Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, August 24, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 12

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
-----------------------------------------------------திருமந்திரம் 1857

தமிழக கோவில்கள் எப்பொழுதும் பிரம்மாண்டமானது. தமிழக ஆன்மீகவாதிகளின் ஆன்ம ஆற்றலை போல விசாலமானது. கோவிலின்
பிரகாரங்கள் அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் என எத்தனை ஆண்டுகள் அதில் தங்கள் வாழ்நாளை தியாகம் செய்தார்கள் என்ற வியப்பு மேலிடும்.

வடநாட்டில் இருக்கும் கோவில்கள் இத்தகைய பிரம்மாண்டம் இருப்பதில்லை. கோபுரங்களில் வேலைப்படுகள் இத்தனை இல்லை. மத்திய பிரதேசம் தாண்டினால் கோவில்கள் உங்கள் வீட்டின் அளவில்தான் இருக்கும். இதற்கு காரணம் வட நாட்டில் இருந்த அரசர்கள் தங்கள் அரண்மனையை கட்ட எடுத்த முயற்சி கோவிலுக்கு செய்யவில்லை.

தென்நாட்டில் அரண்மனையை காட்டிலும் கோவில்களின்
முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. ஆன்மீகம் மட்டுமலாமல் தென்பகுதி கோவில்கள் சமூகத்தின் கலாச்சார மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு இருந்ததால் பிரம்மாண்ட வடிவம் கொண்டது.

திருவண்ணாமலை பயணம் செய்பவர்கள் அனேகமாக முதலில் வரும் இடம் அருணாச்சலேஸ்வர் கோவில். பலர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு வந்து பிறகு கிரிவலம் செய்து பஸ் ஏறி ஊர் செல்லுவர்கள். நம் மக்களை பொருத்தவரை இது தான் திருவண்ணாமலை பயணம். இப்படி பயணம் செய்வதற்கு ஊரில் இருக்கும் வரைபடத்தில் திருவண்ணாமலையை பார்த்துக்கொள்ளலாம்.
அருணாச்சலேஸ்வரர் கோவில் கிழக்கு கோபுரத்தில் அருகில் .....

இந்தியாவின் மிகபிரம்மாண்டமான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அதற்கு பிறகு இத்தலமே பெரியது. அங்கே சக்திக்கு முக்கியத்துவம் என்றால் இங்கே சிவனுக்கு முக்கியத்துவம். மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் முழுவதும் சிற்பத்தால் நிறைந்திருக்கும். இங்கே சிற்பம் இல்லாமல் சிவ நிலையில் இருக்கிறது நவ கோபுரங்கள். கோவில் கட்டுமானத்திலும் ஆன்மீகத்தை புகுத்திய நம் சான்றோர்களை நினைத்து மெய்சிலிர்க்காமல் இருந்தால் நம் மெய் பொய்யாகிவிடாதா?

பல மன்னர்களின் அருட்கொடையால் விண்ணை தொடும் அளவுக்கு ஒன்பது கோபுரங்கள் கொண்ட கோவில். அருணகிரி நாதர், இடைக்காட்டுச் சித்தர் போன்ற யோகிகளும் பல ஞானிகளும் சமாதி கொண்ட இடம். திருவண்ணாமலை பகுதி முழுவதும் எத்தனையோ யோகிகளின் சமாதி இருந்தாலும் அருணகிரி நாதரும், இடைக்காட்டு சித்தரும் இன்றும் கோவிலின் உள் மக்களை உயிர்ப்பித்துவருகிறார்கள்.

அருணகிரி
நாதர் இறைவனை நோக்கி தவம் இருந்து அவர் காட்சி தராத நிலையில் தற்கொலை செய்ய கோபுரத்தில் ஏறி குதிக்கிறார். அவரை கிளிவடிவமாக்கி தடுத்த இடம் இந்த கோவில். அங்கே கிளி ரூபமான சிலையுடன் கோபுரம் காட்சி அளிக்கிறது.

அருணகிரி நாதர் இக்கோவிலில் திருப்புகழ் பாடினார். இவரின் பெயரே ‘அருண கிரி' என இருப்பதை கவனித்தீர்களா? இவரின் வாழ்க்கையில் அனேக அதிசயம் நிகழ்ந்ததாக கதைகள் கூறிகிறார்கள். நமக்கு எதற்கு அதிசயம்.? அவரின் பாடல்வரிகளில் இருக்கும் ஆன்மீகத்தை உணருங்கள் உணர்ந்தால் அவருக்குள் ஏற்பட்ட அதிசயத்தை உணர்வீர்கள். கந்தரனுபூதியில் கடைசி பாடல் இது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


இறைவனை எங்கும் எதிலும் உணர்ந்தவருக்கே இவ்வரிகள் சாத்தியம். ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்...!

முருகனுக்கும் சிவனுக்கும் ஒரே கோவில் சிறப்புடையதாக இருக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மட்டும் என சொல்லலாம்.

முருகனை முழுக்கடவுளாக ஏற்றவர்களும், சிவனை ஏற்றுக்கொண்டவர்களும் ஒரு திருத்தலத்தில் பாடி பரவசம் கொண்டார்கள். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்று தொட்டு ஏனைய யோகிகள் தரிசித்து ஆசிர்வதித்து சாமாதிகண்டார்கள்.

பாதாள லிங்க கருவறையின் முகப்பில். பின்புறம் பகவான் ரமணர்.

இக்கோவிலின் கிழக்கு
பகுதியில் இருக்கும் பாதாள லிங்கம் எனும் இடத்தில் ரமணர் தவம் இருந்தார். பாதாள லிங்கம் என்பது பல அடி ஆழத்தில் இருக்கும் ஒரு சிவ லிங்கம் கொண்ட சன்னிதி. ரமணர் பாதாள லிங்கத்திற்கு உள்ளே சென்று அங்கிருக்கும் சிவனை அரவணைத்தவாறு தவம் செய்ய துவங்கும் பொழுது அவருக்கு வயது 16. அவ்வாறு அவர் தவம் செய்யும் பொழுது சிறுவர்கள் பாதாள லிங்க சன்னிதியை அதற்கு உண்டான கல் கதவை வைத்து மூடிவிட்டார்கள். நவீனகாலத்தில் பாதாள சாக்கடை இரும்பு மூடியால் மூடுவது போல மூடி விட்டார்கள்.

பல நாட்கள் இடைவிடாது ரமணர் அங்கே தவம் இருந்தார். ஒரு பகுதி உடல் அசையாமல் இருந்ததால் உணர்வற்று பூச்சிகள் அரிக்க துவங்கிவிட்டது. சேஷாத்திரி ஸ்வாமிகளின் உள்நிலையில் அவர் அப்படி இருப்பது தெரிந்து ரமணரை வெளியே கொண்டுவந்து சேர்த்தார். அச்சமயம் ரமணரின் உடல் உணர்வற்று நிர்வாணமாக பூச்சிகள் அரித்தவண்ணம் இருந்தது.

தற்காலத்தில் சில யோக பயிற்சி பள்ளிகளால் தவம் என்ற வார்த்தை தடம்புரண்டு இருக்கிறது. தவம் இருப்பது என்பது இடம், காலம், சூழல் மறந்து தொடர்ந்து உள் நிலையில் அடங்கி இருப்பது தவம். முனிவர்கள் காட்டில் நாள்கணக்கில் அசைவற்று இருப்பார்களே அது பெயர் தவம். சில யோக பயிற்சி பயின்றவர்கள் காலையில் நான் இரண்டு மணிநேரம் தவம் செய்தேன் எண்பார்கள் இதை கேட்கும் பொழுது என்ன சொல்லுவதென்றே தெரியாது. தடகள வீரரிடம் சென்று 'நூறு மீட்டர் மராத்தான் ஓட்டம் ஓடலாமா' என கேட்டால் அவர் என்ன செய்வார்? தியானம் என்பது நூறுமீட்டர் ஓட்டம் போல, தவம் என்பது மராத்தான் ஓட்டம் போல நான்ஸ்டாப் தியானம் தவம் என புரிந்துகொள்ளுங்கள்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அனேக சிறப்புகள் உண்டு. மூன்று தீர்த்தம் உள்ள கோவில், நான்முக லிங்கம் உள்ள கோவில், நவ கோபுரம் கொண்ட கோவில் என சொல்லிக்கொண்டே போகலாம்.அருணாச்சலேஸ்வர் கோவிலின் உள்ளே எந்த இடம் பார்க்க வேண்டியது என்றால் ஒவ்வொரு அனுவும் என சொல்லலாம். இருந்த பொழுதிலும் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண ஸுப்ரமணியர், கருவரை பின்புறம் மேற்கு கோபுரம் அருகில் இருக்கும் இடைகடார் சமாதி என யாருக்கும் அதிகமாக கண்களில் சிக்காத சில தெய்வீக கருவரையை கூறலாம்.

தமிழக கோவில்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் நவீன காலத்தில் “அருள்மிகு” ஆனதும் எனக்கு அதில் பற்றுதல் இல்லாமல் போனது. அதிக வருமானம் என்ற பொருளாதார நோக்கில் அரசு கையகப்படுத்தியதன் விளைவாக கருவறை வரை காசு தேவைப்படுகிறது. கையில் காசில்லாமல் என்னை போன்றவர்கள் கோவிலுக்கு செல்ல முடியுமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஈஸ்வரனை அருகில் சென்று பார்க்க வேண்டுமானால் பக்தி மட்டுமல்லாமல் நீங்கள் 25 ரூபாய் உடன் செல்ல வேண்டும்.

பிரபலமான தமிழக கோவில்களில் எனக்கு சில மனக்குறை உண்டு. கருவரை மண்டப வாசலில் “இப்பகுதிக்கு மேல் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி” என வைத்திருப்பார்கள். அனேக கோவிலில் அதை பார்த்தவுடன் நான் திரும்பி விடுவேன். எனக்கு அத்தகுதி இல்லையே..!

வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வருவதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மட்டும் அனைவருக்கும் அனுமதி உண்டு. ஆகம விதிகள் டாலரால் மறைக்கப்படும் - தட்டிக்கேட்கும் ஊராரின் வாய் யூரோவால் அடைக்கப்படும் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருபக்கம் சங்கடமாக இருந்தாலும் இவர்கள் இங்கே மட்டுமாவது அனுமதிக்கபடுவது எனக்கு ஆறுதலை அளிக்கிறது.

வருடத்திற்கு பல முறை திருவண்ணாமலை சென்றாலும் கோவிலுக்கு சில முறையே செல்லுகிறேன். இதன் காரணத்தை வெளியே
சொல்ல முடியாது. கோவிலை உள்ளே சென்று பார்ப்பதை விட வெளியிலிருந்து கோவிலின் கட்டமைப்பை ரசிப்பது எனக்கு பிடிக்கும். கோவிலை கந்தாஸ்ரமம் என்ற அருணாச்சல மலையின் பகுதியிலிருந்து பார்த்தால் எனக்கு பிடிக்கும். அதே போல மற்றொரு இடத்திலிருந்து பார்த்தால் கோவில் அட்டகாசமாக தெரியும்.
கந்தாஸ்ரமத்தின் முன்புறத்திலிருந்து கோவிலின் தோற்றம்

நண்பர்களின் சவாலால் கையில் காசில்லாமல் திருவண்ணாமலை வந்து கோவிலுக்கு செல்லாமல் திருவண்ணாமலையில் பல
இடங்களில் சுற்றி திரிந்தேன் அல்லவா? அப்பொழுது அதிகம் நேரம் கழித்த இடம் இது தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம். அது ஒரு ஆற்றல் மிகுந்த இடம்...


(தொடரும்)

32 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//“இப்பகுதிக்கு மேல் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி” //

மேல் இந்துக்களில் இருக்கும் பீமேல் இந்துகளுக்கு அனுமதி கிடையாதா ?

Fee மேல் அனுமதியும் இல்லையா ?
:)

என்னவோ போங்கள், இதைத்தான் கோவில் என்பது கொ....ர்களின் (ள்,ல் கரங்கள் பிடித்த மாதிரி போட்டுக் கொள்ளவும்) கூடாராம் என்று சொல்லுகிறார்கள்

Unknown said...

//
மேல் இந்துக்களில் இருக்கும் பீமேல் இந்துகளுக்கு அனுமதி கிடையாதா ?

Fee மேல் அனுமதியும் இல்லையா ?
:)

என்னவோ போங்கள், இதைத்தான் கோவில் என்பது கொ....ர்களின் (ள்,ல் கரங்கள் பிடித்த மாதிரி போட்டுக் கொள்ளவும்) கூடாராம் என்று சொல்லுகிறார்கள்
//

சில இடங்களின் புனித தன்மை புரியவேண்டுமெனில் அந்த மதத்தினரால் மட்டுகே முடியும்.

வெளி நாட்டினர் இங்கே வந்து செருப்புடன் கோயிலின் நுழைய பார்த்தார்கள். அவர்களின் அலட்டல் வேற(னான் சொல்வது srirangamதில்.)

அதனால் கட்டுப்பாடுகள் இருப்பது தவற்ல்லை

கோவி.கண்ணன் said...

//சில இடங்களின் புனித தன்மை புரியவேண்டுமெனில் அந்த மதத்தினரால் மட்டுகே முடியும்.

வெளி நாட்டினர் இங்கே வந்து செருப்புடன் கோயிலின் நுழைய பார்த்தார்கள். அவர்களின் அலட்டல் வேற(னான் சொல்வது srirangamதில்.)

அதனால் கட்டுப்பாடுகள் இருப்பது தவற்ல்லை//

ஐயா 'மேல் இந்துக்கள்' என்று எழுதி இருப்பது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கெல்லாம் அது 'மேல் ஜாதி இந்துக்கள்' என்ற சொல்லின் சுருக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நான் பிற மதத்தினரைவிட வேண்டும் என்று சொல்லவரவில்லை, மதநம்பிக்கை கொண்ட பிற மதத்தினர் பிறர் வழிபாட்டுத்தளத்துக்கும் செல்லமாட்டடர்கள். போட்டோ எடுக்கும் டூ ரிஸ்டுகளையெல்லாம் கருவறை வரை விடுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை.

'மேல் இந்துக்கள்' என்பதன் பொருள் யாது என்பதை திருவண்ணாமலை சென்று கேட்டுவந்து எனக்கு பதில் சொல்லி இருந்தால் சரியாக இருக்கும்.

Unknown said...

//ஐயா 'மேல் இந்துக்கள்' என்று எழுதி இருப்பது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கெல்லாம் அது 'மேல் ஜாதி இந்துக்கள்' என்ற சொல்லின் சுருக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நான் பிற மதத்தினரைவிட வேண்டும் என்று சொல்லவரவில்லை, மதநம்பிக்கை கொண்ட பிற மதத்தினர் பிறர் வழிபாட்டுத்தளத்துக்கும் செல்லமாட்டடர்கள். போட்டோ எடுக்கும் டூ ரிஸ்டுகளையெல்லாம் கருவறை வரை விடுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை.//

தற்போது எந்த கோயிலிலும் அந்த கட்டுப்பாடுகள் இல்லை.

ஷண்முகப்ரியன் said...

ரமண்ர் தவம் புரிந்த பாதாள அறையைப் பார்த்திருக்கிறேன்.அங்கே இன்னும் அந்த அலையோட்டம் இருப்பதாக உணர்ந்தேன்,ஸ்வாமிஜி.

அருணகிரிநாதர் பெயரை எத்தனை முறை கேட்டிருப்பேன்.ஆனால் ‘அருணகிரி’ என்ற பெயரின் எளிமையான விளக்கத்தை உணர நீங்கள் வந்து சொல்ல வேண்டியதாயிருக்கிறது.எத்தனை விஷயங்களை இதுபோல unconscious ஆகத் தாண்டி விடுகிறேன்.

அருணாசலேஸ்வரர் உங்கள் மூலமாக எங்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்,ஸ்வாமிஜி.

நன்றி சொல்லவே நல்தவம் செய்திருக்க வேண்டும்.நன்றி ,ஸ்வாமிஜி.

நிகழ்காலத்தில்... said...

ஓம்கார் “இப்பகுதிக்கு மேல்,,, இந்துக்களுக்கு மட்டும் அனுமதி”

மேல்- க்கு அப்புறம் ஒரு கமா போடவில்லை, விளைவு

‘இந்துக்களில், மேல் இந்துக்கள், கீழ் இந்துக்கள் என இங்கே வந்துவிட்டார்கள்.

ஓம்கார் அவர்கள் இனி எழுத்துபிழை, கமா, இடம் விடுதல் போன்றவற்றை சரியாக பார்த்து எழுத வேண்டும் என அவரை பட்டை தீட்டும் கோவியார் வாழ்க :))

நிகழ்காலத்தில்... said...

//தவம் இருப்பது என்பது இடம், காலம், சூழல் மறந்து தொடர்ந்து உள் நிலையில் அடங்கி இருப்பது தவம். முனிவர்கள் காட்டில் நாள்கணக்கில் அசைவற்று இருப்பார்களே அது பெயர் தவம்.

சில யோக பயிற்சி பயின்றவர்கள் காலையில் நான் இரண்டு மணிநேரம் தவம் செய்தேன் எண்பார்கள் இதை கேட்கும் பொழுது என்ன சொல்லுவதென்றே தெரியாது.

தியானம் என்பது நூறுமீட்டர் ஓட்டம் போல, தவம் என்பது மராத்தான் ஓட்டம் போல நான்ஸ்டாப் தியானம் தவம் என புரிந்துகொள்ளுங்கள்.//

தியானத்துக்கும், தவத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியுது சாமி,

ஆனா தியானம் எதுக்கோ நமக்கு தேவைப்படுது அப்படிங்கிறதும் புரியுது, தவம் எதுக்கு செய்யனும்,இப்படி செஞ்சா என்ன கிடைக்கும் சாமி,

சொல்லுங்க, இல்லைன்னா இடுகையிலே பொருத்தமான வகையில் சொல்லிருங்க, நாளைக்கு பொத்தகமா வரும்போது, செளகரியம இருக்கும்.

நன்றிங்க சாமி..

---புரியாத பொன்னுசாமி

தேவன் said...

///அருணகிரி நாதர் இறைவனை நோக்கி தவம் இருந்து அவர் காட்சி தராத நிலையில் தற்கொலை செய்ய கோபுரத்தில் ஏறி குதிக்கிறார். ///

இதையெல்லாம் படித்திருக்கிறேன் ஆனால் இடங்களை பார்த்ததில்லை.கொடுத்து வைக்கல போல.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கோவி.கண்ணன்,

மதத்தை பொருத்தவரை பெண்கள் விலக்கி வைக்கபடுகிறார்கள்.

நீங்கள் சொன்ன ஃபீமேல் நகைச்சுவையானாலும், வேதனை கொண்டது.

எனைத்து மதங்களும் பெண்களை விலக்குவதால் பெண் ஆன்மீகவாதிகள் தோன்றாமல் தாய் என்ற தெய்வமாக மாறுகிறார்களோ?

கருவரைக்கு அனைத்து ஜாதியினரும் செல்ல சட்டம் போடும் அரசாங்கம். அவர்களின் பெண்ஜாதி கருவரைக்கு செல்ல முடியாததை யோசிப்பதில்லை..!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர் ஜகன்நாதன்,

மதிக்காமல் ஒரு இடங்களுக்கு வரும் நபர் யாராக இருந்தாலும் தடை செய்யப்பட வேண்டியவர்.
கோவில் மட்டுமல்ல உங்கள் வீடாக இருந்தாலும் அனுமதிக்க கூடாது.

ஆனால் செருப்பு மாலை போட்டு சிலையை உடைப்பவன் இந்து என்ற கரணத்தால் உள்ளே செல்லலாம். தினமும் தியானம் செய்து யோக பயிற்சி செய்யும் வெளிநாட்டுக்காரர்கள் இந்து இல்லை என்ற காரணத்தால் செல்ல கூடாதா? என்ன தர்மம் இது?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

முடிந்தால் இடைக்கடாரின் சமாதி பின்புறம் இருக்கிறது அதையும் காணுங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் said...

//ஆனால் செருப்பு மாலை போட்டு சிலையை உடைப்பவன் இந்து என்ற கரணத்தால் உள்ளே செல்லலாம். //

கடற்கரையில் பிள்ளையார் அலங்கோலம் !

மாலை போட்டு பிள்ளையாரை உடைப்பவர்கள் செல்லலாமா ஸ்வாமி ?

:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரியாத பொன்னுசாமி,

//தியானத்துக்கும், தவத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியுது சாமி,

ஆனா தியானம் எதுக்கோ நமக்கு தேவைப்படுது அப்படிங்கிறதும் புரியுது, தவம் எதுக்கு செய்யனும்,இப்படி செஞ்சா என்ன கிடைக்கும் சாமி,

சொல்லுங்க, இல்லைன்னா இடுகையிலே பொருத்தமான வகையில் சொல்லிருங்க, நாளைக்கு பொத்தகமா வரும்போது, செளகரியம இருக்கும்.//

மொத்த தொகை குடுத்து ஒரு பொருள் வாங்குவதற்கும் , தவணை முறையில் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசமே தியானமும் தவமும் சொல்லுகிறது.

தற்கால நவநாகரீக உலகில் தவம் இருக்க அனைவருக்கும் சூழல் இல்லை. அதனால் தியானம் தேவை படுகிறது.

Every thing becomes installments in this world ponnusami..!

கோவி.கண்ணன் said...

//எனைத்து மதங்களும் பெண்களை விலக்குவதால் பெண் ஆன்மீகவாதிகள் தோன்றாமல் தாய் என்ற தெய்வமாக மாறுகிறார்களோ?//

என்ன ஸ்வாமி 12 வயது மணிகண்டனுக்கு கூட பெண்கள் தீட்டாம் ! இதுக்கு என்ன சொல்லுவிங்க ? ஒரு வேளை அந்த காலத்தில் இளம் வயதில் திருமணம் நடைமுறையில் இருந்ததால் 12 வயது பாலகன் குமரனா ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேசவன்,

//இதையெல்லாம் படித்திருக்கிறேன் ஆனால் இடங்களை பார்த்ததில்லை.கொடுத்து வைக்கல போல.//

கிழக்கு பக்கமாக உள்ளே சென்றால் கோவிலில் இரண்டாம் நிலை பிரகாரம் துவங்கும் இடத்தில் இருக்கிறது 'கிளி கோபுரம்'. அனைத்து கோபுரமும் சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்த கோபுரமும் சாம்பல் நிறத்தில் இருந்தாலும் அதில் கிளி மட்டும் பச்சை நிறத்தில் வண்ணமயமாக இருக்கும்.

அடுத்த முறை செல்லும் பொழுது கண்டு மகிழுங்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

//தற்போது எந்த கோயிலிலும் அந்த கட்டுப்பாடுகள் இல்லை.

August 25, 2009 9:37 AM
//

இருக்கிறது என்று குறிப்பிட்டு தானே ஸ்வாமி ஓம்கார் எழுதி இருக்கிறார்.

கட்டுபாடுகள் இல்லை என்பது நீக்கியது உண்மை என்பதை ஒப்புக் கொள்ளுவது ஆகும். அப்படி எழுதி வைக்கப்பட்டிருந்தது பிற்போக்குத்தனம், தவறான ஒன்று என்பதை ஒப்புக் கொள்ளும் மன நிலை உங்களுக்கு ஏன் இல்லை ?

Unknown said...

//கட்டுபாடுகள் இல்லை என்பது நீக்கியது உண்மை என்பதை ஒப்புக் கொள்ளுவது ஆகும். அப்படி எழுதி வைக்கப்பட்டிருந்தது பிற்போக்குத்தனம், தவறான ஒன்று என்பதை ஒப்புக் கொள்ளும் மன நிலை உங்களுக்கு ஏன் இல்லை ?
//

கண்ணன் நந்தனைப் போல் பெத்தான் சாம்பனைபோல் ஒரு அதி தீவிர பக்குவவாதி உலகத்தில் இல்லை என்று சைவ உலகத்தின் நம்பிக்கை

திருப்பாணாழ்வார் அரங்கனைப் பார்த்தவுடன் கலந்தவர்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் எல்லா ஜாதிக்ளிலும் இருந்தார்கள்

ஜாதிகள் இடைக்காலத்தில் வந்தவை.

தற்போது மறைந்து போனவை

ஸ்வாமி ஓம்கார் said...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மயிலை கற்பக அம்பாள் கோவில் கருவாறை இருக்கும் பிரகார வாயிலில் “இந்துக்களுக்கு மட்டும் அனுமதி” என பலகை இன்றும் உண்டு.,

நீங்கள் செல்லும் பொழுது பார்க்க தோன்றாது. பிற மதத்தினர் செல்லும் பொழுது இனம்கண்டு அவர்களை வெளியேர சொல்லுவார்கள்.

ஜாதி ரீதியாக தடை செய்வதே குறைந்திருக்கிறது.

Anonymous said...

பணத்திற்கு சக்தியூட்டி, அந்த சக்தியை வைத்து மனிதனை குரங்கு போல் ஆட வைத்து நாடகத்தை நடத்துகிறார், அங்கே ஈஸ்வரன் உங்களுக்கு தெரியவில்லையா சுவாமி? அதை ந்யயபடுதவில்லை, சம நிலையில் இருந்து பார்த்தால் அங்கே நாடகத்தை நடத்தி கொண்டிருக்கும் சாமியை தெரியுமே, என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அருமையான பல விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

அட்டென்டண்ஸ்.

:)

Anonymous said...

திரு ஜெயசங்கர்:
//வெளி நாட்டினர் இங்கே வந்து செருப்புடன் கோயிலின் நுழைய பார்த்தார்கள். //
செருப்பில் மட்டும் என்ன, கடவுள் இல்லை என்று சொல்லுகிரீர்கள? செருப்பில்லாமல் கோவிலுக்கு செல்ல காரணம் கண்டிப்பாக இருக்கும். கால் நேரடியாக தரையில் படும் பொழுது நல்ல மசாஜ் கிடைத்து, நாடிகளை ஆற்றல் பெற செய்யும். கோவிலில் உள்ள இறை சக்தி நம்முள் பாய சுலபமாக இருக்கும். சுவாமி, நீங்கள் கூறிய கருத்து மிக அருமை. நான் கூறிய கருத்திற் ஏதேனும் தவறு இருந்தால் அதை தயவு செய்து திருத்தி விடும்படி பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ்,

//பணத்திற்கு சக்தியூட்டி, அந்த சக்தியை வைத்து மனிதனை குரங்கு போல் ஆட வைத்து நாடகத்தை நடத்துகிறார், அங்கே ஈஸ்வரன் உங்களுக்கு தெரியவில்லையா சுவாமி? அதை ந்யயபடுதவில்லை, சம நிலையில் இருந்து பார்த்தால் அங்கே நாடகத்தை நடத்தி கொண்டிருக்கும் சாமியை தெரியுமே, என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அருமையான பல விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றி.//

இதை எப்படி பதில் அளிக்க என தெரியவில்லை. நல்ல வேளை நீங்கள் பின்னூட்டம் இட்டீர்கள். நேரில் கூறியிருந்தால் என் பதில்கள் எப்படி இருக்கும் என தெரியாது :)

ஒருவன் பல உயிர்களை கொடூரமாக கொன்றுவிட்டு அஹம் பிரம்மாஸ்மி என்றால் அவனை வணங்கலாமா?

அது போலத்தான் பணமும்.

உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

//கால் நேரடியாக தரையில் படும் பொழுது நல்ல மசாஜ் கிடைத்து, நாடிகளை ஆற்றல் பெற செய்யும். கோவிலில் உள்ள இறை சக்தி நம்முள் பாய சுலபமாக இருக்கும்.//

இன்னும் எல்லாவற்றிற்கும் நாடிதான் :) கலக்குங்க.

சுப்பாண்டி கூட பல் தேய்க்கும் பொழுது இரு கைகளிலும் மாறி மாறி தேய்ப்பார். கேட்டால் காலையிலேயே இரண்டு கையையும் அழுத்தம் கொடுத்து ஸூக்‌ஷமணாவை தூண்டுகிறாராம்.

:)

Anonymous said...

//சுப்பாண்டி கூட பல் தேய்க்கும் பொழுது இரு கைகளிலும் மாறி மாறி தேய்ப்பார்.//
Ha ha ha! Hilarious!

Siva Sottallu said...

அருமையான விளக்கம் சுவாமி. மிக்க நன்றி.

திரு ஷண்முகப்ரியன் அவர்களின் வரிகளை வழிமொழிகிறேன் "நன்றி சொல்லவே நல்தவம் செய்திருக்க வேண்டும்.நன்றி ,ஸ்வாமிஜி."

நீங்கள் ஆங்காங்கே எழுதும் திருமந்திரம் அதற்கும் ஒரு சிறு விளக்கம் கொடுத்தம் இன்னும் அருமையாக இருக்குமே ஸ்வாமி?

குறும்பன் said...

\\முருகனுக்கும் சிவனுக்கும் ஒரே கோவில் சிறப்புடையதாக இருக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மட்டும் என சொல்லலாம். \\\

அண்ணாமலையார் (அருணாச்சலேஸ்வர்) கோயிலில் முருகனுக்கு (ஸ்ப்ரமணியர்) என்ன வேலை? விளக்கினால் தெரிந்து கொள்வோம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//
நீங்கள் ஆங்காங்கே எழுதும் திருமந்திரம் அதற்கும் ஒரு சிறு விளக்கம் கொடுத்தம் இன்னும் அருமையாக இருக்குமே ஸ்வாமி?//

அந்த திருமந்திரத்தில் இருக்கும் அர்த்தம் தான் கீழே இருக்கும் கட்டுரை..!

திருமூலரின் 3088 திருமந்திரம் ஏதோ விதத்தில் மனித வாழ்வில் செயல்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டவே அங்காங்கே குறிப்பிடுகிறேன்.

ஸ்ரீ சக்ரபுரி தொடரையும் திருமந்திர பாடலையும் மீண்டும் ஒருமுறை படியுங்கள் புரியும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குறும்பன்,

//அண்ணாமலையார் (அருணாச்சலேஸ்வர்) கோயிலில் முருகனுக்கு (ஸ்ப்ரமணியர்) என்ன வேலை? விளக்கினால் தெரிந்து கொள்வோம்.//

விளக்க என்ன இருக்கிறது. இறைவனின் ஆற்றலை வெவேறு ரூபங்களில் ஞானியிர் வணங்கிய இடம்.

Unknown said...

//அண்ணாமலையார் (அருணாச்சலேஸ்வர்) கோயிலில் முருகனுக்கு (ஸ்ப்ரமணியர்) என்ன வேலை? விளக்கினால் தெரிந்து கொள்வோம்.////
கம்பத்து இளையனார் சன்னதியில் வந்து பாருங்கள். அருணகிரினாதன் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் வந்து அருள் புரிந்த இடம்

Mahesh said...

ஆஹா... அட்டெண்ட்ன்ஸ்தான் போட முடியலயே தவிர 12 பகுதிகளும் அருமை...

அப்பிடியே... "கம்பத்து இளையனார்" ஒரு சிறு விளக்கம் குடுத்துடுங்களேன்... என்னை மாதிரி அரைகுறைகளை விட உங்கள் விளக்கம் அருமையாகவே இருக்கும்.

Unknown said...

//கம்பத்து இளையனார்" ஒரு சிறு விளக்கம் குடுத்துடுங்களேன்..//

அண்ணாமலையார் அக்கினிப் பிழம்பு; அதே போன்று மகனான முருகனும் அக்கினிப் பிழம்பு. அவர் தந்தையார்... ஆகவே மூத்தவர்; இவர் மகனார்... ஆதலால், இளையனார். முருகப் பெருமான் சந்நிதிதான் கம்பத்து இளையனார் சந்நிதி என்பது!

அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் அருள் வழங்கிய திருத்தலம் திருவண்ணாமலை. அருணகிரியார் வாழ்க்கையின் சம்பவங்கள் பல, இங்கே நடைபெற்றுள்ளன. அப்படியன்றுதான், கம்பத்து இளையனார் சந்நிதி தோன்றுவதற்கான காரணம்.

சம்பந்தாண்டான் எனும் பெயர் கொண்ட ஒருவர், அப்போது திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அரசவையின் ஆஸ்தான புலவராகவும் விளங்கிய இவர், பொறாமை கொண்டவர்; அருணகிரியாரை எப்படியேனும் மட்டம் தட்டவேண்டும் என்று திட்டம் போட்டார். அரசராக இருந்த பிரபுட தேவ மகாராஜாவிடம் இல்லாததும் பொல்லாததும் சொன்னார்; அருணகிரியாரை முடியுமானால் முருகனை வரவழைக்கச் சொல்லுங்கள் என்று தூண்டி விட்டார்.

அருணகிரிநாதர் மயிலை வேண்டிப் பாடி னார்; மயில் முருகனை வேண்ட, ஆடும் மயில் மீது ஆடிக்கொண்டே ஆறுமுகனும் காட்சி கொடுத்தார். அதுவும் கம்பத்தில் வந்து காட்சி கொடுத்தார். அந்தக் கம்பமே கருவறையாக அமைந்த சந்நிதியே, கம்பத்தில் இளையனார் தோன்றிய கம்பத்து இளையனார் சந்நிதி.

அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட
அபினகாளி தானாட அவளோடு அன்(று)
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேதனார் ஆட
மருவு வானுளோர் ஆட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனார் ஆட
மயிலுமாடி நீயாடி வரவேணும்


னன்றி
http://www.tamil-temples.com/TPDetails.asp?id=30

குறும்பன் said...

//விளக்க என்ன இருக்கிறது. இறைவனின் ஆற்றலை வெவேறு ரூபங்களில் ஞானியிர் வணங்கிய இடம்.//
திருவண்ணாமலை சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த ஒரே கோயில் என்று சொல்வதற்கு ஏதேனும் சிறப்பு இருக்க வேண்டுமல்லவா? உங்களின் பதிலை நான் வேறு நபரிடம் கூறினால் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரே? எனக்கும் இந்த பதிலில் நிறைவு இல்லை என்பது தனி.

//கம்பத்து இளையனார் சன்னதியில் வந்து பாருங்கள். அருணகிரினாதன் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் வந்து அருள் புரிந்த இடம்//

அது தான் காரணமா இல்லை வேறு ஏதாவது உள்ளதா? அப்படி என்றால் "ஒரே கோயில்" என்று சொல்ல தேவையில்லையே?