Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 30, 2010

எனக்கு சாருன்னா பிடிக்காது....!

எந்த ஒரு விஷயமும் திடீரென நமக்கு பழக்கமாகி விடுவதில்லை. பாரம்பரியமாகவோ, ரத்ததிலேயே ஊரியோ அல்லது நாகரீகம் கருதியோ தான் அப்பழக்கங்கள் நாம் கொண்டு செல்லுகிறோம்.

உதாரணமாக ரயில் பயணத்தில் பரிசோதகர் உங்கள் சீட்டை சரிபார்த்தவுடன் அவரை பார்த்து ‘நன்றி’ என கூறிப்பாருங்கள். சட்டென உங்களை ஒரு முறை ஆழமாக பார்த்துவிட்டு நகர்வார். இதற்கு காரணம் அவரிடம் எவரும் நன்றி சொல்லுவதில்லை. அவர் தான் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறாரே என்ற நினைப்பு நமக்கு. இவ்வாறு பழங்கங்களில் மட்டுமல்ல சொற்களையும் மொழியையும் பயன்படுத்துவதிலும் நம் மக்களிடம் பல்வேறு நிறை குறைகள் உண்டு.

நம் மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு ஏதேனும் ஒரு வார்த்தை அவர்களிடம் சிக்கிவிட்டால் அதன் பொருள் தெரிந்துகொள்ளாமலேயே ஆழ்ந்து பயன்படுத்துவார்கள்.

காட்சு பிடிக்கிறது, க்யூ வரிசையில் வருவது என ஆங்கிலத்தில் கூறும் வார்த்தையே தமிழிலும் இணைத்து சொல்லுவார்கள். Catch என்றாலே பிடிப்பது தானே? இது இணைத்து சொல்லுகிறோம் என்ற பிரக்ஞையே இருக்காது நமக்கு. இது போல எத்தனையோ வார்த்தைகள்.

படிக்காதவர்கள் தான் இப்படி என்று இல்லை. நான் சந்தித்த ஒரு நகரின் ஆட்சியர் (கலெக்டர்) கூட என்னிடம் பேசும் பொழுது இப்படி பட்ட தவறுகளை செய்தார். உதாரணமாக, “நான் ஃபிரியாதான் இருக்கேன். நீங்க உங்க விஷயத்தை பிரீஃப்பா சொல்லுங்க” என்றார்.

நாம் கூட நண்பர்களிடம் “பிரீஃப்பா பேசனும் வா” என கூறி இருப்போம். உண்மையில் பிரீஃப் (brief) என்றால் குறுகிய , சுருக்கமான என பொருள். அதனால் தானே சிறிய அளவில் கோப்புகளை வைக்கும் பெட்டியை பிரீஃப் கேஸ் என கூறுகிறோம். பிரீஃபா பேசுவது என்றால் விரிவாக பேசுவது என்றே நாம் நினைத்திருக்கிறோம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நம்மில் பல வார்த்தைகள் இப்படி புரிதல் இல்லாமலே வெளி வந்துவிடும். பல வசவு சொல்கள் கூட சகஜமாக புழக்கத்தில் உள்ளதை காண முடிகிறது. அதை பெருமையாகவும், நாகரீகம் மற்றும் நகைச்சுவை என்ற பெயரிலும் மனிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். விழிப்புணர்வு குறைவாக இருப்பவர்கள் மட்டுமே தான் பயன்படுத்தும் வார்த்தையின் ஆழம் மற்றும் அர்த்தம் உணராமல் பயன்படுத்துவார்கள்.

விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு வார்த்தை ஒரு மந்திரம், விழிப்புணர்வு அற்றவர்களுக்கு எச்சில் போன்றது. இரண்டுமே வாயிலிருந்து வந்தாலும் பயன் வேறுபடுகிறது.

பலர் அப்படி பேசலாம் நான் அப்படி அல்ல, மிகத்தெளிவானவன் என நீங்கள் கூறினீர்கள் என்றால் அது உலகமகா பொய். நீங்கள் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அந்த தவறை செய்வீர்கள்.

முன் பின் தெரியாத ஒரு நபரை சந்தித்தோம் என்றால் அவரை அழைக்க, “சார்” என்போம். இது மிகவும் தவறான சொல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.

முன்னூறு வருடங்களால நம்மை அடிமை படித்தி இருந்த ஆங்கிலேயர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த அடிமை வார்த்தையே “சார்”. ஓர் அடிமை தனது முதலாளியை பார்த்து பதில் அளிக்கும் வார்தையே இது. ஆங்கில அதிகாரிகளை சார் என்றும் பெண்களை மேடம் என்றும் பல்வேறு ஆண்டுகளாக அழைத்து பழகிய நாம் எங்கே சென்றாலும் அவ்வாறு அழைக்கிறோம். ஒவ்வொரு முறையை சார் என பிறரை அழைக்கையில் நீங்கள் ஒரு அடிமை என்பதை நீங்களே பதிவு செய்கிறீர்கள்....!

இந்தியர்கள், அப்ரிக்க மக்களை ‘நீக்ரோ’ என்ற சொல்லாடலில் பயன்படுத்துவார்கள். இது மிகவும் கொடூரமான ஒரு சொல். பிறப்பால் அடிமையானவன் என்ற அர்த்தம் கொண்டது இவ்வார்த்தை. இதை அப்ரிக்கர்கள் மிகவும் வெறுப்பார்கள். வெளிநாடு செல்லும் இந்தியர்கள் நம் ஊரில் அவர்களை அழைத்தது போலவே அழைத்து முன் பல் இழந்து நிற்பார்கள். இனியாவது அப்ரிக்கன் என அவர்களை கூறுங்களேன்.

பிறரை அழைக்க 'Sir', 'Boss' என அழைப்பதைக்கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இது நம்மில் இருக்கும் அடிமட்ட அடிமை உணர்வே காரணம். பிறரை ‘அண்ணா’, ‘அக்கா’ அல்லது பெயர் மூலமோ அழையுங்கள். உணர்வுபூர்வமாக அழைப்பதால் அவர்களுடன் நெருக்கமும் ஏற்படும்.

நான் பல்வேறு இடங்களில் பயணிக்கும் பொழுது என்னை ‘சார்’ என அழைப்பதை பார்த்து எனக்கு மிகவும் சங்கடமாக உணர்வேன். எல்லோரையும் எனக்கு இணையாகவும் சமமாகவும் பார்க்கும் நிலையில் அவர்களாகவே சார் என அழைத்து அவர்களை கீழேயும் என்னை மேலையும் வைத்து தர்ம சங்கடப்படுத்துவார்கள். அமெரிக்க ஜனாதிபதியை கூட நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம். சார் என அழைக்கக் கூடாது - என்ற வெள்ளை மாளிகை குறிப்புகள் உண்டு. ஆனால் நாம் இன்னும் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம்.

என்னை பெயர் சொல்லி அழையுங்கள் அல்லது வேறு வார்த்தையில் அழையுங்கள். சார் என்று மட்டும் அழைக்காதீர்கள்.

ஏன் என்றால்...
சாருன்னா எனக்கு பிடிக்காது...!

Wednesday, July 28, 2010

பழைய பஞ்சாங்கம் 28-ஜூலை - 2010

சன்யாசியானவர்

எனது நீண்ட நாள் மாணவர் ஒருவர் மிக சோகத்துடன் வந்து, “சாமி எனக்கு சன்யாசம் ஆயிடுச்சு” என்றார். தற்கால நவீன ஆஸரமங்களில் தான் ரூபாய்க்கு இரண்டு சன்யாசம் தருகிறார்களே அப்படி ஏதும் வாங்கிவிட்டாரோ என புரியாமல் விழித்தேன்.

அவரே தொடர்ந்தார், “ என் பையன், என் பேச்சை மீறி வேறு ஜாதி பெண்ணை கல்யாணம் செஞ்சுட்டான். என் சன்-நாசம் ஆயிடுச்சு சாமி..!” என்றார். புத்தர சோகத்திலும் அவரின் குறும்பு மட்டும் குறையவில்லை.
--------------------------------------
படிக்காதவள்...!

தன் மகள் கல்லூரியில் படிப்பதில்லை நீங்க தான் அவளுக்கு அறிவுரை சொல்லி படிக்கவைக்கனும் என ஒரு நடுத்தர வயது தந்தை என்னிடம் வந்தார். ஐயா நானோ அஞ்சாப்பு ஆ பிரிவு கூட தாண்டாதவன் நான் எப்படி அறிவுரை சொல்ல என கேட்டேன். அறிவுரை சொல்லுவது என்பதே எனக்கு பிடிக்காது, இதில் நான் கடைபிடிக்காத விஷயத்தை பற்றி வேறு அறிவுரையா என தவிர்த்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை

தன் மகளை அழைத்து வந்தார். வந்ததிலிருந்து அந்த பெண் தன் கையில் இருந்த செல்போனை விரலால் துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தார். அவ்வளவு அழுக்காகும் அளவுக்கு அந்த பெண்ணின் செல் போனில் அழுக்கு இருக்கிறதா என எட்டிப்பார்த்தேன். அது ஐ-போன்..!

இனி வரும் பரிணாமத்தில் மனிதனின் ஆள்காட்டி விரல் தட்டையாகவும் விரல் ரேகை இன்றியும் பிறப்பார்கள் என நினைக்கிறேன். முடிவில் அந்த பெண் படித்தாளா என கேட்கிறீர்களா? அவர் தந்தையிடம் ஐ-போனில் பாடங்களை இணைக்கும் படி கூறினேன்.

-----------------------------------------

உயிர் போகும் ‘மணி’தர்கள்

சென்னையில் ஒரு நண்பரை தொடர்பு கொள்ள அவரின் கைபேசிக்கு அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்... திடீரென “உயிரே போகுதே உயிரே போகுதே” என சப்தம் வரவே...தொடர்பை துண்டித்து 108க்கு தொடர்பு கொண்டு அவரை காப்பாற்ற முயற்சித்தேன். அதற்கு முன் அவரே என்னை அழைத்து சாவகாசமாக, “என்ன சாமி மிஸ்டு கால் குடுக்கறீங்க” என்றார். விசாரித்ததில் அது ரிங்டோனாம். என் உயிர் சில வினாடிகளில் போயிவந்தது தான் மிச்சம்..! நல்லாவைக்கறாங்கப்பா ரிங் டோனை...

-------------------------------------------
பதில் சொல்ல முடியாத கேள்வி

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ப்ராண வித்யா பயிற்சிகள் மிகச்சிறப்பாக அமைந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்களும் அவர்களின் ஈடுபாடும் வளர்ச்சியான பாதையில் இருந்தது. அதில் அனேகர் இந்த வலைப்பதிவை படிப்பவர்கள் என்பது தெரிந்து மகிழ்ந்தேன்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தாலும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க முடியவில்லை. அந்த கேள்வி கட்டுரையின் கடைசியில்....

ப்ராண வித்யா மூலம் ஏராளமான ஹீலர்களை உருவாக்கி அவர்கள் மூலம் ஓர் விழிப்புணர்வு சமுதாயத்தை காணும் நோக்கம் என்னுள் உண்டு. அதை படிப்படியாக அறக்கட்டளை நோக்கில் செயல்படுத்தும் எண்ணம் உண்டு. உங்களில் பலரும் என்னுடன் கைக்கோர்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.
--------------------------------------------
கோவிந்தா....கோ....விந்தா..

வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சனி அன்று கோவையில் இருக்கும் ஒரு மலைக்கோவிலுக்கு செல்லும் திட்டம் உண்டு. விருப்பம் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். பால மலை ரங்க நாதர் கோவில் என்ற மலைக்கோவில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு அருகே உண்டு. எதில் இருக்கும் மலைப்பாதை எல்லோரும் ஏறி வருவதற்கு வசதியான அமைப்பில் இருக்கும். உடல் ஆரோக்கியமும் ஆன்மீக வளர்ச்சியும் பெற எவ்வயதினரும் கலந்து கொள்ளலாம். காலை 6 மணிக்கு ஆர்.எஸ் புரத்தில் இருந்து மலை புறத்திற்கு பயணம் துவங்கும்.

இதில் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் ஒரு கண்டீஷன் மட்டும் உண்டு..!

1) சரியான நேரத்திற்கு வர வேண்டும்...(இது உங்களுக்கு நல்லது)
2)சிறிய அளவு உணவு பதார்த்தங்களை கொண்டு வர வேண்டும்.(இது எனக்கு நல்லது).

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
---------------------------------------------------
அந்த பதில் சொல்ல முடியாத கேள்வி

சுப்பாண்டி உங்க கூட வந்திருக்காரா?

Friday, July 23, 2010

டிவிட்டரில் குரு - சிஷ்யன்

எழுத்து என்பது பல்முக வடிவம் கொண்ட ஊடகம். முன்பு பனை ஓலை, கல்வெட்டு, செப்பு பட்டையம் என பல்வேறு வடிவில் இருந்த எழுத்து அறிவியல் முன்னேற்றத்தால் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக செய்தி பரிமாற்றத்தின் இடைவெளியும் குறைந்து மக்கள் செய்தியால் நிரம்பி வழியும் நிலைக்கு நம் ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் மனிதன் கடக்கும் செய்தியை எடுத்துக் கொண்டால் அவனின் மூளையின் வேகத்திற்கு இணையாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

ஊடகத்தின் பரிமாணமாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முறை தற்சமயம் பரவலாக இருக்கிறது. அரசாங்கம் கூட குறுஞ்செய்தி பயன்படுத்தி விழிப்புணர்வு செய்தியை கொடுக்க துவங்கி உள்ளது.
பலர் இதனால் கெடுதல் உண்டாகிறது என்றும் மனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

உண்மையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இருக்கும் எந்த ஒரு ஊடகத்தையும் அற வழியில் பயன்படுத்தினோமானால் அதனால் அந்த ஊடகத்திற்கும் நமக்கும் கேடில்லை.

முதலில் இணையம் தோன்றிய காலத்தில் ஆன்மீகவாதிகள் இணையத்தை பயன்படுத்தலாமா என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இன்றோ வலைதளம் இல்லாத ஆன்மீக குழு என்பதே இல்லை என்பது நிதர்சனம்.

மின்னஞ்சலை கூட ஆன்மீகவாதிகள் பயன்படுத்தலாமா? அதில் ‘அட்டாச்மெண்ட்’ உண்டே என்றல்லாம் சிந்தித்த புத்திசாலிகள் பலர் உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மக்களால் அதிகம் நுகரப்படும் ஊடகங்களை ஆன்மீகத்திற்காக பயன்படுத்தினால் தவறு இல்லை என்பது எனது கருத்து.

ஒரு ஊடகம் மக்களை கெடுக்கிறது என கூக்குரல் எழுப்புவதைக் காட்டிலும் அந்த ஊடகத்தை நல்வழியில் பயன்படுத்தி காட்டுவதே ஆன்மீகவாதிகளுக்கு அழகு.

இப்படி நான் கொண்ட கருத்துக்களால் டிவிட்டர் (twitter.com) என்ற சேவையை பயன்படுத்த துவங்கினேன். 140 எழுத்தில் நம் கூற விரும்பும் கருத்தை கூறிவிடலாம். இது செல் போன் குறுஞ்செய்திக்கு ஒப்பானது.
உலகில் பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. சிலர் நான் காலையில் எழுந்தேன், காப்பி குடித்தேன் என தங்களின் செயல்களை எழுதுகிறார்கள். சிலர் உத்தியோக விஷயங்களை கூறுகிறார்கள். பலர் நண்பர்களுடன் பேசி மகிழ்கிறார்கள்.

நமக்குத்தான் மேற்கண்ட விஷயங்கள் வராதே...! அதனால் குரு சிஷ்ய கதைகளை டிவிட்டரில் எழுத துவங்கிவிட்டேன். 140 எழுத்துக்குள் குறுங்கதையாகவும் அதுவே குரு கதையாகவும் இருக்க வேண்டும் என்ற சவாலில் சில கதைகள் எழுதி விட்டேன். அவற்றில் ஒரு டஜன் கதைகள் உங்களுக்காக...
>--------------------------
அற்புதமான தருணம் எது என்ற கேட்ட சிஷ்யனிடம் கூறினேன்.”நான் இல்லாமல் போவது” என்னை கொன்றான் சிஷ்யன்..! #1

தினமும் வேதம் படித்த சிஷ்யனின் வேத புத்தகத்தை பிடுங்கி எரித்தேன். தீய்ந்து கருகிய வாசம் வந்தது. சிஷ்யனின் உள்ளே நறுமணம் வீசத்துவங்கியது- #2

குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டும் என கேட்டான். தட்டி எழுப்ப அது என்ன எருமை மாடா? என்றேன் என் எருமை மாடு சிஷ்யனிடம். #3

எங்கும் கடவுள் நிறைந்திருக்க கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்றால் சிஷ்யன். அங்கும் இருக்கிறார என காண் என்றார் குரு..! #4

தலை முடியை மழித்தால் ஆன்மீகவாதியாகி விடுவேனா என கேட்டான் சிஷ்யன்.நார் உறிக்கப்பட்ட தேங்காய் ஒன்றை காட்டி,ஆன்மீக தேங்காய் என்றார் குரு- #5

ஞானம் அடைய குரு தேவையா என கேட்டான் சிஷ்யன். புன்சிரிப்புடன்,” குருவை அடைய ஞானம் தேவை” என்றார் குரு. #6

சிஷ்யன் : ஆன்மீகமாக இருக்க வெங்காயம் பூண்டு தவிர்க்க வேண்டுமா? குரு-இறைவன் படைப்புகளை ஒதுக்கும் ஆணவம் இருக்கும் நீ எப்படி ஆன்மீகனாவாய்? #7

குடும்ப நபர்களை காட்டிலும் உங்கள் மேல் எனக்கு ஈடுபாடு வர என்ன காரணம் குருவே என்றான் சிஷ்யன்.குரு:அவர்கள் இரத்த உறவுகள், நாம் உயிர் உறவுகள்#8

சிஷ்யன்:உருவவழிபாடு தேவையா? குரு : உன்னை நீ உடலாக நினைக்கும் வரை உருவம் வேண்டும். உடலை கடந்தால் அனைத்தும் அருவமே. ஏன் என்றால் தத்வமஸி..!#9

சிஷ்யன்:மனிதனுக்கு மட்டும் தானே குரு தேவைப்படுகிறார். விலங்குகளுக்கு குரு உண்டா?குரு:மனிதன் என்ற ஆணவம் உனக்கு.ஆகையால் கூறியும் பயனில்லை.#11

சிஷ்யன் : குருவே நான் என்று குரு நிலை அடைவேன்? குரு : என்று நீ சிஷ்யன் ஆகிறாயோ அன்றே அது முடிவாகும். #12

--------------------

Thursday, July 22, 2010

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்

விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2

Tuesday, July 20, 2010

அக்னி ஹோத்ரம் - பகுதி 6 - நிறைவு

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தவமாக செய்து வந்த அக்னிஹோத்ரம் நாளடைவில் நம் சமுதாயத்தில் இல்லாத நிலைக்கு வந்ததற்கு வரலாற்று மற்றும் நம் நாகரீக மாற்றம் முக்கிய காரணம்.

தற்காலத்தில் அக்னி ஹோத்ரத்தை உணர்ந்தவர்கள் அவற்றை விட்டு விலகுவதில்லை. மேலும் வெளிநாட்டினர் அக்னி ஹோத்ரத்தை பற்றி மிகவும் ஆழ்ந்த தெளிவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அக்னி ஹோத்ரம் என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்க சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அக்னிஹோத்ரம் செய்வதை நிறுத்துவதில்லை.

ஹோமா தெராபி என்ற பெயரில் அக்னிஹோத்ரத்தை அழைக்கிறார்கள். நோய் குணமாக்கும் மருந்தாக அக்னிஹோத்ரம் அவர்களுக்கு பயன்படுகிறது. ஹோமா யோகா, இண்டியன் ஹோமா, ஃபயர் யோகா என்ற பெயரில் அக்னிஹோத்ரம் வியாபரம் ஆக்கப்படுவதும் உண்டு. நாம்

சுத்தமாக பயன்படுத்தாத நல்ல விஷயத்தை மற்றொருவர் வியாபார நோக்கிலாவது பயன்படுத்துகிறார்களே என மனதை தேற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

முன்பு இந்திய நாட்டினர்கள் கையில் ஒரு சிறிய பானையுடன் இருப்பார்கள். அந்த பானையில் எப்பொழுதும் நெருப்பு சாம்பல் பூத்த வண்ணம் இருக்கும். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அதை கொண்டு செல்லுவார்கள். அக்னிஹோத்ரம் செய்யும் வேளை நெருங்கும் பொழுது அந்த பானையிலிருந்து நெருப்பை எடுத்து பயன்படுத்துவார்கள். அக்னி ஹோத்ரம் முடிந்ததும் அக்னியை மீண்டும் அதில் சேர்த்து விடுவார்கள். இவ்வாறு வாழும் அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஈம சடங்கில் அவரின் மகன் அல்லது பேரன் அந்த பானையை ஏந்தி முன்னால் செல்லுவான். அந்த அக்னியை கொண்டே அவர் உடல் சாம்பலாகும். பின்பு அந்த பானையை ஏந்தி வந்த மகன் அல்லது பேரன் அந்த அக்னிஹோத்ரத்தை துவங்குவான்.

தற்காலத்தில் யாரும் அக்னி ஹோத்ரம் பின் பற்றாததால் இறந்தவுடன் வீட்டின் முன் சில விறகுகளை வைத்து தீயிட்டு பிறகு அதை மயானத்திற்கு எடுத்து செல்லுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா? அக்னியை ஏன் சவ ஊர்வலத்தின் முன் கொண்டு செல்லும் சடங்கு வந்தது என்று?

இப்படி ஏகப்பட்ட மெய்ஞான விஷயங்கள் நம்மில் சடங்காகி செத்துக்கிடக்கிறது என்பதே உண்மை.

எனது அனுபவத்தில் அக்னிஹோத்திரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். என் வாழ்க்கை அமைப்பு தினமும் அக்னிஹோத்ரம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் சூழலுக்கு தக்க அக்னிஹோத்ரத்தை நானும் பயன்படுத்துகிறேன். மேலை நாட்டினரால் அழைக்கப்படும் ஹோமா பார்மிங் என்ற முறை அக்னிஹோத்ரத்தை கொண்டு விவசாயம் செய்யும் முறையாகும்.

விவசாய நிலங்களில் அக்னி ஹோத்ரம் செய்து அதன் சாம்பலை நிலங்களில் தூவுவதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி இல்லாமல் அதிக சத்துடன் பயிர்கள் வளருகிறது. இது என் அனுபவத்திலும், வேளாண் பல்கலைகழக ஆய்விலும் கண்ட உண்மை.

விவசாய நிலங்களில் அக்னிஹோத்ரம் செய்வதால் சுற்றுச்சூழலால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும் பயிர்களுக்கு உதவும் உயிர்கள் அங்கே வளரத்துவங்கும்.

ஓசோன் அதிகமான சூழல் பயிர்களுக்கு மிக நல்லது என்பது அடிப்படையாகவே வேளண்மையில் இருக்கும் கோட்ப்பாடு. அப்படி இருக்க ஓசோனை பெருக்கும் அக்னிஹோத்ரம் விவசாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.

ஆற்றங்கரை ஓரம் குடில் அமைத்து அக்னி ஹோத்ரத்தை மக்களுக்கு பயிற்றுவித்து வந்த காலம் சென்று கணினியில் கால்களை ஆட்டிக்கொண்டு கற்றுக்கொள்ளுகிறோம். இதை ஒரு கருத்தாக மற்றும் வைத்துக்கொள்ளாமல் வாழ்வில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

கணினியை பயன்படுத்தும் நண்பர்களுக்காக அக்னி ஹோத்ரம் மென்பொருள் (சாஃப்ட்வேர்) இலவசமாக கிடைக்கிறது. இங்கே கிளிக் செய்யவும்.

இதை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இந்த மென்பொருள் அக்னிஹோத்ரம் செய்ய பல்வேறு வகையில் உதவியாக இருக்கும்.

விவசாயம் சார்ந்தோ அல்லது தனிபட்ட வாழ்க்கையிலோ அக்னி ஹோத்ரம் செய்ய ஆர்வம் கொண்டு அவற்றை முறையாக கற்றுக்கொள்ள நினைத்தால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

அக்னியால் இணைவோம்.. இந்த அகிலத்தை காப்போம்

|| ஓம் தத் சத் ||

Saturday, July 10, 2010

சேஷூவும் உலகக் கோப்பை இறுதி போட்டியும்...

மானச சஞ்சரரே....பிரம்ம நீ.....மாஅ...னச சஞ்சரரே.... இன்னைக்கு நித்யஸ்ரீ கலக்கிட்டாபோ.. கச்சேரின்னா இன்னைக்கு நடந்ததான் ஓய்...கச்சேரி என்றவாறே உள்ளே நுழைந்தார் சேஷூ என்கிற சேஷாத்ரி ஐய்யர்.

எங்கள் தெருவில் அனைவரும் கதிகலங்க வைக்கும் ஒருவர் . வாய்நிறைய வெற்றிலை சீவல், வாயை ரயில் எஞ்சின் புகைபோக்கி போல உயர்த்தி, இரண்டு கைகளிலும் பூணலை இழுத்து பிடித்து முதுகு சொறிந்தவண்ணம் அவர் பேசுவதை பார்த்தாலே நமக்கு லேசாக முதுகில் நமைச்சல் வரும்.

எப்படிபட்ட கூட்டமாக இருந்தாலும் இவர் சென்றால் சிதறி ஓடிவிடுவார்கள். அதனால் சேஷூ மாமாவுக்கு செல்லமாக நாங்கள் வைத்த பெயர் புரட்சி வீரன் சே..! தனக்கு தெரியாததே கிடையாது என்பது போன்ற அலட்டல் அவரிடம் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கும். இதனல் சிலர் இவரை விக்கிப்பிடியா என்பது போல சேஷூபிடியா என்றும் அழைப்பார்கள்.

“என்னடா பசங்களா...வேலைவெட்டிக்கு போகாமல் பேசிண்டு இருக்கேள்... அரசியலா கிரிகெட்டா ?”என எங்கள் கூட்டத்தினுள் தனது கொரில்லா தாக்குதலை துவக்கினார் சே..!

“ஆமாண்டா இவரு நம்ம ஊரு கலெக்டரு...நாம தாண்டா வெட்டிப்பசங்க” என முணுமுணுத்தான் கோயிந்து.

“என்னடா குட்டி ராஸ்கல் முணுமுணுக்கறே...நானும் உங்களோட சேர்ந்து பேசிண்டு இருக்காலாம்னு பார்த்தா அசடு மாதிரி நிக்கறேள்?”

பொறுமை இழந்த நான், “மாமா நாங்க வேல்ட் கப் புட்பால் பத்தி பேசிண்டு இருக்கோம்” என்றேன்.

“பேஷா....பேசுங்கோ நானும் கேட்கறேன். எனக்கு தெரிஞ்சதையும் சொல்றேன்..நண்ணா இருக்குமோல்யோ?”

“அது என்ன நண்ணா இருக்குமோல்யோ? நல்லா இருக்குமா இல்லையா? தெளிவா சொல்லுங்கோ மாமா” என்றான் கோவிந்து. இன்று அவன் சரியான பார்மில் இருப்பது புரிந்தது.

“அசமந்தமா பேசாதேடா... உனக்கு என்ன டீம் ரொம்ப இஷ்டம், சொல்லு..” “நாங்க எல்லோரும் ஜெர்மனி ரசிகர்கள் மாமா..ஆனா அவாதான் தோத்துட்டா” என்றேன் நான்.

“பேஷ் நானும் தாண்டா. நம்ம தாயாதிகள் ரசிகரா இருக்கேள். எனக்கு சங்கடம் தான் போங்கோ”

“ஏம்மாமா கெட்டவார்த்தையில திட்டரேள்” என்றான் கோவிந்து.

“கோயிந்தூ...தாயாதிகள்னா உங்க பாஷையில பங்காளிகள்னு அர்த்தம்டா..”

“ஜெர்மன்காரங்க எப்படி மாமா நம்ம பங்காளிகள் ஆக முடியும்? ”

“ஜெர்மனியிலிருந்து தாண்டா ஆரியர்கள் எல்லாம் சிந்து நதி வழியா வந்து இந்தியாவில குடியேரினா தெரியுமோ? நம்ம கலர் எங்கிருந்து வந்துதுனு தெரியுமோ? எல்லாம் மேடின் ஜெர்மன். அதனால தான் பிராமணனை ‘சர்மாணி - சர்மா’ என சாஸ்திரம் சொல்லுது. ஜெர்மனிங்கிரதோட திரிபு இது புரிஞ்சுதோ? அதனால தாண்ட வைதீக சாஸ்திரத்தையெல்லாம் அவா இன்னும் கொண்டாடரா. ”

“மாமா புட்பாலை பத்தி பேசினா நீங்க ஜாதி கலவரமே செய்வீங்க போல இருக்கே...ஆமாம் மாமா டிவியில பார்த்தேளா? அக்டொபஸ் எல்லாம் யாரு ஜெயிப்பானு சொல்லிடுது. நீங்க ஜோதிட புலி ஆச்சே உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கோ?”

மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித்திழுக்கும் விதமா கேள்வியை கேட்டான் கோயிந்து.

“எந்த டீவியிலடா காமிச்சான்? நான் பாக்குற எம் டிவியில அது வரலையே...”

எல்லோரும் தலையில் அடுத்துக்கொண்டனர்..

“சரி சரி ரொம்ப சங்கடப்படாதீங்கோடா பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பானு சொல்லறேன். நான் யாரு ஜோதிட சாம்ராட், ஜோதிட வித்வபூஷன் பட்டமல்லாம் வாங்கிருக்கேன்”

“டேய் பாருங்கடா மாமாவே சொல்லிட்டார். வாங்கிருக்காராம். யாரும் குடுக்கலையாம்”

“அம்பி கோயிந்து உனக்கு என்னமாதிரியே குயிக்திடா.. நேத்து நான் பிரம்ம முஹூர்த்தத்தில பஞ்சாங்கம் பார்த்ததில் நெதர்லாந்தும் ஸ்பெயினும் மோதர பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பா தெரியுமோ?” என சொல்லி நிறுத்தினார்..

அனைவரும் அவர் முகத்தை பார்த்தோம்.

“என்னடா பார்க்கரேள் எனக்கு சில்லி கோபி வாங்கி கொடுப்பேன்னு சொல்லுங்கோ அப்பத்தான் சொல்லுவேன்”

அனைவரும் நொந்து கொண்டோம். ஜோசியத்தை சில்லி கோபிக்கு தர முடிவு செய்த சேஷூ மாமாவிடம் கோரசாக “சரிமாமா சொல்லுங்கோ” என்றோம்.

தனது வெற்றிலை சீவலை உமிழ்ந்துவிட்டு.. “ஸ்பெயின் சுண்டக்காய் மாதிரி நெதர்லாந்தை ஜெச்சுடுவா பாரேன். இல்லைனா நான் வெத்தலை சீவலை விட்டுடுரேன்” என்றார்.

“ஏன் மாமா உங்களுக்கு நெதர்லாந்து பிடிக்காதா?” எனக்கேட்டோம். “அசடுகளா எனக்கு காவி டிரஸ் போட்டுண்டவாளை பிடிக்காதுடா.... நானெல்லாம் ஆச்சாரியாளை அரஸ்டு பண்ணும் போதே அடுத்த வேளைக்கு பருப்பு உசிலி வைக்கலாமானு பேசிண்டு இருந்தவன்...என்னாண்ட வந்து காவி போட்ட நெதர்லாந்துகாரணை பத்தி பேசிரையே நன்னவா இருக்கு?”

“அது சரி மாமா மூன்றாவது இடத்திற்கு இன்னைக்கு போட்டி இருக்கே அதில் ஜெர்மனி தானே ஜெயிக்கும்...அவாதான் உங்க பங்காளிகள் ஆச்சே...” என்றான் கோயிந்து.

“இல்லையோ பின்ன.. அவாளோட ஸ்டைல் அப்படி” என மாமா துவங்க.... அச்சமயம் ஒரு பெண் எங்களை கடந்து சென்றாள்.

“யாரு அது பரிமளமா? ஆடி விஷேஷத்திற்கு வீட்டுக்கு அனுப்புச்சுட்டாளா? உன் ஹஸ்பெண்டு பாவமாச்சேடி....:” என தன் தொழிலை அங்கே துவங்கினார்...

நாங்கள் விடுதலையானோம்..!

Wednesday, July 7, 2010

மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி

என் நண்பனின் கட்டாயத்தால் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அமைதியான இடங்களை ஏன் மயான அமைதி என சொல்லுகிறார்கள் என அன்று தான் புரிந்தது. காரணம் நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் மயானம்.

இரவு சுமார் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென சலங்கை சத்தம் கேட்கத்துவங்கியது. வயதான தோற்றம் கொண்ட ஒருவர் நீண்ட தலை முடியும் முன் வழுக்கையுமாக வந்துகொண்டிருந்தார். அனைவரும் அடக்கத்துடன் கைகட்டி நின்றிருந்தனர்.

அவர் தான் மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி..!

கையில் இருந்த பெரிய அரிவாள் ஒன்றை வைத்துக்கொண்டு ஆவேசம் வந்தவராக ஆடினார். சில நிமிடங்கள் ஆட்டம் ஆடி ஓய்து அமர்ந்தார். அவருக்கு எனர்ஜி டிரிக்காக ஏதோ ஒரு மிருகத்தின் ரத்தம் கொடுக்கப்பட்டது.

“டேய் வாங்கடா வாங்க என்ன பிரச்சனைடா உங்களுக்கு...” என வெற்றிலை போடாமலே சிவந்த வாயால் கர்ஜித்தார்.

எனக்கு முன்னால் இருந்த நண்பன் மூன்றடி உயரம் குறைந்து பென்குயின் போல் நடந்து அவர் முன் சென்றான். அவ்வளவு அடக்கமாம்..!

“சாமி..அது வந்து தொழில்ல.....”

நிறுத்து என்பது போல கை காட்டிவிட்டு தன் பக்கம் இருந்த ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் கருப்பு மையை வட்டமாக வரைந்தார். அதை உற்றுபார்த்தார்..

“உன் தொழில்ல போட்டி இருக்கு. உங்கூட இருக்கறவன் எதிராளிக்கு சாதகமா இருக்கான்.

சொல்லு அவனை என்ன செய்யலாம்? ஒரு கை விளங்காம போக கட்டிடுவோமா? 150 ரூபாய் வெட்டு..” என பொரிந்தார்.

“அதெல்லாம் நானே பாத்துக்கறேன் சாமீ...” என அவர் முன் சில நூறு ரூபாய்களை வைத்தான். நானும் அவனும் திரும்பி நடக்க துவங்கினோம்.

“டேய்.. நில்லுங்கடா... உன் கூட வந்தவனுக்கு என்ன பிரச்சனை” என என்னை பார்த்தவாரே நண்பனிடம் கேட்டார்.

“அவனுக்கு ஒன்னும் இல்லை சாமீ..எங்கூட சும்மாத்தான் வந்தான்” என்றான் அடக்கவாதி.

“அவனை பார்த்தா ஏதோ கேட்பான் போல இருக்கு...நீ அவனை கேக்க சொல்லு...” என்றார் குடமுருட்டி..

கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும்... “சாமீ எனக்கு ரெண்டே கேள்வி தான். கேட்கட்டுமா?” என்றேன்.

“ம்ம்ம்..” என்றார் மா.மே.கு.குப்புசாமி.

“இன்னைக்கு (7-ஜூலை) ஜெர்மனி- ஸ்பெயின் மோதும் அரையிறுதி போட்டியில யாரு ஜெயிப்பாங்க?”

மீண்டும் புதிய மையை கண்ணாடியில் தடவி என்னையும் கண்ணாடியையும் மாறி மாறி பார்த்தார். தனது எனர்ஜி டிரிங்கை ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்...

“என்னவிட இவனுங்க நல்லா ஆடுவாங்கடா...ஆடுவாங்க... சரியான போட்டி.. சமமா விளையாடுவானுங்க. மறக்காம பாரு..ஆனா ஜெர்மனிக்கு கஷ்டகாலம்.எவனோ குட்டிச்சாத்தனை ஏவி விட்டுருக்கான். அவனுங்களுக்கு மந்திரிச்சு கட்டினா சரியாயிடும். விளையாட்டு மைதானத்தில பலி கொடுத்து பூஜை செஞ்சா ஜெயிப்பானுங்க... இல்லைனா தோத்து போயி ரத்தங்கக்கிடுவானுங்க...” என்றார்.

“சாமி விளையாட்டு நடக்கிறது வெளிநாட்டுல உங்களை கூட்டிகிட்டு போக நேரம் இல்லை” என்றான் என் நண்பன். இவன் அடக்கத்திற்கும் கடமை உணர்ச்சிக்கும் அளவே இல்லையா என்பது போல பார்த்தேன்.

“ஒன்னோட ரெண்டாவது கேள்வி என்ன?” என்னை பார்த்து கேட்டார்.

“சாமி கண்ணாடியில மை தேச்சு எல்லாத்தையும் பார்க்கறீங்களே, நானும் வீட்டுக்கு போயி எங்க வீட்டு கண்ணாடியில மை போட்டா இது எல்லாம் தெரியுமா? எனக்கு இந்த மை எப்படி செய்யறதுனு சொல்லி கொடுங்களேன்..”

“டேய் இது எல்லாம் சாதாரண விஷயமில்லை... சித்திரை மாசம், பெளர்ணமிக்கு மழையில்லாத நாளில் கொல்லி மலைக்கு மேல போயி அங்கே கர்ப்பமா இருக்கிற குரங்கோட உச்சி தலைமுடியை எடுத்து வந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திர உரு ஏத்தி அதை கருக்கி செஞ்ச மை இது. அப்படி நீயும் செஞ்சா எல்லாம் இதில் தெரியும்.”

“இதுக்கு ஒரே வார்த்தையில முட்டாப்பயலே எதுனா இருந்தா என்கிட்டையே வந்து கேளுனு சொல்லி இருக்கலாம்” என மனதுக்குள் நினைத்தவாறே கிளம்பினோம்.

Tuesday, July 6, 2010

ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...

நெற்றியில் டிராபிக் சிக்னலில் தெரியும் சிவப்பு விளக்குக்கு நிகரான பொட்டு, உலகில் மஞ்சள் தட்டுப்பாடுக்கு இவரின் முகத்தில் இருக்கும் மஞ்சளின் அளவு ஒரு காரணம் என கூறும் அளவுக்கு மங்கள முகம். முகத்தை முன்புறம் பார்க்கும் பொழுதே தலைக்கு பின்னால் இருக்கும் கனகாம்பர பூ தெரியும் அளவுக்கு அலங்காரம் என்ற தோற்றத்தில் அந்த வயதான பெண் கையில் ஒரு சிறு குச்சியுடன் அனுகினாள்.

"ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... தம்பி உனக்கு விரைவில் ஒரு பெண் உன் வாழ்க்கையில் வரப்போறா..."

நண்பர்களுடன் கடற்கரையில் சிறிது நேரம் கூட உட்காரவிடாமல் இவர்கள் செய்யும் இம்சை அளவில்லாதது என நினைத்தவாறே வேறுபுறம் திரும்பினேன். அந்த பெண் விடுவதாக இல்லை.

“ஏந்தம்பி திரும்பிட்டே.. உன்னை பத்தி எல்லாம் சொல்றேன் தம்பி.. சரியா இருந்தா மட்டும் காசு கொடு”

என் நண்பன் கோவிந்து குசும்புடன் அவளை திரும்பி பார்த்து பேச்சு கொடுத்தான்.

“ஏம்மா என்னை பத்தி நீ சொல்லா அதற்கு நான் ஏம்மா காசு கொடுக்கனும்? என்னை பத்திதான் எனக்கே தெரியுமே? அதைப்போயி நான் காசு கொடுத்து வேற தெரிஞ்சுக்கனுமா?”

ஓ இவன் பொழுது போக்க முடிவு செய்துவிட்டான் இவனை ஒன்னும் செய்ய முடியாது என நானும் கவனிக்க துவங்கினேன்.

“தம்பிக்கு வேற என்ன தெரிஞ்சுக்கனும்னு சொல்லுங்க ஜக்கம்மாகிட்ட கேட்டு சொல்றேன்”

“ஜக்கம்மா கிட்ட கேட்டு எல்லாம் சொல்லவேணாம். முடிஞ்சா ஜக்கம்மாவை எங்க கூட அனுப்பி வை. வேணுங்கறப்ப நாங்களே கேட்டுக்கறோம்.”

“தம்பி வாயில சனி இருக்கு போல...ஜெய் ஜக்கம்மா” என்றவாறே கோயிந்து தலையில் குச்சியை வைக்க, கோவிந்து மயங்கி சரிந்தான்.

நாங்கள் பதட்டமானோம். “என்னம்மா இப்படி செஞ்சுட்டீங்க...”

“ஜக்கம்மாவா எகத்தாளம் பேசினா இதுதான் கதி. என்கிட்ட ஏதாவது குறிகேளு அப்பத்தான் இவனை எழுப்பிவிடுவேன்”

“காசு வேணும்னா கொடுக்கறோம் இவனை எழுப்பிவிடுமா...தாயே”

“ஜக்கம்மா பிச்சை எடுக்காது. குறிகேட்டு காசு கொடுத்துட்டுப்போ...”

பீச்சில் உலாத்தும் ஜக்கம்மாவின் மேன்மையான கொள்கை எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.

“அம்மா இன்னைக்கு( 6 ஜூலை ) உலகக்கோப்பை கால்பந்து போட்டியில உருகிவே நாடும், நெதர்லாந்தும் போட்டி போடறாங்க. அதில் யாரு ஜெயிப்பானு சொல்லு”

கண்களை மூடி ம்ம்ம்ம்ம்ம் என வாயில் சப்தம் எழுப்பினாள் அந்த பெண். பிறகு கண்களை விரித்து எங்களை பார்த்து“உருகுவே இன்னைக்கு தோத்து போயிடும்” என்றாள்.

என் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு வந்த பணத்தை அவள் கையில் திணித்தேன். மீண்டும் குச்சியால் கோவிந்தை தட்டினாள். அவன் எழுந்து உட்கார்ந்து என்ன நடந்தது என்பது போல பேந்த பேந்த முழித்தான்.

அவனை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என்னது உங்களுக்கு ஜக்கம்மா சொல்லுவதில் நம்பிக்கையில்லையா? அந்த குச்சியுடன் உங்ககிட்ட வந்தா தெரியும்...


Saturday, July 3, 2010

கிளி ஜோஸியரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்..!

நேற்று வீதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிளி ஜோதிடர் எதிர்ப்பட்டார். ஐயா எதிர்காலம் பார்க்கறீங்களா என்றார்.

ஜோதிடரே எனக்கு எந்த ஒரு விஷயத்திலும் எதிரா இருக்க பிடிக்காது. இணக்கமா வேணும்னா இருப்பேன். எதிர்-காலம் வேண்டாம் என்றேன்.

ஐயா நீங்க கிளிக்கு வேலை கொடுத்தா அதுக்கு நான் ரெண்டு நெல் மணி போடுவேன். உங்க புண்ணியத்தில அது சாப்பிடும் என்றார்.

சரி நான் பார்க்குறேன், ஆனால் என்னை பற்றி அல்ல. உலக கால்பந்து போட்டி பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு உன் கிளியிடம் சீட்டு எடுக்கச்சொல் என்றேன்.

கிளிக்கு நெல் கிடைத்தால் போதும் என தன் விரிப்பை விரிந்து சீட்டுக்களை அடுக்கினார்.


நான் முதல் கேள்வி கேட்டேன் “இன்று (3-ஜூலை) நடக்கும் அர்ஜெண்டினா - ஜெர்மனி போட்டியில் யாரு வெற்றி பெறுவார்கள்?”

கிளி என்னை சைடாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தத்தி தத்தி சென்று ஒரு சீட்டை எடுத்து கொடுத்தது. அதில் தாமஸ் முல்லர் என்பவரின் புகைப்படம் இருந்தது. அவர் ஜெர்மனி அணியின் முதன்மை வீரர். ஓ கிளி ஜெர்மனி வெற்றி பெரும் என்கிறதே..!

இவ்வளவு சூட்டிப்பான கிளியை நான் கண்டதில்லை. அதனால் என் அடுத்த கேள்வியை கேட்டேன், “கிளியே இன்று பராகுவே மற்றும் ஸ்பெயின் அணி விளையாடும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்”?

தன்னை தானே ஒரு முறை சுற்றிக்கொண்டு மீண்டும் சீட்டின் வரிசையில் தேடத்துவங்கியது கிளி. முடிவில் ஒரு சீட்டை எடுத்து தந்தது. அதில் பராகுவே அணி தலைவர் டென்னிஸ் கண்ஸா படம் இருந்தது. கிளியின் ஜோதிட அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது..!

அப்படியானால் கால் இறுதி போட்டியில் ஜெர்மனி பராகுவே நாட்டை சந்திக்கும் போலும் என நினைத்துக் கொண்டேன்.

“கிளியே நீ கூறியவை சரியாக இருந்தால் நாளை இறுதி போட்டியில் விளையாடும் அணி பற்றி உன்னிடம் கேட்கிறேன். இந்தா சில நெல்மணிகள்” என அதன் முன் வீசினேன்.

என்ன தான் உலக கோப்பை அணிகள் பற்றி கூறினாலும் கிளிக்கு கிடைக்கப் போவது என்னவோ நெல்மணிகள் தான்.

நெல் மணிகளை சந்தோஷத்துடன் கொத்தும் கிளியிடம், “கிளியே இந்தியா என்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடும் என கூறுகிறாயா?” என கேட்டேன்.

நெல் மணிகளை என் முன் காறி உமிழ்ந்துவிட்டு கூண்டுக்குள் சென்று அடைபட்டது கிளி...!

Friday, July 2, 2010

அக்னி ஹோத்ரம் - பகுதி 5

விஞ்ஞான ரீதியாக பார்த்தோமானால் அக்னிஹோத்ரம் பல்முனை பயன்களை அளிக்கக் கூடியது. ஆனால் நம் கலாச்சார விஷயங்களை விஞ்ஞானத்துடன் முற்று பெறாமல் மெய்ஞானத்துடன் இணைந்து செயல்படுத்தினார்கள் என்றே கூற வேண்டும்.

அக்னிஹோத்ரம் கூறும் மெய்ஞான விளக்கம் என்ன?

ஒவ்வொரு செயலுக்கும் தக்க விளைவு உண்டு என்கிறது விஞ்ஞானம். இக்கூற்றை மிகவும் உயர்ந்த ஞான நிலையில் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு செயலுக்கும் தக்க விளைவு என பார்க்காமல் அனைத்து செயலும் நல்ல செயலாக செய்தால் அதற்கு தக்க நல்ல விளைவு தானே ஏற்படும்?ஒவ்வொரு செயலையும் நன்மையாக்குவது மெய்ஞானம்.

விஞ்ஞானம் இது இப்படித்தான் நடக்கும் - என்ற விதியை கூறுகிறது. மெய்ஞானம் எல்லாம் நன்மையாகவே நடக்கும் என்கிறது.

மெய்ஞான சமூதாயத்தில் அக்னிஹோத்ரம் ஒரு தவமாக பின்பற்றபட்டது. அரசன் அழைக்கும் பொழுது, “இது அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருக்கும் நேரம், பிறகு வருகிறேன் என சொல்” என்று ஒரு பிரஜை கூறுவதாக கதைகள் உண்டு. அரசன் அக்னிஹோத்ரம் தடைபடாமல் இருக்க பசுக்கள் மற்றும் நிலங்களை தானமாக வழங்கிய சுவடுகள் பல நம்மிடம் உண்டு. பசு இருந்தால் வறட்டியும் நெய்யும் கிடைக்கும், நிலங்களில் அரிசியை பெறலாம். அனேக அக்னிஹோத்ர பொருட்கள் நமக்கு கிடைக்கும்.

அக்னிஹோத்ரம் என்பதை தற்காலத்தில் தவறான புரிதலுடன் இருக்கிறார்கள். அது ஒரு வழிபாடு என நினைத்துக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு மதச்சடங்காக இணைக்கிறார்கள். அக்னியை நம்மில் உணர செய்யப்படும் ஒரு தியானம் அக்னிஹோத்ரம் என பலர் மறந்துவிடுகிறார்கள்.

அக்னிஹோத்ரம் செய்வது என்பது துல்லியமான நேரத்தில் செய்ய வேண்டும். நீங்கள் வசிக்கும் இடத்தில் தினமும் சூரிய உதய- அஸ்தமன நேரம் தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் அரிசியை அக்னியில் சேர்க்க வேண்டும்.

தினமும் காலை மாலை இருவேளையும் செய்ய வேண்டும். உடனே நமக்கு ஒரு எண்ணம் வந்திருக்கும். நான் அலுவலகம் சென்று விடுவேனே எப்படி மாலையில் செய்வது? நான் நைட் ஷிப்ட் செய்கிறேனே காலையில் வருவதற்கு தாமதமாகி விடுமே? என பல கருத்துக்கள் வருகிறது அல்லவா? அக்னிஹோத்ரம் பற்றி இங்கே படித்ததை ஒருவரிடம் கூறி உங்கள் மேதாவித்தனத்தை காண்பித்து, எனக்கு அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என் அலுவலக நேரம் அப்படி என பிறரிடம் பெருமையாக கூறிக்கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் சோம்பேறித்தனம் அதை ரசித்து மகிழும்.

அக்னிஹோத்ரம் என்ற அற்புதத்தை கண்டறிந்த சமூதாயம் இந்த சில்லறை விஷயத்திற்கு வழி அறியாமல் இருக்குமா? காலையும் மாலையும் அக்னிஹோத்ரம் தடையில்லாமல் செய்ய ஒரு எளிய வழியை கூறி இருக்கிறது.

சென்ற பகுதியில் அனைவரும் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது, சிலருக்கு தடை உண்டு என கூறினேன் அல்லவா? திருமணம் ஆகாத இளையவர்கள், சன்யாசிகள், அரசன், கர்ப்பிணிகள் ஆகியோர் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது. இது தவிர எந்த ஒரு ஜாதி, மத, வர்ண கட்டுப்பாடுகளும் இல்லை.

அக்னிஹோத்ரம் கட்டாயம் செய்ய வேண்டியவர்கள் குடும்ப வாழ்வில் இருக்கும் தம்பதிகள் மட்டும் தான். தங்களுக்குள் உடன்படிக்கை ஏற்படுத்தி காலை கணவன், மாலை மனைவி என்று தங்களின் குடும்ப கடமையாக செயல்படுத்த வேண்டும்.

ஏன் தம்பதிகள் அக்னிஹோத்ரத்தை செய்ய வேண்டும் என கூறினார்கள்? முதல் காரணம் அக்னிஹோத்ரம் தடைபடாமல் இருக்கும். மேலும் சன்யாசிகள், இளைஞர்களைக் காட்டிலும் சமூதாயத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தம்பதிகளாக இருப்பார்கள். அதனால் அக்னிஹோத்ரம் அதிக அளவில் நடக்கும்...!

நம் சமூதாயத்தை எப்படி அழ்ந்து உணர்ந்து கட்டமைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் கூறுவது எல்லாம் சரி, நானும் என் மனைவி இருவரும் வேலைக்கு செல்லுகிறோம். இப்ப என்ன செய்வது என கேட்டீர்களானால்... உங்களை போன்ற உயர் நிலை ஜென்மங்களுக்கு அக்னிஹோத்ரம் தேவையில்லை என்பேன். :) இருவரும் வேலைக்கு செல்லுகிறோம் என்பதால் குளிப்பதோ, சமைப்பதோ, சாப்பிடுவதோ இல்லையா? அது போன்றுதான் அக்னிஹோத்ரம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கியமான செயல் என நினைத்தால் எத்தனை பிரச்சனைக்கு இடையிலும் செய்யலாம்.

சில வருடங்களுக்கு முன் என் வெளிநாட்டு மாணவர் கையில் ஒரு பெட்டியுடன் வலம் வந்து கொண்டிருந்தார். மாலை வேளை நெருங்கியதும் அந்த பெட்டியை திறந்தார். நான் திகைத்துப்போனேன். அது அக்னிஹோத்ரம் செய்யும் கையடக்க பெட்டி..! (Agnihotra Kit).

அதில் ஒரு திசைக்காட்டி, GPS என்ற பூமி ரேகை காட்டி, ரொட்டி வடிவில் வறட்டிகள், ஒரு பாட்டிலில் நெய், சிறிய பெட்டியில் அரிசி, கரண்டிகள் இருந்தன. அவற்றை விலக்கினால் பெட்டியின் அடிப்பாகம் ஒரு சின்ன பள்ளம் கருமையாக காட்சி அளித்தது.

தனது பெட்டியில் இருக்கும் கருவிகைளை கொண்டு சூரிய உதயத்தை கணக்கிட்டு, பெட்டியின் மையத்தை அக்னிஹோத்ர ஹோம குண்டமாக பயன்படுத்தி அக்னிஹோத்ரம் செய்தார். பிறகு அக்னி குளிர்ந்ததும் அந்த சாம்பலை ஒரு பாக்கெட்டில் சேமித்தார்.

இவரின் கருவிகளும்,செயல்களும் வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பற்றி விபரம் கேட்டேன். தொலைக்காட்சியில் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்வார்களே அது போல அவர் கூறியதை உங்களுக்காக கீழே டப்பிங் செய்திருக்கிறேன்.

“சுவாமிஜீ, எனக்கு பல நாளாக சரும புற்று நோய் இருந்தது. மேலும் உடல் முழுவதும் எரிச்சல் மற்றும் உடல் பலவீனம் என சிரமப்பட்டேன். சரும புற்று நோய்க்கு தக்க மருத்துவம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. ஒரு நண்பர் மூலம் அக்னிஹோத்ரம் பற்றி அறிந்து செய்யத் துவங்கினேன். ஆச்சரியப்படும் மாற்றம் உண்டானது. ஒரு நாள் அக்னிஹோத்ர சாம்பலை என் உடல் முழுவதும் பூசிக்கொண்டேன்.

சில வாரங்களில் என் சரும புற்று நோய் முற்றிலும் காணாமல் போனது. அதனால் நான் அக்னிஹோத்ரத்தை எந்த சூழலிலும் செய்யாமல் இருந்ததில்லை. நான் ஒரு விற்பனை மேலாளர். பிறருடன் சந்திப்பில் இருந்தாலும் அவர்களிடம் அனுமதி கேட்டு அக்னிஹோத்ரம் செய்வேன். எனக்கான ஆரோக்கியமான சூழலை அக்னிஹோத்ரம் அளிக்கிறது.”

அவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் கூறும் கருத்துக்கள் என்றும் உன்னதமானது.

பிறகு அவரை பார்த்து கூறினேன், உங்கள் கையில் இருக்கும் பெட்டிக்கும், அக்னிஹோத்ரம் செய்யாத எங்களுக்கும் ஒரே ஆங்கில எழுத்து தான் வித்தியாசம் என்றேன்.

என்ன ? என்பது போல பார்த்தார்.

"You are having Agnihotra Kit ; We are Agnihotra Kid"

[அக்னி ஒளிரும்..]