Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, October 8, 2009

மந்திர சக்தியும் - ஜெயமினி சூத்திரமும்

ப்ரணவ பீடம் என்ற அமைப்பு சென்ற வாரம் இரு குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது.

மந்திர சக்தி என்ற ஒலி குறுந்தகடு :

வேத மந்திரங்களை சரியான முறையில் உச்சரிக்கவும், தியானத்திற்கு உதவும் பொருட்டும் இந்த குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது.

மந்திரம் என்பது இறையாற்றலின் ஒலிவடிவம். இந்த வலைதளத்தில் முன்பே மந்திர சக்தி பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது.

இதில் இருக்கும் மந்திர ஒலியை கேட்க இங்கே அழுத்தவும்.
Maha Mmirthaynjai ...

அளவு : ஒரு மணி நேரம்
விலை : 110.00 ரூபாய்


ஜெயமினி சூத்திரம் :


ஒலி,ஒளி தகடாக வெளிவந்திருக்கும் ஜெயமினி சூத்திரம் ஒரு ஜோதிட யுக்தியாகும். ஜோதிட முறையில் ஜெயமினி என்ற ரிஷியால் கண்டறியபட்ட இந்த முறை உலகில் மறையும் தருவாயில் இருக்கிறது. ப்ரணவ பீடம் சார்ப்பில் இம்முறை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியே இந்த குறுந்தகடு.
ஜெயமினி ஜோதிடத்தை தெரிந்து கொள்ள அடிப்படை ஜோதிட அறிவு அவசியம்.

ஜெயமினி ஜோதிடத்தை ஸ்வாமி ஓம்கார் சுவாரசியமாக விளக்கும் ஒரு காட்சி இதோ..



அளவு : 110 நிமிடங்கள்
விலை : 260.00 ரூபாய்


-----------------------------------------------------------------------------------

மேற்கண்ட குறுந்தகடுகளை தபாலில் பெற தொடர்புகொள்ளவும் :
admin@pranavapeetam.org.
தொலைபேசி எண் : 91 99 44 2 333 55.

Tuesday, October 6, 2009

வேட்டைக்காரன் பாடல்களில் ஆன்மீக அத்துமீறல்

சென்ற வாரம் வாடகைக் காரில் ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். டிரைவர் ஒரு இசை தட்டை ஓடவிட்டார். அதில் இருக்கும் பாடலை கேட்டவுடன் என் நிலை எப்படி இருந்தது என இந்த கட்டுரையின் கடைசி வரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

தற்சமயம் சினிமா உலகில் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் ஆன்மீக அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள். சிலர் ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமல் அசிங்கபடுத்துகிறார்கள்.

இசை என்பது இறைவனின் வடிவம். நாதமே கடவுளின் சத்சொரூபம் என்கிறது அனைத்து புனித நூல்களும். நாதத்தில் லயம் ஆகும்பொழுது இறைவனின் நிலையை சில ஷணங்கள் உணர முடியும் என்பது உணர்ந்தவர்களுக்கு தெரியும். முக்கியமாக திரை இசை இந்த வரம்புகளை மீறி செயல்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

வேட்டைக்காரன் என்ற திரைப்படம் நடிகர் விஜய் என்பவர் நடித்து வெளிவர இருக்கிறது. இத்திரைப்படத்தின் இசையை விஜய் ஆண்டனி என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் 'நக்கமுக்க' என்ற தெய்வீக இசையை உலகுக்கு அளித்தவர். படத்தின் நாயகன் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த திரைப்படத்தில் புலி உறுமுது என்று ஒரு பாடல் இருக்கிறது. தன் அரசியல் பிரவேசத்திற்காவும், இலங்கை தமிழருக்காவும் கருத்தில் ஏற்படுத்தபட்ட பாடல் என நினைக்கிறேன். இப்பாடலில் வேத மந்திரங்கள் அத்துமீறி உபயோகப்படுத்தபட்டுள்ளது. எத்தனையோ விஷயங்கள் திரையிசையில் பயன்படுத்த இருக்க இவர்களுக்கு ஒரு தனிமனித துதிபாடலுக்கு வேதமந்திரம் தான் கிடைத்ததா?

அஷத்தோமா சத்க்ரமய
தமசோமா ஜோதிர்கமய
மிர்த்யோமா அமிர்தம் கமய

என்ற வேதமந்திரத்தின் ஆழமும் அர்த்தமும் அந்த இருவருக்கும் தெரியுமா?
இதை கூட கல்நெஞ்சுடன் பொருத்துக்கொள்ளலாம்..பாடலின் ஆரம்பத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளை கத்திவிட்டு ஓம் ஷாந்தி ஓம்ஷாந்தி என கூறி இவர்களின் உளரலையும் வேத மந்திரமாக்க முயற்சி செய்வது கண்டனத்திற்கு உரியது.

திரை இசையில் தமிழ் மொழியை கொன்று குழிதோண்டி மூடியவர்களுக்கு கிடைத்த அடுத்த பலி வேதமந்திரம் என நினைக்கிறேன்.

சில திரைப்படத்தில் மந்திரம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். அந்நியன் என்ற படத்தில் கருட புராணத்தின் வரிகளையும், உன்னை போல் ஒருவன் படத்தில் பகவத் கீதையின் வரிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். (இந்த கட்டுரைக்கு தகவல் திரட்டும் பொழுது தெரிந்து கொண்டேன். மேற்கண்ட கண்றாவியை பார்க்கவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்..)

பகவத் கீதை ஒரு சமயம் சார்ந்த மத நூல். உங்களுக்கு நான் கூறுவது ஆதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். அதுதான் உண்மை. கிருஸ்துவத்தில் பைபிள், இஸ்லாமில் குரான் போல பகவத்கீதை 'இந்து இஸம்' உருவாக்கியவர்களால் பயன்படுத்தபடும் நூல்.

வேதசாஸ்திரத்தின் மெய்ஞான கருத்துக்கள் அதில் இருப்பதால் பகவத் கீதையை நாம் வணங்கலாம். அனைத்து மதங்களிலும் வேத சாஸ்திரம் பொதிந்திருக்கிறது.

நான்கு வேதமும், உபநிஷத்களும் ஒரு மதம் சார்ந்தது அல்ல. இதை உருவாக்கியவர்கள் கிடையாது. அவை சக்தியின் குறியீடுகள், இறைவனின் அருள் ஆற்றல்கள் அதை திரையிசையில் பயன்படுத்துவது மிக கொடூரமான செயல்.

இந்த படத்தின் நாயகனும் இசையமைப்பாளரும் தெரியாமல் பயன்படுத்தினார்கள் என கூறமுடியாது. காரணம் இருவரும் ஒரு யோக கழகத்தில் யோகம் பயின்றவர்கள். அந்த பயிற்சில் கண்டிப்பாக இந்த வேத மந்திரத்தை கூறி இருப்பார்கள்.

வேத சாஸ்திரம் கூட வேண்டம் கிருஸ்துவமோ,இஸ்லாமோ சார்ந்த மத வாசகங்களை இவர்களின் குத்து பாடலில் சேர்த்தால் இவர்கள் நிலை என்ன?

வேத சாஸ்திரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்கும் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்துவார்கள் போல இருக்கிறது. நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது. வேதசாஸ்திரமும் தன்னை மனிதன் காப்பான் என காத்திருப்பதில்லை. சுருங்கச்சொன்னால் வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்.


இந்த பாடலை கேட்டவுடன் எப்படி இருந்தது என கேட்கிறீர்களா? அந்த திரைப்படத்தின் அடுத்த பாடல் வரியை போல இருந்தது...

என் உச்சி மண்டையில சுர்ர்ங்குது..............

Monday, October 5, 2009

உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..! - பகுதி 2

தங்கம் என்ற உலோகம் தற்சமயம் மக்களின் வாழ்வாதரத்தை முடிவு செய்யும் ஒரு விஷயமாகவிட்டது. ஒருவரிடம் இருக்கும் தங்கம் அவரின் அந்தஸ்த்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டின் பொருளாதர நிலையும் இத்துடன் மறைமுகமாக இணைந்து உள்ளது. இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே அப்படி இருக்கிறது.

ஐநூறு வருடங்களுக்கு முன் தங்கம் மிக மலிவான விஷயமாக பாரதத்தில் இருந்தது. மலிவு என்பது பொருள் நிலையில் அல்ல. பயன்பாட்டு நிலையில் எனலாம். ஆபரணங்கள் உடலில் நகைக்கடை விளம்பர மாடல் போல மக்கள் அணிந்து உலா வந்தார்கள். இன்றும் கூட ராஜஸ்தான் கிராமிய மக்களிடையே இப்பழக்கம் உண்டு. ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்கள் வடமாநில கோவிலை கொள்ளை கொள்ள வரும்பொழுது அந்த கோவிலில் இருக்கும் தங்கத்தை எடுத்த செல்ல தயாராக ஒரு குதிரை படையை கொண்டுவருவார்கள். அதாவது அவர்களுக்கு நிச்சயமாக தெரியும் பல டன் எடைகொண்ட தங்கம் கிடைக்கும் என்பது.

(கி.பி 1020) சோமநாதர் கோவிலை கஜினி கொள்ளைகொள்ளும் பொழுது எத்தனை முறை கொள்ளை கொண்டாலும் அந்த நூற்றாண்டில் நம் மதிப்பில் பத்து கோடிக்கு குறைவில்லாமல் கோவிலில் கொள்ளையடித்தான். வரலாறு சொல்லுவது போல இவர்கள் இஸ்லாமியர்கள் என நான் சொல்ல மாட்டேன். இஸ்லாமை அவர்கள் சரியாக புரிந்துகொண்டால் இவ்வாறு செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார் கஜினி.

காசிவிஸ்வநாதர் கோவிலையும் சோமநாத் கோவிலையும் செங்கல் செங்கலாக உருவி எடுத்து சென்றார்கள். காரணம் செங்கலின் மையப்பகுதி தங்கக்கட்டிகளும் மேல் பகுதி செங்கல்லிலும் செய்து அதன் மேல் தங்ககவசம் போடப்பட்டிருந்தது. கோவிலையே தங்கமாக கட்டவில்லை மற்றபடி தங்கத்தில் அப்படி இழைக்கப்பட்டிருந்தது.

சக்திவாயந்த இந்த இடங்களை அரேபிய, ஆப்கானிஸ்தான் கொள்ளையர்கள் தகர்த்ததற்கு ப்ராயச்சித்தமாக அனேக சூஃபி ஞானிகள் இந்தியாவிற்கு வந்து அந்த இடங்களில் ப்ரார்த்தனை செய்து அடக்கமானார்கள். கொள்ளையர்களை பதிவு செய்தது போல சூஃபி ஞானிகள் வரலாறு பதிவு செய்யவில்லை.

பாரதத்தின் வடகிழக்கு நாடுகள் மலை மற்றும் வரண்ட பாலை பூமியாக இருந்ததால் தங்கம் என்பது அவர்களுக்கு ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. நம் மக்களுக்கு தங்கம் கோவிலில் போடும் காணிக்கையாகவும், நாணயம் பயன்படுத்தும் பொருளாகவும் இருந்தது. இங்கே நாம் கவனிக்கவேண்டும். எந்த பொருள் மலிவாகவும் லகுவாகவும் கிடைக்கிறதோ அப்பொருளிலேயே நாம் நாணயங்கள் செய்வோம். தற்காலத்தில் கரண்ஸி பேப்பரிலும், துருப்பிடிக்காத இரும்பு மலிவக கிடைப்பதால் பயன்படுத்துவதை போல அந்தகாலத்தில் தங்கம் வெள்ளி என்பது மலிவானதாக இருந்தது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆன்மீக ரீதியாகவும் கையாளப்பட்டதால் வாழ்க்கைதரம் மேம்பட நாணயங்கள் தங்கமாக இருந்தது. நமக்கு மலிவானது பிறருக்கு மிகவும் உயர்ந்ததாக இருக்கலாம். அதனால் தான் பிறநாட்டினருக்கு தங்கம் ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. ஒரு வேடிக்கை கதை ஒன்று பார்ப்போம்.

ஒரு வியாபாரி பொருட்களை கப்பலில் கொண்டு சென்று பல தேசங்களில் விற்பவன். ஒரு நாள் பயணமாகும் பொழுது புயலின் காரணமாக கப்பல் திசைமாறி வேறு ஒரு தீவில் ஒதுங்கியது. அங்கே இதுவரை பிற நாட்டினரை பார்க்காத மக்கள் வாழ்ந்துவந்தனர். கப்பல் என்ற ஒரு வாகனத்தையும், வியாபாரியின் உடை ஆகியவை அவர்களுக்கு வித்தியாசமாகப்பட்டது. தான் கொண்டு சென்ற சரக்குகளை அவர்களுக்கு விற்றுவிட்டு செல்லலாம் என எண்ணி அவர்களிடம் தான் கொண்டு வந்த பொருட்களை காட்டினான்.

அதில் ஒரு பொருள் தீவு மக்களை கவர்ந்தது. தீவின் அரசனிடம் வியாபாரியை கொண்டு சென்றார்கள். மக்கள் அரசனிடம் வியாபரியையும் அவனின் நவீன பொருளையும் அறிமுகப்படுத்தினர். அதன் தோலை நீக்கினால் கண்களில் கண்ணீர்வருகிறதாம். அப்படிபட்ட உணவு பொருளை வியாபாரி கொண்டு வந்திருப்பதாக சொன்னார்கள். புரிந்திருக்குமே. ஆம் அது வெங்காயம்.

அரசன் வியாபாரியின் பொருளுக்கு ஈடாக பல வைரம் வைடூரியம் தங்கம் என வெங்காயத்திற்கு எடைக்கு எடை கொடுத்தான். வியாபாரியும் மன நிறைவுடன் தன் நாடு திரும்பினான்.

எப்பொழுதும் கொஞ்சம் பணத்துடன் வரும் வியாபாரி அதிக செல்வத்துடன் வந்திருப்பதன் மாயம் புரியாமல் போட்டி வியாபாரிகள் முழித்தனர். ரகசிய தூதுவர்கள் மூலம் விஷயமும் தெரிந்து கொண்டான் ஒரு போட்டி வியாபாரி. தானும் கப்பலில் புதிய காய்கறிகள் தானியத்துடன் அந்த தீவு நோக்கி சென்றான்.

மக்கள் இவனையும் அரசன் முன் கொண்டு சென்றார்கள். அவன் கொண்டு வந்த பொருட்களை பார்த்த அரசன் மகிழ்ச்சி அடைந்தான். வியாபாரி கொண்டு வந்த பொருளுக்கு சமமான எடையில் தன்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத பொருளான வெங்காயத்தை அவனுக்கு பரிசாக அளித்தான்.


ஒருவருக்கு எளிமையாக கிடைப்பது பிறருக்கு அதிசயமானதாக இருக்கலாம். நம் பாரதத்தில் ஆன்மீகம் எளிமையாக கிடைக்கிறது. அதனால் மேற்கு நாட்டினர் அதை பெரிய விஷயமாக பார்க்கிறார்கள். உள்ளூர்காரர்களுக்கு அது வெங்காயம் ..!

உலகின் வல்லரசு நாடுகளின் நாணய மதிப்பு தங்கத்துடன் மறைமுகமாக இணைந்துள்ளதால் புதிதாக தங்க சுரங்கம் உருவாக பல நாடுகள் எதிர்ப்புடன் இருக்கிறார்கள். தங்க சுரங்கம் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தேவை நிறைவடையும். தேவை அதிகரித்தால்தானே விலை ஏற்ற முடியும்? (supply and demand) அதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என பயப்படும் வல்லரசுகள் புதிய சுரங்கம் என்பதை கானல் நீராக வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனுமதித்து ஒரு இருபது முப்பது சுரங்கங்கள் ஏற்பட்டால் நாம் கோக்கும் பெப்ஸியும் தங்க கேனில் குடிக்கலாம்.

தங்கம் எப்படி நம் சாஸ்திரம் கலாச்சாரம் சார்ந்ததோ அதுக்கு நேர் எதிரான சமாச்சாரம் ராசிகற்கள். தொலைக்காட்சி சேனலில் கூவி கூவி விற்கப்படும் ராசிகற்கள் நம் சாஸ்திரம் சார்ந்தவை அல்ல. அரேபியர்கள் தான் ராசிக்கற்களை நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். யுனானி மருத்துவ முறையில் படிகங்கள் (crystals), படிகாரங்கள் மற்றும் மலை உப்பு கொண்டு செய்யும் மருத்துவ பிரிவு உண்டு.

குறிப்பிட்ட நிற கற்களை அணிந்தால் மன நிலையில் ஏற்றம் மற்றும் வியாதி குணம் என துவங்கிய இப்பழக்கம் உங்கள் ராசியை கேட்டு விற்கும் அளவுக்கு வியாபாரம் ஆகிவிட்டது. வரும் நூற்றாண்டில் குரோசின் மாத்திரை சாப்பிட்டால் செல்வந்தர் ஆகலாம் என சிலர் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் தற்சமயம் யுனானி மருந்தான ரத்தின கற்களை அப்படித்தான் பயன்படுத்துகிறோம். இன்றும் கூட சில தர்க்காவின் வாசலில் கற்களை விற்கும் ஆட்களை பார்க்க முடியும். ராசிகற்கள் இஸ்லாமுக்கு எதிராக இருந்தாலும் சிலர் தங்கள் மனநிறைவுக்கு வாங்கி அணிவதுண்டு.ரத்தின கற்கள் அரபியர் கொண்டுவந்தார்கள் என்பதால் கண்மூடித்தனமாக மறுக்கவில்லை.


நவ ரத்தின கற்களுக்கு ஆற்றல் இல்லையா ? உலகில் இருக்கும் அனைத்து பொருட்களையும் நவகிரகங்கள் தொடர்பு கொள்ளும். நவ தானியம், நவரசம் என சொல்லிக்கொண்டே போகலாம். குரு என்ற கிரகத்திற்கு மஞ்சள் புஷ்பராகம் அணியுங்கள் பலன் கிடைக்கும் என்றால் குரு குறிக்கும் கொண்டைகடலையை உண்டாலும் அதே ஆற்றல் கிடைக்கவேண்டும். காரணம் இரண்டு பொருளும் குரு என்ற கிரகத்தால் உருவானவை.

படிகங்கள் (Crysrals ) ஆற்றலை எதிரொலிக்க செய்யும் வல்லமை கொண்டது. உங்களிடம் எத்தகைய ஆற்றல் உண்டோ அதை பன்மடங்காக எதிரொலிக்கும். இயற்பியல் ஆய்வகங்களில் முப்பெட்டகம்(prism) எப்படி ஒளியை பிரிக்குமோ அதுபோல நவரத்தின கற்கள் ஆற்றலை பிரித்து எதிரொளிக்க செய்யும். அதனால் கோவில்களின் கருவரையில் இறைவனின் விக்ரஹத்தில் அதிகமாக கற்களை பயன்படுத்தினார்கள். கருவறையில் இருக்கும் இறையாற்றல் பன்மடங்காக எதிரொலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் ஒரு முட்டாள் என்றால் நான் ராசிக்கற்களை வாங்கி என் முட்டாள் தனத்தை பன்மடங்காக பெருக்கி என்ன செய்ய போகிறேன்? ஆற்றலே இல்லாத மனிதன் ராசிக்கல் அணிந்து எதை பெருக்க போகிறான்? ராசிக்கற்கள் மிகவும் சக்திவாய்ந்த இடங்களில் இருக்கட்டும். அங்கே சென்று வழிபடுவதாலோ அல்லது நாம் சில மணிகள் செலவிடுவதாலோ அந்த ஆற்றலை நாம் பெற்றுகொள்ளுவோம். அதைவிடுத்து ராசிக்கல் மோதிரம் என்ற பெயரில் வேலைசெய்யாத ஒருவிஷயத்திற்கு அடிமையாக வேண்டாம். நம் சாஸ்திரம் ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் நவரத்தின கற்களை போடசொல்லவில்லை. ஜோதிடத்தின் பெயர் சொல்லி விற்பவர்கள் சாஸ்திரத்திற்கு எதிரானவர்களே...!

வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் சதாம் உசேன் தங்கத்தில் கழிவறை வைத்திருந்தாராம், நம் ஊரில் சாதம் சாப்பிடும் உலக நாதர்கள் ராசிக்கற்களை வாங்கிகொண்டிருக்கிறார்கள்.

உலோகத்தில் வெளிச்சூழலுக்கு வினைபுரியாத சிறப்பு தங்கத்திற்கு உண்டு. உலகத்தின் சூழலுக்கு உருமாறாத தங்கமாக இருப்பது என்பது ஒரு வித யோக நிலை. அகத்தே நீங்கள் தங்கமானால் புறத்தங்கம் தகரமே...!

Thursday, October 1, 2009

உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..!

நம் பாரத தேசம் பல நூற்றாண்டுகளாக செழிப்பான ஒரு நாடு. இங்கே விளையும் வாசனை பொருட்களுக்காகவும், ஆபரணங்களுக்காகவும் பல நாட்டினர் படையெடுத்தனர் என்பது வரலாறு. ஒரு நாட்டை அடிமையாக்கும் மனோபாவத்தில் படைஎடுத்தல் என்பதை தாண்டி ஒரு நாட்டின் வளத்திற்காக படை எடுப்பது என்பது முன்காலத்தில் இந்தியாவில் மட்டுமே புதிய விஷயமாக இருந்தது. தற்காலத்தில் எண்ணெய் கிணறு என்னும் வளத்திற்காக சில நாடுகளை அடிமைப்படுத்த வல்லரசு நாடுகள் விரும்புகிறதே அது போல பாரதம் பிறருக்கு ஒரு வளமான பூமியாக தெரிந்தது.

தட்பவெப்பம், பயிர்வகைகள், கலாச்சாரம், மெய்ஞான அறிவு மற்றும் பொருளாதாரம் என பல விஷயங்கள் பாரதம் முன்னிலையில் இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கமுடியாது. உலக படத்தில் பூமத்திய ரேகை சார்ந்து அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் கலாச்சரத்தில் பிற பகுதிகளை காட்டிலும் முன்னேறி இருந்தது. உலகவரைபடத்தில் இடமிருந்து வலமாக எடுத்துக்கொண்டால் மெக்சிக்கோ, எகிப்து, அரேபியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை கலாச்சார முன்னேற்றம் கொண்ட பிரதேசமாக இருந்தது.

கலாச்சார முன்னேற்றம் என்றவுடன் நவநாகரீக உடை அணிதலையோ , சமைக்கபட்ட பல்வகை உணவுகள் உண்பதையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. மெய்யறிவுடன் தங்கள் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தன்மையும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவு என்பதையே கலாச்சார முன்னேற்றம் என்கிறேன். வேளாண்மை மூலம் தானிய உற்பத்தி, உலோக பயன்பாடு மற்றும் கட்டிடக்கலை ஆகியவை தான் கலாச்சாரத்தின் உண்மையான குறியீடுகள்.

பூமத்திய ரேகை சார்ந்த நிலப்பரப்புகளில் கலாச்சார முன்னேற்றம் இருந்தாலும் அதில் மிக முன்னேறிய கலாச்சாரம் என்பது பாரதத்தில் மட்டுமே இருந்தது. வேளாண்மையில் புதிய நுட்பங்களை கண்டறிந்து பல்வேறு உணவு முறைகளை கண்டறிவது, உலோகப் பயன்பாட்டில் மிகவும் அறிவியல் அறிவுடன் செயல்படுவது என பாரத தேசத்தினர் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தனர்.

உணவு முறையில் சமச்சீர் உணவு முறையும் , பல்வேறு உடல் நிலைக்கு ஏற்ப உணவு அமைப்பையும் நம் மக்கள் பின்பற்றிவந்தனர். அதை வேறு ஒரு நாள் விளக்கமாக பார்ப்போம். உலோகத்தில் அனைத்து வகையான உலோகமும் நம் மண்ணில் கிடைத்தவண்ணம் இருந்தது. ஒரு உலோகம் நம் உடலில் எத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.

நம் உடலில் இருக்கும் நாடியின் செயலையும் நவக்கிரகங்களின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு உலோகத்தை பயன்படுத்துவது என்பதை கண்டறிந்தார்கள். தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை மட்டுமே ஆபரணமாக பயன்படுத்தக் கூடிய உலோகம் என்பது அவர்களின் கருத்து.

அறிவியல் ரீதியாக மூலக்கூறு அட்டவணையில் அதிக புள்ளிகள் கொண்டது தங்கம் மற்றும் வெள்ளி என்பது அறிந்ததே. தங்கமும் வெள்ளியும் அதிவேக கடத்திகள். ஆற்றலை கடத்தும் திறனில் இவற்றுக்கு தான் முன்னுரிமை. அதற்காக அறிவியல் சார்ந்து பாரதத்தில் பயன்படுத்தினார்கள் என கூறி பாரத கலாச்சாரத்தின் தரத்தை நான் குறைக்க விரும்பவில்லை. பாரத மக்கள் பயன்படுத்தியது அறிவியலையும் தாண்டிய மெய்யறிவு.

நம் கலாச்சாரத்தின் படி எப்படி உலோகங்களை பயன்படுத்தவேண்டும் என பார்ப்போம். உடலில் தங்கத்தை இடுப்புவரை மட்டுமே அணிய வேண்டும். வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். விரல்களில் வெள்ளி அணியக்கூடாது.

வெள்ளி என்ற உலோகம் சுக்கிரன் என்ற கிரகத்தை குறிக்கிறது. உண்மையில் சுக்கிரன் கிரகத்தில் வெள்ளித் தாதுக்கள் அதிகம். சுக்கிரன் கிரகத்தையே தமிழில் வெள்ளி என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? சுக்கிரன் காம இச்சைகளை கொடுக்கும் கிரகம். அதனால் வெள்ளி உலோகம் இடுப்பு அரைஞாண் மற்றும் கொலுசு ஆகியவற்றிக்கு பயன்படுத்தினார்கள். இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு.

தங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்கம் மிகமுக்கியமானது.

உலோகத்தில் தங்கத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள். சுரங்கங்களில் தங்கம் அதிகமாக கிடைத்ததும் ஒரு காரணம். மூளை திறன் அதிகரிக்க நம் அரசர்கள் தங்கத்தை தலையில் கிரீடமாக அணிந்தனர். வேறு கலாச்சார நாடுகளில் தங்கத்தை கிரீடமாக அணிவது வழக்கத்தில் இல்லை என்பதை அறிக. செம்பு ஆபரண தங்கத்துடன் கலக்கப்பயன்பட்டதால் செம்பும் அதிகமாக பயன்பட்டது என கூறலாம்.

ஒரு மனித உடலில் தங்கம் முதன் முதலில் தொடர்பு கொள்ளும் நாள் மிக முக்கியமானது. மனித உடலில் இயற்கையாகவே தங்க தாது உண்டு. அத்துடன் தங்க ஆபரணம் இணைந்து உடலின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தங்கம் அணிவித்தல் என்பது விழாவாகவே கொண்டாடினார்கள். நாம் இப்பொழுதும் காது குத்தும் வைபவமாக எளிய நிலையில் கொண்டாடுகிறோம்.

நம் உடலில் இடா நாடி மற்றும் பிங்கள நாடிகள் இடவலமாக இருப்பது முன்பு பார்த்தோம். ஆபரணம் அணிவதில் இந்த நாடிகளை சமநிலை ஆக்குவதற்குத்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நாடிகள் ஆன்மீக சக்தியை கடத்தும் புள்ளிகள் என்பதால் நாடிகள் இணையும் இடத்தில் ஆபரணம் அணிய வேண்டும்.

மனித உடல் என்பது ஒருவித கட்டமைப்பால் உண்டானது. நாடிகளின் சலனத்தை அவைகள் ஏற்படுத்துகிறது. நம் உடலில் இடப்பக்கம் உள்ள நாடிகள் வலப்பக்க செயலையும், வலபக்க நாடிகள் இடபக்க செயலையும் செய்யும். அதனால் உடலில் நாடிகளின் சமநிலை தவறாமல் இருக்க சம எடை கொண்ட ஆபரணங்களை இருபக்கமும் அணிந்தார்கள். இரண்டாக இருக்கும் உடல் பகுதிகளில் ஒன்றில் மட்டும் ஆபரணம் போடுவதால் நாடி சமநிலை தவறும். உதாரணமாக காது, மூக்கு, கைகள் மற்றும் கால் பகுதியில் ஆபரணம் அணியும் பொழுது இரு உறுப்புகளிலும் அணிய வேண்டும். இரு உறுப்பில் அணியும் ஆபரணம் சமமான எடையுடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

ஆபரணத்தின் இத்தகைய முக்கியத்துவம் உணராமலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆபரண வடிவமைப்பவர்கள் கூட தங்களின் பாரம்பரிய வடிவமைப்பால் கொலுசு, வளையல் போன்றவற்ற ஒரே எடை மற்றும் வடிவில் தயாரிப்பார்கள். வடிவம் (டிஸைன்) மாறினால் எடையில் வித்தியாசம் ஏற்படும் என்பது ஒரு முக்கிய காரணம்.

நாடிகளின் சலனம் ஏற்படாமல் சமநிலையில் இருக்கவும், அலங்காரத்திற்காகவும் ஆபரணம் பயன்படுத்தபட்டது.
எப்படி நம்மிடையே தங்கத்தின் பயன்பாடு குறைய துவங்கியது? பாரதத்தில் தங்கத்தால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் என்ன? நம் கலாச்சாரத்தில் நவரத்தின கற்களின் முக்கியத்துவம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதிலை அடுத்த பகுதியில் பார்ப்போமா ?
---------------------------------------
டிஸ்கி 1 : உங்களை பற்றி ரகசியம் என்ற தலைப்பில் ஏதோ எழுதி இருக்கிறேன் என்கிறீர்களா?.. நீங்கள் என் தங்கம் அல்லவா?

டிஸ்கி 2 : வர வர உங்கள் பதிவுகளில் பகடியே அதிகம் என்ற சொக்க தங்கங்களுக்கு இந்த சீரியஸான பதிவு சமர்ப்பணம்