Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, October 29, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 7

பூவுலகம் விந்தை நிறைந்தது. மனிதனுக்கு அவன் கைகளுக்கு எட்டும் தொலைவில் அனைத்தும் இருந்தாலும் அவன் எதுவும் பயன்படுத்துவதில்லை. அவனின் அறிவியல் கண்டுபிடிப்பு என்பதன் பெயரில் இருக்கும் விஷயங்கள் தான் அவனுக்கு மனமகிழ்ச்சியை தருகிறது. இந்நாள் வரை மனிதன் அறிவியலில் கண்டறிந்த விஷயங்கள் அனைத்தும் இயற்கையில் இருக்கிறது. ஆனால் தான் கண்டுபிடித்தது என சொல்லி அவனின் ஆணவத்தை அவன் மகிழ்வுறச் செய்தால் மட்டுமே அவனால் வாழமுடிகிறது. இப்படி அவன் இருப்பதற்கு ‘அறியாமை’ என்று கூட மனிதனே கண்டறிந்து வைத்திருக்கிறான் என்பது பரமவேடிக்கை.

சென்ற பகுதியில் நான் கூறியதை சிறிது சிந்தித்து பார்த்தால் மனிதன் கண்டறிந்த செல்போன் என்ற பொருள் இயற்கையாகவே இருப்பது புரியும். ஆனால் மனிதன் தான் கண்டறிந்ததை தான் நம்புவான்.

ஒரு தகவல் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு மரத்திற்கு தெரிந்த விஷயத்தில் ஒரு சதவீதம் கூட மனிதனுக்கு தெரியாது. இதை உங்கள் மனித ஆணவம் ஏற்றுக்கொள்ளாது. வேறு வழி இல்லை மேற்கொண்டு மரங்கள் என்ன செய்யும் என பார்ப்போம்.

மரங்களின் உறுப்புகளில் உள்ள அதிர்வுகளை உள் வாங்கும் சில விஞ்ஞான கருவிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். நீங்கள் ஒரு மரத்தின் அருகில் சென்று திட்டினால் அந்த மரம் உயிர் என்பதால் ஒரு வித உணர்வுகளை வெளிப்படுத்தும் அல்லவா? அதுவும் உங்களை நோக்கி ஏதோ சொல்ல முயலும் அல்லவா அதை உங்கள் மொழியில் மொழிபெயர்க்கும் கருவியைதான் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். நம்புங்கள் இது கண்டுபிடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இக்கருவியில் சினிமா தெரியாது, புகைப்படம் எடுக்க முடியாது மற்றும் குறுஞ்செய்தி அனுப்ப இயலாது என்பதால் புகழ்பெறவில்லை :)

தாவரத்தின் உணர்வுகள் உண்டு என கண்டறிந்த ஜகதீஷ் சந்திர போஸ் உலகலாவிய பெயரையோ, அறிவியல் உயர் பரிசுகளையோ பெறவில்லை என்பது வேடிக்கை. அவர் அறிவில்லாத இந்திய சமூகத்தில் பிறந்தவர் என்றார்கள் பிரிட்டீஷ்காரர்கள். அவரை பற்றி நீங்கள் பாடப்புத்தகத்தில் படித்தது மிகக்குறைவே. மேலும் படிக்க விருப்பம் இருந்தால் இங்கே சொடுக்கவும்.

சில மின்னனுக்கருவிகள் மூலம் தாவரத்தின் மின்காந்த அதிர்வுகளை மனித குரலாக மாற்றும் கருவியை ஜெர்மனிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். இந்த கருவியின் துணைகொண்டு தாவரங்கள் மனிதனுடன் உரையாடுகிறதாம். நானும் இதை நேரில் பார்த்தேன். ஜெர்மன் மொழியில் கேட்ட கேள்விகளுக்கு அதே மொழியிலும், தமிழில் நான் பேசியதற்கு தமிழிலும் உரையாடியது ஒரு செடி. ஒரு பாடலை பாடினால் கூட அதே போல சுருதி பிசகாமல் பாடிக்காட்டியதை பார்த்து வியந்தேன். இப்பொழுது கூறுங்கள் தாவரங்கள் மனிதனை காட்டிலும் அறிவு குறைந்ததா?

இவை எல்லாம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் செயல்பட்ட விஷயம். விஞ்ஞானத்தை கடந்த ஒரு விஷயமும் ஒன்று நடந்தது. மரத்திடம் பேசும் பயிற்சியை முன்பு செய்ய சொன்னேன் அல்லவா? அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒன்றை அருகில் கொண்டு சென்றேன். கணினி உதவியில்லாமல் அந்த மரம் தகட்டில் உள்ள தகவல்களை உணர்ந்து கொண்டது. உங்களுக்கு இது முட்டாள் தனமாகவும், மேலும் கொஞ்சம் அதிகமாகவும் தெரியலாம். நான் அனுபவப்பட்டதை கூறுகிறேன். மனிதனால் கூட அவ்வாறு ஒரு சிடியை பார்த்தவுடன் அதில் இருக்கும் தகவலை உணர முடியாது. வேறு வழியில்லை நான் நம்புகிறேன். நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

எதிர்காலத்தில் ஒரு அறையில் சில மணி நேரத்திற்கு முன் என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அங்கே இருந்த செடியை கேட்கும் நிலை வரும். தடயவியல் நிபுணர்கள் எதிர்காலத்தில் குற்றத்தை இவர்கள் மூலம் எளிதல் கண்டறியலாம்.

இது போன்ற வேத சாஸ்திர விஷயங்களை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து வேதகால மின்னனுவியல் (Vedic Electronics) என்ற ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வருகிறேன். முழுமையடைந்த நிலையில் இருக்கும் அந்த ஆய்வை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

இனிவரும் காலத்தில் தாவரங்களை பார்க்கும் பொழுது உங்களை விட ஆற்றல் குறைந்த பிறவியாக பார்ப்பீர்களா? இத்தனை மனிதர்கள் தாவரத்தை மதிக்காவிட்டாலும், தாவரம் என்றும் உங்களை தாயைவிட கருணையாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேவையான அளவு தாவரத்தை பற்றி பார்த்துவிட்டோம். இனி வேதகால வாழ்க்கையின் அடுத்த பாகமான பசுவை பற்றி பார்ப்போம்.

(.....வேதம் ஒலிக்கும்)

Wednesday, October 28, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 6

மனிதனின் புத்தி விசித்திரமானது. காஸ்மிக் கதிர்கள் தொடர்ந்து பூமியில் விழுகிறது என்றும் அதை அளக்க கருவிகள் கூட கண்டறிந்துவிட்டார்கள் என்றாலும் பலர் நம்புவதற்கு தயாராக இல்லை. எச்.ஐ.வி கிருமியை கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கி கொண்டு மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அதை நம்புகிறோம். காரணம் உயிர் பயம். அது போல கடைசி துளி பிரபஞ்ச ஆற்றல் இல்லாமல் உயிர்வாழ முடியாது என்ற நிலை வந்தால் தான் பிரபஞ்ச சக்தியை நம்புவோம்.

பிரபஞ்ச சக்தி நம்மை வந்து அடையவில்லை என்றாலும் நம்மால் உயிர்வாழ முடியாது என்பதே உண்மை. நாகரீக மாற்றம் என்ற பெயரில் காஸ்மிக் கதிர்களின் ஆற்றலை திசை திருப்பும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பெருகிவருகின்றன. உதாரணமாக நம் அலைபேசிகள் மற்றும் செயற்கை கோள்களின் அலைகள் பிரபஞ்ச ஆற்றலை நீர்த்துப்போக செய்கின்றன. இதை விட அனுக்கதிரியக்கம் பிரபஞ்ச சக்தியை வளிமண்டலத்திலேயே தடுக்கும் ஆற்றல் கொண்டது.

பிரபஞ்ச ஆற்றல் கிடைக்காமல் போனால் என்ன பிரச்சனை என எதிர்கேள்வி எழலாம். 1980ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட அனுக்கதிரியக்க செயல்களாலும் அதிகமான அனுஆயுத சோதனையாலும் உலகலாவிய அளவில் குழந்தையின்மை மற்றும் புற்றுநோய் பெருகி வருகிறது. விவசாயத்தில் தொய்வு, மனசிதைவு நோய் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதில் நகைமுரண் என்னவென்றால் இந்த புள்ளிவிவரத்தை கணிப்பது அதே செயற்கைக்கோள்கள் தான்.

மரங்கள் பெருகி நம்மை வாழவைக்கும் என சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். மழை பெறுவதற்கு மரம் நடுவோம் என்கிறார்கள். உலகில் பொழியும் மலையில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான அளவே மரத்தினால் ஏற்படுகிறது. உண்மையில் பிரபஞ்ச ஆற்றல் உலகில் முழுமையாக பரவுவதற்கு மரம் அவசியமாகிறது.

தாவரங்கள் பிரபஞ்ச ஆற்றலை ப்ராணனாக மற்றும் வேலையை மட்டும் செய்வதில்லை. ப்ராண சக்தியால் உங்களுக்குள் நடக்கும் செயலை மீண்டும் பிரபஞ்ச சக்திக்கு கொண்டு இணைக்கிறது. உங்கள் செயல், எண்ணம் எல்லாம் ஆகாயத்தில் பதியப்படுகிறது என்பதை நீங்கள் நம்புவதற்கு தயாரா?

இக்கருத்தை பரிட்சித்து பார்க்க ஒரு பயிற்சி செய்வோமா?

நன்கு வளர்ந்த ஒரு மரத்தின் அருகில் செல்லுங்கள். சிறிது வினாடிகள் மெளனமாக இருங்கள். பிறகு உங்களுக்கு பிடித்த ஏதோனும் ஒருவிஷயத்தை பற்றி மரத்திடம் பேசுங்கள். மனதிக்குள் பேசினால் போதும். இல்லை உங்களை பிறர் வேறுமாதிரி நினைக்கக்கூடும். :)

உதாரணமாக நீங்கள் கிரிக்கெட் ரசிகர் என்றால் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட்
வீரரை பற்றியோ அல்லது குறிப்பிட்ட கிரிக்கெட் போட்டியை பற்றியோ விலாவாரியாக விவரிக்கவும். பிறகு அங்கிருந்து வந்து விடுங்கள். சில மணி நேரம் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ அந்த மரத்தின் கீழே உங்கள் நண்பரை அழைத்து செல்லுங்கள். சிறிது நேரத்திலேயே அவர் அன்று நீங்கள் மரத்திடம் பேசிய விஷயங்களை உங்களுடன் பேச ஆரம்பிப்பார்....!

உங்களின் எண்ணத்தை பிரபஞ்ச சக்தியாக மாற்றி மீண்டும் உங்களுக்கே திருப்பு அனுப்புகிறது இந்த இயற்கை எனும் பிரம்மாண்டம்.

இந்த பயிற்சி செய்வதற்கு முன் உங்களுக்கு பல கேள்விகள் வரும். அதற்கு நானே விளக்கிவிடுகிறேன்.

1) மரம் அதே மரமாக இருக்க வேண்டுமா? பிரபஞ்ச சக்தி பொதுவானது என்பதால் வேறு மரத்திற்கு சென்றாலும் இது நடக்கும் அல்லவா?

ஆம். அதே மரமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதே வகை மரமாக இருந்தாலும் இது செயல்படும். அரச மரத்தின் அடியில் இப்பயிற்சியை செய்கிறீர்கள் என்றால் அதே அரசமரத்தின் அடியிலோ அல்லது வேறு அரச மரத்தின் அடியிலோ சென்றாலும் இது நடக்கும்.

2) நாம் நண்பர்களுடன் சென்றால் நம் எண்ண அலைகள் நாம் பேசிய விஷயத்தையே நினைப்பதால் இது நடக்கும் சாத்தியம் உண்டே?

உங்கள் நண்பரை தனியே அதன் அடியில் சென்று நிற்க சொல்லுங்கள். பிறகு வேறு ஒரு நாள் சந்தித்தால் முதலில் நீங்கள் மரத்திடம் பேசியது பேசுவார். அதனால் ஆரம்பத்தில் பிரபஞ்ச சக்தியை உணரவே இந்த பயிற்சி. இது பல நிலையில் வேலை செய்யும்.

3) நம் எண்ண அலைகள் பிரபஞ்ச சக்தியில் தான் பதிகிறது என்பது என்ன நிச்சயம்? மரத்தில் கூட பதியலாம் அல்லவா?

அதனால் தான் அதே வகை வேறு மரங்களில் சோதித்து பார்க்க சொல்லுகிறேன்.

FAQ இவ்வளவு தான். :)


சரி...நீங்கள் ரெடியா? பயிற்சி செஞ்சுட்டு எனக்கு சொல்லுவீங்களா?

நீங்கள் நினைப்பதை கூற வைக்கும் பிரபஞ்ச சக்தியிடம் அடுத்த நிலையில் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் பெற முடியும். இதற்கு நம்பிக்கையுடன் ஆழ்ந்த பயிற்சி தேவை.

அந்த நிலையை நீங்கள் அடைந்தால் அந்த மரத்தின் பெயர் கற்பக விருட்சம். உங்கள் பெயர் யோகி...!

உங்களுக்கு கூறிய பயிற்சியை நான் மிகவும் விஞ்ஞான பூர்வமாகவும் செய்து விட்டேன். அந்த வேடிக்கையை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(...வேதம் ஒலிக்கும்)

Tuesday, October 27, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 5

தாவரங்கள் உருவாவது, வாழ்வது மற்றும் நமக்கு ப்ராண சக்தியை வழங்குவது என அனைத்தும் பிரபஞ்ச சக்தியினால் தான்.

ஒரே மாதிரியான மரக்கன்றுகளை ஒரே நில சூழ்நிலையில் நட்டால் அவற்றின் வளர்ச்சி ஒன்று போல இருக்காது. பூமியில் சில இடங்களில் வனம் இருப்பதற்கும் சில இடங்களில் வனம் அழிந்து அங்கே பேரழிவு ஏற்படுவதற்கும் பிரபஞ்ச சக்தியே காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களில் இருந்து பிரபஞ்ச ஆற்றல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரியை படிக்கும் பொழுது உங்கள் மேல் விழும் பிரபஞ்ச ஆற்றலானது பல நூற்றாண்டுகளுக்கு முன் நட்சத்திர மண்டலத்திலிருந்து புறப்பட்டிருக்கும்.
காஸ்மிக் கதிர்கள்

பிரபஞ்ச ஆற்றல் பூமியை வந்து அடையும் வரை ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது. பூமியின் வளிமண்டலத்தை தொட்டவுடன் தீபாவளி கம்பி மத்தாப்பை போல பல புள்ளிகளாக கிளைவிட்டு பரவுகிறது. இதனால் பூமியின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பிரபஞ்ச சக்தி பரவுகிறது.

பிரபஞ்ச ஆற்றல் எப்படி பரவும் என்பதற்கு சிறந்த உதாரணம் அறிய வேண்டுமானால் ஒரு நன்கு வளர்ந்த மரத்தை இலையுதிர்காலத்தில் தலைகீழாக பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பிரபஞ்ச சக்தி பரவும். இந்த உதாரணம் மூலம் தெரிகிறதா மரத்தின் வடிவம் ஏன் இப்படி இருக்கிறது என்று...! கிளைகள் பிரபஞ்ச சக்தியால் வரும் வடிவமே.
மரத்தின் தலைகீழ் தோற்றம் காஸ்மிக் கதிர் போல இருக்கும் படம்

ஒரு தாவரத்தை சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைத்தால் அவற்றால் உணவு உற்பத்தி செய்ய முடியாது என்கிறது தாவரவியல். ஜன்னலுக்கு அருகில் தாவரம் வைத்தால் அவை தலையை நீட்டி சூரிய ஒளியை நோக்கி செல்லுவதாக பள்ளி பாட புத்தகத்தில் நீங்கள் படித்திருக்கலாம். அத்தகைய விஞ்ஞானம் தற்சமயம் மாற்றம் அடைந்து வருகிறது. அவை தலை நீட்டுவது சூரிய ஒளிக்காக அல்ல. பிரபஞ்ச சக்திக்காக என எதிர்கால பாடபுத்தகங்கள் கூறும்.



காஸ்மிக் கதிர்களை காண்களால் காண விஞ்ஞானம் உருவாக்கிய கருவி.

தற்சமயம் அறிவியல் பிரபஞ்ச சக்தியை பற்றி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கண்டறிந்துள்ளது. பிரபஞ்ச ஆற்றலை அளக்கும் கருவியில் கூட மேல் நிலை கதிர்களே அளக்கபடுகிறது. மிகவும் நுண்ணிய கதிர்கள் அளக்க பல முயற்சிகள் நடக்கின்றன. விஞ்ஞானம் காஸ்மிக் கதிர் ஆய்வில் பின்தங்கி இருக்க ஒரு காரணம் உண்டு. மிகவும் எளிமையான ஒரு ஆய்வகம் அமைக்க குறைந்த பட்சம் இருநூறு கோடி ரூபாய் தேவைப்படும்.


மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒரு கேந்திரம். மரங்கள் இல்லாமல் மனிதன் பிரபஞ்ச ஆற்றலை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அவை மனித உடலுக்கு போதுமானதாக இருக்காது. சில ஆன்மீக பயிற்சியினால் மரங்களின் உதவி இல்லாமல் கூட பிரபஞ்ச சக்தி பெரும் சாத்தியம் உண்டு.

மரங்கள் பிரபஞ்ச சக்தியை உலகுக்கு வழங்கும் என்றால் ஏன் இத்தனை வகை மரங்கள்? ஒரே வகையான மரங்கள் போதும் அல்லவா? மரங்கள் பிரபஞ்ச சக்தியை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அவை வெளிவிடும் தன்மைக்கும் பல மாற்றங்கள் உண்டு.

அகஸ்தியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் உங்களுக்கு இக்கருத்தை மேலும் விளக்கும்.

அகஸ்தியர் கொல்லிமலையில் இருந்த சமயம் ஒரு அபூர்வ மூலிகையை தவறுதலாக பறித்த காரணத்தால் கண்பார்வை இழந்தார்.

கண்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அகஸ்தியரை கண்ட அவரின் சிஷ்யர்கள் வேதனை அடைந்தனர். அகஸ்தியரின் கண்பார்வை மீண்டும் வர என்ன செய்ய வேண்டும் என அவரிடமே கேட்டனர்.

எனக்கு எந்த மூலிகையால் கண்கள் குருடானதோ அந்த மூலிகையை எனக்கு கொடுத்தால் என் கண்பார்வை வரும். எனக்கு சமமான சிஷ்யன் ஒருவன் உண்டு. அவனால் மட்டுமே அது சாத்தியம். பிறர் சென்று அந்த மூலிகையை பார்த்தலே அவர்களும் என்னை போல கண்பார்வை இழப்பார்கள் என்றார்.

சிஷ்யர்களும் தங்கள் குருநாதரின் கண்களை மீட்டுக்கொடுக்கும் அந்த சிஷ்யன் யார் என கேட்டனர். அவர் தேரையர் என்ற ஒரு சிஷ்யன் வடக்கில் வாழ்கிறான் அவனை கூட்டி வாருங்கள் என்றார். தங்களை விட அந்த தேரையர் எந்த வகையில் சிறந்தவர் என கேட்டனர் பிற சிஷ்யர்கள்.

நான் கூறினால் உங்களுக்கு புரியாது. அவன் சகல கலையிலும் வித்தகன். அவனை சந்திக்க இன்றே கிளம்புங்கள். பயணத்தின் வழியில் தங்குவதாக இருந்தால் புளிய மரத்தில் மட்டும் தங்குங்கள் என கட்டளையிட்டார். குருவின் கட்டளையை ஏற்று பயணத்தில் புளிய மரத்தில் மட்டும் ஓய்வு எடுத்தார்கள்.

தேரையரின் இருப்பிடம் செல்லுவதற்குள் அனைவரும் நோயுற்று மிகவும் உடல் நலம் குன்றி நிலைகுலைந்து போனார்கள். இவர்களின் நிலையை பார்த்த தேரையர் என்ன ஆயிற்று என கேட்டார். நல்ல உணவு மற்றும் தூய்மையை பின்பற்றினோம் இருந்தாலும் கொடிய நோய் தாக்கிவிட்டது என்றார்கள். அகஸ்தியர் புளிய மரத்தில் மட்டும் தங்க சொன்னார், குருவாக்கை கேட்டும் எங்கள் நிலை இப்படி ஆகிவிட்டது என கலங்கினார்கள். தங்களுக்கு மருத்துவம் செய்ய கூறி வேண்டினார்கள்.

தேரையர் அவர்களின் வந்த காரியம் அறிந்து தான் அகஸ்தியரை காண வருவதாக கூறினார். மேலும் உங்களுக்கு வைத்தியம் தேவையில்லை என கூறி திரும்பி செல்லும் பொழுது அரச மரத்தை தவிர வேறு எங்கும் ஓய்வு எடுக்க வேண்டாம் என கூறினார்.

அதன்படியே பயணித்த சிஷ்யர்கள் அகஸ்தியரை காண வரும் முன் உடல் நலம் அடைந்தார்கள். சில நாட்களில் அகஸ்தியரிடம் வந்த தேரையர் ஒரு பலகையில் நன்றாக பாதரசம் பூசிக்கொண்டு அதை கண்ணாடி போல பயன்படுத்தி அந்த மூலிகையை பறித்தார். நேரடியாக பார்க்க கூடாது என்பதால் இவ்வாறு செய்தார்.

அகஸ்தியருக்கு கண் ஒளி கிடைத்தது. தேரையரை பற்றிய உள் ஒளி சிஷ்யர்களுக்கு கிடைத்தது.

மரங்கள் அனைத்தும் மனிதனுக்கு நன்மை செய்ய உருவாகவில்லை. சில மரங்கள் மனிதனின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பது உண்மை. சிலருக்கு மரத்தின் அடியில் தூங்கும் பொழுது ஒரு விதமான அழுத்தத்தை உணர்வார்கள். இதற்கு கிராமத்தில் அமுக்கான் என பெயர். உடலில் பிராண சக்தி இல்லாமல் ஒரு வினாடி நம் உடலும் ஆன்மாவும் செய்யும் போராட்டமே அந்த அமுக்குவதை போன்ற உணர்வு.

இரவில் புளி, முருங்கை மற்றும் வேப்ப மரத்தின் கீழ்படுத்தால் இவ்வாறு உணர்வார்கள். சிலருக்கு வீட்டின் உள்ளே ப்ராண சக்தி கிடைக்காத நிலையிலும் இது ஏற்பட்டுவிடும்.

நம் நெடுஞ்சாலை முழுவதும் புளிய மரம் அமைந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால் நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கும் வீடுகள் மிகவும் பாதிப்படையும் என்பது உண்மை.

ஒரு மரம் நமக்கு நல்ல விதமான ப்ராணனை கொடுக்கிறதா அல்லது கேடு விளைவிக்கும் ப்ராணனை கொடுக்கிறதா என கூறுவது எளிது.

ஒரு மரத்தின் இலைகள் சிறியதாக இருக்க இருக்க அதில் ப்ராணன் குறைவு என்று அர்த்தம். பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம்.

புளிய மரத்திற்கும் அரச மரத்திற்கும் வித்தியாசம் தெரிகிறதா? இதனால் புளியமரத்தில் பேய் இருக்கிறது என்றும் அரசமரத்தில் கடவுள் இருக்கிறார் என்றும் கூறினார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்தும் வைத்தனர். இதன் காரணம் அந்த மரங்களுக்கு இடையே உள்ள ப்ராண ஈர்ப்பை வலுபடுத்தத்தான். அதற்காக ப்ராண சக்தியை பற்றி தெரியாமல் இவைகளுக்கு திருமணம் செய்பவர்களை ஆதரிக்கிறேன் என அர்த்தம் இல்லை. தற்காலத்தில் வேதகாலம் என்ற பெருங்காயம் தீர்ந்து அதன் காலியான பெட்டி மட்டுமே மணக்கிறது.

மிகவும் பெரிய இலையுள்ள மரம் அதிகமான ப்ராணவை வெளிவிடும் அல்லவா? உங்களுக்கு தெரிந்த பெரிய இலை கொண்ட மரம் எது என சொல்லுங்கள் பார்ப்போம்.. உங்கள் வாழ்க்கையில் அது எப்படி இணைந்திருக்கிறது என புரியும்...

(.....வேதம் ஒலிக்கும்)

Saturday, October 24, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 4

வேதகால வாழ்க்கைக்கு தேவையான இயற்கை அங்கங்களை விரிவாக பார்ப்போம். முதல் அங்கமாகவும் முக்கிய அங்கமாகவும் திழ்வது தாவரம்.

தாவரம் :

முதல் இயற்கை பகுதியை பற்றி விரிவாக பார்க்க ஒன்றும் இல்லை. அதன் பெயரே அனைத்தும் சொல்லிவிடுமே?

......................தா.....வரம்..!

பிரபஞ்ச ஆற்றலை பார்த்து நாம் கேட்பது போல பெயர் அமைந்திருப்பது வினோதம் தானே? உலகில் முதலில் தோன்றிய உயிரினங்களில் தாவரத்திற்கே முதலிடம். விஞ்ஞான பரிணாம வளர்ச்சி எடுத்துக்கொண்டாலும் அதில் தாவரமே முதலில் தோன்றியதாக சொல்லுகிறார்கள். தாவரம் முதலில் உருவானதற்கான காரணம் மிகவும் எளிமையானது. முதலில் தாய் கருவானால் தானே குழந்தை உருவாக முடியும்?

பள்ளியில் தாவரவியல் என்று சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம் நமக்கு மரங்களை பற்றி தெரிந்து கொண்டிருப்போம். மரம் என்ன செய்யும் என கேட்டால் ஆக்ஸிஜனை வெளிவிட்டு கார்பன் - டை - ஆக்ஸைடு உள்ளே எடுக்கிறது என கூறுவோம். உண்மையில் மரம் ப்ராண வாயுவை மட்டுமா தருகிறது? ப்ராணனையே தருவது மரங்கள் தான்.

பிரபஞ்ச ஆற்றல் பூமியை அடைந்ததும் அவை தாவரங்களால் ஈர்க்கப்படுகிறது. பின்பு பிரபஞ்ச சக்தி ப்ராண சக்தியாக மாற்றப்படு பிற உயிர்களுக்கு வழங்குகிறது. சக்தி மாற்றம் செய்யும் இடமாக அமைவதால்தான் இதை கேந்திரம் (Transformer) என்கிறோம்.

ப்ராணன் என்றால் என்ன என முன்பு பார்த்தோம். பிரபஞ்ச சக்தி என அடிக்கடி கூறுகிறேனே அது என்ன என பார்ப்போம். அப்பொழுது தான் தாவரங்களின் அற்புதம் புரியும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியிலிருந்து உருவாகும் ஆற்றல் மிகவும் அதிவேகமாக பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. ஒளியின் வேகத்தைவிட இதன் வேகம் மிக அதிகம். அப்படி பிரபஞ்சத்தில் பரவும் ஆற்றல் சூரியமண்டலத்திற்கும் வந்து அடைகிறது. சூரிய குடும்பத்தின் பிற பகுதிகளுக்கு செல்லுவதற்கும் பூமிக்கு இவை வருவதற்கும் பல வேறுபாடுகள் உண்டு.

பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச பொருட்களை ஊடுருவி செல்லுகிறது. அதாவது ஒரு கிரகத்திலோ அல்லது விண் கற்களின் மேல் பிரபஞ்ச ஆற்றல் படும்பொழுது அவற்றின் உள்ளே புகுந்து வெளியேறுகிறது. இந்த செயல் பூமி என்ற கிரகத்திற்கும் பொருந்தும். ஆனால் பிரபஞ்ச ஆற்றல் பூமியில் உள்ள உயிர்கள் மேல் விழும் பொழுது மட்டும் ஊடுருவி செல்லுவதில்லை என்பது மிகவும் வியக்கதக்க விஷயம். உயிர் பொருட்களின் உள் செல்லும் ஆற்றல் அத்துடன் நின்று விடுகிறது. என்ன ஒரு ஆச்சரியமான பிரபஞ்ச இயக்கம் பார்த்தீர்களா?

பிரபஞ்ச ஆற்றல் என்ற Cosmic Ray பற்றி நவீன அறிவியல் அறிந்து கொள்ள விஞ்ஞான உலகம் தலையை உடைத்து கொண்டிருக்கிறது. பிரபஞ்ச ஆற்றல் எங்கிருந்து வருகிறது ? எதனால் உயிர் பொருட்களை ஊடுருவி செல்லுவதில்லை என பல கேள்விகள். ஒரு கேள்விக்கு விடை கிடைத்தாற்போல இருந்தால் ஒரு புறம் சிக்கல் மேல் சிக்கல்.

Cosmic Ray Lab என உலகின் பல இடங்களில் ஆய்வகங்கள் நிறுவி சூப்பர் கம்யூட்டரின் உதவியுடன் 24 மணி நேரமும் பிரபஞ்ச கதிர் வீச்சை பதிவு செய்கிறார்கள். பிரபஞ்ச ஆற்றல் புரோட்டான் என்ற வடிவில் வருவதாக கண்டறிந்து, அவற்றை அளக்கும் கருவியும் கண்டறியபட்டுவிட்டது. பூமியின் நிலத்திற்கு மேல் புறமும், பூமியை தோண்டி ஆழத்திலும் பிரபஞ்ச சக்தியை அளக்கும் கருவியை பதித்து தினமும் பதிவு செய்கிறார்கள்.

மழை பொழிவது போல
தினமும் பல்லாயிர ஒளி மழை நம்மை நோக்கி பொழிந்து கொண்டே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த ஆய்வுக்காக பலகோடிகள் ஒதுக்கபட்டுள்ளது. உலகளாவிய தன்மையில் பல நாடுகளிலும் கடலிலும் ஆய்வகங்கள் அமைக்கபட்டிருக்கிறது. ஆனாலும் பிரபஞ்ச ஆற்றலின் மூலம் சரியாக கண்டுபிடித்தப்பாடு இல்லை. சிலர் சூரியனில் இருந்து வருகிறது என்கிறார்கள். சிலர் சூப்பர் நோவா என்ற நட்சத்திரம் வெடித்து அதனால் வருகிறது என்கிறார்கள்.

ஏதோ வேதகால வாழ்க்கை என்று ஆரம்பித்தீர்கள் இப்பொழுது சூப்பர் நோவா, காஸ்மிக் ரே என கூறுகிறீர்களே இது எப்படு உங்களுக்கு தெரியும் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உங்களுக்கு எந்த செய்தியை கூறினாலும் அதை நான் உணராமல், ஆய்வு செய்யாமல் கூறமாட்டேன். அதன் படி இத்தகைய ஆய்வகங்களுக்கு சென்று சாஸ்திரத்திற்கும் நவீன விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பை பல வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன்.
ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள காஸ்மிக் ஆய்வகத்தின் முன் நான்.


பிரபஞ்ச ஆற்றலை கண்களால் காண முடியாது. சில கருவியின் துணை கொண்டு காணலாம் என கூறினேன். ஆன்மீக ரீதியாக ஒருவர் உயர்வடையும் பொழுது அவர்களுக்கு இந்த மழை பொழிவை போன்ற பிரபஞ்ச ஆற்றலின் சக்தி புலப்படும். இதை ஒவ்வொரு கலாச்சாரத்தை சேர்ந்த ஞானிகளும் பல்வேறு விதமாக விளக்கம் அளித்துள்ளனர். சிலர் அமிர்தம் பொழிகிறது என்றும், சிலர் இறைவன் அருள் பொழிகிறான் என்றும் விளக்கினார்கள். சூஃபி ஞானிகள் தங்கள் கண்ட பிரபஞ்ச அலையை பாடல் வடிவில் மொழி பெயர்த்தார்கள்.

பலகோடி செலவு செய்து நவீன விஞ்ஞானம் கண்டறிய முயற்சிக்கும் விஷயத்தை வேதகால வாழ்க்கை எளிமையாக விளக்கிவிடும். பாருங்கள் தாவரம் என்ற ஒரு இயற்கையின் உறுப்பை விளக்க துவங்கி எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

(...வேதம் ஒலிக்கும்)

Thursday, October 22, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 3

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.
------------------------------------------------------------- - திருமந்திரம் 84

வேதகால வாழ்க்கை என்று நான் ஆரம்பித்து விளக்க துவங்கியதும் பல்வேறு மின்னஞ்சல்கள். வேதம் என்றால் ‘இது’ என இவர் சொல்லி இருக்கிறார். ‘அது’ என அவர் சொல்லி இருக்கிறார் என பல விளக்கங்கள். ஒரு சிலர் நீங்கள் அந்த ஜாதியை சார்ந்தவரா? இப்பொழுது தான் உங்கள் சுயரூபம் தெரிந்தது என வசைகள்.

இவை இரண்டுக்கும் விளக்கம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை.
காரணம் இந்த இரண்டு நிலைகளையும் இல்லாத சுத்த பெருவெளியில் நான் நிற்கிறேன். அங்கே எனக்கு அடையாளம் இல்லை. உருவம் இல்லை. உணர்வுகள் கிடையவே கிடையாது. என்னுள் இயங்குவது என் விரல்களையும் இயக்குகிறது. கொஞ்சமேனும் என் பிரஞ்ஞை அது இயக்கி இருந்தால் உங்களை விடவும் அதிக கேள்விகள் கேட்பவனாக இருந்திருப்பேன். அதை தெரிந்து கொண்டே என்னை இயக்கமற்ற சிந்தனையற்ற ஒரு எழுதுபொருளாக்கி இருக்கிறது.
-------------

இயற்கையாக வாழுதல் என்பது அனைவரின் உள் உணர்விலும் ஏக்கமாக இருக்ககூடியது. சுத்தமற்ற உணவும், அசுத்தமான காற்றையும் சுவாசிக்கும் எவரும் தன் மனதால் சித்திக்காவிடினும் அவர்களின் உடலும் ஆன்மாவும் அத்தகைய வாழ்க்கைக்காக் தவம் இருக்கும் என்பது உண்மை.இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு முன்னால் இயற்கையை தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கை என்றால் என்ன என யாரையாவது கேட்டுப் பாருங்கள்.. உடனே மலை, கடல் அல்லது ஆறு இவையெல்லாம் இயற்கை என்பார்கள்.

உண்மையில் இவையெல்லாம் இயற்கை வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் சூழல்கள் மட்டுமே. இயற்கை என்பது உங்களை தவிர இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிர்கள் அனைத்துமே என்பதை உணருங்கள்.

உங்களை விடுத்து அனைத்து உயிர்களையும் இயற்கை என உணர்ந்து இப்பொழுது கடல், மலை மற்றும் ஆறுகளை பாருங்கள். அதில் பல உயிர்களின் வாழ்விடம் என உங்களுக்கு புரியும்.

உயிரினம் என்பது பறவைகள் மற்றும் விலங்களை மட்டும் குறிப்பிடவில்லை. தாவரங்களும் உயிர்கள் தானே? அவற்றையும் இணைத்தே கூறுகிறேன். கடல் மற்றும் மலை என எந்த இயற்கை சூழல் இருந்தாலும் அதில் தாவரமும் , விலங்கினங்களும் இருக்கும்.

அத்தகைய உயிரினங்கள் நமக்கு பல விதத்தில் நன்மையை கொடுக்கிறது என்பது தெரியாமலேயே நாம் அவற்றைவிட்டு தூரமாக வாழ்கிறோம். இதனால் நமக்கு வாழ்க்கை முழுமையற்ற நிலையில் இயங்குகிறது.

வேதகால வாழ்க்கை என்பது இயற்கை பகுதியுடன் உங்களை இணைத்து வாழ்வது. இயற்கை என்ற உயிர்பொருட்களுடன் நீங்கள் ஒன்றினைந்து வாழ்ந்தால் அவற்றின் மூலம் உங்களின் வாழ்வாதாரம் முழுமை பெறும்.

வேதம் என்றால் ஒரே பொருளின் அங்கம் பிரிந்து இருக்கும் தன்மையை வேதம் என்றேன் அல்லவா? அது போல தாவரம், மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்தும் பிரிந்திருந்தாலும் உண்மையில் அனைத்தும் ஒரே வஸ்துவால் ஆனது என்பதை உணர்ந்து வாழ்தல் வேதகால வாழ்க்கை என்கிறேன்.

மனிதனின் வாழ்க்கை இயக்கம் ப்ராண சக்தியின் அடிப்படையில் அமைந்துள்ளது. பிரபஞ்ச சக்தி ப்ராண சக்தியாக மனித உடலுக்குள் நேரடியாக நுழைய முடியாது. மனிதனை தவிர பிற இயற்கை பொருட்கள் பிரபஞ்ச சக்தியை ப்ராண சக்தியாக மாற்றும் கேந்திரங்களாக செயல்படுகிறது.

உதாரணமாக தாவரங்கள் பிரபஞ்ச சக்தியை நேரடியாக ப்ராணனாக மாற்றும் கருவியாக இருக்கிறது. அதனால் தான் மனிதன் தாவரங்கள் இல்லாத பாலைவனத்திலும், பனிப்பிரதேசங்களிலும் அதிககாலம் வாழ முடியவில்லை.

முழுமையான ப்ராணனுடன் மனிதன் வாழ்ந்தால் அதனால் அவனும் சமூகமும் அடையும் பயன் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி முழுமையான ப்ராணனுடன் மனிதன் வாழ்ந்து இயற்கையுடன் ஒன்றிணைவதே வேதகால வாழ்க்கை முறை என கூறலாம்.

வேதகால வாழ்கை என்பதை செயல்படுத்த மூன்று இயற்கை பொருட்கள் தேவை. அவை தாவரம், பசு மற்றும் மனிதன். ஒவ்வொரு பகுதியையும் மனித வாழ்க்கைக்கு எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

( ....வேதம் ஒலிக்கும்)


Tuesday, October 20, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 2

வானில் ஒளிவிடும் சூரியனுக்கு தெரியாது
தன் பெயர் சூரியன் என்று...


மனித மனம் விசித்திரமானது. தனக்கு தெரிந்த விஷயங்களை எப்பொழுதும் ஒரு பெயருடனோ, சம்பவத்துடனோ தொடர்புபடுத்திக்கொள்ளும். அப்பொழுது தான் அது நினைவு அறையில் இருக்கும் என்பது விதி. பிரபஞ்சம் தோன்றியது முதல் ஒரு ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு மனிதர்கள் வகைபடுத்தி வேதம் என பெயர் சூட்டி உள்ளனர். வேதத்திற்கு பொருளோ, பெயரோ கிடையாது.


பிரபஞ்சத்தில் இருந்து ஏற்படும் ஒலியானது இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் இல்லாவிடினும் ஒலிக்கும். அதற்கு பிரணவம் என்றும் ஓம்கார ஒலி என்றும் பல பெயர்கள் சூட்டினாலும் அதனால் அதன் செயல் மாறுபடாது. அத்தகைய பிரபஞ்ச ஒலி ப்ரணவமாக செயல்படும் பொழுது ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் நமக்கு பல்வேறு வகையான ஓசையாக கேட்கிறது.

இந்த பல்வேறு ஓசையை / ஒலி நயத்தை வகைப்படுத்தி வேதம் என்கிறார்கள். வேத வியாசர் வேதத்தை நான்கு பிரிவுகளாக பிரித்தார் என்றும் அவர் இன்ன காலத்தில் வாழ்ந்தார் என்றும் வகைப்படுத்துவது அனைத்தும் மேலைநாட்டினரின் ஆய்வு மூலம் தான். மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மனியரின் கருத்து அதிகமாக இவ்விஷயங்களில் பயன்படுத்துகிறார்கள்.

ரேடியோ அலை எங்கும் நிரம்பி இருக்கிறது ஆனால் அது நம் உணர்வு உறுப்புக்களுக்கு புலப்படுவதில்லை. ரேடியோ அலையை உணரும் கருவியை கொண்டு அலைகளை பெற்று பல விஷயங்களை செய்யலாம்.

மார்க்கோனி என்பவர் கண்டுபிடிப்பதற்கு முன்னும் ரேடியோ அலைகள் இருந்தது. ஆனால் அதற்கு ரேடியோ அலைகள் என பெயர் சூட்டப்படவில்லை. அதுபோல வேதத்திற்கு நாம் வேதம் என பெயர்சூட்டியதோ , பிரித்ததோ தெரியாது. அது பிரபஞ்சத்திற்காக வேலையில் என்றும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.

வேதம் என்ற அலைகளை உணரும் ரோடியோக்களாகவே ரிஷிகள் இருந்தார்கள். தொகுக்கபட்ட வேத ஒலிகளை கவனித்தால் இன்ன ஒலியை இந்த ரிஷியின் பெயரால் என தொகுத்தார் வியாசர். எளிமையாக சொல்ல வேண்டுமானால் பண்பலை ரேடியோவை உதாரணமாக கொண்டால் பாடல்கள் இன்ன ரேடியோவில் இன்ன அதிர்வெண்னில் ஒலிபரப்பபட்டது என கூறுவது போல வேத ஒலிகள் வகைப்படுத்தப்பட்டது.

வேதம் என்றும் ஒலித்துக்கொண்டே இருப்பதால் இதை புத்தகமாக அச்சிட அவசியம் இல்லை. நம்மை அந்த அதிர்வலைக்கு தயாராக்கினால் யார் வேண்டுமானாலும் அவ்வொலியை உணரலாம்.

சில தர்க்கவாதிகளால் வேதம் என்பது குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகவும், அரசியல் காரணங்களால் ஜாதீய அடிப்படையிலும் பார்க்கப்படுகிறது.

வேதம் என்பது இயற்கையின் வெளிப்பாடு. அதனால் இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது போல வேதம் ஒரு சமூகத்தின் அடையாளம் அல்ல. இக்கருத்தை திருமூலரின் வார்த்தையில் கேட்போம்.

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே
.
-----------------------------------------------------------------திருமந்திரம் 52.

நம் தொடரின் நோக்கம் வேதத்தை பற்றி தெரிந்து கொள்வது அல்ல. வேத முறையில் வாழ்வது என்பதே.

வேதம் என்பது இயற்கையான ஒரு ஆற்றல் என்றேன். அந்த வேதத்தின் வழியே வாழ்தல் என்றால் இயற்கையின் வழியே வாழ்வது என்பதாகும்.

இயற்கையாக வாழ்ந்தால் மட்டுமே பிரபஞ்ச ஒலியான வேதத்தை உணரவும் அதன் ஆற்றலை புரிந்துகொள்ளவும் முடியும்.

தற்சமயம் நாம் வாழும் வாழ்க்கை முறையானது இயற்கைக்கும் நமக்கும் இடையே கோடிக்கனக்கான கிலோமீட்டர் இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. நாம் இயற்கை வழியில் வாழும் முறையான வேதகால வாழ்க்கையை தெரிந்து கொண்டோமானால் இந்த இடைவெளியை ஒரு ஷணத்தில் கடந்துவிடலாம்.

முன்விளக்கமே நீண்டு விட்டது. இன்னும் நான் வேதகால வாழ்க்கை என்பதை பற்றி கூறவில்லை...

(வேதம் ஒலிக்கும்....)

Saturday, October 17, 2009

வேதகால வாழ்க்கை

நம்மில் பலருக்கு சிலவிஷயங்களில் உள்மன கட்டமைப்பு (Predefined Mind set) உண்டு. உதாரணம் வேதம் என்றாலே மத ரீதியான ஒரு புத்தகம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு.

வேதா என்ற வார்த்தைக்கு சரியான பிற மொழி சொல்லாடல் இல்லை என கூறலாம். தமிழில் மறை என்றும் ஆங்கிலத்தில் sacred text என்றும் கூறப்படுவது நான் அறிந்தவரையில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை. காரணம் இவை அனைத்தும் மதம் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.

வேதா என்றால் ஒன்றாக இருப்பதன் பல்வேறு பிரிவுகள் என கூறலாம். நீங்கள் மனித உடலாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியே கூறிக்கொண்டாலும் அனைத்தும் இணைந்தது நீங்கள் மொத்த உருவாக இருப்பீர்கள். உங்கள் உடலில் சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம் என இருக்கும் அல்லவா அது போன்று

பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கும் ஒரு ஒலியை வேறுபடுத்திக் கொள்ளுவது வேதம் என கூறலாம்.

இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் சிலர் வேதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் அது ஹிந்துமதம் என்பதன் கீழ் வருவதாக சிலர் சொல்லுகிறார்கள். சில அதிபுத்திசாலிகள் வேதம் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் அது ஏதோ சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொல்லிகிறார்கள்.

திருமூலர் இயற்றிய திருமந்திரம் தமிழில் இருந்ததால் சைவம் என்ற லேபிள் இட்டு அதை பன்னிரு திருமறையில் கொண்டிணைத்தனர். முடிவு தற்சமயம் திருமந்திரம் தன் சுயத்தை இழந்து வருகிறது.

வேத சாஸ்திரத்தில் இருக்கும் விஷயங்கள் ஒரு மொழி சார்ந்தது அல்ல. வேத சாஸ்திரம் ஒலி சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சரி.. இப்பொழுது யோசிப்போம் ஒலி எந்த மதத்தை சார்ந்தது, எந்த நாட்டை சார்ந்தது , எந்த மொழியை சார்ந்தது?

மாடு “...மா” என குரல் கொடுப்பதால் அது இந்திய மொழிதான் பேசுகிறது என்றும் உலகில் இருக்கும் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் சென்றது என்றும் கூற முடியுமா?

வியாசர் என்பவர் வேதத்தை நான்காக பிரித்தார். அதற்கு முன் வேதம் ஒன்றாக இருந்தது. ஒன்றாக இருக்கும் பொழுது வேதம் என கூறப்படவில்லை. பிரிந்த பிறகே அது வேதமாகியது.

வியாசர் என்பவர் இதை பகுத்தார் என்றாலும் அவர் எத்தகையவர் என சரியான தகவல் நம்மிடையே இல்லை. வியாசம் என்றால் தொகுப்பு என பொருள். வியாசர் என்றால் வியாசம் செய்பவர். வேதத்தை வியாசம் செய்வதால் வேதவியாசர் என அழைக்க
ப்பட்டார்.

வேதம் என்பது பிரபஞ்ச ஒலி என்றேன் அல்லவா? அதற்கு பொருள் உண்டா என்றால் எனக்கு தெரிந்தவரை மொழிக்கு மட்டுமே பொருள் உண்டு. ஒலிக்கு பொருள் கற்பிக்க
ப்படலாமே தவிர இயற்கையாக இருக்காது.

வேதகால வாழ்க்கை என்ற தலைப்பில் வேதத்தை பற்றி கூறுகிறேனே என உங்களுக்கு குழப்பம் வரலாம்.

வேதகால வாழ்க்கை என்ற ஒரு காலகட்டம் நம் பூமியில் இருந்தது. வரலாற்று அறிஞர்களாலும், அனேகராலும் பதிவு செய்ய
ப்படாத ஒரு வாழ்க்கை முறை அது.

உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம். இந்த வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது என்பதே இந்த தொடரின் நோக்கம்.

என்ன புதிய தொடரா என நீங்கள் கேட்பது புரிகிறது...!

வேதகால வாழ்க்கை என்பதை சிலவரிகளில் கூறிவிட முடியாது. முதலில் வேதம் என்றால் என்ன? காலம் என்றால் என்ன? வேதகாலம் என்றால் என்ன மற்றும் வேதகாலத்தை எப்படி வாழ்க்கை முறையாக்குவது என பலபடிகள் கொண்ட விஷயத்தை குறள் வெண்பா வடிவில் இரண்டு அடிகளில் கூறிவிட முடியாது.

மேலும் விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வேதம் ஒலிக்கும்..)

Tuesday, October 13, 2009

பழையபஞ்சாங்கம் 13 - 10 - 2009

பழக்கம் ஒரு விளக்கம்

நம்மில் பலருக்கு சில பழக்கம் இருக்கும். ஆளுக்கு ஆள் வேறுபட்டாலும் ஏதோ ஒரு பழக்கத்தை நாம் கொண்டிருப்போம். பழக்கத்தில் நல்லபழக்கம் கெட்ட பழக்கம் என சிலர் வகைப்படுத்துவார்கள். உண்மையில் நல்லது கெட்டது என இவற்றில் எதுவும் இல்லை. பழக்கம் என்பது எப்பொழுதுமே கெட்டது தான். இதை நான் சொல்லவில்லை பதஞ்சலி தன் யோகசூத்திரத்தில் சொல்லுகிறார். தன்னை எதனுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என நினைப்பவர்கள் தங்களுக்கு உள்ள பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

நான் கூறும் இவ்விஷயம் சற்றுக்குழப்பமாக இருக்கலாம். ஒரு வாழ்வியல் உதாரணத்தை பார்ப்போம். சென்ற பழைய பஞ்சாங்கத்தில் சிவா மற்றும் லீலாவை பற்றி எழுதி இருந்தேன். ஒரு வலையுலக நண்பர் நீங்கள் சிவா மற்றும் லீலாவுடன் இருக்கும் படம் வேண்டும் என்றார். அவருக்கு மூன்றையும் ஒன்றாக பார்க்க விருப்பமோ என்னவோ. :)

அவரின் கோரிக்கைக்காக புகைப்படம் எடுக்கத் தயார் ஆனேன். புகைப்படம் எடுக்க உதவியாளர் யாரும் இல்லாததால் சிவா மற்றும் லீலாவை என் அருகே நிற்க வைத்து தானியங்கி கேமராவை தயார் செய்து விட்டு விரைவாக வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன். 5..4....3.....2...1 என வினாடிகள் கரைந்தது.....

புகைப்படம் எடுக்கும் நேரத்தில் சிவாவும் லீலாவும் போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்து ஓடி கேமராவை எடுத்து வந்து என் கையில் கொடுத்தனர். க்ளிக்.. க்ளிக்...!

நான் தான் அவர்களை அப்படி பழக்கி இருந்தேன். சில நேரங்களில் பழக்கங்கள் பிரச்சனையாகிவிடும் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஓஷோ பழக்கம் ஒரு மனநோய் என இதற்கு ஒரு கதை சொல்லுவார். இங்கே வேண்டாம் அப்படிபட்டக் கதைகள். காரணம் இது போன்ற கதைகள் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை..!

-------------------------------------
நோபல் தரிசு - எழுத்துப்பிழை அல்ல...

சிவாமி சிவானந்தர் பற்றி கேள்விப்பட்டிருப்பீருகள். ரிஷிகேஷத்தில் ஆசிரமம் அமைத்து உலகளாவிய நிலையில் யோக மார்கத்தை பரப்பியவர். பூர்வாசரமத்தில் அவர் தமிழகத்தை சார்ந்தவர். அவர் ரிஷிகேஷ் சிவானந்தா ஆசரமத்தில் வசித்த காலத்தில் அங்கே பல கலைநிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கும். கர்னாடக சங்கீத வித்வான்கள் மற்றும் பல கலை நிபுணர்கள் இவர் முன் நிகழ்ச்சி நடத்துவதை பெருமையாக கருதினார்கள்.

எந்த நிகழ்ச்சியானாலும் சிவானந்தர் மிகவும் ரசிப்பார். தலையை ஆட்டி.. தாளம் போட்டு அவர் ரசிக்கும் பாவனையை பார்க்கும் எவரும் தங்களை அறியாமல் அந்த நிகழ்ச்சியில் ஒன்றிவிடுவார்கள். கலைஞர்களுக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் தன் கையாலேயே பாராட்டு சான்றிதழ் ஒன்றும் வழங்குவார். உண்மையில் எத்தகைய கலைஞராக இருந்தாலும் சிவானந்தர் இதையேதான் செய்வார் என பலருக்கு தெரியாது.

ஒரு நாள் புல்லாங்குழல் இசையை ஆரம்ப கட்டத்தில் பயின்று வந்த ஒருவர் தான் சிவானந்தரின் முன் வாசிக்க விரும்புவதாக கூறினார். சிவானந்தரும் ஆசிரமவாசிகளும் கூடி இருந்த மிகபெரிய அவையில் அவர் வாசிக்க துவங்க அபஸ்வரமாக வெளிப்பட்டது. அனைவரும் நெளிந்தனர். ஆனால் சிவானந்தர் வழக்கம் போல தலையை ஆட்டி ஆட்டி ரசித்து “ பிரமாதம் பிரமாதம் ” என கூறிக்கொண்டிருந்தார். புல்லாங்குழல் கலைஞர் தன் நிலையை சிறிது நேரத்தில் உணர்ந்து தானாகவே நிறுத்திக்கொண்டார்.

சிவானந்தர் அவருக்கு பொன்னாடை அணிவித்து ‘புல்லாங்குழல் மாஹாவித்வான்’ என்ற பட்டத்தை வழங்கினார். அவையோர்களுக்கு அதிர்ச்சி. இதை பெற புல்லாங்குழல் கலைஞருக்கு அளவில்லாத கூச்சம்.

ஒரு வருடம் கழித்து அதே நாளில் ஆசிரமவாசிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடையில் அதே புல்லாங்குழல் கலைஞர். ஆனால் இந்த முறை மிகவும் ஆனந்தமான இசையை அவையோர்களுக்கு வழங்கினார். அனைவரில் காதுகளிலும் புல்லாங்குழலால் தேன் நிரப்பினார். நிகச்சியை அவர் நிறைவு செய்து பேசும் பொழுது கூறினார், “ சென்ற ஆண்டு குருநாதர் கொடுத்த பட்டத்திற்கு நான் தகுதி அற்றவன் இல்லை என்பது எனக்கும் , உங்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தே இருந்தது.. பட்டத்திற்கு தகுதியானவனாக என்னை ஆக்கிக்கொள்ள ஒருவருடம் கடினமாக உழைத்து, என் குருநாதரின் வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என்றார்.

இந்த செய்திக்கும் ஒபமாவுக்கு கிடைத்த நோபல் பரிசுக்கும் சம்பந்தம் இல்லை.


-----------------------------------------
மொழிதை

ஒரு தேசத்தின் காலாச்சாரத்தை ரசிக்க வேண்டுமானால் அவர்களின் கவிதையை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மொழிக்கு மொழி கவிதையின் தன்மை மாறுபடும் என்றாலும் கலாச்சாரம் மற்றும் மொழியை தாண்டி கவிதை பிற கலாச்சாரத்தில் ஊடுருவும். இதற்கு காரணம் ரசிப்பு திறன் என்பது கலாச்சாரங்களை கடந்தது.

மரபு, நவீன, பின் நவீன, ஹைக்கூ என நம் மக்கள் கவிதையில் பல வடிவ முயற்சிகள் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கவிதை வகைகளில் ஒன்றுதான் மொழிதை. மொழி+கவிதை - ஒரு மொழியால் எற்படும் கவிதை மொழிதை. அதாவது ஒரு மொழியில் இருக்கும் வார்த்தையின் எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதுவதன் மூலம் சிலவரியில் கவிதையாக எழுதுவது இதன் கட்டமைப்பாகும். உங்களுக்காக என் மொழிதைகளில் சில இங்கே..


பெருகியது வாகனம்
சுருங்கியது வானகம்

-----------------------------

விசாலமான மனம்
கடவுளின் விலாசம்

இவ்வகை கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்வதால் பிற மொழியில் அதே கட்டமைப்பு கொடுக்காது. மொழியை மட்டுமே அடித்தளமாக கொண்டு கவிதையால் ஏற்படும் ரசிப்பை உண்டாக்குவது மொழிதை. ஒரு ஆங்கில மொழிதை இதோ..

Your Pet - Dog
You itself a Pet - God

நீங்களும் மொழிதையை முயற்சி செய்யுங்கள். மொழிதையை உருவாக்கியவர் போன்ற இலக்கியம் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். :)

-------------------------------------------------------------------------
ஞான ஒளி

தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளை கவரும் படி உருவாக்குகிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மைதான் போல இல்லையென்றால் என்னை கவருமா :) ?

ஒரு மாணவர் என்னிடம் என்ன விளம்பரங்கள் பிடிக்கும் என கேட்டார். இந்தியன் ஓவர் சீஸ் பாங்க் விளம்பரத்தில் வரும் அந்த நீண்ட முடி சிறுவன்
பிடிக்கும். அவனைபோன்ற இன்னொரு சிறுவன் வேகா லாண்ட் விளம்பரத்தில் வருவான் என்றேன். குறிப்பிட்டு ஏன் இந்த விளம்பரம் பிடிக்கும் என கேட்டார் மாணவர். நான் சொல்லுவதற்குள் சுப்பாண்டி இடைமறித்து “நமக்கு என்ன இல்லையோ அதைத் தானே ரசிப்போம்” என்றான். ஸ்....ப்பா... முடியல...

ஹவெல்ஸ் சிஎப்எல் பல்ப் விளம்பரம் என்னை கவர்ந்தது. திபெத்திய கலாச்சாரத்தை பகடி செய்வதாக இருந்தாலும் இந்த விளம்பரத்தின் கருத்து அனைத்து கலாச்சாரத்திற்கும் பொருந்தும். போலி மதவாதிகள் உருவாக்கும் மக்களின் அறியாமை அனைத்து இடத்திலும் இருக்கிறது அல்லவா?

தொலைக்காட்சியில் சிலவினாடிகளே காண்பிக்கபடும் இந்த விளம்பரம் ஒரு குறும்பட அளவுக்கு இருக்கிறது. உங்கள் பார்வைக்கு இதோ..


Saturday, October 10, 2009

ஆன்மீகவாதிகள் ஓர் விளக்கம்

ஆன்மீகவாதிகளை நாம் வரையறுக்க முடியாது என முன்பு கூறினேன். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். காட்டாறுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது இயலாது. பின்பு எப்படித்தான் தெரிந்துகொள்ளுவது?

உங்களுக்கு முன் இருக்கும் விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு உணர்த்துவது உங்கள் புலன்களே. கண்ணாடி உங்களை பிரதிபலிக்கும் என்பது உங்கள் கண்கள் சரியாக வேலைசெய்தால் மட்டுமே கூற முடியும். உங்கள் கண்களில் குறை இருப்பின் நாம் கண்ணாடியே சரி இல்லை என கூறிவிடுவோம். அதனால் ஆன்மீகவாதிகளுக்கு அருகில் நீங்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறுகிறேன். உங்களுக்குள் நான் சொல்லுவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அவர் உயர் ஆன்மீக நிலையில் இருக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்மீகவாதிகளை உணர்வு உறுப்புக்களில் தெரிந்து கொள்ளுவது சாத்தியமா என கேட்கலாம். ஆரம்ப நிலை சாதகர்களுக்கு இது அவசியம். பிறகு அவர் உங்களை உணர்வுக்கு அப்பால் அழைத்துச்செல்வார்கள்.

ஒரு ஆன்மீகவாதியின் அருகில் இருக்கும் பொழுது உங்களுக்குள் எப்படி இருக்கும் என இந்த கட்டுரையின் இறுதியில் கூறுகிறேன்.

அதற்கு முன் ஆன்மீகவாதியில் லட்சணங்கள் என நான் பட்டியலிட்ட விஷயங்கள் ஏற்படுத்திய விபரீதங்களை பார்ப்போம்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

இவ்வாறு எதிர்பார்ப்பதால் தங்கள் முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சிலர் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது சொல்லிதெரியவேண்டியது இல்லை. புன்னகையை எதிர்பார்த்த காரணத்தால் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தும் வண்டியில் ஏறும்பொழுது புன்னகைக்கிறார்கள். பலவருடங்களாக புன்னகையை போலியாக சுமந்தவர்கள் எப்படி ஒரு நாளில் அதை விடுவிக்க முடியும்?

மேலே நான் குறிப்பிட்ட விஷயங்களில் ஆசிகொடுக்கும் தன்மையை விடுத்து பிற விஷயங்களை நீங்கள் விமான பணிப்பெண்ணிடம் காணலாம். வரும் வாடிக்கையாளர்களை செயற்கையாக அவர்கள் அனுகும் முறை இது. போலி ஆன்மீகவாதிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை இப்படித்தான் வலைவீசுகிறார்கள்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

இக்கருத்தை எழுதும் பொழுது நான் மிகவும் வேதனை அடைந்தேன். காரணம் எனக்கு தெரிந்த ஒரு ஆன்மீகவாதி நன்றாக உணவு சாப்பிடுபவர். ஒரு ஊருக்கு செல்லும் பொழுது அந்த மக்கள் உணவு வழங்காமல் பழங்களை கொடுத்து அவரை படுத்தபடுக்கையாக்கி விட்டார்கள். தற்காலத்தில் பால் மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ரசாயனம் கலக்கப்படுகிறது. நிங்கள் ஒரு வேளை மட்டும் பால், பழம் சாப்பிட்டு பாருங்கள் ஒரு மணி நேரத்தில் உங்கள் ஜீரண உறுப்பு தன் வேலையைக்காட்டும். வயிற்றுப்போக்கால் அவர் பல நாள் எழுந்து நடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

எல்லா ஆன்மீகவாதிகளும் மதப்பொருட்களை கைகளில் வைத்திருக்கமாட்டார்கள். மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இருப்பவர்கள் மக்கள் எந்த விஷயத்தை பயன்படுத்த வேண்டுமோ அதை அவர்களுக்காக கைகளில் வைத்திருப்பார்கள். காரணம் இவர்கள் பயன்படுத்துவதை பார்த்து அவர்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக.
மேலும் நமக்கு எந்த மந்திரம் வேண்டும், நாம் ஜபம் செய்ய வேண்டுமா என்று முடிவு செய்பவர் நம் குரு மட்டுமே. ஆன்மீகவாதிகள் அல்ல. குறித்துக்கொள்ளுங்கள் அனைத்து ஆன்மீகவாதிகளும் உங்கள் குரு அல்ல..!

அனைவருக்கும் தீட்சை தருபவர் உங்களுக்கு குருவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலர் மார்கழி மாத பிரசாதம் போல நான் இவரிடத்தில் தீட்சை வாங்கினேன், பிறகு இவரிடத்தில் வாங்கினேன் என பெருமை பேசுவார்கள். தீட்சை என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ஏற்பட வேண்டிய நிகழ்வு. தீட்சை பலரிடத்தில் வாங்குவது பெருமையல்ல. குறைந்த பட்சம் ஒருவரிடமாவது வாங்கியதை பயன்படுத்தவேண்டும் என்பதே அவசியம்.

ஒருவரிடம் தீட்சை பெற்று பின்பற்ற முடியாத சூழலில் இன்னொருவரிடம் தீட்சை பெறலாம். அதைவிடுத்து பார்ப்பவரிடம் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்ள தீட்சை என்பது தேர்தலில் வழங்கும் வாக்காளருக்கான பணம் அல்ல..!

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

ஆன்மீகவாதிகளை நாம் எப்பொழுதும் எடுப்பார் கைப்பிள்ளையாக வைத்திருக்கிறோம். அவர்களின் உள்ளே தெய்வீக நிலை இருப்பதால் அதற்கு நாம் தக்க மரியாதை செலுத்தவேண்டும். ஒரு கேள்வி கேட்கும் பொழுதோ அல்லது உதவி பெறும் முன்போ அவரிடம் அனுமதி வாங்க வேண்டும். அவரின் உள் நிலையில் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கலாம். அது அவருக்கு பெரும் உபாதையாக அமையும்.

உதாரணம் நானும் ஒரு ஆன்மீகவாதியும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அவர் கொஞ்சம் பிரபலமானவர் கூட. ஆன்மீக விஷயங்கள் இல்லாமல் சில நடைமுறை சங்கடங்களை எனக்கு அவர் விளக்கிக் கொண்டிருந்தார். திடீரென எங்கள் முன் வந்த ஒரு இளைஞர், “ பகவத் கீதையில் மூன்றாம் அத்தியாயத்தில் முதல் ஸ்லோகத்தில் கூறப்படும் விஷயம் இப்படி இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என பெரிய பிரசங்கத்தை நடத்திவிட்டு கேட்டார்.

ஆன்மீகவாதி என்னை பார்த்துவிட்ட ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார். ஆனால் அந்த இளைஞர் தான் கேட்ட கேள்வியால் அந்த ஆன்மீகவாதி நிலைகுலைந்து சென்றார் என நினைத்து பெருமிதமாக எங்களை பார்த்துக்கொண்டிருந்தார். நான் அந்த ஆன்மீகவாதியிடம் கூறினேன் மக்கள் உங்களை ATM என நினைத்துவிடுகிறார்கள். அதாவது ஆன்மீகம் டெல்லிங் மஷின்...! அவர் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள் விஷயம் புரியும்.


இதனாலேயே அவர்கள் அனேகமாக தொலைபேசியோ அல்லது இணையத்தையோ நேரடியாக உபயோகப்படுத்துவதில்லை. 13ஆவது விஷயத்தில் ( நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.) நான் கூறியது உண்மைதான். பல ஆன்மீகவாதிகள் இதனாலேயே தொலைபேசியை பார்த்தால் ஓடுவார்கள். நம் பக்திமான்கள் பொது தொலைபேசியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு பிரம்மசூத்திரத்தை விளக்குங்கள் என கேட்டால் என்ன செய்ய? நம் சுயநலத்தால் அவர்களை எல்லா நேரத்திலும் பயன்படுத்துவோம். இது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கடினமான உண்மை.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

இவர்கள் உண்மையில் ஆடைகளை விரும்புவதில்லை. நிர்வாணமாக இருப்பதையே விரும்புவார்கள். மஹாவீரர் மற்றும் அனேக அவதூதர்கள் இத்தகைய நிலையை முழுமையாக பின்பற்றுவார்கள். சமூக சூழலுக்காகத்தான் அணிகிறார்கள். சில குறிப்பிட்ட நிறம் அணிவதும் நமக்காகத்தான். உடையின் வேறுபாடு தெரியாத சூழலில் நாம் அவர்களுக்கு பாதகங்களை செய்யலாம். உடையின் காரணத்தால் நாம் அதை தவிர்க்க முடியும். உதாரணம் அவர்கள் முன் காமம் சார்ந்த விஷயங்களை பேசமாட்டோம். ஆன்மீகவாதிக்கு உடல் மேல் ஆடை அணிவது முயல் மேல் பாறையை வைப்பது போல சங்கடமானது. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதற்கு சரியான உதாரணம்.


பதிவின் நீளம் கருதி ஐந்து விஷயங்களுடன் நிறுத்திக்கொள்கிறேன். சென்ற பதிவு பதினைந்து எண்ணிக்கை வரவேண்டும் என மேலோட்டமாக எழுதபட்டதல்ல. அனைத்தும் விளக்கபட வேண்டிய விஷயங்களே அவை. எண்ணிக்கையில் பதினைந்தையும் கடந்து நிறைய இருக்கிறது.


சரி விஷயத்திற்கு வருவோம்...

ஆன்மீகவாதிகளின் அருகில் இருக்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு உள்ளே ஒருவித பேரமைதி காணப்படும்.
  • அந்த கணத்தை தவிர பிற சிந்தனைகள் எழாது
  • அவரிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என தோன்றினாலும் செயலாற்ற முடியாது.
  • அவரின் கண்களை பார்த்து அதிக நேரம் பேச முடியாது.
  • முதல் முதலாக பார்த்தாலும் பலநாள் பழகிய ஓர் இணக்கம் மனதில் இருக்கும். இருந்தாலும் எல்லை தாண்ட முடியாது
  • பலருடன் நாம் இருக்கும் பொழுது உள்ளுணர்வில் நம்மை மட்டும் அவர் கவனிப்பதை போன்று தோன்றும்.
  • அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகும் இன்னும் போதவில்லை என தோன்றும்.
  • உங்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை கேட்ட தோன்றினாலும் செயலற்று நீங்கள் இருக்கும் பொழுது அவர் பிறருடன் உரையாடும் பொழுது உங்களுக்கான விடை அதில் இருக்கும்.
  • உங்களுடன் அவர் மிக நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் மிகவும் அதிக விலகியவாராகவும் உணர்வீர்கள்.

இது மட்டுமல்ல நிறைய உண்டு. நீங்கள் அத்தகையவரை கண்டால் இதை தவிர வேறு என்ன ஏற்பட்டது என கூறுங்கள். முக்கியமாக ஒன்று நிகழும் அதை நான் வேண்டுமென்றே இங்கே குறிப்பிடவில்லை. காரணம் இதை படித்துவிட்டு இது எல்லாம் உங்களுக்கு நடப்பதாக கூட உங்கள் மனம் உங்களை ஏமாற்றக்கூடும். அதனால் அப்படிப்பட்டவரை நீங்கள் சந்தித்தால்/சந்தித்து இருந்தால் அதையும் உணர்ந்து எனக்கு தனிமடலாக கூறுங்கள்.

ஆன்மீகவாதியை நீங்கள் சந்தித்தபோது உங்களுக்குள் நடப்பதும் உங்கள் அன்மீக குருவை சந்தித்தால் உங்களுக்குள் நடப்பதும் ஒன்றல்ல.

அவன் அருளால் அவன் தாள் வணங்கி என கூறுவது போல ஒரு நாள் ஆன்மீக ஆற்றலே உங்களுக்கு அனைத்தையும் உணர்த்தும்.



Friday, October 9, 2009

ஆன்மீகவாதியின் டாப் 15 லட்சணங்கள்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

6) ஆன்மீக வாழ்க்கை என்பது அனைவராலும் திடீரென பின்பற்றக்கூடிய விஷயமல்ல. அதனால் ஆன்மீக வாழ்க்கையின் பிறப்பிலேயே கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். இவர்களின் தாய் -தந்தையர் தெய்வீக குணம் கொண்ட பக்திமானாக இருப்பார்கள். அதன் பயணாக இவர் பிறந்திருப்பார். பிறக்கும் பொழுதும் சிறுவயதிலும் அனேக அதிசயங்கள் இவரை சுற்றி நடந்திருக்கும்.

7) தான் ஞானம் அடைந்த விஷயம் மற்றும் ஆன்மீக உயர்வு கொண்ட சம்பவத்தை கேட்கும் பொழுது மிக உணர்ச்சி பெருக்குடன் விளக்குவார். எப்படி ஆன்மீகத்திற்குள் வந்தார், இவரின் குரு யார் போன்ற கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிப்பார். ஆன்மீகவாதி என்பவர் ஒரு திறந்த புத்தகம் என்பதால் அவருக்கு எந்த ரகசியமும் கிடையாது. அனேக ஆன்மீகவாதிகள் சுயசரிதை எழுதுவார்கள். அதில் அவர்களின் வாழ்க்கையில் எப்படி அதிசயம் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படையாக இருக்கும்.

8) பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் அல்லது திருமந்திரம் போன்ற ஏதோ ஒரு நூலை பின்பற்றியே அவரின் ஆன்மீக வாழ்க்கை இருக்கும். எந்த நூலை அவர் பின்பற்றுகிறார் என தெரிந்து கொண்டால் அவரின் ஆன்மீக வாழ்க்கை எப்படிபட்டது என எளிமையாக கணிக்கலாம். ஆன்மீகவாதி பேசும் பொழுது கூட இடை இடையே புனித நூலின் மேற்கொள்காட்டி பேசுவார்.

9) கைகளால் பணத்தை தொடுவது ஆன்மீகவாதியின் குணம் அல்ல. பணத்தை சேமிக்கவும் மாட்டார். மக்கள் பால் பழம், உடை கொடுத்திவிடுவதால் இவருக்கு தேவைகள் இருக்காது.

10) ஆன்மீகவாதிகளின் பெயர்கள் ஸ்வாமி, யோகி, மஹான், சத்குரு, ஸரஸ்வதி, பரமஹம்சர் போன்று அமையும். இப்பெயர்கள் அவர்களே வைத்துக் கொள்ளக்கூடாது. இமயமலையில் சில ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்கு பெயரை வழங்குவார்கள் அல்லது பெரிய மடாலயத்தில் தீட்சை வாங்கும் பொழுது இந்த பெயர்சூட்டும் வைபவம் நடக்கும்.

11) இவர்கள் திருமணம் ஆனவர்களாக இருக்கமாட்டார்கள். அப்படி திருமணம் செய்திருந்தாலும் குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பார்கள். மணவாழ்க்கை என்பது ஆன்மீகத்திற்கு தடை என்பதால் தனித்து இருப்பார்கள்.

12) தினமும் நித்திய பூஜை செய்வார்கள். அவர்கள் எங்கு பயணித்தாலும் அவர்களுடன் விக்ரஹங்கள் எடுத்து சென்று பூஜை தொடர்வார்கள்.

13) நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.

14) எங்கும் நிரந்தரமாக தங்காமல் சஞ்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தங்களின் பக்தர்கள் கோரிக்கைக்கு இணங்க வெளிநாடு பயணம் செய்வார்கள். தர்மத்தை பிறநாடுகளில் பரப்புவது இவர்களின் கடமை. கடல் மேல் பயணிப்பது தர்மத்திற்கு எதிரானது என்றாலும் ஆன்மீக விஷயத்திற்காக அந்த பாவத்தையும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

15) தான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே அனேகமாக இருக்கமாட்டார்கள். ஒரு ஊரில் பிறந்து , வேறு ஊர்களில் சஞ்சரித்து, மற்றொரு ஊரில் ஆசிரமம் அமைத்து இருப்பார்கள். இதனால் தன் குடும்ப உறுப்பினர்களை விலக்கியே வைத்திருப்பார்கள். ஊரில் மேலும் உறவின் மேலும் பற்று இருக்க கூடாது என்பது இச்செயலின் உள்ளர்த்தம்.


கொஞ்சம் பெரிய டிஸ்கி :

இது எல்லாம் ஆன்மீகவாதியின் அடையாளம் என மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புகள். மேற்கண்ட 15 விஷயங்களில் ஒன்றாவது நீங்கள் ஆன்மீகவாதியிடம் எதிர்பார்த்திருப்பீர்கள்.

ஆன்மீகவாதியை ஒரு சட்டதிட்டத்தில் அடக்க அவர்கள் செயற்கையான இயந்திரங்கள் அல்ல. ஆன்மீகவாதிகள்
இயற்கையான மலை, காட்டாறு போன்றவர்கள். இலக்கணத்தில் அவர்களை அடைக்க அவர்கள் ஒரு கலாச்சார சார்பு கொண்ட மொழி அல்ல. அவர்கள் அனைத்து கலாச்சாரத்தையும் தாண்டியவர்கள்.

மேற்கண்ட விஷயங்களை மக்கள் விரும்புகிறார்கள் என தெரிந்துகொண்டு சிலர் போலியாக இந்த வேடம் அணிந்து உலா வருவார்கள். அவர்களிடம் இந்த விஷயங்களை கண்டு மக்களும் மயங்கி தங்கள் அறியாமையால் வீழ்வார்கள். இந்த டாப் 15 விஷயங்களால் எத்தகைய முட்டாள்தனமும் மோசடியான விஷயங்கள் சமூகத்தில் நடந்திருக்கிறது என நாளை பட்டியலிடுகிறேன்.

நான் பல ஆன்மீகவாதிகளுடன் பழக்கம் உள்ளவன். அதனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்றும் வேறு ஒரு நாள் கூறுகிறேன். உங்களுக்கு தெரிந்துக்கொள்ள விருப்பம் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.

Thursday, October 8, 2009

மந்திர சக்தியும் - ஜெயமினி சூத்திரமும்

ப்ரணவ பீடம் என்ற அமைப்பு சென்ற வாரம் இரு குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது.

மந்திர சக்தி என்ற ஒலி குறுந்தகடு :

வேத மந்திரங்களை சரியான முறையில் உச்சரிக்கவும், தியானத்திற்கு உதவும் பொருட்டும் இந்த குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது.

மந்திரம் என்பது இறையாற்றலின் ஒலிவடிவம். இந்த வலைதளத்தில் முன்பே மந்திர சக்தி பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது.

இதில் இருக்கும் மந்திர ஒலியை கேட்க இங்கே அழுத்தவும்.
Maha Mmirthaynjai ...

அளவு : ஒரு மணி நேரம்
விலை : 110.00 ரூபாய்


ஜெயமினி சூத்திரம் :


ஒலி,ஒளி தகடாக வெளிவந்திருக்கும் ஜெயமினி சூத்திரம் ஒரு ஜோதிட யுக்தியாகும். ஜோதிட முறையில் ஜெயமினி என்ற ரிஷியால் கண்டறியபட்ட இந்த முறை உலகில் மறையும் தருவாயில் இருக்கிறது. ப்ரணவ பீடம் சார்ப்பில் இம்முறை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியே இந்த குறுந்தகடு.
ஜெயமினி ஜோதிடத்தை தெரிந்து கொள்ள அடிப்படை ஜோதிட அறிவு அவசியம்.

ஜெயமினி ஜோதிடத்தை ஸ்வாமி ஓம்கார் சுவாரசியமாக விளக்கும் ஒரு காட்சி இதோ..



அளவு : 110 நிமிடங்கள்
விலை : 260.00 ரூபாய்


-----------------------------------------------------------------------------------

மேற்கண்ட குறுந்தகடுகளை தபாலில் பெற தொடர்புகொள்ளவும் :
admin@pranavapeetam.org.
தொலைபேசி எண் : 91 99 44 2 333 55.

Tuesday, October 6, 2009

வேட்டைக்காரன் பாடல்களில் ஆன்மீக அத்துமீறல்

சென்ற வாரம் வாடகைக் காரில் ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். டிரைவர் ஒரு இசை தட்டை ஓடவிட்டார். அதில் இருக்கும் பாடலை கேட்டவுடன் என் நிலை எப்படி இருந்தது என இந்த கட்டுரையின் கடைசி வரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

தற்சமயம் சினிமா உலகில் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் ஆன்மீக அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள். சிலர் ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமல் அசிங்கபடுத்துகிறார்கள்.

இசை என்பது இறைவனின் வடிவம். நாதமே கடவுளின் சத்சொரூபம் என்கிறது அனைத்து புனித நூல்களும். நாதத்தில் லயம் ஆகும்பொழுது இறைவனின் நிலையை சில ஷணங்கள் உணர முடியும் என்பது உணர்ந்தவர்களுக்கு தெரியும். முக்கியமாக திரை இசை இந்த வரம்புகளை மீறி செயல்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

வேட்டைக்காரன் என்ற திரைப்படம் நடிகர் விஜய் என்பவர் நடித்து வெளிவர இருக்கிறது. இத்திரைப்படத்தின் இசையை விஜய் ஆண்டனி என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் 'நக்கமுக்க' என்ற தெய்வீக இசையை உலகுக்கு அளித்தவர். படத்தின் நாயகன் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த திரைப்படத்தில் புலி உறுமுது என்று ஒரு பாடல் இருக்கிறது. தன் அரசியல் பிரவேசத்திற்காவும், இலங்கை தமிழருக்காவும் கருத்தில் ஏற்படுத்தபட்ட பாடல் என நினைக்கிறேன். இப்பாடலில் வேத மந்திரங்கள் அத்துமீறி உபயோகப்படுத்தபட்டுள்ளது. எத்தனையோ விஷயங்கள் திரையிசையில் பயன்படுத்த இருக்க இவர்களுக்கு ஒரு தனிமனித துதிபாடலுக்கு வேதமந்திரம் தான் கிடைத்ததா?

அஷத்தோமா சத்க்ரமய
தமசோமா ஜோதிர்கமய
மிர்த்யோமா அமிர்தம் கமய

என்ற வேதமந்திரத்தின் ஆழமும் அர்த்தமும் அந்த இருவருக்கும் தெரியுமா?
இதை கூட கல்நெஞ்சுடன் பொருத்துக்கொள்ளலாம்..பாடலின் ஆரம்பத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளை கத்திவிட்டு ஓம் ஷாந்தி ஓம்ஷாந்தி என கூறி இவர்களின் உளரலையும் வேத மந்திரமாக்க முயற்சி செய்வது கண்டனத்திற்கு உரியது.

திரை இசையில் தமிழ் மொழியை கொன்று குழிதோண்டி மூடியவர்களுக்கு கிடைத்த அடுத்த பலி வேதமந்திரம் என நினைக்கிறேன்.

சில திரைப்படத்தில் மந்திரம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். அந்நியன் என்ற படத்தில் கருட புராணத்தின் வரிகளையும், உன்னை போல் ஒருவன் படத்தில் பகவத் கீதையின் வரிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். (இந்த கட்டுரைக்கு தகவல் திரட்டும் பொழுது தெரிந்து கொண்டேன். மேற்கண்ட கண்றாவியை பார்க்கவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்..)

பகவத் கீதை ஒரு சமயம் சார்ந்த மத நூல். உங்களுக்கு நான் கூறுவது ஆதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். அதுதான் உண்மை. கிருஸ்துவத்தில் பைபிள், இஸ்லாமில் குரான் போல பகவத்கீதை 'இந்து இஸம்' உருவாக்கியவர்களால் பயன்படுத்தபடும் நூல்.

வேதசாஸ்திரத்தின் மெய்ஞான கருத்துக்கள் அதில் இருப்பதால் பகவத் கீதையை நாம் வணங்கலாம். அனைத்து மதங்களிலும் வேத சாஸ்திரம் பொதிந்திருக்கிறது.

நான்கு வேதமும், உபநிஷத்களும் ஒரு மதம் சார்ந்தது அல்ல. இதை உருவாக்கியவர்கள் கிடையாது. அவை சக்தியின் குறியீடுகள், இறைவனின் அருள் ஆற்றல்கள் அதை திரையிசையில் பயன்படுத்துவது மிக கொடூரமான செயல்.

இந்த படத்தின் நாயகனும் இசையமைப்பாளரும் தெரியாமல் பயன்படுத்தினார்கள் என கூறமுடியாது. காரணம் இருவரும் ஒரு யோக கழகத்தில் யோகம் பயின்றவர்கள். அந்த பயிற்சில் கண்டிப்பாக இந்த வேத மந்திரத்தை கூறி இருப்பார்கள்.

வேத சாஸ்திரம் கூட வேண்டம் கிருஸ்துவமோ,இஸ்லாமோ சார்ந்த மத வாசகங்களை இவர்களின் குத்து பாடலில் சேர்த்தால் இவர்கள் நிலை என்ன?

வேத சாஸ்திரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்கும் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்துவார்கள் போல இருக்கிறது. நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது. வேதசாஸ்திரமும் தன்னை மனிதன் காப்பான் என காத்திருப்பதில்லை. சுருங்கச்சொன்னால் வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்.


இந்த பாடலை கேட்டவுடன் எப்படி இருந்தது என கேட்கிறீர்களா? அந்த திரைப்படத்தின் அடுத்த பாடல் வரியை போல இருந்தது...

என் உச்சி மண்டையில சுர்ர்ங்குது..............

Monday, October 5, 2009

உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..! - பகுதி 2

தங்கம் என்ற உலோகம் தற்சமயம் மக்களின் வாழ்வாதரத்தை முடிவு செய்யும் ஒரு விஷயமாகவிட்டது. ஒருவரிடம் இருக்கும் தங்கம் அவரின் அந்தஸ்த்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டின் பொருளாதர நிலையும் இத்துடன் மறைமுகமாக இணைந்து உள்ளது. இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே அப்படி இருக்கிறது.

ஐநூறு வருடங்களுக்கு முன் தங்கம் மிக மலிவான விஷயமாக பாரதத்தில் இருந்தது. மலிவு என்பது பொருள் நிலையில் அல்ல. பயன்பாட்டு நிலையில் எனலாம். ஆபரணங்கள் உடலில் நகைக்கடை விளம்பர மாடல் போல மக்கள் அணிந்து உலா வந்தார்கள். இன்றும் கூட ராஜஸ்தான் கிராமிய மக்களிடையே இப்பழக்கம் உண்டு. ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்கள் வடமாநில கோவிலை கொள்ளை கொள்ள வரும்பொழுது அந்த கோவிலில் இருக்கும் தங்கத்தை எடுத்த செல்ல தயாராக ஒரு குதிரை படையை கொண்டுவருவார்கள். அதாவது அவர்களுக்கு நிச்சயமாக தெரியும் பல டன் எடைகொண்ட தங்கம் கிடைக்கும் என்பது.

(கி.பி 1020) சோமநாதர் கோவிலை கஜினி கொள்ளைகொள்ளும் பொழுது எத்தனை முறை கொள்ளை கொண்டாலும் அந்த நூற்றாண்டில் நம் மதிப்பில் பத்து கோடிக்கு குறைவில்லாமல் கோவிலில் கொள்ளையடித்தான். வரலாறு சொல்லுவது போல இவர்கள் இஸ்லாமியர்கள் என நான் சொல்ல மாட்டேன். இஸ்லாமை அவர்கள் சரியாக புரிந்துகொண்டால் இவ்வாறு செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார் கஜினி.

காசிவிஸ்வநாதர் கோவிலையும் சோமநாத் கோவிலையும் செங்கல் செங்கலாக உருவி எடுத்து சென்றார்கள். காரணம் செங்கலின் மையப்பகுதி தங்கக்கட்டிகளும் மேல் பகுதி செங்கல்லிலும் செய்து அதன் மேல் தங்ககவசம் போடப்பட்டிருந்தது. கோவிலையே தங்கமாக கட்டவில்லை மற்றபடி தங்கத்தில் அப்படி இழைக்கப்பட்டிருந்தது.

சக்திவாயந்த இந்த இடங்களை அரேபிய, ஆப்கானிஸ்தான் கொள்ளையர்கள் தகர்த்ததற்கு ப்ராயச்சித்தமாக அனேக சூஃபி ஞானிகள் இந்தியாவிற்கு வந்து அந்த இடங்களில் ப்ரார்த்தனை செய்து அடக்கமானார்கள். கொள்ளையர்களை பதிவு செய்தது போல சூஃபி ஞானிகள் வரலாறு பதிவு செய்யவில்லை.

பாரதத்தின் வடகிழக்கு நாடுகள் மலை மற்றும் வரண்ட பாலை பூமியாக இருந்ததால் தங்கம் என்பது அவர்களுக்கு ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. நம் மக்களுக்கு தங்கம் கோவிலில் போடும் காணிக்கையாகவும், நாணயம் பயன்படுத்தும் பொருளாகவும் இருந்தது. இங்கே நாம் கவனிக்கவேண்டும். எந்த பொருள் மலிவாகவும் லகுவாகவும் கிடைக்கிறதோ அப்பொருளிலேயே நாம் நாணயங்கள் செய்வோம். தற்காலத்தில் கரண்ஸி பேப்பரிலும், துருப்பிடிக்காத இரும்பு மலிவக கிடைப்பதால் பயன்படுத்துவதை போல அந்தகாலத்தில் தங்கம் வெள்ளி என்பது மலிவானதாக இருந்தது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆன்மீக ரீதியாகவும் கையாளப்பட்டதால் வாழ்க்கைதரம் மேம்பட நாணயங்கள் தங்கமாக இருந்தது. நமக்கு மலிவானது பிறருக்கு மிகவும் உயர்ந்ததாக இருக்கலாம். அதனால் தான் பிறநாட்டினருக்கு தங்கம் ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. ஒரு வேடிக்கை கதை ஒன்று பார்ப்போம்.

ஒரு வியாபாரி பொருட்களை கப்பலில் கொண்டு சென்று பல தேசங்களில் விற்பவன். ஒரு நாள் பயணமாகும் பொழுது புயலின் காரணமாக கப்பல் திசைமாறி வேறு ஒரு தீவில் ஒதுங்கியது. அங்கே இதுவரை பிற நாட்டினரை பார்க்காத மக்கள் வாழ்ந்துவந்தனர். கப்பல் என்ற ஒரு வாகனத்தையும், வியாபாரியின் உடை ஆகியவை அவர்களுக்கு வித்தியாசமாகப்பட்டது. தான் கொண்டு சென்ற சரக்குகளை அவர்களுக்கு விற்றுவிட்டு செல்லலாம் என எண்ணி அவர்களிடம் தான் கொண்டு வந்த பொருட்களை காட்டினான்.

அதில் ஒரு பொருள் தீவு மக்களை கவர்ந்தது. தீவின் அரசனிடம் வியாபாரியை கொண்டு சென்றார்கள். மக்கள் அரசனிடம் வியாபரியையும் அவனின் நவீன பொருளையும் அறிமுகப்படுத்தினர். அதன் தோலை நீக்கினால் கண்களில் கண்ணீர்வருகிறதாம். அப்படிபட்ட உணவு பொருளை வியாபாரி கொண்டு வந்திருப்பதாக சொன்னார்கள். புரிந்திருக்குமே. ஆம் அது வெங்காயம்.

அரசன் வியாபாரியின் பொருளுக்கு ஈடாக பல வைரம் வைடூரியம் தங்கம் என வெங்காயத்திற்கு எடைக்கு எடை கொடுத்தான். வியாபாரியும் மன நிறைவுடன் தன் நாடு திரும்பினான்.

எப்பொழுதும் கொஞ்சம் பணத்துடன் வரும் வியாபாரி அதிக செல்வத்துடன் வந்திருப்பதன் மாயம் புரியாமல் போட்டி வியாபாரிகள் முழித்தனர். ரகசிய தூதுவர்கள் மூலம் விஷயமும் தெரிந்து கொண்டான் ஒரு போட்டி வியாபாரி. தானும் கப்பலில் புதிய காய்கறிகள் தானியத்துடன் அந்த தீவு நோக்கி சென்றான்.

மக்கள் இவனையும் அரசன் முன் கொண்டு சென்றார்கள். அவன் கொண்டு வந்த பொருட்களை பார்த்த அரசன் மகிழ்ச்சி அடைந்தான். வியாபாரி கொண்டு வந்த பொருளுக்கு சமமான எடையில் தன்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத பொருளான வெங்காயத்தை அவனுக்கு பரிசாக அளித்தான்.


ஒருவருக்கு எளிமையாக கிடைப்பது பிறருக்கு அதிசயமானதாக இருக்கலாம். நம் பாரதத்தில் ஆன்மீகம் எளிமையாக கிடைக்கிறது. அதனால் மேற்கு நாட்டினர் அதை பெரிய விஷயமாக பார்க்கிறார்கள். உள்ளூர்காரர்களுக்கு அது வெங்காயம் ..!

உலகின் வல்லரசு நாடுகளின் நாணய மதிப்பு தங்கத்துடன் மறைமுகமாக இணைந்துள்ளதால் புதிதாக தங்க சுரங்கம் உருவாக பல நாடுகள் எதிர்ப்புடன் இருக்கிறார்கள். தங்க சுரங்கம் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தேவை நிறைவடையும். தேவை அதிகரித்தால்தானே விலை ஏற்ற முடியும்? (supply and demand) அதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என பயப்படும் வல்லரசுகள் புதிய சுரங்கம் என்பதை கானல் நீராக வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனுமதித்து ஒரு இருபது முப்பது சுரங்கங்கள் ஏற்பட்டால் நாம் கோக்கும் பெப்ஸியும் தங்க கேனில் குடிக்கலாம்.

தங்கம் எப்படி நம் சாஸ்திரம் கலாச்சாரம் சார்ந்ததோ அதுக்கு நேர் எதிரான சமாச்சாரம் ராசிகற்கள். தொலைக்காட்சி சேனலில் கூவி கூவி விற்கப்படும் ராசிகற்கள் நம் சாஸ்திரம் சார்ந்தவை அல்ல. அரேபியர்கள் தான் ராசிக்கற்களை நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். யுனானி மருத்துவ முறையில் படிகங்கள் (crystals), படிகாரங்கள் மற்றும் மலை உப்பு கொண்டு செய்யும் மருத்துவ பிரிவு உண்டு.

குறிப்பிட்ட நிற கற்களை அணிந்தால் மன நிலையில் ஏற்றம் மற்றும் வியாதி குணம் என துவங்கிய இப்பழக்கம் உங்கள் ராசியை கேட்டு விற்கும் அளவுக்கு வியாபாரம் ஆகிவிட்டது. வரும் நூற்றாண்டில் குரோசின் மாத்திரை சாப்பிட்டால் செல்வந்தர் ஆகலாம் என சிலர் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் தற்சமயம் யுனானி மருந்தான ரத்தின கற்களை அப்படித்தான் பயன்படுத்துகிறோம். இன்றும் கூட சில தர்க்காவின் வாசலில் கற்களை விற்கும் ஆட்களை பார்க்க முடியும். ராசிகற்கள் இஸ்லாமுக்கு எதிராக இருந்தாலும் சிலர் தங்கள் மனநிறைவுக்கு வாங்கி அணிவதுண்டு.ரத்தின கற்கள் அரபியர் கொண்டுவந்தார்கள் என்பதால் கண்மூடித்தனமாக மறுக்கவில்லை.


நவ ரத்தின கற்களுக்கு ஆற்றல் இல்லையா ? உலகில் இருக்கும் அனைத்து பொருட்களையும் நவகிரகங்கள் தொடர்பு கொள்ளும். நவ தானியம், நவரசம் என சொல்லிக்கொண்டே போகலாம். குரு என்ற கிரகத்திற்கு மஞ்சள் புஷ்பராகம் அணியுங்கள் பலன் கிடைக்கும் என்றால் குரு குறிக்கும் கொண்டைகடலையை உண்டாலும் அதே ஆற்றல் கிடைக்கவேண்டும். காரணம் இரண்டு பொருளும் குரு என்ற கிரகத்தால் உருவானவை.

படிகங்கள் (Crysrals ) ஆற்றலை எதிரொலிக்க செய்யும் வல்லமை கொண்டது. உங்களிடம் எத்தகைய ஆற்றல் உண்டோ அதை பன்மடங்காக எதிரொலிக்கும். இயற்பியல் ஆய்வகங்களில் முப்பெட்டகம்(prism) எப்படி ஒளியை பிரிக்குமோ அதுபோல நவரத்தின கற்கள் ஆற்றலை பிரித்து எதிரொளிக்க செய்யும். அதனால் கோவில்களின் கருவரையில் இறைவனின் விக்ரஹத்தில் அதிகமாக கற்களை பயன்படுத்தினார்கள். கருவறையில் இருக்கும் இறையாற்றல் பன்மடங்காக எதிரொலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் ஒரு முட்டாள் என்றால் நான் ராசிக்கற்களை வாங்கி என் முட்டாள் தனத்தை பன்மடங்காக பெருக்கி என்ன செய்ய போகிறேன்? ஆற்றலே இல்லாத மனிதன் ராசிக்கல் அணிந்து எதை பெருக்க போகிறான்? ராசிக்கற்கள் மிகவும் சக்திவாய்ந்த இடங்களில் இருக்கட்டும். அங்கே சென்று வழிபடுவதாலோ அல்லது நாம் சில மணிகள் செலவிடுவதாலோ அந்த ஆற்றலை நாம் பெற்றுகொள்ளுவோம். அதைவிடுத்து ராசிக்கல் மோதிரம் என்ற பெயரில் வேலைசெய்யாத ஒருவிஷயத்திற்கு அடிமையாக வேண்டாம். நம் சாஸ்திரம் ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் நவரத்தின கற்களை போடசொல்லவில்லை. ஜோதிடத்தின் பெயர் சொல்லி விற்பவர்கள் சாஸ்திரத்திற்கு எதிரானவர்களே...!

வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் சதாம் உசேன் தங்கத்தில் கழிவறை வைத்திருந்தாராம், நம் ஊரில் சாதம் சாப்பிடும் உலக நாதர்கள் ராசிக்கற்களை வாங்கிகொண்டிருக்கிறார்கள்.

உலோகத்தில் வெளிச்சூழலுக்கு வினைபுரியாத சிறப்பு தங்கத்திற்கு உண்டு. உலகத்தின் சூழலுக்கு உருமாறாத தங்கமாக இருப்பது என்பது ஒரு வித யோக நிலை. அகத்தே நீங்கள் தங்கமானால் புறத்தங்கம் தகரமே...!

Thursday, October 1, 2009

உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..!

நம் பாரத தேசம் பல நூற்றாண்டுகளாக செழிப்பான ஒரு நாடு. இங்கே விளையும் வாசனை பொருட்களுக்காகவும், ஆபரணங்களுக்காகவும் பல நாட்டினர் படையெடுத்தனர் என்பது வரலாறு. ஒரு நாட்டை அடிமையாக்கும் மனோபாவத்தில் படைஎடுத்தல் என்பதை தாண்டி ஒரு நாட்டின் வளத்திற்காக படை எடுப்பது என்பது முன்காலத்தில் இந்தியாவில் மட்டுமே புதிய விஷயமாக இருந்தது. தற்காலத்தில் எண்ணெய் கிணறு என்னும் வளத்திற்காக சில நாடுகளை அடிமைப்படுத்த வல்லரசு நாடுகள் விரும்புகிறதே அது போல பாரதம் பிறருக்கு ஒரு வளமான பூமியாக தெரிந்தது.

தட்பவெப்பம், பயிர்வகைகள், கலாச்சாரம், மெய்ஞான அறிவு மற்றும் பொருளாதாரம் என பல விஷயங்கள் பாரதம் முன்னிலையில் இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கமுடியாது. உலக படத்தில் பூமத்திய ரேகை சார்ந்து அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் கலாச்சரத்தில் பிற பகுதிகளை காட்டிலும் முன்னேறி இருந்தது. உலகவரைபடத்தில் இடமிருந்து வலமாக எடுத்துக்கொண்டால் மெக்சிக்கோ, எகிப்து, அரேபியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை கலாச்சார முன்னேற்றம் கொண்ட பிரதேசமாக இருந்தது.

கலாச்சார முன்னேற்றம் என்றவுடன் நவநாகரீக உடை அணிதலையோ , சமைக்கபட்ட பல்வகை உணவுகள் உண்பதையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. மெய்யறிவுடன் தங்கள் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தன்மையும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவு என்பதையே கலாச்சார முன்னேற்றம் என்கிறேன். வேளாண்மை மூலம் தானிய உற்பத்தி, உலோக பயன்பாடு மற்றும் கட்டிடக்கலை ஆகியவை தான் கலாச்சாரத்தின் உண்மையான குறியீடுகள்.

பூமத்திய ரேகை சார்ந்த நிலப்பரப்புகளில் கலாச்சார முன்னேற்றம் இருந்தாலும் அதில் மிக முன்னேறிய கலாச்சாரம் என்பது பாரதத்தில் மட்டுமே இருந்தது. வேளாண்மையில் புதிய நுட்பங்களை கண்டறிந்து பல்வேறு உணவு முறைகளை கண்டறிவது, உலோகப் பயன்பாட்டில் மிகவும் அறிவியல் அறிவுடன் செயல்படுவது என பாரத தேசத்தினர் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தனர்.

உணவு முறையில் சமச்சீர் உணவு முறையும் , பல்வேறு உடல் நிலைக்கு ஏற்ப உணவு அமைப்பையும் நம் மக்கள் பின்பற்றிவந்தனர். அதை வேறு ஒரு நாள் விளக்கமாக பார்ப்போம். உலோகத்தில் அனைத்து வகையான உலோகமும் நம் மண்ணில் கிடைத்தவண்ணம் இருந்தது. ஒரு உலோகம் நம் உடலில் எத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.

நம் உடலில் இருக்கும் நாடியின் செயலையும் நவக்கிரகங்களின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு உலோகத்தை பயன்படுத்துவது என்பதை கண்டறிந்தார்கள். தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை மட்டுமே ஆபரணமாக பயன்படுத்தக் கூடிய உலோகம் என்பது அவர்களின் கருத்து.

அறிவியல் ரீதியாக மூலக்கூறு அட்டவணையில் அதிக புள்ளிகள் கொண்டது தங்கம் மற்றும் வெள்ளி என்பது அறிந்ததே. தங்கமும் வெள்ளியும் அதிவேக கடத்திகள். ஆற்றலை கடத்தும் திறனில் இவற்றுக்கு தான் முன்னுரிமை. அதற்காக அறிவியல் சார்ந்து பாரதத்தில் பயன்படுத்தினார்கள் என கூறி பாரத கலாச்சாரத்தின் தரத்தை நான் குறைக்க விரும்பவில்லை. பாரத மக்கள் பயன்படுத்தியது அறிவியலையும் தாண்டிய மெய்யறிவு.

நம் கலாச்சாரத்தின் படி எப்படி உலோகங்களை பயன்படுத்தவேண்டும் என பார்ப்போம். உடலில் தங்கத்தை இடுப்புவரை மட்டுமே அணிய வேண்டும். வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். விரல்களில் வெள்ளி அணியக்கூடாது.

வெள்ளி என்ற உலோகம் சுக்கிரன் என்ற கிரகத்தை குறிக்கிறது. உண்மையில் சுக்கிரன் கிரகத்தில் வெள்ளித் தாதுக்கள் அதிகம். சுக்கிரன் கிரகத்தையே தமிழில் வெள்ளி என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? சுக்கிரன் காம இச்சைகளை கொடுக்கும் கிரகம். அதனால் வெள்ளி உலோகம் இடுப்பு அரைஞாண் மற்றும் கொலுசு ஆகியவற்றிக்கு பயன்படுத்தினார்கள். இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு.

தங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்கம் மிகமுக்கியமானது.

உலோகத்தில் தங்கத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள். சுரங்கங்களில் தங்கம் அதிகமாக கிடைத்ததும் ஒரு காரணம். மூளை திறன் அதிகரிக்க நம் அரசர்கள் தங்கத்தை தலையில் கிரீடமாக அணிந்தனர். வேறு கலாச்சார நாடுகளில் தங்கத்தை கிரீடமாக அணிவது வழக்கத்தில் இல்லை என்பதை அறிக. செம்பு ஆபரண தங்கத்துடன் கலக்கப்பயன்பட்டதால் செம்பும் அதிகமாக பயன்பட்டது என கூறலாம்.

ஒரு மனித உடலில் தங்கம் முதன் முதலில் தொடர்பு கொள்ளும் நாள் மிக முக்கியமானது. மனித உடலில் இயற்கையாகவே தங்க தாது உண்டு. அத்துடன் தங்க ஆபரணம் இணைந்து உடலின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தங்கம் அணிவித்தல் என்பது விழாவாகவே கொண்டாடினார்கள். நாம் இப்பொழுதும் காது குத்தும் வைபவமாக எளிய நிலையில் கொண்டாடுகிறோம்.

நம் உடலில் இடா நாடி மற்றும் பிங்கள நாடிகள் இடவலமாக இருப்பது முன்பு பார்த்தோம். ஆபரணம் அணிவதில் இந்த நாடிகளை சமநிலை ஆக்குவதற்குத்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நாடிகள் ஆன்மீக சக்தியை கடத்தும் புள்ளிகள் என்பதால் நாடிகள் இணையும் இடத்தில் ஆபரணம் அணிய வேண்டும்.

மனித உடல் என்பது ஒருவித கட்டமைப்பால் உண்டானது. நாடிகளின் சலனத்தை அவைகள் ஏற்படுத்துகிறது. நம் உடலில் இடப்பக்கம் உள்ள நாடிகள் வலப்பக்க செயலையும், வலபக்க நாடிகள் இடபக்க செயலையும் செய்யும். அதனால் உடலில் நாடிகளின் சமநிலை தவறாமல் இருக்க சம எடை கொண்ட ஆபரணங்களை இருபக்கமும் அணிந்தார்கள். இரண்டாக இருக்கும் உடல் பகுதிகளில் ஒன்றில் மட்டும் ஆபரணம் போடுவதால் நாடி சமநிலை தவறும். உதாரணமாக காது, மூக்கு, கைகள் மற்றும் கால் பகுதியில் ஆபரணம் அணியும் பொழுது இரு உறுப்புகளிலும் அணிய வேண்டும். இரு உறுப்பில் அணியும் ஆபரணம் சமமான எடையுடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

ஆபரணத்தின் இத்தகைய முக்கியத்துவம் உணராமலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆபரண வடிவமைப்பவர்கள் கூட தங்களின் பாரம்பரிய வடிவமைப்பால் கொலுசு, வளையல் போன்றவற்ற ஒரே எடை மற்றும் வடிவில் தயாரிப்பார்கள். வடிவம் (டிஸைன்) மாறினால் எடையில் வித்தியாசம் ஏற்படும் என்பது ஒரு முக்கிய காரணம்.

நாடிகளின் சலனம் ஏற்படாமல் சமநிலையில் இருக்கவும், அலங்காரத்திற்காகவும் ஆபரணம் பயன்படுத்தபட்டது.
எப்படி நம்மிடையே தங்கத்தின் பயன்பாடு குறைய துவங்கியது? பாரதத்தில் தங்கத்தால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் என்ன? நம் கலாச்சாரத்தில் நவரத்தின கற்களின் முக்கியத்துவம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதிலை அடுத்த பகுதியில் பார்ப்போமா ?
---------------------------------------
டிஸ்கி 1 : உங்களை பற்றி ரகசியம் என்ற தலைப்பில் ஏதோ எழுதி இருக்கிறேன் என்கிறீர்களா?.. நீங்கள் என் தங்கம் அல்லவா?

டிஸ்கி 2 : வர வர உங்கள் பதிவுகளில் பகடியே அதிகம் என்ற சொக்க தங்கங்களுக்கு இந்த சீரியஸான பதிவு சமர்ப்பணம்