Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, October 31, 2012

கும்பமேளா - பகுதி 1


அதுஒன்றும் பெரிய விஷேஷமான தினமல்ல. மிகவும் சாதரண தினத்தின் காலை நேரம். தென் அமெரிக்காவின் மேற்கு பகுதி பெரு நாட்டின் லீமா நகரம். கடற்கரை அருகே தன் மீன் வலையை சரி செய்து கொண்டிருந்தான் அவன். முழுமையாக சுற்றிய மீன்வலையை அவன் நண்பர்களுடன் இணைந்து பாய்மர படகில் ஏற்றி கடலை நோக்கி பயணித்தான். 

கடலின் அலைகள் அற்ற பகுதிக்கு சமீபமாக சென்று வலையை வீசிவிட்டு இளைப்பாறினார்கள். காலை முதல் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தலைசுற்றல் இருப்பது போல உணர்ந்தான். படகின் நுனிப்பகுதிக்கு சென்று வலைக்கயிற்றை சரி செய்ய எத்தனிக்கும் பொழுது உடல் வலு இல்லாமல் கடலில் தவறி விழுந்தான்.

பேரலையும் காற்றும் கொண்ட கடலிலும் தனி ஒருவனாக படகை செலுத்தும் அவனுக்கு இன்று உடல் வலு இல்லாமல் தவறிவிழும் நிலை. கைகால்களை அசைக்கமுடியாமல் ஒரு இலையைப் போல மெல்ல மெல்ல அசைந்து கடல் நீரில் மூழ்கத் துவங்கினான்.

தான் மூழ்கி இறக்கப்போகிறோம் என தெரிந்தும் அவன் உடல் எதிர்ப்பு காட்டவில்லை. செயலற்று மேலும் சில அடிகள் கீழே சென்றவனின் உள்ளே சில காட்சிகள் விரிந்தது....

மனிதர்கள் கூட்டமாக சாலைகளில் ஒரு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்... எங்கும் கூடாரங்களாக பெரும் மைதானம் ஒன்று இருக்கிறது. உலோகங்களை ஒன்றோடு ஒன்று அடித்துக்கொண்டே பாடும் ஒலி...

பெரிய ஜடாமுடியுடனும், கையில் வாள் மற்றும் திரிசூலத்துடனும் கூட்டமாக சிலர் சென்றுகொண்டிருக்க அவர்களின் இடையே நின்று பார்ப்பதை போல காட்சிகள் தெளிவாக பார்த்துக்கொண்டிருந்தான்....

ஜாடாமுடி ஆட்களின் கூட்டதிலிருந்து அவர்களை விலக்கியபடியே ஒருவர் வெளிப்பட்டார். அவருக்கு தலைமுடி இல்லை. பெரிய கருப்பு உடை அணிந்திருந்தார். கையில் திரிசூலம் கழுத்தில் நாகப்பாம்பு படம் எடுத்தவண்ணம் இருக்க இவனை பார்த்து ஏதோ கூறினார். ஒன்றும் புரியாத மொழி...

காதுகளை கூர்மையாக்கி என்ன? என்பதைபோல கேட்டான்....இன்னும் அங்கே என்ன செய்கிறாய், வா இங்கே என ஸ்பானீஷ் மொழியில் கேட்டார் அந்த கருப்பு உடைக்காரர்.

திடுக்கென உடலுணர்வு பெற்றவனாக கை கால்களை அசைக்கத்துவங்கி... கடலில் மேல் பகுதிக்கு வந்து பெரிய மூச்சு ஒன்றை எடுத்து தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டான்.

தூரத்தில் அவனின் படகும் நண்பர்களும் இருப்பது தெரிந்தது, அதை நோக்கி நீந்தி படகை அடைந்தான். அனைவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.

அன்றிலிருந்து அவனின் போக்கே மாறிவிட்டது. கடற்கரையில் கடலை பார்த்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருப்பது. சில நேரம் அழுவதுமாக இருந்தான். ஏதோ கடலில் உள்ள துர்தேவதை இவனை ஆட்கொண்டதாக பேசிக்கொண்டனர்.

கடலில்ன் ஆழத்தில் கண்ட காட்சி கண்களை மூடினால் அகக்காட்சியாக எப்பொழுது தெரிந்த வண்ணம் இருந்தது. தூங்குவதற்கு கண்ணை மூடினாலும் அதே காட்சி. குடும்பம் மனைவி என மனம் லயமாகவில்லை. இயல்பு வாழ்க்கையில் எதையும் அவனால் செய்ய முடியாத அளவுக்கு தடுமாறிப்போனான். 

இப்படி சில தினங்களும் மாதங்களும் கழிந்தன..

ஒரு நாள் துறைமுகத்தில் வரி செலுத்துவதற்காக போகும் பொழுது அங்கே ஒரு வேற்று நாட்டு கப்பல் நிற்பதையும் அதில் இருக்கும் ஒரு சிலர் அகக்காட்சியில் கண்டவர்களை போல இருக்க அவர்களை நோக்கி ஓடினான்.

அவர்கள் அகக்காட்சியில் கண்டவர்கள் இல்லை...ஆனால் அவர்களின் உருவம் ஓரளவு அப்படி இருந்தது. ஸ்பேனீஷ் மொழியில் அவர்களை பற்றி விசாரித்தான். அவர்களுக்கு இவனின் மொழி புரியவில்லை. சைகையால் பேசி பேசி அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கேட்டான். அவர்கள் வரைபடத்தை காட்டி திசையை சுட்டிக்காட்டி விளக்கினார்கள். தான் இருக்கும் இடத்திலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் ஒரு நாட்டிலிருந்து வருகிறார்கள் என புரிந்துகொண்டான்.

அன்றே அவர்கள் புறப்படுகிறார்கள் என தெரிந்து தன்னையும் அழைத்துசெல்ல முடியுமா என கேட்டான். கப்பல் தலைவனை கேட்டுவிட்டு சொல்லுவதாக அவர்கள் சென்றார்கள்.

தன்னை பற்றி நினைக்க அவனுக்கே பைத்தியக்காரத்தனமாக தோன்றியது. இவர்களுடன் நான் ஏன் போக வேண்டும்? என் குடும்பத்தையும் என் மனைவியையும் யார் கவனிப்பார்கள் என பல குழப்பமான சிந்தனைகள். ஆனால் அவனின் அகக்காட்சி மிகவும் துன்புறுத்தவே அதை பற்றிய விடையறிவதை மிகவும் முக்கியமாக நினைத்து துறைமுகத்தில் காத்திருந்தான்.

அவர்கள் வந்து கப்பல் தலைவர் சம்மதித்ததாக சொல்ல மிகவும் மகிழ்ந்து சில தேவையான பொருட்களை துறைமுகத்தில் வாங்கிக்கொண்டு லீமா நகரில் யாரிடமும் சொல்லாமல் கப்பலுக்குள் சென்றான். அங்கே இவனையும் சேர்த்து பலர் அமர்திருந்தனர். இருதயம் படபடக்க அவனின் அகக்காட்சியின் தேடுதலுக்காக பயணத்தை துவங்கினான். அகக்காட்சியில் கண்ட விஷயங்களை அந்த ஊரில் இருக்கும் யாருக்காவது விளக்கினால் விடை கிடைக்கும் என நினைத்தான். ஸ்பெனீஷ் தெரிந்த கருப்பு உடைக்காரரை கண்டுபிடித்தால் அனைத்தும் தெளிவாகிவிடும் என்பது அவனின் நோக்கமாக இருந்தது.

எல்லாமே நாம் நினைத்தது போல நடப்பதில்லையே...! இந்தோனேசிய முனையை கடக்கும் பொழுது கப்பல் முழுவதும் சூராவளிக் காற்றில் சிக்கி அனைவரும் இறக்கப் போகிறார்கள் என்பது அப்பொழுது அவனுக்கு தெரியாது.

(மேளா தொடரும்)

Wednesday, October 24, 2012

பழைய பஞ்சாங்கம் 24-10-2012


பஞ்சாங்கம் ஏன் வரலை? 

பல மாதங்களாக பழைய பஞ்சாங்கம் என்ற தலைப்பில் நான் எழுதவே இல்லை. சிலர் தனி மின்னஞ்சல் அனுப்பி உங்களின் நேரத்தை இப்படி துணுக்கு எழுதி வீணாக்க வேண்டுமா? உங்கள் அறிவுக்கு (?!?!) பல விஷயங்களை எழுதுங்கள் என தூண்டினார்கள்.

வேறு சிலரோ பழைய பஞ்சாங்கம் எழுதுவதை ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறார்கள். நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஒன்றும் புரியவில்லை. படிப்பதற்கு எளிமையாகவும் நகைச்சுவையாகவும் (?) இருப்பது பழையபஞ்சாங்கம் தான் எழுதுங்கள் என மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.

எழுத சொன்னதற்காகவோ அல்லது எழுததீர்கள் என சொன்னதற்காகவோ நான் நிறுத்தவில்லை. [சரக்கு இருந்தால் தானே எழுத முடியும் என்பது வேறு விஷயம்] பல முக்கிய தலைப்புகளை எழுதிக்கொண்டிருந்ததால் தற்காலிக விடுமுறை விட்டுவிட்டேன். 

எந்த தலைப்பில் எழுதினாலும் அது பல பகுதிகளாக திரவுபதிக்கு கிருஷ்ணன் அளித்த சேலையை போல நீண்டு விடுகிறது. மீண்டும் சுருக்கமாக எழுத காட்டில் சென்று தவம் இயற்றி வரம் வாங்கலாம் என நினைக்கிறேன். மீண்டும் எழுத துவங்கி விட்டேன் இதோ...!

--------------------------------------

புதிய பஞ்சாங்கம்

ஒவ்வொரு வருடமும் ப்ரணவ பீடம் சார்ப்பில் பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். இது 8ஆம் வருடம் பஞ்சாங்க வெளியீடு விஜய தசமி அன்று நடந்தது. இந்த பஞ்சாங்கம் ஜோதி
டர்கள் மட்டும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். ஜோதிடம் தெரியாதவர்கள் பார்த்தால் ஒன்றும் புரியாது.

சென்ற வாரம் 2013ஆம் ஆண்டு பஞ்சாங்கம் தயார் செய்து அதில் பிழை திருத்தம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஏதோ வேலையற்று பொழுது போக்க பேப்பர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டு என் அருகே உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி.

“என்ன சுப்பாண்டி ஒரு மாதிரி இருக்க?” என கேட்டேன். 

“2012 உலக அழியும்னு சொன்னாங்க. நீங்க ஏன் சாமி வெட்டியா 2013க்கு பஞ்சாங்கம் போடறீங்க?” என்றான் சுப்பாண்டி.

பிழை திருத்த வேண்டிய இடம் பஞ்சாங்கம் அல்ல என்பது புரிந்தது.

---------------------------------

தீபாவளி திருநாள்

தீபாவளிக்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். புத்தாடை முதல் பட்டாசு வரை கொண்டாட்டம் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என பலருக்கு உண்மையான காரணம் தெரியாவிட்டாலும் கொண்டாடாமல் இருப்பதில்லை. தீபாவளி என பின்பற்றாதவர்களும் கூட விடுமுறை நாள் கொண்டாட்டம் என அறிவிக்கிறார்கள்.

தீபாவளியை பல வருடங்களாக நீங்கள் பல்வேறு நிலையில் கொண்டாடி இருப்பீர்கள். இந்த வருடம் வித்தியாசமாக கொண்டாட முயற்சி செய்யலாமா?

அதற்கு முன் ஒரு கதை..!

அசுரர்களுக்கு தங்களை இறைவன் வெறுப்பதாகவும், அசுரர்கள் என ஒதுக்குவதாகவும் மனக்குறை இருந்தது. அதனால் இறைவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அசுரர்களை வெறுப்பதில்லை, அவர்களே அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என அவர்களுக்கு புரியவைக்க ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

ஒரு அறையில் அமிர்தத்தை கலசங்களில் வைத்து அசுரர்களை சாப்பிட சொன்னார். ஆனால் அவர்களின் கை மூட்டு மடங்காமல் இருக்கும்படி செய்துவிட்டார். அதனால் அமிர்த கலசத்தை கையில் ஏந்தி குடிக்க முடியவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டு அமிர்தத்தை கீழே கொட்டிவிட்டனர்.

அதே அறையில் அமிர்தத்தை வைத்துவிட்டு தேவர்களை அனுப்பினார். தேவர்கள் முதலில் கைகள் மடங்காமல் இருப்பதனால் சிரமப்பட்டனர். பிறகு உணர்ந்து கலசத்திலிருந்து அமிர்தத்தை கையில் எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டனர். நோக்கம் அமிர்தத்தை குடிப்பது தானே? சுயநலமற்ற நிலையில் அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தனர் தேவர்கள்.

நீங்கள் இனிப்பு சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட முடியும்?
நீங்கள் உடை உடுத்தினால் ஒரு நேரத்தில் ஒர் உடை தானே அணிய முடியும்?

இதே போல பிறருக்கு இவற்றை அளித்தால் பலர் ஆனந்தம் அடைவார்கள். உங்களுக்கு மட்டும் என்றால் அந்த ஆனந்தத்தில் எல்லை உண்டு. பலருக்கு பகிர்ந்து அளித்தால் ஆனந்தம் எல்லை கடந்து பன்மடங்காகும்.

இப்பொழுது சொல்லுங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடலாம்? அசுரனாகவா? தேவனாகவா?

-------------------------------------------

ஜென்னிசம்

பரந்த அகண்ட 
பெருவிளியில்
அனைத்திலும் என் 
சுவாசமே நிரம்பி இருக்க
சுவாசிக்க மறந்து அதிலேயே
மூழ்கி இறக்கிறேன்

Wednesday, October 17, 2012

தெய்வம் இருப்பது எங்கே? பகுதி 3


கேள்வி : வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது?

பதில் : நாங்கள் வழிபடுவது குலதெய்வமா? கொல தெய்வமா என கேட்கிறீர்கள்...! தெய்வ வழிபாட்டால் இறப்பு நிகழும் என்பது மிகவும் வேடிக்கையானது. குலதெய்வ வழிபாட்டு செய்ய சோம்பேறித்தனம் கொண்ட சிலர் பரப்பும் வதந்தி இது. மேலும் குலதெய்வ வழிபாட்டில் குடும்ப உறவு முறையில் சிலருக்கு போட்டி பொறாமை வரும்பொழுது பரப்பும் செய்தியாகவும் இருக்கிறது. உண்மையில் குலதெய்வ வழிபாட்டால் உடல் உபாதைகள் தீர்ந்து மற்றும் அந்திம காலத்தில் இருப்பவர்களில் ஆயுள் மேம்படுதல் ஆகியவையே ஏற்படும். ஆகவே ஒன்றை உணருங்கள் குலதெய்வம் மரணத்தை கொடுக்காது மரணமில்லா பெருவாழ்வையே கொடுக்கும்.

கேள்வி : நான் வழிபடும் முறையும் என் ஆன்மீக விருப்பமும் வேறாக இருக்கிறது. அகிம்சையையும், சைவத்தையும் நான் விரும்புகிறேன். ஆனால் என் குலதெய்வ வழிபாட்டில் மிருக பலி இருக்கிறது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் குலதெய்வ வழிபாட்டை நான் எப்படி செய்வது?

பதில் : நீங்கள் நாகரீகம் அடைந்து நூடுல்ஸ், பிசா என சாப்பிட்டாலும் உங்கள் வீட்டில் இருக்கும் முதியவருக்கு என்ன பிடிக்கும் என நினைக்கிறீர்கள்? அவருக்கு எப்பவும் சாம்பார் ரசம் கொண்ட சாப்பாடு தானே? அதுபோலத்தான் நம் குலதெய்வ வழிபாட்டில் என்ன சொல்லுகிறார்களோ அதை நம் சித்தாந்தத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளாமல் செய்து வர வேண்டும். நம் தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்டது குலதெய்வ வழிபாடு என்பதை அறிக. மேலும் அவ்வாறு நீங்கள் சீர்திருத்தம் கொண்டுவர நினைத்தால் ஆன்மீக பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் வழிகாட்டுதலில் பலியிடுவதை மாற்றம் செய்யலாம். 

அதை விடுத்து குலதெய்வ வழிபாட்டை செய்ய மாட்டேன் என பலர் விட்டு விடுவது நல்லது அல்ல.

இவ்வாறு பல கேள்விகள் நமக்கு இருக்கிறது. குலதெய்வத்தை வழிபடுவேன் என்ற ஆர்வம் மற்றும் ஆழ்ந்த பக்தி இருந்தாலும் நாம் பல கேள்விகளையும், காரணங்களையும் கூற மாட்டோம்.

நேப்பாள மன்னரின் குலதெய்வம் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதஸ்வாமி என்றும், இராமநாதபுரம் சமஸ்தான ராஜாவுக்கு நேப்பாள பசுபதி நாதர் தான் குலதெய்வம் என்றும் நான் கேள்விப்ப்பட்டதுண்டு.

சில கிலோமீட்டர் தூரம் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்லவே நாம் கஷ்டப்பட்டுக் கொண்டு பிடி மண் எடுத்து வீட்டுக்கு அருகில் கோவில் கட்டிவிடுகிறோம். இவர்களை நினைத்துப்பாருங்கள். குலதெய்வத்தால் வடக்கும் தெற்கிலும் இருந்து இணைந்தவர்கள்....!

பழனி திருப்பதி போன்ற கோவில்கள் குலதெய்வமாக இருக்க வாய்ப்பு மிகமிக குறைவு. குலதெய்வம் தெரியாத காரணத்தால் இஷ்டதெய்வத்தையே குலதெய்வமாக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். இஷ்ட தெய்வமும், ப்ரார்த்தனா தெய்வமும் முக்கியம் தான் ஆனால் அந்த தெய்வ அனுககிரகம் வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு அவசியம்.

உதாரணமாக சபரிமலை விரதம் இருந்து பள்ளிக்கட்டு பூஜை நேரத்தில் முதலில் வழிபடும் தெய்வம் குலதெய்வம். இது எல்லா ஆன்மீக பூஜைகளிலும் முதன்மையானது. இதை விடுத்து செய்யும் ஆன்மீக பூஜைகள் செயல்படாது.

முற்றிலும் குலதெய்வமே எங்கே இருக்கிறது என்பது தெரியாது. என் குடும்பத்தில் மூத்தவர்கள் இல்லை அதனால் குலதெய்வத்தை அறியமுடிய வில்லை என்றாலும் கூட ஜோதிடத்தில் ஆருடம் மூலம் குலதெய்வத்தை அறியலாம். தேவப்பிரசன்ன முறைகளில் குலதெய்வ பிரசன்னம் ஒருவகையாகும்.

நம் கலாச்சாரமும் சாஸ்திரமும் பல்வேறு வழிகளில் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நம் சோம்பேறித்தனத்தை விடுத்து, நம் குல தெய்வத்தை கண்டறிந்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவோம்.

Friday, October 5, 2012

தெய்வம் இருப்பது எங்கே - பகுதி 2


குலதெய்வம் என்பது என்ன என இயல்பு மொழியில் கூறுகிறேன். உங்களின் பிறப்பின் மூலமே குலதெய்வம் என்பதாகும். ஒரு மரத்தின் விதையை எடுத்துக்கொண்டால் அந்த விதை வேறு ஒரு மரத்தில் தோன்றி இருக்கும் அல்லவா? அந்த விதை தோன்றிய மரத்தின் விதை? என பின்னோக்கி போனால் முதல் விதை எங்கே தோன்றி இருக்கும்? 

முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கதையாக இருக்கிறதா? நம் முன்னோர்களை நீங்கள் வரிசைப்படித்தினால் அதிகபட்சம் 3 தலைமுறை தாண்டி பெயர் சொல்ல  நமக்கு தெரியாது. அப்படி நம் வந்த வழிகளை ஆதி முன்னோர்கள் வரை பின்னோக்கி பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டு முறையே குலதெய்வ வழிபாடு.

எத்தனையோ நூற்றாண்டுக்கு முன் இருந்தவர்களை பற்றி நமக்கு என்ன கவலை என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அவர்கள் எப்பொழுதோ இருந்தவர்கள் இல்லை. இன்னும் நம்முடன் இருப்பவர்கள். கண்ணாடியில் உங்கள் உடலை பாருங்கள். உங்கள் கண், காது மூக்கு , உடல் அமைப்பு இவை எல்லாம் யார் சாயலில் இருக்கிறது? உங்கள் ஒவ்வொரு அங்கமும் அதன் வடிவமும் உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு அளித்தவையே என உணருங்கள்.

நம் உயிர் தாங்கி நிற்க தேவையான உடலை அளித்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவது கடமை அல்லவா? 

குலதெய்வ வழிபாடு என்பது நம் அனைத்து முன்னோர்களுக்கும் முதலான ஆதி முன்னோர் என இறைவனையே நம் முன்னோராக கருதி வழிபடுவதாகும். நம் கலாச்சார பூஜா விதிகள் அவ்வாறு வழிபடாமல் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பலன் இருக்காது என்கிறது.

நியாயம் தானே? வந்த வழியை மறந்தவனுக்கு போகும் வழி எப்படி புலப்படும்?

குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பலருக்கு தெரிவதில்லை. ஒரு மனிதன் தன் வழிபாட்டு கடமையான குலதெய்வத்தை மறந்துவிட்டால் என்ன நடக்கும்? 

மனசஞ்சலம், காரியங்களில் 99% அடைந்து பிறகு தோல்வியை தழுவுவது, தீர்க்க முடியாத உடல் நோய்கள், ஆன்மீக வளர்ச்சியில் தடை, குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து உறவினர்களால் கைவிடப்படுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எளிமையாக சொல்வதானால் ஒரு மனிதன் கடமையை தவறினால் என்ன நடக்குமோ அத்தனையும் நடக்கும்.

குலதெய்வ வழிபாட்டை பற்றி நிறைய கூறலாம், முதலில் நம்மில் பலருக்கு குலதெய்வ வழிபாடு பற்றி இருக்கும் கேள்விகளை பார்ப்போம்.

கேள்வி : ஐயா, என்னக்கு முன் இரண்டு பரம்பரையாக என் குடும்பத்தார் குலதெய்வ வழிபாட்டை ஏதோ காரணத்தால் விட்டுவிட்டார்கள். எனக்கு குலதெய்வமே எது என தெரியாது. அப்படி இருந்தும் நான் குலதெய்வத்தை வழிபட வேண்டுமா?

பதில் : உங்களின் இரண்டு பரம்பரை முன்னால் உங்கள் பாட்டனாருக்கு 100 ஏக்கர் நிலம் இருந்ததாக ஒரு சிறிய முத்திரை தாள் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?  அந்த நிலம் எங்கே இருந்தது. யாருகெல்லாம் விற்கப்பட்டது என ஆராய்வீர்கள்.உங்கள் பூர்வீக சொத்தில் ஒரு சதவிகிதம் கிடைத்தால் கூட போதும் என அலைந்து திரிந்து கை பற்றுவீர்கள் அல்லவா? அதுபோல உங்களின் உறவினர்கள், பூர்வ குடிகளை தொடர்புகொண்டு தேடுங்கள். பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களின் கடமைக்கும் கொடுங்கள்...! கண்டிப்பாக உங்களுக்கு குலதெய்வம் எது என கண்டறிய முடியும்.

கேள்வி : எங்கள் பூர்வீகம் சேலம் பக்கம் ஒரு கிராமம். அங்கே எங்கள் குலதெய்வம் இருக்கிறது. பிழைப்புக்காக எங்கள் தாத்தா கோவையில் இடப்பெயர்ச்சி அடைந்தார். எங்களின் பணிச்சுமையால் எங்களால் பூர்வீக கிராமத்திற்கு போக முடியவில்லை. எங்கள் பங்காளிகள் எல்லாம் முடிவு செய்து எங்கள் பூர்வீக கிராமத்தில் இருக்கும் கோவிலில் இருந்து மண் எடுத்து கோவையிலேயே ஒரு கோவிலை கட்டி குலதெய்வமாக வழிபடுகிறோம். இதை பலர் விமர்சிக்கிறார்கள்.எங்கள் வழிபாடு முறை சரியா?

பதில் : நீங்கள் கோவையில் வசிக்கிறீர்கள். உங்கள் மகன் சென்னையில் படிக்க சென்று விட்டார் என வைத்துக்கொள்ளுங்கள். அவரை சென்று பார்ப்பீர்களா? இல்லை அவரின் போட்டோ அல்லது சட்டையை பார்த்தால் போதும் என நினைப்பீர்களா? 

சேலம் என்ன அமெரிக்காவிலா இருக்குக்கிறது? 150 கிலோமீட்டர் இடைவெளிக்கே சிலர் புதிய குலதெய்வத்தை ஏற்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. தற்கால வாகன யுகத்தில் மின்னலைவிட வேகமான சென்றுவரும் தூரத்தில் குலதெய்வம் இருந்தும் நம்மால் வழிபடமுடியவில்லை என்றால் சோம்பேறித்தனத்தை விட வேறு என்ன இருக்க முடியும்? குலதெய்வம் கோவில் முற்றிலும் அழிந்து அதன் பல மேல் வருடங்களாக  பல குடியிருப்புகள் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே அப்பகுதி மண் எடுத்து புதிய கோவிலை கட்ட வேண்டும். அது இல்லாமல் குலதெய்வம் கோவில் இருக்கும் சூழலில் மீண்டும் கட்டுவது நம் ஆணவமும், சோம்பேறித்தனமும் தான் பக்தியும் கடமையும் அல்ல...!

கேள்வி : வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது?

பதில் : நாங்கள் வழிபடுவது குலதெய்வமா? கொல தெய்வமா என கேட்கிறீர்கள்...!  உங்களுக்கான பதில் அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(தொடரும்)