Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 7, 2008

கடவுள் பிரபஞ்சத்தை படைத்தாரா?

ஈஸ்வரன் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்றால் அதற்கான பொருட்கள் எங்கு இருந்தது?
எதிலிருந்து இவை அனைத்தையும் படைத்தார் என கேட்பதுண்டு. ஈஷ்வர நிலை என்பது இறைநிலையின் முதல் நிலை. இதை பற்றி விரிவாக பின்பு விளக்குகிறேன்.

ஓர் சிலந்தியை கவனித்தீர்கள் என்றால், தானே தனது வலையை உருவாக்கி அதன் மையத்தில் அமர்ந்துவிடுகிறது.

அது போல தன்னையே உலகாக்கி , அண்ட சராசரமாக்கி அதன் மையத்தில் ஈஸ்வர நிலை இருக்கிறது. சிலந்திக்கு தனது வலையை உருவாக்கும் பொருள் எங்கிருந்து கிடைத்தது? தன்னிலிருந்து எடுத்து தனக்காக உருவாக்கியதை போல, இறையாற்றல் தன்னிலிருந்தே அனைத்தையும் உருவாக்கியது. மீண்டும் ஒரு நாளில் அனைத்தையும் தன்னகத்தே எடுத்து ஒன்றாகி விடும். இதையே படைப்பு மற்றும் பிரலயம் என வழங்கப்படுகிறது.


இதை எப்படி உனக்கு தெரிந்தது? என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும்? அதற்குள்ளே இருந்து வந்ததால் என் மூலத்தை உணர்ந்தேன். அதனால் தெளிந்தேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் - நான் - அது என அனைத்தும் ஒன்று என உணர்வீர்கள்.


இறைவன் பிரபஞ்சத்தில் பூமியை படைத்து அதில் மட்டும் மனிதர்கள் வாழவைத்தான். ஏன் வேறு இடத்தில் உயிரினம் இல்லை.?

இது உங்கள் அறியமையை காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் பிற பகுதியில் உயிரினங்கள் இல்லை என எதை வைத்து முடிவு செய்தீர்கள்? சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. சில மத நூல்கள் , கடவுள் மனிதனை அழைத்து அவனுக்கு பூமியை உருவாக்கிருப்பதாக சொன்னார் என்கிறது. அப்பொழுது அதற்கு முன் மனிதன் எங்கே இருந்தான்? அடிப்படை நிலையில் இருப்பதாலும், அறியாமையாலும் இந்த கருத்து வெளிபட்டுள்ளது.

பஞ்சபூதங்கள் உயிர் உருவாக்கதிற்கு காரணம் எனும் பொழுது, பிரபஞ்சத்தில் எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ அங்கு உயிர் தோற்றம் நிகழும். அவர்களும் நம்மை போல் இருக்க வேண்டும் என்பது இல்லை. வேறு மாதிரியும் இருக்கலாம். எவ்வாறு வேறு மாதிரி என்கிறீர்களா? உங்களை போன்று அறியாமையில் இல்லாமல், நல்ல ஞானத்துடன் இருக்கலாம்.


நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்? -கேள்வி கேட்டவர் கோவி.கண்ணன்.


நாம் யார் நாம் எங்கிருந்து வந்தோம் எனும் தேடல் இல்லாத காரணத்தால் இக்கேள்விக்கு பலருக்கு விடை தெரியவில்லை. இதற்கு முன் சொன்ன கேள்வி பதில் இதை தெளிவாக்கும் என்றாலும் வேறு கோணத்தில் இதை விளக்குகிறேன்.

யோக வாஷிஷ்டம் எனும் நூல் இதற்கான தகுந்த விளக்கத்தை தருகிறது.அதில் இருக்கும் ஓர் கதையை எளிய வடிவில் பதிலாக அளிக்க விரும்புகிறேன்.

சிவன் தியானத்தின் உச்சநிலையான சமாதி நிலையில் இருக்கிறார். தனது நிலை கலைந்து வெளியே வரும்பொழுது பரமாத்மா முன் ஓர் தேனீ ரீங்காரம் இடுகிறது. அதை கண்ட பரமாத்ம சொரூபம் தேனீயாக உருவெடுக்கிறது.

தேனீ பல இடங்களுக்கு சென்று தேனை சேகரிக்கிறது. அப்பொழுது அழகிய மலர் ஒன்றை பார்க்கிறது. தேனீ ஓர் மலராக மாற்றம் அடைகிறது. மலர் மணம் கமழ இருக்கும் சூழ்நிலையில் அதை பறித்து கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மலர் அர்ச்சனைக்காக கொண்டு செல்லப்பட்டு கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிக்கப்படுகிறது. மலர் தன்னிலை மீண்டும் உணர்ந்து சிவனாகிறது.

முதல் முதல் பிறவியில் நாம் இறைவனாகவே இருந்தோம். அந்த நிலை பிறப்பாலும் , நான் எனும் இருப்பாலும் மறக்கடிக்கபடுகிறது.

யோக வாஷிஷ்டம் என நான் குறிப்பிட்ட நூல் வஷிஷ்ட முனி ஸ்ரீராமருக்கு கூறிய ஞான கருத்துக்கள்.வஷிஷ்டர் ஸ்ரீராமனிடம் சொல்கிறார் ” நீ பரமாத்மா எனும் நிலை மறந்து இருக்கிறாயே அந்த தூக்கத்திலிருந்து வெளியே வா”. மாபெரும் இறைநிலையின் அவதாரத்திற்கே இந்த கதி எனில் நம் நிலையை எண்ணிபார்க்க வேண்டும்.

ஆணவத்துடன் நானே இறைவன் எனும் தன்மையை உணரும் பொழுது அரக்க குணம் ஏற்படுகிறது. பக்தியுடன் இதை உணரும் பொழுது அங்கே ஞானம் பிறக்கிறது.

நமது தர்மத்தில் இறைவனை தவிர அன்னியமாய் எதுவும் இல்லை. ஹிரண்ய கசிப்பு, கம்சன், ராவணன் என இறைவனுக்கு எதிராக செயல்படுவர்கள் எவரானாலும் அவர்களின் நிலை உணரவைக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் இணைந்துவிடுவார்கள். காரணம் அவர்களும் இறைவனின் சொரூபமே.பிற மத கருத்துக்களை போல சாத்தான் என்ற எதிர் இயக்கம் கடவுளுக்கு அன்னியமாய் போர் செய்து கொண்டு இருக்க படைக்கப்படவில்லை.

தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்கியங்கள் உணர்த்தும் செய்தியும் இதுதான்.
நாமும் நம்மை கடந்து சென்றால் நமது சொரூபத்தை உணரலாம் அப்பொழுது நமது முற்பிறவி மட்டும் அல்ல முழுமுதற் பிறவியையும் உணர முடியும்.

12 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//பிற மத கருத்துக்களை போல சாத்தான் என்ற எதிர் இயக்கம் கடவுளுக்கு அன்னியமாய் போர் செய்து கொண்டு இருக்க படைக்கப்படவில்லை. //

சுவாமி,

இதைச் சொல்லாமல் இருந்தால் நல்லது. நம்மைப் பற்றிச் சொல்லும் போது பிறரைச் சேர்த்துச் சொன்னால் கட்டுரையின் நோக்கத்தையே அது அழித்துவிடும். முடிந்தால் அந்த வரியை எடுத்துவிட்டு, இந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிடுங்கள்.

நமது சிறப்புத்தன்மையை பிறரின் தாழ்வுத் தன்மையால் மிளிரவைக்கலாம் என்று நினைப்பது சரி என்று நான் சொல்லமாட்டேன்.

கட்டுரைக்கான மறுமொழி பிறகு இடுகிறேன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,

எந்த மதமும் உயர்ந்ததும் அல்ல, எந்த மதமும் தாழ்ந்ததும் அல்ல. அதை கருவியாக பயன்படுத்தும் மனிதன் தான் உயர்ந்தும் தாழ்ந்தும் விடுகிறான்.

பிற மதத்தை புண்படுத்தும் நோக்கதில் அக்கருத்தை எழுத வில்லை.

சித்தாந்தங்களின் இடையே உள்ள இடைவெளியை சுட்டிகாட்டவே வெளிப்படுத்தினேன்.

“I am what I am" எனும் கிருஸ்துவின் வாசகமும்,

“இறைவன் இருக்கிறான், அதற்காக உனது ஒட்டகத்தை கட்டாமல் இருக்க கூடாது. ஒட்டகம் உனது பொறுப்பு” என சொன்ன நபியின் இறை வாசகமும் என்னை வழிநடத்துகிறது.

பிற மதத்தை தாழ்வாக எண்ணுபவர்களுக்கு அந்த வாசகம் ஆணவத்தை தரலாம், பிற மதத்தை உயர்வாக நினைப்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரலாம்.

இது மத சித்தாந்தத்தின் குற்றமல்ல.

SurveySan said...

அருமையான விளக்கங்கள்.

கோவியார் சுட்டிக்காட்டிய, வாக்கியத்தை படித்ததும், 'அட ஆமாம்'னு உள்ளூர தோன்றியது.

நல்ல பதிவு.

கோவி.கண்ணன் said...

//இதை எப்படி உனக்கு தெரிந்தது? என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும்? அதற்குள்ளே இருந்து வந்ததால் என் மூலத்தை உணர்ந்தேன். அதனால் தெளிந்தேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் - நான் - அது என அனைத்தும் ஒன்று என உணர்வீர்கள்.//

நாம் எல்லோரும் 'அதில் (பிரமாண்டத்தில்)' ஒன்று என்று சொல்லும் போது 'நீங்கள்' முயற்சி செய்யுங்கள், என்று சொல்வது என்பது 'நீ' வேறு 'நான்' வேறு என்பதாகத்தானே பொருள். அனைத்தும் ஒன்று என்றால் தனித்தனியான முயற்சி என்பது தவறான வாதம் தானே. என்னைப் பொருத்து அனைத்தும் ஒன்று இல்லை. இந்திய சமயத்தில் பல சித்தாந்ததங்கள், அதில் ஒன்று 'நீயே அது' அதாவது தத்துவமஸி என்பது. நீங்கள் சொல்வது போல் பார்த்தால் அந்த நிலையை அடைந்தவர் விரல்விட்டு எண்ணும் அளவுக்குக் கூட கிடையாது. நீங்கள் கிறித்துவராக இருந்தால் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள், இவையாவும் சமயம் சார்ந்த நம்பிக்கைதான் அவற்றில் ஓரளவு உண்மை இருக்கலாம், ஆனால் அதுவே உண்மை என்றாகாது. நாம் எதை நம்புகிறோமோ அதைப் பற்றிய பற்றுதலும் அதற்கான முயற்சியும் இருக்கும் மற்றவை அற்பமாகத் தெரியும். இவை மனதின் விளையாட்டுதான். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த வழிகள் உங்களுக்குச் சரியாக இருக்கலாம் அதைப் பொதுப்படுத்த முடியாது. நம்பிக்கை மனம் தொடர்பானது அதை பிறருக்கும் சரி என்று சொல்வது பொருத்தமானது அல்ல. 'ததுவமஸி' என்பது தனிமனித விடுதலையாகக் கூட இருக்கும். ஆனால் அந்த சாதகர் மீண்டும் பிறக்கவில்லை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உங்கள் வாதப்படி பிரம்மத்திலிருந்து தானே (முதலில்) பிறந்திருப்பார், பிரம்மத்தை முயற்சியால் அடைந்த பின்னும் மீண்டும் அதே போல் பிறக்கமாட்டார் என்று எப்படிச் சொல்லமுடியும். இல்லை அது தனிக்கணக்கு என்றால் அவரும் தனியானவர் பிரம்மத்துடன் கலக்கவில்லை, அவருக்கானக் கணக்கு தனியாக இருக்கிறது என்று தானே பொருள்.

//இறைவன் பிரபஞ்சத்தில் பூமியை படைத்து அதில் மட்டும் மனிதர்கள் வாழவைத்தான். ஏன் வேறு இடத்தில் உயிரினம் இல்லை.?

இது உங்கள் அறியமையை காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் பிற பகுதியில் உயிரினங்கள் இல்லை என எதை வைத்து முடிவு செய்தீர்கள்? சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. //

தாண்டாதவற்றைப் பேசவில்லை, ஆனால் சூரிய குடும்பத்தில் நமக்கு தெரிந்து பூமியைத் தவிர சூரியனை ஒட்டியுள்ள கோள்களிலோ தொலைவில் உள்ளவற்றிலோ 'உயிரினங்கள் இல்லை'. அங்கெல்லாம் அமானுஷ்ய சக்திகள், உடலற்றோர் இருப்பதாக நினைத்துக் கொண்டால் அவை வெறும் நம்பிக்கைத்தான். அதற்கு ஆன்மிகத்தில் கூட ஆதாரம் இல்லை.

//பஞ்சபூதங்கள் உயிர் உருவாக்கதிற்கு காரணம் எனும் பொழுது, பிரபஞ்சத்தில் எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ அங்கு உயிர் தோற்றம் நிகழும். அவர்களும் நம்மை போல் இருக்க வேண்டும் என்பது இல்லை. வேறு மாதிரியும் இருக்கலாம். எவ்வாறு வேறு மாதிரி என்கிறீர்களா? உங்களை போன்று அறியாமையில் இல்லாமல், நல்ல ஞானத்துடன் இருக்கலாம்.//

நீங்கள் இங்கே சொல்லும் அறியாமையை நான் அறிவைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று பொருள் கொள்ளவில்லை. ஆன்மிக அறியாமை என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்கிறேன். :) பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உயிர் உருவாகிறது சரி. ஆனால் இறக்கும் முந்தைய வினாடி வரையிலும் உடல் பஞ்ச பூதச் சேர்க்கைதானே, பிறகு ஏன் பிரிகிறது ? உங்கள் கூற்றுப்படி அப்படியே அவதியுடன் இருக்க முடியுமே.

//முதல் முதல் பிறவியில் நாம் இறைவனாகவே இருந்தோம். அந்த நிலை பிறப்பாலும் , நான் எனும் இருப்பாலும் மறக்கடிக்கபடுகிறது.//

சரி அப்படியே தன்னை உணர்ந்து உடலாகிய சவத்தை விட்டு சிவமாகிறோம் என்றே வைத்துக் கொள்வோம், மீண்டும் பிறப்பு எடுக்க மாட்டோம் என்பது என்ன நிச்சயம், முன்பு இருந்த நிச்சயமற்ற தன்மையின் காரணம் தானே முதல் பிறப்பு ?

//யோக வாஷிஷ்டம் என நான் குறிப்பிட்ட நூல் வஷிஷ்ட முனி ஸ்ரீராமருக்கு கூறிய ஞான கருத்துக்கள்.வஷிஷ்டர் ஸ்ரீராமனிடம் சொல்கிறார் ” நீ பரமாத்மா எனும் நிலை மறந்து இருக்கிறாயே அந்த தூக்கத்திலிருந்து வெளியே வா”. மாபெரும் இறைநிலையின் அவதாரத்திற்கே இந்த கதி எனில் நம் நிலையை எண்ணிபார்க்க வேண்டும்.//

//ஆணவத்துடன் நானே இறைவன் எனும் தன்மையை உணரும் பொழுது அரக்க குணம் ஏற்படுகிறது. பக்தியுடன் இதை உணரும் பொழுது அங்கே ஞானம் பிறக்கிறது.//

நானே இறைவன் என்று நினைக்கச் சொல்வது ஆணவத்திற்கோ, பக்திக்கோ அல்ல, கருணை, உன்னால் (நம்மால்) பிற உயிர்களுக்கு அருள முடியும் என்கிற கருணை அது இல்லாவிட்டால் பக்தியோ ஆணவோமோ தன்னை இறைவன் என்று சொல்லிக் கொள்பவர் நிலை தாழ்ந்தது தான். ஆனால் ஒருவன் எப்படியேனும் தன்னை இறைவன் என்று நினைத்துவிட்டால் அகங்காரம் அப்பொழுதே ஏற்பட்டுவிடும், பிற உயிர்களையும் சக மனிதர்களையும் துட்சமாக நினைத்து 'உனக்கெல்லாம் என்ன தெரியும், பேச வந்துவிட்டாய்' என்று நினைக்க வைத்துவிடும். எந்த காரணத்தினாலும் நானே இறைவன் என்று நினைத்தால் நற்கெதி கிடைப்பது போல் தெரியவில்லை. நான் இறைவன் என்று நினைப்பதைவிட இறைத்தன்மை எனக்கு(ள்ளும்) இருக்கிறது என்று நினைப்பது தான் சரி என்றே நினைக்கிறேன். அந்த நினைப்பு நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்று நினைக்கவைத்து ஆணவத்தை அடக்கும். சரியா ?

//நமது தர்மத்தில் இறைவனை தவிர அன்னியமாய் எதுவும் இல்லை. ஹிரண்ய கசிப்பு, கம்சன், ராவணன் என இறைவனுக்கு எதிராக செயல்படுவர்கள் எவரானாலும் அவர்களின் நிலை உணரவைக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் இணைந்துவிடுவார்கள். //

நான் அசுரன், அரக்கன் மற்றும் எனைய சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை, அது அறிவுக்கு ஒவ்வாதாதாகவும் இருக்கிறது. ஆதியில் மனிதர்கள் மிகவும் கொடூரமான மனம் படைத்தவர்களாக இருந்திருக்கக் கூடும் அவர்களது மனங்களைத்தான் அசுரர், அரக்கன் என்றெல்லாம் மறைமுகமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது, மற்றபடி அரக்கன் வாழ்ந்தான் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்வதற்கில்லை. இங்கே தற்காலத்தில் குழந்தையைக் கூட பாலியல் வன்முறைக்கு உட்படுத்துபவர்கள் இருக்கின்றன, இவர்களைக் காட்டிலும் அரக்கர்கள் கொடியவர்களாகத் தெரியவில்லை. அவர்கள் சண்டையிட்டதாகச் சொல்லப்படுவதெல்லாம் குண மேன்மைக்காகக் கூறப்பட்ட கற்பனைக் கதை என்றே நினைக்கிறேன். இந்து புராணங்கள் இழிவு படுத்தப்படுவதற்கு முக்கிய காரணமே அதில் தேவையற்றதாக இருக்கும் பூச்சுற்றல் தான். காய்ந்து, சருகாகிவிட்டது.

//தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்கியங்கள் உணர்த்தும் செய்தியும் இதுதான்.
நாமும் நம்மை கடந்து சென்றால் நமது சொரூபத்தை உணரலாம் அப்பொழுது நமது முற்பிறவி மட்டும் அல்ல முழுமுதற் பிறவியையும் உணர முடியும்.//

இதையெல்லாம் பற்றவர்கள் என்று கூறிக் கொண்டு யாரோ சிலர் செய்யும் முயற்சிதான். அது எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று அவர்களுக்கே தெரியாது. ஒட்டுமொத்த மக்களின் ஆன்ம விடுதலைக்கு இவையெல்லாம் எளிய வழியே அல்ல.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி கண்ணன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

எனது பதிவை காட்டிலும் உங்கள் கருத்து பெரிதாக இருந்தது.

இந்த வலைதளத்தின் நோக்கம் என்னால் முடிந்த செய்தியை பிறருக்கு கொண்டு சேர்ப்பதும் விழிப்புணர்வு நிலையை சுட்டிக்காட்டுவதும் தான்.

வாதம் செய்வதோ அல்லது நிரூபணம் செய்வதோ அல்ல.
உங்கள் அனைத்து கேள்விகளுக்கு விடை எனது பதிவிலேயெ இருக்கிறது.

உதாரணமாக, அனைத்தும் இறைதன்மை என்றால், நீங்கள் முயற்சி செய்யுங்கள் கூற காரணம் என்ன?” வேறு ஒரு பதிலில் ஸ்ரீராமருக்கே அவரின் நிலை மறந்ததால் வசிஷ்டர் அவருக்கு ஞானம் வழங்கினார் என கூறினேன். எனது பணி ஸ்ரீராமர்களின் சுயத்தை அறிவிப்பதே.


இதே போன்று எனது பிற வரிகளை பாருங்கள் உங்களுக்கான பதில் உண்டு.

ஜோதிட வலைதளமாக இருந்தாலும் ஆன்மீக கருத்துகளை கூற துண்டிய உங்களுக்கு எனது நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சர்வேசன் அவர்களுக்கு,

உங்கள் வரவுக்கு நன்றி.

KARMA said...

ஓம்கார் ஸ்வாமி அவர்களே,

அருமையான விளக்கங்களுக்கு நன்றி.

கர்மா (நான் அல்ல :)) பற்றிய எனது புரிதல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு இதற்குமுன் 20 பிறவிகள் இருந்ததாக வைத்துக்கொள்வோம். இனிமேல் இன்னொரு 30 பிறவிகள் வரப்போவதாயும் கருதுவோம், மொத்தமாக எனக்கு 50 பிறவிகள்.

இங்கு "நான் / எனக்கு" என்பவை இந்த 50-ல் எந்த பிறவியையும் குறிப்பதல்ல. என்றைக்கும் மாறாத, எல்லா பிறவிக்கும் அடிப்படையான அந்த "SELF"/ ஆத்மா என்பதையே குறிக்கிறது. அப்படி பார்த்தால் மறுபிறப்பு என்று ஒன்று இல்லவே இல்லை.

மறுபிறப்பு என்ற concept நமக்கு எவ்வாறு உதவுகிறது என்றால், ஒரு continuty இருப்பதாக உணர்வதால் வெவேறு உடல்கள்(பிறப்புகள்) வழியாக பயணித்தாலும் working towards the goal என்பதை logic-ஆக நமது mind புரிந்துகொண்டு செயல்பட ஒரு motivation-ஆக உள்ளது.

ஆத்மா என்ற ஒன்று அதன் source-ல் இருந்து தொடங்கி சில் பாதைகள் வழியாக பயணம் செய்து, தன்னை source-ஆகவே உணரும்போது பயணம் முடிகிறது. மீண்டும்விரும்பும் பட்சத்தில் பயணம் தொடங்க (பிறப்பெடுக்க) வாய்ப்புள்ளது.

பயணத்தின் பாதையில் தன் சுயத்தை மறந்துவிடுதலே நமக்கு நேர்ந்திருக்கிறது, நமது துக்கங்களுக்கெல்லாம் காரணமாகிறது.

தவறுகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.

Unknown said...
This comment has been removed by the author.
ஸ்வாமி ஓம்கார் said...
This comment has been removed by the author.
ஸ்வாமி ஓம்கார் said...

திரு கர்மா அவர்களுக்கு,

உங்கள் புரிதல் சரியானதே.

மேலும் அதில் சில தெளிவுகள் தேவை என்றாலும், இதே பாதையில் சென்றால் நீங்கள் அதை அடைவீர்கள்

பிறப்பு என்பதே ஒரு மன கற்பிதம் என எனது இன்னொரு வலைபதிவில் சொல்லி இருக்கிறேன்.

www.gurugeethai.blogspot.com
எனும் தளத்தில் இருக்கும் சில பின்னூட்டங்கள் உங்களுக்கு பயன்பெறும்.

உங்கள் இயற் பெயர் கர்மா-வா?
என் என்றால், எதாவது தவறு செய்தவர் கூட எல்லாம் ”கர்மா தான் செய்தது” என சொல்லி உங்களை மாட்டிவிட கூடுமே அதனால் கேட்டேன்.

உங்கள் வரவுக்கு நன்றி.

KARMA said...

தாங்கள் கருத்துக்கு நன்றி.

//பிறப்பு என்பதே ஒரு மன கற்பிதம் என எனது இன்னொரு வலைபதிவில் சொல்லி இருக்கிறேன்.//

நான் www.gurugeethai.blogspot.com-ல் மேற்படி தகவலை கண்டுபிடிக்கமுடியவில்லை.

எந்த பதிவு(or link) என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.

வடுவூர் குமார் said...

எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ
புதிதாக இருக்கு,இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.
கோவியாரின் கேள்விகளும் உங்கள் பதில்களும் நன்றாகவே இருந்தது ஆனால் முழுமையாக இல்லை போல் தோன்றியது.
மற்றபடி ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி.