Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 10, 2010

ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்


சத்சங்கம் என்றால் உண்மை இணையும் இடம். சத்- உண்மை, சங்கம் கூடும் இடம். இது ஒரு முரண்பாடான வார்த்தை தான். உண்மை என்பது பன்மையாக இருக்காது.

உண்மைகள் என்னும் சொல் வேடிக்கையானது. பொய் வேண்டுமானால் பன்மையாக இருக்க முடியும். ஒரு உண்மையை மறைக்க பல பொய் என்று தானோ கூறுகிறோம்.

உண்மை என்பது ஒன்றுதான் என்றால் எப்படி சந்திக்க முடியும். இரண்டு விஷயம் இருந்தால் தானே சங்கம் - சந்திப்பு என்பது சாத்தியம் ஆகும் என கேள்வி எழலாம்.

நம்மில் இறைவன் ஆன்ம வடிவில் உறைகிறான் என்பது உண்மை. இந்த உண்மை உங்களிடமும் என்னிடமும் உணர்ந்துகொள்ள இரு ஆன்மாவும் இணையும் இடமே சத்-சங்கம்.

ஆதிசங்கரர் தன் பஜகோவிந்தத்தின் பின்வருமாறு கூறுகிறார்.

சத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.

ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும்.

ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம்.

கடந்த பத்து வருடங்களாக பல ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் சத்சங்கங்களை கடந்து வந்துள்ளேன். ஆன்மீக சாதகர்கள், ஆன்மீக தேடல் கொண்டவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது அலாதியானது.

ஆணவம் கொண்ட அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு இறைவன் அருளிய பதிலால் ஆணவத்தை சிதறடித்து அவர்களை முழுமையை நோக்கி பயணிக்கச் செய்வது அலாதியான அனுபவம்.

எனது சத்சங்க கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறோம். இப்புத்தகம் தயாராகி வருகிறது. உங்களுக்கும் கேள்விகள் எழுமானால் கேளுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய பதில்களை அளிக்கிறேன்.

இனிவரும் நாட்களில் ‘சத்சங்கம்’ என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதி வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

உங்களுக்காக சத்சங்கத்தில் கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்வியையும் அதன் பதிலையும் கீழே விவரித்துள்ளேன்.

-------------------------

கேள்வி : நீங்கள் துறவியா?

பதில் : என்னை பற்றி நான் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், நான் பொறாமை, குரூரம், பேராசை போன்ற தமோ குணத்தை துறந்தவன்.

துறவு என்பதை நீங்கள் தவறாக நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். குடும்பத்தையும் பொறுப்புகளையும் விட்டு ஓடுவது துறவு அல்ல. உலகே என் குடும்பம் என்றும் உலக நிகழ்வுகள் என் பொறுப்பு என்றும் இருப்பவன் துறவி.

கேள்வி : துறவி என்றால் பிச்சை எடுத்து தானே வாழ வேண்டும்.? நீங்கள் அப்படியா?

பதில் : ஆம். தனக்காக எதையும் உருவாக்காமல் பிறருக்காக உருவாக்கி அதில் தான் ஒரு பிச்சைக்காரனாக வாழ வேண்டும். இதுவே துறவு. நான் தொழிலதிபர் என்றோ அல்லது வியாபாரி என்றோ என்னை அடையாளப்படுத்த முடியுமா? நான் என்னை பிச்சைக்காரன் என கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி : நான் உணவுக்காக பிச்சை எடுப்பதை கூறுகிறேன் நான். நீங்கள் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுத்தது உண்டா?

பதில் : உண்டு. என் செயல்பாடுகளும் நான் தினமும் உண்ணும் உணவும் பிறர் அளிக்கும் பிச்சை தான். நான் எதையும் உருவாக்குவதில்லை.

கேள்வி : பிச்சையாக எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வீர்களா?

பதில் : பிச்சை எடுக்க மட்டுமே எனக்கு உரிமை உண்டு. பிச்சையாக இதை கொடு என கேட்டால் அது பிச்சையாக இருக்காது அல்லவா?

கேள்வி : ஒரு பெண் தன்னையே பிச்சையாக அளிக்கிறேன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில் : மாட்டேன்.

கேள்வி : ஏன்?
பதில் : எனக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை...!


Tuesday, May 4, 2010

மரம் வெட்டி மாநாடு கொண்டாடுவோம்..!


சுப்பாண்டியும் நானும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்காக பயணம், குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் சுப்பாண்டி வாகனம் செலுத்த துவங்கினான்.எங்கள் வசிப்பிடத்திலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் சென்று இருப்போம் மிகப்பெரிய வாகன நெரிசல். நீண்ட தூரத்திற்கு வாகனம் நெருக்கடியில் நின்று இருந்தது. கோவையில் சில சாலைகள் தவிர பிற இடங்களில் வாகன நெரிசல் காண முடியாது.

நாங்கள் சென்று கொண்டிருந்தது கோவை நகரிலிருந்து வெளிப்புறம் இருக்கும் சாலை. இடையர்பாளையம் மற்றும் வடவள்ளி என்ற இரு ஊர்கள் சந்திக்கும் நான்கு முனை சாலைகள். இந்த சாலையில் என்றுமே இவ்வாறு நெரிசல் இருந்தது இல்லை. இது போன்ற வாகன நெரிசல் எதற்கு என தெரியவில்லை.

பொருமை இழந்த சுப்பாண்டி விஷயம் என்ன என விசாரிக்க சென்றான். அங்கே இருந்த ஒரு முதியவரிடம் என்ன விஷயம் என நான் கேட்டேன்.

முதியவர் கலங்கிய குரலுடன், “சாமீ...இடையர்பாளையம் வடவள்ளி சந்திப்பில் இருக்கிற நூறு வருஷ அரசமரத்தை வெட்டிக்கிட்டு இருக்காங்க. செம்மொழி மாநாட்டுக்கு ரோடு அகலப்படுத்தி கோபுர லைட் போடராங்களாம். வீணா போனவங்க.” என்றார்.

எனக்கு ஏதோ நெருக்கமானவர்கள் இறந்தால் ஏற்படும் துக்கத்தை போல தொண்டையை அடைத்தது. அதுக்குள் சுப்பாண்டி வந்து சேர்ந்தான்.

“சாமீ செம்மொழி மாநாட்டுக்கு ரோடு போடறாங்களாம். அது தான் டிராபிக் ஜாம்” என்றான்.

சரியாக விசாரிக்காமல் வந்த சுப்பாண்டி மேல் கோபம் வந்தது. இருக்கும் துக்கத்தில் இவன் தொல்லை வேறு என்று.. வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சாலையின் சந்திப்புக்கு சென்றோம்.அங்கே நூறுவருட மரம் படுகொலைச் செய்யப்பட்டிருந்தது.

கோபமும் துக்கமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து என்னக்கு தடுமாற்றத்தை உண்டு செய்தது.

சினிமாவில் காட்டும் பஞ்சாயத்து காட்சியில் வருவது போல திண்ணை கட்டப்பட்ட அரசமரம். பலர் ஓய்வாக அமரவும், நான்கு வழிச்சாலையின் ஒதுக்கு புறமாகவும் இருந்த இம்மரம் இப்பொழுதுஇல்லை.

நூறு வருட அரசமரத்தை வெட்டி, ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்று இருக்கிறார்கள். மரம் இருப்பதால் வேகத்தடை போல செயல்பட்டது பலர் மெதுவாக வந்து சென்ற சாலை எதிர்காலத்தில் விபத்துபகுதியாக மாறும்.

மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு உயரத்தை குறைத்து பிறகு இவர்களின் மேம்பாட்டு பணியை செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் வேருடன் சாய்த்திருக்கிறார்கள். நூறுவருட மரத்தை ஒரு மணி நேரத்தில் வெட்டி விடலாம். ஆனால் நூறு வருடம் முயற்சித்தாலும் அதே மரத்தை வளர்க்க முடியுமா?

சுப்பாண்டியிடம் இப்படி புலம்புக்கொண்டே வந்தேன். வேறு வழியாக சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். நிகழ்சி முடித்து வரும் வழியில் மீண்டும் அதே இடத்தை கடக்க வேண்டி இருந்தது.

வெட்ட பட்ட மரம் மற்றும் அந்த சாலை அனைத்தும் வெறுமையாக காட்சி அளித்தது.

“மரம் தாவரம்னு எப்பவுமே பேசறீங்களே சாமி, மரம் அப்படி என்ன கொடுக்குது?” என்றான் சுப்பாண்டி.

“சுப்பு. விருக்‌ஷ ஆயுர்வேதம் என்ற சாஸ்திர நூல் மரம் 150 பலன்கள் மனிதனுக்கு மட்டும் கொடுப்பதாக சொல்லுது. நம்ம சும்மா விரல் விட்டு எண்ணினாலே பல பலன்கள் வரிசைப்படுத்தலாம். காய், கனி, நிழல், நீர், மழை, பறவைகளுக்கு வீடு, அதன் மூலம் இயற்கை சுழற்சி, மரச்சாமான்கள், சுத்தமான காற்று, மருத்துவ குணம் கொண்ட சூழல், மன அமைதி, மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு செய்தல், பல நுண்ணுயிர்கள் பெருக்குதல், சூழலில் வெப்பத்தை குறைத்தல், ப்ராணனை மேம்படுத்துதல். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். தாவரம் தாய் மாதிரி சுப்பு என்றேன்” என்றேன்.

எங்கள் அறக்கட்டளையின் வாசலை வந்து அடைந்ததும் நான் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே செல்ல நடக்கையில் பின்னாலிருந்து சுப்பாண்டியின் குரல்...

“சாமி மரத்தை பத்தி ஒரு சந்தேகம்....”

என்ன என்பதை போல பார்த்தேன்.

“மரம் சீ.டி படிக்குமா?” என்றான்.


Thursday, April 29, 2010

நித்ய பிரம்மச்சாரி...!

ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள். மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அன்று ரோகிணி நட்சத்திர தினம். பிருந்தாவனம் கோலகலமாக இருந்தது. கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவு பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகறைக்கு செல்ல முயன்றனர்.

யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படி சந்திப்போம் என குழப்பமானார்கள்.

யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார். அவர்களிடம் கோபியர்கள் சென்று, “ரிஷிகளின் ரிஷியே இன்று கிருஷ்ணனின் அவதார தினம், அவனை சந்திக்க வேண்டும் ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றை கடக்க முடியுமா என தெரியவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும்” என்றார்கள்.

“ கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்கு கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்” என்றார் வியாச மஹரிஷி.

கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார். கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனை பிறந்த நாள் அன்று சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.

அனைத்து கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி. பிறகு கூறினார், “ கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள். யமுனை வழிவிடும். நீங்கள் கூற வேண்டியது இது தான். வியாசர் நித்ய உபவாசி"

கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன். இவரோ அனைத்து கூடையும் காலி செய்துவிட்டார். மேலும் நித்ய உபவாசி என்கிறார். என்றும் உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா என சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்

யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.

யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.

மறுகரைக்கு சென்று கிருஷ்ணனை சந்தித்தனர். கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

“எங்களை காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூற சொன்னார். யமுனை வழிவிட்டது. நாங்கள் மீண்டும அதே விஷயத்தை கூறி யமுனையை கடக்கலம் என நினைக்கிறோம். நீ அருள் தர வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்டனர்.

மாய புன்னகையுடன் கிருஷ்ணன் , “பக்தியின் சிறந்த கோபிகைகளே யமுனையை கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள் - கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” என்றார் கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் “கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” கூறினார்கள். யமுனை வழிவிட்டது.

புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.

“மஹரிஷியே. இது என்ன முரண்பாடு. நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே? இது என்ன மாய வேலையா?”

“கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாக கருதுகிறேன். இறைவனே என் உணவை உண்கிறார். அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.

கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளை செய்கிறான். அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை. ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான். அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”

தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.

-------------------------------

டிஸ்கி : மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது. சில நாட்களாக பத்திரிகை தொலைகாட்சிகளை பார்க்கும் பொழுது இக்கதை ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !

தற்காலத்தில் இக்கதை நடந்தாலும் தவறு இல்லை. ஆனால் மறுகரையில் வியாசர் இருந்திருந்தால் செய்தித்தாளில் வந்திருப்பார். தான் உபவாசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது வியாசருக்கு தெரிந்திருக்கிறது. சிலருக்கு தெரியவில்லை.

அக்கரைக்கு இக்’கறை’ பச்சை..!

Tuesday, April 27, 2010

பழைய பஞ்சாங்கம் 27- ஏப்ரல் -2010

ரைட்டர்ஸ் ப்ளாக்

ஒரு வலையுலக நண்பர் என்னை சந்திக்க வந்தார். சிங்கை சென்று வந்ததிலிருந்து நீங்க அதிகமா எழுதறது இல்லையே என்றார். ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று, ”வேறு ஒன்னும் இல்லை சில எழுத்தாளர்களுக்கு அதிகமா எழுதினா ஒருகட்டத்தில் எழுத விசயம் இல்லாம போயிடும் அதுக்கு 'ரைட்டர்ஸ் ப்ளாக்’-னு பேரு. எனக்கு அது வந்துடுச்சோனு நினைக்கிறேன்.”என்றேன்.

என் அருகில் இருந்த சுப்பாண்டி என் காதருகே குனிந்து, “எழுத்தாளர்களுக்கு தானே சாமி வரும். உங்களுக்கு ஏன் வந்துச்சு?” என்றான். இந்த ரைட்டரே ப்ளாக்கு தான்யா என சொல்ல நினைத்தேன்... :)

ஒத்துக்க மாட்டீங்களே... சரி விடுங்க...

----------------------------

சொகுசு சாமி

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். இணையம் மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்துவிட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்த்தேன். சென்னை பதிவர் ஒருவர் நான் இரவு நேரத்தில் ஆன் லைனில் இருப்பதை பார்த்து விசாரித்தார். வகுப்புகள் இப்பொழுது தான் முடிவடைந்தது என்றேன்.

“என்ன சாமி நீங்க விவரம் தெரியாதவரா இருக்கீங்க, மிச்சவங்க மாதிரி சொகுசா இருக்கிறதை விட்டுட்டு இப்படி கஷ்டப்படறீங்களே... ” என்றார்.

அவரிடம் சொன்னேன், “யாரு சொன்னா நான் கஷ்டப்படறேன்னு? என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா?” என்றேன்.

அவர் நினைத்திருப்பார், “இது கிட்ட வந்து ராத்திரி வாயக்கொடுத்தோமே”

----------------------

அமானுஷம் அதிசயம்

தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றி ஏதாவது தொடர் வந்தாலும், அமானுஷம் என அடித்தொண்டையில் அலறும் நிகழ்ச்சிகள் வந்தாலும் விடாமல் பார்க்கும் மாணவர் ஒருவர் இருக்கிறார்.

இவற்றை பார்ப்பதுடன் நிறுத்தாமல் என்னை சந்திக்கும் பொழுது அதை பற்றி கூறி சோதிப்பார். அவர் கூறுவதை எல்லாம் இவ்வளவு காலம் பொறுமையாக கேட்ட நான் கொதித்தெழுந்தேன்.

அவரிடம் கூறினேன். மனித உடலை விட அமானுஷமானது எதுவும் இல்லை. இருக்கும் பொழுது லேசாக இருக்கும் உடல், இறந்த பிறகு நான்கு பேருக்கு மேல் தூக்கும் அளவுக்கு பளுவாக தெரிகிறதே... அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார்? அமானுஷமாக இல்லையா? என்றேன்.

என்னை அமானுஷமாக பார்த்துவிட்டு சென்றார் :)

----------------------
த்யானம் செய்தால் என்ன கிடைக்கும்..?

சில மாதம் வெளியூர் பயணத்தால் இணைய உலக நண்பர்களின் எழுத்தை படிக்க முடியாமல் பல நல்ல விஷயங்கள் விடுபட்டு போனது. பல எதிர்வினைகளும் மிச்சம் :)

துக்ளக் மகேஷ் எனும் நம் வலையுலக நண்பர் எழுதிய இந்த கட்டுரை அனைவரும் படித்து ரசிக்க வேண்டியது. அந்த பதிவில் அப்துல்லாவின் குசும்பும் ரசித்தேன்.

இங்கே க்ளிக் செய்யவும் : த்யானமும் வியாக்யானமும்

என் படத்தை போட்டு அவர் கட்டுரை எழுதியதால் படிக்க சொல்லுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். :)

------------------------

விரைவில் தொடர் ஆரம்பம்

எத்தனையோ விஷயங்கள் எழுதும் எண்ணம் இருந்தும் பணியின் காரணமாக எழுத முடியவில்லை. விரைவில் தொடர் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். பலூன்காரனிடம் இருக்கும் அத்தனை பலூனையும் பார்த்த குழந்தை போல ஏகப்பட்ட தலைப்புகள் என் முன்னே இருக்கிறது. (க்ஹூம்..) எதை எழுத என புரியவில்லை.

சில தலைப்புகள் தருகிறேன். அனேகர் கூறும் தலைப்பை எழுதுகிறேன்.
கள்ள ஓட்டுக்கள் வரவேற்கப்படுகிறது... :)

  • பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?

  • மஹா கும்பமேளா என்பது என்ன?

  • தியானமும் ஞானமும்

  • வேதகால மருத்துவம்

  • கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கூறவும்...
-------------------