Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, September 27, 2010

தக்‌ஷிண மேரு - 1000

தென் திசையில் இருக்கும் பெரும் மலை என்ற பொருளில் தக்‌ஷிண மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆயிரம் வயது....!


பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த வாரகாலத்தில் பல்வேறு செய்திகளை அளித்தார்கள். பெரிய கோவிலின் சிறப்புகள் மற்றும் சரித்தரத்தை சுவைபட எழுதினார்கள். பிரகதீஸ்வரர் கோவில் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

தஞ்சை பெரிய கோவில் தென்னிந்திய கட்டட கலைகளிலிலும், ஆகம விதியின் அடிப்படையிலும் தனித்துவமாக இருக்கிறது. கருவறைக்கு மேல் விமான அமைப்புக்கு பதிலாக, கருவறைக்கு மேல் பெரிய கோபுரம் கொண்ட கோவிலாக திகழ்கிறது.


கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பெரிதாக காண படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

கருவறைக்கு மேல் இருக்கும் கோபுரம் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் மட்டுமல்ல இது எக்காலத்திலும் சாத்தியமா என வியக்க வைக்கிறது. திருச்சிக்கு அருகே 60 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்ததை சாதனையாக கூறுகிறார்கள். உண்மையில் கல்லை கொண்டு வருவது சாதனை அல்ல, அந்த கல்லை கொண்டு கோபுரத்தில் சிலைகள், சின்ன சின்ன சிற்பங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கனக்கான டன் எடை உள்ள கல்லின் எதோ ஒரு முனையில் தவறு செய்தாலும் மொத்த கோபுரமும் வீண் என்பதை நினைவு கொள்ளுங்கள்...!

கோபுரம், கோவில் கருவறை, கருவறைக்குள் இருக்கும் சிவலிங்கம் என அனைத்தும் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது . ஒரே கல்லில் செய்ய வேண்டும் என ஏன் தோன்ற வேண்டும் என்றால் இது ‘ஏகம்’ என்ற ஒருமை தன்மை வாய்ந்த அத்வைத்த கோவில் ஆகும். சிவனை தவிர வேறு எதுவும் வழிபடாத ஒருமை தன்மை வாய்ந்ததாக இருந்து, பின்பு பிற்காலத்தில் மாற்றம் அடைந்தது.
சிவனை மட்டும் முழு முதற்கடவுளாக கொண்டு லிங்கத்தை மட்டுமே மனதில் வைத்து கட்டப்பட்டது. இங்கே சக்திக்கும், நந்திக்கும் முக்கியத்துவம் முன்பு அளிக்கப்படவில்லை. ராஜராஜனுக்கு பிறகு வந்த பல்லவ அரசர்களே தற்சமயம் இருக்கும் நந்தியை ஸ்தாபித்தார்கள். பிற்கால சைவ சிந்தாந்த ஆகம சாஸ்திரங்கள் லிங்கத்தின் அளவுக்கு நந்தி இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு இவ்வாறு உருவாக்கப்பட்டது.

பெரியகோவிலின் தல விருட்சம் மற்றும் அதன் அடியில் வீற்றிருக்கும் காளியின் அம்சம் கொண்ட ப்ரதியங்கரா தேவி சக்தியாக இக்கோவிலில் விளங்குகிறது.

பூமியில் நிழல் விழுகாத கோபுர கலசம்

கோபுரத்தின் நிழல் கீழே விழுகாது என சிலர் கூறுவார்கள். உண்மையில் கோபுர நிழல் கீழே விழும். ஆனால் கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம் நிழலில் எப்பொழுதும் தெரியாது. கோபுர கலசம் நிழல் விழுகாது என்ற விளக்கம் நாளடைவில் கோபுர நிழல் விழுகாது என மருவியது.


நவக்கிரங்களின் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தனித்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களும் லிங்க ரூபமாகவே இருக்கிறது. அனைத்து இறை சக்தியையும் லிங்கமாகவே கொண்டு முன்பு கட்டபட்டு பின்பு வந்த அரசர்களால் அது விக்ரஹங்களால மாற்றபட்டது. எனினும் நவகிரஹங்கள் இன்றும் லிங்க ரூபமாகவே இருப்பது தனிச்சிறப்பு.


கோவிலின் பக்கவாட்டு சுவர் பகுதியில் இருக்கும் விஷ்ணு துர்க்கை மிகவும் அழகுவாய்ந்த சொரூபம். என் நினைவுக்கு எட்டியவரை இவ்வளவு அழகுடன் துர்க்கை ரூபத்தை நான் கண்டது இல்லை.

கோவிலின் உள் பிரகாரத்தில் இருக்கும் கற்சங்கிலி மற்றும் கல் ஓடு வேலைகள் சிற்பக்கலையின் உச்சபட்ச சாதனைகள்

முன்பு ஒரு சமயம் நான் சென்ற பொழுது ஒரு அவலத்தை கண்டேன். கல்வெட்டு உள்ள பகுதியில் பொங்கல் பிரசாதம் சாப்பிட்டு விட்டு கைகள் துடைத்து விட்டு சென்று இருந்தார்கள். கல்வெட்டின் எழுத்து இருக்கும் குழிகளில் உணவு துகள்கள் நிரம்பி இருந்தது. வேதனை அடைந்து, என் கைகளில் இருந்த துணியால் அந்த கழிவுகளை துடைக்கும் பொழுது ஒரு கோவில் அதிகாரி நான் கல்வெட்டை சேதப்படுத்துவதாக கடிந்து கொண்டார். ஆயிரம் ஆண்டு விழாவிற்கு கோவில் பொலிவுடன் இருப்பது பெரிய காரியம் அல்ல. உண்மையில் பின்வரும் காலத்தில் அவை காக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஆயிரம் வருடத்தை கடந்த பல கோவில்கள் இருக்கிறது. காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தை பார்த்து தான் ராஜராஜ சோழனுக்கு பெரிய கற்கோவில் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாம். ஆனால் அத்தகைய கோவிலுக்கு எல்லாம் விழா கொண்டாட வில்லை என்பது இத்தருணத்தில் நினைவு கொள்வோம்.

ராஜராஜ சோழன் ஒரு பேரரசனாக, சக்ரவர்த்தியாக, ஜனநாயகத்தை முதலில் அமைத்த மன்னனாக கூறுகிறார்கள். உண்மையில் ராஜராஜ சோழன் ஒரு ஆன்மீக உயர்நிலையில் இருந்தவன். அந்தணர்களிடம் இருந்து சைவ நூல்களை மீட்டு எடுத்தது அவற்றை காக்க முற்பட்டது, பல்வேறு சமயத்திற்கு சம நீதி கொடுத்தது, பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடித்து பிறகு முடி துறந்து தனிமையில் வாழ்ந்தது என அவரின் ஆன்மீக சுவடுகள் ஏராளம். இன்று அத்தகைய மாமனிதனின் சமாதி கேட்பாரற்று கிடக்கிறது. அந்த சமாதி கோவிலை நிர்வகிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

சதய நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்கள் நானும் ராஜராஜனும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறிக்கொள்ளலாம்.

பிற்கால சந்ததியினருக்கான தஞ்சாவூர் கல்வெட்டுடன் ஸ்வாமி ஓம்கார் :)

டிஸ்கி : இது எல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு நீங்க நினைக்கலாம். தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வச்சா.. நமக்கு பின்னாடி வரும் சந்ததியினர் படிச்சு புரிஞ்சுக்குவாங்கல்லனு...நினைத்தேன். அங்கே இருக்கும் கல்வெட்டுக்கள் இப்பொழுது சேதமடுத்தியும்,இடமாற்றப்படுவதாலும் இங்கே பதிவாக எழுதிவிட்டேன்... அது உங்க மனசுல கல்வெட்டா இருகட்டுமே!

பெரிய கோவில் படங்கள் உதவி : ஸ்வாமி ஓம்கார் :)

Friday, September 24, 2010

நிமித்தத்தை புரிஞ்சுக்குங்க..!

சில நாட்களாக இங்கே நான் எழுதவில்லை. பலரும் பல்வேறு கடிதங்கள், தொலை பேசி அழைப்புகள் மூலம் என் நலன் விசாரித்தனர். அவர்களின் அன்புக்கு என் வணக்கங்கள். சிலர் முதன் முதலில் என்னுடன் உரையாடி, ‘இவர்’கள் எல்லாம் என் வலைபக்கத்தை படிக்கிறார்களா என வியக்க வைத்தார்கள்.

சென்ற பதிவுகளில் நான் குறிப்பிட்ட நிமித்தம் என்ற இயற்கை மொழியை பலர் பாராட்டி இருந்தீர்கள். தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிமித்தமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கூட பகிர்ந்துகொண்டீர்கள். பலர் நிமித்தம் ஒரு துர்சம்பவத்திற்கு அறிகுறியாகவே விளக்கி இருக்கிறார்கள்.

உண்மையில் நிமித்தம் அனைத்து சம்பவங்களையும் கூறும் பொது தன்மை கொண்டது. அப்படியானால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் மட்டும் எப்படி தெரிகிறது?

அதற்கு காரணம் ஏதேனும் தவறாக நடக்கக்கூடும் எனும் பொழுது உங்கள் விழிப்புணர்வு முழுமையாக திறந்த நிலையில் இருக்கும். அதனால் தான் முன்பு “உங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும்” என கூறினேன். விழிப்புணர்வு என்பது என்ன என பலர் வெவ்வேறு தளத்தில் விளக்குகிறார்கள். உண்மையில் விழிப்புணர்வு என்றால் என்ன என தெரிந்துகொள்வோம். :)

நாம் மனம் மற்றும் உடல் என்ற இரு கருவிகளால் ஆளப்படுகிறோம். ஆனால் இரு கருவிகளும் இணைந்து செயல்படாமல் தனித்தனியே வேலை செய்கிறது. அதனால் நம் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருப்பதில்லை. உதாரணமாக உணவு உட்கொள்ளும் பொழுது நம் உடல் உணவை உண்ணுகிறது ஆனால் நம் மனம் வேறு ஒன்றை சிந்திக்கிறது. மனம் உண்ணாத உணவை, உடல் மட்டும் உண்ணுவதால் உடல் வியாதியால் துன்பப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் உண்ணும் செயலில் மனம் மற்றும் உடல் இணைந்து செயல்பட்டால் அதன் பெயர் விழிப்புணர்வுடன் உண்ணுவது என்பதாகும்.

இரட்டை மாட்டு வண்டியை செலுத்தும் பொழுது மாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சென்றால் என்ன நடக்கும்? இரு மாடுகளையும் தன் வழிக்கு கொண்டுவந்து வண்டியை ஓட்டுவது வண்டிக்காரனின் தொழில் அல்லவா? அதனால் தான் மனம் மற்றும் உடல் என்ற மாடுகள் இணைந்த வண்டி என்ற வாழ்க்கையை ஆன்மா என்ற வண்டிக்காரன் சரியாக ஓட்டவேண்டும். இவ்வாறு மனம் மற்றும் உடல் இணைந்த நிலைக்கு விழிப்புணர்வுடன் இருத்தல் என பெயர். இதையே யோகா என்கிறோம்.

மனம் மற்றும் உடல் ஒன்றி நம் வாழ்க்கையை கவனிக்கும் பொழுது ஒவ்வொரு ஷணமும் நமக்கு இயற்கை பலவற்றை கற்றுக்கொடுக்கும். இக்கருத்தைத்தான் நிமித்தம் என்பதில் விளக்கினேன். ஒரு நிமித்தத்தை விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கும் விழிப்புணர்வு அற்று கவனிப்பதற்கு என்ன வித்தியாசம்? இதை ஒரு கதைவடிவில் பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் நடந்த சம்பவம் இது. சுப்பாண்டியும் சுந்திர பாண்டியும் ஜோதிட மாணவர்கள். குருகுல முறையில் சாஸ்திரங்களை பாஸ்கராச்சாரியார் என்ற ஜோதிட ஆச்சாரியரிடம் பயின்று வந்தனர். ஒரு நாள் இருவரும் தங்கள் குருவிடம் சென்று ஐயா நாங்கள் பல நாள் இங்கே சாஸ்திரம் கற்றுவிட்டோம், ஆனால் இதை பயன்படுத்தும் சூழல் இல்லை. பல தேசங்களுக்கு சென்று நீங்கள் கற்றுக்கொடுத்ததை பயிற்சி செய்யலாம் என இருக்கிறோம் என்றனர்.

பாஸ்கராச்சாரியார் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணிக்கும் படி கூறினார். முன்பு சிஷ்யர்கள் இருவரும் பயணத்தை துவங்கி செல்லவும், சில நாட்கள் கழித்து தானும் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் திட்டம் உண்டு என்றும் கூறினார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுப்புவும், சுந்திரனும் தங்கள் பயணத்தை துவக்கினார்கள்.

பழங்காலத்தில் பயணங்கள் கால்நடையாகவே செல்வார்கள் என்பதால் இருவரும் அவ்வாறே பயணமானார்கள். வழியில் இருவருக்கும் தாகம் எடுத்தது. நீர் குடிக்க அருகில் வசதி உண்டா என தேடும் பொழுது அங்கே ஒரு பெண் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே இருவரும் சென்று, “அம்மா, எங்களுக்கு குடிக்க சிறிது நீர் தருகிறீர்களா?” என கேட்டனர். அந்தப்பெண் திடீரென தனக்கு பின்னால் கேட்ட சப்தத்தால் பயந்து கிணற்றில் கையிறுடன் கட்டப்பட்டிருந்த நீர் இறைக்கும் மண் பானையை தவறவிட்டாள். பிறகு தன்னிலை அடைந்து அசுவாசம் கொண்டால். தன்னிடம் உள்ள மற்றொரு பானையின் உதவியால் நீர் எடுத்து இருவரின் தாகத்தையும் தீர்த்தாள்.

இருவரும் திருப்தியாக நீர் அருந்தியதும், “அம்மா, எங்கள் தாகத்தை தீர்த்தீர்கள். உங்களுக்கு பிரதி உபகாரமாக ஏதேனும் செய்யவேண்டும் என எண்ணுகிறோம். நாங்கள் சாஸ்திரம் கற்றவர்கள். உங்களுக்கு ஏதேனும் ஜோதிட பலன் தேவைப்பட்டால் கூறுகிறோம் கேளுங்கள்” என்றனர்.

பெண் வேண்டாம் என கூறினாலும் இவர்கள் உதவுகிறோம் என கூறியதால் அப்பெண் கேட்கத் துவங்கினாள். “நீண்ட நாட்களுக்கு முன் என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. அவர் வருவாரா? எப்பொழுது வருவார் என கூறுங்கள்?” என்றாள்.
இருவரும் மூளையை கசக்கினார்கள், பிறகு ஒரே நேரத்தில் பதில் கூறினார்கள். சுப்பாண்டி “வருவார்” என்றான், சுந்திர பாண்டியோ “வரமாட்டார்” என்றான்.

இந்த பதிலை கேட்டு அப்பெண் குழம்பிப்போனாள். சுப்பாண்டியும், சுந்திரபாண்டியும் தாங்கள் சொன்னது தான் சரி என விவாதம் செய்யத் துவங்கினார்கள். விவாதம் சண்டையாக மாறியது. அந்த ஊர்மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கத் துவங்கினார்கள். முடிவில் இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்துக்கு சென்றது.

பஞ்சாயத்தை விசாரித்த ஊர் தலைவர் சுப்பாண்டியை பார்த்து கூறினார், “சுந்திர பாண்டி பெண்ணின் கணவர் வரமாட்டார் என கூறினார். அதனால் அதை மேற்கொண்டு ஆராய முடியாது. நீங்கள் வருவார் என கூறி இருக்கிறீர்கள். அப்படியானால் எப்பொழுது என கூறுங்கள்?” என்றார்.

சுப்பாண்டி கணிதம் செய்து, நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு இரண்டு நாழிகையில் பெண்ணின் கணவர் வருவார் என பலன் கூறினான். நாளை வருவார் என கூறுவதால் பஞ்சாயத்தை நாளை வரை தள்ளிவைத்து காத்திருப்போம். அவ்வாறு நடக்கவில்லை என்றால் சுந்திர பாண்டி சொன்ன பலனே சரி என முடிவுக்கு வருவோம் என்றார் ஊர் தலைவர்.

அடுத்த நாள் சூரியன் உதித்தது, பஞ்சாயத்தில் ஊர்மக்கள் கூடி நின்றார்கள். அந்த பெண்ணும் காத்திருந்தாள். நேரம் இரண்டாம் நாழிகையை நெருங்கிய சமயம் அப்பெண்ணின் கணவர் வந்தார். அவர் வேறு யாரும் அல்ல பாஸ்கராச்சாரியார் தான்...!

சுந்தர பாண்டியும், சுப்பாண்டியும், “குருவே” என அவரின் முன் சென்று வணங்கினர். பாஸ்கராச்சாரியார் நடந்தவற்றை கேட்டு உணர்ந்தார். தான் வெகு காலம் முன் மனைவியை பிரிந்து பல தேசம் சென்றதையும், பிறகு அவளை இங்கே சந்திப்பேன் என நினைக்கவில்லை என கூறி மகிழ்ச்சி அடைந்தார். ஊர்மக்கள் சுப்பாண்டியின் ஜோதிட திறமையை பாராட்டினார்கள்.

அனைவரும் இணைந்து பாஸ்கராச்சாரியாரின் குருகுலம் இருக்கும் ஊரை நோக்கி செல்ல துவங்கினார்கள். அப்பொழுது குரு தன் சிஷ்யர்களிடம், “இருவருக்கும் சமமாக அறிவை போதித்தேன், ஆனால் நீங்கள் எப்படி முரண்பட்ட பலன்களை ஏன் கூறினீர்கள்?” என கேட்டார்.

“குருவே அம்மையார் கேள்வி கேட்கும் முன் தன் கையில் இருந்த மண் குடத்தை கிணற்றில் தவறவிட்டார். அதை பார்த்து கணவன் வரமாட்டார் என கூறினேன்” என்றான் சுந்திரபாண்டி.

நீ எப்படி கூறினாய் என்பது போல சுப்பாண்டியின் மேல் பார்வை செலுத்தினார் பாஸ்கராச்சாரியார். “குருவே நானும் அதே மண்குடத்தை வைத்து தான் கூறினேன். ஆனால் வேறு கோணத்தில் சிந்தித்தேன். மண்னும் நீரும் குழைந்து செய்ந்த மண் குடம் கிணற்றில் விழுந்ததும் இத்தனை நாள் பிரிந்திருந்த மண்ணுடன் மண்ணும், கிணற்று நீருடன் நீரும் இணைந்திருக்கும் அல்லவா? அதனால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள் என கூறினேன்” என விளக்கினான்.

இதைத்தான் சூட்சுமமாகவும் விழிப்புணர்வுடனும் நிமித்தத்தை கவனிப்பது என்கிறேன். இவ்வாறு செய்வதற்கு பயிற்சி எல்லாம் தேவையில்லை உணர்ந்து கொண்டால் போதுமானது.

ஒருவருடன் தொழில் சார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். அச்சமயத்தில் தபால்காரர் நம் பெயருக்கு ஒரு கடிதத்தை கொண்டு வருகிறார். தொழில் பற்றி பேசும் பொழுது புதிய விஷயங்கள் நம்மை வந்து அடைகிறது என்ற நிமித்தத்தை இதில் உணரலாம். ஆனால் இப்படி மேலோட்டமாக நிமித்தத்தை அணுகாமல் அந்த அஞ்சல் எப்படி பட்டது என பார்க்க வேண்டும். அது நல்ல செய்தி கொண்ட கடிதமானால் தொழில் முன்னேற்றத்தால் நன்மை வந்து அடையும் என கொள்ளலாம். மாறாக அது உங்களுக்கு தவறாக வந்த கடிதமாக இருந்தாலோ, வக்கீல் நோட்டீஸாக இருந்தால் இந்த நிமித்தம் தொழில் மேன்மையை காட்டாது...!

என் மாணவரின் உறவினர் ஒருவர் காணாமல் போய்விட்டார். குடும்பத்தைவிட்டு திடீரென காணாமல் போனதால், அவர் திரும்ப வருவாரா என என்னிடம் ஜோதிடத்தில் கேட்பதற்கு வந்தார். நான் கிரகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுத் அவரின் கைபேசி ஒலித்தது. என் மாணவரின் மனைவி அவருக்கு தொடர்பு கொண்டார் என நினைக்கிறேன்.

மறு முனையில் என்ன கேள்வி என தெரியவில்லை. ஆனால் என் மாணவர் “ஆமா ஆமா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன். வந்துடுவேன்” என்றவாறே பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார். இப்பொழுது சொல்லுங்கள் அந்த உறவினர் திரும்ப வந்திருப்பாரா இல்லையா? ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். அவர் உறவினர் மீண்டும் குடும்பத்தை வந்தடைந்தார்.

இதே மாறாக அவர் கைபேசியை எடுத்து, “அலோ... இல்லீங்க... ராங் நம்பர்” என்றால் அவர் உறவினர் கண்டிப்பாக வரமாட்டார் என நிமித்தம் உணர்த்தும்.

லேட்டஸ்டாக நடந்த சம்பவம் ஒன்று உங்களுக்காக...

புதன் கிழமை அன்று என்னை சந்திக்க வருவதாக சொன்ன நண்பர் வரவில்லை. அவருக்காக காத்திருந்து வராத காரணத்தால் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரோ சில காரணத்தால் நாளை கிளம்பி வருகிறேன் இன்று வரவில்லை, பயணம் “தள்ளிப்போகிறது” என்றார். பிறகு பேச்சுவாக்கில் அயோத்தி தீர்ப்பு வெள்ளி அன்று 24ஆம் தேதி வருகிறதாமே அந்த நேரத்தில் பயணம் செய்வது நல்லதா என கேட்டார்.

நானோ அன்று தீர்ப்பு வராது தள்ளிப்போகும் என்றேன். நேற்று என்னை சந்தித்து எப்படி இவ்வளவு உறுதியாக சொன்னீர்கள் என கேட்டார். அதெல்லாம் “தேவரகசியம்” என்றேன்...! உங்களுக்கு இந்த தேவ ரகசியம் புரிந்தது தானே?

நிமித்தத்தை தேவையான அளவு விளக்கிவிட்டேன். இனி விழிப்புணர்வுடன் நிமித்தம் பார்த்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Tuesday, September 7, 2010

நிமித்தம் - பகுதி 2

மனிதன் தான் என்ற அஹம்பாவம் இருக்கும் வரை இறை அருளை உணர்வதில்லை. இக்கருத்து நிமித்தத்திற்கும் பொருந்தும். இயற்கை நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

தயாராக மட்டுமல்ல பதில் கூறியும் வருகிறது. ஆனால் நம்மால் அந்த கருத்தை உணர முடியவில்லை. காரணம் நம்மை விட விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்ற ஆணவப்போக்கு இதன் மூல காரணமாகும்.

இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முடியாத இயலாமையில் இருப்பதை பலர் உணர்வதில்லை. உங்களுக்கு சில விஷயங்களை கூற இயற்கை எப்பொழுதும் தயாராக இருக்கிறது. இயற்கையின் மொழியை மொழிபெயர்க்க கற்றுக்கொள்ளுங்கள். அம்மொழியின் பெயரே நிமித்தம்.

சகுனம் என்ற வட மொழி சொல்லுக்கு அசையும் பொருள் / சலனமடையும் என்று அர்த்தம். சகுனம் என்பதற்கு எதிர்பதம் நிர்குணம் என்பார்கள். இறைவன் நிர்குண ப்ரம்மம் என்பார்கள். சகுனம் என்பது அசையும் பொருட்களான மனிதன், விலங்குகள், பறவைகள் கொண்டு கூறக்கூடியது. உதாரணமாக பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனம் என்பார்கள். விதவைகள் எதிரில் வந்தால் கெட்ட சகுனம். சுமங்கலி எதிரில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள். இது மூடநம்பிக்கை. காரணம் சகுனத்தை உங்களால் உருவாக்க முடியும். நிமித்தம் தானாகவே நிகழ்வது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நிமித்தம் என்பது உங்களுக்கு நிகழப்போவதை சூசகமாக வேறு ஒரு நிகழ்வின் மூலம் குறிப்பிடுகிறது. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கு நிமித்தம் பெரும் உதவியாக இருந்தது. சில சம்பவங்களை உங்களின் புரிதலுக்காக விவரிக்கிறேன்.

நான் வெளியூர் செல்வதாக இருந்தால் என் வெளியூர் பயணம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நிமித்தம் பயன்படுத்துவேன். நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் வரை எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுகிறதோ அதே போன்ற நிலைதான் என் முழு பயணத்தின் பொழுது நிகழும் என்பதை நிமித்தம் சுட்டிக்காட்டும்.

ரயில் நிலையம் செல்லுவதற்கு டாக்ஸியில் செல்லும்பொழுது டிரைவருக்கும் எனக்கும் நடக்கும் சம்பாஷணை மற்றும் சிக்னலில் நிற்கும் பொழுது ஏற்படும் தாக்கம் போன்றவை என் முழு பயணம் எப்படி இருக்கும் என்பதை கூறிவிடும். இக்கருத்தை நீங்களும் முயன்று பாருங்களேன்..!

சில வருடங்களுக்கு முன் என் நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளர். தனது ஆய்வு மூலம் ஐநா சபையின் பாராட்டுதலை பெற்றவர். தான் அடுத்த ஆய்வு செய்யப்போவதாகவும், அது முந்தைய ஆய்வை விட மேம்பட்டதாக மக்களிடையே சென்று அடையுமா என்றும் கவலைப்பட்டார்.

அவ்வாறு அவர் சொல்லும் பொழுது அவரின் சட்டைப்பையில் இருந்த பேனாவிலிருந்து மை கசிந்து அவரின் சட்டையில் பரவத்துவங்கியது. நான் சட்டைப்பையை கவனிப்பதை கவனித்த அவர் உடனடியாக செயல்பட்டு அருகில் இருந்த தண்ணீர் குடத்திலிருந்து நீர் எடுத்து மையை கழுவத் துவங்கினார். நீர் பட்டதும் மை மேலும் பரவி சட்டை முழுவதும் கறைபடிந்தது. இந்த நிமித்தம் என்ன சொல்லுகிறது என உங்களால் யுகிக்க முடிகிறதா?

இந்த நிமித்தம் கண்டதும் மகிழ்ச்சியுடன் கூறினேன், “ஐயா.. முன்பு நீங்கள் செய்த ஆய்வு தானே பாராட்டப்பட்டது. ஆனால் தற்சமயம் நீங்கள் செய்யும் ஆய்வு முன்பு செய்ததைவிட மிகவும் பாரட்டப்பட்டு உலக புகழ் அடையும் என்றேன்”. சில மாதங்களில் அவ்வாறே நடந்தது.

இப்படி என் வாழ்க்கையில் நான் நிமித்தத்தை பயன்படுத்தியதை பற்றி கூறத்துவங்கினால் அது என் சுயசரிதையாக மாறும் அபாயம் உண்டு. மேலும் இதை படிப்பவர்கள் என்னுடன் இயல்பாக பழகாமல் போகவும் வாய்ப்புண்டு. இது நல்ல நிமித்தமல்ல :)

முன்னாள் பாரதப் பிரதமர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று கூறுகிறேன். தான் செல்லும் விமானம் மூன்று முறை எதிர்பாராதவிதமாக பழுதுபட்டு விட அவர் தான் செல்லும் ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என முடிவு செய்கிறார். விமானி ஓட்ட முடியாது என கூறியும், விமான கோளாரு என்றும், வானிலை சரி இல்லை என்றும் பல தடைகள். தானே ஒரு விமானி என்பதால், நானே ஓட்டுகிறேன் என முயற்சிக்கிறார்.

கடைசியில் பைலட்,விமானம் எல்லாம் தயாராகி பயணமாகிறார். அவர் அந்த அசுப நிமித்தத்தை உணராமல் பயணப்பட்டதால் தற்சமயம் நம்மிடையே இல்லை. அவர் திரு ராஜீவ் காந்தி.....!

உங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும். இக்கணம் முதல் இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முயலுங்கள். இயற்கை உங்கள் முன் பல முறை இனிய நாதத்தை வாசித்தும், அபாய சங்கையும் ஊதியும் இருக்கிறது. ஆனால் நாம் காதில்லா பிறவியாக இருந்திருக்கிறோம்.

இனி நித்தமும் உங்களில் நிமித்தம் நிகழட்டும்....


Monday, September 6, 2010

நமக்கு நமிதா பற்றி தெரியும், நிமித்தா பற்றி தெரியுமா?

நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் தேவையில்லாத விஷயங்களாகவே இருக்கிறது. ஒரு நாள் இரவில் தனிமையில் அமர்ந்து அன்று காலை முதல் எத்தனை விஷயங்கள் உருப்படியாக நம்முள் சென்றது என சிந்தித்து பார்த்தோம் என்றால் வேடிக்கையாக இருக்கும். மாநகராட்சி குப்பை லாரியில் கூட இவ்வளவு சரக்கு இருக்காது என்ற முடிவுக்கு வருவீர்கள்.

எப்படி ஒரு விஷயத்தை குப்பை அல்லது நன்மையானது என முடிவுக்கு வருவது என கேள்வி எழலாம். உங்களுக்குள் சென்ற ஒரு கருத்து உங்களின் வாழ்க்கையை 0.01% சதவிகிதமேனும் முன்னேற்றுமாயின் அது நன்மையை கொடுக்கும் வைரம். அதைவிடுத்து ஒன்றும் பயனில்லாத கருத்து என்றால் அது நமக்கு தேவையற்றது. விலை மதிக்க முடியாத மனித ஞாபக அடுக்கில் இருக்கும் மக்காத குப்பைக்கு சமம்.

நிற்க. தலைப்பில் இருக்கும் விஷயத்திற்கே நீங்கள் வரவில்லையே என நினைத்தால் நீங்கள் குப்பை லாரி குத்தகைதாரர் என அர்த்தம். வைரத்தை தேடுபவர் என்றால் மேற்கொண்டு கட்டுரையை தொடருங்கள்.

ஜோதிட சாஸ்திரம் ஆறு முக்கிய பகுதிகளால் ஆனது என விவரிக்கிறார் பராசர மஹரிஷி. அவை கணித, சமிதா, கோள, முஹூர்த்த, ப்ரசன்ன, நிமித்த என்பவையாகும். இந்த ஆறு பிரிவுகள் ஷடங்கம் (ஷட் + அங்கம்) என பெயர். வட மொழியில் ஷட் என்றால் ஆறு. ஷடங்கம் என்ற வார்த்தையே திரிந்து சடங்கு என ஆகியது.

ஜோதிட ஷட் அங்கங்களில் கணிதா மற்றும் கோளா என்பது ஜாதகம் கணிப்பதற்கும், சமிதா என்பது பலன் சொல்லுவதற்கும், முஹூர்த்தா என்பது நல்ல நேரம் முடிவு செய்வதற்கும் பயன்படுகிறது. ஆருடம் பார்க்கும் முறை ப்ரசன்ன என அழைக்கிறார்கள். இதில் கடைசியாக இருக்கும் பகுதி தான் நிமித்தா - நன்றாக படியுங்கள் நிமித்தா...நிமித்தா... :)

நிமித்தா என்பதை தமிழில் நிமித்தம் என கூறலாம். இதை மட்டும் தான் ‘ம்’ என முடிக்கும் படி கூறவேண்டுமா அல்லது அந்த பெயரிலும் ம் என சேர்க்கலாமா என என்னிடம் கேட்டால் நீங்கள் இன்னும் குப்பையை சேர்க்க முயற்சிக்கிறீர்கள் என்பேன். :)

ஜோதிடத்தின் பிற அங்கங்களை கற்றுக்கொள்ள நீங்கள் கொஞ்சம் அறிவை கசக்க வேண்டும். நிமித்தம் பற்றி அறிந்துகொள்ள அப்படி ஒன்றும் மெனக்கட வேண்டியது இல்லை. விழிப்புணர்வுடன் உங்களின் புலன்களை வைத்திருந்தால் போதுமானது.

நிமித்தம் என்றால் என்ன? ஜோதிடம் என்பது முக்காலத்தையும் கூறும் ஒரு சாஸ்திரம், அதன் ஒரு பகுதியான நிமித்தமும் இச்செயலையே செய்கிறது. உங்கள் வாழ்க்கை சம்பவங்களை பற்றி நீங்கள் நினைக்கும் பொழுது அந்த ஷணத்தில் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வு வாழ்க்கை சம்பவத்தை பற்றிய ஒரு குறிப்பை சூட்சுமமாக உணர்த்தும். இதை நிமித்தம் என்கிறோம்.

உதாரணமாக உங்கள் நண்பர் நாளை நான் ஒரு இண்டர்வியூவுக்கு செல்லுகிறேன் என கூறும் பொழுது மற்றொரு நண்பர் இனிப்புடன் வந்தார் என வைத்துக்கொள்வோம். இண்டர்வியூ என்ற கருத்து உரையாடப்படும் பொழுது அதே சமயம் ஒரு சுப நிகழ்வு நடைபெற்றால் அது எதிர்காலத்தில் நடக்கும் செயலின் முடிவை சூட்சுமமாக குறிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
முழுமையான ஜோதிட சாஸ்திரத்தை பார்க்கும் ஜோதிடரிடம் நாம் கேள்வி கேட்டவுடன் அந்த ஜோதிடர் சில வினாடிகள் சூழலை கவனிப்பார். அந்த சூழல் சூட்சமாக நம் கேள்வியின் சாதக பாதகத்தை கூறும்.

முற்காலத்தில் ஜோதிடர்கள் திறந்த வெளியிலும் மரத்தடியிலும் அமர்ந்திருந்த காரணம் இது தான். இது போக கேள்வி கேட்கும் நபர் அவர் உடலில் தொடும் பகுதி மற்றும் பேசும் வார்த்தைகள் இவை அனைத்தும் நிமித்தம் ஏற்படுத்தும் காரணமாக இருக்கும்.

நீங்கள் ஒரு பணியைச் செய்யத் துவங்கும் பொழுதும் உங்களை சுற்றி கவனியுங்கள். அங்கே இருக்கும் சூழல் உங்களின் பணியின் முடிவை தெளிவாக கூறும்.

இதை ஒரு உதாரணத்தால் விளக்குகிறேன். நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்கள். கிளம்பும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த உங்கள் குழந்தை கீழே விழுந்து அடிபட்டுக்கொள்கிறான். இது உங்களின் சுற்றுலா எப்படி இருக்கும் என்பதன் ஒரு சிறிய சாம்பிளாக நிமித்தம் உணர்த்துகிறது. அதுவே நீங்கள் கிளம்பும் பொழுது நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவிருந்த நற்செய்தி ஒன்று வருகிறது என்றால் உங்கள் சுற்றுலா சிறப்பாக இருக்கும் என்பதை காட்டுகிறது.

இப்படி பல உதாரணம் சொல்ல முடியும். நிமித்தத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம். நிமித்தம் என்பது மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். ஆனால் உண்மையில் அது மிகவும் அற்புதமானது.

நிமித்தம் ஜோதிடர்கள் மட்டும் பயன்படுத்தும் சமாச்சாரம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் மேம்படுத்த நிமித்தம் மிக அவசியம்.

சகுனமும் நிமித்தமும் ஒன்றா? நிமித்தம் உண்மையில் எப்படி வேலை செய்கிறது ? என் வாழ்வில் நிமித்தம் செய்த அற்புதங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(நித்தமும் தொடரும் நிமித்தம்)

டிஸ்கி : இக்கட்டுரைக்கு படங்கள் இணைத்தால் கவனம் திசை திரும்பும் என்பதால் படங்கள் இணைக்கவில்லை...!