நம் மக்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் எந்த காரியம் செய்தாலும் உடனடியாக அதற்கு பிரதி பலன் உண்டாக வேண்டும். இல்லை என்றால் அக்காரியத்தை அடுத்த முறை செய்ய மாட்டார்கள்.
தலை முடி வளரும் தைலம் என போலியாக ஒரு எண்ணெய்யை ஒருவர் தலையில் கட்டியிருப்பார். நம் ஆள் அதை விடிய காலை எழுந்து தலையில் தேய்த்துக் கொண்டு இரவு தூங்குவதற்கு முன் ஆயிரம் முறை கண்ணாடியை பார்ப்பார்கள். வாங்கிய பொருளின் பலனை சோதனை செய்கிறார்களாம்.
அதனால் தான் யாரேனும் என்னிடம் தியானம் செய்தால் என்ன பயன் என கேட்டால், “ஒரு பயனும் இல்லை என்பேன்”. தியானம் செய்தால் அந்தரத்தில் பறக்கலாம் என கூறுகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடி தியானிக்க துவங்கி சில வினாடிகள் கூட கழிந்திருக்காது, கண்களை திறந்து எத்தனை அடி மேலே பறக்கிறோம் என குனிந்து பார்த்துக் கொள்ளுவார்கள். :)
இவ்வாறு இருக்க அக்னிஹோத்திரம் செய்தால் சூரிய பகவான் உங்களை ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கூட்டி சென்று பிரபஞ்சத்தை சுற்றிக்காட்டுவார் என்றால் என்ன நடக்கும்? :)
அக்னிஹோத்திரம் செய்து சில வினாடிகளில் வெளியே ஓடி சென்று குதிரை வண்டி வந்தாச்சா என பார்ப்போம்.
அக்னிஹோத்திரம் ஒரு வித யோக பயிற்சி போன்றது. தினமும் அக்னிஹோத்திரம் காலையும் மாலையும் செய்ய வேண்டும். தினமும் செய்ய செய்ய நம் உடல், நம் வசிக்கும் இடம், நம் ஆன்மா, நம் பாரம்பரியம் என பல்வேறு தளங்களில் அக்னிஹோத்ரம் பலன்களை அள்ளித் தெளிக்கும். இவற்றை பட்டியலிட்டு செய்வதை விட பூரண நம்பிக்கையுடன் செய்வதே நன்று.
சரி அக்னிஹோத்ரம் எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போமா?
அக்னிஹோத்ரம் செய்ய தேவையான பொருட்கள் :
1) சிறிய ஹோம குண்டம்,
ஒரு அடி அகலம் ஒரு அடி நீளம் அரை அடி ஆழம் கொண்ட செம்பு உலோக பாத்திரம் அல்லது மண் பாண்டத்தை குண்டமாக பயன்படுத்தலாம். தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய சதுரமாக குழி தோண்டி அதில் சாணம் கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.
2) சாண வறட்டி
சிறிய அளவிலான வறட்டிகள் போதுமானது.
3) முனை உடையாத பச்சரிசி.
இரு பக்க முனைகளும் உடையாத பச்சரிசி தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நூறு கிராம் பச்சரிசி ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியும். காரணம் ஒரு சிட்டிகை அளவே அரிசி தினமும் பயன்படுத்த போகிறோம்.
4) பசு நெய்
சிறிது அளவு போதுமானது. அதிகமான பொருட்களை நாம் அக்னியில் இடுவதில்லை.
இது போக நெய் ஊற்ற சிறிய கரண்டி. அவ்வளவு தான்.
அக்னி ஹோத்ரம் செய்யக்கூடிய நேரம் :
சூரிய உதிக்கும் நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரம்.
நேரம் மிகத்துல்லியமாக கணிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமன/ உதய நேரத்திற்கு முன் சில நிமிடங்களில் துவங்க வேண்டும்.
சரியான அஸ்தமன/ உதய நேரத்தில் பொருட்களை அக்னியில் சேர்க்க வேண்டும்.
இந்த நடைமுறை மிக முக்கியமானது.
அக்னிஹோத்ரம் செய் முறை :
ஹோம குண்டத்திற்கு திலகம் இட்டு வணங்கவும்.
பின் சாண வறட்டியை இரண்டு மூன்று துண்டுகளாக்கி குண்டத்தில் அடுக்கவும்.
வறட்டியில் சிறிது நெய் துளிகள் விட்டு, வரட்டியில் நெருப்பை ஏற்றவும்.
நன்றாக வறட்டி எறியும் வரை காத்திருக்கவும். அக்னி நன்றாக உயர்ந்த நிலையில் சிறிது பச்சரிசி எடுத்துக்கொண்டு சில துளி நெய்யுடன் கலக்கவும். மந்திரம் கூறி அக்னியில் சேர்க்கவும்.
இரு மந்திரங்கள் கூறுவதால் இரு முறை மட்டுமே அக்னியில் அரிசியை சேர்த்தால் போதுமானது.
அக்னியை வணங்கி அக்னிஹோத்ரத்தை நிறைவு செய்யவும்..
அக்னி ஹோத்ரத்தில் கூற வேண்டி மந்திரம் :
சூரிய உதய காலத்தில் கூறும் மந்திரம்
சூர்யாய ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
சூர்யாய இதம் நமஹா
ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா
சூரிய அஸ்தமனத்தில் கூற வேண்டிய மந்திரம்
அக்னியே ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
அக்னியே இதம் நமஹா
ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா
அவ்வளவுதான். அக்னிஹோத்திரம் இது செய்வதற்கு ஏதேனும் கஷ்டம் உண்டா?
அக்னிஹோத்திரத்திற்கு என சின்னதாக ஒரு பை தயார் செய்து அப்பொருட்கள் அதனுள் வைத்திருந்து தினமும் பயன்படுத்தலாம்.
-----------------------

அக்னிஹோத்திர மந்திரங்களை சமஸ்கிருதத்தில் கூறமாட்டேன், செம்மொழியாம் தமிழ் மொழியில் கூறுவதாக இருந்தால் செய்கிறேன் என்பவர்களுக்கு தமிழ் மாத்திரைகள் (மந்திரங்கள்) கொடுக்கப்பட்டுள்ளது.
அக்னி வேள்வி :
கதிர் உயரும் நேரம் கூறும் மாத்திரைகள் :
கதிரவனிடம் சரணாகதி அடைகிறேன்
கதிரவன் இங்கே எழுந்தருளட்டும்.
அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.
கதிர் சாயும் நேரம் கூறும் மாத்திரைகள் :
அக்னியை சரணடைகிறேன்
அக்னியை இங்கே எழுந்தருளட்டும்.
அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.
-------------------------
அக்னிஹோத்ரம் கொடுக்கும் உண்மையான விளைவு என்ன?
நமக்கு அறிவியல் பூர்வமாக சொன்னால் தானே ஏற்றுக்கொள்வோம் ? நாம் எல்லோரும் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே... இருங்கள் விவரிக்கிறேன்.
(..அக்னி ஒளிரும்)









