Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 30, 2012

குழலினிது யாழினிது - பகுதி 5 +18


நேற்று நாளிதழ்களில் வந்த செய்தி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கருத்தரிப்பு மருத்துவமனையில் ஒரே நாளில் 26 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என்றதை படிக்கும் பொழுது மிகவும் வேதனை அடைந்தேன்.

செயற்கை கரு உற்பத்தி முறையில் பல குழந்தைகள் பிறக்கிறது என்பதை படத்துடன் வெளியிட்டு அதை கொண்டாடும் மனநிலையில் நாம் இருக்கிறோம். இத்தகவலை கண்டவுடன் நாம் சிந்திக்க வேண்டியது என்ன தெரியுமா?

ஒரே நாளில் இத்தனை சோதனை குழாய் குழந்தைகள் என்றால் மாதத்திற்கு எத்தனை..மேலும் எத்தனை தம்பதிகள் மலட்டுத்தன்மையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து இத்தனை குழந்தைகள் பிறப்பதை ஒரு அதிசயமாக தினசரியில் போடுவது நல்லதா?

இவை ஒரு புறம் இருக்க சோதனைக்குழாய் குழந்தைகள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பார்த்தால், முதலில் மூன்று கருக்களை கருப்பையில் வைத்து சோதனை செய்வார்கள். அதில் ஒரு கருவை கலைத்து, இரு கருக்களை வளரவிடுவார்கள். கருப்பை இரு கருக்களை சுமக்கும் திறன் இல்லாமல் போனால் மற்றொன்றையும் அழித்துவிடுவார்கள். மேற்கண்ட படத்தில் உள்ள 26 குழந்தைகளில் 7 குழந்தைகள் இரட்டை குழந்தைகள் ஆகும். மீதி 12 குழந்தைகள் தங்களுடன் உருவான இரட்டை கருக்களை இழந்து பிறந்தவைகள். 

தங்கள் கருத்தரிப்பு மையத்திற்கு வருபவர்கள் ஏமாறக்கூடாது என்பதாலும், தாங்கள் அதிக குழந்தை பிறப்பு விகிதத்தை கொடுத்தோம் என்ற வெற்றியை கூறுவதற்கும் சில மருத்துவர்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். மேலும் நான் கேள்விப்பட்ட ஒரு அதிர்ச்சியான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். தம்பதியினரின்  விந்து மற்றும் கருமுட்டை பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை பலப்படுத்தாமல் வேறு ஒரு நபரின் விந்து மற்றும் கருமுட்டையை பயன்படுத்துகிறார்கள். கருத்தரிப்பு மையத்தில் 50%க்கு மேல் பிறக்கும் குழந்தைகள் பிறப்பு தன்மை இதுதான். இந்த உண்மை தம்பதிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. கருத்தரிப்பு மையத்தின் வெற்றிக்காகவும் பணத்திற்காகவும் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை...!

சரி நம்ம விஷயத்திற்கு வருவோம்....

உணவு பழக்கத்தை பற்றி நான் குறிப்பிட்டதும் பலர் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டார்கள். 

தினமும் சாப்பிடும் உணவிலேயே நாங்கள் எத்தனை அஜாக்கிரதையாக இருந்திருக்கிறோம் என தங்களின் கருத்துக்களை கூறினார்கள்.

உடலில் ரசாயனம் சேர விடாமல் மிகத்தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்பதை புரிந்துகொண்டால் இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என விளக்கும்.

மேலும் நம் உடைகளை மேற்கத்திய பாணியில் உடலுடன் மிகவும் இறுக்கமாக அணிகிறோம். ஆண்களும் பெண்களும் மிகவும் தடிமனான ஜீன்ஸ் வகை உடைகளை இடுப்பு சார்ந்த ப்ரதேசங்களில் இறுக்கமாக அணிவதால் உடலில் வெப்ப நிலை அதிகமாகி உடல் சமநிலை தவறுகிறது.

நம் பாரம்பரிய முறைப்படி திருமணமான தம்பதிகள் அணியும் உடையை கவனமாக பாருங்கள். வேஷ்டியும் சேலையும் ஒரு வித தளர்வு நிலையை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் நம்மில் பலர் நவீன நாகரீகத்தில் இவ்வாறு அணியாமல் குளிர் பிரதேச மக்கள் அணியும் 

இறுக்கமான உடையை அணிந்து வலம்வருகிறோம். குறைந்தபட்சம் வீட்டிலாவது இயல்பான நம் கலாச்சார உடை அணிவது அவசியம். கலாச்சார உடை என்றவுடன் ஏதோ நான் கலாச்சார காவலன் என நினைத்துவிடாதீர்கள். நீங்கள் மேற்கத்திய நாட்டில் வாழ்ந்தால் அத்தகைய உடை அணியுங்கள், இந்தியாவில் வாழ்ந்தால் அதற்கு தக்க உடை அணியுங்கள் என்கிறேன்.

உடையை பற்றி பேசிய நாம் பழக்க வழக்கத்தை பற்றியும் பேசலாம். ப்ளாஸ்டிக் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. ப்ளாஸ்டிக் எந்த வயதிலிருந்து பயன்படுத்துகிறோம் நாம் தெரியுமா? 

மிகச்சிறிய குழந்தையாக இருந்த பொழுது ப்ளாஸ்டிக் பொம்மையை கடித்து சுவைக்க ஆரம்பித்து இப்பொழுது எது என்றாலும் ப்ளாஸ்டிக் தான். நம் வீட்டில் இருக்கும் பொருட்களில் ப்ளாஸ்டிக் 

உள்ள பொருளை தூக்கி வீச வேண்டும் என விரும்பினால் 90% பொருட்கள் வீச வேண்டி வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? ப்ளாஸ்டிக் பொருட்கள் குழந்தை இன்மையை கொடுக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று.

மேலும் ரெப்ரிஜ்ரேட்டர், மைக்ரோவேவ் அவன் போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் உடல் நலத்தில் மலட்டுத்தன்மை அதிகரிக்கும். 

நம் உடல் டாக்ஸின் (நச்சு) பொருட்களால் நிரப்பப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து அவற்றை இனி மேல் உடலில் சேராதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை தெய்வத்திற்கு சமம் என கூறுகிறார்கள். அப்படிப்பட்ட தெய்வம் வந்து வசிக்கும் நம் உடல் என்ற கோவில் கழிவுகள் இன்றி தூய்மையாக இருக்க வேண்டும் அல்லவா?

நச்சுகளும் கழிவுகளும் இல்லாமல் தூய்மையான உடலை பெற நம் உணவு, உடை மற்றும் பழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

இனிமேல் உடலில் சேரும் நச்சுக்களை தடுக்க உணவு உடையில் மாற்றம் செய்யலாம்.இத்தனை நாள் சேர்ந்த நச்சுக்களை (டாக்ஸினை) எப்படி வெளியேற்றுவது?

இதற்கு தீர்வு யோக பயிற்சியும் யோக க்ரியைகளும் தான்...!

உடல் வளைவு கொண்ட ஆசனம், சக்தி உடலை மேம்படுத்தும் ப்ராணாயாமம், மன உடலையும் அறிவுடலையும் தளர்வாக்கும் ஆழ்நிலை தியானம் என யோகத்தில் ஈடுபட்டு நான்கு உடலையும் தூய்மைப்படுத்துவது மட்டுமல்ல எதிர்காலத்தில் நச்சுக்கள் சேராமலும் தடுக்கலாம்.

ஸ்வாமி யோகப்பயிற்சியா?... யோகப்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைபாடு வரும்னு சொல்றாங்களே.. தாம்பத்திய உறவில் நாட்டம் போயிடுமே... ஒரு சினிமாவுல கூட அப்படி காண்பிச்சாங்களே அப்புறம் எப்படி குழந்தை பிறக்கும்-னு உங்களுக்கு சந்தேகமா?

அடுத்தப்பகுதியில ஒரு மகிழ்ச்சியான செய்தியோட இதை விளக்கறேன்.

(கரு உருவாகும்)

Wednesday, May 16, 2012

குழலினிது யாழினிது - பகுதி 4 +18


நம் உடலின் சமநிலை தவறுவதற்கு காரணம் நாம் தான் என கூறினேன் அல்லவா? அது எப்படி என காண்போம்.

ஊன் உடல் என்பது நம் நேரடியாக தொடர்புகொள்ளதக்க வகையில் இருக்கிறது. நம் உணவு மற்றும் உடை பழக்கம் ஆகியவை ஊன் உடம்பை நேரடியாக தாக்குகிறது.

பிறப்புறுப்பு மற்றும் கருப்பையின் செயல்பாடுகள் இயந்திர கருவிபோல செயல்படுவதில்லை. இவை செயல்பட மனம், பிராணன் மற்றும் அறிவு உடல் முக்கிய பங்கை வகிக்கிறது.

நவீன மருத்துவத்தில் ஒருவரின் உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு என்பதை கண்டறிகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஏன் அது ஏற்றத்தாழ்வு அடைந்தது? அச்சுரபிகளை ஏன் இயல்பாக செயல்பட வைக்க முடியாதா என்ற ஆய்வுக்கு செல்லாமல், செயற்கையாக வெளியிலிருந்து ஹார்மோன்கள் செலுத்தப்படுகிறது.

இதன் விளைவாக உடல் உபாதைகள் ஏற்படுதல், உடல் பருமன் அதிகரித்தல் என பல விளைவுகள். அதில் உச்சமாக மேலும் நம் உடல் சமநிலை தவறிவிடுகிறது. கருத்தரிப்பு மையங்களில் இவர்கள் ஹார்மோன் ஊசி செலுத்தும் முன் நம்மிடம் வாங்கும் கையெழுத்தில் பல அபாயங்கள் உண்டு என பலருக்கு தெரியாது. மருந்து தொழிற்சாலைகளின் வியாபாரமும் இதன் பின்புலத்தில் உண்டு.

ஹார்மோன்கள் நம் பிறக்கும் பொழுது இயற்கையாக இருந்தது. அவற்றை ஏன் செயற்கையாக உள் செலுத்த வேண்டும்? இயற்கையாக மீண்டும் உற்பத்தி செய்ய இயலாதா? என நாம் சிந்திப்பதில்லை.

உற்றார் உறவினர் கேட்கிறார்களே, குழந்தை இன்னும் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் கருத்தரிப்பு மையத்தில் என்ன சொல்லுகிறார்களோ அதை சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனதை கொடுக்கிறது.

1977க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குழந்தை இன்மை இயல்பாக இருக்கிறது என்றேன் அல்லவா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு பிறகு தான் பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயத்தில் நஞ்சை கலந்தோம்.

மேலும் குறிப்பிட்ட தானியங்களே விளைவிக்க துவங்கினோம். ரசாயனம் கொண்ட ஒரே வகை தானியத்தை உண்டு வந்ததால் நம் சந்ததியினர் மலட்டு தன்மை நோக்கி சென்றனர்.

குழந்தையின்மையை 30 சதவிகிதம் முடிவு செய்வது உணவு பழக்கம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நம் ஊன் உடல் உணவால் ஆனது. அதை மேம்படுத்தவும் பிறப்புறுப்பின் செயல்கள் செறிவு பெறவும் உணவு பழக்கம் மிகவும் முக்கியம்.

அரிசி உணவு என்பது நம் கலாச்சார உணவு அல்ல. வருடத்திற்கு ஒரு முறை விழா காலத்தில் மட்டும் அரிசி சாப்பிட்ட நாம். இப்பொழுது தினமும் சாப்பிடுகிறோம். குறைந்த பட்சம் இருவேளை உணவில் அரிசி இருக்கிறது. விவசாயத்தில் அதிக நஞ்சு கொண்டு ஒருவாக்கப்படும் தானியம் அரிசி.

கம்பு, திணை, சோளம், பயிறு என பல்வேறு தானியம் கொண்ட உணவு முறையை இழந்துவிட்டோம். இவைகளை தினமும் உணவில் இணைத்தாலே நமக்கு ஹார்மோன் செயல்கள் மீண்டும் புத்துணர்வு பெறும். மேலும் குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். இவை எல்லாம் நம் ஊன் உடலை பாதிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். உணவை சீராக்கினால் உடலை சீராக்கலாம்.

தினமும் நஞ்சு கலந்த உணவு உண்டு பிறகு குழந்தை இல்லை என சொல்லுவது யாருடைய தவறு?

ஊன் உடல் பாதிப்புக்கு உணவு மட்டுமல்ல உடையும்,பழக்க வழக்கமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

(கரு உருவாகும்)

Tuesday, May 8, 2012

குழலினிது யாழினிது - பகுதி 3 +18


உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்கிறார் திருமூலர். அவரின் வரிகளை கவனித்துப்பாருங்கள். உடம்பே ஆலயம் என கூறவில்லை. ஊன் உடம்பே என்கிறார். உடம்பு என்பது பல உண்டு. அதில் நாம் குழப்பம் கொள்ளக்கூடாது என்பதற்காக ஊன் உடம்பே என குறிப்பிட்டு எழுதுகிறார்.
நவீன நாகரீததில் இருக்கும் நமக்கோ ஊன் உடம்பை தவிர பிற உடல் பற்றிய புரிதல் இல்லை.

நமக்கு ஐந்து உடல் (கோஷங்கள்) இருப்பதாக கூறினேன் அல்லவா? இவை நமக்கு பஞ்ச பூதத்திலிருந்து தோன்றியது. ஒவ்வொரு உடலும் பஞ்சபூத தன்மையிலேயே செயல்படுகிறது. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

அன்ன மய கோஷம் (ஊன் உடல்) : பூமியில் உருவாகும் பொருட்களால் உருவான உடல் அன்னமய கோஷம். அன்னம் என்ற உணவு மூலம் வளர்ச்சி பெற்றது. பஞ்சபூதத்தில் மண் தன்மை கொண்டது.  நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒரே உடல் அன்னமய கோஷம் மட்டுமே. அதனால் நவீன மருத்துவம் இவ்வுடலை மட்டுமே கொண்டு சிகிச்சை அளிக்கிறது.

ப்ராண மய கோஷம் (சக்தி உடல் ) : பிரப்ஞ்ச ஆற்றலால் உருவான உடல். உடல் செயல்களுக்கும் மனச்செயல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. பஞ்சபூதத்தில் வாயுவின் தன்மையை கொண்டது. இவ்வுடலில் சக்தி குறைவதனால் உடல் உறுப்புக்கள் செயல்படாமல் ஸ்தம்பிக்கிறது. மின்சாரக்கருவிகள் போன்று ஊன் உடலை உருவகித்தால் ப்ராண உடலை மின்சாரமாக உணர முடியும்.

மனோமய கோஷம் (மன உடல் ) : எண்ணங்களினால் உருவான உடல். காலம் மற்றும் வாழ்க்கை தன்மைக்கு காரணமான உடல் இந்த மனோ உடல். பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது. மனம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணமாகிறது மன உடல்.

விஞ்ஞானமய கோஷம் (அறிவுடல்) : நம் அனுபவங்களின் தொகுப்பாகவும் அறிவு சார்ந்த செயல்களுக்கு காரணமாக இருப்பது விஞ்ஞான மயகோஷம். பஞ்ச பூதத்தில் நெருப்பின் தன்மையை கொண்டது.
நெருப்பை போன்று அறிவின் செயலை நன்மை, தீமையும் அதனால் ஏற்படும் விளைவையும் கொண்டு உருவாகிறது. ஞாபக மறதி மன நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இவ்வுடல் விளங்குகிறது.

ஆனந்த மய கோஷம் (ஆன்ம உடல்) : என்றும் எப்பொழுதும் பரமானந்த நிலையில் இருப்பதால் ஆனந்த மய கோஷம் என அழைக்கப்படுகிறது. பஞ்சபூதத்தில் ஆகாயத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மா பரிசுத்தனாம இறை நிலையின் பிரதியாக இருப்பதால் என்றும் ஆனந்த நிலையில் இருக்கிறது. ஆன்மா எப்பொழுதும் சம நிலை தவறுவதில்லை. ஆன்மா ஆன்மாவாகவே இருந்து பிற உடல்களின் செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறது.  

ஆனந்த மய கோஷத்தை தவிர பிற உடல்கள் சமநிலை தவறினாலோ, செயல்படாமல் போனாலோ வாழ்க்கை தன்மை பாதிக்கப்படுகிறது. குழந்தை இன்மை என்ற வகையில் பார்த்தால் ஊன் உடல் மற்றும் சக்தி உடல் இரண்டும் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

மாதவிடாய் சுழற்சி மற்றும் விந்து உற்பத்திக்கு சக்தி உடல் (ப்ராண மய கோஷம்) காரணமாகிறது. அதனால் ப்ராண உடலில் ஏதேனும் குறை இருப்பின் இச்செயல்கள் தடைபடும். மனோமய கோஷமும் உடலுறவு செயல்களின் தன்மையை எண்ணங்களால் பாதிப்படைய செய்கிறது. 

நடைமுறையில் ஊன் உடலை மட்டும் முன்னிருத்தி ஹார்மோன் சிகிச்சை, ஐவிஆர் மற்றும் சோதனை குழாய் மூலம் கரு உற்பத்தி செய்யும் பொழுது குழந்தையின் ஊன் உடல் மட்டுமே நன்றாக இருக்கும். தாய் தந்தையரின் பிற உடல்களில் குறை இருப்பதால் பிறக்கும் குழந்தையும் அவ்வுடலின் பாதிப்புடன் பிறக்கும்.

பிறக்கும் பொழுது அனைத்து உடலும் நன்றாக இருக்கும் படியே பிறக்கிறோம். அப்படியானால் அவ்வுடல்களில் குறை ஏற்படுவதற்கும் சமநிலை தவறுவதற்கும் யார் காரணம்?

வேறு யார்? நீங்கள் தான்...!

(கரு உருவாகும்...)

Friday, May 4, 2012

குழலினிது யாழினிது - பகுதி 2 +18


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது வழக்கு. அது போல நம் உடல் நன்றாக இருந்தால் தான் அதன் செயல்களும் சிறப்பாக இருக்கும். உடல் என்ற உடன் கண்ணாடி முன் சென்று நின்று நன்றாக தானே இருக்கிறேன் என்றும் எனக்கு நோய் நொடி எதுவும் இல்லை என்றும் சிந்திக்கக் கூடாது.

நம் சாஸ்திரம் நமக்கு ஐந்து உடல் இருப்பதாக கூறுகிறது. ஊண் உடல் (physical body), ப்ராண உடல் (energy body), மன உடல் (Mind body),விஞ்ஞான உடல் (Knowledge body), ஆன்ம உடல் (Soul body). இவை அனைத்தும் கோஷங்கள் என அழைக்கப்படுகிறது. இது ஐந்து எண்ணிக்கையில் இருப்பதால் பஞ்சகோஷம் என பெயர்.

ஐந்து உடலில் ஏதேனும் ஒரு உடல் சமநிலை தவறினாலும் நம் வாழ்க்கை தன்மை ஏற்றத்தாழ்வு உண்டாகும். பஞ்ச உடல்களில் ஆன்ம உடல் மட்டும் வெளிப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும். மீதி இருக்கும் நான்கு உடல்கள் வெளிச்சூழலுக்கு விரைவில் மாற்றமடையும்.

பஞ்ச உடலை ஆதாரமாக கொண்டு தான் நம் ஐந்து வித உணர்வு உறுப்புக்களும், ஐந்து செயல்களும் நடைபெறுகிறது. ஒரு மனிதனுக்கு இதில் ஏதேனும் ஒரு உடல் சமநிலை தவறினால் அந்த உடலுக்கு உண்டான உணர்வு உறுப்பின் தன்மையையும் செயலையும் இழப்பார்கள்.

தம்பதியினர் இருவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நபர் ஒன்றுக்கு நான்கு உடல் வீதம் எட்டு உடல்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே குழந்தை பிறப்பும் ஏனைய மேம்பாடுகளும் உண்டு.

நவீன மருத்துவம் மேற்கண்ட நான்கு உடல்களில் ஊண் உடல் என்கிற பிசிகல் பாடியை மட்டுமே ஆராய்கிறது. ஹார்மோன் இருந்தால் குழந்தை பிறக்கும், பிறப்புறுப்புகள் சரியாக இருந்தால் குழந்த பிறக்கும் என அவர்களின் கருத்துக்கள் ஊண் உடலுக்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்காலிகமாக ஊசி மூலம் ஹார்மோன் ஏற்றுவது என்பது உடலால் கிரகித்துக்கொள்ள முடியாது. எதிர்விளைவுகளை பிற்காலத்தில் உண்டு செய்யும். ஹார்மோன் ஊசிகளால் குழந்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல் நலம் தற்சமயம் நலிவடைந்து இருக்கும். ஊசி மூலம் பெற்றெடுத்த குழந்தையை கவனிக்க கூட அவர்களுக்கு சரியான உடல் நலம் இருக்காது.

ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அக்குழந்தையின் பெற்றோருக்கு எட்டு உடல்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். நம் சாஸ்திரம் ஊண் உடலை மட்டும் பார்ப்பதில்லை. இந்த எட்டு உடலையும் எப்படி மேம்படுத்துவது என்பதையும் விளக்குகிறது.

நம் கலாச்சாரம் செயற்கையாக எதையும் உள்ளே புகுத்துவதில்லை. இயற்கையாக உங்கள் உடலிலிருந்தே அனைத்தையும் மலரச்செய்கிறது...!

தற்காலத்தில் நவீன மருத்துவம் செயற்கை கருத்தரித்தலை ஊக்குவித்தாலும் அனைவருக்கும் குழந்தை பிறப்பை வழங்க முடிவதில்லை என்பதே நிதர்சனம். தம்பதியினர் இருவருக்கும் உடல் மற்றும் உடல் உறுப்புக்கள் நன்றாக செயல்படுகிறது இருந்தும் குழந்தை இல்லை என்பவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

குழந்தை இன்மை என்பது எட்டு உடல்களின் ஆற்றலை சார்ந்தது என்பதை உணர்ந்து, ஊண் உடலுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல் அந்த எட்டு உடலை மேம்படுத்த வேண்டும். நம் சாஸ்திரம் எட்டு உடலையும் மேம்படுத்தும் சூட்சுமங்களை அளித்துள்ளது.

சதுர்கோஷ நியமம் என அழைக்கப்படும் அந்த சூட்சமங்களை பார்ப்போமா?

(கரு உருவாகும்..)

Wednesday, May 2, 2012

குழலினிது யாழினிது - +18

படைத்தல் என்ற ஒரு தொழில் உலகின் இயக்கத்திற்கு அடிப்படையானது. பூரணத்திலிருந்து தோன்றும் அனைத்தும் பூரணமாகவே இருக்கிறது என்றது உபநிஷ்த். அது போல இறை நிலை நம்மை உருவாக்கிய காரணத்தால் நமக்குள்ளும் உருவாக்கும் தன்மை இருக்கிறது.

மனிதனை தவிர பிற உயிர்கள் ஒன்றிணைவது அதை போன்றே மற்றொரு உயிரை தோற்றுவிக்க மட்டும் தான். ஆனால் மனிதன் இன்பம் கருதியும், குழந்தை பிறப்பு என இரு வேறு காரணத்தால் ஒன்றிணைகிறார்கள்.

இந்திய கலாச்சாரம் காமம் மற்றும் திருமணம் ஆகியவைகளை தனிமனிதன் சம்பந்தப்பட்ட விஷயமாக கருதுகிறது. ஆனால் குழந்தை பிறப்பு சமுதாயம் சம்பந்தமான விஷயமாக கருதுகிறது.

இருவர் இன்பத்திற்காக இணையும் பொழுது சமூகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக இணைந்தால் அந்த குழந்தை எதிர்காலத்தில் சமூகத்தில் ஏதேனும் தாக்கத்தை உண்டு செய்யும். அதனால் குழந்தை பிறப்பை இருவர் முடிவு செய்ய கூடாது என்கிறது. 

சாஸ்திரம். குழந்தை பிறப்பை - கர்ப்ப தானம் என கூறி சமூக நிகழ்வாகவே கொண்டாடுகிறது. குழந்தை பிறப்பை மனிதனின் முழுபரிமாணமாகவும், உயர் செல்வமாகவும் நம் சமுதாயம் கருதியது.

அஷ்ட செல்வம் என கருதுவதில் தனம், தான்யம் போன்ற வரிசையில் சந்தானம் என்பதையும் வைத்தது நம் சாஸ்திரம்.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் குழந்தை பிறப்பு என்ற மிக முக்கியமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. இவற்றை வரும் பகுதிகளில் விரிவாக பார்ப்போம்.

இத்தகைய முக்கியத்துவம் மிக்க குழந்தை பிறப்பு விகிதம் சமீபகாலத்தில் குறைந்து வருகிறது.
இயற்கையான முறையில் குழந்தை பேறு கொண்ட சமூகம் தற்சமயம் கருதரித்தல் மைய வாசலில் காவல் கிடக்கிறது.

உலகில் 1977 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்குத் தான் குழந்தை பிறப்பு நிகழும் தன்மை உண்டு. வாழ்வியல் தவறுகள் மற்றும் இயற்கையிலிருந்து வேறுபட்ட சூழலால் மலட்டு தன்மை அதிகரித்து வருகிறது.

மழலை சொல் கேட்காதவர் புல்லாங்குழல் மற்றும் யாழின் இசையை அருமை என கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர். நவீன் நாகரீகமும் வாழ்வியலும் இப்படியே சென்றால் குழலும் யாழும் மட்டுமே இனிக்கும், மழலை என்பதை கேட்க முடியாது..!

இதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்?

நம் சாஸ்திரத்தில் எளிய முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இருக்க, அதை விடுத்து நவீன மருத்துவத்தில் ஹார்மோன் சிகிச்சையாலும், பிற வழிமுறையாலும் தங்கள் உடலையும் வாழ்க்கை தரத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது நிதர்சனம். ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கெடுத்துக்கொள்ளாமல் சிறந்த குழந்தையை பெற்று சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் தன்மையையே குழல் இனிது யாழினிது கட்டுரை விவரிக்கப்போகிறது.

(கரு உருவாகும்..)