Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, August 28, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 14

ஸ்ரீ சக்ர புரி என்னும் பூமியின் இந்த சிறு பகுதி யோகிகளையும் ஞானிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கே முதலில் தோன்றிய ஞானி யார்? அவர் ரமண மஹரிஷியா, சேஷாத்திரி ஸ்வாமிகளா இல்லை வேறுயாரேனுமா என கேள்விகள் முளைக்கும். ஜோதி ஸ்வரூபமாய் முதலில் தோன்றிய ஞான குரு இறைவனே. வேறு யாராக இருக்க முடியும்? இங்கே என்றும் எப்பொழுதும் ஞான குருவாய் இருக்கும் ஆதி குரு அனைவரையும் அவர்களுக்கு தெரியாமலே கவர்ந்திழுத்து முழுமையான ஞானத்தை வழங்கிவருகிறார்.

ரமணர் மற்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த காலம் சென்ற நூற்றாண்டுதான் (1890 முதல் 1950 வரை). அதற்கு முன் விருப்பாக்‌ஷி தேவர், குகை நமச்சிவாயர், அருணகிரி நாதர் என இடைவிடாத ஞான சங்கிலியை இறைவன் ஏற்படுத்திய வண்ணமே இருக்கிறான். காலத்தால் இவர்கள் வேறுபட்டாலும் ஞானத்தால் ஒன்றுபட்டவர்கள்.

இங்கே தோன்றிய ஞானிகள் அனேகருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் பூத உடலில் வாழ்ந்த காலத்தில் சக மனிதர்களால் நிந்திக்கபட்டும்,சந்தேகிக்கபட்டும், துன்புறுத்தபட்டும் இருக்கிறார்கள். அவை அனைத்தும் அவர்களின் ஞான நிலையையும் அவர்களில் உள் நிலையின் உயர்வையும் உலகுக்கு காட்டவே இறைவனின் அருளால் ஏற்படுத்தபட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்கள் சிலருக்கு மட்டுமே அவர்கள் எங்கே பிறந்தார்கள், தாய்தந்தையர் யார் என்ற தகவல்கள் தெளிவாக இல்லை. எளிமையாக சொல்ல வேண்டுமானால் ரிஷிமூலம் தெரியாது. திருவண்ணாமலையில் வாழ்ந்து பலருக்கும் தெரியாத சில ஞானிகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.


விருபாக்‌ஷி குகை

விருப்பாக்‌ஷி தேவர் என்பவர் வீர சைவம் சார்ந்த கர்நாடக தேசத்திலிருந்து வந்ததாக தகவல் உண்டு . கோவிலுக்கு மேற்கே அருணாச்சல மலையின் அடிவாரத்திற்கு சற்று மேலே இருக்கும் குகையில் வாழ்ந்துவந்தார். இவருக்கு பல சிஷ்யர்களும் இருந்தார்கள். ஞான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை வெண்பா வடிவிலும் பாடல் வடிவிலும் எழுதினார். இவர் வசித்த குகை ஓங்கார வடிவில் இருக்கிறது. அங்கே தியானித்தால் சொல்லவண்ணா உள்ளுணர்வை ஏற்படுத்துகிறது. இந்த குகையின் சக்தியை முழுமையாக உணர்ந்தவர் பகவான் ரமணர் எனலாம். இந்த குகையிலேயே சில வருடம் ரமணர் வாழ்ந்துவந்தார். தற்சமயம் இக்குகை ரமணாஸ்ரமத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.


விருப்பாக்‌ஷி தேவர் தனது இறுதி நிலை நெருங்குவதை உணர்ந்து தன்னை ஒரு துணியில் மூடிவிட்டு அனைவரையும் குகையின்
வெளியே காத்திருக்குமாறு கூறினார். சில மணி துளிகளுக்கு பிறகு உள்ளே வந்த சிஷ்யர்கள் அந்த துணியை விலக்கி பார்த்த பொழுது அவரின் பூத உடல் முழுவதும் விபூதியாக இருந்தது. அந்த விபூதியை லிங்க ரூபமாக குவித்து இன்றும் இந்த குகையில் வைத்திருக்கிறார்கள்.

அண்ணாமலையார் பாதம் என்ற அருணாச்சல மலை உச்சியில் ஏறுவதற்கு உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் விருப்பாக்‌ஷி குகையில் தியானிக்கலாம். ஞான அலைகளும் ஓங்கார ஓசையும் என்றும் நிறைந்திருக்கும் குகை இது.

குகை நமச்சிவாயர் சமாதி

ஸ்ரீசக்ர புரியில் வாழ்ந்த மற்றும் ஒரு ஞானி குகை நமச்சிவாயர். அருணாச்சல மலையின் கிழக்கு பகுதியில் குகையில் இவரும் இவரின் முதன்மை சீடர் குரு நமச்சிவாயரும் வாழ்ந்து வந்தார்கள். குகை நமச்சிவாயர் இயற்றிய பாடல்களும் மக்களுக்கு வழங்கிய அருளுரைகளும் பிரசித்தமானது. குரு நமச்சிவாயர் மற்றும் அவர் சிஷ்யருக்கும் நடந்த குரு சிஷ்ய சம்பாஷணை மற்றும் சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானது. இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த நிகழ்ச்சியை படிக்க இங்கே செல்லவும்.

எல்லா செல்வமும் நிறைந்த ஸ்ரீசக்ர புரியின் பவளக்குன்றில் ஒன்றும் இல்லாதவனாக படுத்திருந்தேன். எனது உடலில் இனம் புரியாத ஒரு ஆனந்த அலை இசையை போல நிகழ்ந்துகொண்டிருந்தது. சில நிமிடங்களில் எனது உடல் முழுவதும் அதிர்வதையும் , ஒளியுடன் கூடிய ஒரு அதிர்வு இருப்பதையும் கண்டேன். அந்த விஷயம் ஒரு ஷணத்தில் நிகழ்தது. எங்கும் எதிலும் நான் இருந்தேன். பாறையாக, மரமாக, அனைத்து உயிராக , சிறியதாக மற்றும் பிரம்மாண்டமாக என எங்கும் நிறைந்திருந்தேன். அவற்றை விளக்க வார்த்தையில்லை. விளக்க முயற்சிக்கும் பொழுது மொழியின் இலக்கணம் இலக்கற்று தெரிகிறது.

என்னை உடலாக நினைத்த நான் முழுமையாக உணர்ந்த நிலை அது. தியானம் செய்யும் பொழுது ஆழ்ந்து இருக்கும் சில வினாடிகள் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் சில காரணத்தால் சகஜநிலைக்கு வந்துவிடுவேன். அன்று எவ்வளவு நேரம் அப்படி ஆனந்தத்தில் திளைத்தேன் என தெரியவில்லை.


தன்னிலை திரும்பும் பொழுது ஆனந்தத்தின் எச்சம் என்னில் இருந்தது. கிழக்கை சூரியன் ஆக்ரமிக்க துவங்கி இருந்தான். நான் படுத்திருந்த நிலையில் எனது இடது பக்கம் சில சலனம் தெரிந்தது. என உடலை அசைத்து என்னில் இருந்த ஆனந்தத்தை குறைக்க தயாராக இல்லை. என் தலையை மெல்ல திருப்பி பார்த்தேன். ஐந்து நபர்கள் நின்று இருந்தார்கள். உடலில் ஆடை இல்லை. நெடிய உருவமும் உடல் ரோமம் முழுவதும் மழிக்கபட்ட நிலையில் நின்று இருந்தார்கள். உடலில் எந்த மத அடையாளமும் இல்லை.

அவர்களின் கண்களும் உருவமும் அசாதாரண நிலையில் இருந்தது. உடல் அசைவற்று அவர்களை பார்த்தவாறு இருந்தேன். என்னை கூர்ந்து சில நிமிடங்கள் பார்த்தவண்ணம் இருந்தார்கள். பின்பு சிரம் தாழ்த்தி வணங்கி விட்டு சென்றார்கள்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அந்த நிலை பின்பு எனக்கு புன்புலத்தில் எப்பொழுதும் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. என்னால் அதை தவிர்த்துவிட்டு இருக்கமுடியாத நிலை. அந்த நிகழ்வு வரை இருந்த நான் இறந்து புது பிறவி எடுத்திருந்தேன். எனது செயல்கள் கூட்டுக்குள் இருந்து வெளியேறி வானில் பறக்க துவங்கியது போல வட்டத்தை விட்டு வெளியேறி அனைவருக்கும் பயன்பட துவங்கியது.

இவ்வாறு இரு நாட்களையும் திருவண்ணாமலையை கழித்த நான். கடைசி நாளான இன்று செய்வதறியாது இருந்தேன். கோவைக்கு திரும்ப வேண்டும் எப்படி திரும்ப போகிறேன்?

(தொடரும்)

Thursday, August 27, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 13

காண்கின்ற கண்ணொளி காதல்செய் ஈசனை
ஆண்பெண் அலிஉரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயல்அணை யாரே.
--------------------------------------------திருமந்திரம் 434


இறைவனின் மஹாசொரூபங்களை கண்டுகளித்தவர்கள் பல்வேறு நிலையில் இறைவனை வடிவமைத்தனர். உருவமாகவும் அருவமாகவும் மேலும் அருவுருவமாகவும் பார்க்கும் தன்மைகள் நம் கலாச்சாரத்தில் உண்டு. அத்தகைய இறைவனின் குறிப்பிடத்தக்க சொரூபம் அர்த்தநாரீஸ்வர சொரூபம். இயற்கையின் படைப்பில் எப்பொழுதும் இரு முனைகள் இருக்கும். தோற்றம் - மறைவு, மலை - பள்ளம், இரவு-பகல் என்ற எதிர்மறை தன்மைகள் எப்பொழுதும் இருக்கும். இவை இரண்டாக இருந்தாலும் தனித்து வேலை செய்ய முடியாது.

மின்சாரத்தை கடத்தும் அயனியில் நேர் மறை மற்றும் எதிர்மறை முனைகள் உண்டல்லவா? கணிப்பொறி கூட 1,0 என்ற எண்ணின் அடிப்படையில் வேலை செய்கிறது. எதிலும் இரு நிலைகளைகாணலாம். ஆனால் அந்த இருநிலை இணைந்து வேலைசெய்தால் மட்டுமே உருவாக்கம் என்ற செயல் உண்டு.


அர்த்தநாரீஸ்வர் நிலை என்பது நம்மில் உடலில் இருக்கும் இரு தன்மைகளை காட்டுகிறது. இரு நிலைகளும் சரிசமமாக இருக்கவேண்டும் என்பதை தான் உடலின் வலது இடது பக்கங்கள் பிரித்து காண்பிக்கபடுகிறது. திருநங்கையின் நிலைக்கும் அர்த்தநாரீஸ்வர நிலைக்கும் வித்தியாசம் உண்டு. திருநங்கை தன்மை என்பது உடல் மற்றும் மனோநிலையில் சரிசமமாக பிரிவு இருக்காது. முக்கால் பங்கும் ஒரு பாலினமும், கால் பங்கு மற்ற பாலினமும் இருக்கும்.

நம் உடலில் இயங்கு தன்மை, இயக்கமற்ற தன்மை என இரு அமைப்புகள் உண்டு. அவை இரண்டும் சம நிலையில் இருந்தால் அது தெய்வ நிலை என உணரலாம். வெப்பம் மற்றும் குளிர்ச்சி என அடிப்படை உடல் வெப்ப நிலையை எடுத்துக்கொண்டோமானால் இரண்டும் சரியான அளவில்லை எனில் உடல் நலம் கெடும். இதே போல மனம் மற்றும் ஆன்மாவிற்கு வெவ்வேறு நிலைகள் இரு முனைகளாக செயல்படுகிறது.

ஆண் பெண் என இருநிலைகளும் அவை இணைந்த நிலைகள் என மூன்று நிலைகளையும் காணும் பொழுது தெய்வ சொரூபம் பாலின வித்தியாசத்தில் அடங்குவதில்லை என புலப்படும். அவன் அருளால் என்றோ , அவள் அருளால் என்றோ சொல்லுவதை விட, அதன் அருளால் அதன் தாழ் வணங்கி என்றுதானே கூறவேண்டும் ?

திருவண்ணாமலையில் இறைவன் பல்வேறு சொரூபமாக காட்சி அளிக்கிறார். உண்மையில் அனைத்து சொரூப தரிசனமும் அரூப தரிசனமும் முழுமையாக பெற்ற தலம் அருணாச்சலம். அதில் ஒன்றுதான் அர்த்தனாரீஸ்வரராக காட்சி அளிக்கும் திருக்கோவில்.

நகரின்
மையத்தில் இருந்தாலும் அனேகர் காண முடியாத இடத்தில் அர்த்தநாரீஸ்வர் இருக்கிறார். பவளக்குன்று என்ற இந்த சக்தி மையம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. வீடுகளும் பாதைகளும் மறைத்திருப்பதால் இந்த கோவில் நகரின் மையத்தில் இருந்தும் வெளியே தெரியாது.
பவள குன்றின் நுழைவாயில், பின்புறம் சிறியதாக குன்றின் மேல் கோவில் காணலாம்.

திருவண்ணாமலைக்கு சாதாரணமாக செல்லுபவர்கள் இந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள். பலருக்கும் தெரியாது என்றும் சொல்லலாம்.
ஒரு 100 மீட்டர் உயரம் கொண்ட சிறு குன்று. அருணாச்சல மலையில் தொடர்ச்சியாக சிறு மலையாக காட்சி அளிக்கிறது.

அந்த பேராற்றலை நான் உணர்ந்த மூன்று தினமும் திருவண்ணாமலையின் இப்பகுதியில் அதிகம் கழித்தேன். இக்கோவில் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை அரைமணி நேரம் மட்டுமே திறந்திருக்கும். பிற நேரங்களில் கோவிலின் கருவறை பூட்டபட்டிருக்கும்.

அங்கே யாரும் இருக்கமாட்டார்கள் இறைவனை தவிர...!
பவள குன்று கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்து
அருணாச்சல கிரியின் ஒரு பகுதி தோற்றம்


பவளக்குன்றின் மேல் இருந்து பார்த்தால் அருணாச்சலேஸ்வர் கோவிலும், அருணாச்சல மலையும் பக்கவாட்டில் அருமையான காட்சியாக தெரியும். சில நூற்றாண்டுகளுக்கு முன் இது ரிஷிகள் மட்டும் வாழும் இடமாக இருந்த இந்த குன்றின் மேல் பின்பு சிறிய கோவில் கட்டப்பட்டது. அர்த்தநாரிஸ்வரர் என்றாலும் கோவிலின் உள்ளே லிங்க சொரூபம் தான் இருக்கும். மேலும் பக்கவாட்டில் அம்மனின் விக்ரஹமும் வேறு தனி சன்னிதியில் உண்டு. பவளக்குன்றின் பின்புறம் தொடர்ச்சியாக அருணாச்சல மலையை இணைக்கும்.

ரமணர் பூத உடலில் வாழ்ந்த காலத்தில் சிலகாலம் இங்கே தங்கி இருந்தார். கோவிலின் உள்ளே ரமணர் இருந்த குகை இன்றும் உண்டு. பாதாள லிங்கத்தில் தவம் இயற்றிவிட்டு அருணாச்சலேஸ்வர் கோவிலில் இருந்த ரமணர் பொதுமக்களின் தொந்தரவின் காரணமாக இங்கே வந்தமர்ந்தார். பகவான் ரமணர் தவத்தாலும் நிஷ்டையாலும் பல ஆண்டுகளாக மெளனத்தில் இருந்தார். அதன் பிறகு முதல் முதலாக உபதேசம் அளித்த இடம் பவளக்குன்றுதான். அந்த சம்பவம் சுவாரசியமானது.

வீட்டை விட்டு வந்த பிறகு ரமணரை அவர் தாயார் முதல் முதலாக பவளக்குன்றில் தான் சந்தித்து மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார். எந்த பதிலும் சொல்லாமல் ஒருவார்த்தையும் பேசாமல் எங்கோ கண்களை நிலைபடுத்தி அமர்ந்திருக்கிறார் ரமணர். தினமும் காலை முதல் இரவு வரை தாயார் அவரை கேட்டுக்கொண்டே இருக்கிறார். இவ்வாறு ஒருநாள் இரண்டு நாள் அல்ல பதினைந்து நாள் கழிந்தது. தாயாருக்கோ அவர் வெளி நிலையில் மகனாக தெரிகிறார். ரமணரின் உள் நிலையோ முற்றிலும் ஞான சாகரமாக இருந்தது. கடைசியில் ஒரு சிறு காகிதத்தில் ரமணர் மஹாவாக்கியத்தை எழுதி தாயாரிடம் கொடுத்தார். அதை படித்ததும் தனது பிள்ளையின் உண்மை நிலையை உணர்ந்து கொண்டார் அந்த தெய்வத்தாய். அந்த மஹாவாக்கியத்தை பார்த்தால் ரமணர் தன் தாயாருக்காக சொன்னதாக தெரியவில்லை.

நீங்களே அதை படியுங்கள்....


அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

வேறு உபதேசங்கள் வேண்டுமா? இவ்வரிகளை முற்றிலும் புரிந்துகொண்டோமானால் மனதில் பேரமைதி குடிகொள்ளும். இக்குன்று சக்திநிலையில் இன்றும் இருப்பதை அங்கு சென்று வழிபட்டாலே உணர முடியும். பல சித்தர்கள் மற்றும் யோகிகள் இங்கே சமாதி நிலையில் இருந்தார்கள் மற்றும் ஜீவ சமாதியாக இன்றும் இருக்கிறார்கள்.

பிறரால் தொல்லை கொடுக்காத இடம் என்பதால்
திருவண்ணாமலையில் அதிகமாக நான் இருந்த இடம் இது. அந்த மூன்று நாட்களில் இரவுகள் எனக்கு இங்கே கழிந்தது. பவளக்குன்று கோவிலின் முன் வளைந்த படிக்கட்டுக்கு அருகே இருக்கும் பெரிய பாறைதான் எனது மஞ்சம். என்னிடம் இருந்த துணி மூட்டையே தலையணை. கடந்த இரண்டு பகல் வேளையில் பல இடங்களுக்கு சென்றுவிட்டு பிறர் தானாக கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்து முழுமையான ஆனந்த நிலையில் இருந்தேன். அன்று வளர்பிறை ஏகாதசி. இன்னும் நான்கு நாளில் பெளர்ணமி வரும் ஆயுத்தமாக சந்திரன் தனது அழகைகாட்டிக் கொண்டிருந்தார்.

பவள குன்றின் முன்புறம் நான் படுத்திருந்த பாறை.

எனது தலைக்கு மேல் அருணாச்சல மலை நிலவொளியில் ஜொலித்தது,
வலது பக்கம் அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்பது வெண்குன்றுகள் போல காட்சி அளித்தது. இதமான காற்றும், பாறையின் குளிரும் அர்த்தநாரீஸ்வரின் மடியில் நான் இருக்கிறேன் என்பதற்கு சான்றுகளானது.

அப்பொழுது தான் என் ஆன்மீக வாழ்வில் அந்த முக்கிய சம்பவம் நிகழ்ந்தது.

(தொடரும்)
படங்கள் உதவி : http://richardarunachala.wordpress.com

Monday, August 24, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 12

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
-----------------------------------------------------திருமந்திரம் 1857

தமிழக கோவில்கள் எப்பொழுதும் பிரம்மாண்டமானது. தமிழக ஆன்மீகவாதிகளின் ஆன்ம ஆற்றலை போல விசாலமானது. கோவிலின்
பிரகாரங்கள் அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் என எத்தனை ஆண்டுகள் அதில் தங்கள் வாழ்நாளை தியாகம் செய்தார்கள் என்ற வியப்பு மேலிடும்.

வடநாட்டில் இருக்கும் கோவில்கள் இத்தகைய பிரம்மாண்டம் இருப்பதில்லை. கோபுரங்களில் வேலைப்படுகள் இத்தனை இல்லை. மத்திய பிரதேசம் தாண்டினால் கோவில்கள் உங்கள் வீட்டின் அளவில்தான் இருக்கும். இதற்கு காரணம் வட நாட்டில் இருந்த அரசர்கள் தங்கள் அரண்மனையை கட்ட எடுத்த முயற்சி கோவிலுக்கு செய்யவில்லை.

தென்நாட்டில் அரண்மனையை காட்டிலும் கோவில்களின்
முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. ஆன்மீகம் மட்டுமலாமல் தென்பகுதி கோவில்கள் சமூகத்தின் கலாச்சார மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு இருந்ததால் பிரம்மாண்ட வடிவம் கொண்டது.

திருவண்ணாமலை பயணம் செய்பவர்கள் அனேகமாக முதலில் வரும் இடம் அருணாச்சலேஸ்வர் கோவில். பலர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு வந்து பிறகு கிரிவலம் செய்து பஸ் ஏறி ஊர் செல்லுவர்கள். நம் மக்களை பொருத்தவரை இது தான் திருவண்ணாமலை பயணம். இப்படி பயணம் செய்வதற்கு ஊரில் இருக்கும் வரைபடத்தில் திருவண்ணாமலையை பார்த்துக்கொள்ளலாம்.
அருணாச்சலேஸ்வரர் கோவில் கிழக்கு கோபுரத்தில் அருகில் .....

இந்தியாவின் மிகபிரம்மாண்டமான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அதற்கு பிறகு இத்தலமே பெரியது. அங்கே சக்திக்கு முக்கியத்துவம் என்றால் இங்கே சிவனுக்கு முக்கியத்துவம். மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் முழுவதும் சிற்பத்தால் நிறைந்திருக்கும். இங்கே சிற்பம் இல்லாமல் சிவ நிலையில் இருக்கிறது நவ கோபுரங்கள். கோவில் கட்டுமானத்திலும் ஆன்மீகத்தை புகுத்திய நம் சான்றோர்களை நினைத்து மெய்சிலிர்க்காமல் இருந்தால் நம் மெய் பொய்யாகிவிடாதா?

பல மன்னர்களின் அருட்கொடையால் விண்ணை தொடும் அளவுக்கு ஒன்பது கோபுரங்கள் கொண்ட கோவில். அருணகிரி நாதர், இடைக்காட்டுச் சித்தர் போன்ற யோகிகளும் பல ஞானிகளும் சமாதி கொண்ட இடம். திருவண்ணாமலை பகுதி முழுவதும் எத்தனையோ யோகிகளின் சமாதி இருந்தாலும் அருணகிரி நாதரும், இடைக்காட்டு சித்தரும் இன்றும் கோவிலின் உள் மக்களை உயிர்ப்பித்துவருகிறார்கள்.

அருணகிரி
நாதர் இறைவனை நோக்கி தவம் இருந்து அவர் காட்சி தராத நிலையில் தற்கொலை செய்ய கோபுரத்தில் ஏறி குதிக்கிறார். அவரை கிளிவடிவமாக்கி தடுத்த இடம் இந்த கோவில். அங்கே கிளி ரூபமான சிலையுடன் கோபுரம் காட்சி அளிக்கிறது.

அருணகிரி நாதர் இக்கோவிலில் திருப்புகழ் பாடினார். இவரின் பெயரே ‘அருண கிரி' என இருப்பதை கவனித்தீர்களா? இவரின் வாழ்க்கையில் அனேக அதிசயம் நிகழ்ந்ததாக கதைகள் கூறிகிறார்கள். நமக்கு எதற்கு அதிசயம்.? அவரின் பாடல்வரிகளில் இருக்கும் ஆன்மீகத்தை உணருங்கள் உணர்ந்தால் அவருக்குள் ஏற்பட்ட அதிசயத்தை உணர்வீர்கள். கந்தரனுபூதியில் கடைசி பாடல் இது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


இறைவனை எங்கும் எதிலும் உணர்ந்தவருக்கே இவ்வரிகள் சாத்தியம். ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்...!

முருகனுக்கும் சிவனுக்கும் ஒரே கோவில் சிறப்புடையதாக இருக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மட்டும் என சொல்லலாம்.

முருகனை முழுக்கடவுளாக ஏற்றவர்களும், சிவனை ஏற்றுக்கொண்டவர்களும் ஒரு திருத்தலத்தில் பாடி பரவசம் கொண்டார்கள். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்று தொட்டு ஏனைய யோகிகள் தரிசித்து ஆசிர்வதித்து சாமாதிகண்டார்கள்.

பாதாள லிங்க கருவறையின் முகப்பில். பின்புறம் பகவான் ரமணர்.

இக்கோவிலின் கிழக்கு
பகுதியில் இருக்கும் பாதாள லிங்கம் எனும் இடத்தில் ரமணர் தவம் இருந்தார். பாதாள லிங்கம் என்பது பல அடி ஆழத்தில் இருக்கும் ஒரு சிவ லிங்கம் கொண்ட சன்னிதி. ரமணர் பாதாள லிங்கத்திற்கு உள்ளே சென்று அங்கிருக்கும் சிவனை அரவணைத்தவாறு தவம் செய்ய துவங்கும் பொழுது அவருக்கு வயது 16. அவ்வாறு அவர் தவம் செய்யும் பொழுது சிறுவர்கள் பாதாள லிங்க சன்னிதியை அதற்கு உண்டான கல் கதவை வைத்து மூடிவிட்டார்கள். நவீனகாலத்தில் பாதாள சாக்கடை இரும்பு மூடியால் மூடுவது போல மூடி விட்டார்கள்.

பல நாட்கள் இடைவிடாது ரமணர் அங்கே தவம் இருந்தார். ஒரு பகுதி உடல் அசையாமல் இருந்ததால் உணர்வற்று பூச்சிகள் அரிக்க துவங்கிவிட்டது. சேஷாத்திரி ஸ்வாமிகளின் உள்நிலையில் அவர் அப்படி இருப்பது தெரிந்து ரமணரை வெளியே கொண்டுவந்து சேர்த்தார். அச்சமயம் ரமணரின் உடல் உணர்வற்று நிர்வாணமாக பூச்சிகள் அரித்தவண்ணம் இருந்தது.

தற்காலத்தில் சில யோக பயிற்சி பள்ளிகளால் தவம் என்ற வார்த்தை தடம்புரண்டு இருக்கிறது. தவம் இருப்பது என்பது இடம், காலம், சூழல் மறந்து தொடர்ந்து உள் நிலையில் அடங்கி இருப்பது தவம். முனிவர்கள் காட்டில் நாள்கணக்கில் அசைவற்று இருப்பார்களே அது பெயர் தவம். சில யோக பயிற்சி பயின்றவர்கள் காலையில் நான் இரண்டு மணிநேரம் தவம் செய்தேன் எண்பார்கள் இதை கேட்கும் பொழுது என்ன சொல்லுவதென்றே தெரியாது. தடகள வீரரிடம் சென்று 'நூறு மீட்டர் மராத்தான் ஓட்டம் ஓடலாமா' என கேட்டால் அவர் என்ன செய்வார்? தியானம் என்பது நூறுமீட்டர் ஓட்டம் போல, தவம் என்பது மராத்தான் ஓட்டம் போல நான்ஸ்டாப் தியானம் தவம் என புரிந்துகொள்ளுங்கள்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அனேக சிறப்புகள் உண்டு. மூன்று தீர்த்தம் உள்ள கோவில், நான்முக லிங்கம் உள்ள கோவில், நவ கோபுரம் கொண்ட கோவில் என சொல்லிக்கொண்டே போகலாம்.அருணாச்சலேஸ்வர் கோவிலின் உள்ளே எந்த இடம் பார்க்க வேண்டியது என்றால் ஒவ்வொரு அனுவும் என சொல்லலாம். இருந்த பொழுதிலும் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண ஸுப்ரமணியர், கருவரை பின்புறம் மேற்கு கோபுரம் அருகில் இருக்கும் இடைகடார் சமாதி என யாருக்கும் அதிகமாக கண்களில் சிக்காத சில தெய்வீக கருவரையை கூறலாம்.

தமிழக கோவில்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் நவீன காலத்தில் “அருள்மிகு” ஆனதும் எனக்கு அதில் பற்றுதல் இல்லாமல் போனது. அதிக வருமானம் என்ற பொருளாதார நோக்கில் அரசு கையகப்படுத்தியதன் விளைவாக கருவறை வரை காசு தேவைப்படுகிறது. கையில் காசில்லாமல் என்னை போன்றவர்கள் கோவிலுக்கு செல்ல முடியுமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஈஸ்வரனை அருகில் சென்று பார்க்க வேண்டுமானால் பக்தி மட்டுமல்லாமல் நீங்கள் 25 ரூபாய் உடன் செல்ல வேண்டும்.

பிரபலமான தமிழக கோவில்களில் எனக்கு சில மனக்குறை உண்டு. கருவரை மண்டப வாசலில் “இப்பகுதிக்கு மேல் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி” என வைத்திருப்பார்கள். அனேக கோவிலில் அதை பார்த்தவுடன் நான் திரும்பி விடுவேன். எனக்கு அத்தகுதி இல்லையே..!

வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வருவதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மட்டும் அனைவருக்கும் அனுமதி உண்டு. ஆகம விதிகள் டாலரால் மறைக்கப்படும் - தட்டிக்கேட்கும் ஊராரின் வாய் யூரோவால் அடைக்கப்படும் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருபக்கம் சங்கடமாக இருந்தாலும் இவர்கள் இங்கே மட்டுமாவது அனுமதிக்கபடுவது எனக்கு ஆறுதலை அளிக்கிறது.

வருடத்திற்கு பல முறை திருவண்ணாமலை சென்றாலும் கோவிலுக்கு சில முறையே செல்லுகிறேன். இதன் காரணத்தை வெளியே
சொல்ல முடியாது. கோவிலை உள்ளே சென்று பார்ப்பதை விட வெளியிலிருந்து கோவிலின் கட்டமைப்பை ரசிப்பது எனக்கு பிடிக்கும். கோவிலை கந்தாஸ்ரமம் என்ற அருணாச்சல மலையின் பகுதியிலிருந்து பார்த்தால் எனக்கு பிடிக்கும். அதே போல மற்றொரு இடத்திலிருந்து பார்த்தால் கோவில் அட்டகாசமாக தெரியும்.
கந்தாஸ்ரமத்தின் முன்புறத்திலிருந்து கோவிலின் தோற்றம்

நண்பர்களின் சவாலால் கையில் காசில்லாமல் திருவண்ணாமலை வந்து கோவிலுக்கு செல்லாமல் திருவண்ணாமலையில் பல
இடங்களில் சுற்றி திரிந்தேன் அல்லவா? அப்பொழுது அதிகம் நேரம் கழித்த இடம் இது தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம். அது ஒரு ஆற்றல் மிகுந்த இடம்...


(தொடரும்)

Saturday, August 22, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 11

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழிய வைத்தானே.
-----------------------------------------------------------------திருமந்திரம் - 2882

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் அனேக மலை சார்ந்த தெய்வீகத்தலங்களில் மலையின் உச்சியில் அல்லது மலையின் ஆற்றல் கொண்ட இடங்களில் கோவில் கட்டப் பட்டிருக்கும்.

இந்திய கலாச்சார கடவுள்களான சிவன்,விஷ்ணு, அம்மன், முருகன், விநாயகர் என அனைவருக்கும் மலைமேல் கோவில் இருக்கும். முருகனுக்கு அதிகமாக இருப்பதால் குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் என சொல்லுகிறார்கள்.

நாடி சாஸ்திரத்தின் அடைப்படையிலேயே மலையில் கோவில்கள் கட்டப்படுகிறது. உங்கள் ஸ்வாசமும் நாடிக்கும் தொடர்பு உண்டு என முன்பு பார்த்தோம்.

உங்கள் உடலின் வலப்பகுதியில் அழுத்தம் கொடுக்கபட்டால் இடது நாசியில் ஸ்வாசம் வரும் . அதாவது ஈடா நாடி வேலை செய்ய துவங்கும். இடப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் வலபகுதியில் ஸ்வாசம் ஏற்பட்டு பிங்கள நாடி வேலை செய்யும். இருபக்கத்திலும் அழுத்தம் கொடுத்தால் ஸுக்‌ஷமணா நாடி வேலை செய்து இரு நாசியிலும் வேலை செய்யும்.

மேற்கண்ட விஷயத்தை ஒரு சோதனையாக நீங்களே செய்து பாருங்களேன். உங்களுக்கு எந்த நாசி துவாரத்தில் ஸ்வாசம் வருகிறது என பாருங்கள். பிறகு ஸ்வாசம் வரும் பகுதியில் உள்ள உங்கள் கைகளை நிலத்திலோ அல்லது மேஜையிலோ நன்றாக ஊன்றிக்கொள்ளுங்கள். சில நிமிடங்களில் கவனித்தால் உங்கள் ஸ்வாசம் அடுத்த நாசியில் வரத்துவங்கும். இடது நாசியில் ஸ்வாசம் வருவதாக இருந்தால் இடது கையை ஊன்றுங்கள். வலது பக்கம் ஸ்வாசம் சில நிமிடத்தில் வரத்துவங்கும்.

இம்முறைக்கு நாடி சலனா என பெயர். யோகிகள் யோக தண்டம் என ஆங்கில எழுத்து “Y" போல ஒரு பொருள் வைத்திருப்பார்கள் அல்லவா? அவை இதற்கு (ம்) தான் பயன்படுக்கிறது. அவர்களின் நாடியை சமப்படுத்த கைகளில் இடம் மாற்றி அழுத்தம் கொடுத்துக்கொள்வார்கள்.

நம் முன்னோர்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததால் தான் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தாலோ, சாப்பிடும் பொழுது கைகளை ஊன்றி சாப்பிட்டாலோ அவ்வாறு செய்யாதே என கூறுவார்கள். கை மற்றும் உடலின் பாகங்கள் அழுத்தம் கொண்டால் உடலில் நாடி சலனம் ஏற்படும். சலனம் ஏற்படுவதால் நம் இயல்பான உடல் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்க படலாம்.

நாடி சலனத்தை சோதனை முறையில் செய்யுங்கள், தொடர்ந்து செய்யக்கூடாது. சரியான குருவின் வழிகாட்டுதலில் நாடியிடம் விளையாடுவது நல்லது.

நமது உடலின் நாடிகள் அனைத்தையும் தூண்டி ஆன்மீக நிலைக்கு இட்டு செல்லும் தன்மை ஸுக்‌ஷமணா நாடிக்கு உண்டு. அதனால் மலைக்கு மேல் கோவிலை கட்டிவிடால் இருகால்களையும் பயன்படுத்தி சம அளவு அழுத்தத்துடன் ஏறும் பொழுது உடலில் ஸூக்‌ஷமணா நாடி இயற்கையாகவே வேலை செய்யும். மலைக்கோவிகளுக்கு இனி செல்லும் பொழுது உங்கள் ஸ்வாசத்தை கவனிக்க தவறாதீர்கள். மலைக்கோவிலை அடைந்ததும் உங்கள் ஸ்வாசத்தை கவனித்தால் அவை இரு நாசிகளிலும் சரியான அளவாக வந்துகொண்டிருக்கும்.

[ குறிப்பு : கிருஸ்துவர்கள் இரு கால்களையும் மண்டி இட்டு வணங்கியும், இஸ்லாமியர்கள் இரு கால்களையும் அடுத்தி உட்கார்ந்து தொழுவதன் மூலமும் ஸூக்‌ஷமணா நாடியை தூண்டுகிறார்கள். நாடிகள் ஆன்மீகம் சார்ந்தது , மதம் சார்ந்தது அல்ல என புரிந்துகொள்ளுங்கள். ]

மலைமேல் கோவில் இருக்க காரணம் தெரிந்ததா? திருவண்ணாமலை திருத்தலத்தில் மட்டும் ஒரு விஷேடம் உண்டு. மலை மேல் கோவில் கட்டப்படாத ஒரு தெய்வீக ஸ்தலம் என்றால் அது திருவண்ணாமலை மட்டுமே. காரணம் மலையே இங்கு தெய்வமாக இருக்க மலையை உள்ளே வைத்து பிரம்மாண்டமாய் கோவில் கட்ட முடியுமா?

மலைமேல் ஏறுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் நாடி சலனம் தான். ஒரு இடத்தில் உட்கார்ந்து நாடியை மேம்படுத்த முடியும் என்றாலும் இயற்கையுடன் பயணித்து நாடியை மேம்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த ஒருவிஷயம். மலைஏறும் திறன் இருந்தும் சிலர் மலைக்கோவிலுக்கு டோலியில் செல்வார்கள் அவர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும்.

ஆன்மீக அன்பர்கள் பலர் அருணாச்சல மலை மேல் ஏறுவதில்லை. காரணம் மலையே இங்கே கடவுளாக பார்க்கப்படுவதால் அதில் கால்வைக்க தயங்குகிறார்கள். இறைவன் அங்குமட்டுமா இருக்கிறார் ? ஒரு அடிக்கு ஒரு லிங்கம் இருக்கும் திருவண்ணாமலை என அருணாச்சல புராணம் விவரிக்கிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு லிங்கம் இருக்குமாம். அப்படி பார்த்தால் இவர்கள் ஊருக்குளேயே வர முடியாதே..!

அருணாச்சல மலையில் சரியான நடை பாதைகள் கிடையாது. கந்தாஸ்ரமம் எனும் பகவான் ரமணர் வாழ்ந்த இடம் வரைக்கும் தான் நல்ல பாதை உண்டு. பிறகு சுண்ணாம்பால் அம்பு குறி வரைந்து மேலே எப்படி செல்ல வேண்டும் என பாறைகளே நமக்கு வழிகாட்டும்.

நான் எனது மாணவியுடன் மேலே செல்ல செல்ல வெய்யிலும் மேலே சென்றது. மலையின் இடையே எங்களுடன் பயணத்திற்கு வேறு ஒரு வெளிநாட்டு அன்பரும் இணைந்து கொண்டார். அவரிடம் தண்ணீர் இல்லாததால் பாறையில் படுத்துவிட்டார். நீர் கொடுத்து அவரை தளர்வாக்கி அழைத்து சென்றோம். அன்று பார்த்து பாறைகள் உருகிவிடுமே என நினைக்கும் அளவுக்கு வெப்பம். அக்னி மலை என சொல்லுவதற்கு காரணம் கற்பிக்கும் வானிலை.


நான் தனியாக வந்திருக்க கூடாது என புலம்பிய படியே எங்களுடன் அந்த வெளிநாட்டு அன்பர் ஏறிக் கொண்டிருந்தார். அவருக்கு மலை ஏற்றமும் வெய்யிலும் புதுசு என்பதால் பாவம் மிகவும் மனசஞ்சலம் கொண்டுவிட்டார். யாரையும் துன்புறுத்தாதவர் ஆயிற்றே அருணாச்சலம்.... நாங்கள் உச்சியை அடைய சில தூரங்கள் இருக்க அங்கே மேக மூட்டம் சூழ்ந்தது. எங்களை சுற்றி முழுவதும் மேகங்கள். உச்சியும் தெரியவில்லை. கீழே நகரமும் தெரியவில்லை. எங்கும் குளிர்ச்சி குளிர்ச்சி .கேட்டதை கொடுப்பவர் என மீண்டும் அருணாச்சல மகாத்மியத்தை உணர்ந்தேன்.

மூவரும் உச்சியை அடைந்து கண்கள் மூடி தியானிக்க துவங்கினோம்..

திடீரென .......ஹோம்ம்ம்ம்ம் ............என்ற சப்தம் கேட்க துவங்கியது. நீண்ட அளவில் அதுவும் தீர்க்கமாக கேட்க துவங்கியது. சில விநாடிகளில் அதீத சப்தத்துடன் காதுகளின் கேட்கும் திறனுக்கும் மிகுதியாக கேட்டது.

நான் அந்த வெளிநாட்டுகாரர் சப்தம் எழுப்புகிறார் என நினைத்து கண்கள் திறந்து பார்த்தால் அவரும் எனது மாணவியும் காதுகளை இறுக அழுத்திகொண்டு கண்களில் நீர்வர உட்கார்ந்திருக்கிறார்கள்.

சுற்றியும் மழை மேகம், நாங்கள் அமர்ந்திருக்கும் இடமும் மேகமும் தவிர எதுவும் தெரியவில்லை. எங்களை சுற்றி பிரணவ மந்திர ஜபம் இயற்கை நிகழ்த்துகிறது. வேறு என்ன வேண்டும்? முக்தி வேண்டாம் உன்னை தரிசிக்க மனிதனாகவே பிறக்க வரம் கொடு என மாணிக்க வாசகர் சும்மாவா கேட்டார்? கீழ் இறங்கி வந்ததும் கண்ணீர் மல்க என்னிடம் விடை பெற்றார் அந்த வெளிநாட்டு அன்பர்.

இத்தனை பகுதிகளாக அருணாச்சல அருமைகளை தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஆசியாவிலேயா இரண்டாவது பெரிய கோவில் மற்றும் பிரம்மாண்டமாக கட்டபட்டு நவீன கட்டட கலைக்கு சவாலாக இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் பற்றி ஒன்றும் பேசவில்லையே?

அடுத்த பகுதியில் தரிசிப்போம்...

(தொடரும்)

Thursday, August 20, 2009

தெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும்

நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் கணபதி. உயர் நிலையில் இருக்கும் ஞானி ஆகட்டும், சராசரி மனிதனாகட்டும் கணபதியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உருவ நிலையிலும் சரி , பூஜா முறையிலும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம் விநாயகர். புராணங்கள் விநாயகரின் பிறப்பை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறினாலும், உள்ளார்ந்த ஞான நிலையில் கணபதியை புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதபட்டது தான் இந்த கருத்துக்கள்.

பாமரர்கள் புரிந்து கொள்ளுவதற்காக உருவகப்படுத்தபட்ட கதைதான் உமாதேவி தனது குளிக்கும் தருவாயில் விக்னேஷ்வரரை உருவாக்கினார் என்பது. அந்த கதையை உற்று நோக்கினால் சிவன் , சக்தியை காண வரும்பொழுது சிவனை தடுத்து போர் புரியும் பகுதி உண்டு. முடிவில் சிவன் விக்னேஷ்வரரின் தலையை கொய்து பிறகு யானையின் தலையை வைத்ததாக வரலாறு கூறுகிறது.

புராண கதையின் சுவையில் நாம் பக்தியுடன் இருப்பது தவறல்ல, ஆனால் அதை பற்றி சிந்திக்காத முட்டாளாக இருப்பது தவறு. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சக்தி உருவாக்கிய விக்னேஷ்வரர் சிவனை பிரித்தரியாத மூட படைப்பாக இருக்க முடியுமா?

இல்லை சக்தி தான் அவ்வாறு உருவாக்குவாளா? அண்ட சராச்சரத்திற்கும் நாயகனான சிவன் தன் முன் இருக்கும் பாலகன் யார் என தெரியாமல் போர் புரிவாரா? இவை எல்லாம் திருவிளையாடலுக்காக என கொண்டாலும் தலையை கொய்து போடும் அளவிற்கா திருவிளையாடல் நடக்கும்.? எந்த அசுரனையும் வதம் செய்யாலம் அவனுக்கு வரம் மட்டுமே தருபவர் அல்லவா ஈசன்?

புராண கதைகள் அனைத்தும் கூறப்பட்டது உங்கள் மனதில் கணபதியின் உருவம் பதியவேண்டும் என்பதற்கும் உங்களின் பக்தி பெருகவேண்டும் என்பதற்குமே. ஆனால் நாத்திக வாதம் பேசும் சிலர் கணபதியின் உருவை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.

ஒரு வேடிக்கை கதை ஒன்று உண்டு. ஒரு நாத்திகரும், ஆத்திகரும் நண்பர்கள். தினமும் காலையில் ஒன்றாக நடைபயிற்சி செய்பவர்கள். நாத்திகர் கையில் தனது செல்ல நாய் குட்டியை பிடித்தபடி வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் கொள்கையில் வேறுபட்டவர்கள்.


ஆத்திகர் நடைப்பயிற்சியின் இடையே வந்த அரச மர விநாயகரை வழிபட்டு விட்டு நடையை தொடர்ந்தார். அப்பொழுது நாத்திகர் வேடிக்கையாக “நண்பரே இது என்ன முட்டாள் தனம் தினமும் இந்த கல்லை வணங்கலாமா? அதற்கு பதில் உயிர் உள்ள இந்த நாய் குட்டியை வணங்கலாமே. இது தான் என் சாமி..!” என்றார் கிண்டலாக. ஆத்திகர் புன்சிரிப்புடன், “நண்பரே .. உங்கள் நாய் குட்டியை என் சாமி மீதி போடுங்கள். என் சாமியை உங்கள் நாயின் மீது போடுகிறேன். எது சக்தி வாந்தது என தெரியும். சக்தி எதில் இருக்கிறது என முடிவு செய்ய வேண்டியது நாம் தான்..!” என்றார். கடவுளை எந்த பொருளிலும் காணலாம். ஆனால் இதில் தான் நீ காணவேண்டும் என சொல்லுவது அஹங்காரத்தின் அதிகாரமே தவிர வேறொன்றும் அல்ல.

வேடிக்கை கதைகள் இருக்கட்டும் கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?


விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ - உ - ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக்கொண்டே கணபதியின் உருவை நினைத்துப்பாருங்கள்.


ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதாவது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந்திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள்ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான் , சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள்ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?
நான் கடவுள் படத்தை பகடி செய்து நான் உருவாக்கிய நான் விநாயகர்

அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என்கிறார்கள். கணபதி என்ற பெயருக்கு கணங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்களின் அதிபதி எனலாம். உண்மையில் கணம் என்றால் காலத்தின் அளவு கோல். அதனால் காலத்தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக்கூறலாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் - தடைகளை ஏற்படுத்துபவரும் நீக்குபவரும் என பொருள்படும்.

காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகிவிடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.


ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம்.
கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக்கூடியது அல்ல. அதை விவசாயம் செய்ய முடியாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம்புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.

மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமையான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற்று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக்னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட்டுகிறது !

பிள்ளையாருக்கு
பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படைத்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்களை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இருக்கக்கூடாது.

நாடியும் விநாயகரும் :

ஆன்மீகத்தில் இருக்கும் மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன். உடலின் வலது பகுதி மூளையின் இடது பக்கதிலும் ; இடப்பகுதி வலது மூளையாலும் கட்டுபடுத்தப்படுகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.


நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் அமைந்திருக்கிறது.


கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி செய்து விட்டு விநாயகரின் விக்ரஹ மகிமையை கூறவும். விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.

விக்னேஷ்வரர் உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்டவர் அதனால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். பிராணன் இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அரசமரம் மூலம் சுத்தப்படுத்துகிறோம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை அதனால் தான் இது விநாகயர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுவோம். வாருங்கள் ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

Wednesday, August 19, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி பத்து

விவசாயம் செய்யும் பூமியில் அனேக களைகள் இருக்கும். களைகளை அகற்றி நீர்பாய்ச்சினால் நல்ல ஒரு அறுவடை கிடைக்கும். இல்லை என்றால் விழலுக்கு இறைத்த நீர் என கூறுவார்களே அப்படி ஆகிவிடும். செயற்கையாக கவனத்துடன் செயல்படும் பொழுதே இவ்வாறு அனேக களைகள் வந்துவிடும். இயற்கை காடு என்றால் களைகளுக்கு கேட்கவா வேண்டும்?

அது போலத்தான் திருவண்ணாமலையில் ஆதி குரு முதல் அனேக ஜீவன் முக்தர்கள் தோன்றினார்கள். தோன்றி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு இடையே சில களைகளும் உண்டு. அவற்றை கண்டுணர்ந்து அகற்றிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஞான அறுவடையில் அதிக மகசூல் கிடைக்கும்.
அண்ணாமலையார் கோவிலில் ஒரு சாது

தென் பாரத திருநாட்டில் ஸ்ரீ சைலத்திற்கு பிறகு திருவண்ணாமலையில் தான் சாதுக்களும், யோகிகளும் கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள். எந்த பொருளும் கையில் இல்லாமல் பறவை போல சுற்றி திரியும் சாதுக்களை காண்டால் எனக்கு ஆன்மீக நிலையையும் தாண்டி வரைமுறையில்லாமல் பொறாமை ஏற்படும்.

ரமணாஸ்ரமத்தில் தினமும் காலை 11 மணிக்கு நாராயண சேவை என்ற ஒரு நிகழ்வு உண்டு. திருவண்ணாமலையில் இருக்கும் அனேக சாதுக்களும் இங்கே கூடிவிடுவார்கள். அவர்களை வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் ரமணாஸ்ரமத்தில் உணவு வழங்குவார்கள். சாதுக்கள் ருசிக்காக சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு பசிக்கும் பொழுது ஏதோ ஒருவகை சோறு வேண்டும். அவ்வளவுதான். சிலர் இரு கையையும் குவித்து அன்னம் பெற்று சில அடிகள் தள்ளி சென்று உண்பார்கள். பிறகு அங்கே இருக்கும் குழாயில் கைகளை கழுவி விட்டு சென்றுவிடுவார்கள். அவ்வளவுதான்...

தினமும் உணவு உண்ண மாட்டார்கள். உணவு வாங்க பாத்திரம் கூட வைத்திருக்கமாட்டார்கள். இவர்கள் வாழும் பட்டினத்தார்கள். அந்த பாத்திரத்தால் வாழ்க்கையில் ஒட்டுதல் இருக்க கூடாது என்பது அவர்களின் சித்தாந்தம்.நாராயண சேவை என்ற இந்த இலவச உணவு முறை தினமும் தடையில்லாமல் செய்கிறார்கள். குறைந்தபட்சம் இருநூறு சாதுக்களாவது உண்பார்கள்.

திருவண்ணாமலை செல்லும் சமயங்களில் காலை பதினோரு மணிக்கு அங்கே
நடக்கும் இந்த அன்ன வேள்வியை கண்டு ஆனந்தமடைவது என் வாடிக்கை. எவ்வளவு பார்த்தாலும் அடங்காத ஆனந்தம்.

ரமணாஸ்ரமத்தில் நாராயண சேவை

சாதுக்கள் தவிர்த்து பிச்சைக்காரர்களும் உணவு உண்ண வருவதுண்டு. அவர்கள்
பிளாஸ்டிக் பையில் அல்லது பாத்திரத்தில் வாங்கிசெல்லுவார்கள். காவி உடை போட்ட காரணத்தால் அவர்கள் சாதுக்கள் என சிலர் எண்ணி ஏமாந்துவிடுவதுண்டு.

சாதுக்களின் முகம் மற்றும் உடை அவர்களின் தனித்தன்மையை காட்டும். சாதுக்கள் என்பவர்கள் அனேக ஆன்மீக முன்னேற்றம் கொண்டாலும் கூரையின் கீழ் தங்காமல் எந்த பொருளையும் சேர்க்காமல் இருப்பவர்கள். யாராவது யாசகம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளுவார்கள். யாரிடமும் காசு கொடுங்கள் என யாசகம் கேட்க மாட்டார்கள்.

பிச்சைக்காரர்களுக்கும் சாதுக்களுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் இருக்கிறோமோ அது போலவே சிலர் திருவண்ணாமலையில் நம்மை ஏமாற்ற “ஞானிகள்” வேஷம் போடுவதுண்டு. சின்ன சின்ன சித்து வேலைகள் கற்றுக்கொண்டு இவர்கள் செய்யும் சுட்டித்தனங்கள் தாங்க முடியாது.

அதிசயம் செய்பவர்களை கடவுளாக நினைக்கும் மக்கள் இவர்களிடம் நம்பி ஏமாந்துவிடுவார்கள். அருணகிரி நாதர் துவங்கி ரமணர் வரையும், அதன் பிறகு வந்த யோகி ராம்சூரத் குமார் போன்றவர்களும் அதிசயங்கள் எதையும் நிகழ்த்தி காட்டியதில்லை. அவர்கள் சொன்ன கருத்தால் மனிதர்களின் மனங்களில் அதிசயம் நிகழ்தது.

தெரியாமல் உங்கள் முழங்கை எதிலாவது முட்டினால் ஒருவித மின்சாரம் பாயும் அனுபவம் வரும் அல்லவா? அது போல பிறரை தொட்டால் மின்சார உணர்வு உண்டாக்கும் ஒரு சித்து இருக்கிறது. சில பிராணாயம பயிற்சிகளால் எளிதில் பெறமுடியும். இத்தகைய தேவையற்ற சித்துக்களை வைத்துகொண்டு வருபவரிடம் உனக்கு குண்டலினி ஆட்டிவிக்கிறேன் குந்துமணி விற்கிறேன் என சிலர் ஏமாற்றுவதுண்டு.

அவர்கள் முதுகை தொட்டதும் மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும். அவ்வளவுதான். நானும் குண்டலினி அனுபவம் பெற்றுவிட்டேன் என அந்த நபர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியாது. இந்த சித்துக்களை வைத்துகொண்டு சிலர் உலக புகழ் (போலி) யோகிகளானதும் உண்டு.

எனது வெளிநாட்டு மாணவியுடன் மலைமேல் ஒரு சம்பவம் நடந்ததாக சொன்னேன் அல்லவா? அதற்கு அடுத்த நாள் காலை 4 மணிக்கு தியானம் செய்ய நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து ரமணாஸ்ரமத்தின் தியான மண்டபத்திற்கு செல்ல தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

தெருவில் சில சாதுக்கள் படுத்துதூங்கி கொண்டிருந்தனர். அதில் ஒரு சிலர் மட்டும் தூங்காமல் உற்கார்ந்து இருந்தனர். நான் அவர்களை கடக்க முயலும் பொழுது அதில் ஒருவர் சப்தமாக “டேய்....” என்றார்.

நான் திரும்பவில்லை. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தேன்.

“டேய் உன்னைத்தாண்டா”.. என்றார்.

நான் நிதானத்துடன் நடந்தேன். ஆனால் திரும்பவில்லை. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருப்பேன்.

“டேய் ஓம்காரு உன்னத்தாண்டா..” என்றார்.

நினைத்து பாருங்கள் ஒருவர் உங்களின் பெயரை சொல்லி காலை 4 மணிக்கு கூப்பிடுகிறார். அவருக்கு உங்களின் பெயர் தெரிந்திருக்கிறது....! ராம சாமி, குப்பு சாமி என குத்துமதிப்பாக அடித்துவிடவில்லை. ஸ்பொஷ்டமாக “ஓம்கார்” என்கிறார்.

நான் நின்றேன். திரும்பி அவரை பார்த்தேன்.

“உன் பேரு மட்டுமில்லை நேத்து மலைக்கு மேல என்ன நடந்துனும் எனக்கு தெரியும்” என்றார்.

நானும் எனது மாணவியும் மலைக்கு மேல் சென்றதும் இவருக்கு தெரிந்திருக்கிறது.

அவரிடம் நான் கேட்டேன், “அதுக்கு இப்ப என்ன? உங்களை நமஸ்காரம் பண்ணனுமா?” என்றேன்.

அவ்வளவுதான்..

அவர் அமைதியாகிவிட்டார். நான் ரமணாஸ்ரமத்திற்கு தியானம் செய்ய சென்றேன்.

இவ்வாறு சித்துக்களை காட்டி நாம் வாய்பிளந்து நிற்கும் பொழுது நமக்கே வாய்க்கரிசி போடும் பித்தர்கள் இங்கே அதிகம். நீங்கள் இதை பெரிதுபடுத்தாமல் ஒதுக்கிவிடவேண்டும். மாயையை விலக்க திருவண்ணமலை வந்து மாயையில் விழலாமா?

முழுமையானவர்கள் என்றும் உங்களிடம் அதிசயம் காட்டமாட்டார்கள். உங்களை அறியாமல் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்துகொண்டிருப்பார்கள். அதற்கு விளம்பரம் தேடமாட்டார்கள்.

பலாப்பழத்தை திருடிய திருடன் எவ்வளவு நாள் தான் அதை தனது நாற்காலிக்கு கீழே மறைத்துவைக்க முடியும்? அது போல ஞானிகள் தங்களை பற்றி யாரிடமும் கூறுவதில்லை. அவர்களின் இருப்பு எப்படியோ அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.

பகவான் சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு பரதேசியாக சஞ்சரித்தவர். அனைத்து வேதங்களையும் இளவயதில் கற்றவர் என்றாலும் இருபது வயதில் அவதூதராக அப்படியே திருவண்ணமலைக்கு வந்துவிட்டார். எங்கும் தங்கமாட்டார்.
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

திருவண்ணாமலையை சுற்றி சுற்றி வருவார். திருவண்ணாமலையில் இருக்கும்
அண்ணாமலையார் கோவிலின் உள்ளே இருக்கும் முருகன் சந்நிதியில் அமர்ந்திருப்பார். இவர் எப்படி பட்டவர் என யாருக்கும் தெரியாது. ஊரை சுற்றி வரும் பொழுது ஏதாவது கடையில் நிற்பார். அந்த கடைகாரர்கள் ஏதாவது அவருக்கு கொடுப்பார்கள். சென்றுவிடுவார். யாரிடமும் பேச்சுக்கிடையாது..!

நாள் முழுவதும் அந்த கடையில் வியாபாரம் தூள் பறக்கும. என்றைக்கும் இல்லாத வியாபாரம் நடக்கும். இது படிப்படியாக மக்கள் உணர ஆரம்பித்தார்கள்.சேஷாத்திரி ஸ்வாமிகள் என்றும் இதை சொன்னது கிடையாது. அவருக்கு பிச்சை போட்டவர்கள் உணர்ந்தார்கள். சேஷாத்திரி ஸ்வாமிகளும் எத்தனைநாள் தான் அவரின் ஆன்மீக பலாபழத்தை மறைக்க முடியும்?

இப்படித்தான் அனேக சாதுக்களும், அவதூதர்களும், ஞானிகளும், மஹான்களும் பார்க்க எளிமையாக இருந்தாலும் உள்ளே மஹாஉன்னத நிலையில் இருக்கிறார்கள். அதனால் அதிசயம் நிகழ்த்துபவர்களை நான் எப்பொழுதும் நகைச்சுவையுடனே அனுகுவேன்.

அருணாச்சல மலையில் வேறுயாரும் இல்லாத இடத்தில் நான், என்
மாணவி மற்றும் மற்றொருவருடன் நிகழ்ந்த நிகழ்வை ஒருவர் சொன்னார் என்றவுடன் அவரிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு தோன்றவில்லை மாறாக ஏளனமே தோன்றியது. சின்ன சித்துக்கள் வைத்து என்ன செய்துவிட முடியும்? சித்தமில்லாமல் இருப்பவருக்கு சித்துகள் எதுக்கு?

அது சரி. மலையில் என்ன நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? தெருவில் உற்கார்ந்து இருக்கும் ஒரு சாதுவிற்கு தெரிந்தது உலகத்தையே விரல் நுனியில் உலாவும் உங்களுக்கு தெரியாதா?

எதற்கு தர்க்கம் சொல்லிவிடுகிறேனே...

நானும் எனது மாணவியும் காலை ஏழு மணிக்கு மலை ஏறத்துவங்கினோம்,...

(தொடரும்)

Tuesday, August 18, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஒன்பது

யோகிகளும் மஹான்களும் கிரிவலம் செல்லும் பொழுது இடப்பக்கமாக செல்லுகிறார்கள். காரணம் உலகவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் வலப்பக்கம் சுற்றி பரமனுடன் தங்களை பிணைத்துக்கொள்ளுகிறார்கள். முக்திஅடைதல் என்ற மஹாத்தத்துவதில் இயங்கும் யோகிகள் இடபக்கம் சுற்றுவது கூட நன்மைக்குதான். காரணம் அப்பொழுது தானே நாம் வலப்பக்கம் சுற்றும் பொழுது நேருக்கு நேர் சந்திக்க முடியும்?

எனது பரதேசி பயணத்தில் சில உறுதிமொழியை எனக்குள் எடுத்திருந்தேன். எங்கும் யாசகம் கேட்க கூடாது. யாரிடமும் உதவி பெறக்கூடாது என்பது போன்ற வைராக்கிய கணக்குகள் என்னுள் இருந்தது. பணம் இல்லாமல் திருவண்ணாமலை வந்து செல்லுவது சிரமம் இல்லை என பலர் நினைக்கலாம்.

உணவுக்காக கையேந்தி நின்றால் என்ன கவலை? யாராவது ஒருவராவது உதவ மாட்டார்களா? இல்லை ஒரு ஆசிரமத்தில் தங்கினால் அவர்கள் உணவு இடமாட்டார்களா? வேலை எளிதாக முடியும் அல்லவா? எனது பயணத்தில் காசில்லாமல் சென்று திரும்ப வேண்டும் என்று மட்டுமே என நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அத்துடன் எங்கும் தங்கக் கூடாது. உணவுக்காக யாரிடமும் கேட்க கூடாது என்ற வைராக்கியம் வளர்த்துக்கொண்டேன்.

என் மனதுக்குள் இருந்த வைராக்கியம் என்னவென்றால், “இறைவன் அனைவருக்கும் உணவு வழங்குவான் என்றால் நான் இருக்கும் இடத்திற்கு கேட்காமலே உணவை வழங்க வேண்டும் அல்லவா?”. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். வைராக்கியத்தை காட்டிலும் ஆணவமே அதிகமாக எனக்குள் இருந்தது.

பிரம்மனின் ஆணவமே காணாமல் போன இடம் இது. நான் எல்லாம் ஒரு காசுக்கு ஆவேனா.? சக்தி வாய்ந்த இடங்களில் நமக்கு ஆணவம் தோன்ற காரணம் அந்த தலத்தின் சக்தியை நாம் உணரத்தான்..! இல்லையென்றால் மரக்கட்டை போல அங்கு சென்று வந்தால் என்ன உணர்வு இருக்க முடியும்?

திருவண்ணாமலையில் ஆற்றல் வாய்ந்த இடம் எது என கேட்பது மல்லிகையில் எந்த பகுதி மணக்கும் என கேட்பதை போன்றது. திருவண்ணாமலையே ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் பொழுது அதன் அருகில் எது நிற்க முடியும்? திருவண்ணாமலையின் மையத்தில் இருந்து மூன்று யோஜனை தொலைவில் இருக்கும் அனைவருக்கும் திருவண்ணாமலை அருளாற்றலை வழங்குகிறது என அருணாச்சல புராணம் திடமாக கூறுகிறது.



அது என்ன மூன்று யோஜனை என உங்களுக்கு யோசனையா? ஒரு மாட்டுவண்டியில் பிணைக்கப்பட்ட மாடு தளர்வடையாமல் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அந்த தொலைவு ஒரு யோஜனை. இது சராசரியாக 8 கிலோமீட்டர் என கூறலாம். ஆக திருவண்ணாமலையை சுற்றி 25 கிலோமீட்டருக்கு அருணாச்சல கிரி தனது ஆற்றலை வெளிப்படுத்திவருகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய திருவண்ணாமலையில் முக்கியமாக அனுபவிக்க வேண்டிய இடங்கள் சில உண்டு.


கவனிக்கவும் பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல. அனுபவிக்க வேண்டிய இடங்கள்..!

நான் விவரிக்க போகும் இடங்கள் எல்லாம் எனக்கு பிடித்த இடங்கள். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம். தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சுற்றுலா அழைத்துவருகிறார்கள். அவர்கள் பார்க்கும் இடத்தை நான் கூறப்போவதில்லை. நாம் என்ன இன்பச் சுற்றுலாவுக்காகவா இடம் தேடுகிறோம்? அதனால் எனது பட்டியலை ஆன்மீக தலைப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

தெற்கு பகுதியில் நான் நடக்க துவங்கிய கிரிவலப்பாதையில் இருக்கும் அடுத்த முக்கிய இடம் பச்சையம்மன் கோவில் மற்றும் கெளதமர் ஆசிரமம். இங்கே பார்வதி தேவி கெளதம முனிவரின் ஆசிரமத்தில் தவம் இருந்ததாக கூறுகிறார்கள். தற்சமயம் இந்த இடம் சிதிலம் அடைந்து வருகிறது. நேர் அண்ணாமலை என திருவண்ணாமலை கோவிலுக்கு நேராக மலைக்கு பின்புறம் இருக்கும் இடம் இந்த நேர் அண்ணாமலை கோவில்.

அதிலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டரில் வருவது திருவண்ணாமலையில் எனக்கு மிகவும் பிடித்த இடம். முக்கிய நகரங்களின் மையப்பகுதியை ஹார்ட் ஆப்த சிட்டி என்பார்கள். திருவண்ணாமலையின் ஹார்ட் அதாவது ஆன்மீக இதயமாக செயல்படு இடம் அடி அண்ணாமலை.

இந்த கோவிலுக்கு பெளர்ணமி தவிர பிற நாட்களில் சென்றீர்கள் என்றால் நீங்களும் இறைவனும் மட்டும் தான் இருப்பீர்கள். அத்தனை (அத்துணை..!) அமைதி இருக்கும் கோவில். அடி அண்ணாமலை கோவில்தான் முதன் முதலாக திருவண்ணாமலையில் கட்டபட்ட கோவில்.
இக்கோவிலின் உண்மையான பெயர் “ஆதி அண்ணாமலை”.


அடி அண்ணாமலை கோவிலின் வடக்கு சுவர் முழுவதிலும் கிளிகள் மற்றும் புறாக்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் இருக்கும். நினைத்து பாருங்கள் பச்சையும்,சாம்பலும் மற்றும் வெள்ளையுமாக கோவிலின் சுவரில் பறவைகள் அமர்ந்திருக்கும் இயற்கையின் வண்ண விளையாட்டு எப்படி இருக்கும் என்று..... மாணிக்கவாசகர் இந்த கோவிலில்தான் முதன் முதலில் திருவாசகம் பாடினார். அடி அண்ணாமலைக்கு அருகில் மாணிக்க வாசகருக்கு ஒரு தனிக்கோவில் இங்கே மட்டுமே காண முடியும். அடி அண்ணாமலை கோவிலும் அதன் சுற்றுபுறமும் கண்டால் நமக்கே நமச்சிவாய வாழ்க..நாதன் தாழ் வாழ்க என பாடத்தோன்றும்.!

அடிஅண்ணாமலைக்கோவிலில் இருக்கும் தக்‌ஷிணாமூர்த்தி அம்சம் மிகவும் வித்தியாசமானது. அதைவிவரிக்க தமிழில் வார்த்தையை தேடிவருகிறேன். ஒருநாள் கண்டிப்பாக விவரிக்க முயற்சி செய்கிறேன்.... மெளன ரூபனை வார்த்தைகளால் விவரிக்கும் நாள் என்னாளோ?

எனக்கு தெரிந்தவரையில் ஆற்றல் மிகுந்த கோவில்களில் மூல ஆற்றலை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்பார்கள். அந்த மூல ஆற்றல் கோவிலின் கருவரைக்கு சென்று விக்ரஹத்தை சக்தியூட்டும். மூல ஆற்றல் இருக்கும் இடம் ரகசியமாகவே வைக்கப்படும். கோவில் சிதைக்கபட்டாலும் மூல ஆற்றல் இடங்கள் மூலம் மீண்டும் அவற்றை உயிர்ப்பிக்கலாம். ஆன்மீக ஆற்றல் உள்ளவர்களால் மூல ஆற்றல் கேந்திரங்களை கண்டறிய முடியும்.

திருவண்ணாமலை சக்திவாய்ந்த இடத்தின் மூல சக்தி இரு இடங்களில் மட்டும் அதீதமாக இருப்பதாக எண்ணுகிறேன். ஒன்று அடி அண்ணாமலை மற்றொன்று முடி அண்ணாமலை.

அடி அண்ணாமலை இந்த இடம் என்றால் முடி அண்ணாமலை என்பது மலையின் சிகரம். திருவண்ணாமலையின் உச்சி பகுதி மிகவும் சக்தி வாய்ந்தது. சிறு வயதிலிருந்து பல மலைகளை ஏறிய அனுபவம் உண்டு. மலையேறுபவர்களே சிரமம் கொள்ளும் வெள்ளிங்கிரி மலைக்கு கூட எளிமையாக ஏறிவிடுவேன். ஆனால் முடி அண்ணாமலையானை காண ஏறினால் மட்டும் என்னால் முடியாது..!

மிகவும் செங்குத்தான பாதை. ஸ்ரீ சக்ர புரி என்பதற்கு இணையாக சிறிது ஏற்றம் பிறகு சமமான பாதை என படிபடியாக உச்சியில் குறுகிய முனையாக இருக்கும். உச்சியில் 20 அடி சுற்றளவு மட்டுமே இருக்கும். ஏறும் பாதையில் அனேக குகைகள் உண்டு. அதில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடினால் ஓம்கார மந்திரம் கேட்கும்.

வருடத்தில் பல முறை திருவண்ணாமலை சென்றாலும், குறைந்தபட்சம் இருமுறையாவது முடி காணாமல் வரமாட்டேன். நான் என்னுடன் வந்த வெளிநாட்டு மாணவியுடன் சில வருடம் முன் மலையேறும் பொழுது நடந்த சம்பவம் நீங்கள் மலையேறும் பொழுதும் நடக்கலாம்.


அது .......

(தொடரும்)


Saturday, August 15, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி எட்டு


ரமண மகரிஷியை ஒருவர் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்ய அழைத்தார்.மகரிஷி சிரித்துகொண்டே ஒன்றும் தெரியாதவர் போல அங்கே அப்படி என்ன விஷேஷம் என்றார். கைலாய மலை சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான் பூதகனங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம் கைலாயம் என்றார். கைலாயம் சிவன் வசிக்கும் ஸ்தலம் ஆனால் திருவண்ணாமலை என்பது சிவனே தான். சிவன் இங்கே இருக்க அவரின் வீட்டை போய் பார்த்துவருவானேன்? என ரமணர் கூறினார்.

தனது பதினாராம் வயதில் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு
வந்தவர் பிறகு எங்கும் சென்றதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த மலையை தனது குருவாவும், ஞான சுடராகவும் கொண்டார் மகரிஷி. தனக்கும் அருணாச்சல கிரிக்கும் வித்தியாசம் இல்லாமல் அத்துடன் வேறுபாடு இன்றி கலந்தார். இத்தகைய மாமுனிவர்களும், மஹான்களும், ஞானிகளும் வாழ்ந்த இடமாக திருவண்ணாமலையில் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. இவர்களின் தன்மையை விமர்சிக்கவோ, இவர்கள் ஞானி என சொல்லவோ எனக்கு தகுதி இல்லை.

கண்களை திறந்து கொண்டு தியானம் செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் காசி படித்துரையில் கங்கையில் ஓட்டத்தை பார்த்தவாறு இருப்பது, திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமர்ந்து மலையை பார்த்தவாறு இருப்பதும் ஒருவகை தியானம் தான். காசியில் அசைந்து தியானத்தை கொடுக்கும் கங்கை, இங்கே மலை அசையாமல் நம்மை ஆழ்த்திவிடும்.

அஷ்ட என்ற வடமொழி வார்த்தை எட்டு என்ற எண்ணை குறிக்கும். ஐரோப்பிய மொழிகளில் ஆக்டா என்பது எட்டு என்பதை குறிக்கும். எட்டு திக்கிலும் இருக்கும் லிங்கம் திசையை சரியாக குறிக்க அமைக்கபட்டுள்ளது. சக்தியை கொடுக்கும் இடமாகவும் இருக்கிறது. கிரிவலம் வரும் சமயம் ஒவ்வொரு லிங்கத்தையும் வணங்கி அவ்விடத்தில் சிறிது நேரம் அமர்ந்து திருவண்ணாமலையை கவனியுங்கள். மலை பேசும்...!

கடந்த ஒன்பது வருடங்களாகத்தான் அஷ்டலிங்க கோவில்கள் புது பொலிவுடன் இருக்கிறது. அதற்கு முன் ஒரு பத்துக்கு பத்து அறையில் ஒரு லிங்கம் இருக்கும். சில நேரங்களில் ஆடு லிங்கத்தின் மேல் இருக்கும் மலர் மாலையை சாப்பிட்டுக்கொண்டிருக்கும். இது தான் நிலை. ஆனால் தற்சமயம் மக்கள் கூட்டம் வருவதால் செப்பனிட்டு விரிவடைந்துள்ளது. மேலும் அஷ்டலிங்கத்தில் குபேர லிங்கம் மட்டும் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும். முக்தி கொடுக்கும் ஸ்தலத்தில் இவர்கள் பணத்தை தேடுகிறார்கள்.
அஷ்ட லிங்க கோவிலின் மேல் கூறையில் வரையப்பட்ட அருணாச்சல கிரிவல படம்

அருணாச்சல கிரி எனும் பொக்கிஷம்
பிரம்மாண்டமாய் முன்னிருக்க இவர்கள் குபேரலிங்கத்திற்கு 'மட்டும்' பூஜை செய்வது வேடிக்கைதான். கிரிவலம் போகிறவர்கள் கையில் சில்லரை நாணயத்துடன் அங்கே இருக்கும் சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் தர்மம் செய்தவாறே செல்லுவார்கள். ஆனால் குபேர லிங்கத்திற்கு வெளியே மட்டும் செய்ய மாட்டார்கள்.இவர்களின் செல்வம் அவர்களிடம் போய்விடுமாம். இந்த புத்தி இருப்பவர்கள் செல்வ நிலையில் சீமானாக இருக்கலாம் ஆனால் ஆன்மீக நிலையில் பிச்சைகாரனாகவே இருக்க முடியும்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஒவ்வொரு திக்கிலும் அருணாச்சல கிரி ஒவ்வொரு வடிவமாகவும், வேறு பட்ட நிறத்திலும் தெரியும். நந்தி வடிவம், சிவசக்தி வடிவம் மற்றும் பஞ்ச முக வடிவம் என மலையை நம் பார்வைக்கு ஏற்ப அருணாச்சலம் வெவ்வேறு வடிவில் இருக்கிறது.

அருணாச்சல கிரி வெவ்வேறு வடிவில் இருப்பதை போல இங்கிருக்கும் ஆன்மீகவாதிகளும் வெவ்வேறு வடிவில் இருக்கிறார்கள். சிலர் உணர் வடிவிலும் சிலர் உணர்வுக்கு அப்பாலும் இருக்கிறார்கள்.

மணலை எடுத்து மூக்கு பொடி போல பயன்படுத்தும் மூக்கு பொடி சாமி, உடலில் சணல் துணியையும் வெளிநாட்டுகாரர்கள் பயன்படுத்தி உடைந்த ஓட்டை குளிர்கண்ணாடியும் அணிந்து அழகிப்போட்டிக்கு போவது போல இருக்கும் சாக்கு சாமி, ராணுவ சட்டையும் காவி வேட்டியுடன் இருக்கும் மிலிட்டிரி சாமி, பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பண்ணாட்டு நிறுவனத்தில் உயர்பதவியை விட்டுவிட்டு இங்கே பரதேசியாக இருக்கும் வெள்ளைச்சாமி என அவதூத நிலையில் இருக்கும் ஆன்மீகவாதிகள் அதிகம்.

அவதூத நிலை என்றால் இலக்கில்லாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்காதவர்கள். நடந்து கொண்டோ அல்லது மரத்தின் அடியில் உற்கார்ந்து கொண்டோ இருப்பார்கள். அவர்கள் பேசுவது புரியாது. திடிரென தெளிவாக பேசுவார்கள். அவர்கள் இது தான் செய்வார்கள் என நாம் கணிக்க முடியாது. உடை மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மொத்தத்தில் அவர்கள் தங்களின் உலகில் ஆனந்தமாக இருப்பவர்கள். சீரடி சாய்பாபா மற்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் இவர்களின் தன்மை கொண்டவர்கள் என வெளி நிலைப்பாட்டை கொண்டு முடிவு செய்யலாம்.

இப்படிபட்ட அவதூத சாக்கு சாமியிடம் தான் அன்று நான் மாட்டிக்கொண்டேன். சைக்கிளில் நானும் அவரும் பயணிப்பதை அனைவரும் விசித்திர பார்வையோடு பார்த்தார்கள். காரணம் சாக்கு சாமி வாகனத்தில் பயணித்தது இல்லை. மேலும் பார்க்க பைத்தியகார பாவனையில் இருப்பார். அவரை வைத்து நான் சைக்கிள் ஓட்டினால் வேறு எப்படி பார்ப்பார்கள்?

அரைகிலோமீட்டர் மிதித்திருப்பேன். நானும் பேசவில்லை அவரும் பேசவில்லை. நீச்சல் அடிப்பது போல கால்களை ஆட்டிக்கொண்டே வந்தார்.

எங்கோ யாருக்கோ பார்த்து சொல்லுவது போல வானத்தை பார்த்து “பம்பரத்தை சுத்தனும்னா கயிர வலபக்கம் சுத்தனும், உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் சுத்தாத பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும். எல்லாம் கழண்டுக்கும் கழண்டுக்கும்” என்றார்.

“கீறீச்...” என சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினேன். எகிறி குதித்து ஆடியபடியே மலைக்கு மேல் சென்று மறைந்தார். அவர் வந்த வேலை முடிந்தது.

(தொடரும்)

Thursday, August 13, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஏழு

நான் பிரம்ம முஹுர்த்த வேலையில் தென்பகுதியில் இருந்து கிரிவலம் செய்ய துவங்கினேன். செங்கம் என்ற ஊருக்கு செல்லும் சாலையும் கிரிவலப்பாதையும் இணையும் இடம் ஆங்கில எழுத்து “Y" போல இருக்கும். அங்கே சென்று கொண்டிருக்கும் பொழுது செங்கம் ரோட்டில் திருவண்ணாமலையை நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று தள்ளாட்டத்துடன் வந்து கொண்டிருந்ததை கண்டேன். நின்று அந்த வாகனத்தை கவனித்தேன்.அதிவேகத்துடன் தள்ளாடியபடி வந்த கார் நேராக என்னை நோக்கி வந்தது.

இந்த தருணத்தில் கிரிவலம் பற்றி விளக்கி விடுகிறேன். கிரி வலம் என்ற வார்த்தையே இச்செயலை விளக்கிவிடும். மலையை வலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். தென்னிந்திய புனித ஸ்தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.வட இந்தியாவில் பிருந்தாவனத்தில் கோவர்த்தன மலையை மக்கள் வலம் வருகிறார்கள். மேலும் சில மலைஸ்தலங்களில் வலம் வருவதுண்டு.

தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பிரபலமான விஷயம் ஆகிவிட்டதால் பல தென்னிந்திய மலைக்கோவில்களில் பின்பற்ற துவங்கிவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது என்பது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.

கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்துசெல்லப்படுகிறது. அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானல் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம். சிரசாசனம் என்ற யோக பயிற்சியை யோகிகள் செய்வார்கள். வவ்வால் எப்பொழுதும் சிரசாசன நிலையிலேயே இருக்கிறது. அதற்காக வவ்வாலை யோகி என சொல்ல முடியுமா? அது போல மலையை சுற்றி வலம் வந்தவர்கள் எல்லாம் மேன்மையான ஆன்மீக உணர்வு அடையமாட்டார்கள்.

அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு காட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார். பூனையும் தன்னைக் காத்துக்கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும், துரத்தபட்டப் பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார். காரணம் மலையை சுற்றிவந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம். ஆனால் ராஜா செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம் பூனையும் தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மேட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.
உள் கிரிவலப்பாதையில் சாது

தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் 30 நிமிடத்தில் கிரிவலம் வந்து அனைத்து கோவிலிலும் ஒரு வணக்கம் வைக்கலாம். எத்தனை ஆட்டோக்கள் மோட்சம் அடைந்ததோ தெரியவில்லை.

கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்கவேண்டும். இறைசிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும். நீர்ம பொருளை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

ரமண மகரிஷி மற்றும் அவரின் அடியவர்கள் இரண்டு நாட்கள் கிரிவலம் வருவது வாடிக்கை. உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு ஆங்காங்கே சமைத்து உண்டு மெல்ல நடப்பார்கள். இதற்கு பூரண கிரிவலம் என பெயர். தற்காலத்தில் பூரண கிரிவலம் வரும் ஆட்கள் குறைவு. துரித உணவால் வாழ்க்கையும் துரிதமாகிவிட்டது.

14 கி.மீ நீளம் கொண்ட சாலை கிரிவலப்பாதை. முன்பு மண் ரோடாக இருந்ததால் வெறும் காலில் நடந்து செல்லுவது இதமாக இருந்தது. கடந்த சில வருடங்களில் தார் சாலைகள் போட்டும் நடை மேடை அமைத்தும் நெடுஞ்சாலைத்துறை கிரிவலப்பாதையை மேம்படுத்தி உள்ளது. ஆனாலும் நம் கால்களுக்கு மண் பகுதிகளே நன்மையை கொடுக்கும். கிரிவலப்பாதை என்பது மூன்று உண்டு. மக்கள் பயன்படுத்துவது வெளிசுற்றில் இருக்கும் தார்சாலையைத்தான்.

மலையை ஒட்டி ஒரு காட்டுவழிச்சாலை இன்றும் உண்டு. தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் சொர்க்கத்தின் பாதை எது என புலப்படும். மிகவும் இயற்கை அன்னையின் இருப்பிடம் இந்த உள்வழிப்பாதை. அது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல்பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைதான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.

பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா?

இப்படித்தான் நாள் நேரம் பார்க்காமல் துவங்கிய எனது கிரிவலத்தில் அந்த கார் என்னை நேராக மோதுவதற்கு வந்தது. நான் அசையாமல் செய்வதறியாமலும் நின்றேன். எனக்கு முன்பாக சில அடி தூரத்தில் சட்டென வலபுறமாக திரும்பி ஒரு மரத்தில் மோதி நின்றது. ஓடி சென்று பார்த்தேன். அதில் ஒரு குடும்பம் பயணித்து வந்திருக்கிறார்கள். வாகன ஓட்டி இரவு ஓட்டியதால் களைப்பில் தூங்கிவிட்டார். வாகன ஓட்டிக்கு மார்புக்கூட்டில் நல்ல அடி. காரின் முன்பகுதி நல்ல பாதிப்பு. பிறருக்கு எதுவும் ஆகவில்லை.

திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் தொலைபேசி எண் தெரியும் என்பதால் அவர்களுக்கு தொலைபேசியில் அழைக்க எண் கொடுத்துவிட்டு கிரிவலத்தை தொடர்ந்தேன்.

இப்படி அடிக்கடி நடக்கும். விபத்தை சொல்லவில்லை. கிரிவலம் செல்லுபவர்கள் ஒரு சக்தியால் காக்கப்படுகிறார்கள். அந்த விபத்தை நீங்கள் நேரில் பார்த்திருந்தால் புரிந்திருக்கும். அந்த காரின் வேகத்திற்கு நிச்சயம் அங்கே சில உயிர் போயிருக்க வேண்டும். எமன் என்னுடன் கிரிவலம் அல்லவா சென்று கொண்டிருந்தார்...! அதனால் கடமையை கவனிக்க முடியவில்லை என நினைத்துக்கொண்டேன்.
திருவண்ணாமலை செல்லும் சமயங்களில் ஒரு முறை நடந்து கிரிவலம் வருவேன். பிறகு வாடகைக்கு ஒரு சைக்கிள் அமர்த்திக்கொண்டு வலம் வருவேன். சைக்கிளில் வலம்வருவது ஒரு சுகானுபவம். என் மாணவர்களுடன் செல்லும் பொழுது சைக்கிளில் வலம்வருவதுண்டு. பல கோவில்களுக்கு கிரிவலப்பாதையில் சைக்கிளில் பயணிப்பது அருமையாக இருக்கும். வேடிக்கையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரிந்து பல சைக்கிள்களுக்கு இவ்வாறு மேட்சம் வழங்கியது உண்டு.

சிலவருடம் முன் சைக்கிளில் கிரிவலம் செல்லும் பொழுது என் மனதில் இருந்த கிரிவல சிந்தாந்தத்தை உடைத்து தெளிவாக்கியது ஒரு சம்பவம். கிரிவலம் செல்வதை பற்றி எனக்கு ஆணம் இருந்திருக்குமோ என்னவோ இறைவனின் அருளால் அதுவும் நொருங்கியது.

ரமணாஸ்ரமம் முன்பிருந்து சைக்கிளில் கிரிவலத்திற்கு தயாராகி மிதிப்பானை மிதித்தும் வண்டி நகரவில்லை. காரணம் சைக்கிளின் பின் புறம் கைகளால் பிடித்திருந்தார் “ சாக்கு சாமி ”.

இது தான் சாக்கு என அவரைப்பற்றி விளக்கி விடுகிறேன். சாக்கு சாமி என்றவர் திருவண்ணாமலையில் இருக்கிறார். அவதூத நிலையில் இருப்பவர். அங்கும் இங்கும் திரிந்து சாக்குதுணியை ஆடையாக கட்டிக்கொண்டு நிற்பவர். மார்பிலிருந்து தொடைப்பகுதி வரை ஒரே சாக்கு துணியை சுற்றி இருப்பார். தலை முடி சடைசடையாக இருக்கும்.

சைக்கிளின் முன்பகுதியில் வந்து உட்கார்ந்து கொண்டு 'நானும் வரேன்' என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. சைக்கிளை மிதித்து சில அடி சென்று இருப்பேன். “.... நிறுத்து நிறுத்து என்ன இப்படி கிரிவலம் போறே? தப்பு தப்பு வண்டிய திருப்பி பின்னால விடு” என்றார்.

கிரிவலம் தானே கேள்விப்பட்டிருப்பீர்கள். சாக்கு சாமியுடன் நான் சென்றது கிரி இடம்...! காரணத்தை அவரே பயணத்தின் பொழுது விளக்கினார்.. அது என்னெ வென்றால் ....

(தொடரும்)