Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, April 22, 2010

வேண்டுமானால் இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!

ஆணவம் என்ற ஒரு விஷயம் மனிதனை மிகவும் கீழ் நிலைக்கும் இழுத்துச்செல்லும் மேல் நிலைக்கும் இழுத்துச்செல்லும். ஆணவம் என்ற விசையை மனிதன் எப்படி பயன்படுத்துகிறானோ அந்த திசையை நோக்கி அவன் வாழ்க்கை பயணம் அமைந்துவிடுகிறது.

மனிதனின் புற உலக வளர்ச்சிக்கே ‘நான்’ என்ற அஹம்பாவமே ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது ஆன்மீகம். ஒரு இளையவது பாலகன், தான் அப்பாவை போல இருக்க வேண்டும் என நினைக்கிறான். காரணம் அப்பொழுது அவன் ஆணவம் தடையில்லாமல் செயல்படும் என நினைக்கிறான். அந்த எண்ணமே அவனை இளைஞனாக வளர காரணமாகிறது. இப்படி ஆணவமே வாழ்க்கை லட்சியம் என்று முலாம் பூசி கூறப்படும் விஷயமாகிறது.

நான் அது ஆகவேண்டும், நான் இது ஆகவேண்டும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். நான் என்ற அந்த வார்த்தையே ஒருவித அடையாளமாக பலர் பயன்படுத்திவருகிறார்கள். நான் என அவர்கள் குறிப்பது எதை? உடலையா? அவர்களின் வாழ்க்கையையா என தேடினால், அவர்கள் ‘நான்’ என சுட்டிக்காட்டுவது ஆணவத்தை மட்டுமே.

ஆன்மீகவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் போலிகள் கூட “நான் கடவுள்” என்கிறார்கள். இதுவே அவர்களின் போலித்தனத்திற்கு அடையாளமாகிறது.

அதனால் தான் சில இடங்களில் கையெப்பம் இடும்பொழுது இவ்வாறு எழுதுவேன்...

“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”.

இப்படி எழுதியவுடன் என்னை விட்டு விலகியவர்கள் பலர் உண்டு.

ஒரு ஞானியின் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஞானி தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தனது வசிப்பிடத்திற்கு அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வணங்குவார். பல வருடங்களாக செய்து வந்தார்.

ஒரு நாள் தன் சிஷ்யனை பார்த்து நாளை முதல் நீயும் என்னுடன் கோவிலுக்கு வா என்றார் ஞானி. ஒருவார காலம் சென்றது. ஒரு நாள் சிஷ்யன் ஞானியுடன் கோவிலுக்கு செல்லும் பொழுது கூறினான், “குருவே...! பார்த்தீர்களா அறியாமை கொண்ட மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுது விழித்தெழுந்து நம்மை போல கோவிலுக்கு வருவார்கள்?” என்றான்.

உடனே குரு அவனை பளார் என அறைந்து, “இனி என்னுடன் காலையில் வராதே. நீ ஆணவத்துடன் இருக்கிறாய். நீ ஆன்மீகத்திற்கு லாயக்கு அல்ல” என்றார். சிஷ்யன் தன்னை உணர்ந்தான்.

சிங்கப்பூரில் நான் பயணிக்கும் பொழுது என் யோகப் பயிற்சியில் பயின்ற மாணவர் ஒருவர் என்னிடம் கேட்டார், “ஸ்வாமி நீங்க சொல்லிக்கொடுக்கும் யோக பயிற்சி அற்புதமா இருக்கு, தினமும் பயிற்சி செஞ்சா மிகவும் அருமையா இருக்கு. ஆனா இதை மக்கள் பயன்படுத்திக்காம இருக்காங்களே” என்றார். அவர் அப்படி சொல்லும் பொழுது முன்பு சொன்ன ஞானியின் கதை ஞாபகம் வந்தது.

எனக்கும் பல நேரங்களில் ஆணவம் ஏற்பட்டதுண்டு. என் கட்டுரைகளில் பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளேன். ஆணவம் இல்லாமல் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் கொசு மருந்தை தாண்டி வந்து கடிக்கும் கொசுவைப்போல ஆணவம் வந்துவிடுகிறது. அதை சொறிய ஆரம்பித்தால் ரணம் தான் மிஞ்சும். ஆணவம் இல்லாதவர்களை நீங்கள் பார்த்ததுண்டா?

ஆணவம் முற்றிலும் இல்லாதவர்கள் கடவுள் என்பதை உணருங்கள். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். ஆணவம் அற்ற சொரூப நிலை குழந்தை மனம் போன்றது.

அப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை சூழல் சமூகத்தில் தற்சமயம் மிகவும் பின் தங்கி உள்ளதாக நினைக்கிறேன். குப்பை உணவுகள் (junk food), உடல் அசைக்காமல் விளையாடும் வீடியோ கேம்ஸ்,
வயதிற்கு மீறிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, தற்கால கல்வி முறை என பல முனைகளில் குழந்தைகளின் உள் நிலை தூய்மை தாக்கப்படுகிறது.

சரியான வயதில் வழிகாட்டுதல் இல்லாத சூழலில் அவர்கள் பருவமடையும் பொழுது மிகவும் சஞ்சலமான வாழ்க்கை சூழலில் தனிமனித ஒழுக்கம் கெட்டு வளர்கிறார்கள்.

ஒரு குழந்தை சரியாக வளர்க்கப்படவில்லை என்றால் பாதிக்கபடுவது சமூகம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால் சமூக நல்வழிகாட்டுவது குழந்தைகளிடம் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இக்கருத்தை எப்படி செயல்படுத்துவது?

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கான யோக பயிற்சி நடைபெற உள்ளது. கோடைவிடுமுறை காலத்தை பயனுள்ளதாக கழிக்கவும், குழந்தைகளுக்கு ஒரு உற்சாகமும் விளையாட்டு தன்மையில் ஆன்மீகம் கற்கவும் இப்பயிற்சி பயன்படும்.



மே மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சிகள் நடைபெறுகிறது. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கு பெறலாம்.

ஆசனம், ப்ராணாயாமம், தனிமனித செயல்பாடு, இறை உணர்வு மற்றும் இறைவழிபாட்டு முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.

குழந்தைகளை 14 வயதுக்கு முன் நல்ல விஷயங்களை புகுத்துவதன் மூலம் சமூகத்தில் நல்ல விதைகளை விதைத்த பலன் கிடைக்கும்.

உங்கள் குழந்தைகள், நண்பர்கள்- உறவினர்கள் குழந்தைகள் பயன்பெறச்செய்யுங்கள்.
தொடர்புக்கு : 99 44 2 333 55

ஆணவம் இல்லாத குழந்தைகளுக்கு யோகத்தை வழங்குவதன் மூலம் இறை நிலையில் இருப்பவர்களை இறைநிலையிலேயே இருக்க செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.


அதனால் தான் ஆணவத்துடன் கூறுகிறேன்.... :) மே மாதம் முதல் வாரத்தில்,

இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!

Thursday, April 15, 2010

விளக்கு... விளக்கு ....விளக்கு ...!

இறைவனை ஒளியாக வணங்குவது ஆன்மீக மரபு. ஞானத்தின் அடையாளமாகவும், முழுமையின் உருவாகவும் இருப்பது ஒளியே ஆகும்.

இறைவனை உருவமாக வணங்கி பின்பு உருவ-அருவமாக வணங்கி முடிவில் அருவமாக வணங்கும் நிலை என்பது ஆன்மீகத்தின் படிநிலை.

அடிப்படை மனிதனுக்கு ஆரம்ப நிலையில் அருவமாக இறைவனை வணங்குதல் என்பது மிகவும் சிரமமான காரியம். அதனால் இறைவனை ஒளி வடிவில் வணங்குதல் என்பது அதற்கான எளிய முயற்சியாக இருக்கும்.

பாரத கலாச்சாரத்தில் தோன்றிய அனைத்து மதங்களிலும், ஆன்மீக கோட்பாடுகளிலும் ஒளி வழிபாடு என்பது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நம் நாட்டிற்கு வந்த பிற மத கோட்பாடுகள் கூட நம் கலாச்சாரத்தின் அடையாளமாக ஒளியை தன் கட்டமைப்புக்குள் எடுத்துக்கொண்டது.

உபநிஷத்தில் ஒளியை பற்றி பல கருத்துக்கள் இருக்கிறது. சில உபநிஷத்தில் ஒளியை பற்றிய விளக்கமும், சிலவற்றில் ஒளியின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியும் விளக்குகிறது.

வேதத்தில் பல இடங்களில் அக்னியை பற்றியும் அதன் ஒளியை பற்றிய சுவடுகள் உண்டு.

ஈசாவாஷிய உபநிஷத்தில் சாந்தி மந்திரம் எனக்கு பிடித்த ஒன்று. பூர்ணமிதம் என துவங்கும் அந்த மந்திரத்திற்கு வெளிப்படை உதாரணமாக இருப்பது விளக்கின் ஒளியாகும்.

ஞானம் என்பது பரிபூரணமானது, ஞானம் ஒருவருக்கு கிடைக்கும் பொழுது முழுமை நிலையை அடைகிறார். ஞானம் பெற்றவர் மற்றொருவருக்கு ஞானம் வழங்கும்

பொழுது தனது ஞான நிலையில் குறைவதில்லை. அது போல விளக்கு ஒளி தான் முழுமையான ஒளியுடன் திகழ்ந்து, தான் பெற்ற ஒளி மற்றொரு விளக்குக்கு அளிக்கும் பொழுது முழுமையாக அளித்து தானும் ஒளி குன்றாமல் இருக்கும்.


உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் விளக்கை ஒரு அங்கமாக்கினால் உங்கள் ஆன்ம நிலை தங்கமாகும்.

இப்படித்தான் ஒரு ஆன்மீகக்கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அங்கே சில ஆன்மீக அன்பர்கள் மேடையில் அமர்ந்து என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் சிலர் மரியாதையாக பேசுவதாக எண்ணிக்கொண்டு இப்படிச் சொன்னார்கள், “தயவு கூர்ந்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள். என் பின்னால் நின்று இருந்த சுப்பாண்டி என்னிடம் குனிந்து, “ஸ்வாமி மேடை சுத்தமாத்தானே இருக்கு எதுக்கு இப்ப விளக்குமாறு கேட்கறாங்க” என்றான்.
அன்று விளக்குமாறு கிடைத்திருந்தால் எனக்கும் பயன்பட்டிருக்கும். :)


கலாச்சார மாறுபாடுகளால் விளக்கு ஏற்றும் முறைகூட மறந்து ஏனையோர் இருக்கிறார்கள். சிலர் என்னிடம் வீடுகளில் விளக்கேற்றும் முறைபற்றி கேட்பது உண்டு.

விளக்கை பற்றி விளக்கச்சொன்னால் என்ன விளக்குவது?

ஒளியை விளக்கும் அளவிற்கு எனக்கு ஒளி உண்டா என தெரியாது. இருந்தாலும் நம் தினமும் எப்படி ஒளி ஏற்ற வேண்டும் என்பதை விளக்குகிறேன்.

  • ஐந்து முக விளக்கு, காமாட்சி விளக்கு என பல விளக்குகள் இருந்தாலும் உருவம் பொறிக்கப்படாத அத்ம விளக்கு என்பதே விளக்குகளில் சிறந்தது.

  • மையத்தில் செங்குத்தாக திரி இருக்கும் படி வட்டவடிவில் இருக்கும் விளக்கின் அமைப்புக்கு அத்ம விளக்கு என பெயர்.

  • ப்ரார்த்தனை அறையில் அத்ம விளக்கு இல்லாமல் வேறு விளக்குகள் இருந்தாலும் பயன் இல்லை.

  • பஞ்ச முக விளக்குகள் வைத்தால் இரண்டு ஜோடியாக வைக்க வேண்டும். அத்ம விளக்கு எப்பொழுதும் ஒன்று தான் வைக்க வேண்டும்.

  • விளக்கு வெண்கலம் அல்லது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தால் நலம். கல் விளக்கு, இரும்பு விளக்கு, செம்பு இவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

  • நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே விளக்கிற்கு பயன்படுத்த வேண்டும்.

  • திரியை ஜோடியாக (இரண்டாக) விளக்கில் ஏற்ற வேண்டும். ஒற்றையாக வைக்கக்கூடாது.

  • பஞ்ச முக விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றுகிறோம் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அத்ம விளக்குக்கு பயன்படுத்தும் பொழுது எந்த திசை பார்த்து இருக்க வேண்டும் கவலை இல்லை, அதனாலேயே அத்ம விளக்கு சிறந்தது என்கிறேன்.

  • காலை மற்றும் மாலை இரு வேளையும் தீபம் ஏற்ற வேண்டும். 150 மில்லி எண்ணெய் கொள்ளும் ஒரு விளக்கில் 12 மணி நேரம் ஒளி இருக்கும். அதனால் 24 மணி நேரமும் ஒளி கொண்ட தன்மை பெற முடியும்.

  • தீபத்தை அணைக்க நேர்ந்தால் புஷ்பம் கொண்டோ அல்லது விபூதி கொண்டோ அணைக்கலாம். வாயால் ஊதி அணைக்கக் கூடாது.

  • பஞ்சபூதங்கள் அனைத்து உருவாக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. விளக்கு ஏற்றுவதில் முழுமையாக பஞ்சபூதங்களின் தன்மை இருக்கிறது.

  • விளக்கின் உலோகம் மண் தன்மை கொண்டதாகவும், எண்ணெய் நீர் தன்மை கொண்டதாகவும், ஒளி நெருப்பின் அமைப்பிலும், ஒளி தொடர்ந்து கிடைக்க காற்றும் ஆகாயமும் பின்புலத்தில் செயல்படுகிறது. பஞ்சபூத நிலையில் இருக்கும் விளக்கை வழிபடுவதால் பஞ்சபூதம் நிலையில் இருக்கும் இறைவனை வணங்குகிறோம்.

வள்ளலார் தனது ஆன்ம பயிற்சியில் முக்கியமாக ஒளி நிலையை பற்றிய தியானத்தை குறிப்பிடுகிறார். ஒளியை தொடந்து தியானிக்க முடிவில் நம் உடல் ஒளியாகும் என்கிறார். அதை செய்தும் காட்டினார்.

வள்ளலாரின் ஆன்மீக வழிகாட்டியான திருமூலர் விளக்கை பற்றி அருமையாக விளக்கி உள்ளார்.


விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான்கழல் மேவலும் ஆமே

------------------------------------------------------------திருமந்திரம் 2816

உடல் என்ற விளக்கின் உள்ளே ஒளியாக மற்றொரு விளக்கு உண்டு. அதன் பெயர் ஆன்மா. உடலின் உள்ளே சென்று ஆன்ம ஒளியை தூண்டி ஆன்மாவின் மூலம் பரமாத்மாவை அறிய முயற்சிப்பவர்களுக்கு பரமாத்மாவின் சொரூப நிலையை அடையலாம்.

விளக்கை தூண்டுங்கள் உங்களின் உள்ளே இருக்கும் விளக்கை தூண்டுங்கள். இறை ஒளி உங்களில் ஒளிரட்டும்.

Monday, April 12, 2010

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஸ்வாமி ஓம்கார்


இது நடக்கும் என தெரியும்....இது எதிர்பார்த்தது தான் என நீங்கள் புன்சிரிப்புடன் படிக்க துவங்குவது எனக்கு தெரியும். :)

சிங்கப்பூர் பயணம் முடித்தவுடன் நான் சென்ற இடம் ... அப்படி பட்டதாக இருந்திருக்கக் கூடாது. கோவைக்கு செல்லாமல் நேராக சென்னையிலிருந்து அந்த இடத்திற்கு தான் வந்து சேர்ந்தேன். பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.

திருவனந்தபுரம்.

கேரளாவின் தலைநகரம்.

வெளிநாட்டு மாணவர்கள் சிலருக்கு யோகப் பயிற்சி கொடுக்க பயணமானேன்.


பல நூறு வருடங்களாக அறிவு மிக்க அரசர்கள் ஆண்டுவந்த நகரம். திவ்ய தேசங்களில் ஒன்றான பத்மநாப ஸ்வாமி கோவில் அங்கே தான் இருக்கிறது.

சிறுவயதில் சென்ற நினைவுகள் இருந்ததால் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றேன்.

ஸ்ரீமந் நாராயணனின் சயன கோலத்தில் இருக்கும் கோவில்கள் மிக அரிதி. அதிலும் ஸ்ரீரங்கம் மற்றும் இன்ன பிற கோவில்கள் என இந்தியாவின் சயன நிலையில் இருக்கும் திவ்ய தேசங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இக்கோவிலை தவிர கேரளாவில் சயன நிலையில் மஹாவிஷ்ணு கிடையாது என நினைக்கிறேன். கேரளாவில் தமிழ் பாணியில் கட்டப்பட்ட கோபுரத்துடன் காட்சி அளிக்கும் கோவில் அது.

அனந்தபத்மநாப ஸ்வாமி என அழைக்கப்படும் பத்மநாப ஸ்வாமியின் பெயரால் இந்த தலைநகரே திரு-அனந்த-புரம் என அழைக்கப்படுகிறது.

ஆனால் அங்கே நடக்கும் அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல. கோவிலை தங்கள் அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்யும் நம்பூதிரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் என பார்க்கும் இடமல்லாம் குளறுபடி.

சட்டை அணிந்து செல்லக்கூடாது என்பது கேரளாவில் பெரும்பான்மை கோவில்களின் நடைமுறை. அதை நான் வரவேற்கிறேன். கோவிலின் ப்ராண சக்தி உடலில் புகுவதற்கு மிகவும் ஏற்ற சூழல் அது. ஆனால் பத்மநாப ஸ்வாமி கோவிலில் சட்டையை கழற்றினாலும் அதை கோவிலுக்குள் கொண்டு செல்லக்கூடாது என தடை விதிக்கிறார்கள். அதை பாதுகாக்க ஒரு தனிக்கட்டணம்.

இவ்வாறு நடைமுறைக்கு மீறிய செயல்கள் அவர்களின் நடவடிக்கை இருந்தது. கோவிலுக்குள்ளே இவர்கள் செய்யும் அராஜத்தை பக்கம் பக்கமாக எழுதலாம்.

கோவிலின் ஆற்றல் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தால் அது மிகவும் குன்றி, அங்கே இருக்கும் தெய்வாம்சம் சிரமப்படுவதும் உணர முடிந்தது.

பத்மநாப ஸ்வாமி கோவிலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ஆட்டுங்கால் பகவதி அம்மன் எனும் கோவிலுக்கு சென்றேன். அற்புதங்களின் உறைவிடம். மிகவும் சக்திவாய்ந்த இடம்.

இங்கே சட்டையுடன் அனுமதிக்கிறார்கள். இவர்களுக்கு சாநித்யம் எதுவும் கெட்டுப்போவதில்லை. பெண்களில் சபரிமலை என கூறப்படும் இத்தலம், சென்ற ஆண்டு மட்டும் தைமாதம் 25 லட்சம் பெண்கள் கூடி பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை பதிவு செய்திருக்கிறார்கள். அக்கோவில் வளாகத்தில் கின்னஸ் சான்றிதழ் இருக்க கண்டேன்.

ஆட்டுங்கால் கோவிலுக்கு வெளியே ஒரு குரு மஹானின் சமாதி இருந்தது. பத்மநாப ஸ்வாமி கோவிலில் கிடைக்காதது இந்த சிறு சமாதியின் முன்னே கிடைத்தது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சென்ற ஸ்வாமி விவேகானந்தர், “கேரளம் பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்றார். ( 'I have wandered into a lunatic asylum!')

இன்னும் அந்த பைத்தியக்கார கூடாரம் மாறவில்லை...பைத்தியங்கள் மட்டும் மாறியிருக்கின்றன...


Tuesday, April 6, 2010

வெய்யிலை சமாளிக்க சுப்பாண்டியின் டிப்ஸ்...!


கோடை வெயில் மிகவும் கொடுமையாக இருக்கிறது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிக வெயில். இதை சமாளிக்க என்ன செய்யலாம் என யோசிக்கும் பொழுது சுப்பாண்டி தான் சொல்லுவதாக கூறினான்.

ஏதோ சஹாரா பாலைவனத்தில் பட்டாணி வித்தவன் போல பல பாயிண்டுகளை கூறினான். எனக்கே அவனின் அறிவு முதிர்ச்சிகண்டு மிகவும் புல்லரித்தது. அதன் காரணம் கடைசியில்...!

சுப்பு சொன்ன பாயிண்டுக்கள் இதோ :

  • கோடை முடியும் வரை தளர்வான ஆடைகளே உபயோகியுங்கள். ஜீன்ஸ் மற்றும் டைட்டான டீ சர்ட்டுக்கள் தவிர்க்கவும்.

  • முடிந்தவரை அதிக காரம் மற்றும் மசால உணவுகளை தவிர்க்கவும்.

  • நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி பழங்களை சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

  • தினமும் காலை மற்றும் மாலை இரண்டு முறை குளிக்கவும்.

  • குளிர்ச்சியான பானங்களைவிட குளிர்விக்கபடாத பானங்கள் உடலுக்கு நல்லது.

  • பகல் நேரத்தில் வெளியே பயணிக்கும் பொழுது தலையில் தொப்பி அல்லது துணியை தலைப்பாகை போன்று அணிந்து கொண்டு செல்லலாம். அதற்காக காவி துணி எடுத்து முண்டாசு கட்டிக்கொண்டு தெருவில் நடந்தால் விபரீதம் சம்பவிக்கும். இதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

  • நீச்சல் குளம் அல்லது ஆறுகள் அருகே இருந்தால் வாரம் ஒருமுறை நீராடவும்.

  • பெரிய அண்டா போன்ற பாத்திரம் வீட்டில் இருந்தால் அதில் தண்ணீர் நிரப்பி அதில் அரைமணி நேரம் அமரலாம்.

  • கோடை கால பானம் : நாக்கு வரண்டு இருக்கும் சமயம் வேதிப்பொருட்கள் நிறைந்த குளிர்பானம் குடித்து உடலை கெடுத்துக்க கூடாது. ஒரு மண் பானை வாங்கி மண் வாசனை போக அதை நன்றாக கழுவி எடுக்கனும். காலை ஆறு மணிக்கு அதில் 2 டம்ளர் மோர் , 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கணும். கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு கொஞ்சம், எலுமிச்சை தோல் சிறிது, சுக்கு, பச்சை மிளகாய், கருவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து மூடி வைக்கவும். பகல் 10 மணிக்கு மேல் அதை எடுத்து ஒரு வாய் குடிச்சா உங்களுக்கு அண்டார்டிக்காவில் இருப்பது போல இருக்கும். தில் மாங்கே மோர் என சொல்லத்தோன்றும்...!

  • குளிர்சாதன அறையில் அதிக நேரம் செலவிடாதீர்கள். வெப்பம் தாங்கும் சக்தியை உங்கள் உடல் இழந்து, கோடை தாக்குதலால் உடனடியாக உடல் பாதிக்கப்படும். முடிந்த அளவு மின்விசிறி மற்றும் குளிர்சாதன கருவிகள் இல்லாமல் இயல்பு வெப்பத்தில் இருங்கள்.

  • சில எளிய சுவாச பயிற்சியால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை நம் உடல் உணராமல் குறைக்கலாம்.

சீத்தலி என்ற கோடைக்கால சுவாச பயிற்சி ஒன்று உங்களுக்காக விளக்குகிறேன். முயன்று பாருங்கள்.

  • உணவு சாப்பிடாமல் காலை நேரத்தில் செய்ய வேண்டிய பயிற்சி இது.

  • உடலை நேராக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

  • கைகளை தளர்வாக தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் நாக்கை குழாய் போல குவித்துக்கொள்ளுங்கள்.

  • சுவாசத்தை வாய் வழியே நாக்கின் குழாய் வழியே முழுமையாக இழுக்கவும்.
    வாய் மூடி சுவாசத்தை மூக்கின் வழியே வெளிவிடவும்.

  • கண்களை மூடிக்கொண்டுக் கொண்டு இதே போல சுவாசத்தை வாய் வழியே எடுத்து நாசிவழியே வெளிவிடவும்.

  • தொடர்ந்து 10 நிமிடம் செய்யவும்.

இந்த பத்து நிமிட பயிற்சியால் நாள் முழுவதும் உடல் மிகவும் குளிச்சியாகவும், சூழலில் இருக்கும் வெப்பம் உணரமுடியாத அளவுக்கு குறைவாகவும் தெரியும்.


இவற்றில் குறைந்தது இரண்டு விஷயங்களையோ அல்லது அனைத்தையும் பின்பற்றினால் எளிமையாக கோடைகாலத்தை சமாளிக்கலாம்.

இவ்வாறு விளக்கினான் சுப்பாண்டி.


சுப்பாண்டியின் அறிவுத்திறனுக்கு காரணம் என்ன தெரியுமா?

கோடை உச்சத்திற்கு போனால் சிலருக்கு மனநிலை பிசகிவிடுமாம். அதுபோல சுப்பாண்டி பாதிக்கப்பட்டு மனம்நிலை தவறிவிட்டான்..!


குறிப்பு : ஏப்ரல் மாதம் 20 முதல் மே 5 ஆம் தேதி வரை வெய்யிலின் அளவு அனைத்து இடங்களிலும் அதிகபட்சத்தை எட்டும் அளவுக்கு இருக்கும் என்பதால் தகுந்த முன் ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.