ஆணவம் என்ற ஒரு விஷயம் மனிதனை மிகவும் கீழ் நிலைக்கும் இழுத்துச்செல்லும் மேல் நிலைக்கும் இழுத்துச்செல்லும். ஆணவம் என்ற விசையை மனிதன் எப்படி பயன்படுத்துகிறானோ அந்த திசையை நோக்கி அவன் வாழ்க்கை பயணம் அமைந்துவிடுகிறது.
மனிதனின் புற உலக வளர்ச்சிக்கே ‘நான்’ என்ற அஹம்பாவமே ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது ஆன்மீகம். ஒரு இளையவது பாலகன், தான் அப்பாவை போல இருக்க வேண்டும் என நினைக்கிறான். காரணம் அப்பொழுது அவன் ஆணவம் தடையில்லாமல் செயல்படும் என நினைக்கிறான். அந்த எண்ணமே அவனை இளைஞனாக வளர காரணமாகிறது. இப்படி ஆணவமே வாழ்க்கை லட்சியம் என்று முலாம் பூசி கூறப்படும் விஷயமாகிறது.
நான் அது ஆகவேண்டும், நான் இது ஆகவேண்டும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். நான் என்ற அந்த வார்த்தையே ஒருவித அடையாளமாக பலர் பயன்படுத்திவருகிறார்கள். நான் என அவர்கள் குறிப்பது எதை? உடலையா? அவர்களின் வாழ்க்கையையா என தேடினால், அவர்கள் ‘நான்’ என சுட்டிக்காட்டுவது ஆணவத்தை மட்டுமே.
ஆன்மீகவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் போலிகள் கூட “நான் கடவுள்” என்கிறார்கள். இதுவே அவர்களின் போலித்தனத்திற்கு அடையாளமாகிறது.
அதனால் தான் சில இடங்களில் கையெப்பம் இடும்பொழுது இவ்வாறு எழுதுவேன்...
“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”.
இப்படி எழுதியவுடன் என்னை விட்டு விலகியவர்கள் பலர் உண்டு.
ஒரு ஞானியின் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஞானி தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தனது வசிப்பிடத்திற்கு அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வணங்குவார். பல வருடங்களாக செய்து வந்தார்.
ஒரு நாள் தன் சிஷ்யனை பார்த்து நாளை முதல் நீயும் என்னுடன் கோவிலுக்கு வா என்றார் ஞானி. ஒருவார காலம் சென்றது. ஒரு நாள் சிஷ்யன் ஞானியுடன் கோவிலுக்கு செல்லும் பொழுது கூறினான், “குருவே...! பார்த்தீர்களா அறியாமை கொண்ட மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுது விழித்தெழுந்து நம்மை போல கோவிலுக்கு வருவார்கள்?” என்றான்.
உடனே குரு அவனை பளார் என அறைந்து, “இனி என்னுடன் காலையில் வராதே. நீ ஆணவத்துடன் இருக்கிறாய். நீ ஆன்மீகத்திற்கு லாயக்கு அல்ல” என்றார். சிஷ்யன் தன்னை உணர்ந்தான்.
சிங்கப்பூரில் நான் பயணிக்கும் பொழுது என் யோகப் பயிற்சியில் பயின்ற மாணவர் ஒருவர் என்னிடம் கேட்டார், “ஸ்வாமி நீங்க சொல்லிக்கொடுக்கும் யோக பயிற்சி அற்புதமா இருக்கு, தினமும் பயிற்சி செஞ்சா மிகவும் அருமையா இருக்கு. ஆனா இதை மக்கள் பயன்படுத்திக்காம இருக்காங்களே” என்றார். அவர் அப்படி சொல்லும் பொழுது முன்பு சொன்ன ஞானியின் கதை ஞாபகம் வந்தது.
எனக்கும் பல நேரங்களில் ஆணவம் ஏற்பட்டதுண்டு. என் கட்டுரைகளில் பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளேன். ஆணவம் இல்லாமல் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் கொசு மருந்தை தாண்டி வந்து கடிக்கும் கொசுவைப்போல ஆணவம் வந்துவிடுகிறது. அதை சொறிய ஆரம்பித்தால் ரணம் தான் மிஞ்சும். ஆணவம் இல்லாதவர்களை நீங்கள் பார்த்ததுண்டா?
ஆணவம் முற்றிலும் இல்லாதவர்கள் கடவுள் என்பதை உணருங்கள். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். ஆணவம் அற்ற சொரூப நிலை குழந்தை மனம் போன்றது.
அப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை சூழல் சமூகத்தில் தற்சமயம் மிகவும் பின் தங்கி உள்ளதாக நினைக்கிறேன். குப்பை உணவுகள் (junk food), உடல் அசைக்காமல் விளையாடும் வீடியோ கேம்ஸ்,
வயதிற்கு மீறிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, தற்கால கல்வி முறை என பல முனைகளில் குழந்தைகளின் உள் நிலை தூய்மை தாக்கப்படுகிறது.
சரியான வயதில் வழிகாட்டுதல் இல்லாத சூழலில் அவர்கள் பருவமடையும் பொழுது மிகவும் சஞ்சலமான வாழ்க்கை சூழலில் தனிமனித ஒழுக்கம் கெட்டு வளர்கிறார்கள்.
ஒரு குழந்தை சரியாக வளர்க்கப்படவில்லை என்றால் பாதிக்கபடுவது சமூகம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால் சமூக நல்வழிகாட்டுவது குழந்தைகளிடம் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இக்கருத்தை எப்படி செயல்படுத்துவது?
ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கான யோக பயிற்சி நடைபெற உள்ளது. கோடைவிடுமுறை காலத்தை பயனுள்ளதாக கழிக்கவும், குழந்தைகளுக்கு ஒரு உற்சாகமும் விளையாட்டு தன்மையில் ஆன்மீகம் கற்கவும் இப்பயிற்சி பயன்படும்.

மே மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சிகள் நடைபெறுகிறது. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கு பெறலாம்.
ஆசனம், ப்ராணாயாமம், தனிமனித செயல்பாடு, இறை உணர்வு மற்றும் இறைவழிபாட்டு முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.
குழந்தைகளை 14 வயதுக்கு முன் நல்ல விஷயங்களை புகுத்துவதன் மூலம் சமூகத்தில் நல்ல விதைகளை விதைத்த பலன் கிடைக்கும்.
உங்கள் குழந்தைகள், நண்பர்கள்- உறவினர்கள் குழந்தைகள் பயன்பெறச்செய்யுங்கள்.
தொடர்புக்கு : 99 44 2 333 55
ஆணவம் இல்லாத குழந்தைகளுக்கு யோகத்தை வழங்குவதன் மூலம் இறை நிலையில் இருப்பவர்களை இறைநிலையிலேயே இருக்க செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.
அதனால் தான் ஆணவத்துடன் கூறுகிறேன்.... :) மே மாதம் முதல் வாரத்தில்,
இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!







