Friday, November 6, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 10

வேதகால வாழ்க்கை என்பதில் மூன்று இயற்கை உயிர்கள் சுழற்சி முறையிலும் ,பரஸ்பரமும் பகிர்ந்து வாழ்ந்தல் அவசியமாகிறது. பிரபஞ்ச சக்தியை முழுமையாக மரங்கள் பெறுவதற்கு மரங்கள் மிகவும் ஊட்டச்சத்துடன் வாழவேண்டும். மரங்களின் ஊட்டத்தை பெறுக்க பசுவின் மூலம் ஏற்படும் பஞ்சகவ்யம் மிகவும் தேவையான ஒரு விஷயம்.

பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவையாகும். பஞ்சகவ்யம் இருந்தால் தான் மரம் வளரும் என்பது அல்ல. மரங்கள் செறிவுடன் மிகவும் திறன்வாய்ந்த ப்ரபஞ்ச ஆற்றல் மையங்களாக இருக்க இந்த ஊட்டம் தேவைபடுகிறது. பசு மிகவும் ஆற்றல் வாய்ந்த ப்ராண கேந்திரம் என தெரிந்துகொண்டோம்.

அது போல பஞ்சகவ்யத்தை கொண்டு வளர்ந்த மரங்கள் பசுவுக்கு இணையான ஆற்றல் ஏற்படுத்துகிறது. காரணம் மரம் தனது உயிர் சக்தியை பசுவின் ஆற்றல் மூலமே பெறுகிறது. இவ்வாறு வளர்க்கபட்ட தாவரங்கள் பசு இவை அனைத்தும் சமமான சக்தியை கொண்டு நம்மை சுற்றி பல சக்தி மையங்களை ஏற்படுத்தும்.

தொடர்ந்து தடையில்லாத பிரபஞ்ச சக்தி நம்மில் ஊடுருவ வாழ்ந்துவந்தால் வேறு என்ன நமக்கு வேண்டும்?

பஞ்சகவ்ய பொருட்களை நான் பட்டியலிட்டவுன் அதில் அப்படி என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். பஞ்சகவ்யம் என்பது மரத்திற்கு போடும் உரமாகவும், ஊட்டமளிக்கும் தாவர உணவாகவும் பார்க்கப்படுகிறது.

உண்மையில் பஞ்சகவ்யம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஊட்ட சத்து. மனிதர்களுக்கு ஆயுர்வேதத்தில் சக்தியை பெற மருந்தாக வழங்கப்படுகிறது. என்னது பசுவின் சிறுநீரும், சாணமும் மருந்தா என நீங்கள் நினைக்கலாம். ஆம் மருந்து தான். அதுவும் சரிவிகிதத்தில் பசுவினால் கிடைக்கும் பொருட்களை கலந்தால் அவை உயிர்சக்தியை வளர்க்கும் ஒரு அருமருந்து.

பஞ்சகவ்யத்திற்காக தனியாக பசுமாடு வளர்க்கப்பட வேண்டும். இப்பசு ஒரு முறை மட்டுமே கன்று ஈன்றதாக இருக்க வேண்டும். அடுத்த முறை கன்று ஈன்றால் அவற்றை தவிர்த்து புதிய பசுவை பயன்படுத்த வேண்டும். பஞ்சகவ்யத்திற்காக பயன்படுத்தப்படும் பசுக்கள் புல் மற்றும் இயற்கையாக வளர்ந்த தாவரத்தை மட்டுமே உண்ண வேண்டும் என பஞ்சகவ்யம் தயாரிக்கும் பசுவை தயாரிக்கவே கொஞ்சம் சிரமம் எடுக்க வேண்டும்.

பஞ்சகவ்யம் தயாரிக்க என்றவுடன் ஒரு வாளியை எடுத்து ஒரு வாளி சாணம், ஒரு வாளி சிறுநீர் என அளந்து கலக்கிவிடக்கூடாது. பஞ்சகவ்யம் கலப்பதற்கு என சில விகிதாச்சாரம் உண்டு. மேலும் பஞ்சகவ்ய பொருட்களுடன் உபகவ்யம் என்ற வெல்லம், துளசி மற்றும் வேப்ப எண்ணெய் இவற்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும்.

தற்கால விவசாயிகள் பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 முதல் ரசாயன உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுற்றச்சூழல், தாவரம் மற்றும் மண் தன் தன்மையை இழந்துவருகிறது. இவை நேரடி பாதிப்புகள். இது தவிர ரசாயனம் இருக்கும் விளைநிலத்தில் ப்ராண சக்தி பரவுவது தடுமாற்றம் ஏற்படுகிறது. ப்ராண சக்தி புலம் மிகவும் குறுகிவிடுகிறது. இத்தகைய விளைநிலங்களில் வளரும் உணவு பொருட்களை உண்பதால் நம் உடலில் ப்ராணனில் அளவும் மிகவும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

பசுமை புரட்சிக்கு பின் புற்றுநோய் ஏற்படுவதன் அளவும், குழந்தையின்மையும் அதிகரித்து வருகிறது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பயணிக்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியான ஒரு சூழலை சந்தித்தேன். அந்த கிராமத்தின் ஓவ்வொரு வீட்டிலும் ஒரு புற்றுநோயாளி இருக்கிறார். அவர்களுக்கு புற்றுநோய் பற்றி சரியாக தெரியவில்லை. கிராம ஆர்வலருடன் நான் சென்று அவர்களை சந்தித்தேன். தற்சமயம் அவர்கள் சற்று புற்றுநோய் பற்றிய விஷயங்கள் தெரிந்து வாழ்கிறார்கள்.

அவர்களுக்கு புற்று நோய் வரக் காரணம் என்ன தெரியுமா? தேயிலை தோட்டத்தில் தெளிக்கும் ரசாயன உரங்கள் மண்ணில் கலந்து தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் சங்கமிக்கிறது. அந்த ஓடை நீரைத்தான் அந்த கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். யாரோ செய்யும் ரசாயன உர வியாபரத்தாலும், விவசாயத்தாலும் ஒரு கிராமமே பாதிக்கப்பாட்டுள்ளது.

உண்மையில் அந்த கிராம வாசிகள் போல நாமும் ஒருவிதத்தில் பாதிக்கபட்டு இருக்கிறோம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்த உணவு பொருட்கள் வேண்டும் என கேட்கிறார்கள்.

ஆனால் நாம் பல கப்பல்களில் ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ரசாயன உரத்தால் கொல்வதற்கு பதில் ஒரு அணுகுண்டை அவர்கள் நம்மீது ஏவினால் சந்தோஷப்படுவேன்.

இதுவே இயற்கை முறையில் பஞ்சகவ்யம் மற்றும் இதர இயற்கை முறை விவசாயம் செய்தால் இப்படி பட்ட நிலை இல்லை. ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கைக்கு பசுவும், இயற்கை விவசாயமும் அவசியம் ஆகிறது.

ரசாயன உரம் அவ்வளவு கொடியதா என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம். ஒரு விவசாயி ரசாயன உரத்தை தாவரங்களுக்கு தெளிக்கிறார், அப்படி தெளிக்கும் நேரத்தில் ஒரு கைப்பிடி அந்த உரத்தை எடுத்து சாப்பிட்டால் என்ன ஆவார்?

ஆனால் பஞ்சகவ்யத்தை ஒருவர் பயிருக்கு செலுத்தும் பொழுது அதை ஒரு கைப்பிடி எடுத்து உண்டாலும் ஒன்றும் ஆகமாட்டார். மாறாக நல்ல உடல் நலமும் , ஆன்ம பலமும் பெறுவார்.

தாவரங்கள் நம்மை விட அதிக பலம் கொண்டவை என்பதற்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தும். விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை தெளித்தாலும் மனிதனை போல் உயிர்விடாமல் அதற்கு எதிராக போராடி உயிர்பெறுகிறது தாவரம். தாவரங்களை ஒரு உயிராக பார்க்காமல் வியாபார பொருட்களாக பசுமை புரட்சியாளர்கள் பார்த்தார்கள். அதன் விளைவு நீங்களும் நானும் தரமான விவசாய பொருட்கள் கிடைக்காமலும், கொள்ளை விலையில் அரிசியையும் பருப்பையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை போன்ற ஒரு உயிர் என விவசாயி நினைத்தால் அன்று முதல் தன்னையே தியாகம் செய்ய தாவரங்கள் தயாராகாதா? விவசாயிக்கு ஏற்படும் இந்த எண்ணம் தானே தாவரத்திற்கு தேவையான முக்கிய ஊட்டசத்து? ரசாயனத்தை கொடுத்ததற்கு பன்மடங்கு அந்த தாவரம் திரும்ப நமக்கு என்ன கொடுத்தது என நடைமுறையில் காண்கிறோம். இது மாற்றத்திற்கான நேரம்.


வேதகால வாழ்க்கை முறையை எளிமையாக விளக்கும் ஒரு படம்.

இப்படத்தில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தாவரமும், பசுவும் பரஸ்பரம் கொடுத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதன் பெற மட்டுமே செய்கிறான்.

ப்ராண சக்தியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் பெரியவன் என்ற மனித அஹங்காரம் நொருங்கிவிடும். எல்லா மரங்களும், பசுக்களும் வேதகால வாழ்க்கை சுழற்சிக்கு பயன்படுத்த முடியுமா என்றால்....

இல்லை என்றே கூறவேண்டும்.

புளிய மரம் போன்றவை ப்ராணனை குறைக்கும் என்று கூறினேன் அல்லவா? அப்படியானால் எவை பயன்படுத்த தகுந்தவை? அடுத்த பகுதியில் பார்ப்போம்

(.... வேதம் ஒலிக்கும்)

Wednesday, November 4, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 9

உயிரினங்களில் பல வகை இருந்தாலும் சில வகை உயிர்களுக்கு மட்டும் பிரபஞ்ச ஆற்றலை உள்வாகும் சக்தி அதிகம். பசுவகைகள் அனைத்துக்கும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் சக்தி அதிகம். இது மாட்டினம் மற்றும் எருமை இவை அனைத்துக்கும் பொதுவானது.

பசு நமக்கு என்ன கொடுக்கிறது என கேட்டிருந்தேன். உண்மையில் பசு நமக்கு பால், சாணம் கொடுக்கிறது என கூறி இருந்தீர்கள். பசு நூறு மரத்திற்கு சமம் என கூறி பின்னும் பால் சாணம் கொடுக்கும் ஒரு விலங்காகவே இதை பார்த்தால் என்ன செய்வது?


பிரபஞ்ச ஆற்றல் மரங்கள் மேல் இறங்கும் பொழுது அவ்வாற்றலை ப்ராண சக்தியாக மாற்றுகிறது அல்லவா? இது 1:1 என்ற விகிதத்தில் தான் மாற்றும். ஆனால் பசுக்கள் 1:100 என்ற விகிதத்தில் மாற்றம் செய்யும்.

மனித மனம் எப்பொழுதும் சில விஷயங்களை ஒரே வரிசையில் சிந்திக்கும். ஒரு மனிதன் ரோஜாப்பூவில் இருந்து தனக்கு ஒரு ஆற்றல் கிடைக்கிறது என நினைத்தால் முதலில் அவற்றை கடித்து தின்று ஜீரணம் செய்வான். மனிதன் ஜீரணம் மூலமே உடல் சக்தி பெற முடியும் என்ற எண்ணம் கொண்டவன். தற்காலத்தில் இருக்கும் நவீன மனிதன் வரை இது தொடர்கிறது.

சரியான யோக பயிற்சி (ப்ராணாயமம்) மூலம் உடல் சக்தியை பெற முடியும். உணவு மற்றும் நீர் அருந்துவதால் உடலில் கிடைக்கும் வலிமையை அவ்வாறு உணவு உற்கொள்ளாமலேயே இவ்வகை பயிற்சிகள் கொடுக்கும். தாவரத்தில் இருக்கும் உயிர்சக்தி நம் உடலில் உணவாக சென்று ஜீரணம் நடைபெற்று பின்பு உடலில் சத்தாக மாற்றம் அடையும் நீண்ட வழிமுறையை மாற்றி நேரடியாக உயிர்சக்தியை பெறும் ஆன்ம பயிற்சிகளை செய்பவர்கள் பலர். இவர்களை யோகிகள் என்பார்கள்.

சராசரி மனிதன் இப்பயிற்சி செய்வது கடினம். அவனுக்கு பிற வாழ்வியல் விஷயங்கள் இருப்பதால் மரம் மூலமும் பசு மூலமும் தான் உயிர்சக்தியை பெற முடியும். தாவரங்களில் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும், பசுவின் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும் மிக வித்தியாசம் உண்டும். பசுவின் வாழ்நாளும், இனபெருக்க அளவும் தாவத்தை விட குறைவு. அதனால் மனிதன் பசுவை பயன்படுத்தினாலும் நீண்டகாலம் அதன் மேம்பாட்டை அனுபவிக்க முடியாது.

குறைந்த காலமே வாழ்ந்தாலும் பசு மரங்களை விட அதிகமான நன்மைகளை நமக்கு தருகிறது என்பதும் உண்மை.

ப்ராண சக்தி ஐந்து விதமான உட்பிரிவு கொண்டது என பார்த்தோம். அது போல ப்ராண சக்தியை வெளிப்படும் தாவரம் மற்றும் பசு இவைகள் வெளிப்படுத்தும் செயல்களும் ஐந்து தன்மையை சார்ந்தே இருக்கிறது.

இலை, தண்டு, கிளை, பூ, கனி என தாவரமும், சாணம்,சிறுநீர்,பால், தயிர் மற்றும் நெய் என பசுமாடும் தங்கள் செயலால் ப்ராணனை அடையாளப்படுத்துகிறது. தாவரம் மற்றும் பசு கொடுக்கும் ஐந்து பொருட்களை உண்டு வாழ்ந்தால் மனிதன் ப்ராண சக்தியை பெறமுடியும் என பலர் நினைக்கிறார்கள். உண்மையில் தாவரம் மற்றும் பசுக்களுடன் இணைந்து வாழ்ந்தாலே போதுமானது. அவை கொடுப்பதை உண்ண வேண்டும் என கட்டாயம் இல்லை. இது தான் வேதகால ரகசியம்.
இராமேஸ்வரத்தில் பின்புறம் வழிபட பூஜா ஸ்டேண்டுடன் நிற்கும் பசு. :)

சிலர் பசுவை உண்பது பாவம் என்றும் சிலர் உண்ணலாம் தவறில்லை என்றும் வாதம் செய்கிறோம். அவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம். பசு மனிதகுலத்திற்கு நன்மை கொடுக்கிறது என நினைப்பதால் தான் சிலர் உண்ணக்கூடாது என்றும், உணவாக உற்கொண்டால் உடல் பலம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் பசுவின் உடலில் ஒன்றும் இல்லை. பசு பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி வெளியிடும் தன்மை மட்டுமே அதன் உடல் செய்கிறது. இவ்வாறு செய்யும் உடல் பகுதிகள் பசுமாட்டிடம் மட்டுமே உண்டு, காளையில் இல்லை.

இதை உணராமல் சிலர் பசுவை பின்பக்கமாக வழிபடுவது, சிலர் வெட்டி விழுங்குவதும் வேடிக்கையான விஷயம் அல்லவா?. ATM மிஷினில் பணம் கிடைக்கிறது என்பதற்காக அந்த மிஷினே பணம் அச்சடிக்கிறது என நினைக்கும் அறிவிஜீவிகள் இவர்கள். மிஷினை விடுங்கள் வங்கியை பாருங்கள்..!

தோடர்கள் என்ற பழங்குடியினம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் நீலகிரி மற்றும் தென் கர்நாடகவில் வாழும் ஒரு பழங்குடியினர். இவர்கள் எருமையை தெய்வமாக வணங்குகிறார்கள். எருமையை கொல்லுவது மற்றும் அவற்றை கொண்டு உழுவது என அனைத்தும் பாவம் என்பது இவர்களின் வாதம். மண்ணை கூட தோண்ட மாட்டார்கள் காரணம் மண் என்பது தாய்க்கு சமம் என்பது இவர்களின் எண்ணம். தாவர உணவை உண்டு வாழும் உலகின் ஒரே பழங்குடியினர் என இவர்களை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் தாவரத்திலிருந்து ஆற்றலை பெறுவதற்கும் எருமை பசுவின் மூலம் வழிபாடு செய்வதற்கும் கற்று வைத்திருக்கிறார்கள்.
ஊட்டி தோடர்கள் இயற்கை கோவில் முன்புற தோற்றம்

பசுவை வழிபடுங்கள் என நான் கூறவில்லை. மரங்களை வழிபடுங்கள் என்றும் கூறவில்லை. காரணம் வேதகால வாழ்க்கை என்பது வழிபாடு,மதம் மற்றும் இனத்தை தாண்டிய விஷயம்.

பிற இயற்கை உயிர்களாகிய பசு மற்றும் தாவரத்திற்கும் உங்கள் வாழ்க்கை முறைக்கும் தொடர்பு உண்டு அதனால் அதை மதியுங்கள் என கூறுகிறேன்.

அதனால் தான் இந்த பகுதி ஒன்பது வரை எந்த மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தும் நான் வேதகால வாழ்க்கையை விளக்கவில்லை.இனி வரும் காலத்தில் மனிதன், பசு மற்றும் தாவரம் இவை மூன்றும் இணைந்து எப்படி வேதகால வாழ்க்கை முறையாகிறது என பார்ப்போம்.

(...வேதம் ஒலிக்கும்)

Monday, November 2, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 8

நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத்தான். சாணத்தை ஒரு அசிங்கமான பொருளாக பார்க்கும் இளைஞர்களை பார்க்கிறோம். நகரத்தில் பசுமாடுகள் வளர்த்த தடையை பல மாநகராட்சிகள் வைத்துள்ளது. பசுவின் எண்ணிக்கைகள் பல நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் மனித நேயம் குறைவது, மனசிதைவு, இயற்கை மேம்பாடு என பல விஷயங்கள் பாதிக்கப்படும். இது என்ன பட்டாம்பூச்சி விளைவா என கேள்வி எளலாம். பசு ஒரு நடமாடும் சக்தி கேந்திரம்.

பசு என்று தான் சொல்லுகிறேன் கவனியுங்கள். மாடு என சொல்லவில்லை. மாடு என்பது இனம், பசு என்பது அதில் ஓர் வகை. உலகின் எந்த நாகரீகத்தையும் கவனித்தால் அதில் பசு என்பது முக்கியமான விஷயமாகும். பசுவில்லாத மனிதகுலம் தோன்றாது. காரணம் பசு என்பது தாய்க்கு சமம் என்பார்கள். இது பால் கொடுப்பதாலோ அல்லது பாசத்துடன் இருப்பதாலோ அல்ல. பசு என்பது தோற்றத்தின் அடிப்படை.

பசு ஒரு வீட்டு விலங்கு என்று படித்திருப்போம். உண்மையில் பசு என்பது வீட்டு விலங்கோ காட்டு விலங்கோ அல்ல. பசு யாரையும் சாராமல் வாழும் ஒரு உயிர். ஒரு நாய் அல்லது வேறு ஒரு உயிரை நீங்கள் செல்லப்பிராணியாக வளர்த்து பின்பு அதை வீட்டை விட்டு விரட்டினால் அது சில நாட்களில் உயிர் விடும். காரணம் அதற்கு உணவு சேகரிக்க தெரியாது. ஆனால் பசு மட்டும் தன் வாழ்க்கையை செம்மையாகவே வைத்திருக்கும். பெரிய வித்தியாசம் இருக்காது.

உலக கலாச்சாரம் என நவீன ஆய்வாளர்கள் கூறும் எகிப்து, ஹரப்பா மற்றும் மாயன் ஆகியவற்றின் குகை ஓவியங்களிலும் , சிதைந்த சுவடுகளிலும் பசுவின் ஓவியங்களை காண முடியும். மனிதன் பசுவின் பாலை குடிப்பதால் மட்டுமே அதன் மேல் கவரப்பட்டு சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைய முடியுமா என்பது சிந்திக்க வேண்டும்.

பசு என்பது நம் ஊரில் பார்ப்பது மட்டும் பசு கிடையாது. பசுவில் பல்வகை உண்டு. ஆனாலும் பசுவினால் ஏற்படும் பயன்கள் ஒன்றுபோலவே இருக்கும். சிந்து சமய நாகரீகம் மற்றும் கிரேக்கம் ஆகியவற்றில் பசுவின் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. இன்றும் கூட ஐரோப்பிய பசுக்கள் உலக அளவில் பெயர் பெற்றவை.

பாரத தேசத்தில் மட்டும் அல்ல பல தேசங்களில் மக்கள் வழிபட்ட ஆதாரங்கள் பசுவுக்கு
வேதகால வாழ்க்கையின் மற்றொரு அங்கம் பசு. நான் முன்பு தாவரங்களை பற்றி விளக்கினேன் அல்லவா? அது உங்களுக்கு புரிந்திருந்தால் பசுவை பற்றி புரிந்து கொள்வது எளிது. இதோ அதை எளிமையான சமன்பாட்டில் கூறுகிறேன்.

ஒரு பசு = 100 மரம்

பசு நம் உலகிற்கு என்ன தருகிறது என நான் கூறுவதற்கு முன்னால், பசு நமக்கு என்ன என்ன கொடுக்கிறது- என உங்களால் கூற முடியுமா?

(....வேதம் ஒலிக்கும்)

Thursday, October 29, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 7

பூவுலகம் விந்தை நிறைந்தது. மனிதனுக்கு அவன் கைகளுக்கு எட்டும் தொலைவில் அனைத்தும் இருந்தாலும் அவன் எதுவும் பயன்படுத்துவதில்லை. அவனின் அறிவியல் கண்டுபிடிப்பு என்பதன் பெயரில் இருக்கும் விஷயங்கள் தான் அவனுக்கு மனமகிழ்ச்சியை தருகிறது. இந்நாள் வரை மனிதன் அறிவியலில் கண்டறிந்த விஷயங்கள் அனைத்தும் இயற்கையில் இருக்கிறது. ஆனால் தான் கண்டுபிடித்தது என சொல்லி அவனின் ஆணவத்தை அவன் மகிழ்வுறச் செய்தால் மட்டுமே அவனால் வாழமுடிகிறது. இப்படி அவன் இருப்பதற்கு ‘அறியாமை’ என்று கூட மனிதனே கண்டறிந்து வைத்திருக்கிறான் என்பது பரமவேடிக்கை.

சென்ற பகுதியில் நான் கூறியதை சிறிது சிந்தித்து பார்த்தால் மனிதன் கண்டறிந்த செல்போன் என்ற பொருள் இயற்கையாகவே இருப்பது புரியும். ஆனால் மனிதன் தான் கண்டறிந்ததை தான் நம்புவான்.

ஒரு தகவல் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு மரத்திற்கு தெரிந்த விஷயத்தில் ஒரு சதவீதம் கூட மனிதனுக்கு தெரியாது. இதை உங்கள் மனித ஆணவம் ஏற்றுக்கொள்ளாது. வேறு வழி இல்லை மேற்கொண்டு மரங்கள் என்ன செய்யும் என பார்ப்போம்.

மரங்களின் உறுப்புகளில் உள்ள அதிர்வுகளை உள் வாங்கும் சில விஞ்ஞான கருவிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். நீங்கள் ஒரு மரத்தின் அருகில் சென்று திட்டினால் அந்த மரம் உயிர் என்பதால் ஒரு வித உணர்வுகளை வெளிப்படுத்தும் அல்லவா? அதுவும் உங்களை நோக்கி ஏதோ சொல்ல முயலும் அல்லவா அதை உங்கள் மொழியில் மொழிபெயர்க்கும் கருவியைதான் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். நம்புங்கள் இது கண்டுபிடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இக்கருவியில் சினிமா தெரியாது, புகைப்படம் எடுக்க முடியாது மற்றும் குறுஞ்செய்தி அனுப்ப இயலாது என்பதால் புகழ்பெறவில்லை :)

தாவரத்தின் உணர்வுகள் உண்டு என கண்டறிந்த ஜகதீஷ் சந்திர போஸ் உலகலாவிய பெயரையோ, அறிவியல் உயர் பரிசுகளையோ பெறவில்லை என்பது வேடிக்கை. அவர் அறிவில்லாத இந்திய சமூகத்தில் பிறந்தவர் என்றார்கள் பிரிட்டீஷ்காரர்கள். அவரை பற்றி நீங்கள் பாடப்புத்தகத்தில் படித்தது மிகக்குறைவே. மேலும் படிக்க விருப்பம் இருந்தால் இங்கே சொடுக்கவும்.

சில மின்னனுக்கருவிகள் மூலம் தாவரத்தின் மின்காந்த அதிர்வுகளை மனித குரலாக மாற்றும் கருவியை ஜெர்மனிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். இந்த கருவியின் துணைகொண்டு தாவரங்கள் மனிதனுடன் உரையாடுகிறதாம். நானும் இதை நேரில் பார்த்தேன். ஜெர்மன் மொழியில் கேட்ட கேள்விகளுக்கு அதே மொழியிலும், தமிழில் நான் பேசியதற்கு தமிழிலும் உரையாடியது ஒரு செடி. ஒரு பாடலை பாடினால் கூட அதே போல சுருதி பிசகாமல் பாடிக்காட்டியதை பார்த்து வியந்தேன். இப்பொழுது கூறுங்கள் தாவரங்கள் மனிதனை காட்டிலும் அறிவு குறைந்ததா?

இவை எல்லாம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் செயல்பட்ட விஷயம். விஞ்ஞானத்தை கடந்த ஒரு விஷயமும் ஒன்று நடந்தது. மரத்திடம் பேசும் பயிற்சியை முன்பு செய்ய சொன்னேன் அல்லவா? அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒன்றை அருகில் கொண்டு சென்றேன். கணினி உதவியில்லாமல் அந்த மரம் தகட்டில் உள்ள தகவல்களை உணர்ந்து கொண்டது. உங்களுக்கு இது முட்டாள் தனமாகவும், மேலும் கொஞ்சம் அதிகமாகவும் தெரியலாம். நான் அனுபவப்பட்டதை கூறுகிறேன். மனிதனால் கூட அவ்வாறு ஒரு சிடியை பார்த்தவுடன் அதில் இருக்கும் தகவலை உணர முடியாது. வேறு வழியில்லை நான் நம்புகிறேன். நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

எதிர்காலத்தில் ஒரு அறையில் சில மணி நேரத்திற்கு முன் என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அங்கே இருந்த செடியை கேட்கும் நிலை வரும். தடயவியல் நிபுணர்கள் எதிர்காலத்தில் குற்றத்தை இவர்கள் மூலம் எளிதல் கண்டறியலாம்.

இது போன்ற வேத சாஸ்திர விஷயங்களை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து வேதகால மின்னனுவியல் (Vedic Electronics) என்ற ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வருகிறேன். முழுமையடைந்த நிலையில் இருக்கும் அந்த ஆய்வை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

இனிவரும் காலத்தில் தாவரங்களை பார்க்கும் பொழுது உங்களை விட ஆற்றல் குறைந்த பிறவியாக பார்ப்பீர்களா? இத்தனை மனிதர்கள் தாவரத்தை மதிக்காவிட்டாலும், தாவரம் என்றும் உங்களை தாயைவிட கருணையாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேவையான அளவு தாவரத்தை பற்றி பார்த்துவிட்டோம். இனி வேதகால வாழ்க்கையின் அடுத்த பாகமான பசுவை பற்றி பார்ப்போம்.

(.....வேதம் ஒலிக்கும்)