Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, December 23, 2012

கும்பமேளா - 7


கும்பமேளாவிற்கு ஆன்மீகவாதிகள் ஏன் காத்துக்கிட்டு இருக்கனும்? அவர்கள் ஏற்கனவே உயர்நிலையில் இருக்காங்க இல்லையா? என கேட்டான் அப்பு.

விவரித்த வண்ணம் இருந்த தன் பேச்சின் நடுவே இடைமறித்த அப்புவிற்கு 
உதட்டின் ஓரம் சிரிப்பை கொடுத்துவிட்டு தொடர்ந்தார் குருஜி...

“கும்பமேளா என்பது ஆன்மீக நிகழ்வு, ஒவ்வொரு உயிர்களுக்கு தேவையான நிகழ்வு. இதில் ஆன்மீகவாதிகள் வருவதற்கு காரணம் அவர்கள் மூலம் பல்வேறு உயிர்கள் முக்தியை நோக்கி நகர்த்தப்படும். அதுவும் மஹாகும்பமேளா அனைத்து ஆன்மீகவாதிகளும், மதவாதிகளும் சங்கமிக்கும் இடம். ஆன்மீகவாதிகளின் தனிப்பட்ட சில விஷயங்களுக்காக அவர்கள் அங்கே கூடுவார்கள். நாம் கூட அங்கே அதற்காகத்தான் செல்கிறோம்”

இவ்வரிகளை கேட்டவுடன் அப்புவின் கண்கள் மினுமினுத்தது.


குருஜி அப்புவின் கண்களை பார்த்தவண்ணம் தொடர்ந்தார்...

“ஆன்மீக ரீதியாகவும், யோக ரீதியாகவும் சில விஷயங்களை சொன்னேன். 
இனி உலக அதிசயமான கும்பமேளாவை சொல்லவா?”

”உலக அதிசயமா?” என கேட்டான் அப்பு.

“ஆமாம் பலராலும் பதிவு செய்யப்படாத உலக அதிசயம்...! உலகில் அதிகமான மக்கள் கூடும் விழா மஹா கும்பமேளா. அழைப்பிதழ்கள் இல்லாமல், விழா குழுவினர் இல்லாமல் துல்லியமாக நடைபெறும் விழா கும்பமேளா. இது போல உலகில் வேறு எங்கேயும் நடைபெறுவது இல்லை... உலகில் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடிய நிகழ்வு என்பது இதுவரை பதிவு செய்யப்படவில்லை. 

மேலும் உலகில் வேறுபகுதிகளில் இவ்வளவு அதிகமான மக்கள் கூடுவது போர் சார்ந்த காரணத்திற்காக மட்டுமே இருக்கும். ஆனால் உலகில் அமைதி மற்றும் ஆன்மீக நோக்கில் இத்தனை மக்கள் கூடும் ஒரே நிகழ்வு கும்பமேளா என்பதை  தெரிந்துகொள்ளுங்கள் அப்பு..” என கூறி இடைவெளிவிட்டார் குருஜி.

பிறகு தொடர்ந்த வண்ணம், “ அப்புறம் அலஹாபாத் என்ற ஊர் ரேகாம்ச, அட்சாம்சத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்தது...இந்திய தேச மணி 5.30னு சொல்றாங்க இல்லையா? அது கணக்கிடப்படும் ரேகாம்சம் 82.30 என்பது அலஹாபாத் புள்ளிதான்.  இப்பகுதி உலகின் நாடிகளாக வந்து அமைந்தது ஒருவித அற்புதம் தான். இல்லயா?” என்ற குருஜியிடம் அப்பு கேட்டான்...

“ குருவே ஒரு சின்ன கேள்வி இந்தியாவில் பல ஆன்மீக குழுக்கள் மற்றும் மதங்கள் இருந்தாலும் அவங்க எல்லாம் ஏன் ஒன்று கூடனும்? இந்த உலக அதிசயமா மக்கள் கூடுவது எப்போ ஆரம்பிச்சுது?” என கேட்டு விட்டு குருவின் பதிலுக்காக காத்திருந்தான் அப்பு.

சிறு பையனின் முன் பணிவுடன் இருக்கும் வயதானவரை யாரேனும் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். ஆனால் இதை சோம் நாத் குருவின் இந்த பிறப்பின் தாயார் பார்த்தால் வேடிக்கையாகவா இருக்கும்?

எதிர்பாராத விதமாக அந்த அறைக்குள் நுழைந்த அப்புவின் மனைவி இருவரின் நிலையை பார்த்து அதிர்ந்தார்...

(மேளா தொடரும்) 

Friday, December 7, 2012

கும்பமேளா 6



அப்புவும் சோம நாத் குருஜியும், அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை நினைவுபடுத்தினார்கள்.

சாதாரண குழந்தையாக இருந்த சோமு ஒரு நிமிடத்தில் குருவாக காட்சியளித்தது அப்புவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அருகே இருந்த மேஜையின் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடியபடி வேத மந்திரங்களை ஜெபித்துவிட்டு, கண்களை திறந்து கூர்மையாக பார்த்தார் சோமநாத்.

“ நம் உடலில் 72000 நாடிகள் உண்டு என நீங்கள் படித்திருக்கலாம், அவை 108 புள்ளிகளில் உடலில் சங்கமிக்கிறது. அதில் முக்கியமாக பத்து நாடிகள் தச நாடிகள் என கூறுவார்கள். இந்த நாடிகள் நம்ம உடம்பின் அஞ்சு புலன் உறுப்புக்களையும், அதன் செயல்களையும் முடிவு செய்யுது. நம் சூட்சம உடலில் இந்த பத்து நாடிகளின் செயல் மிக முக்கியமானது. பத்து நாடிகளில் மூன்று நாடிகள் சூட்சம உடலின் ஆதாரமாக இருக்கிறது. அவை ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா நாடிகள். சூரிய நாடி, சந்திர நாடி- சூக்கும நாடி என தமிழில் சித்தர் பாடல்களில் கூட இதை நீங்கள் பார்க்கலாம்.

அனைத்து உயிரின் செயல்களும் இந்த மூன்று நாடிகளை மையப்படுத்தியே இருக்கிறது என கூறுகிறது யோக சாஸ்திரம். காரின் ஸ்டியரிங் எந்த பக்கம் திரும்புகிறதோ அந்த திசையில் கார் செல்லுவது போல, சூரிய நாடி, சந்திர நாடி செலுத்தும் திசையில் உயிர்களின் வாழ்க்கை செல்லுகிறது. சூரிய நாடி ஆக்க செயல்களுக்கும், சந்திர நாடி இயல்பான ஓய்வு செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது.  உதாரணமாக விளையாட்டு, நடத்தல் போன்ற உடல் செயல்கள் அனைத்தையும் சூரிய நாடி முடிவு செய்யும். தளர்வடைதல், இசை கேட்பது போன்ற செயல்களை சந்திர நாடி முடிவு செய்கிறது. மூன்றாவது நாடியாகிய சுஷ்மணா - சூக்கும நாடி என சொல்லுவதற்கு காரணம், இயல்பாக இந்த நாடி செயல்படாது. இது சூரிய சந்திர நாடியின் இணைவால் இந்த நாடி செயல்பட துவங்கும் . சூரிய நாடி செயலும், சந்திர நாடி செயலும் இணைந்து செயல்பட்டால் மிகவும் சிறப்பான ஒரு நிலை வாழ்க்கை தன்மை ஏற்படும். 

இந்த நிலையே ஆன்மீக ஒருநிலை அல்லது யோகம் என்பார்கள். பல்வேறு ஆன்மீக பயிற்சிகளும், யோக முறைகளும் சுஷ்மணா நாடியில் இருப்பதற்கு வழிகளை கூறுகிறது.

ஒரு உயிரின் ஆன்மீக நிலை அவ்வுயிர் சுஷ்ணமா நாடியில் எத்தனை காலம் இருக்கிறது என்பதை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிநிலையில் சஞ்சரிக்கும் உங்களுக்கு நீண்ட தியானம் மன ஒருமைப்பாடு வரவில்லை என்றால் நாம் சுஷ்மணா நாடியில்  இல்லை என அர்த்தம். உள்நிலையில் ஆழ்ந்து இருக்க இந்த சுஷ்மனா மிக அவசியம். சூக்‌ஷம உடலில் இந்த நாடிகள் இருந்தாலும், அவை நம் ஸ்தூல உடம்பில் புருவ மையத்தில் ஒன்றிணைகிறது. 

இந்த மூன்று நாடிகளும் ஒன்றிணையும் இந்த புள்ளி நம் உடம்பின் ஆன்மீக மையமாக இருக்கிறது. இந்த இடத்தை சித்தாகாசம், சிற்றம்பலம் என பல்வேறு வகையில் அழைக்கலாம். 

புருவ மையத்தை ஆற்றல் மிகுந்த ஒருவர் தூண்டும் பொழுது நம் உயிரினுள் ஆன்மீக விதை விதைக்கப்படும். அது நம் வாழ்க்கையை கடந்தும் நம்மை இறைவனை நோக்கி கொண்டு செல்லும். 

நம் ஆன்மாவின் பயணம் அனைத்தும் இங்கே புதைந்திருக்கிறது. அதனால் தான் உன்னை உத்ரகாசியில் சந்திக்கும் பொழுது உன் புருவ மையத்தை தொட்டு நீ கடந்து வந்த பாதையை காட்டினேன்..” என நீண்ட மற்றும் விளக்கமான பதிலை கூறிவிட்டு தொடர்ந்தார் சோம நாத் குருஜி...

 “இதற்கும் கும்ப மேளாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறாய் ?  இந்த உலகை உடலாக கொண்டால், நிலப்பரப்பில் நதிகள் நாடிகளாக இருக்கிறது. நம் ஊண் உடம்பில் புருவ மையத்தில் மூன்று நாடிகளும் இணைந்து எப்படி ஆன்மீக நிலை ஏற்படுகிறதோ அது போல கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் புள்ளி உலகின் சித்தாகாசமாக இருக்கிறது. 

கங்கை சூரிய கலையாகவும், யமுனை சந்திர கலையாகவும், சரஸ்வதி என்ற கண்களுக்கு தெரியாத நதி சுஷ்மணாவாகவும் இருக்கிறது.

மூன்று நதியின் கூடல் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. நம் வசிக்கும் இந்த பூமியின் புருவ மையம் இது தான். அலஹாபாத் என்ற இந்த நகரில் கும்பமேளா நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பொழுது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தூண்டுதலாகவும், நம் சுஷ்மண நாடி அதிக காலம் தூண்டப்படுவதற்கும் காரணமாக அமையும்.” என சொல்லி நிறுத்திவிட்டு குருஜி அப்புவை பார்த்தார்.

தன் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டான் அப்பு...

“ குருஜி....கங்கையும், யமுனையும் எப்பொழுதும் அங்கே இணைஞ்சுட்டே இருக்கே? தினமும் இவ்வாறு தானே நடைபெறுகிறது? அப்படி இருக்க ஏன் 
கும்பமேளா காலத்தில் மட்டும் முக்கியத்துவம்?”

புன்புறுவலுடன் அப்புவை பார்த்தார் சோம் நாத், “ உலகின் நாடிகள் இணையும் புள்ளி அலஹாபாத்னு சொன்னேன். இந்த சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரன் அப்புறம் குரு இந்த கிரகங்கள் ஈடா,பிங்களா மற்றும் சுஷ்மணாவா இருக்கு. 

இவை ஒரே மையக்கோட்டில் இணைந்து வரும் காலம் மிக முக்கியம். சூரிய மண்டலத்தின் நாடியும், பூமியின் நாடியும் நம் உடலின் நாடியும் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால் அங்கே ஆன்மீக பெரு நிகழ்வு நடக்கும். 

பூமியில் நதிகள் சங்கமித்தவண்ணம் இருக்கு, நம் உடம்பில் சுக்‌ஷ்மண நாடிகளை தூண்டும் யோக முறை நமக்கு தெரியும். ஆனா சூரிய மண்டல கிரகங்களை நம்மால் இணைக்க முடியுமா? அந்த கிரகங்கள் தன் சுழற்சியில் இயல்பா ஒன்றிணையும் காலம் 12 வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கும். இப்படி 12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் காலத்தை மஹா கும்ப மேளானு சொல்லுவாங்க. இந்த நாட்களுக்காக ஆன்மீகவாதிகள் காத்துகிட்டு இருப்பாங்க...”

(மேளா தொடரும்)




Monday, December 3, 2012

கும்பமேளா - 5


அன்று நிலையில்லா குறுகுறுப்பில் அமர்ந்திருந்தான் அப்பு. தன் வாழ்க்கை 
சரியான பாதையில் தான் செல்கிறதா? அல்லது  உத்திர காசியில் ஏதேனும் மாய தேவதையின் மாய குழப்பத்தால் மீண்டும் குடும்பத்துடன் வந்து இணைந்து கொண்டோமா என புரியவில்லை.

பத்து வருடம் காற்றை போல கடந்து சென்றது. அக்குகையில் குரு சொன்னதை போல ஆறு வருடம் கழித்து ஒரு குழந்தை பிறந்தது. சோமநாத் என பெயரிட்டு, சோமு என அனைவரும் அழைத்து வருகிறோம். ஆனால்  அக்குழந்தை குரு சொன்னது தானா என சந்தேகம் தீரவில்லை. நான்கு வயதான சோமு பிற குழந்தைகள் போல அடம் பிடித்து, மலம் கழித்து அழும் சாதாரணக் குழந்தையாகவே தெரிகிறது. இக்குழந்தை எப்படி அந்த குகையில் பார்த்த மஹா தவம் செய்யும் குருவாக இருக்க முடியும்?

இவன் பிறக்கும் போது எந்த ஒரு ஆன்மீக நிகழ்வும் நடக்கவில்லை.கோவிலுக்கு கூட்டி சென்று சாமி கும்பிடு என கூறினாலும் மறுத்து அடம் பிடிக்கும் இக்குழந்தை எப்படி ஆன்மீக குருவாக இருக்க முடியும்?   அப்பு இவ்வாறு சிந்தித்துக்கொண்டே சோமுவை கவனித்தான். இயல்பாக ரயில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். 

விரக்தியான மனநிலையில் அப்புவின் கண்களிலிருந்து நீர் துளியாக விழுந்தது. கண்களை மூடி மீதமிருக்கும் கண்ணீரையும் கசக்கிவிட்டு கைகளால் துடைத்து நிமிரும் பொழுது சோமு அப்புவின் முன் நின்றிருந்தான்.

அப்பூஊ......

மழலை மாறாத குரலில் அப்பா என அழைக்காமல் தன் பெயர் சொல்லி அழைக்கும் மகனை புரியாமல் பார்த்தான் அப்பு. 

“குடும்பத்தை கவனிக்கவும், பணம் சேர்க்கவும் உங்களோட நோக்கமா இருந்துச்சு.. உங்களுக்கு இந்த குழப்பம் வரும் வரைக்கும் நான் காத்துக்கிட்டு இருந்தேன். நான் தான் உங்களை குகையில் பார்த்ததும், இப்ப மகனாக பிறந்ததும் குழப்பம் தீர்ந்துச்சா? ”

அளவுக்கு மீறிய சந்தோஷத்துடன் அப்பு தன் மகனாகிய குருவை கட்டியணைத்தான்.

சில வினாடிக்கு பிறகு அப்புவின் கைகளை விடுவித்து முகத்தை பார்த்து சோமு கூறினான்...

“நேரம் அதிகமில்ல, நாம முக்கியமா செய்ய வேண்டிய காரியம் ஒன்னு இருக்கு அப்பு”

என்ன என்பதை போல அப்பு பார்த்தான். 

“அடுத்த மாதம் கும்பமேளா நடக்கிறது. அதற்கு நாம் போக வேண்டும்.” 

 “கும்பமேளாவுக்கு நாம் ஏன் போகனும்? என்ன இதில் விஷேஷம்?” கேட்டான் அப்பு.

 “உங்களுக்கு கும்பமேளாவை முழுமையாக விளக்குகிறேன். அப்புறம் நாம் ஏன் போகணும்னு சொல்றேன்” 

என்றான் நான்கு வயது சோமு...மன்னிக்கவும் 

என்றார் குருஜி சோமநாத் ...!

(மேளா தொடரும்)

Wednesday, November 14, 2012

கும்பமேளா - 4


தென் தமிழகத்தின் சிறிய கிராமத்தில் நிசப்தமான பின் இரவு நேரம்.  மனைவியும் குழந்தைகளும் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருக்க மெல்ல கதவை திறந்து வெளியேறினான் அப்பு. இந்த சம்சார பந்தத்தில் இருந்தால் நம்மால் ஆன்மீக முன்னேற்றம் இருக்காது என்பது அவனின் உள்ளுணர்வு வெகு நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தது. இனி இமாலயத்திற்கு சென்று குருவை தேடி அலைந்து அங்கேயே இருந்து விடுவது என முடிவு செய்து புறப்பட்டான். 

காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ் என பல்வேறு ஊர்களுக்கு சென்று கடைசியில் உத்திர காசிக்கு வந்தடைந்தான். இன்னும் வடக்கே பயணித்து ஹிமாலய மலையின் காடுகளுக்குள் செல்ல வேண்டும் என்பது திட்டமாக கொண்டான். 

அடுத்த நாள் புறப்பட்டு அருகே இருக்கும் பாண்டவாச்சல் என்ற கிராமத்தின் மையத்தில் கங்கை ஓடும் பள்ளத்தாக்கின் அருகே பயணித்தான்.மனது இயல்புக்கு மாறான தட தடத்தது. தான் இயல்பாக இல்லை என்பதை உணரும் ஷணத்தில் வெகு தொலைவிலிருந்து மிக மில்லிய சப்தம் கேட்டது.

“அ..அ...ஓ.......ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”

ஓம் என்ற மந்திரம் கேட்கும் திசையை நோக்கி சென்றான். பள்ளத்தாக்கின் ஓரம் வரை சென்று விட்டான்.. சபதம் இப்பொழுது தீர்க்கமாக கேட்டது. பள்ளத்தாக்கு மிகவும் அபாயகரமாக செங்குத்தான அமைப்பில் இருந்தது. பாய்ந்தோடும் கங்கை வெள்ளிக்கம்பி போல சில நூறு மீட்டர்கள் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது. 

விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது என்பது புரிந்தது. இங்கே எப்படி சப்தம் என ஆராய்ந்தான். பள்ளத்தாக்கின் ஓரத்தில் சப்தம் அதிகமாக கேட்கவே விட்டு அகலவும் மனம்  இடம் கொடுக்கவில்லை. சரிவில் இருக்கும் செடிகளை கைகளில் பிடித்தவண்ணம் கீழே இறங்க முயன்றான். உடல் நடுங்கியது, நிலை  தடுமாறினாலும் சமாளித்து மெல்ல இறங்கினான். சில அடிகள் கீழே இறங்கியதும் ஒரு பாறை இடுக்கின் வழியே அந்த சப்தம் அதிகமாக கேட்டது. இடக்கையால் செடிகளை கெட்டியாக பிடித்து, கால்களை கற்களில்  ஊன்றி, மறுகையால் பாறையைமில்ல விலக்கினான். 

விலக்கப்பட்ட பாறை தடுமாறி பள்ளத்தாகின் ஆழத்தை நோக்கி வீழ்ந்தது. பெரிய பாறை தூசி போல பறந்து கங்கையில் சென்று மறைந்தது. பாறை இருந்த இடத்தில்  குறுகலான ஒரு குகை பாதை சென்றது. இப்பொழுது ஓம் என்ற சப்தம் பன்மடங்காகி இருந்து. 

தனது கைகளை நீட்டி குகையின் விளிம்பை பற்றி உள்ளே புகுந்தான். தன் உடல் அளவுக்கு மிக குறுகலாக இருந்ததால் பாம்பை போல ஊர்ந்து மெல்ல நகர்ந்தான்.

சில அடிகள் நகர்வுக்கு பின் குகை பாதை செங்குத்தாக உள்ளே இறங்கியது. கைகளின் பிடி தளர்ந்து செங்குத்தான பாதையில் விழுந்தான் அப்பு. மூட்டுகளிலும் முகத்திலும் சிராய்ப்புகளுடன் குகையின் அடியில் விழுந்துவிட்டதை உணர்ந்தான்.

ஓம் என்ற சப்தம் மிகவும் அதிகமாக அருகே கேட்டது. குகையின் இருளில் தற்காலிகமாக கண்கள் இருளடைய பார்வை இழந்து உட்கார்ந்திருந்தான் அப்பு. 

சில வினாடிகள் அவனுக்கு இருள் பழகி குகையின் சூழல் பழகத்துவங்கியது.  அங்கே உடலின் அனைத்து எலும்புகளும் தெரிய, தோல் மட்டுமே ஆடையாக  அணிந்து நிர்வாணமாக ஒருவர் அமர்ந்திருந்தார். எலும்புக்கூடு போன்று காட்சியளித்த அவர் உடலின் முடிகள் இல்லாமல் இருந்தது. விரல்களில் இரண்டு அடி நீள நகங்கள் வளர்ந்திருந்தன. அவரின் கண்கள் திறந்திருந்தது. கருவிழிகள் இல்லை. உதடு அசையவில்லை ஆனால் ஓம் என்ற சப்தம் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.

பயத்தால் உடல் நடுங்கினாலும், தன் குருவை கண்டுவிட்டோம் என மனதில் எண்ணம் எழுந்து பயத்தை போக்கியது.

“குருநாதா...” என சப்தம் எழுப்பிய வண்ணம் அந்த உருவிடம் சென்று கால்களை பற்றினான். நைந்து போன துணியை பிடிப்பதை போன்று உணர்ந்தான்.

“அப்பு உனக்காகத்தான் பல நூற்றாண்டுகளாக இங்கே இருக்கிறேன்” உடலில் சலனம் இல்லை உதடு அசையவில்லை ஆனால் சப்தம் மட்டும் கேட்டது.

குகை அறையில் குரல்கள் எதிரொலித்து இரண்டு முறை கேட்பது அமானுஷமாக இருந்தது.

“பல நூற்றாண்டுகளாகவா? எனக்காக காத்திருக்கிறீர்களா? ஏன் குருவே...நான் ஆன்மீக தூண்டுதல் கொண்டு என் வீட்டை துறந்து உங்களை இப்பொழுது  தானே தேடி அடைந்தேன்” என்றான் அப்பு...

அந்த உருவின் கால்கள் மெல்ல அசைந்தது.. இலை சருகு போல இருந்த கால்கள் மெல்ல உயர்ந்து அப்புவின் நெற்றியை நோக்கி உயர்ந்தது. அப்புவின் புருவ மத்தியில் கால் கட்டைவிரலை வைத்தது அந்த உருவம்.....

பெரு நாட்டின் மீனவன், ஆஸ்திரேலிய பழங்குடிப் பெண் என துவங்கி ரஷ்யாவின் போர் வீரனாக, துருக்கியில் விலைமகளாக, பெரிய மடாலயத்தின் மடாதிபதியாக இப்படி  நாற்பதுக்கும் அதிகமான காட்சிகள் விரிந்து சுழன்று அப்புவின் புருவ மத்தியில் அடங்கியது.

சில வினாடிகள் மெளனத்திற்கு பின் தன் சுயநினைவு வந்தவனாக கண்கள் திறந்தான் அப்பு. விளக்காமல் விளக்கிய குருவின் காலடியில் படுத்திருந்தான் அப்பு. 

“அப்பு...இனி காத்திருக்க முடியாது. இந்த உடம்பை விடுத்து மற்றொரு உடலை பெறும் நேரம் வந்து விட்டது. நீ இங்கிருந்து கிளம்பி மீண்டும் உன் குடும்பத்தாருடன் சென்று வாழத்துவங்கு. ஆறு வருடம் கழித்து நான் உனக்கு மகனாக பிறந்து புதிய உடல் பெறுவேன். அந்த உடம்பில் இருக்கும் என்னை சோமநாத் என அழை.....பிறகு உன்னுடன் வாழ்ந்து உன்னை முக்தியை நோக்கி செலுத்துவேன்....” 

சில ஷணம் மெளனம் நீடித்தது...

ஓம்....ஆதி நாதாய.. 

-என பெரும் சப்தம் எழுப்பியது அவ்வுருவம்....

அப்பு கண் முன்னரே மணல் துகள்கள் போல உடல் உதிர்ந்து விழுந்தது. உடல் இருந்த இடத்தில் புற்றுபோல சிறு குவியல் மட்டுமே தென்பட்டது.

கனவு போல நடந்து முடிந்த சம்பவத்தை நம்ப முடியாமல் குகையிலிருந்து மெல்ல வெளிப்பட்டு தென் திசையில் இருக்கும் தன் வீட்ட நோக்கி நடந்தான் அப்பு. சாம்சார பந்தத்தை துறந்த அப்புவை ஆன்மீகம் மீண்டும் சம்சார பந்தத்தில் இணைத்தது.

(மேளா தொடரும்)

Thursday, November 8, 2012

கும்பமேளா - 3


ஆஸ்திரேலிய காட்டுகளின் மையப்பகுதி. கரிய பழங்குடியினர்களின் கூட்டம் காட்டின் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துகொண்டிருந்தது. இருபது நாள் குழந்தையை கைகளில் சுமந்துகொண்டு தன் உடமைகள் தலையில் அழுத்த நடந்து கொண்டிருந்தாள் மலிந்தா.

சுருட்டை முடியும், கரிய உடலும் மேனியில் தோல் ஆடைகளும் கொண்ட கூட்டத்தின் நடுவே அதே உடல் மொழியுடன் கால்கள் மண்ணில் புதைபட பயனித்தாள். சிரமமான பிரசவத்தால் அவள் உடல் கிழிந்த துணிபோல துவண்டிருந்தது. சுமையின் அழுத்தமும், உடலின் தெம்பும் அற்றவளாக கால்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தாள்.

குதிரைகளின் குழம்பொலி கேட்க ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டம் இவர்களை நோக்கி வரும் சப்தம் கேட்டது. பழங்குடியினர் கூட்டம் பல திசைக்கு ஓடினார்கள். உடல் வலுவற்ற நிலையில் நடக்க கூட சக்தி இல்லாத மலிந்தா சோர்வுடன் நின்றாள்.

ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் குதிரைகளுடன் மலிந்தாவை சூழ்ந்து நின்றுகொண்டனர். கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் இவளை நோக்கி குறி பார்த்தன.

 “பழங்குடியினரின் பூசாரி இவள் தான். இவளின் தலையை பிளப்போம்” என்றான் குதிரையில் அமர்ந்திருந்தவன்.

மலிந்தாவின் கண்கள் சிவக்க துவங்கின....

“ஹம்...ஊஊஊஊஊ..” என நீண்ட மற்றும் பெரிய சப்தம் எழுப்பினாள். 

காட்டில் உள்ள சிறிய பூச்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு லட்சக்கணக்காக அந்த இடத்தில் சூழ்ந்தது. ஒரே இரைச்சலும் குடைச்சலும் அதிகமாக ஆகிரமிப்பாளர்கள் நிலைகுலைந்து போனார்கள். துப்பாக்கிகள் கீழே விழுந்தன. சிலர் குதிரையிலிருந்து விழுந்து தங்கள் காதுகளை மூடிக் கொண்டனர்.

சில நிமிடத்தில் பூச்சிகள் மறைந்து போனது. மலிந்தா நின்று இருந்த இடம் காலியாக இருந்தது.

 “அந்த மாயக்காரியை பிடித்து வாருங்கள்....” குதிரைமேல் இருந்த ஒருவன் பெரும் சப்தம் செய்தான்.

அதே நேரத்தில் மலிந்தா சக்தியை திரட்டி காட்டின் ஒரு புறம் ஓடிக்கொண்டிருந்தாள். அவளின் இடம் நோக்கி ஓடினாள். இடம்பெயர இனி ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள்...!


அவளின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் ராட்சத மர பொந்தினுள் சென்று குழந்தையையும் தனது பொருட்களையும் வைத்து அருகே இருந்த விறகுகள் மற்றும் மர கட்டைகளை எடுத்துவந்து மர பொந்தின் வாயிலை அடைத்தாள்.

இருள் சூழ்ந்த மர பொந்தினுள் கண்களை மூடி வழக்கம் போல காவல் தெய்வத்தை வணங்கும் மந்திரத்தை உச்சரிக்க துவங்கினாள்.

சட்டனெ அவளின் மனக்கண்ணில் சில காட்சிகள் தெரியத்துவங்கியது.

கூடாரங்கள் கொண்ட பெரிய மைதானம்....மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கிறார்கள். நிர்வாண நிலையில் தலையிலிருந்து கால்வரை சடாமுடி தவழ ஒரு கூட்டம் நடந்து செல்கிறது.

அதன் நடுவே இருந்து தலை மழிக்கப்பட்ட நிலையில் கருப்பு சால்வை போர்த்திய ஒருவர் வெளிப்படுகிறார். கையில் பெரிய கம்பு மறுகையில் தீபம் ஏற்றப்பட்ட விளக்கை எடுத்துக்கொண்டு இவளின் அருகில் வந்தார்

தூரத்தில்.... பறவைகள் சலசலத்து பறப்பதை கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் அந்த திசையை நோக்கி குதிரைகளை முடுக்கினார்கள்.

பழங்குடியினரின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த ஒரு மரத்தின் அடிப்பாக முழுமையாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. மரத்தின் பாதி அளவு கரிய நிறத்துடன் காணப்பட்டது. மரத்தின் மேல் இருந்த பறவைகள் பீதியுடன் கூக்குரல் எழுப்பிய வண்ணம் விண்ணில் பறந்தன.

(மேளா தொடரும்)

Saturday, November 3, 2012

கும்பமேளா - 2


ஜப்பானுக்கு தெற்கே உள்ள கடலை நோக்கி கப்பல் புறப்பட்டது. இரண்டு நாள் கடந்திருந்தது. வழக்கமாக மீன்பிடிக்க கடலில் பயணிக்கும் பொழுது வேலையில்லாமல் அமர்ந்து பழக்கமில்லை. ஒன்று வலையை சரிசெய்யவோ அல்லது படகை செலுத்தவோ கைகள் ஓய்வின்றி வேலை செய்து பழக்கப்பட்டவன். தானாக சென்று ஏதேனும் வேலை இருக்கிறதா என விசாரித்து தன்னை இணைத்துக்கொண்டான். 

சமையல் அடுப்பில் கரிகளை நீக்கும் பணி கொடுத்தார்கள். சாம்பலையும் கரிகளையும் எடுத்து கடலில் கொட்டிவிட்டு புதிய கரிகளை அடுப்பில் சேர்க்க வேண்டும். கடலின் மேல்பரப்பு குளிர் காற்றுக்கு இந்த பணி இதமாக இருந்தது.

அன்று இடைவேளையில் கையில் இருந்த கரித்துண்டை கொண்டு சமையல் அறையின் பின்புற கதவில் படம் வரையத் துவங்கினான்.

 “இன்னும் என்ன செய்கிறாய். இங்கே வா” என அழைத்த அந்த கருப்பு உடை கொண்டவரை தனது கைபோன போக்கில் வரைய துவங்கினான். இவன் ஒன்றும் பெரிய ஓவியனல்ல. எழுத படிக்க கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவன். இவனின் அகக்காட்சியின் உந்துதலில் இவன் கை அசைய அங்கே தெளிவான அச்சிட்ட படம் போல அகக்காட்சியில் கண்டவரை வரைந்தான்.

கையில் ஊன்றுகோல் தலை மழிக்கப்பட நிலை. கருப்பு கம்பளி சுற்றிய உடல், கால்களில் தண்டை ஆபரணம் என அவன் தத்ரூபமாக வரைந்தது அவனுக்கே ஆச்சரியம் அளித்தது. அவனால் இது வரைபட்டதல்ல என நம்பினான். 

அடுத்த நாள் கரிக்கூடையை தலையில் சுமந்து கொண்டு கடலில் கொட்ட செல்லும் பொழுது அந்த அசாதாரண தன்மையை கண்டான். இவன் சமையல் அறையின் பின்புற கதவு அருகே வரைந்த ஓவியத்தின் முன்னால் சிறிது பழங்களும் உணவும் வைக்கப்பட்டிருந்தது. அருகே யாரும் இல்லை. அவனை அறியாமல் அந்த உணவை எடுத்து ருசிக்க துவங்கினான். சாப்பிட்டவுடன் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவனாக உணர்ந்தான். உணவை யார் வைத்தார்கள் என்ற குழப்பம் இருந்தாலும் அதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கவில்லை.

அடுத்த சில தினங்களும் இது வழக்கமானதாக இருந்தது. ஒரு நாள் முன்னதாகவே கரியை எடுத்து செல்லும் பொழுது பிரதான சமையல்காரரும் மற்றொருவரும் உணவையும் பழங்களையும் வைப்பதை பார்த்தான். மனதில் மிகவும் உற்சாகமாக உணர்ந்தான். கூடையை அங்கேயே வைத்துவிட்டு அவர்கள் அருகே சென்று கரியில் வரைந்த ஓவியத்தை சுட்டிக்காட்டி...கைகளால் யார் இவர் என கேட்டான்.

“சங்கம் பாபா” என சொன்னார்கள். புரியாத சொற்களாக இருந்தாலும் அவர்கள் வானத்தை நோக்கி கண்களையும் கைகளையும் உயர்த்தி சொன்ன விதம் சங்கம் பாபா அசாதாரணமானவர் என உணர்த்தியது. இவர்களுக்கு அவரை பற்றி தெரிந்திருக்கிறது என்றதும் மிகவும் உற்சாகமானாலும் உடனே வருத்தமும் கொண்டான். புரியாத மொழி கொண்டவர்களிடம் எப்படி பேசுவது என்ற குழப்பம் அதிகரித்தது.

மிகுந்த யோசனையுடன் கரிக்கூடையை சுமந்துகொண்டு சென்றான். அன்று மாலை ஓய்வு நேரத்தில் மீண்டும் கரித்துண்டை கொண்டு பிற காட்சிகளை  அந்த கதவில் வரையத்துவங்கினான்.

இவன் வரைந்து முடிக்கவும் ஓவியத்தின் மேல் நிழல்கள் விழுகவும் சரியாக இருந்தது. பின்னால் திரும்பி பார்த்தான். காலையில் இருந்த சமையல்காரர் இன்னும் சிலரும் நின்றிருந்தனர். 

இவன் தத்ரூபமாக வரைந்த கூடாரங்கள், மக்கள் கூட்டம், நீண்ட ஜடாமுடி கொண்ட நிர்வாண மனிதர்கள் ஓவியம் இவைகளை கண்டு அவர்கள் உறைந்து போயிருந்தனர். 

அவர்களை நோக்கி இவை எல்லாம் என்ன என சைகையால் கேட்டான்.
“சங்கம்.....கும்பமேளா” என அவர்கள் ஒன்றுசேர உரத்த குரலில் கூறினார்கள்

இவனை நோக்கி இரண்டு அடி முன்னேறி வந்து இவனின் கால்களில் விழுந்தனர். இதை சற்றும் எதிர்பார்காத சூழலில் குழம்பி போனான். சற்று பின்வாங்கி அவர்களை கவனிக்கும் பொழுது அந்த சப்தம் கேட்டது.

“ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என புயல் அபாய சங்கு கப்பலில் ஒலித்தது.

அனைவரும் பரபரப்பானார்கள். பாய்மரங்களை சுற்றி கட்டிவிட்டு கப்பலின் கீழ்தளத்தில் சென்று பதுங்கினர். திடீரென பெரிய அட்டத்துடன் கப்பல் குலுங்கியது. அதுவரை தான் அவனுக்கு நினைவு இருந்தது.

சிதறி தெறித்த கப்பல் துண்டுகள் கடலின் மேல்மட்டத்தில் மிதந்த வண்ணம் இருந்தது. யாரும் மிஞ்சவில்லை. பதினாராம் நூற்றாண்டில் நடந்த இந்த விபத்து வரலாற்றில் பதியப்படாமலேயே அழிந்தது.

சில மாதங்களுக்கு பின் இந்தோனேசிய தீவு ஒன்றின் கடற்கரையில் மணலில் பாதி புதைந்த அளவில் ஒரு மரத்துண்டு தெரிந்தது. அதில் கரி ஓவியமாக சங்கம் பாபா கடலை பார்த்த வண்ணம் இருந்தார்.

(மேளா தொடரும்)

Wednesday, October 31, 2012

கும்பமேளா - பகுதி 1


அதுஒன்றும் பெரிய விஷேஷமான தினமல்ல. மிகவும் சாதரண தினத்தின் காலை நேரம். தென் அமெரிக்காவின் மேற்கு பகுதி பெரு நாட்டின் லீமா நகரம். கடற்கரை அருகே தன் மீன் வலையை சரி செய்து கொண்டிருந்தான் அவன். முழுமையாக சுற்றிய மீன்வலையை அவன் நண்பர்களுடன் இணைந்து பாய்மர படகில் ஏற்றி கடலை நோக்கி பயணித்தான். 

கடலின் அலைகள் அற்ற பகுதிக்கு சமீபமாக சென்று வலையை வீசிவிட்டு இளைப்பாறினார்கள். காலை முதல் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தலைசுற்றல் இருப்பது போல உணர்ந்தான். படகின் நுனிப்பகுதிக்கு சென்று வலைக்கயிற்றை சரி செய்ய எத்தனிக்கும் பொழுது உடல் வலு இல்லாமல் கடலில் தவறி விழுந்தான்.

பேரலையும் காற்றும் கொண்ட கடலிலும் தனி ஒருவனாக படகை செலுத்தும் அவனுக்கு இன்று உடல் வலு இல்லாமல் தவறிவிழும் நிலை. கைகால்களை அசைக்கமுடியாமல் ஒரு இலையைப் போல மெல்ல மெல்ல அசைந்து கடல் நீரில் மூழ்கத் துவங்கினான்.

தான் மூழ்கி இறக்கப்போகிறோம் என தெரிந்தும் அவன் உடல் எதிர்ப்பு காட்டவில்லை. செயலற்று மேலும் சில அடிகள் கீழே சென்றவனின் உள்ளே சில காட்சிகள் விரிந்தது....

மனிதர்கள் கூட்டமாக சாலைகளில் ஒரு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்... எங்கும் கூடாரங்களாக பெரும் மைதானம் ஒன்று இருக்கிறது. உலோகங்களை ஒன்றோடு ஒன்று அடித்துக்கொண்டே பாடும் ஒலி...

பெரிய ஜடாமுடியுடனும், கையில் வாள் மற்றும் திரிசூலத்துடனும் கூட்டமாக சிலர் சென்றுகொண்டிருக்க அவர்களின் இடையே நின்று பார்ப்பதை போல காட்சிகள் தெளிவாக பார்த்துக்கொண்டிருந்தான்....

ஜாடாமுடி ஆட்களின் கூட்டதிலிருந்து அவர்களை விலக்கியபடியே ஒருவர் வெளிப்பட்டார். அவருக்கு தலைமுடி இல்லை. பெரிய கருப்பு உடை அணிந்திருந்தார். கையில் திரிசூலம் கழுத்தில் நாகப்பாம்பு படம் எடுத்தவண்ணம் இருக்க இவனை பார்த்து ஏதோ கூறினார். ஒன்றும் புரியாத மொழி...

காதுகளை கூர்மையாக்கி என்ன? என்பதைபோல கேட்டான்....இன்னும் அங்கே என்ன செய்கிறாய், வா இங்கே என ஸ்பானீஷ் மொழியில் கேட்டார் அந்த கருப்பு உடைக்காரர்.

திடுக்கென உடலுணர்வு பெற்றவனாக கை கால்களை அசைக்கத்துவங்கி... கடலில் மேல் பகுதிக்கு வந்து பெரிய மூச்சு ஒன்றை எடுத்து தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டான்.

தூரத்தில் அவனின் படகும் நண்பர்களும் இருப்பது தெரிந்தது, அதை நோக்கி நீந்தி படகை அடைந்தான். அனைவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.

அன்றிலிருந்து அவனின் போக்கே மாறிவிட்டது. கடற்கரையில் கடலை பார்த்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருப்பது. சில நேரம் அழுவதுமாக இருந்தான். ஏதோ கடலில் உள்ள துர்தேவதை இவனை ஆட்கொண்டதாக பேசிக்கொண்டனர்.

கடலில்ன் ஆழத்தில் கண்ட காட்சி கண்களை மூடினால் அகக்காட்சியாக எப்பொழுது தெரிந்த வண்ணம் இருந்தது. தூங்குவதற்கு கண்ணை மூடினாலும் அதே காட்சி. குடும்பம் மனைவி என மனம் லயமாகவில்லை. இயல்பு வாழ்க்கையில் எதையும் அவனால் செய்ய முடியாத அளவுக்கு தடுமாறிப்போனான். 

இப்படி சில தினங்களும் மாதங்களும் கழிந்தன..

ஒரு நாள் துறைமுகத்தில் வரி செலுத்துவதற்காக போகும் பொழுது அங்கே ஒரு வேற்று நாட்டு கப்பல் நிற்பதையும் அதில் இருக்கும் ஒரு சிலர் அகக்காட்சியில் கண்டவர்களை போல இருக்க அவர்களை நோக்கி ஓடினான்.

அவர்கள் அகக்காட்சியில் கண்டவர்கள் இல்லை...ஆனால் அவர்களின் உருவம் ஓரளவு அப்படி இருந்தது. ஸ்பேனீஷ் மொழியில் அவர்களை பற்றி விசாரித்தான். அவர்களுக்கு இவனின் மொழி புரியவில்லை. சைகையால் பேசி பேசி அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கேட்டான். அவர்கள் வரைபடத்தை காட்டி திசையை சுட்டிக்காட்டி விளக்கினார்கள். தான் இருக்கும் இடத்திலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் ஒரு நாட்டிலிருந்து வருகிறார்கள் என புரிந்துகொண்டான்.

அன்றே அவர்கள் புறப்படுகிறார்கள் என தெரிந்து தன்னையும் அழைத்துசெல்ல முடியுமா என கேட்டான். கப்பல் தலைவனை கேட்டுவிட்டு சொல்லுவதாக அவர்கள் சென்றார்கள்.

தன்னை பற்றி நினைக்க அவனுக்கே பைத்தியக்காரத்தனமாக தோன்றியது. இவர்களுடன் நான் ஏன் போக வேண்டும்? என் குடும்பத்தையும் என் மனைவியையும் யார் கவனிப்பார்கள் என பல குழப்பமான சிந்தனைகள். ஆனால் அவனின் அகக்காட்சி மிகவும் துன்புறுத்தவே அதை பற்றிய விடையறிவதை மிகவும் முக்கியமாக நினைத்து துறைமுகத்தில் காத்திருந்தான்.

அவர்கள் வந்து கப்பல் தலைவர் சம்மதித்ததாக சொல்ல மிகவும் மகிழ்ந்து சில தேவையான பொருட்களை துறைமுகத்தில் வாங்கிக்கொண்டு லீமா நகரில் யாரிடமும் சொல்லாமல் கப்பலுக்குள் சென்றான். அங்கே இவனையும் சேர்த்து பலர் அமர்திருந்தனர். இருதயம் படபடக்க அவனின் அகக்காட்சியின் தேடுதலுக்காக பயணத்தை துவங்கினான். அகக்காட்சியில் கண்ட விஷயங்களை அந்த ஊரில் இருக்கும் யாருக்காவது விளக்கினால் விடை கிடைக்கும் என நினைத்தான். ஸ்பெனீஷ் தெரிந்த கருப்பு உடைக்காரரை கண்டுபிடித்தால் அனைத்தும் தெளிவாகிவிடும் என்பது அவனின் நோக்கமாக இருந்தது.

எல்லாமே நாம் நினைத்தது போல நடப்பதில்லையே...! இந்தோனேசிய முனையை கடக்கும் பொழுது கப்பல் முழுவதும் சூராவளிக் காற்றில் சிக்கி அனைவரும் இறக்கப் போகிறார்கள் என்பது அப்பொழுது அவனுக்கு தெரியாது.

(மேளா தொடரும்)

Wednesday, October 24, 2012

பழைய பஞ்சாங்கம் 24-10-2012


பஞ்சாங்கம் ஏன் வரலை? 

பல மாதங்களாக பழைய பஞ்சாங்கம் என்ற தலைப்பில் நான் எழுதவே இல்லை. சிலர் தனி மின்னஞ்சல் அனுப்பி உங்களின் நேரத்தை இப்படி துணுக்கு எழுதி வீணாக்க வேண்டுமா? உங்கள் அறிவுக்கு (?!?!) பல விஷயங்களை எழுதுங்கள் என தூண்டினார்கள்.

வேறு சிலரோ பழைய பஞ்சாங்கம் எழுதுவதை ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறார்கள். நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஒன்றும் புரியவில்லை. படிப்பதற்கு எளிமையாகவும் நகைச்சுவையாகவும் (?) இருப்பது பழையபஞ்சாங்கம் தான் எழுதுங்கள் என மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.

எழுத சொன்னதற்காகவோ அல்லது எழுததீர்கள் என சொன்னதற்காகவோ நான் நிறுத்தவில்லை. [சரக்கு இருந்தால் தானே எழுத முடியும் என்பது வேறு விஷயம்] பல முக்கிய தலைப்புகளை எழுதிக்கொண்டிருந்ததால் தற்காலிக விடுமுறை விட்டுவிட்டேன். 

எந்த தலைப்பில் எழுதினாலும் அது பல பகுதிகளாக திரவுபதிக்கு கிருஷ்ணன் அளித்த சேலையை போல நீண்டு விடுகிறது. மீண்டும் சுருக்கமாக எழுத காட்டில் சென்று தவம் இயற்றி வரம் வாங்கலாம் என நினைக்கிறேன். மீண்டும் எழுத துவங்கி விட்டேன் இதோ...!

--------------------------------------

புதிய பஞ்சாங்கம்

ஒவ்வொரு வருடமும் ப்ரணவ பீடம் சார்ப்பில் பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். இது 8ஆம் வருடம் பஞ்சாங்க வெளியீடு விஜய தசமி அன்று நடந்தது. இந்த பஞ்சாங்கம் ஜோதி
டர்கள் மட்டும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். ஜோதிடம் தெரியாதவர்கள் பார்த்தால் ஒன்றும் புரியாது.

சென்ற வாரம் 2013ஆம் ஆண்டு பஞ்சாங்கம் தயார் செய்து அதில் பிழை திருத்தம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஏதோ வேலையற்று பொழுது போக்க பேப்பர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டு என் அருகே உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி.

“என்ன சுப்பாண்டி ஒரு மாதிரி இருக்க?” என கேட்டேன். 

“2012 உலக அழியும்னு சொன்னாங்க. நீங்க ஏன் சாமி வெட்டியா 2013க்கு பஞ்சாங்கம் போடறீங்க?” என்றான் சுப்பாண்டி.

பிழை திருத்த வேண்டிய இடம் பஞ்சாங்கம் அல்ல என்பது புரிந்தது.

---------------------------------

தீபாவளி திருநாள்

தீபாவளிக்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். புத்தாடை முதல் பட்டாசு வரை கொண்டாட்டம் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என பலருக்கு உண்மையான காரணம் தெரியாவிட்டாலும் கொண்டாடாமல் இருப்பதில்லை. தீபாவளி என பின்பற்றாதவர்களும் கூட விடுமுறை நாள் கொண்டாட்டம் என அறிவிக்கிறார்கள்.

தீபாவளியை பல வருடங்களாக நீங்கள் பல்வேறு நிலையில் கொண்டாடி இருப்பீர்கள். இந்த வருடம் வித்தியாசமாக கொண்டாட முயற்சி செய்யலாமா?

அதற்கு முன் ஒரு கதை..!

அசுரர்களுக்கு தங்களை இறைவன் வெறுப்பதாகவும், அசுரர்கள் என ஒதுக்குவதாகவும் மனக்குறை இருந்தது. அதனால் இறைவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அசுரர்களை வெறுப்பதில்லை, அவர்களே அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என அவர்களுக்கு புரியவைக்க ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

ஒரு அறையில் அமிர்தத்தை கலசங்களில் வைத்து அசுரர்களை சாப்பிட சொன்னார். ஆனால் அவர்களின் கை மூட்டு மடங்காமல் இருக்கும்படி செய்துவிட்டார். அதனால் அமிர்த கலசத்தை கையில் ஏந்தி குடிக்க முடியவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டு அமிர்தத்தை கீழே கொட்டிவிட்டனர்.

அதே அறையில் அமிர்தத்தை வைத்துவிட்டு தேவர்களை அனுப்பினார். தேவர்கள் முதலில் கைகள் மடங்காமல் இருப்பதனால் சிரமப்பட்டனர். பிறகு உணர்ந்து கலசத்திலிருந்து அமிர்தத்தை கையில் எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டனர். நோக்கம் அமிர்தத்தை குடிப்பது தானே? சுயநலமற்ற நிலையில் அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தனர் தேவர்கள்.

நீங்கள் இனிப்பு சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட முடியும்?
நீங்கள் உடை உடுத்தினால் ஒரு நேரத்தில் ஒர் உடை தானே அணிய முடியும்?

இதே போல பிறருக்கு இவற்றை அளித்தால் பலர் ஆனந்தம் அடைவார்கள். உங்களுக்கு மட்டும் என்றால் அந்த ஆனந்தத்தில் எல்லை உண்டு. பலருக்கு பகிர்ந்து அளித்தால் ஆனந்தம் எல்லை கடந்து பன்மடங்காகும்.

இப்பொழுது சொல்லுங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடலாம்? அசுரனாகவா? தேவனாகவா?

-------------------------------------------

ஜென்னிசம்

பரந்த அகண்ட 
பெருவிளியில்
அனைத்திலும் என் 
சுவாசமே நிரம்பி இருக்க
சுவாசிக்க மறந்து அதிலேயே
மூழ்கி இறக்கிறேன்

Wednesday, October 17, 2012

தெய்வம் இருப்பது எங்கே? பகுதி 3


கேள்வி : வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது?

பதில் : நாங்கள் வழிபடுவது குலதெய்வமா? கொல தெய்வமா என கேட்கிறீர்கள்...! தெய்வ வழிபாட்டால் இறப்பு நிகழும் என்பது மிகவும் வேடிக்கையானது. குலதெய்வ வழிபாட்டு செய்ய சோம்பேறித்தனம் கொண்ட சிலர் பரப்பும் வதந்தி இது. மேலும் குலதெய்வ வழிபாட்டில் குடும்ப உறவு முறையில் சிலருக்கு போட்டி பொறாமை வரும்பொழுது பரப்பும் செய்தியாகவும் இருக்கிறது. உண்மையில் குலதெய்வ வழிபாட்டால் உடல் உபாதைகள் தீர்ந்து மற்றும் அந்திம காலத்தில் இருப்பவர்களில் ஆயுள் மேம்படுதல் ஆகியவையே ஏற்படும். ஆகவே ஒன்றை உணருங்கள் குலதெய்வம் மரணத்தை கொடுக்காது மரணமில்லா பெருவாழ்வையே கொடுக்கும்.

கேள்வி : நான் வழிபடும் முறையும் என் ஆன்மீக விருப்பமும் வேறாக இருக்கிறது. அகிம்சையையும், சைவத்தையும் நான் விரும்புகிறேன். ஆனால் என் குலதெய்வ வழிபாட்டில் மிருக பலி இருக்கிறது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் குலதெய்வ வழிபாட்டை நான் எப்படி செய்வது?

பதில் : நீங்கள் நாகரீகம் அடைந்து நூடுல்ஸ், பிசா என சாப்பிட்டாலும் உங்கள் வீட்டில் இருக்கும் முதியவருக்கு என்ன பிடிக்கும் என நினைக்கிறீர்கள்? அவருக்கு எப்பவும் சாம்பார் ரசம் கொண்ட சாப்பாடு தானே? அதுபோலத்தான் நம் குலதெய்வ வழிபாட்டில் என்ன சொல்லுகிறார்களோ அதை நம் சித்தாந்தத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளாமல் செய்து வர வேண்டும். நம் தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்டது குலதெய்வ வழிபாடு என்பதை அறிக. மேலும் அவ்வாறு நீங்கள் சீர்திருத்தம் கொண்டுவர நினைத்தால் ஆன்மீக பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் வழிகாட்டுதலில் பலியிடுவதை மாற்றம் செய்யலாம். 

அதை விடுத்து குலதெய்வ வழிபாட்டை செய்ய மாட்டேன் என பலர் விட்டு விடுவது நல்லது அல்ல.

இவ்வாறு பல கேள்விகள் நமக்கு இருக்கிறது. குலதெய்வத்தை வழிபடுவேன் என்ற ஆர்வம் மற்றும் ஆழ்ந்த பக்தி இருந்தாலும் நாம் பல கேள்விகளையும், காரணங்களையும் கூற மாட்டோம்.

நேப்பாள மன்னரின் குலதெய்வம் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதஸ்வாமி என்றும், இராமநாதபுரம் சமஸ்தான ராஜாவுக்கு நேப்பாள பசுபதி நாதர் தான் குலதெய்வம் என்றும் நான் கேள்விப்ப்பட்டதுண்டு.

சில கிலோமீட்டர் தூரம் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்லவே நாம் கஷ்டப்பட்டுக் கொண்டு பிடி மண் எடுத்து வீட்டுக்கு அருகில் கோவில் கட்டிவிடுகிறோம். இவர்களை நினைத்துப்பாருங்கள். குலதெய்வத்தால் வடக்கும் தெற்கிலும் இருந்து இணைந்தவர்கள்....!

பழனி திருப்பதி போன்ற கோவில்கள் குலதெய்வமாக இருக்க வாய்ப்பு மிகமிக குறைவு. குலதெய்வம் தெரியாத காரணத்தால் இஷ்டதெய்வத்தையே குலதெய்வமாக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். இஷ்ட தெய்வமும், ப்ரார்த்தனா தெய்வமும் முக்கியம் தான் ஆனால் அந்த தெய்வ அனுககிரகம் வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு அவசியம்.

உதாரணமாக சபரிமலை விரதம் இருந்து பள்ளிக்கட்டு பூஜை நேரத்தில் முதலில் வழிபடும் தெய்வம் குலதெய்வம். இது எல்லா ஆன்மீக பூஜைகளிலும் முதன்மையானது. இதை விடுத்து செய்யும் ஆன்மீக பூஜைகள் செயல்படாது.

முற்றிலும் குலதெய்வமே எங்கே இருக்கிறது என்பது தெரியாது. என் குடும்பத்தில் மூத்தவர்கள் இல்லை அதனால் குலதெய்வத்தை அறியமுடிய வில்லை என்றாலும் கூட ஜோதிடத்தில் ஆருடம் மூலம் குலதெய்வத்தை அறியலாம். தேவப்பிரசன்ன முறைகளில் குலதெய்வ பிரசன்னம் ஒருவகையாகும்.

நம் கலாச்சாரமும் சாஸ்திரமும் பல்வேறு வழிகளில் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நம் சோம்பேறித்தனத்தை விடுத்து, நம் குல தெய்வத்தை கண்டறிந்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவோம்.

Friday, October 5, 2012

தெய்வம் இருப்பது எங்கே - பகுதி 2


குலதெய்வம் என்பது என்ன என இயல்பு மொழியில் கூறுகிறேன். உங்களின் பிறப்பின் மூலமே குலதெய்வம் என்பதாகும். ஒரு மரத்தின் விதையை எடுத்துக்கொண்டால் அந்த விதை வேறு ஒரு மரத்தில் தோன்றி இருக்கும் அல்லவா? அந்த விதை தோன்றிய மரத்தின் விதை? என பின்னோக்கி போனால் முதல் விதை எங்கே தோன்றி இருக்கும்? 

முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கதையாக இருக்கிறதா? நம் முன்னோர்களை நீங்கள் வரிசைப்படித்தினால் அதிகபட்சம் 3 தலைமுறை தாண்டி பெயர் சொல்ல  நமக்கு தெரியாது. அப்படி நம் வந்த வழிகளை ஆதி முன்னோர்கள் வரை பின்னோக்கி பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டு முறையே குலதெய்வ வழிபாடு.

எத்தனையோ நூற்றாண்டுக்கு முன் இருந்தவர்களை பற்றி நமக்கு என்ன கவலை என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அவர்கள் எப்பொழுதோ இருந்தவர்கள் இல்லை. இன்னும் நம்முடன் இருப்பவர்கள். கண்ணாடியில் உங்கள் உடலை பாருங்கள். உங்கள் கண், காது மூக்கு , உடல் அமைப்பு இவை எல்லாம் யார் சாயலில் இருக்கிறது? உங்கள் ஒவ்வொரு அங்கமும் அதன் வடிவமும் உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு அளித்தவையே என உணருங்கள்.

நம் உயிர் தாங்கி நிற்க தேவையான உடலை அளித்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவது கடமை அல்லவா? 

குலதெய்வ வழிபாடு என்பது நம் அனைத்து முன்னோர்களுக்கும் முதலான ஆதி முன்னோர் என இறைவனையே நம் முன்னோராக கருதி வழிபடுவதாகும். நம் கலாச்சார பூஜா விதிகள் அவ்வாறு வழிபடாமல் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பலன் இருக்காது என்கிறது.

நியாயம் தானே? வந்த வழியை மறந்தவனுக்கு போகும் வழி எப்படி புலப்படும்?

குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பலருக்கு தெரிவதில்லை. ஒரு மனிதன் தன் வழிபாட்டு கடமையான குலதெய்வத்தை மறந்துவிட்டால் என்ன நடக்கும்? 

மனசஞ்சலம், காரியங்களில் 99% அடைந்து பிறகு தோல்வியை தழுவுவது, தீர்க்க முடியாத உடல் நோய்கள், ஆன்மீக வளர்ச்சியில் தடை, குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து உறவினர்களால் கைவிடப்படுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எளிமையாக சொல்வதானால் ஒரு மனிதன் கடமையை தவறினால் என்ன நடக்குமோ அத்தனையும் நடக்கும்.

குலதெய்வ வழிபாட்டை பற்றி நிறைய கூறலாம், முதலில் நம்மில் பலருக்கு குலதெய்வ வழிபாடு பற்றி இருக்கும் கேள்விகளை பார்ப்போம்.

கேள்வி : ஐயா, என்னக்கு முன் இரண்டு பரம்பரையாக என் குடும்பத்தார் குலதெய்வ வழிபாட்டை ஏதோ காரணத்தால் விட்டுவிட்டார்கள். எனக்கு குலதெய்வமே எது என தெரியாது. அப்படி இருந்தும் நான் குலதெய்வத்தை வழிபட வேண்டுமா?

பதில் : உங்களின் இரண்டு பரம்பரை முன்னால் உங்கள் பாட்டனாருக்கு 100 ஏக்கர் நிலம் இருந்ததாக ஒரு சிறிய முத்திரை தாள் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?  அந்த நிலம் எங்கே இருந்தது. யாருகெல்லாம் விற்கப்பட்டது என ஆராய்வீர்கள்.உங்கள் பூர்வீக சொத்தில் ஒரு சதவிகிதம் கிடைத்தால் கூட போதும் என அலைந்து திரிந்து கை பற்றுவீர்கள் அல்லவா? அதுபோல உங்களின் உறவினர்கள், பூர்வ குடிகளை தொடர்புகொண்டு தேடுங்கள். பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களின் கடமைக்கும் கொடுங்கள்...! கண்டிப்பாக உங்களுக்கு குலதெய்வம் எது என கண்டறிய முடியும்.

கேள்வி : எங்கள் பூர்வீகம் சேலம் பக்கம் ஒரு கிராமம். அங்கே எங்கள் குலதெய்வம் இருக்கிறது. பிழைப்புக்காக எங்கள் தாத்தா கோவையில் இடப்பெயர்ச்சி அடைந்தார். எங்களின் பணிச்சுமையால் எங்களால் பூர்வீக கிராமத்திற்கு போக முடியவில்லை. எங்கள் பங்காளிகள் எல்லாம் முடிவு செய்து எங்கள் பூர்வீக கிராமத்தில் இருக்கும் கோவிலில் இருந்து மண் எடுத்து கோவையிலேயே ஒரு கோவிலை கட்டி குலதெய்வமாக வழிபடுகிறோம். இதை பலர் விமர்சிக்கிறார்கள்.எங்கள் வழிபாடு முறை சரியா?

பதில் : நீங்கள் கோவையில் வசிக்கிறீர்கள். உங்கள் மகன் சென்னையில் படிக்க சென்று விட்டார் என வைத்துக்கொள்ளுங்கள். அவரை சென்று பார்ப்பீர்களா? இல்லை அவரின் போட்டோ அல்லது சட்டையை பார்த்தால் போதும் என நினைப்பீர்களா? 

சேலம் என்ன அமெரிக்காவிலா இருக்குக்கிறது? 150 கிலோமீட்டர் இடைவெளிக்கே சிலர் புதிய குலதெய்வத்தை ஏற்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. தற்கால வாகன யுகத்தில் மின்னலைவிட வேகமான சென்றுவரும் தூரத்தில் குலதெய்வம் இருந்தும் நம்மால் வழிபடமுடியவில்லை என்றால் சோம்பேறித்தனத்தை விட வேறு என்ன இருக்க முடியும்? குலதெய்வம் கோவில் முற்றிலும் அழிந்து அதன் பல மேல் வருடங்களாக  பல குடியிருப்புகள் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே அப்பகுதி மண் எடுத்து புதிய கோவிலை கட்ட வேண்டும். அது இல்லாமல் குலதெய்வம் கோவில் இருக்கும் சூழலில் மீண்டும் கட்டுவது நம் ஆணவமும், சோம்பேறித்தனமும் தான் பக்தியும் கடமையும் அல்ல...!

கேள்வி : வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது?

பதில் : நாங்கள் வழிபடுவது குலதெய்வமா? கொல தெய்வமா என கேட்கிறீர்கள்...!  உங்களுக்கான பதில் அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(தொடரும்)

Tuesday, September 25, 2012

தெய்வம் இருப்பது எங்கே?


இந்திய கலாச்சாரம் ஆன்மீக பின்புலத்தால் கட்டமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வழிபாடு என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவான ஒரு விஷயமாக இருப்பதால், வெவ்வேறு மதத்தவரும் தத்தம் வழிபாட்டுமுறைகளை செய்து ஆன்மீக நிலை அடைய முயல்கிறார்கள்.

வேதகால கலாச்சாரம் இந்தியாவில் வேர் ஊன்றி இருப்பதால் வேறு நிலப்பரப்பில் தோன்றிய மதங்கள் ஆனாலும் இந்தியாவிற்கு வந்தவுடன் அவைகள் வேதகால ஆன்மீக தன்மையை பெற்றுவிடுகிறது. 

கிருஸ்துவம் பாரத தேசத்திற்குள் வந்தவுடன் தன் இயல்பை நமக்காக மாற்றி பூசாரிகளும், சடங்குகளும், ஒளி ஏற்றுவதுமாக தன்னை சரி செய்துகொண்டது. 

இஸ்லாமும் இறைவன் ஒருவனே, அவனே வணங்கத்தக்கவன் என சொன்னாலும், நம் நாட்டிற்கு வந்தவுடன் பல இஸ்லாமியர்கள் நபியையும், இஸ்லாமிய ஞானிகளையும் வணங்க துவங்குகிறார்கள் என்பதை பார்க்கிறோம்.  அதனாலேயே இங்கே வேர்விடும் எந்த மதமும் தன்னை வேத மதமாக மாற்றுகிறது என்கிறேன்.

பலர் காப்பாற்ற துடிக்கும் இந்து மதத்திற்கும் வேதமதத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை அறியவேண்டும். நம் கலாச்சாரத்தில் பலவேறு மதங்கள் வேதமதமாக மாற்றம் அடைந்தாலும், நம்மில் பலருக்கு வேத கால ஆன்மீக நிலை என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

கோவில்கள் மற்றும் ஆகம சாஸ்திரம் இவை தோன்றி அதிகபட்சம் 3000 ஆண்டுகளே ஆகிறது. அதற்கு முன் வேதகால ஆன்மீக நிலையில் மனிதன் இயற்கையையே வழிபட்டான். மஹாசக்தி, அக்னி, வருணன், வாயு மற்றும் இந்திரன் என அவனின் வழிபாடு இயற்கையை நோக்கியே இருந்தது. பிற்காலத்தில் இவை மாற்றம் அடைந்து தெய்வ வழிபாடு என்ற நிலைக்கும், ஆலய வழிபாடு என்ற நிலைக்கும் மேம்பட்டது.

ஆதி சனாதான தர்மத்திலிருந்து தற்சமயம் இருக்கும் சனாதான தர்ம நிலைக்கு வழிபாடுகள் மாற்றம் அடைந்ததும்  கோவில்களின் தோற்றம் உருவானது. 

தெய்வீக செயல்களுக்கு உருவங்கள் அளித்து மனிதன் வழிபடத்துவங்கிய காலக்கட்டம் ஆரம்பித்தது.தெய்வ வழிபாடு என்பது ஏதோ ஆலயம் தொழுதல் சாலவும் நன்று என்பதை போல நன்னெறி அல்லது ஒழுக்கம் சார்ந்த செயலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் வழிபாடு என்பது கடமை சார்ந்தது, உரிமை சார்ந்தது மற்றும் வாழ்வியல் சார்ந்த ஒரு அறம் என பலருக்கு தெரிவதில்லை.

தெய்வ வழிபாடு இவ்வாறாக மூன்றாக பிரிக்கப்படுகிறது. நம் மொழி வழக்கில் சொல்வதானால் குலதெய்வம், ப்ரார்தனை தெய்வம், இஷ்ட தெய்வம் என வகைப்படுத்தலாம்.

வழிபாட்டு முறைகளை நாம் சிறு வயது முதல் கற்றுக்கொண்டாலும் நம் நம்பிக்கை மற்றும் மனதுக்கு அருகாமையில் ஒரு தெய்வத்தை வைத்திருப்போம். இதுவே இஷ்ட தெய்வம் என்பதாகும். மிக சிக்கலான காலத்திலும், எதிர்பாராது ஏதேனும் நடக்கும் சமயம் உங்கள் உதடு முனுமுனுக்கும் தெய்வம் இஷ்ட தெய்வம் என்று கூறலாம். சிலருக்கு பிள்ளையாரப்பா , பலருக்கு முருகா என்றும் ஜூசஸ் என முனுமுனுப்பதையும் நாம் பார்த்திருக்கலாம்.

ப்ரார்த்தனா தெய்வம் என்பது நம் செயல்களுக்கு எதிர்பார்த்து வணங்கும் தெய்வத்தை குறிப்பிடலாம். பரிட்சைக்கு போகும் முன் நம் மாணவர்களுக்கு ஹயக்ரீவர் அல்லது சரஸ்வதியின் ஞாபகம் வரும் அல்லவா? அது போல தேவைக்கு ஏற்ப வணங்கும் தெய்வத்தை ப்ரார்தனா தெய்வம் என்கிறோம். இஸ்லாமியர்கள் பழனிக்கு வருவதும், இந்து மதம் சார்ந்தவர்கள் நாகூர் அல்லது வேளாங்கன்னி போவதும் ப்ரார்த்தனா தெய்வத்தை வணங்க என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இஷ்ட தெய்வம், ப்ரார்த்தனா தெய்வம் என்பது என்ன என உங்களுக்கு புரிந்திருக்கும். எனக்கு பிடித்த தெய்வத்தை வணங்குவேன் என நீங்கள் உரிமையுடன் சொன்னால் அது இஷ்ட தெய்வம். என வாழ்க்கை முறைக்கு இது தேவை அதனால் வணங்குகிறேன் என்றால் அது ப்ரார்த்தனா தெய்வம். குலதெய்வம் என்பது என்ன தெரியுமா? உங்கள் கடமை..!

(தொடரும்)

Wednesday, August 29, 2012

ஸ்ரீசக்ர புரி ஆன்மீக பயணம் 2012


ஸ்ரீ சக்ர புரி என்ற திருவண்ணாமலைக்கு ப்ரணவ பீடம் சார்பாக ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 6,7 ஆம் தேதிகளில் ( வியாழன்,வெள்ளி ) இரண்டு நாட்கள் பயணம் இருக்கும்.

திருவண்ணாமலையில் ஆன்மீக அதிர்வுகொண்ட இடங்களை தரிசிப்பது அங்கே தியானிப்பது முக்கிய நோக்கமாக கொண்டு பயணம் செய்ய இருக்கிறோம்.

பயணக்கட்டணம் 4500/- ரூபாய். இதில் தங்கும் இடம், மூன்றுவேளை உணவு, நகரத்தின் உள் பயண செலவுகள் ஆகியவை அடங்கும்.

20 நபர்களுக்கு மட்டுமே இடம் உண்டு. இப்பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இது சுற்றுலா அல்ல, ஆன்மீகப்பயணம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தியானம் மற்றும் ஆன்மீக உணர்வு உணர முயற்சி செய்பவர்களுக்கானது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

விருப்பம் உள்ளவர்கள் swamiomkar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து முன்பதிவு செய்யவும். முன்பதிவு செய்தவர்களில் இருந்து 20 நபர்களை தேர்ந்தெடுத்து அழைத்து செல்லுவோம்.

Monday, August 13, 2012

குழல் இனிது யாழ் இனிது - பகுதி 7


ஆன்மீக விழிப்புணர்வு கொடுக்கும் அறக்கட்டளையான ப்ரணவ பீடம் எதற்காக குழந்தை பேறு கொடுக்கு பயிற்சியை நடத்த வேண்டும் என சிலர் கேட்கிறார்கள்.

இது வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சியோ அல்லது குழந்தை வரம் கொடுக்கும் நிகழ்ச்சியோ அல்ல. செயற்கை ரசாயன முறையை தவிர்த்து முழுமையான இயற்கை வழி முறைகளில் குழந்தை பேறு பெற்று அதன் மூலம் நம் உடலையும் சமூகத்தையும் மேம்பட்ட நிலையில் வைத்துக்கொள்ளுதல் என்பதே இதன் நோக்கம்.

குழந்தை பெறுதலால் சமூகம் எப்படி மேம்படும் என்ற கேள்வி எழலாம். செயற்கை முறையில் பிறக்கும் குழந்தை தன்னுடைய இயற்கை செயல்பாட்டில் இருக்காது. அதீத செயல் நிலை (ஹைப்பர் ஆக்‌ஷன்) மற்றும் கவனிக்கும் திறனில் சிறிது குறை இருக்க செய்யும். இது அறிவியல் ஆய்வில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் பல செயற்கை கரு குழந்தைகளை கவனித்த பின் கண்ட உண்மை இது. இவ்வாறு இருக்க இத்தகைய குழந்தைகள் சமூகத்தில் பெருகினால் நிலை எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

ஒருபுறம் புற்றீசல் போல செயற்கை கரு மையங்கள் உருவாகி வருகிறது. மறுபுறம் இயற்கைக்கு மாறான வாழ்க்கை சூழலால் குழந்தையின்மை பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டே ப்ரணவ பீடம் சார்ப்பில் "சந்தான யோகா" என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

குழந்தை பிறப்பை வடமொழியில் ‘சந்தானம்’ என அழைக்க காரணம் என்ன தெரியுமா? நம் சந்ததியினரை இந்த சமூகத்திற்கு தானமாக கொடுப்பதால் தான். இதன் மூலம் உடல் மற்றும் மனம் முழுமையான ஆரோக்கியம் கொண்ட சமூகத்தை உருவாக்கலாம்.யோகம் என்றால் அடைதல் மற்றும் ஒன்றிணைதல் என அர்த்தம். குழந்தை செல்வத்தை அடைவதே சந்தான யோகம் என்கிறோம்.

சந்தான யோகா நிகழ்ச்சியில் நடைபெறும் முக்கிய செயல்களை இங்கே சுருக்கமாக அளிக்கிறேன்.

  • ஜோதிட ரீதியாக தம்பதியினரின் ஜாதக ஆய்வு செய்து குழந்தை பேறு பற்றி விளக்குதல்
  • ஆன்மீக ரீதியாக மற்றும் மந்திர / யந்திர சாஸ்திர ரீதியான உதவிகள் செய்தல்.
  • ஆரோக்கிய உணவு மற்றும் உடல் நல விழிப்புணர்வு பெறுதல்
  • நம் கலாச்சாரம் காட்டும் குழந்தை பாக்கிய வழிகள்
  • யோக மற்றும் தியான சிகிச்சைகள்


வரும் காலங்களில் ‘சந்தான யோகா’ வகுப்புகள் நடைபெற இருக்கிறது. உங்களின் விருப்பத்தை மின்னஞ்சல் செய்தால் மேலும் விளக்கம் பெறலாம்.

இவ்வளவு பகுதிகளாக எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தாமதமாக பகுதிகள் வெளியிட்டாலும் உங்களின் ஆதரவு தொடர்ந்தது. மிக்க நன்றி. சந்தானம் என்ற நல்ல குழந்தை செல்வத்தை பெற்று முழுமையான வாழ்க்கை வாழ இறையருளை வேண்டுகிறேன்.  

Saturday, July 7, 2012

குழலினிது யாழினிது - பகுதி 6


குழந்தை இன்மை என்பது நமக்கு புதிதாக வந்த பிரச்சனை இல்லை. பல காலமாக இருக்கிறது. ஆனால் தற்சமயம் அதன் விகிதம் அதிகரித்திருக்கிறது என்பதையே நான் இங்கே சுட்டிக்காட்டி வருகிறேன். நம் இதிகாசங்கள் மற்றும் புராணங்களை எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பு, சோதனைக் குழாய் குழந்தைகள் என பல்வேறு சான்றுகள் இருக்கிறது.

தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிள்ளை பெற்றார் என்றும் காந்தாரி கெளரவர்களை பெற்ற வழிமுறையும் தற்கால செயற்கை கருத்தரிப்புக்கு நேரடியாக தொடர்புகொண்டது. குழந்தை பேறு அடைய நான்கு உடல்களும் முழுமை நிலையில் இருக்க வேண்டும் என்றேன். தம்பதியினருக்கு மொத்தம் எட்டு உடல்களும் முழுமை அடைய வேண்டுமாயின் அதற்கு தற்காலத்தில் ஒரே தீர்வு யோக பயிற்சியும் யோக நிலை சார்ந்த உணவு பழக்கமும் ஆகும்.

ஆனால் பலருக்கு யோக முறை பயிற்சியால் குழந்தை பிறப்பு ஏற்படுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. யோகா செய்தால் அனைவரும் காமத்தை விடுத்து துறவி ஆகிவிடுவார்கள் என்ற தப்பான கருத்து நிலவி வருகிறது.

யோகா என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். நம் உடல் மற்றும் மனம் இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவது யோகம் என அழைக்கப்படுகிறது. இயல்பு மனிதனை விட யோக பயிற்சி செய்பவர்கள் தான் தன் செய்யும் பணியில் ஆழ்ந்து உணர்வுடன் செயல்பட முடியும்.

யோகம் செய்யக்கூடிய ஒருவர் தன் பணியாக எதை முன்னெடுக்கிறாரோ அதில் அவர் அற்புதமாக செயல் ஆற்றுவார். அப்படி இருக்க, யோக பயிற்சி செய்யும் ஒருவர் ஆன்மீகத்தை நாடினால் அதில் அவர் மேல்நிலைக்கு வருவார். குடும்ப வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டால் அதில் அவர் மேல்நிலைக்கு வருவார். தன்னை எப்பணியில் இணைக்கிறோமோ அதில் முழு விழிப்புணர்வுடன் பிறருக்கு முன்னுதாரணமாக செயல்பட யோகா மிக உன்னதமான வழியாகும்.

இவ்வாறு விழிப்புணர்வற்று நம்மக்கு கிடைக்கும் உணவு பொருட்களையும், சீரற்ற வாழ்க்கை நிலையும் இருந்து வாழ்ந்தால் குழல் இனிது யாழ் இனிது என்றே சொல்ல வேண்டி வரும். மழலையின் சொல்லை கேட்க வாய்ப்பு இருக்காது.

தற்கால வாழ்க்கை சூழலில் இக்குறைபாடு பெருகிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஆன்மீகத்தில் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நிலைக்கு ஏற்ப குழந்தை செல்வம் என்ற இன்பம் கைவரப்பெற்றேலே அடுத்து முக்தி என்ற முழுமையான நிலைக்கு நாம் செல்ல முடியும்.

தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்காக செயல்படும் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை குழந்தையின்மைக்கு தீர்வாக செயல்பட திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தம்பதிகள் இணைந்து மூன்று நாள் முழுமையான யோக பயிற்சி மற்றும் வாழ்வியல் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டுள்ளோம். ஸ்வாமி ஓம்கார் அவர்களின் நேரடி பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் முழுமையான விழிப்புணர்வுடன் குழந்தை பிறப்பை அனுகி மேம்பட உதவியாக இருக்கும்.

இத்தகைய பயிற்சி தனிப்பட்ட பயிற்சியாகவும் தனிச்சூழலிலும் நடத்த இருக்கிறோம். அதனால் இதன் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் செயற்கை கரு சோதனைக்கு செலவு செய்வதை விட மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும் மேலும் பக்க விளைவு 100 சதவிகிதம் இருக்காது. வாழ்நாள் முழுவதும் உங்களில் உடல், மனம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும்.

உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள் பிற தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த பயிற்சியை கொடுக்க ஏன் நாங்கள் முன்வந்தோம்?

(கரு உருவாகும்)

Friday, June 22, 2012

குரு பூர்ணிமா 2012

அழைப்பிதழின் மேல் சுட்டியை அழுத்தி பெரிதாக பார்க்கவும்

Thursday, June 7, 2012

தென்கைலாய திருப்பயணம் - 2012



அருள்நிறைந்த ஆன்மாக்களுக்கு,


ஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.

தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரிமலையில் இறையருளால்  பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

வரும் ஜூன் மாதம் 23,24ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) இரு நாட்கள்மலைப்பயணம் இருக்கும்.

தென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.

இதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...!

இப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது. 

எல்லோரும் கலந்து கொள்ளலாமா? -இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.

1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்
2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்
3) பெண்கள்
4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்.

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.

23ஆம் தேதி மாலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (24ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.

இருபது நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 15ஆம்
தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.

நீங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இப்பயணத்தில் பங்குபெற நினைக்கிறீர்களா? இப்பயணத்திற்கான போக்குவரத்து செலவு மற்றும் உணவு ஆகியவற்றை நீங்கள் நன்கொடையாக அளிக்கலாம்.

நம்முள் இருக்கும் இறையருளை இயற்கையின் திருநடனத்தால் உணர வாருங்கள்...!

Wednesday, May 30, 2012

குழலினிது யாழினிது - பகுதி 5 +18


நேற்று நாளிதழ்களில் வந்த செய்தி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கருத்தரிப்பு மருத்துவமனையில் ஒரே நாளில் 26 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என்றதை படிக்கும் பொழுது மிகவும் வேதனை அடைந்தேன்.

செயற்கை கரு உற்பத்தி முறையில் பல குழந்தைகள் பிறக்கிறது என்பதை படத்துடன் வெளியிட்டு அதை கொண்டாடும் மனநிலையில் நாம் இருக்கிறோம். இத்தகவலை கண்டவுடன் நாம் சிந்திக்க வேண்டியது என்ன தெரியுமா?

ஒரே நாளில் இத்தனை சோதனை குழாய் குழந்தைகள் என்றால் மாதத்திற்கு எத்தனை..மேலும் எத்தனை தம்பதிகள் மலட்டுத்தன்மையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து இத்தனை குழந்தைகள் பிறப்பதை ஒரு அதிசயமாக தினசரியில் போடுவது நல்லதா?

இவை ஒரு புறம் இருக்க சோதனைக்குழாய் குழந்தைகள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பார்த்தால், முதலில் மூன்று கருக்களை கருப்பையில் வைத்து சோதனை செய்வார்கள். அதில் ஒரு கருவை கலைத்து, இரு கருக்களை வளரவிடுவார்கள். கருப்பை இரு கருக்களை சுமக்கும் திறன் இல்லாமல் போனால் மற்றொன்றையும் அழித்துவிடுவார்கள். மேற்கண்ட படத்தில் உள்ள 26 குழந்தைகளில் 7 குழந்தைகள் இரட்டை குழந்தைகள் ஆகும். மீதி 12 குழந்தைகள் தங்களுடன் உருவான இரட்டை கருக்களை இழந்து பிறந்தவைகள். 

தங்கள் கருத்தரிப்பு மையத்திற்கு வருபவர்கள் ஏமாறக்கூடாது என்பதாலும், தாங்கள் அதிக குழந்தை பிறப்பு விகிதத்தை கொடுத்தோம் என்ற வெற்றியை கூறுவதற்கும் சில மருத்துவர்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். மேலும் நான் கேள்விப்பட்ட ஒரு அதிர்ச்சியான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். தம்பதியினரின்  விந்து மற்றும் கருமுட்டை பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை பலப்படுத்தாமல் வேறு ஒரு நபரின் விந்து மற்றும் கருமுட்டையை பயன்படுத்துகிறார்கள். கருத்தரிப்பு மையத்தில் 50%க்கு மேல் பிறக்கும் குழந்தைகள் பிறப்பு தன்மை இதுதான். இந்த உண்மை தம்பதிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. கருத்தரிப்பு மையத்தின் வெற்றிக்காகவும் பணத்திற்காகவும் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை...!

சரி நம்ம விஷயத்திற்கு வருவோம்....

உணவு பழக்கத்தை பற்றி நான் குறிப்பிட்டதும் பலர் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டார்கள். 

தினமும் சாப்பிடும் உணவிலேயே நாங்கள் எத்தனை அஜாக்கிரதையாக இருந்திருக்கிறோம் என தங்களின் கருத்துக்களை கூறினார்கள்.

உடலில் ரசாயனம் சேர விடாமல் மிகத்தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்பதை புரிந்துகொண்டால் இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என விளக்கும்.

மேலும் நம் உடைகளை மேற்கத்திய பாணியில் உடலுடன் மிகவும் இறுக்கமாக அணிகிறோம். ஆண்களும் பெண்களும் மிகவும் தடிமனான ஜீன்ஸ் வகை உடைகளை இடுப்பு சார்ந்த ப்ரதேசங்களில் இறுக்கமாக அணிவதால் உடலில் வெப்ப நிலை அதிகமாகி உடல் சமநிலை தவறுகிறது.

நம் பாரம்பரிய முறைப்படி திருமணமான தம்பதிகள் அணியும் உடையை கவனமாக பாருங்கள். வேஷ்டியும் சேலையும் ஒரு வித தளர்வு நிலையை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் நம்மில் பலர் நவீன நாகரீகத்தில் இவ்வாறு அணியாமல் குளிர் பிரதேச மக்கள் அணியும் 

இறுக்கமான உடையை அணிந்து வலம்வருகிறோம். குறைந்தபட்சம் வீட்டிலாவது இயல்பான நம் கலாச்சார உடை அணிவது அவசியம். கலாச்சார உடை என்றவுடன் ஏதோ நான் கலாச்சார காவலன் என நினைத்துவிடாதீர்கள். நீங்கள் மேற்கத்திய நாட்டில் வாழ்ந்தால் அத்தகைய உடை அணியுங்கள், இந்தியாவில் வாழ்ந்தால் அதற்கு தக்க உடை அணியுங்கள் என்கிறேன்.

உடையை பற்றி பேசிய நாம் பழக்க வழக்கத்தை பற்றியும் பேசலாம். ப்ளாஸ்டிக் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. ப்ளாஸ்டிக் எந்த வயதிலிருந்து பயன்படுத்துகிறோம் நாம் தெரியுமா? 

மிகச்சிறிய குழந்தையாக இருந்த பொழுது ப்ளாஸ்டிக் பொம்மையை கடித்து சுவைக்க ஆரம்பித்து இப்பொழுது எது என்றாலும் ப்ளாஸ்டிக் தான். நம் வீட்டில் இருக்கும் பொருட்களில் ப்ளாஸ்டிக் 

உள்ள பொருளை தூக்கி வீச வேண்டும் என விரும்பினால் 90% பொருட்கள் வீச வேண்டி வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? ப்ளாஸ்டிக் பொருட்கள் குழந்தை இன்மையை கொடுக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று.

மேலும் ரெப்ரிஜ்ரேட்டர், மைக்ரோவேவ் அவன் போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் உடல் நலத்தில் மலட்டுத்தன்மை அதிகரிக்கும். 

நம் உடல் டாக்ஸின் (நச்சு) பொருட்களால் நிரப்பப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து அவற்றை இனி மேல் உடலில் சேராதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை தெய்வத்திற்கு சமம் என கூறுகிறார்கள். அப்படிப்பட்ட தெய்வம் வந்து வசிக்கும் நம் உடல் என்ற கோவில் கழிவுகள் இன்றி தூய்மையாக இருக்க வேண்டும் அல்லவா?

நச்சுகளும் கழிவுகளும் இல்லாமல் தூய்மையான உடலை பெற நம் உணவு, உடை மற்றும் பழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

இனிமேல் உடலில் சேரும் நச்சுக்களை தடுக்க உணவு உடையில் மாற்றம் செய்யலாம்.இத்தனை நாள் சேர்ந்த நச்சுக்களை (டாக்ஸினை) எப்படி வெளியேற்றுவது?

இதற்கு தீர்வு யோக பயிற்சியும் யோக க்ரியைகளும் தான்...!

உடல் வளைவு கொண்ட ஆசனம், சக்தி உடலை மேம்படுத்தும் ப்ராணாயாமம், மன உடலையும் அறிவுடலையும் தளர்வாக்கும் ஆழ்நிலை தியானம் என யோகத்தில் ஈடுபட்டு நான்கு உடலையும் தூய்மைப்படுத்துவது மட்டுமல்ல எதிர்காலத்தில் நச்சுக்கள் சேராமலும் தடுக்கலாம்.

ஸ்வாமி யோகப்பயிற்சியா?... யோகப்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைபாடு வரும்னு சொல்றாங்களே.. தாம்பத்திய உறவில் நாட்டம் போயிடுமே... ஒரு சினிமாவுல கூட அப்படி காண்பிச்சாங்களே அப்புறம் எப்படி குழந்தை பிறக்கும்-னு உங்களுக்கு சந்தேகமா?

அடுத்தப்பகுதியில ஒரு மகிழ்ச்சியான செய்தியோட இதை விளக்கறேன்.

(கரு உருவாகும்)

Wednesday, May 16, 2012

குழலினிது யாழினிது - பகுதி 4 +18


நம் உடலின் சமநிலை தவறுவதற்கு காரணம் நாம் தான் என கூறினேன் அல்லவா? அது எப்படி என காண்போம்.

ஊன் உடல் என்பது நம் நேரடியாக தொடர்புகொள்ளதக்க வகையில் இருக்கிறது. நம் உணவு மற்றும் உடை பழக்கம் ஆகியவை ஊன் உடம்பை நேரடியாக தாக்குகிறது.

பிறப்புறுப்பு மற்றும் கருப்பையின் செயல்பாடுகள் இயந்திர கருவிபோல செயல்படுவதில்லை. இவை செயல்பட மனம், பிராணன் மற்றும் அறிவு உடல் முக்கிய பங்கை வகிக்கிறது.

நவீன மருத்துவத்தில் ஒருவரின் உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு என்பதை கண்டறிகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஏன் அது ஏற்றத்தாழ்வு அடைந்தது? அச்சுரபிகளை ஏன் இயல்பாக செயல்பட வைக்க முடியாதா என்ற ஆய்வுக்கு செல்லாமல், செயற்கையாக வெளியிலிருந்து ஹார்மோன்கள் செலுத்தப்படுகிறது.

இதன் விளைவாக உடல் உபாதைகள் ஏற்படுதல், உடல் பருமன் அதிகரித்தல் என பல விளைவுகள். அதில் உச்சமாக மேலும் நம் உடல் சமநிலை தவறிவிடுகிறது. கருத்தரிப்பு மையங்களில் இவர்கள் ஹார்மோன் ஊசி செலுத்தும் முன் நம்மிடம் வாங்கும் கையெழுத்தில் பல அபாயங்கள் உண்டு என பலருக்கு தெரியாது. மருந்து தொழிற்சாலைகளின் வியாபாரமும் இதன் பின்புலத்தில் உண்டு.

ஹார்மோன்கள் நம் பிறக்கும் பொழுது இயற்கையாக இருந்தது. அவற்றை ஏன் செயற்கையாக உள் செலுத்த வேண்டும்? இயற்கையாக மீண்டும் உற்பத்தி செய்ய இயலாதா? என நாம் சிந்திப்பதில்லை.

உற்றார் உறவினர் கேட்கிறார்களே, குழந்தை இன்னும் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் கருத்தரிப்பு மையத்தில் என்ன சொல்லுகிறார்களோ அதை சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனதை கொடுக்கிறது.

1977க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குழந்தை இன்மை இயல்பாக இருக்கிறது என்றேன் அல்லவா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு பிறகு தான் பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயத்தில் நஞ்சை கலந்தோம்.

மேலும் குறிப்பிட்ட தானியங்களே விளைவிக்க துவங்கினோம். ரசாயனம் கொண்ட ஒரே வகை தானியத்தை உண்டு வந்ததால் நம் சந்ததியினர் மலட்டு தன்மை நோக்கி சென்றனர்.

குழந்தையின்மையை 30 சதவிகிதம் முடிவு செய்வது உணவு பழக்கம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நம் ஊன் உடல் உணவால் ஆனது. அதை மேம்படுத்தவும் பிறப்புறுப்பின் செயல்கள் செறிவு பெறவும் உணவு பழக்கம் மிகவும் முக்கியம்.

அரிசி உணவு என்பது நம் கலாச்சார உணவு அல்ல. வருடத்திற்கு ஒரு முறை விழா காலத்தில் மட்டும் அரிசி சாப்பிட்ட நாம். இப்பொழுது தினமும் சாப்பிடுகிறோம். குறைந்த பட்சம் இருவேளை உணவில் அரிசி இருக்கிறது. விவசாயத்தில் அதிக நஞ்சு கொண்டு ஒருவாக்கப்படும் தானியம் அரிசி.

கம்பு, திணை, சோளம், பயிறு என பல்வேறு தானியம் கொண்ட உணவு முறையை இழந்துவிட்டோம். இவைகளை தினமும் உணவில் இணைத்தாலே நமக்கு ஹார்மோன் செயல்கள் மீண்டும் புத்துணர்வு பெறும். மேலும் குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். இவை எல்லாம் நம் ஊன் உடலை பாதிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். உணவை சீராக்கினால் உடலை சீராக்கலாம்.

தினமும் நஞ்சு கலந்த உணவு உண்டு பிறகு குழந்தை இல்லை என சொல்லுவது யாருடைய தவறு?

ஊன் உடல் பாதிப்புக்கு உணவு மட்டுமல்ல உடையும்,பழக்க வழக்கமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

(கரு உருவாகும்)

Tuesday, May 8, 2012

குழலினிது யாழினிது - பகுதி 3 +18


உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்கிறார் திருமூலர். அவரின் வரிகளை கவனித்துப்பாருங்கள். உடம்பே ஆலயம் என கூறவில்லை. ஊன் உடம்பே என்கிறார். உடம்பு என்பது பல உண்டு. அதில் நாம் குழப்பம் கொள்ளக்கூடாது என்பதற்காக ஊன் உடம்பே என குறிப்பிட்டு எழுதுகிறார்.
நவீன நாகரீததில் இருக்கும் நமக்கோ ஊன் உடம்பை தவிர பிற உடல் பற்றிய புரிதல் இல்லை.

நமக்கு ஐந்து உடல் (கோஷங்கள்) இருப்பதாக கூறினேன் அல்லவா? இவை நமக்கு பஞ்ச பூதத்திலிருந்து தோன்றியது. ஒவ்வொரு உடலும் பஞ்சபூத தன்மையிலேயே செயல்படுகிறது. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

அன்ன மய கோஷம் (ஊன் உடல்) : பூமியில் உருவாகும் பொருட்களால் உருவான உடல் அன்னமய கோஷம். அன்னம் என்ற உணவு மூலம் வளர்ச்சி பெற்றது. பஞ்சபூதத்தில் மண் தன்மை கொண்டது.  நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒரே உடல் அன்னமய கோஷம் மட்டுமே. அதனால் நவீன மருத்துவம் இவ்வுடலை மட்டுமே கொண்டு சிகிச்சை அளிக்கிறது.

ப்ராண மய கோஷம் (சக்தி உடல் ) : பிரப்ஞ்ச ஆற்றலால் உருவான உடல். உடல் செயல்களுக்கும் மனச்செயல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. பஞ்சபூதத்தில் வாயுவின் தன்மையை கொண்டது. இவ்வுடலில் சக்தி குறைவதனால் உடல் உறுப்புக்கள் செயல்படாமல் ஸ்தம்பிக்கிறது. மின்சாரக்கருவிகள் போன்று ஊன் உடலை உருவகித்தால் ப்ராண உடலை மின்சாரமாக உணர முடியும்.

மனோமய கோஷம் (மன உடல் ) : எண்ணங்களினால் உருவான உடல். காலம் மற்றும் வாழ்க்கை தன்மைக்கு காரணமான உடல் இந்த மனோ உடல். பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது. மனம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணமாகிறது மன உடல்.

விஞ்ஞானமய கோஷம் (அறிவுடல்) : நம் அனுபவங்களின் தொகுப்பாகவும் அறிவு சார்ந்த செயல்களுக்கு காரணமாக இருப்பது விஞ்ஞான மயகோஷம். பஞ்ச பூதத்தில் நெருப்பின் தன்மையை கொண்டது.
நெருப்பை போன்று அறிவின் செயலை நன்மை, தீமையும் அதனால் ஏற்படும் விளைவையும் கொண்டு உருவாகிறது. ஞாபக மறதி மன நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இவ்வுடல் விளங்குகிறது.

ஆனந்த மய கோஷம் (ஆன்ம உடல்) : என்றும் எப்பொழுதும் பரமானந்த நிலையில் இருப்பதால் ஆனந்த மய கோஷம் என அழைக்கப்படுகிறது. பஞ்சபூதத்தில் ஆகாயத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மா பரிசுத்தனாம இறை நிலையின் பிரதியாக இருப்பதால் என்றும் ஆனந்த நிலையில் இருக்கிறது. ஆன்மா எப்பொழுதும் சம நிலை தவறுவதில்லை. ஆன்மா ஆன்மாவாகவே இருந்து பிற உடல்களின் செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறது.  

ஆனந்த மய கோஷத்தை தவிர பிற உடல்கள் சமநிலை தவறினாலோ, செயல்படாமல் போனாலோ வாழ்க்கை தன்மை பாதிக்கப்படுகிறது. குழந்தை இன்மை என்ற வகையில் பார்த்தால் ஊன் உடல் மற்றும் சக்தி உடல் இரண்டும் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

மாதவிடாய் சுழற்சி மற்றும் விந்து உற்பத்திக்கு சக்தி உடல் (ப்ராண மய கோஷம்) காரணமாகிறது. அதனால் ப்ராண உடலில் ஏதேனும் குறை இருப்பின் இச்செயல்கள் தடைபடும். மனோமய கோஷமும் உடலுறவு செயல்களின் தன்மையை எண்ணங்களால் பாதிப்படைய செய்கிறது. 

நடைமுறையில் ஊன் உடலை மட்டும் முன்னிருத்தி ஹார்மோன் சிகிச்சை, ஐவிஆர் மற்றும் சோதனை குழாய் மூலம் கரு உற்பத்தி செய்யும் பொழுது குழந்தையின் ஊன் உடல் மட்டுமே நன்றாக இருக்கும். தாய் தந்தையரின் பிற உடல்களில் குறை இருப்பதால் பிறக்கும் குழந்தையும் அவ்வுடலின் பாதிப்புடன் பிறக்கும்.

பிறக்கும் பொழுது அனைத்து உடலும் நன்றாக இருக்கும் படியே பிறக்கிறோம். அப்படியானால் அவ்வுடல்களில் குறை ஏற்படுவதற்கும் சமநிலை தவறுவதற்கும் யார் காரணம்?

வேறு யார்? நீங்கள் தான்...!

(கரு உருவாகும்...)