Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, December 23, 2012

கும்பமேளா - 7


கும்பமேளாவிற்கு ஆன்மீகவாதிகள் ஏன் காத்துக்கிட்டு இருக்கனும்? அவர்கள் ஏற்கனவே உயர்நிலையில் இருக்காங்க இல்லையா? என கேட்டான் அப்பு.

விவரித்த வண்ணம் இருந்த தன் பேச்சின் நடுவே இடைமறித்த அப்புவிற்கு 
உதட்டின் ஓரம் சிரிப்பை கொடுத்துவிட்டு தொடர்ந்தார் குருஜி...

“கும்பமேளா என்பது ஆன்மீக நிகழ்வு, ஒவ்வொரு உயிர்களுக்கு தேவையான நிகழ்வு. இதில் ஆன்மீகவாதிகள் வருவதற்கு காரணம் அவர்கள் மூலம் பல்வேறு உயிர்கள் முக்தியை நோக்கி நகர்த்தப்படும். அதுவும் மஹாகும்பமேளா அனைத்து ஆன்மீகவாதிகளும், மதவாதிகளும் சங்கமிக்கும் இடம். ஆன்மீகவாதிகளின் தனிப்பட்ட சில விஷயங்களுக்காக அவர்கள் அங்கே கூடுவார்கள். நாம் கூட அங்கே அதற்காகத்தான் செல்கிறோம்”

இவ்வரிகளை கேட்டவுடன் அப்புவின் கண்கள் மினுமினுத்தது.


குருஜி அப்புவின் கண்களை பார்த்தவண்ணம் தொடர்ந்தார்...

“ஆன்மீக ரீதியாகவும், யோக ரீதியாகவும் சில விஷயங்களை சொன்னேன். 
இனி உலக அதிசயமான கும்பமேளாவை சொல்லவா?”

”உலக அதிசயமா?” என கேட்டான் அப்பு.

“ஆமாம் பலராலும் பதிவு செய்யப்படாத உலக அதிசயம்...! உலகில் அதிகமான மக்கள் கூடும் விழா மஹா கும்பமேளா. அழைப்பிதழ்கள் இல்லாமல், விழா குழுவினர் இல்லாமல் துல்லியமாக நடைபெறும் விழா கும்பமேளா. இது போல உலகில் வேறு எங்கேயும் நடைபெறுவது இல்லை... உலகில் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடிய நிகழ்வு என்பது இதுவரை பதிவு செய்யப்படவில்லை. 

மேலும் உலகில் வேறுபகுதிகளில் இவ்வளவு அதிகமான மக்கள் கூடுவது போர் சார்ந்த காரணத்திற்காக மட்டுமே இருக்கும். ஆனால் உலகில் அமைதி மற்றும் ஆன்மீக நோக்கில் இத்தனை மக்கள் கூடும் ஒரே நிகழ்வு கும்பமேளா என்பதை  தெரிந்துகொள்ளுங்கள் அப்பு..” என கூறி இடைவெளிவிட்டார் குருஜி.

பிறகு தொடர்ந்த வண்ணம், “ அப்புறம் அலஹாபாத் என்ற ஊர் ரேகாம்ச, அட்சாம்சத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்தது...இந்திய தேச மணி 5.30னு சொல்றாங்க இல்லையா? அது கணக்கிடப்படும் ரேகாம்சம் 82.30 என்பது அலஹாபாத் புள்ளிதான்.  இப்பகுதி உலகின் நாடிகளாக வந்து அமைந்தது ஒருவித அற்புதம் தான். இல்லயா?” என்ற குருஜியிடம் அப்பு கேட்டான்...

“ குருவே ஒரு சின்ன கேள்வி இந்தியாவில் பல ஆன்மீக குழுக்கள் மற்றும் மதங்கள் இருந்தாலும் அவங்க எல்லாம் ஏன் ஒன்று கூடனும்? இந்த உலக அதிசயமா மக்கள் கூடுவது எப்போ ஆரம்பிச்சுது?” என கேட்டு விட்டு குருவின் பதிலுக்காக காத்திருந்தான் அப்பு.

சிறு பையனின் முன் பணிவுடன் இருக்கும் வயதானவரை யாரேனும் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். ஆனால் இதை சோம் நாத் குருவின் இந்த பிறப்பின் தாயார் பார்த்தால் வேடிக்கையாகவா இருக்கும்?

எதிர்பாராத விதமாக அந்த அறைக்குள் நுழைந்த அப்புவின் மனைவி இருவரின் நிலையை பார்த்து அதிர்ந்தார்...

(மேளா தொடரும்) 

Friday, December 7, 2012

கும்பமேளா 6



அப்புவும் சோம நாத் குருஜியும், அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை நினைவுபடுத்தினார்கள்.

சாதாரண குழந்தையாக இருந்த சோமு ஒரு நிமிடத்தில் குருவாக காட்சியளித்தது அப்புவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அருகே இருந்த மேஜையின் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடியபடி வேத மந்திரங்களை ஜெபித்துவிட்டு, கண்களை திறந்து கூர்மையாக பார்த்தார் சோமநாத்.

“ நம் உடலில் 72000 நாடிகள் உண்டு என நீங்கள் படித்திருக்கலாம், அவை 108 புள்ளிகளில் உடலில் சங்கமிக்கிறது. அதில் முக்கியமாக பத்து நாடிகள் தச நாடிகள் என கூறுவார்கள். இந்த நாடிகள் நம்ம உடம்பின் அஞ்சு புலன் உறுப்புக்களையும், அதன் செயல்களையும் முடிவு செய்யுது. நம் சூட்சம உடலில் இந்த பத்து நாடிகளின் செயல் மிக முக்கியமானது. பத்து நாடிகளில் மூன்று நாடிகள் சூட்சம உடலின் ஆதாரமாக இருக்கிறது. அவை ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா நாடிகள். சூரிய நாடி, சந்திர நாடி- சூக்கும நாடி என தமிழில் சித்தர் பாடல்களில் கூட இதை நீங்கள் பார்க்கலாம்.

அனைத்து உயிரின் செயல்களும் இந்த மூன்று நாடிகளை மையப்படுத்தியே இருக்கிறது என கூறுகிறது யோக சாஸ்திரம். காரின் ஸ்டியரிங் எந்த பக்கம் திரும்புகிறதோ அந்த திசையில் கார் செல்லுவது போல, சூரிய நாடி, சந்திர நாடி செலுத்தும் திசையில் உயிர்களின் வாழ்க்கை செல்லுகிறது. சூரிய நாடி ஆக்க செயல்களுக்கும், சந்திர நாடி இயல்பான ஓய்வு செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது.  உதாரணமாக விளையாட்டு, நடத்தல் போன்ற உடல் செயல்கள் அனைத்தையும் சூரிய நாடி முடிவு செய்யும். தளர்வடைதல், இசை கேட்பது போன்ற செயல்களை சந்திர நாடி முடிவு செய்கிறது. மூன்றாவது நாடியாகிய சுஷ்மணா - சூக்கும நாடி என சொல்லுவதற்கு காரணம், இயல்பாக இந்த நாடி செயல்படாது. இது சூரிய சந்திர நாடியின் இணைவால் இந்த நாடி செயல்பட துவங்கும் . சூரிய நாடி செயலும், சந்திர நாடி செயலும் இணைந்து செயல்பட்டால் மிகவும் சிறப்பான ஒரு நிலை வாழ்க்கை தன்மை ஏற்படும். 

இந்த நிலையே ஆன்மீக ஒருநிலை அல்லது யோகம் என்பார்கள். பல்வேறு ஆன்மீக பயிற்சிகளும், யோக முறைகளும் சுஷ்மணா நாடியில் இருப்பதற்கு வழிகளை கூறுகிறது.

ஒரு உயிரின் ஆன்மீக நிலை அவ்வுயிர் சுஷ்ணமா நாடியில் எத்தனை காலம் இருக்கிறது என்பதை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிநிலையில் சஞ்சரிக்கும் உங்களுக்கு நீண்ட தியானம் மன ஒருமைப்பாடு வரவில்லை என்றால் நாம் சுஷ்மணா நாடியில்  இல்லை என அர்த்தம். உள்நிலையில் ஆழ்ந்து இருக்க இந்த சுஷ்மனா மிக அவசியம். சூக்‌ஷம உடலில் இந்த நாடிகள் இருந்தாலும், அவை நம் ஸ்தூல உடம்பில் புருவ மையத்தில் ஒன்றிணைகிறது. 

இந்த மூன்று நாடிகளும் ஒன்றிணையும் இந்த புள்ளி நம் உடம்பின் ஆன்மீக மையமாக இருக்கிறது. இந்த இடத்தை சித்தாகாசம், சிற்றம்பலம் என பல்வேறு வகையில் அழைக்கலாம். 

புருவ மையத்தை ஆற்றல் மிகுந்த ஒருவர் தூண்டும் பொழுது நம் உயிரினுள் ஆன்மீக விதை விதைக்கப்படும். அது நம் வாழ்க்கையை கடந்தும் நம்மை இறைவனை நோக்கி கொண்டு செல்லும். 

நம் ஆன்மாவின் பயணம் அனைத்தும் இங்கே புதைந்திருக்கிறது. அதனால் தான் உன்னை உத்ரகாசியில் சந்திக்கும் பொழுது உன் புருவ மையத்தை தொட்டு நீ கடந்து வந்த பாதையை காட்டினேன்..” என நீண்ட மற்றும் விளக்கமான பதிலை கூறிவிட்டு தொடர்ந்தார் சோம நாத் குருஜி...

 “இதற்கும் கும்ப மேளாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறாய் ?  இந்த உலகை உடலாக கொண்டால், நிலப்பரப்பில் நதிகள் நாடிகளாக இருக்கிறது. நம் ஊண் உடம்பில் புருவ மையத்தில் மூன்று நாடிகளும் இணைந்து எப்படி ஆன்மீக நிலை ஏற்படுகிறதோ அது போல கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் புள்ளி உலகின் சித்தாகாசமாக இருக்கிறது. 

கங்கை சூரிய கலையாகவும், யமுனை சந்திர கலையாகவும், சரஸ்வதி என்ற கண்களுக்கு தெரியாத நதி சுஷ்மணாவாகவும் இருக்கிறது.

மூன்று நதியின் கூடல் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. நம் வசிக்கும் இந்த பூமியின் புருவ மையம் இது தான். அலஹாபாத் என்ற இந்த நகரில் கும்பமேளா நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பொழுது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தூண்டுதலாகவும், நம் சுஷ்மண நாடி அதிக காலம் தூண்டப்படுவதற்கும் காரணமாக அமையும்.” என சொல்லி நிறுத்திவிட்டு குருஜி அப்புவை பார்த்தார்.

தன் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டான் அப்பு...

“ குருஜி....கங்கையும், யமுனையும் எப்பொழுதும் அங்கே இணைஞ்சுட்டே இருக்கே? தினமும் இவ்வாறு தானே நடைபெறுகிறது? அப்படி இருக்க ஏன் 
கும்பமேளா காலத்தில் மட்டும் முக்கியத்துவம்?”

புன்புறுவலுடன் அப்புவை பார்த்தார் சோம் நாத், “ உலகின் நாடிகள் இணையும் புள்ளி அலஹாபாத்னு சொன்னேன். இந்த சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரன் அப்புறம் குரு இந்த கிரகங்கள் ஈடா,பிங்களா மற்றும் சுஷ்மணாவா இருக்கு. 

இவை ஒரே மையக்கோட்டில் இணைந்து வரும் காலம் மிக முக்கியம். சூரிய மண்டலத்தின் நாடியும், பூமியின் நாடியும் நம் உடலின் நாடியும் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால் அங்கே ஆன்மீக பெரு நிகழ்வு நடக்கும். 

பூமியில் நதிகள் சங்கமித்தவண்ணம் இருக்கு, நம் உடம்பில் சுக்‌ஷ்மண நாடிகளை தூண்டும் யோக முறை நமக்கு தெரியும். ஆனா சூரிய மண்டல கிரகங்களை நம்மால் இணைக்க முடியுமா? அந்த கிரகங்கள் தன் சுழற்சியில் இயல்பா ஒன்றிணையும் காலம் 12 வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கும். இப்படி 12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் காலத்தை மஹா கும்ப மேளானு சொல்லுவாங்க. இந்த நாட்களுக்காக ஆன்மீகவாதிகள் காத்துகிட்டு இருப்பாங்க...”

(மேளா தொடரும்)




Monday, December 3, 2012

கும்பமேளா - 5


அன்று நிலையில்லா குறுகுறுப்பில் அமர்ந்திருந்தான் அப்பு. தன் வாழ்க்கை 
சரியான பாதையில் தான் செல்கிறதா? அல்லது  உத்திர காசியில் ஏதேனும் மாய தேவதையின் மாய குழப்பத்தால் மீண்டும் குடும்பத்துடன் வந்து இணைந்து கொண்டோமா என புரியவில்லை.

பத்து வருடம் காற்றை போல கடந்து சென்றது. அக்குகையில் குரு சொன்னதை போல ஆறு வருடம் கழித்து ஒரு குழந்தை பிறந்தது. சோமநாத் என பெயரிட்டு, சோமு என அனைவரும் அழைத்து வருகிறோம். ஆனால்  அக்குழந்தை குரு சொன்னது தானா என சந்தேகம் தீரவில்லை. நான்கு வயதான சோமு பிற குழந்தைகள் போல அடம் பிடித்து, மலம் கழித்து அழும் சாதாரணக் குழந்தையாகவே தெரிகிறது. இக்குழந்தை எப்படி அந்த குகையில் பார்த்த மஹா தவம் செய்யும் குருவாக இருக்க முடியும்?

இவன் பிறக்கும் போது எந்த ஒரு ஆன்மீக நிகழ்வும் நடக்கவில்லை.கோவிலுக்கு கூட்டி சென்று சாமி கும்பிடு என கூறினாலும் மறுத்து அடம் பிடிக்கும் இக்குழந்தை எப்படி ஆன்மீக குருவாக இருக்க முடியும்?   அப்பு இவ்வாறு சிந்தித்துக்கொண்டே சோமுவை கவனித்தான். இயல்பாக ரயில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். 

விரக்தியான மனநிலையில் அப்புவின் கண்களிலிருந்து நீர் துளியாக விழுந்தது. கண்களை மூடி மீதமிருக்கும் கண்ணீரையும் கசக்கிவிட்டு கைகளால் துடைத்து நிமிரும் பொழுது சோமு அப்புவின் முன் நின்றிருந்தான்.

அப்பூஊ......

மழலை மாறாத குரலில் அப்பா என அழைக்காமல் தன் பெயர் சொல்லி அழைக்கும் மகனை புரியாமல் பார்த்தான் அப்பு. 

“குடும்பத்தை கவனிக்கவும், பணம் சேர்க்கவும் உங்களோட நோக்கமா இருந்துச்சு.. உங்களுக்கு இந்த குழப்பம் வரும் வரைக்கும் நான் காத்துக்கிட்டு இருந்தேன். நான் தான் உங்களை குகையில் பார்த்ததும், இப்ப மகனாக பிறந்ததும் குழப்பம் தீர்ந்துச்சா? ”

அளவுக்கு மீறிய சந்தோஷத்துடன் அப்பு தன் மகனாகிய குருவை கட்டியணைத்தான்.

சில வினாடிக்கு பிறகு அப்புவின் கைகளை விடுவித்து முகத்தை பார்த்து சோமு கூறினான்...

“நேரம் அதிகமில்ல, நாம முக்கியமா செய்ய வேண்டிய காரியம் ஒன்னு இருக்கு அப்பு”

என்ன என்பதை போல அப்பு பார்த்தான். 

“அடுத்த மாதம் கும்பமேளா நடக்கிறது. அதற்கு நாம் போக வேண்டும்.” 

 “கும்பமேளாவுக்கு நாம் ஏன் போகனும்? என்ன இதில் விஷேஷம்?” கேட்டான் அப்பு.

 “உங்களுக்கு கும்பமேளாவை முழுமையாக விளக்குகிறேன். அப்புறம் நாம் ஏன் போகணும்னு சொல்றேன்” 

என்றான் நான்கு வயது சோமு...மன்னிக்கவும் 

என்றார் குருஜி சோமநாத் ...!

(மேளா தொடரும்)

Wednesday, November 14, 2012

கும்பமேளா - 4


தென் தமிழகத்தின் சிறிய கிராமத்தில் நிசப்தமான பின் இரவு நேரம்.  மனைவியும் குழந்தைகளும் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருக்க மெல்ல கதவை திறந்து வெளியேறினான் அப்பு. இந்த சம்சார பந்தத்தில் இருந்தால் நம்மால் ஆன்மீக முன்னேற்றம் இருக்காது என்பது அவனின் உள்ளுணர்வு வெகு நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தது. இனி இமாலயத்திற்கு சென்று குருவை தேடி அலைந்து அங்கேயே இருந்து விடுவது என முடிவு செய்து புறப்பட்டான். 

காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ் என பல்வேறு ஊர்களுக்கு சென்று கடைசியில் உத்திர காசிக்கு வந்தடைந்தான். இன்னும் வடக்கே பயணித்து ஹிமாலய மலையின் காடுகளுக்குள் செல்ல வேண்டும் என்பது திட்டமாக கொண்டான். 

அடுத்த நாள் புறப்பட்டு அருகே இருக்கும் பாண்டவாச்சல் என்ற கிராமத்தின் மையத்தில் கங்கை ஓடும் பள்ளத்தாக்கின் அருகே பயணித்தான்.மனது இயல்புக்கு மாறான தட தடத்தது. தான் இயல்பாக இல்லை என்பதை உணரும் ஷணத்தில் வெகு தொலைவிலிருந்து மிக மில்லிய சப்தம் கேட்டது.

“அ..அ...ஓ.......ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”

ஓம் என்ற மந்திரம் கேட்கும் திசையை நோக்கி சென்றான். பள்ளத்தாக்கின் ஓரம் வரை சென்று விட்டான்.. சபதம் இப்பொழுது தீர்க்கமாக கேட்டது. பள்ளத்தாக்கு மிகவும் அபாயகரமாக செங்குத்தான அமைப்பில் இருந்தது. பாய்ந்தோடும் கங்கை வெள்ளிக்கம்பி போல சில நூறு மீட்டர்கள் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது. 

விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது என்பது புரிந்தது. இங்கே எப்படி சப்தம் என ஆராய்ந்தான். பள்ளத்தாக்கின் ஓரத்தில் சப்தம் அதிகமாக கேட்கவே விட்டு அகலவும் மனம்  இடம் கொடுக்கவில்லை. சரிவில் இருக்கும் செடிகளை கைகளில் பிடித்தவண்ணம் கீழே இறங்க முயன்றான். உடல் நடுங்கியது, நிலை  தடுமாறினாலும் சமாளித்து மெல்ல இறங்கினான். சில அடிகள் கீழே இறங்கியதும் ஒரு பாறை இடுக்கின் வழியே அந்த சப்தம் அதிகமாக கேட்டது. இடக்கையால் செடிகளை கெட்டியாக பிடித்து, கால்களை கற்களில்  ஊன்றி, மறுகையால் பாறையைமில்ல விலக்கினான். 

விலக்கப்பட்ட பாறை தடுமாறி பள்ளத்தாகின் ஆழத்தை நோக்கி வீழ்ந்தது. பெரிய பாறை தூசி போல பறந்து கங்கையில் சென்று மறைந்தது. பாறை இருந்த இடத்தில்  குறுகலான ஒரு குகை பாதை சென்றது. இப்பொழுது ஓம் என்ற சப்தம் பன்மடங்காகி இருந்து. 

தனது கைகளை நீட்டி குகையின் விளிம்பை பற்றி உள்ளே புகுந்தான். தன் உடல் அளவுக்கு மிக குறுகலாக இருந்ததால் பாம்பை போல ஊர்ந்து மெல்ல நகர்ந்தான்.

சில அடிகள் நகர்வுக்கு பின் குகை பாதை செங்குத்தாக உள்ளே இறங்கியது. கைகளின் பிடி தளர்ந்து செங்குத்தான பாதையில் விழுந்தான் அப்பு. மூட்டுகளிலும் முகத்திலும் சிராய்ப்புகளுடன் குகையின் அடியில் விழுந்துவிட்டதை உணர்ந்தான்.

ஓம் என்ற சப்தம் மிகவும் அதிகமாக அருகே கேட்டது. குகையின் இருளில் தற்காலிகமாக கண்கள் இருளடைய பார்வை இழந்து உட்கார்ந்திருந்தான் அப்பு. 

சில வினாடிகள் அவனுக்கு இருள் பழகி குகையின் சூழல் பழகத்துவங்கியது.  அங்கே உடலின் அனைத்து எலும்புகளும் தெரிய, தோல் மட்டுமே ஆடையாக  அணிந்து நிர்வாணமாக ஒருவர் அமர்ந்திருந்தார். எலும்புக்கூடு போன்று காட்சியளித்த அவர் உடலின் முடிகள் இல்லாமல் இருந்தது. விரல்களில் இரண்டு அடி நீள நகங்கள் வளர்ந்திருந்தன. அவரின் கண்கள் திறந்திருந்தது. கருவிழிகள் இல்லை. உதடு அசையவில்லை ஆனால் ஓம் என்ற சப்தம் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.

பயத்தால் உடல் நடுங்கினாலும், தன் குருவை கண்டுவிட்டோம் என மனதில் எண்ணம் எழுந்து பயத்தை போக்கியது.

“குருநாதா...” என சப்தம் எழுப்பிய வண்ணம் அந்த உருவிடம் சென்று கால்களை பற்றினான். நைந்து போன துணியை பிடிப்பதை போன்று உணர்ந்தான்.

“அப்பு உனக்காகத்தான் பல நூற்றாண்டுகளாக இங்கே இருக்கிறேன்” உடலில் சலனம் இல்லை உதடு அசையவில்லை ஆனால் சப்தம் மட்டும் கேட்டது.

குகை அறையில் குரல்கள் எதிரொலித்து இரண்டு முறை கேட்பது அமானுஷமாக இருந்தது.

“பல நூற்றாண்டுகளாகவா? எனக்காக காத்திருக்கிறீர்களா? ஏன் குருவே...நான் ஆன்மீக தூண்டுதல் கொண்டு என் வீட்டை துறந்து உங்களை இப்பொழுது  தானே தேடி அடைந்தேன்” என்றான் அப்பு...

அந்த உருவின் கால்கள் மெல்ல அசைந்தது.. இலை சருகு போல இருந்த கால்கள் மெல்ல உயர்ந்து அப்புவின் நெற்றியை நோக்கி உயர்ந்தது. அப்புவின் புருவ மத்தியில் கால் கட்டைவிரலை வைத்தது அந்த உருவம்.....

பெரு நாட்டின் மீனவன், ஆஸ்திரேலிய பழங்குடிப் பெண் என துவங்கி ரஷ்யாவின் போர் வீரனாக, துருக்கியில் விலைமகளாக, பெரிய மடாலயத்தின் மடாதிபதியாக இப்படி  நாற்பதுக்கும் அதிகமான காட்சிகள் விரிந்து சுழன்று அப்புவின் புருவ மத்தியில் அடங்கியது.

சில வினாடிகள் மெளனத்திற்கு பின் தன் சுயநினைவு வந்தவனாக கண்கள் திறந்தான் அப்பு. விளக்காமல் விளக்கிய குருவின் காலடியில் படுத்திருந்தான் அப்பு. 

“அப்பு...இனி காத்திருக்க முடியாது. இந்த உடம்பை விடுத்து மற்றொரு உடலை பெறும் நேரம் வந்து விட்டது. நீ இங்கிருந்து கிளம்பி மீண்டும் உன் குடும்பத்தாருடன் சென்று வாழத்துவங்கு. ஆறு வருடம் கழித்து நான் உனக்கு மகனாக பிறந்து புதிய உடல் பெறுவேன். அந்த உடம்பில் இருக்கும் என்னை சோமநாத் என அழை.....பிறகு உன்னுடன் வாழ்ந்து உன்னை முக்தியை நோக்கி செலுத்துவேன்....” 

சில ஷணம் மெளனம் நீடித்தது...

ஓம்....ஆதி நாதாய.. 

-என பெரும் சப்தம் எழுப்பியது அவ்வுருவம்....

அப்பு கண் முன்னரே மணல் துகள்கள் போல உடல் உதிர்ந்து விழுந்தது. உடல் இருந்த இடத்தில் புற்றுபோல சிறு குவியல் மட்டுமே தென்பட்டது.

கனவு போல நடந்து முடிந்த சம்பவத்தை நம்ப முடியாமல் குகையிலிருந்து மெல்ல வெளிப்பட்டு தென் திசையில் இருக்கும் தன் வீட்ட நோக்கி நடந்தான் அப்பு. சாம்சார பந்தத்தை துறந்த அப்புவை ஆன்மீகம் மீண்டும் சம்சார பந்தத்தில் இணைத்தது.

(மேளா தொடரும்)