Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 27, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 5

தாவரங்கள் உருவாவது, வாழ்வது மற்றும் நமக்கு ப்ராண சக்தியை வழங்குவது என அனைத்தும் பிரபஞ்ச சக்தியினால் தான்.

ஒரே மாதிரியான மரக்கன்றுகளை ஒரே நில சூழ்நிலையில் நட்டால் அவற்றின் வளர்ச்சி ஒன்று போல இருக்காது. பூமியில் சில இடங்களில் வனம் இருப்பதற்கும் சில இடங்களில் வனம் அழிந்து அங்கே பேரழிவு ஏற்படுவதற்கும் பிரபஞ்ச சக்தியே காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களில் இருந்து பிரபஞ்ச ஆற்றல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரியை படிக்கும் பொழுது உங்கள் மேல் விழும் பிரபஞ்ச ஆற்றலானது பல நூற்றாண்டுகளுக்கு முன் நட்சத்திர மண்டலத்திலிருந்து புறப்பட்டிருக்கும்.
காஸ்மிக் கதிர்கள்

பிரபஞ்ச ஆற்றல் பூமியை வந்து அடையும் வரை ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது. பூமியின் வளிமண்டலத்தை தொட்டவுடன் தீபாவளி கம்பி மத்தாப்பை போல பல புள்ளிகளாக கிளைவிட்டு பரவுகிறது. இதனால் பூமியின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பிரபஞ்ச சக்தி பரவுகிறது.

பிரபஞ்ச ஆற்றல் எப்படி பரவும் என்பதற்கு சிறந்த உதாரணம் அறிய வேண்டுமானால் ஒரு நன்கு வளர்ந்த மரத்தை இலையுதிர்காலத்தில் தலைகீழாக பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பிரபஞ்ச சக்தி பரவும். இந்த உதாரணம் மூலம் தெரிகிறதா மரத்தின் வடிவம் ஏன் இப்படி இருக்கிறது என்று...! கிளைகள் பிரபஞ்ச சக்தியால் வரும் வடிவமே.
மரத்தின் தலைகீழ் தோற்றம் காஸ்மிக் கதிர் போல இருக்கும் படம்

ஒரு தாவரத்தை சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைத்தால் அவற்றால் உணவு உற்பத்தி செய்ய முடியாது என்கிறது தாவரவியல். ஜன்னலுக்கு அருகில் தாவரம் வைத்தால் அவை தலையை நீட்டி சூரிய ஒளியை நோக்கி செல்லுவதாக பள்ளி பாட புத்தகத்தில் நீங்கள் படித்திருக்கலாம். அத்தகைய விஞ்ஞானம் தற்சமயம் மாற்றம் அடைந்து வருகிறது. அவை தலை நீட்டுவது சூரிய ஒளிக்காக அல்ல. பிரபஞ்ச சக்திக்காக என எதிர்கால பாடபுத்தகங்கள் கூறும்.



காஸ்மிக் கதிர்களை காண்களால் காண விஞ்ஞானம் உருவாக்கிய கருவி.

தற்சமயம் அறிவியல் பிரபஞ்ச சக்தியை பற்றி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கண்டறிந்துள்ளது. பிரபஞ்ச ஆற்றலை அளக்கும் கருவியில் கூட மேல் நிலை கதிர்களே அளக்கபடுகிறது. மிகவும் நுண்ணிய கதிர்கள் அளக்க பல முயற்சிகள் நடக்கின்றன. விஞ்ஞானம் காஸ்மிக் கதிர் ஆய்வில் பின்தங்கி இருக்க ஒரு காரணம் உண்டு. மிகவும் எளிமையான ஒரு ஆய்வகம் அமைக்க குறைந்த பட்சம் இருநூறு கோடி ரூபாய் தேவைப்படும்.


மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒரு கேந்திரம். மரங்கள் இல்லாமல் மனிதன் பிரபஞ்ச ஆற்றலை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அவை மனித உடலுக்கு போதுமானதாக இருக்காது. சில ஆன்மீக பயிற்சியினால் மரங்களின் உதவி இல்லாமல் கூட பிரபஞ்ச சக்தி பெரும் சாத்தியம் உண்டு.

மரங்கள் பிரபஞ்ச சக்தியை உலகுக்கு வழங்கும் என்றால் ஏன் இத்தனை வகை மரங்கள்? ஒரே வகையான மரங்கள் போதும் அல்லவா? மரங்கள் பிரபஞ்ச சக்தியை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அவை வெளிவிடும் தன்மைக்கும் பல மாற்றங்கள் உண்டு.

அகஸ்தியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் உங்களுக்கு இக்கருத்தை மேலும் விளக்கும்.

அகஸ்தியர் கொல்லிமலையில் இருந்த சமயம் ஒரு அபூர்வ மூலிகையை தவறுதலாக பறித்த காரணத்தால் கண்பார்வை இழந்தார்.

கண்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அகஸ்தியரை கண்ட அவரின் சிஷ்யர்கள் வேதனை அடைந்தனர். அகஸ்தியரின் கண்பார்வை மீண்டும் வர என்ன செய்ய வேண்டும் என அவரிடமே கேட்டனர்.

எனக்கு எந்த மூலிகையால் கண்கள் குருடானதோ அந்த மூலிகையை எனக்கு கொடுத்தால் என் கண்பார்வை வரும். எனக்கு சமமான சிஷ்யன் ஒருவன் உண்டு. அவனால் மட்டுமே அது சாத்தியம். பிறர் சென்று அந்த மூலிகையை பார்த்தலே அவர்களும் என்னை போல கண்பார்வை இழப்பார்கள் என்றார்.

சிஷ்யர்களும் தங்கள் குருநாதரின் கண்களை மீட்டுக்கொடுக்கும் அந்த சிஷ்யன் யார் என கேட்டனர். அவர் தேரையர் என்ற ஒரு சிஷ்யன் வடக்கில் வாழ்கிறான் அவனை கூட்டி வாருங்கள் என்றார். தங்களை விட அந்த தேரையர் எந்த வகையில் சிறந்தவர் என கேட்டனர் பிற சிஷ்யர்கள்.

நான் கூறினால் உங்களுக்கு புரியாது. அவன் சகல கலையிலும் வித்தகன். அவனை சந்திக்க இன்றே கிளம்புங்கள். பயணத்தின் வழியில் தங்குவதாக இருந்தால் புளிய மரத்தில் மட்டும் தங்குங்கள் என கட்டளையிட்டார். குருவின் கட்டளையை ஏற்று பயணத்தில் புளிய மரத்தில் மட்டும் ஓய்வு எடுத்தார்கள்.

தேரையரின் இருப்பிடம் செல்லுவதற்குள் அனைவரும் நோயுற்று மிகவும் உடல் நலம் குன்றி நிலைகுலைந்து போனார்கள். இவர்களின் நிலையை பார்த்த தேரையர் என்ன ஆயிற்று என கேட்டார். நல்ல உணவு மற்றும் தூய்மையை பின்பற்றினோம் இருந்தாலும் கொடிய நோய் தாக்கிவிட்டது என்றார்கள். அகஸ்தியர் புளிய மரத்தில் மட்டும் தங்க சொன்னார், குருவாக்கை கேட்டும் எங்கள் நிலை இப்படி ஆகிவிட்டது என கலங்கினார்கள். தங்களுக்கு மருத்துவம் செய்ய கூறி வேண்டினார்கள்.

தேரையர் அவர்களின் வந்த காரியம் அறிந்து தான் அகஸ்தியரை காண வருவதாக கூறினார். மேலும் உங்களுக்கு வைத்தியம் தேவையில்லை என கூறி திரும்பி செல்லும் பொழுது அரச மரத்தை தவிர வேறு எங்கும் ஓய்வு எடுக்க வேண்டாம் என கூறினார்.

அதன்படியே பயணித்த சிஷ்யர்கள் அகஸ்தியரை காண வரும் முன் உடல் நலம் அடைந்தார்கள். சில நாட்களில் அகஸ்தியரிடம் வந்த தேரையர் ஒரு பலகையில் நன்றாக பாதரசம் பூசிக்கொண்டு அதை கண்ணாடி போல பயன்படுத்தி அந்த மூலிகையை பறித்தார். நேரடியாக பார்க்க கூடாது என்பதால் இவ்வாறு செய்தார்.

அகஸ்தியருக்கு கண் ஒளி கிடைத்தது. தேரையரை பற்றிய உள் ஒளி சிஷ்யர்களுக்கு கிடைத்தது.

மரங்கள் அனைத்தும் மனிதனுக்கு நன்மை செய்ய உருவாகவில்லை. சில மரங்கள் மனிதனின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பது உண்மை. சிலருக்கு மரத்தின் அடியில் தூங்கும் பொழுது ஒரு விதமான அழுத்தத்தை உணர்வார்கள். இதற்கு கிராமத்தில் அமுக்கான் என பெயர். உடலில் பிராண சக்தி இல்லாமல் ஒரு வினாடி நம் உடலும் ஆன்மாவும் செய்யும் போராட்டமே அந்த அமுக்குவதை போன்ற உணர்வு.

இரவில் புளி, முருங்கை மற்றும் வேப்ப மரத்தின் கீழ்படுத்தால் இவ்வாறு உணர்வார்கள். சிலருக்கு வீட்டின் உள்ளே ப்ராண சக்தி கிடைக்காத நிலையிலும் இது ஏற்பட்டுவிடும்.

நம் நெடுஞ்சாலை முழுவதும் புளிய மரம் அமைந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால் நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கும் வீடுகள் மிகவும் பாதிப்படையும் என்பது உண்மை.

ஒரு மரம் நமக்கு நல்ல விதமான ப்ராணனை கொடுக்கிறதா அல்லது கேடு விளைவிக்கும் ப்ராணனை கொடுக்கிறதா என கூறுவது எளிது.

ஒரு மரத்தின் இலைகள் சிறியதாக இருக்க இருக்க அதில் ப்ராணன் குறைவு என்று அர்த்தம். பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம்.

புளிய மரத்திற்கும் அரச மரத்திற்கும் வித்தியாசம் தெரிகிறதா? இதனால் புளியமரத்தில் பேய் இருக்கிறது என்றும் அரசமரத்தில் கடவுள் இருக்கிறார் என்றும் கூறினார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்தும் வைத்தனர். இதன் காரணம் அந்த மரங்களுக்கு இடையே உள்ள ப்ராண ஈர்ப்பை வலுபடுத்தத்தான். அதற்காக ப்ராண சக்தியை பற்றி தெரியாமல் இவைகளுக்கு திருமணம் செய்பவர்களை ஆதரிக்கிறேன் என அர்த்தம் இல்லை. தற்காலத்தில் வேதகாலம் என்ற பெருங்காயம் தீர்ந்து அதன் காலியான பெட்டி மட்டுமே மணக்கிறது.

மிகவும் பெரிய இலையுள்ள மரம் அதிகமான ப்ராணவை வெளிவிடும் அல்லவா? உங்களுக்கு தெரிந்த பெரிய இலை கொண்ட மரம் எது என சொல்லுங்கள் பார்ப்போம்.. உங்கள் வாழ்க்கையில் அது எப்படி இணைந்திருக்கிறது என புரியும்...

(.....வேதம் ஒலிக்கும்)

Saturday, October 24, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 4

வேதகால வாழ்க்கைக்கு தேவையான இயற்கை அங்கங்களை விரிவாக பார்ப்போம். முதல் அங்கமாகவும் முக்கிய அங்கமாகவும் திழ்வது தாவரம்.

தாவரம் :

முதல் இயற்கை பகுதியை பற்றி விரிவாக பார்க்க ஒன்றும் இல்லை. அதன் பெயரே அனைத்தும் சொல்லிவிடுமே?

......................தா.....வரம்..!

பிரபஞ்ச ஆற்றலை பார்த்து நாம் கேட்பது போல பெயர் அமைந்திருப்பது வினோதம் தானே? உலகில் முதலில் தோன்றிய உயிரினங்களில் தாவரத்திற்கே முதலிடம். விஞ்ஞான பரிணாம வளர்ச்சி எடுத்துக்கொண்டாலும் அதில் தாவரமே முதலில் தோன்றியதாக சொல்லுகிறார்கள். தாவரம் முதலில் உருவானதற்கான காரணம் மிகவும் எளிமையானது. முதலில் தாய் கருவானால் தானே குழந்தை உருவாக முடியும்?

பள்ளியில் தாவரவியல் என்று சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம் நமக்கு மரங்களை பற்றி தெரிந்து கொண்டிருப்போம். மரம் என்ன செய்யும் என கேட்டால் ஆக்ஸிஜனை வெளிவிட்டு கார்பன் - டை - ஆக்ஸைடு உள்ளே எடுக்கிறது என கூறுவோம். உண்மையில் மரம் ப்ராண வாயுவை மட்டுமா தருகிறது? ப்ராணனையே தருவது மரங்கள் தான்.

பிரபஞ்ச ஆற்றல் பூமியை அடைந்ததும் அவை தாவரங்களால் ஈர்க்கப்படுகிறது. பின்பு பிரபஞ்ச சக்தி ப்ராண சக்தியாக மாற்றப்படு பிற உயிர்களுக்கு வழங்குகிறது. சக்தி மாற்றம் செய்யும் இடமாக அமைவதால்தான் இதை கேந்திரம் (Transformer) என்கிறோம்.

ப்ராணன் என்றால் என்ன என முன்பு பார்த்தோம். பிரபஞ்ச சக்தி என அடிக்கடி கூறுகிறேனே அது என்ன என பார்ப்போம். அப்பொழுது தான் தாவரங்களின் அற்புதம் புரியும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியிலிருந்து உருவாகும் ஆற்றல் மிகவும் அதிவேகமாக பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. ஒளியின் வேகத்தைவிட இதன் வேகம் மிக அதிகம். அப்படி பிரபஞ்சத்தில் பரவும் ஆற்றல் சூரியமண்டலத்திற்கும் வந்து அடைகிறது. சூரிய குடும்பத்தின் பிற பகுதிகளுக்கு செல்லுவதற்கும் பூமிக்கு இவை வருவதற்கும் பல வேறுபாடுகள் உண்டு.

பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச பொருட்களை ஊடுருவி செல்லுகிறது. அதாவது ஒரு கிரகத்திலோ அல்லது விண் கற்களின் மேல் பிரபஞ்ச ஆற்றல் படும்பொழுது அவற்றின் உள்ளே புகுந்து வெளியேறுகிறது. இந்த செயல் பூமி என்ற கிரகத்திற்கும் பொருந்தும். ஆனால் பிரபஞ்ச ஆற்றல் பூமியில் உள்ள உயிர்கள் மேல் விழும் பொழுது மட்டும் ஊடுருவி செல்லுவதில்லை என்பது மிகவும் வியக்கதக்க விஷயம். உயிர் பொருட்களின் உள் செல்லும் ஆற்றல் அத்துடன் நின்று விடுகிறது. என்ன ஒரு ஆச்சரியமான பிரபஞ்ச இயக்கம் பார்த்தீர்களா?

பிரபஞ்ச ஆற்றல் என்ற Cosmic Ray பற்றி நவீன அறிவியல் அறிந்து கொள்ள விஞ்ஞான உலகம் தலையை உடைத்து கொண்டிருக்கிறது. பிரபஞ்ச ஆற்றல் எங்கிருந்து வருகிறது ? எதனால் உயிர் பொருட்களை ஊடுருவி செல்லுவதில்லை என பல கேள்விகள். ஒரு கேள்விக்கு விடை கிடைத்தாற்போல இருந்தால் ஒரு புறம் சிக்கல் மேல் சிக்கல்.

Cosmic Ray Lab என உலகின் பல இடங்களில் ஆய்வகங்கள் நிறுவி சூப்பர் கம்யூட்டரின் உதவியுடன் 24 மணி நேரமும் பிரபஞ்ச கதிர் வீச்சை பதிவு செய்கிறார்கள். பிரபஞ்ச ஆற்றல் புரோட்டான் என்ற வடிவில் வருவதாக கண்டறிந்து, அவற்றை அளக்கும் கருவியும் கண்டறியபட்டுவிட்டது. பூமியின் நிலத்திற்கு மேல் புறமும், பூமியை தோண்டி ஆழத்திலும் பிரபஞ்ச சக்தியை அளக்கும் கருவியை பதித்து தினமும் பதிவு செய்கிறார்கள்.

மழை பொழிவது போல
தினமும் பல்லாயிர ஒளி மழை நம்மை நோக்கி பொழிந்து கொண்டே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த ஆய்வுக்காக பலகோடிகள் ஒதுக்கபட்டுள்ளது. உலகளாவிய தன்மையில் பல நாடுகளிலும் கடலிலும் ஆய்வகங்கள் அமைக்கபட்டிருக்கிறது. ஆனாலும் பிரபஞ்ச ஆற்றலின் மூலம் சரியாக கண்டுபிடித்தப்பாடு இல்லை. சிலர் சூரியனில் இருந்து வருகிறது என்கிறார்கள். சிலர் சூப்பர் நோவா என்ற நட்சத்திரம் வெடித்து அதனால் வருகிறது என்கிறார்கள்.

ஏதோ வேதகால வாழ்க்கை என்று ஆரம்பித்தீர்கள் இப்பொழுது சூப்பர் நோவா, காஸ்மிக் ரே என கூறுகிறீர்களே இது எப்படு உங்களுக்கு தெரியும் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உங்களுக்கு எந்த செய்தியை கூறினாலும் அதை நான் உணராமல், ஆய்வு செய்யாமல் கூறமாட்டேன். அதன் படி இத்தகைய ஆய்வகங்களுக்கு சென்று சாஸ்திரத்திற்கும் நவீன விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பை பல வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன்.
ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள காஸ்மிக் ஆய்வகத்தின் முன் நான்.


பிரபஞ்ச ஆற்றலை கண்களால் காண முடியாது. சில கருவியின் துணை கொண்டு காணலாம் என கூறினேன். ஆன்மீக ரீதியாக ஒருவர் உயர்வடையும் பொழுது அவர்களுக்கு இந்த மழை பொழிவை போன்ற பிரபஞ்ச ஆற்றலின் சக்தி புலப்படும். இதை ஒவ்வொரு கலாச்சாரத்தை சேர்ந்த ஞானிகளும் பல்வேறு விதமாக விளக்கம் அளித்துள்ளனர். சிலர் அமிர்தம் பொழிகிறது என்றும், சிலர் இறைவன் அருள் பொழிகிறான் என்றும் விளக்கினார்கள். சூஃபி ஞானிகள் தங்கள் கண்ட பிரபஞ்ச அலையை பாடல் வடிவில் மொழி பெயர்த்தார்கள்.

பலகோடி செலவு செய்து நவீன விஞ்ஞானம் கண்டறிய முயற்சிக்கும் விஷயத்தை வேதகால வாழ்க்கை எளிமையாக விளக்கிவிடும். பாருங்கள் தாவரம் என்ற ஒரு இயற்கையின் உறுப்பை விளக்க துவங்கி எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

(...வேதம் ஒலிக்கும்)

Thursday, October 22, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 3

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.
------------------------------------------------------------- - திருமந்திரம் 84

வேதகால வாழ்க்கை என்று நான் ஆரம்பித்து விளக்க துவங்கியதும் பல்வேறு மின்னஞ்சல்கள். வேதம் என்றால் ‘இது’ என இவர் சொல்லி இருக்கிறார். ‘அது’ என அவர் சொல்லி இருக்கிறார் என பல விளக்கங்கள். ஒரு சிலர் நீங்கள் அந்த ஜாதியை சார்ந்தவரா? இப்பொழுது தான் உங்கள் சுயரூபம் தெரிந்தது என வசைகள்.

இவை இரண்டுக்கும் விளக்கம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை.
காரணம் இந்த இரண்டு நிலைகளையும் இல்லாத சுத்த பெருவெளியில் நான் நிற்கிறேன். அங்கே எனக்கு அடையாளம் இல்லை. உருவம் இல்லை. உணர்வுகள் கிடையவே கிடையாது. என்னுள் இயங்குவது என் விரல்களையும் இயக்குகிறது. கொஞ்சமேனும் என் பிரஞ்ஞை அது இயக்கி இருந்தால் உங்களை விடவும் அதிக கேள்விகள் கேட்பவனாக இருந்திருப்பேன். அதை தெரிந்து கொண்டே என்னை இயக்கமற்ற சிந்தனையற்ற ஒரு எழுதுபொருளாக்கி இருக்கிறது.
-------------

இயற்கையாக வாழுதல் என்பது அனைவரின் உள் உணர்விலும் ஏக்கமாக இருக்ககூடியது. சுத்தமற்ற உணவும், அசுத்தமான காற்றையும் சுவாசிக்கும் எவரும் தன் மனதால் சித்திக்காவிடினும் அவர்களின் உடலும் ஆன்மாவும் அத்தகைய வாழ்க்கைக்காக் தவம் இருக்கும் என்பது உண்மை.இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு முன்னால் இயற்கையை தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கை என்றால் என்ன என யாரையாவது கேட்டுப் பாருங்கள்.. உடனே மலை, கடல் அல்லது ஆறு இவையெல்லாம் இயற்கை என்பார்கள்.

உண்மையில் இவையெல்லாம் இயற்கை வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் சூழல்கள் மட்டுமே. இயற்கை என்பது உங்களை தவிர இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிர்கள் அனைத்துமே என்பதை உணருங்கள்.

உங்களை விடுத்து அனைத்து உயிர்களையும் இயற்கை என உணர்ந்து இப்பொழுது கடல், மலை மற்றும் ஆறுகளை பாருங்கள். அதில் பல உயிர்களின் வாழ்விடம் என உங்களுக்கு புரியும்.

உயிரினம் என்பது பறவைகள் மற்றும் விலங்களை மட்டும் குறிப்பிடவில்லை. தாவரங்களும் உயிர்கள் தானே? அவற்றையும் இணைத்தே கூறுகிறேன். கடல் மற்றும் மலை என எந்த இயற்கை சூழல் இருந்தாலும் அதில் தாவரமும் , விலங்கினங்களும் இருக்கும்.

அத்தகைய உயிரினங்கள் நமக்கு பல விதத்தில் நன்மையை கொடுக்கிறது என்பது தெரியாமலேயே நாம் அவற்றைவிட்டு தூரமாக வாழ்கிறோம். இதனால் நமக்கு வாழ்க்கை முழுமையற்ற நிலையில் இயங்குகிறது.

வேதகால வாழ்க்கை என்பது இயற்கை பகுதியுடன் உங்களை இணைத்து வாழ்வது. இயற்கை என்ற உயிர்பொருட்களுடன் நீங்கள் ஒன்றினைந்து வாழ்ந்தால் அவற்றின் மூலம் உங்களின் வாழ்வாதாரம் முழுமை பெறும்.

வேதம் என்றால் ஒரே பொருளின் அங்கம் பிரிந்து இருக்கும் தன்மையை வேதம் என்றேன் அல்லவா? அது போல தாவரம், மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்தும் பிரிந்திருந்தாலும் உண்மையில் அனைத்தும் ஒரே வஸ்துவால் ஆனது என்பதை உணர்ந்து வாழ்தல் வேதகால வாழ்க்கை என்கிறேன்.

மனிதனின் வாழ்க்கை இயக்கம் ப்ராண சக்தியின் அடிப்படையில் அமைந்துள்ளது. பிரபஞ்ச சக்தி ப்ராண சக்தியாக மனித உடலுக்குள் நேரடியாக நுழைய முடியாது. மனிதனை தவிர பிற இயற்கை பொருட்கள் பிரபஞ்ச சக்தியை ப்ராண சக்தியாக மாற்றும் கேந்திரங்களாக செயல்படுகிறது.

உதாரணமாக தாவரங்கள் பிரபஞ்ச சக்தியை நேரடியாக ப்ராணனாக மாற்றும் கருவியாக இருக்கிறது. அதனால் தான் மனிதன் தாவரங்கள் இல்லாத பாலைவனத்திலும், பனிப்பிரதேசங்களிலும் அதிககாலம் வாழ முடியவில்லை.

முழுமையான ப்ராணனுடன் மனிதன் வாழ்ந்தால் அதனால் அவனும் சமூகமும் அடையும் பயன் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி முழுமையான ப்ராணனுடன் மனிதன் வாழ்ந்து இயற்கையுடன் ஒன்றிணைவதே வேதகால வாழ்க்கை முறை என கூறலாம்.

வேதகால வாழ்கை என்பதை செயல்படுத்த மூன்று இயற்கை பொருட்கள் தேவை. அவை தாவரம், பசு மற்றும் மனிதன். ஒவ்வொரு பகுதியையும் மனித வாழ்க்கைக்கு எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

( ....வேதம் ஒலிக்கும்)


Tuesday, October 20, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 2

வானில் ஒளிவிடும் சூரியனுக்கு தெரியாது
தன் பெயர் சூரியன் என்று...


மனித மனம் விசித்திரமானது. தனக்கு தெரிந்த விஷயங்களை எப்பொழுதும் ஒரு பெயருடனோ, சம்பவத்துடனோ தொடர்புபடுத்திக்கொள்ளும். அப்பொழுது தான் அது நினைவு அறையில் இருக்கும் என்பது விதி. பிரபஞ்சம் தோன்றியது முதல் ஒரு ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு மனிதர்கள் வகைபடுத்தி வேதம் என பெயர் சூட்டி உள்ளனர். வேதத்திற்கு பொருளோ, பெயரோ கிடையாது.


பிரபஞ்சத்தில் இருந்து ஏற்படும் ஒலியானது இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் இல்லாவிடினும் ஒலிக்கும். அதற்கு பிரணவம் என்றும் ஓம்கார ஒலி என்றும் பல பெயர்கள் சூட்டினாலும் அதனால் அதன் செயல் மாறுபடாது. அத்தகைய பிரபஞ்ச ஒலி ப்ரணவமாக செயல்படும் பொழுது ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் நமக்கு பல்வேறு வகையான ஓசையாக கேட்கிறது.

இந்த பல்வேறு ஓசையை / ஒலி நயத்தை வகைப்படுத்தி வேதம் என்கிறார்கள். வேத வியாசர் வேதத்தை நான்கு பிரிவுகளாக பிரித்தார் என்றும் அவர் இன்ன காலத்தில் வாழ்ந்தார் என்றும் வகைப்படுத்துவது அனைத்தும் மேலைநாட்டினரின் ஆய்வு மூலம் தான். மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மனியரின் கருத்து அதிகமாக இவ்விஷயங்களில் பயன்படுத்துகிறார்கள்.

ரேடியோ அலை எங்கும் நிரம்பி இருக்கிறது ஆனால் அது நம் உணர்வு உறுப்புக்களுக்கு புலப்படுவதில்லை. ரேடியோ அலையை உணரும் கருவியை கொண்டு அலைகளை பெற்று பல விஷயங்களை செய்யலாம்.

மார்க்கோனி என்பவர் கண்டுபிடிப்பதற்கு முன்னும் ரேடியோ அலைகள் இருந்தது. ஆனால் அதற்கு ரேடியோ அலைகள் என பெயர் சூட்டப்படவில்லை. அதுபோல வேதத்திற்கு நாம் வேதம் என பெயர்சூட்டியதோ , பிரித்ததோ தெரியாது. அது பிரபஞ்சத்திற்காக வேலையில் என்றும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.

வேதம் என்ற அலைகளை உணரும் ரோடியோக்களாகவே ரிஷிகள் இருந்தார்கள். தொகுக்கபட்ட வேத ஒலிகளை கவனித்தால் இன்ன ஒலியை இந்த ரிஷியின் பெயரால் என தொகுத்தார் வியாசர். எளிமையாக சொல்ல வேண்டுமானால் பண்பலை ரேடியோவை உதாரணமாக கொண்டால் பாடல்கள் இன்ன ரேடியோவில் இன்ன அதிர்வெண்னில் ஒலிபரப்பபட்டது என கூறுவது போல வேத ஒலிகள் வகைப்படுத்தப்பட்டது.

வேதம் என்றும் ஒலித்துக்கொண்டே இருப்பதால் இதை புத்தகமாக அச்சிட அவசியம் இல்லை. நம்மை அந்த அதிர்வலைக்கு தயாராக்கினால் யார் வேண்டுமானாலும் அவ்வொலியை உணரலாம்.

சில தர்க்கவாதிகளால் வேதம் என்பது குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகவும், அரசியல் காரணங்களால் ஜாதீய அடிப்படையிலும் பார்க்கப்படுகிறது.

வேதம் என்பது இயற்கையின் வெளிப்பாடு. அதனால் இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது போல வேதம் ஒரு சமூகத்தின் அடையாளம் அல்ல. இக்கருத்தை திருமூலரின் வார்த்தையில் கேட்போம்.

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே
.
-----------------------------------------------------------------திருமந்திரம் 52.

நம் தொடரின் நோக்கம் வேதத்தை பற்றி தெரிந்து கொள்வது அல்ல. வேத முறையில் வாழ்வது என்பதே.

வேதம் என்பது இயற்கையான ஒரு ஆற்றல் என்றேன். அந்த வேதத்தின் வழியே வாழ்தல் என்றால் இயற்கையின் வழியே வாழ்வது என்பதாகும்.

இயற்கையாக வாழ்ந்தால் மட்டுமே பிரபஞ்ச ஒலியான வேதத்தை உணரவும் அதன் ஆற்றலை புரிந்துகொள்ளவும் முடியும்.

தற்சமயம் நாம் வாழும் வாழ்க்கை முறையானது இயற்கைக்கும் நமக்கும் இடையே கோடிக்கனக்கான கிலோமீட்டர் இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. நாம் இயற்கை வழியில் வாழும் முறையான வேதகால வாழ்க்கையை தெரிந்து கொண்டோமானால் இந்த இடைவெளியை ஒரு ஷணத்தில் கடந்துவிடலாம்.

முன்விளக்கமே நீண்டு விட்டது. இன்னும் நான் வேதகால வாழ்க்கை என்பதை பற்றி கூறவில்லை...

(வேதம் ஒலிக்கும்....)