Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, May 17, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 4

மண் கொண்டு செல்லும் மாட்டு வண்டி சுமந்து செல்லும் மண்ணின் சிறு பகுதியை பயணம் செய்த வழி எல்லாம் தூவிச்செல்லுவதை பார்த்திருக்கிறீர்களா? அதுபோல நம் பாரத கலாச்சாரம் ஆன்மீக நிலையில் கடவுள் என்ற தத்துவத்தை பல்வேறு வகையான விளக்கம் கொடுத்துள்ளது. அவை பல்வேறு இடங்களில் தூவப்பட்டு பல்வேறு மதங்களாக கிளைத்தெழுந்தன. அனைவரும் கடவுள் கொள்கை கொண்ட அந்த சிறு மண்கட்டியை கொண்டு தாம் அறிந்ததை பிரம்மாண்டமானது
என்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் அந்த மண் சுமந்த மாட்டு வண்டியை முழுமையாக பார்த்ததில்லை. அதில் இருந்து சிதறி விழுந்த மண் கட்டிக்கே இந்த அளவு அவர்கள் பேசுகிறார்கள் என்றால் மண் வண்டியே இவர்களிடம் கிடைத்தால்?

அதுபோல நம்மிடையே பலர் பாரத கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் என்பார்கள், பலர் இந்து மதத்தை காப்பேன் என்பார்கள். ஆனால் இவர்களுக்கு நம் கலாச்சாரத்தின் மூலம் எது? அது எப்படி தோன்றியது போன்ற விஷயங்கள் தெரியாமலேயே வரட்டுத்தனமாக கோவிலை காப்பாற்றுகிறேன், இறைவனையே காப்பாற்றுகிறேன் என குதிப்பார்கள்.

நம் கலாச்சாரத்தில் ஆன்மீகம் தோன்றியவுடன் சொன்ன முதல் வாசகம் என்ன தெரியுமா? “கடவுள் இல்லை..!”

நீங்கள் நினைப்பது போல நாத்தீக ரீதியான “கடவுள் இல்லை” என்பதல்ல இது. நீ நினைப்பதெல்லாம் கடவுள் இல்லை என்பதே இவ்வாசகத்தின் உள்பொருள்.

சில வரலாற்று அறிஞர்களும் இலக்கியவாதிகளும் வேத ரிஷிகள் பலர் நாத்திகர்கள் என்பார்கள். அது முற்றிலும் தவறு. என்னை பொருத்த வரை கடவுளின் இருப்பை நம் கலாச்சாரத்தில் யாரும் மறுத்ததில்லை.

அவர்கள் மறுத்தது எல்லாம் கடவுள் என நீங்களாகவே முடிவு செய்தவை தவறு என்பது மட்டுமே ஆகும்.

நம் கலாச்சாரத்தின் ஆன்மீக மூலத்தை தெரிந்துகொள்ளாவிட்டால் இதிகாசங்கள், புராணங்கள் என எதையும் தெரிந்து கொள்ள முடியாது. ஏன் நம்மை பற்றியே தெரிந்துகொள்ள முடியாது.

நம் கலாச்சாரத்தில் முதலில் ஆன்மீகம் துளிர்விடும் பொழுது சின்ன செடியாக இருக்கவில்லை. எடுத்தவுடனேயே அது விஸ்வரூப நிலையில் பிரம்மாண்ட ஆலமரமாக இருந்தது. சராசரி மக்களுக்கு இது மிகவும் அதிகமான விஷயம், இப்படிபட்ட பேருண்மையை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த ரிஷிகளும் ஞானிகளும் எளிமையாக்கி நமக்கு கொடுத்தனர். அப்படி எளிமையாக்கிய விஷயமே மதமாக நம்மிடையே இருக்கிறது.

அப்படி நம் கலாச்சரத்தில் தோன்றிய பிரம்மாண்ட விஷயத்தை தான் இனி பார்க்கப்போகிறோம்.

இந்த பிரம்மாண்ட விஷயத்திற்கு என்ன பெயர்?

கோவில், பூஜை என எதுவும் பின்பற்றாமல் விட்டேந்தியாக திரியும் நபரை வயதானவர்கள் “சடங்கு சாங்கியம்’ தெரியாம வளர்ந்துட்டான் என்பார்கள் அல்லவா?

வேதத்தின் ஆறு பகுதியை ஷட்-அங்கம் என்பார்கள். அதுவே தமிழில்
மருவி சடங்கு என ஆனது. அப்படியானால் சாங்கியம் என்றால்?

நம் கலாச்சாரத்தில் தோன்றிய முதல் ஆன்மீக சிந்தாந்தம்தான் இந்த சாங்கியம் ஆகும். இதுவே அந்த பிரம்மாண்ட விருட்சம்.

இது என்ன சொல்லுகிறது தெரியுமா?

நீ இருப்பது மட்டுமே நிஜம். மற்றவை அனைத்தும் பொய்..!

எளிமையாக சொன்னால் “அஹம் பிரம்மாஸ்மி..!”

(வினைத் தொடரும்..)

7 கருத்துக்கள்:

virutcham said...

இந்த அஹம் தான் I am ஆச்சோ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விருட்சம்,

அஹம் , i am ஆனது மட்டுமல்ல.
அஹம் பிரம்மாஸ்மி என்பது
- "I am that I am" ஆச்சு..!

Sivamurugan said...

சுவாமிஜி,

இப்பதிவை இருமுறை படித்து விட்டேன்! நீங்கள் சொல்லவருவதை அனுமானிக்க தான் முடிகிறது ஆனால் முழுமையாக புரிந்துகொள்ள் முடியவில்லை!

மீண்டும் படித்து பார்க்கிறேன்.

கடவுளை காப்பாத்த தேவையில்லை என்று சொல்ல வருகிறீர்களா அல்லது இத்தனை பேரை காப்பவன் தன்னை காத்துக்கொள்வான் என்கிறீர்களா? பு.த.செ.வி.

வடக்கே ஸோம்நாத் கோவிலில் நடந்த நிகழ்வும், தெற்க்கே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சோமசுந்தரருக்கும் நடந்த நிகழ்வுகளை (கம்பண்ணர் கண்ட காட்சி) மனதில் நீங்கா இடம்பெற்றதால் மேற்படி கேள்வி வர காரணாமாகிவிட்டது. தயவு செய்து விளக்கவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவமுருகன்,

உங்களின் வருகைக்கு நன்றி.

‘இந்து’ என்ற வார்த்தையை கண்டவுடன் பலர் மனதில் கட்டுரையின் விளக்கம் புரியாமல் சென்று விடுகிறது.
நீங்கள் மட்டுமல்ல நான் வெளியிடாத சில கமெண்டுகளும் இதில் அடங்கும்.


200 வருடங்களுக்கு முன்பு நடந்த சோமனாத்தையும், மீனாட்சி அம்மன் கோவிலை பற்றியும் ஏன் நாம் கவலைப்பட வேண்டும்? நாம் இந்து மதத்தை காக்கிறேன், கோவில எனது மத அடையாளம் என்றால் தற்சமயம் கேட்பாரற்று கிடக்கும் எத்தனையோ பழமையான கோவில்களை சிதில நிலையில் விட்டு வைத்திருப்பது எதனால்? இதையும் வேற்றுமதத்தவர் தடுத்தார்களா? இல்லை அக்கோவிலுக்கு செல்லுவதற்கும் இன்னும் கஜினி முகமது வாளுடன் நிற்கிறாரா?

தன்னை பற்றி அறியாமல், கோவில்களை பற்றியும் கலாச்சாரத்தை பற்றியும் அறிய முடியாது.

//கடவுளை காப்பாத்த தேவையில்லை என்று சொல்ல வருகிறீர்களா அல்லது இத்தனை பேரை காப்பவன் தன்னை காத்துக்கொள்வான் என்கிறீர்களா//

கடவுளை நாம் காக்க வேண்டுமா? கடவுள் என்ற பெயரில் நாம் உருவாக்கிய விஷயங்களையும், அதன் பொருட்டு நம் ஆணவத்தால் உருவாக்கிய ஆடம்பரத்தையுமே நாம் காக்க வேண்டும்.

கடவுளை யார் நினைக்கிறார்கள்? , இது என் கோவில், என் மதம் என்ற ஆணவத்தை காப்பதது தான் நடக்கிறது.

இந்த இணைய தளம், மதம் சார்ந்த விஷயங்களுக்கானது அன்று. இத்தொடரை முழுமையாக படித்தால் உங்களுக்கும், சில ’இந்து மத’ திடீர் காப்பாளர்களுக்கும் புரியும்.

நன்றிகள்.

pranavastro.com said...

நீ நினைப்பதெல்லாம் கடவுள் இல்லை

Irai Kaathalan said...

இது போன்று எடுத்துரைத்தால் போதும் , உண்மையை உணர மக்கள் இப்போதுதான் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் என என்ன தோன்றுகிறது (பட்டால் தான் புத்தி வரும் நு சும்மாவா சொன்னார்கள் , முன்னோர்கள் ) . ஏனெனில் இதே விடயங்களை 10 வருடங்களுக்கு முன்பு சொல்லி இருந்தால் ????
அருமையான தொடரை ஆரம்பித்து எழுதி வரும் உங்களுக்கு உள்மனதார வாழ்த்துக்கள் !!!

Sivamurugan said...

நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

பல சமயங்களில் கரையாத ஒன்று கரைந்தும், மீண்டும் திரண்டதை கரைந்த மகிழ்ச்சி என்னுள்.

மிக்க நன்றி.