Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, June 28, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 9

சில கோவில்களுக்கு சென்றால் அங்கே பஞ்சபாண்டவர்கள் வந்தார்கள் என வரலாறு சொல்லுவார்கள். சில கோவில்களில் ராமர் வந்து வணங்கினார் என்பார்கள். இப்படி செல்லும் இடமெல்லாம் பலர் பஞ்சபாண்டவர்களும், ராமரும் வந்து சென்றார்கள் என கூறும் பொழுது இது கட்டுக்கதையோ என எண்ணத்தோன்றும்...

சபரிமலையில் சபரி என்ற மூதாட்டிக்கு மோட்சம் கொடுத்தார் ராமர் என கதை சொல்லுவார்கள். இதுவே ரிஷிகேஷ் அருகே ஒரு இடத்திலும் இதே கருத்து உண்டு. அர்ஜுணன் சிவனிடம் தவம் இருந்து பசுபதாஸ்திரம் பெற்றான் என சிவன் பல்வேறு கோவில்களில் சொல்வதுண்டு. தங்கள் கோவிலின் மகிமையை உயர்த்தி சொல்ல இப்படி சொல்லுகிறார்களோ என நினைக்கத் தோன்றும்.

உண்மையில் அனைத்தும் சரியே. சபரி மோட்சம் மட்டுமல்ல ராமாயணத்தில் வரும் ஒரே சம்பவம் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. அதே போல மஹாபாரதத்திலும் அவ்வாறு இருக்கிறது.
இக்குழப்பத்திற்கும் விடையை ராமாயணத்தின் ஒரு உபகதை கூறுகிறது.

ராவணனை வதம் செய்துவிட்டு ஸ்ரீராமர் ராமேஸ்வரத்திற்கு வருகிறார். அங்கே சிவனை வழிபடுவதற்கு லிங்கம் வேண்டும் என ஆஞ்சனேயரை காசிக்கு சென்று லிங்கம் எடுத்து வர பணிகிறார். ஆஞ்சனேயர் வர தாமதமாகி , அங்கே ஸ்ரீராமர் மணலால் லிங்கம் வைத்து வணங்கிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அக்கதையின் இடையே ஒரு சம்பவம் கூறுவார்கள்.

ஸ்ரீராமர் தனது பூஜையை முடித்துவிட்டு தன் கையில் இருந்த கமண்டலத்தை அருகே இருந்த கிணற்றில் வீச சொன்னாராம். ஆஞ்சனேயர் அந்த கிணற்றில் வீச சென்றதும் அதில் லட்சக்கணக்கான கமண்டலங்கள் இருந்தனவாம். இக்கமண்டலங்கள் எல்லாம் யாருடையது என கேட்க ஸ்ரீராமர், “பல்வேறு யுகங்களில் பல்வேறு ஸ்ரீராமர் கொடுத்து பல்வேறு ஆஞ்சனேயர்கள் வீசியது தான் இவைகள்” என கூறுனாராம்.

சதுர்யுகம் என்பது பல கோடி வருடங்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு. ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தால் பிரம்மாவின் ஒரு நாள். பிரம்மாவின் ஒரு வருடம் என்பது மஹாகல்பம் என நம் காலகணக்கை சாஸ்திரம் விவரிக்கிறது.

ஆக பிரம்மாவின் ஒரு பகலில் ஆயிரம் ராமனும் ஆயிரம் கிருஷ்ணனும் வருகிறார்கள். ராமன் எத்தனை ராமனடி என பாட தோன்றுகிறதா?

அவ்வாறு அனைத்து யுகத்திலும் இராமாயணமும் மஹாபாரதமும் ஒரே இடத்தில் நடக்க வேண்டும் என்பதில்லை. பல்வேறு இடங்களில் நடந்திருக்கலாம். அவ்வாறு நடந்த இடங்கள் தற்சமயம் இருக்கலாம், பல இடங்கள் கடலின் அடியிலோ அல்லது முற்றிலும் அழிந்திருக்கலாம்.

பல்வேறு யுகயுகாந்திரங்களில் நடந்த இதிஹாசங்களைத்தான் பல்வேறு கோவில்களிலும் , புண்ணிய தலங்களிலும் ஒரே போல சொல்லுகிறார்கள். இப்படி பார்த்தால் அமெரிக்காவிலும் அஸ்வமேதயாகம் நடந்திருக்கலாம், சிட்னியில் சீதா கல்யாணம் நடைபெற்று இருக்கலாம்.
தர்க்க ரீதியாக இவ்வாறு கூறினாலும், உண்மையில் சாங்கிய தத்துவ ரீதியாக நம்மில் உள்ளே இதிஹாசங்கள் நடைபெறும் பொழுது உலகின் ஒவ்வொரு மூலையிலும் ராமாயணமும் மஹாபாரதமும் நடப்பது என்பது தானே உண்மை?

மேலும் சாங்கிய தத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்டால் உலகம் என்பதே பொய்.. நம் இருப்பே மெய், அதில் புருஷார்த்தம் என்ற ஆன்மா இயற்கை குணம் கொண்ட ப்ரகிருதியுடன் இணைவதே யோகம் அல்லது முக்தி என்பது தானே உண்மை.

ஆகவே இதிஹாசங்களை புத்தகத்தில் தேடாமல் நம்முள்ளே தேடுவோம். உங்களுக்குள் ஒவ்வொரு கணமும் அவதார புருஷர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் அதர்மத்தை அழிக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுது நான் தோன்றுவேன் என சொன்னதன் அர்த்தம் விளங்குகிறதா?

இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்...

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா?

(வினை முற்றியது)

Monday, June 6, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 8

சென்ற பகுதியில் ராமாயணத்தை பற்றி பார்த்தோம் அல்லவா? அதுபோன்றே மஹாபாரதத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களை அவ்வாறு வகைப்படுத்த முடியும். ராமாயணத்தை விட மஹாபாரதத்தில் சாங்கியம் மிக வெளிப்படையாகவே விளக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்கள் ஐவருக்கும் ஒரே மனைவி என்பதன் மூலம் கலாச்சாரத்தை பற்றி கவலை கொள்ளாமல் எதை கூற வியாசர் முயல்கிறார் என உணர்ந்தாலே நாம் தெளிவடைவோம்.

பீமன் சாப்பாட்டு பிரியனாக இருக்கிறான். அர்ஜுனன் காமப்பிரியனாக இருக்கிறான். தர்மத்தை நிலைநாட்டுவதில் யுதிர்ஷ்டர் என்ற தர்மர் குறிக்கோளாக இருக்கிறார் என்பதில் இருந்து இவர்கள் வாய், மெய் மற்றும் கண்களை குறிப்பதாக உணரலாம். நகுலனும் சகாதேவனும் முறையே மூக்கு மற்றும் காதுகளுக்கு காரணமாகிறார்கள். இவர்கள் அனைவரும் மனம் என்ற திரெளவுபதியுடன் இணைந்து வாழ்கிறார்கள். இவ்வுண்மை தெரியாவிட்டால் கடவுள் மறுப்பு வியாபாரம் செய்பவர்கள் கூறும் “தர்ம சங்கட கதையை” கேட்டு மனம் வருந்துவீர்கள்.

பஞ்சபாண்டவர்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் திரெளவுபதிக்கு மட்டும் சும்மா இருக்க முடியாது..! துரியோதனனை பார்த்து சிரிக்க...வந்தது விபரீதம். துரியோதனன் என்ற தமோகுணம் சூதுக்கு அழைக்க..பஞ்ச அவயங்களான பாண்டவர்கள் வந்தார்கள் சூது விளையாட, அங்கே வீழ்ந்தவுடன் மனம் என்ற திரெளவுபதி அவமானப் படுத்தப்பட்டாள். அப்புறம் என்ன மஹாபாரதம் தான்..!

நீங்களும் மஹாபாரதத்தை உங்களுக்குள் நிகழ்த்தலாம். தமோ குணம் சொல்லும் விஷயத்திற்கு உடன்பட்டால் ஐந்து அவயங்களும் ஒரு நாளில் அதில் பணியும். கடைசியில் மனம் வருத்தப்பட்டு இனி இதை செய்யக் கூடாது என கூறும். போராட்டம் நிகழும்....கடைசியில் முழுமையான நிலைக்கு உங்கள் உறுப்புகள் மேம்பட்டு ஞானம் பிறக்கும். கிருஷ்ணர் என்ற ஆன்மா உங்களுக்கு கீதை கூறும். அப்புறம் எல்லாம் சுபம்...!

மேற்கண்ட விஷயங்களை நான் ஏதோ தொடர்புபடுத்தி இதிஹாசங்களை உண்மை என கூறுவதற்கு விளக்கவில்லை. நான் சூரியனை பற்றி விளக்கினாலும் விளக்கா விட்டாலும் எப்படி சூரியன் தன் வேலையை செய்து கொண்டே இருக்குமோ அது போல நான் இவ்விளக்கங்களை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களுக்குள் இதிஹாசங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும்.

நம் கலாச்சாரத்தின் ஆறு தத்துவங்களின் முதன்மையான இத்தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத நிலையில் நம் கலாச்சாரத்தை புரிந்துகொண்டோம் என மதத்தை காக்கிறேன் என புறப்படுகிறவர்களை நினைத்தால் சிரிப்பை தவிர வேறு என்ன பதில் கூற முடியும்? தனக்குள் இருக்கும் ராமனை புரிந்துகொள்ள முடியாதவர்கள் வெளியே ராமனின் சொத்தை காப்பாற்ற புறப்படுகிறார்கள். இது வேதனையானதே..!

சாங்கிய தத்துவத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து செயல்களும் நடக்க ப்ராணன் என்பது இன்றியமையாதது. ராமாயணத்தில் ஆஞ்சநேயரும், மஹாபாரதத்தில் பீமனும் ப்ராணனாக இருக்கிறார்கள். ப்ராணன் எப்பொழுதும் பரமாத்மாவின் ஈர்ப்பில் இருக்கிறது. அதனால் தான் ஆஞ்சநேயரை பீமன் சந்திப்பது போன்று மஹாபாரதத்தில் ஒரு காட்சி வரும். இரண்டும் ஒன்றே என கூறுவது போன்று அமைந்திருக்கும் இக்காட்சியில் பல்வேறு உள்கருத்துக்கள் உண்டு.

இப்படி எத்தனையோ விஷயங்களை உள்புகுத்தினாலும் நாம் ஏன் இப்படி நிகழ்கிறது என கேட்காமலேயே தாண்டி செல்லுகிறோம். பார்த்தீர்களா நமக்குள் நிகழும் சாங்கியத்தை தூண்டிவிட்டாலும் நான் தாண்டி வருவதில் குறியாக இருக்கிறோம்.

சாங்கிய தத்துவத்தை எளிமையாக புரிந்துகொள்வது சற்று கடினம் தான். நம்முள் நடக்கும் விஷயத்தை வெளியிலிருந்து ஒருவர் குரு என சுட்டிக்காட்டினாலே அந்த அற்புதம் நிகழும். முதலில் இறைவன் என்ற நிலை இன்றி - “சுய இருப்பது மட்டுமே நிஜம்” என்ற தத்துவத்தில் உருவான சாங்கியம் பின்பு படிப்படியாக பலரால் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது அதில் இறைவன் என்ற ரூபம் சேர்க்கப்பட்டு எளிமையாக்கப்பட்டது.

இனிப்பில் எப்படி வண்ணங்களை சேர்த்து புதிய சுவையை கொண்ட புதிய இனிப்பு உருவாகிறதோ அதுபோல சாங்கியத்தில் இறைவன் என்ற ரூபம் சேர்ந்ததும் அது பல்வேறு தத்துவங்களாக ஒளிர்ந்தது.

பகவத் கீதையும் சாங்கிய பின்புலம் கொண்டது. அதில் இறைவன் என்பதை விஸ்தாரணை செய்து விளக்கியது பலர் இறை கற்பனையில் வீழ்ந்தார்கள். அதில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் “அனைத்து உயிரிலும் ஆன்மாவாக இருப்பது நானே”. உண்மையில் அவர் தன் உடலை குறிக்கவில்லை. என்னுள் இருக்கும் ஆன்மாவே அனைத்து உயிரிலும் இருக்கிறது என்கிறார். இதுதானே சாங்கியம் சொல்லிகிறது? ஆனால் நம் ஆட்கள் கற்பனையில் மயில் இறகுடன் கிருஷ்ணர் நமக்குள் புல்லாங்குழல் வாசிப்பதை கற்பனை செய்து கொள்வார்கள்.

பதஞ்சலி முனிவர் சாங்கிய பின்புலத்தில் அமைந்த தன் கருத்தில் இறைவன் என்பதை கலந்தார். ஆனால் இறைவனுக்கு அவர் உருவம் கொடுக்கவில்லை. இது பதஞ்சலி யோக சூத்திரம் என வழங்கப்படுகிறது.

இப்படி நம் கலாச்சாரம் சாங்கியம் முதல் பல்வேறு வடிவம் கொண்ட தத்துவங்களாக வளர்ச்சி அடைந்தது. தற்சமயம் ஆன்மீகவாதிகள் என வேடம் தரித்தவர்கள் யவரும் சாங்கியத்தை பொதுமக்களிடம் பேசுவதில்லை. காரணம் “நீயே அது” என கூறிவிட்டால் அப்புறம் எங்கே தங்களை பிறர் வணங்குவார்கள் என்ற எண்ணம் தான்.

மேலும் இதை பற்றி சில முக்கிய விஷயங்களை கூறி நிறைவு செய்கிறேன்.

(வினை தொடரும்)