங்களுக்கு என பிரத்யோகமான படித்துறையை கலைநயத்துடன் கட்டியிருக்கிறார்கள். அதில் அவர்கள் மட்டும் ஏகாந்தமாக கங்கையை ரசிக்கவும், ஆராதிக்கவும் ஏகப்பட்ட விஷயங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.

பல அரசர்களுக்கு படித்துறை கட்டும் அளவுக்கு காசி நகரம் பொதுவான ஊராக இருந்தது. இவற்றை புரிந்துகொள்ள வரலாற்று பாடத்தின் சில பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். காசி என்பது நகரம் என்பதை காட்டிலும் அது ஒரு நாடு என கூறலாம். பாரத தேசம் பல சிற்றரசர்களால் சிதறுண்டு ஆளும் காலத்தில் காசி நகரம் ஒரு அரசின் கீழ் இருந்தது.

காசி மற்றும் அதன் சுற்றுபுற நகரங்கள் இணைந்து காசி சமஸ்தானமாக இருந்தது. காசி சமாஸ்தானம் பிற அரசுகளை விட ஒரு தனித்துவமாக இருந்தது. காசி சமஸ்தானத்தில் ராணுவம் மற்றும் போர்படை என்பது இல்லை. காசி ராஜா காசியை நிர்வாகிக்கும் தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தார். காசி மேல் யாரும் போர் தொடுக்கவோ, காசி அரசர் பிறர் மேல் போர் தொடுக்கவோ மாட்டார். தற்காலத்தில் கூட உலகில் ஒரு நாடு அப்படி இருக்கிறது. அது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

காசியில் பல கல்விச்சாலைகள் இருந்ததால் பாரத தேசத்தில் பல நாட்டு அரசர்களும், அறிஞர்களும் அங்கே வந்து பாடம் பயின்றனர். அதனால் காசி மாநகரம் கல்விக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. ஐநூறு வருடத்திற்கு முன் தமிழகத்தில் ஒருவர் காசி சென்று படித்தவன் என கூறினால் அவருக்கு கிடைக்கும் மதிப்பு அளவிட முடியாதது. காசி ராஜா அங்கே இருக்கும் பல்கலைகழகத்தின் சிறந்த கல்வியாளராக தேர்ச்சி பெற்று சமஸ்தானத்தில் அறிஞர்களுடன் அலங்கரிப்பவராக இருப்பார்.

பாரத தேசத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் ஆறிவை நிரூபணம் செய்யவும், ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்கும் காசிக்கு செல்லுவார்கள். அங்கே அறிஞர்கள் குழு ஒன்று (Senate members) ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும். சான்றிதழ்கள் செப்பு தகட்டில் அமைந்திருக்கும். சில அறிஞர்கள் தனது செப்பு பட்டையத்தை சுமந்து வர பல அடிமைகளையும், குதிரைகளையும் வைத்திருந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை பிரம்மாண்டமானது. காசி அரசர்களுக்கு பல கலைகள் தெரியும் என்றும் அதில் பல அறிவிப்பூர்வமான காரியங்கள் செய்தார்கள் என நாடோடிக்கதைகள் உண்டு.

காசியில் உள்ள படித்துறைகளில் பல நாட்டு ராஜக்களுக்கு சிறிய அரண்மணைகளை கட்டுவதற்கு அனுமதித்து, இரு விரோத நாட்டு ராஜாக்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் சச்சரவு இல்லாமல் அமைதியை நிலைநாட்டுவது காசி ராஜாவின் முக்கிய பணியாக இருந்தது.

படித்துறையில் ராஜாக்களுக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாதாரணமானது அல்ல. ஒவ்வொன்றும் குட்டி அரண்மனை. சில அரண்மனைகளில் இருந்து பார்த்தால் கங்கை நதியும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக் தெரிவார்கள். ஆனால் கரையில் இருந்து பார்த்தால் அரண்மனையில் இருப்பவர்களை பார்க்க முடியாது. இது போன்ற கலை நயம் பல அதில் உள்ளன. ராஜாஸ்தான் அரசர் ராஜா ரஞ்சித் சிங் , தனது நாட்டிலிருந்து ஊதா நிற சலவைக் கற்களை கொண்டு வந்து இங்கே அரண்மனை கட்டி இருக்கிறார். சத்ரபதி சிவாஜி இங்கே ஒரு அரண்மனை படித்துறை அமைத்திருக்கிறார். நேப்பாள் மஹாராஜாவும், சோழ அரசர்களும் இங்கே தங்கள் சந்ததியினர் வந்தால் தங்குவதற்கு அரண்மனை கட்டியிருக்கிறார்கள்.

காசி நகரம் இவ்வளவு தொன்மையான ஊராகவும், பல நாட்டு அரசர்கள் விரும்பும் ஊராகவும் இருந்தது.

நிற்க... எதற்கு இந்த விக்கிப்பிடியா விளக்கம் என்கிறீர்களா?


பாரத தேசத்தில் இருக்கும் அரசர்கள் மக்கள் விரும்பும் படி காசியில் என்ன இருக்கிருக்கிறது ? அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவற்றை பட்டியலிடுகிறேன்

1) பல்லி சப்தம் எழுப்பாது. : - காசியில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.

2) பிணம் நாற்றம் எடுக்காது : பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா? பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள். ஆனால் இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.

3) கருடன் வட்டமிடாது - காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும், உணவுகள் சிதறிகிடந்தாலும் இறைக்காக கருடன் வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும் ஆனால் வட்டமிடாது.

4) பூ மணக்காது : இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். :) என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது. தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது, முக்கியமாக மல்லி முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும். தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும்.

பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது எனலாம். அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால்
காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அவை வாசங்கள் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் காசி பூக்கள் மணப்பதில்லை.

5) பால் வற்றாது : இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் கட்டப்படுவதில்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை. பசுக்கள் கங்கையின் உருவில் உலாவருவதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு. கங்கை இந்த நகரத்தில் என்றும் __________________ அதனால் பசுக்களின் பாலும் வற்றாது என்கிறார்கள்.

அது என்ன வாக்கியம் விடுபட்ட இருக்கிறது என்கிறீர்களா? கங்கை ________ என கூறினால் பல கோடிவருடம் தினமும் ஆயிரம் பசுக்களை கொன்ற பாவம் கிடைக்குமாம். நான் என்றைக்காவது கங்கை ________ உண்டா என கேட்க தனது துடுப்பை எடுத்து என்னை தாக்க வந்தான் ஒரு படகு ஓட்டி. எனக்கு ஏற்கனவே பாவம் கிடைத்தது. அதை கங்கையில் குளித்து சரி செய்துவிட்டேன் :).

படகோட்டி கூறிய அதிசங்களைதான் நான் இங்கே கூறி இருக்கிறேன். இதில் ஐந்தையும் ஆராய்ந்து உண்மை என உணர்ந்து இங்கே பட்டியலிடுகிறேன். பலவருடங்கலாக இன்றும் இயற்கையாகவே ஐந்து விஷயங்கள் நடக்கிறது. காசியில் மட்டும் என்ன இப்படி நடக்கிறது என உங்களால் காரணத்தை யூகிக்க முடியுமா? கொஞ்சம் யோசியுங்கள். அதற்குள் நான் கங்கை கரையின் படித்துறையில் உலா சென்று வருகிறேன்.

(சுவாசிப்பேன்..)

புத்தக வெளியீடு

அன்புள்ள வேதத்தின் கண்மணிகளுக்கு,

திருமூலரின் திருமந்திரத்தின் முக்கிய மந்திரங்களை விளக்கத்துடன் தொகுத்துள்ளேன். “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வரும் ஆங்கில வருடம் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கபடுகிறது.

பதிவர்கள், இணைய வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

Monday, December 21, 2009

காசி சுவாசி - ஆன்மீக தொடர்


லகில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. நாகரீகத்தின் அடையாளமாக விளங்கும் இடத்தை நகரம் என அழைக்கிறோம். வரலாற்றை திரும்பி பார்த்தால் எங்கே நீர் நிலை இருக்கிறதோ அங்கே நாகரீகம் தோன்றி இருக்கிறது என கூற முடியும். நீர் நிலைகள் என்பதிலும் முக்கியமாக ஆறுகள் நாகரீகத்தின் தொட்டிலாக இருந்திருக்கிறது.

உலகின் எந்த கண்டங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆறுகளும் ஆறுகளை சார்ந்த இடமும் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. உலகின் பிற நில அமைப்புகளை காட்டிலும் இந்தியா ஒரு விஷேஷ தன்மையை கொண்டதாக இருக்கிறது. இதில் நாகரீகத்தை வளர்க்கும் நதிகள் பல இருக்கிறது.

தென் முனையில் சோழர்களை வளர்த்த காவிரி போன்று வடக்கில் கங்கை தனக்கென ஒரு பெரும் இடத்தை ஆக்கரமித்துள்ளது. கங்கை ஆற்றின் கரையில் எத்தனையோ நாகரீகங்கள் தோன்றினாலும் ஒரு நகரம் மட்டும் தனித்துவத்துடன் உலக புகழுடனும் விளங்குகிறது என்றால் அது காசி மாநகரம் மட்டும் என கூறலாம்.

வடமாநிலங்களில் சென்று காசி என்றால் பலருக்கு தெரியாது. வாரணாசி என்றாலே அந்த நகரை அடையாளம் காண்பார்கள். வாரண் மற்றும் அஸ்ஸி என்ற இரு கிளை நதிகளுக்கு இடையே அமைந்த நகரம் என்பதால் வாரணாசி என பெயர் பெற்றது.


ருத்திர பூமி, காலபைரவ புரி, பூலோக மயானம், கங்கா ஸ்தலம் என எத்தனை பெயர்கள் இந்த நகரத்திற்கு இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித சுவடுகள் கொண்ட நகரம்.அதனால் பழமையானது என்ற பெயரில் பனாரஸ் என்றும் அழைக்கிறார்கள். முன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் பாடசாலைகளும் ,ஆன்மீக மடாலயங்களின் தலைமை பீடங்கள் கொண்ட நகரமாக இருந்தது.


வாரணாசியை விவரிக்க வேண்டுமானால்...

குறுகலான சந்துகள், காசி மக்களின் அன்பு, திரும்பிய பக்கமேல்லாம் பசுக்கள், கண்களை மூடியபடி அமர்ந்திருக்கும் சாமியார்கள், அழுக்கு படர்ந்த கட்டிடங்கள், தன் நிறத்தை இழந்த கோட்டைகள், தன் இடையை வளைத்து செல்லும் கங்கை, எப்பொழுதும் எறிந்து கொண்டிருக்கும் மனித உடல்கள் என பல காட்சிகளை கண்முன்னே விரிக்கும் மஹாநகரம்.

காசி விஸ்வநாதர், அன்ன பூரணி, காசி விஷாலாக்‌ஷி என பல இறைசக்திகள் இங்கே இருக்கிறது. கால பைரவருக்கு இது தலை நகரம்.

உணவு சத்திரங்கள், தங்குவதற்கான இடங்கள், ஆன்மீக மடாலயங்கள், இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் படித்துறைகள், மிகவும் தித்திப்பான பால் இனிப்புக்கள் ஆகியவை காணப்படும் நகரம்.


மேற்கண்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு ஐயாயிரம் ரூபாய் செலவழித்தால் போதுமானது. சுற்றுலா கொண்டு செல்லும் டிராவல்ஸ்காரர்கள் இரண்டு மினரல்வாட்டர் பாட்டிலுடன் காசியை சுற்றிக் காண்பித்துவிடுவார்கள்.

இதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்?

இங்கே நனும் நீங்களும் பேசப்போவது வாரணாசியின் இன்னொரு பரிமாணத்தை...!

வாரணாசி என்ற நகரை ஒரு சாக்காக கொண்டு சில உண்மைகளை உங்களிடம், உங்களுக்கு தெரியாமலேயே உள் புகுத்துவதே இந்த தொடரின் நோக்கம்..!

(சுவாசிப்பேன்...)



பின் குறிப்பு : மார்கழி என்ற தேவர்களின் மாதத்தில், சோமவாரம் என்ற சந்திரன் திகழும் திங்கள் கிழமையில் இறைவனின் இருப்பிடமான வாரணாசி பற்றிய தொடரை உங்களுக்காக துவங்குகிறேன்.நன்றி.


Friday, December 18, 2009

கோவியார் பவன் - உயர்தர சைவ உணவகம்..!



சிங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக நாடுகளால் விமர்சிக்கபட்ட கோவியார் பவனின் வாரம் முழுவதும் கிடைக்கும் உணவுகளின் பட்டியல் கீழே.

திங்கள் கிழமை: வர்ணப் பக்கோடா

நாலு வர்ணங்களில் கலர் கலராய் பக்கோடா கிடைக்கும். இதில் நெய்யும் முந்திரியும் சேர்த்து செய்யப்பட்ட முந்திரி பக்கோடா மட்டும் அதிகமாக வறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.

செவ்வாய் கிழமை: ஜாதிக்காய் பிரியாணி

காய்களில் இருக்கும் ஜாதியை சுட்டிக்காட்டும்படி செய்யபட்ட பிரியாணி. வாரம் ஒருமுறை இதில் இருக்கும் காய்கறிகள் மாறுமே தவிர ஜாதிக்காய் போடாமல் பிரியாணி செய்ப்பட மாட்டாது.

புதன் கிழமை: மத்திய கிழக்கு பொடிமாஸ்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விரும்பு சாப்பிடும் உணவுகள் இங்கே செய்து தரப்படும். அதில் நீங்கள் குற்றம் குறை கூறினால் , சமையல் புத்தகத்திலிருந்து அந்த பகுதி சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்படும்.

வியாழக்கிழமை: தினமலர் கிச்சடி

தினமும் பூக்கும் மலர்களை கொண்டு செய்யபட்ட கிச்சடி. மலரின் ஓரம் மடங்கி இருக்கிறது, அதில் இருக்கும் நிறம் சரியல்ல என சுட்டிகாட்டி உங்களுக்கு கிச்சடி பரிமாறுவார்கள்.

வெள்ளிக்கிழமை : எதிர் வினை பரோட்டா மற்றும் சுய வினை பாயா

அடுத்த ஹோட்டலில் இருக்கும் உணவுப்பொருள்களை கேவலப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட பரோட்டாக்கள். அவற்றை இங்கே வரவழைத்து உங்கள் முன்னால் கொத்து பரோட்டா போடப்படும். அனத்தும் சாப்பிட்டப் பிறகு சுய வினையின் காரணமாக ஏற்படும் அஜீரணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை. வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் அரசியல் சூப் மற்றும் பெரிய புராணம் வடகறி செய்து தரப்படும். மேற்கண்ட உணவுகள் தயார் செய்யாத சூழலில் பிற ஹோட்டல்களில் பிராய்ந்து கொண்டு வந்த 'கலவை' சோறு கிடைக்கும்.

ஆயிரம் முறை உணவு அளித்த உலக சாதனை உணவகத்தில் நீங்களும் உணவருந்த வேண்டும் என துடிக்கிறீர்களா? எல்லாம் காலக் கொடுமையை காண :) இங்கே செல்லவும்.
-----------------------------------------------------------------------------------
இன்று பிறந்த நாள் காணும் திரு கோவி.கண்ணனுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.
இந்த இடுக்கையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். இனி வரும் காலத்தில் அவர் மேற்கண்ட பட்டியலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Thursday, December 17, 2009

யோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா ?

ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் நான் வினை ஆற்றுவதில் கவனமாக இருப்பேன். கர்மாக்களை களைந்து இறை நிலையில் இருக்க முயற்சி செய்வது ஆன்மீக வாழ்க்கையின் ஒரு அங்கம். வினையற்று இருப்பதுவே தியானமும் சமாதியும் என என் ரகசிய எதிரி திருமூலரின் கருத்து.

அப்படி இருந்தாலும் இந்த தலைப்பில் எதிர்வினையாற்றலாமா என யோசித்தேன். என் சுய நலத்திற்காக ஒரு வினையோ, பிறருக்கு செய்வினையோ வைத்தால் தானே தப்பு :) . ஒரு சிந்தாந்தத்தை பற்றி மக்களுக்கு குழப்பம் வரும் பொழுது, அக்குழப்பத்தின் பதில் என்னிடம் இருந்தும் குழப்பங்களை கண்டு சும்மா இருந்தால் அதுவே தீவினையாக மாறுமல்லவா? என்ன ரொம்ப குழப்பமா இருக்கா? மேற்கொண்டு படியுங்கள். :)

யோகம் என்பதும் தியானம் என்பதும் பலர் குழப்பிக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

அஷ்டாங்க யோகம் என்ற ஒரு முறை உண்டு. அது யாமம், நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு நிலைகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்ற பெயர் பெறுகிறது.


பதஞ்சலி என்பவர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை என்ற அழைப்படுகிறார். அதற்கு முன் பலர் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றினாலும் புத்தக வடிவில் அஷ்டாங்க யோகத்தை வடித்தவர் பதஞ்சலி. இவர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவரை பற்றி கூற பல விஷயங்கள் உண்டு. இருந்தாலும் இவர் கூறும் சில வார்த்தைகளை கொண்டு நம் கேள்விக்கு பதில் தேடுவோம். அவர் கூறும் சூத்திரங்களில் முதலில் எடுத்தவுடனேயே கூறுவது

“யோகா சித்த விருத்தி நிரோதனா”

இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

நம் மனநலத்தின் காரணமான சித்தம் மேம்படுகிறது. சித்தம் என்பது உணர்வதற்கு அரிய ஒரு உள் மன கட்டமைப்பு. பதஞ்சலி நம்முள் இருக்கும் மனம் என்ற உள்நிலையை மூன்று கட்டமைப்புகளாக பிரித்து பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஆய்வு செய்கிறார். அவை மனம், சித்தம், புத்தி என வகைப்படுத்துகிறார்.

பதஞ்சலியின் இந்த அலசல் அசாத்தியமானது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு மனிதன் மனோத்தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இப்படி அலசமுடியுமா என யோசித்ததால் எனக்கு பல நாள் தூக்கம் கேட்டது உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் இறைவன் என ஒருவன் இருக்கிறான் என ஒரே ஒரு இடத்தில் மறைமுகமாக கூறுவதுடன் நிறுத்திவிடுகிறார். வேறு எங்கும் இறைவனையோ வழிபாட்டு முறையை பற்றியோ கூறுவதில்லை.

நீ இருக்கிறாய் உனக்கு கூறுகிறேன் என்ற கட்டமைப்பில் அமைந்தது பதஞ்சலி யோக சூத்திரம். மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.மேலை நாடுகளில் தத்துவ பள்ளிகளிலும், பல பல்கலைகழகத்திலும் ஆய்வு நூலாக இருக்கிறது.

நம்
நாட்டில் பதஞ்சலி யோக சூத்திரம் என்பதை ஒரு படித்த மனிதனிடம் கேட்டால் பதஞ்சலியா? - பாஞ்சாலியின் தங்கச்சியா என கேட்கக் கூடும்.

நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமை அடையும் நோக்கத்தில் செய்யபடுவதே யோக முறைகள். யோக முறை என்பது முன்பு ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கே பயன்பட்டு வந்து.

யோக முறை இருவகையாக தற்காலத்தில் இருவகையாக பயன்படுகிறது. ஒன்று யோக பயிற்சி மற்றொன்று யோக சிகிச்சை.

யோக பயிற்சி என்பது ஆன்மீக பாதையில் நம்மை செலுத்த உதவும் கல்வி. முன்காலத்தில் குருவுடன் இருந்து பயணித்து கற்றதை ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கற்றுக்கொள்ளும் பாஸ்ட் புட் பயிற்சிகள்.

இதை தீவிரமாக முயற்சி செய்தால் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இத்தகைய
பயிற்சிகள் ஆன்மீக கிண்டர் கார்டன் என வேடிக்கையாக சொல்லலாம்.

யோக சிகிச்சை என்பது தனி நபரின் உடல் குறைபாடுகள், மனக்குறைபாடுகள் கண்டு அதற்கான பயிற்சியை அளிப்பது. எளிமையாக சொல்ல வேண்டுமானல் அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பது பலரும் யோக பயிற்சியையும், யோக சிகிச்சையையும் போட்டு குழப்பிகொள்கிறார்கள். யோக பயிற்சியால் நிச்சயமாக நோய் குணமாகாது. எதிர்காலத்தில் வரும் நோயை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் யோக சிகிச்சையால் குணமாக வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

யோக பயிற்சி மற்றும் யோக சிகிச்சை இரண்டுமே மிகவும் தேர்ச்சி பெற்ற நபர்களால் வழங்கப்பட வேண்டும்.

’தேர்ச்சி பெற்ற’ என்றவுடன் பல்கலைகழக பட்டயம் கேட்டாதீர்கள். பட்டயங்கள் எதுவும் யோகத்தில் வேலை செய்யாது. முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பானவர்கள் என கூற முடியாது அல்லவா? அது போன்றதே இது.

Yoga therapy research என இணையத்தில் தேடிப்பாருங்கள். பல கோடி மதிப்பில் உலகின் பல இடங்களில் ஆய்வுகள் நடந்துவருகிறது. இந்தியாவில் பூனாவிற்கு அருகில் கைவல்ய தாம் என்ற இடமும், முதல் யோக பல்கலைகழகமான பீஹார் ஸ்கூல் ஆப் யோகாவும் யோக சிகிச்சைக்கான தன் ஆய்வுக்கூடம் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

யோக சிகிச்சையில் எப்படி நோய் குணமாகும் என என்னிடம் கேட்காதீர்கள் அதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டி வரும்.

என்னிடம் யோக பயிற்சி செய்ய வருபவர்களிடம், நோய் குணமாக்குதல், சிகிச்சை என்பது நான் செய்வதில்லை என திட்டவட்டமாக கூறிவிடுவேன். யோக பயிற்சி பற்றிய விளம்பரங்களிலும் அத்தகைய சொற்கள் இடம்பெறாது. அதனால் தான் நான் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த துறையிலும் தவறானவர்கள் இருக்கவே செய்கிறார்கள். நான் வசிக்கும் ஊரில் கூட ஒரு யோக பயிற்சி கழகம் செய்யும் விளம்பரம் மிகவும் வருத்தத்தை கொடுக்கும். நாள் பட்ட ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் இந்த யோக பயிற்சியில் குணமாகும் என சுவரொட்டி அடித்து பயிற்சிக்கு அழைக்கிறார்கள்.

ஹரித்துவாரில் ஒரு ’யோக மன்னன் புலிகேசி’ இருக்கிறார். அவர் தனக்கு மீடியா வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக புற்று நோய் குணமாக்குவேன், எய்ட்ஸை குணமாக்குவேன் என பேட்டிகள் தருவார். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பார். யோக பயிற்சி அவ்வாறு வழங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அவரிடம் முகபொலிவுக்காக வாங்கிய ஆயுர்வேத களிம்பை பயன்படுத்தி பலர் பழைய டெலிப்போன் நிறத்தில் திரிகிறார்கள்.

இந்த புலிகேசி மூன்று மாதத்திற்கு முன் ஹோமோ செக்ஸுவல் என்ற நோயை குணமாக்குகிறேன் என பேட்டிகொடுத்தது. இவர் நோயை யார் குணமாக்குவது? கொடுமையின் உச்சம் இவர் வைத்துள்ள யோக மருத்துவ மனைக்கு பதஞ்சலியின் பெயரை வைத்தது தான்.

எத்துறையிலும் கெட்டவர்களும் நல்லவர்களும் இணைந்தே இருக்கிறார்கள். நாம் பதஞ்சலியை போல ப்ரதிபக்‌ஷ பாவனையில் இருந்தால் நமக்கு மேன்மை மட்டுமே ஏற்படும். பதஞ்சலி, யோகமுறை என பல விஷயங்களை நீண்ட தொடராகவோ, கட்டுரையாகவோ அமைக்கலாம் என இருந்தேன். சூழல் கருதி முடிந்த வரை சுருக்கமாக இங்கே எழுதி இருக்கிறேன்.

வலையுலகம் என்பது நாம் நினைத்ததை எழுதும் இடமல்ல. பலர் பார்க்கும் சந்தையில் நடந்து செல்லுவதை போன்றது. நாம் நினைத்த செயலை இங்கே செய்தோமானால் பிறர் நம் மேல் வைத்திருக்கும் பிம்பம் உடைய வாய்ப்புண்டு. அதுவும் ஊரில் ஒரு நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால் என்னை போன்ற பிச்சைக்காரர்கள் எல்லாம் கருத்து சொல்ல வேண்டி வரும்.

எழுதும் முன் நமக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிந்தால் மட்டும் எழுதுவது நல்லது. இல்லை என்றால் மொக்கை பதிவுகள் , வேட்டைக்காரன் விமர்சனம், தெரியாத பெரியாரிசத்தை நாத்தீகம் என்ற பெயரில் பதிவு ஏதோ ஒன்றை போட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிடுவது சால சிறந்தது.

Thursday, December 10, 2009

பழைய பஞ்சாங்கம் 11-12-2009

”ஸ்ஸ்...ப்பா இவனை வைச்சுக்கிட்டு....”

மாணவர்களுடன் கோவிலுக்கு பயணமாகி இருந்தேன்.எல்லோரும் கோவில் நுழை வாயிலில் செல்லும் முன்னால் என் காது அருகில் கிசு கிசுத்தான் சுப்பாண்டி.

“ஸ்வாமி நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை. எல்லோரும் சமம்னு சொல்லி தத்துவம் மட்டும் பேசரீங்க. ஆனா கோவிலுக்கு வந்தா எல்லா தகவலும் நீங்களே விளக்கறீங்க. இந்த ஒருமுறை நான் விளக்கவா? நானும் நீங்களும் சமம் தானே?” என்றான்.


திடீரென இப்படி கேட்க எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. சுப்பாண்டியை பார்த்து ’சரி’ என தலையாட்டினேன்.

கோவில் முன் பிரகாரத்தில் நுழைந்தவுடன் மாணவர்கள் அனைவரும் என்னை சூழ்ந்து நின்றார்கள்.. கோவிலின் உள் நுழைந்ததும் நான் தல வரலாறு கூறி கோவிலின் விஷேஷங்களை கூறுவேன். அதற்காக காத்திருந்தார்கள். சுப்பாண்டி என்னை புரியாமல் பார்க்க... நான் அவன் காதருகில்.. “தல வரலாறு...ம்ம்ம்ம்” என்றேன்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு...”முதலில் பிரேம புஸ்தகம் தான் தெலுங்கில வந்துச்சு.. அதுக்கு முன்னாடியே அமராவதியில் வர்க் பண்ண ஆரம்பிச்சுட்டார்...” என துவங்க.. எனக்கு புரிந்து அவன் கால்களை மிதித்து... நான் கோவிலின் தல வரலாறு கூறத் துவங்கினேன்.

-------------------------------------------------
ப்ரணவச் சுற்று

கோவிலுக்குள் வலம் வரும் பொழுது சண்டிகேஸ்வரர் என்ற சன்னிதி கருவறை பார்த்து இருப்பதை கண்டும் சிலர் அதில் கைத்தட்டி வணங்குவதை கண்டு மாணவர்கள் ஏன் இந்த சன்னதி அப்படி இருக்கிறது? ஏன் கைத்தட்டுகிறார்கள் என கேட்டார்கள்.

மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கண்களில் கெஞ்சிய சுப்பாண்டி கூறத்துவங்கினான்.

“கிழக்கு பார்த்து இருக்கும் கோவில் கருவறை முன் நின்று வணங்கிவிட்டு, இடப்புறமாக வலம் வந்து கருவறையின் புன்புறமாக வரும் பொழுது நாம் அரைவட்டம் அடித்திருப்போம். சண்டிகேஸ்வர் சன்னிதியில் வணங்கிவிட்டு தீபஸ்தம்பத்தில் சுற்றை நிறைவு செய்தால், நாம் வலம் வந்த பாதை தமிழில் ’ஓ’ என வந்தது போல இருக்கும். உடலால் ப்ரணவம் சொல்லும் முறைதான் கருவறையை வலம் வருதல். இங்கே கைத்தட்டுவது எல்லாம் தப்பு. அமைதியா கடவுளை வணங்கனும். புரிஞ்சுதா?” என்றான் சுப்பாண்டி. எல்லோரும் அவனை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

சில மாணவர்கள் கேட்டார்கள், “எப்படி சுப்பு இப்படி கலக்குற? இதையெல்லாம் யார் சொல்லித்தந்தா?” என கேட்டனர். என்னை பார்த்தவாறே...கூறினான். “அதெல்லாம் தானா பொங்கும்...”

“பட்”... இது நான் தலையில் அடித்துக்கொண்ட சத்தம் தான். :)

------------------------------------------------------------
தமிழு வாலுக

இணையத்தில் தமிழ் வளர்த்துகிறேன் என சிலர் செய்யும் அளவு கடந்த மொழிபெயர்ப்பு தாங்க முடியவில்லை. தூய தமிழில் பேசுவது என்பது சாத்தியம் என்றாலும் அதில் பேசியே தீருவேன் என சத்தியம் செய்தது போல இவர்கள் செய்யும் கலாட்ட கொஞ்ச நஞ்சமல்ல.

500 வருடங்களுக்கு முன் தமிழ் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது என வித்தியாசத்தை உணர்ந்தாலே தமிழ் தன்னை மாற்றிக்கொண்டே வளர்ந்து கொண்டும் இருக்கிறது என புரியும்.

என் பேச்சிலும், எழுத்திலும் பிற மொழி கலப்பு உண்டு. (கோவியார் கூட நான் எழுதிய இடுக்கையின் வரிகளை தமிழில் மொழிபெயர்ப்பார் :) .) ஆனால் எனக்கு உருப்படியாகவும் முழுமையாகவும் தெரிந்த மொழி என்றால் அது தமிழ் மட்டுமே.

திருமந்திரம் துவங்கி சித்தர்கள் பாடல்கள் வரை நான் மிகவும் நேசிக்கும் பாடல்கள் இருப்பது தமிழில் தான். ஆனால் இணையத்தில் சிலர் பொருட்களின் பெயர்களை தமிழ் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

மென்பொருள், விசைப்பலகை என கணினி சார்ந்த பொருட்களை தமிழாக்கினால் நான்றாக இருக்கும். ஆனால் இவர்கள் அந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவன பெயர்களை தமிழாக்கம் செய்வது தான் வேடிக்கை. பிரவுசர் என்பதை உலாவி என மொழியாக்கலாம். ஆனால் firefox என்பதை செந்தழல் நரி என்றும் நெருப்பு நரி என்றும் மொழி பெயர்ப்பது கொஞ்சம் கூடுதல் (ovar - என்பதன் தமிழ் சொல்). இப்படியே போனால்...

சோனி நிறுவனத்தில் கணினியை சத்தில்லா மடிக்கணினி என சொல்லுவார்களா?
நுண்மெல்லிய ஜன்னல் ஏழு என Mircosoft windows 7 சொல்லுவார்களா?

இதை எல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். you tube - இதை மொழிபெயர்த்தால் அபத்தமாக இருக்கிறது. - you tube -யை கண்டேன். இதை தமிழ் படுத்திப்பாருங்கள் கஷ்டம் புரியும்...! பொருட்களை தமிழாக்கலாம். நிறுவனபெயர்களை தமிழ் “படுத்த”க்கூடாது என்பது இந்த தமிழ் சூழ் சில்வண்டின் வேண்டுகோள்.

---------------------------------------------------------------------------------

ஜென் கவிதை

பார்வைக் கோளாறு

கண் பார்வை மங்கியதால்
கண் கண்ணாடி அணிந்தேன்.
பார்க்கும் காட்சிகள் தெரிந்தது.
எங்கு பார்த்தாலும்
கண்ணாடி தெரியவில்லை.

Tuesday, December 8, 2009

விசுவல் போஸ்ட்


தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே
-திருமந்திரம் 129


வேதத்தின் கண்மணிகள் : ஸ்வாமி நீங்க பதிவு எழுத முடியாத அளவுக்கு பிஸியா இருக்கீங்க ஒத்துக்கறோம். அதுக்காக இப்படியா.....

Monday, December 7, 2009

God@gmail.com

log in செய்து அனைவருடனும் தொடர்பு உண்டாக்கினேன்.

ஸ்டேட்டஸ் மெசேஜில் “நான் இறைவன்” என்றேன்.


ஒரு பெருங்கூட்டம் வந்து

அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்?

எதற்கு இந்த ஏற்றத்தாழ்வு என்றனர்.


ஸ்டேட்டஸ் மெசே
ஜில் “நீயே அது” என்றேன்.

எங்களால் உணர முடியாத விஷயத்தை கூறி
குழப்புகிறாய் என புலம்பினார்கள்.


ஸ்டேட்டஸ் மெசேஜை “நான் அன்புமயமானவன்” என மாற்றினேன்.

சுனாமியில் இறந்தவர்களும், தீவிரவாதத்தில்

இறந்தவர்களுக்கும் உன் அன்பு எப்படிபட்டது என்றனர்.


இவர்களுக்கு புரியவைக்க முடியாது
என
இன்விஸிபிள் ஆனேன்...!

இப்பொழுது எல்லோரு are you there...
????
என நித்தமும் கேட்கிறார்கள்.

தேடுங்கள்...தேடுங்கள்
எல்லாம் நான் log off செய்யும் வரை தானே...

Friday, December 4, 2009

ஜனநாயகம் சாகவில்லை

மக்களுக்கு ஓட்டுரிமை என்பது மிகமுக்கியம் என்கிறார்கள் ஜனநாயகவாதிகள். அந்த காலத்தில் பிச்சைக்காரனை அரசனாக யானை தேர்ந்தெடுத்த கதை உண்டு. இன்று பல யானைகளை மக்கள் அரசனாக தேர்ந்தெடுக்கிறார்கள். கடைசியில் மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.

சிவகாசிக்கு நியூமராலஜிப்படி பெயர் மாற்றினால் நன்றாக இருக்கும் என அவைக்கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள். நாளை மக்கள் நேமாலஜியும் உண்மை என நம்புவார்கள். ஏன் தெரியுமா? வாக்கு அளிக்கும் இடத்திற்கு வாக்கு’சாவடி’ என்று பெயராம். ஓட்டளிக்கும் பொழுதே சாவடிக்க துவங்கிவிடுகிறார்கள். பெயர் மாற்றம் அவசியம் என உணர்கிறீர்களா ?


என் உடம்புக்கு அரசியல் ஆகாது :) என்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.


சென்ற வாரத்தில் நம் வலைதளத்தில் ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. மொத்தம் 235 ஓட்டுகள். அதில் சிறப்பான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு தலைப்புக்கு சமமான ஓட்டுக்கள். இதன் மூலம் நான் கூறவிரும்புக் கருத்தை எப்படி விரும்புகிறார்கள் என தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.

வாக்கு விவரங்கள்

காசி நகரம் ஓர் அற்புதம் ------------------------- 82 (34%)

புதிய கோணத்தில் திருமந்திர விளக்கம்
---- 82 (34%)

முத்திரைகள் என்ன செய்யும்?
-----------------80 (34%)

வேதகால மருத்துவம்
---------------------------72 (30%)

மஹா கும்ப மேளா
------------------------------50 (21%)

எதுவும் எழுதாமல் இருந்தால் நல்லது.
----32 (13%)

Votes so far: 235

ஒரு 32 ஓட்டுக்கள் எதுவும் எழுதவேண்டாம் என விழுந்திருக்கிறது. அந்த 32 பேருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் (நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).

காசி மாநகரம் மற்றும் திருமந்திரம் ஒரே எண்ணிகையான வாக்குகள் வாங்கி இருப்பதால் இரண்டில் ஒன்றை நானே தேர்ந்தெடுக்கிறேன்.

அடுத்து வரும் கட்டுரையின் தலைப்பு மற்றும் சித்திர வடிவம்....
.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்களேன்



Tuesday, December 1, 2009

இசையும் இறைவனும் - 2

நாதம் என்ற நாதனை நாடினால்
நாளும் உன்னுள் நாதத்தை அறிவாய்
நாதமும் நாதனும் ஒன்றாகி
ஓம்கார நாதனாவாய்.


இசை என்றவுடன் சிலர் அதில் மனோமயக்க விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். பாரத கலாச்சாரத்தில் ஆன்மீகம் என்பது இசையின் முதுகெலும்பு கொண்டே வளர்க்கபட்டது. இசையை மாயை என காண்பவர்களும் , இசையை உன்னதமாக காண்பவர்களுக்கும் இடையே இருப்பது சின்னஞ்சிறிய வித்தியாசம் தான். ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். அது போல இசையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

சிலர் இசையை மருத்துவ நிலையில் பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்து இருக்கிறார்கள் (Music therapy). மருந்து என்பது நம்மில் இல்லாத குறைவிஷயங்களை வெளியில் இருந்து கொடுப்பது அல்லவா? ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மருந்து கொடுப்பார்கள். ஆனால் இசை மருத்துவம் என்பது அடிப்படையில் தவறு என்பேன். நம்மில் இசை இல்லா நேரம் எதுவும் இல்லையே..! அப்படி இருக்க எவ்வாறு வெளியில் இருக்கும் இசை நம்முள் நுழைந்து நம்மை குணமாக்கும்.?

வேத மந்திரங்கள் ஒருவித ஒலி அலையை ஏற்படுத்துகிறது. வேத ஒலி ஒரு இசையின் வடிவம்தான். வேதத்தை சுருதி என அழைக்கப்படுவதன் காரணமும் அதுதான். வேதம் என்பது மதம் கடந்தது என நான் அடிக்கடி கூறகாரணம் இந்த ஒலிவடிவம் தான்.

குயில் கூவுகிறது, பசு சப்தம் எழுப்புகிறது, மயில் அகவுகிறது இந்த ஒலி எல்லாம் எந்த மதத்தை சார்ந்தது? அப்படித்தான் வேத ஒலிகளும். சென்ற பதிவில் ஒரு ஒலிக்கோப்பை வைத்திருந்தேன். அது 2 நிமிடம் ஒலிக்கக்கூடிய ஒலி அலைகள். அதில் 1.06 நிமிடத்திற்கு நான்கு வேதத்தில் ஒன்றான சாம வேதமும், முடிவு வரை குரானில் தேனீ பற்றி ஓதும் வரிகளும் இருக்கிறது.

குரல் மற்றும் ஒலி தெளிவு தவிர பிற விஷயங்கள் ஒன்றுபோலவே இருக்கிறது பார்த்தீர்களா? இதில் சிலர் நாங்கள் இந்து என சொல்லி மார்தட்டும் எத்தனை பேருக்கு இது சாம வேதம் என தெரியும்? வேதத்தின் சுருதியை அறியாமல் இவர்கள் இந்து தர்மத்தை காப்பாற்றுகிறேன் என மசூதியை இடிக்கிறார்கள். இவை இரண்டையும் கேட்டு மகிழ்ந்திருந்தால் அதன் ஓசையில் இருக்கும் ஒற்றுமையை கேட்டு லயித்திருந்தால் உடைக்கவும் வேண்டாம் அதற்கு கமிஷனும் வேண்டாம்.

சாம வேதம் என்பது சங்கீத ரூபமாக உச்சரிக்கபடுகிறது. அதில் இருக்கும் பல வார்த்தைகள் ஓசைக்காகவே அமைந்திருக்கிறது. இராவணன் சாம வேதத்தை வீணையில் வாசிக்கும் ஆற்றல் பெற்று இருந்தான் என்கிறது ராமாயணம். அவன் சாமகாணம் வாசித்தால் கைலாய மலையே உருகுமாம். இது போல சாம கானத்தின் ஆற்றலை பலவாறு புகழ்ந்து இருக்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணரும் பகவத் கீதையில் நான் வேதத்தில் சாமமாக இருக்கிறேன் என்கிறார். அதில் இசையின் வடிவாக இருக்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம். தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது. இலவசமாக அதை கணினியில் கேட்கமுடியும். ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவதில்லை. :)

ஆன்மீக நிலையில் முன்னேற்றம் அடையும் பொழுது எல்லோரும் தசவித நாதம் என்ற நிலையை அடைவார்கள். நம்முள் பத்துவிதமான ஒலிகள் கேட்கத்துவங்கும். அவ்வொலி மத்தளம், பறை, பேரிகை, துந்துபி என பல்வேறு இசை கருவிகளை போல இருக்கும்.

இந்நிலையை உணரும் பொழுது நம் மூன்னோர்கள் தங்களில் உணர்ந்த ஒலியை எப்படி வெளியே கருவிகளாக செய்தார்கள் என்று ஆச்சரியம் அடைவீர்கள். முன்பின் தெரியாத ஓசை நம்மில் கேட்கும்பொழுது நமக்கு நோய் வந்ததாக முடிவுக்கு வருவோம். வெளியே கேட்கும் ஓசைகள் உங்களுள் கேட்கும் பொழுது அதை பிடித்து மேலே செல்ல முயலுவோம். அதனால் அவற்றை வெளியே இசை கருவியாக உண்டு செய்தார்கள்.

பல்வேறு வகையாக ஒலி இறைவனின் ரூபம் என கூறினாலும் நாம் அதை உணர்ந்தால் தானே புரிந்துகொள்ள முடியும். எளிய தியான பயிற்சி மூலம் நீங்களும் ஒலி ரூபமான இறைவனை உணர முடியும். அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா?

அமைதியான ஒரு அரை இருள் கொண்ட அறையில் அமருங்கள். உங்கள் முதுகு பகுதியை சுவரில் சாய்த்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆழமாக சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். தொடர்ந்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.

சில நிமிடத்தில் உங்கள் இதயத்தின் ஓசை மிகவும் நுட்பமாக உங்களுக்கு கேட்கத்துவங்கும். இந்த ஓசை உங்கள் காது என்ற புலனுக்கு கேட்’காது’. அது உங்களுக்குள்ளே கேட்கும். உங்கள் இதய ஓசையின் அளவை கவனியுங்கள். ஒரு ஓசைக்கும் அடுத்த ஓசைக்கும் இடையே உள்ள இடைவெளியை கவனித்த வண்ணம் இருங்கள். பிறகு அனைத்தும் தானாகவே நடக்கும்.

அதிகமாக நீங்கள் சாப்பிட்டுவிட்டு இந்த தியானத்தை செய்தால் உங்கள் தூக்கத்தில் எழும் நாதத்தை (குறட்டை ஒலி) பிறர் கேட்கத் துவங்குவார்கள். :)

இரயில் பயணங்களை நான் அதிகமாக தேர்ந்தெடுப்பதற்கு அதன் தாள லயம் ஒரு காரணம். ரயிலில் அமர்ந்து கண்களை மூடி அதன் தாளத்தை தியானம் செய்தபடியே பயணித்தது உண்டா? அருமையான ஒரு தியானவழிகாட்டி என்றால் ரயிலின் ஓசையை கூறலாம். அதே போல மாட்டு வண்டியும் சிறந்த கருவியே. அதில் அமர்ந்து பயணிக்கும் பொழுது நம்மை தியான நிலைக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும்.

அடுத்த முறை ரயிலிலோ மாட்டுவண்டியிலோ பயணிக்கும் பொழுது கண்களை மூடி அதன் தாளத்தில் தியானித்து பழகுங்கள். உங்களுக்குள் இருக்கும் நாதவடிவம் எங்கும் நிறைந்திருப்பது புரியதுவங்கும்.

எனக்கு ஒரு ரகசிய எதிரி ஒருவர் உண்டு. நான் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் அவர் சில வரிகளில் கூறிவிடுவார். அவர் பயன்படுத்தும் வார்த்தையும், கருத்தும் சில நேரங்களில் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.

அவரின் வரிகளை படித்தால் செயலற்று கல்லாகிப்போவேன். அவரை போல கருத்துக்கள் எழுதமுடியவில்லையே என்ற ஆதங்கமே அவரை எதிரியாக்கியது. நீங்களும் அந்த எதிரியை தெரிந்து கொள்ளுங்கள். நான் இரு பகுதிகளாக எழுதிய இந்த கட்டுரையை அவரின் நான்கே வரி கள் மூலம் உணரலாம். அனைத்துக்கும் மூலமாக இருப்பதால் என் எதிரியின் பெயர் திருமூலன்.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே
---------------------------------------------------------------திருமந்திரம் 30.


மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இருப்பவனை நானும் காதலிக்க துவங்கிவிட்டேன்........... நீங்க?


Saturday, November 28, 2009

இசையும் இறைவனும்

இசை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய அர்த்தம் உண்டு. சராசரியாக இசை என்ற வார்த்தையை ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் மூல அர்த்தம் இணங்குவது, ஆனந்தம் கொள்வது என்பதாகும்.

திருவள்ளுவரும் இசைபட வாழ்தல் என்கிறாரே அப்படி என்றால் பாடிகொண்டே வாழ்வதை குறிப்பதில்லை. பிறருக்கு தர்மம் செய்வதன் மூலம் மனநிறைவுடன் ஆனந்தமாக வாழ்வதை இசைபட என்கிறார். பிறர் போற்ற வாழ்வது என இத்திருக்குறளுக்கு அர்த்தம் போதிக்கபடுகிறது. சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.

இசை என்பது ஒருவித யோக முறை. யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். இறைநிலையுடன் ஒன்றிணைந்து இரண்டற கலப்பதற்கு இசை என்ற யோக முறை மிக முக்கியமானது.

இசை என்றவுடன் அதை பற்றி சில விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இசை என்பது மொழிகளை கடந்தது, மதங்களையும்... ஏன்.. மனித நிலையையும் கடந்தது.

இங்கே இசை என நான் குறிப்பிடுவது வார்த்தைகள் கொண்டு உருவாக்கபட்ட பாடல்களின் வடிவம் அல்ல. சங்கீதத்தில் ஆலாபனை என கூறுவார்களே அது போல வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறக்க நிலையே ஆலாபனை.

இசை என்பது இறைவனின் வடிவம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். இசை என்பதை நாதம் என பொருள் பட கூறுகிறார்கள். ப்ரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தது.

நாதம் என்ற ப்ரணவத்தின் கூறுகளான ஆ - உ- ம என்ற ஒலிகளின் மூலமே அனைத்தும் வெளிப்பட்டது. நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும்.

நான் கூறிய ப்ரணவ மந்திரம் என்ற கருத்து ‘இந்து மதத்தின்’ கூறுகள் அல்ல. வேதம் என்ற ஆன்மீக நிலை இந்து மதம் என்ற வடிவம் கொண்டவுடன் தன் சுயத்தை இழந்து விடும் அபாயத்தை உணர்ந்து தன்னை மதத்திலிருந்து விடுவித்துக்கொண்டது.

எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல். பாரத தேசத்தில் தோன்றிய ஞானிகள் இசையுடன் தங்களை மிகவும் ஒன்றிணைத்து கொண்டே இருந்தனர். மீரா, புரந்தர தாசர், ஞான சம்பந்தர் மற்றும் ஏனைய ஞானிகளை வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம்.

இசை என்ற பாடல் வடிவம் சன்யாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விலக்கபட்டு இருக்கிறது. சன்யாசிகள் பாடல், நடனம் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றில் மூழ்கக் கூடாது என கூறுவதன் காரணம் அவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதுதான். சன்யாச நிலை என்ற சூன்ய நிலையில் தோன்றிய மதங்கள் இசையை விலக்கின.

உலகின் சில மதங்கள் கூட தவறுதலான புரிதலால் இசையை விலக்கிவிட்டது.

சமணம்,இஸ்லாம் மற்றும் சில கிருஸ்துவ பிரிவுகள் இதில் அடக்கம்.

நாதத்தை (ஓசையை) பெட்டியில் அடைக்கமுடியாது என்பதை போல மதத்தால் இசையை அடக்க முடியாது. அதனால் தான் மதங்கள் இவ்வாறு விலக்கினாலும் ஞானிகள் இறைவனுடன் கலக்கும் பொழுது இசையை ஒரு பாதையாக தேர்ந்தெடுத்தனர். இதனால் இஸ்லாமிலிருந்து சூஃபியும், சமணத்திலிருந்து ஜென் என்ற ஞான மார்க்கங்கள் கிளைத்தன.

நாதமே கடவுளின் வடிவம் என்றால் மதத்தில் இருந்து நாதம் வெளியேறிவிட்டது என்றால் அப்பொழுது மதத்திற்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

இசைவடிவில் இறைவனை காண முற்பட்டால் உலக சமுதாயம் ஒரே இறைவனை காண முடியும்.

மதங்களை கடந்த ஆன்மீகம் அவசியமானது. மதங்களையும் உருவங்களையும் கடந்த இறைநிலையே முழுமுதற் கடவுளான பிரம்ம நிலை என்கிறார் திருமூலர்.

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

-----------------------------------------திருமந்திரம் - 105

ஒரு இசை வடிவத்தை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் அந்த இசை உங்களை ஈர்த்தது என்பதல்ல. உங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது.

உங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை உங்களை ஈர்க்கும். நீங்கள் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் உங்களை கவரும். எளிமையாக சொன்னால் நீங்களே இசைதான். வெளியே கேட்கும் இசை உங்கள் உள் இசையை தூண்டுவதற்காத்தான்.

மதம்- இசை - இறைவன் என நிறைய பேசிவிட்டோம். உங்களுக்கு ஒரு சின்ன போட்டி...

கீழே இருக்கும் 2 நிமிட ஒலிக் கோப்பில் மதம் சார்ந்த புனித ஒலி இருக்கிறது. இந்த ஒலியை முழுமையாக கேட்டு அது எந்த மதம் சார்ந்தது என கூறுங்கள்.
Sound of religion....





விடையுடன் அடுத்த பதிவில் சந்தி
க்கிறேன்.