Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, July 30, 2024

கும்பமேளா 2025

சரஸ்வதி நதியின் கலாச்சாரத்தில் இயல்பான மனிதர்களைவிட உயர் சக்தி கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். உணவு, உடை மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றில் அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இருந்தது. அவர்களிக்கு மெய்ஞானம் சார்ந்த அறிவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு ஆதிநாத் என்பதே பதிலாக இருக்கும்.

உலகம் உருபெற்ற காலம் தொட்டு மனித இனத்தின் மேம்பட்ட பரிமாணத்திற்காக இறையாற்றல் உருபெற்று வந்து வழி நடத்துகிறது. அடிப்படை மனித நிலையில் இருந்து உயர்மனித நிலைக்கு முன்னேற்றம் செய்ய குருவாக இருந்து பல்வேறு தூண்டுதல்களை செய்கிறது.

வேத காலத்தில் சரஸ்வதி நதியின் கரையில் வாழ்ந்து வந்தவர்களை ஆன்மீகத்தில் செலுத்தி மனித நிலையிலிருந்து உயர் மனித நிலைக்கு உயர்த்தினார் ஆதிநாத்.

இவர் யார் இவரின் பின்புலம் என்ன என்பது தெரியாது. முதலில் தோன்றியவர் என்பதால் ஆதிநாத் என அழைக்கப்பட்டார். இவருடன் இருந்த பிரதான சீடராக இருந்தவர் உமாநாத். எப்பொழுதும் உடன் இருப்பவர் என்பதால் உமா என அழைக்கப்பட்டார். இருவரும் இணைந்து பலர் ஆன்மீக விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தனர்.

இருவரும் உருவாக்கிய பாரம்பரியம் நாத பாரம்பரியம் எனப்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றிணைந்து இவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீக உயர்நிலையை அடைந்தார்கள். சன்யாசிகள், துறவிகள் என்ற கருத்தியல்கள் அப்பொழுது இல்லை. குடும்ப அங்கத்தினர்கள் என்றே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

குழந்தை முதல் முதியவர் வரை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஆன்மீக நிலையில் இருந்தனர். விழிப்புணர்வுடன் வாழ்ந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் முழுமையான விழிப்புணர்வுடனேயே பிறந்தன. சிறப்பான குடும்பங்கள் ஒன்றிணைந்து வேதகால வாழ்க்கையை வாழ்ந்தனர். குல வாழ்வியல் முறை என இதற்கு பெயர்.

உமாநாத் வழிகாட்டுதலில் ஒளி பொருந்திய பரிமாணத்திற்கு பலர் சென்றார்கள். உலகில் வாழ்ந்தாலும் உடல் கடந்து ஆற்றல் நிலையில் வாழும் பரிமாணத்தை பலருக்கு உமாநாத் அளித்தார்.

குலாதிபதி என குலத்திற்கு அதிபதியான ஆதிநாத் வேத அறிவை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய பைரவ நிலையை பெற்று உமாநாதரை பைரவியாக்கி அனைவரையும் உச்சம் பெற்ற விழிப்புணர்வில் வைத்திருந்தார்கள்.

மனித குலம் ஆணவத்தால் உரைந்து போகும் தருணத்தில் அவர்கள் உண்மையை உணரச்செய்ய ஓவ்வொரு காலத்திலும் ஆதிநாத் மனித உருவில் வருகிறார். உமாநாத் உடன் இருக்கிறார் என்பது நாத பாரம்பரியத்தின் வரலாறு. காலத்திற்கு ஏற்ப ஆதிநாத் என்ற அடையாளமும் பெயரும் மாறுமே தவிர அவரின் இறை நோக்கம் மாற்றம் அடையாது.

இமய மலையில் துவங்கி தற்காலத்தில் இமாச்சல பிரதேசம் என அழைக்கப்படும் இடத்தில் அதிகரித்து, ராஜஸ்தானின் கிழக்கில் பிரவாகமாகி விரிவடைந்து குஜராத்தில் கடலில் கலந்தது சரஸ்வதி நதி.

குல மார்க்கம் என்ற தன்மையில் அனைவரும் சரஸ்வதி நதி நாகரீகத்தில் இணைந்து செயல்பட்டு சரஸ்வதி நதியை ஆன்மீக கருவியாக்கினார்கள். ஆன்மீக உச்ச நிலையில் அங்கே வாழ்ந்த அனைவரும் வேறு ஒரு பரிமாணத்திற்கு பைரவி தன்மையில் இருந்த உமாநாத் மூலம் மாற்றம் அடையும் தருணம் ஏற்பட்டது.

அப்பொழுது சரஸ்வதி நதி நாகரீகத்தில் வசித்த அனைவரும் உயர் பரிமாணத்திற்கு மாறும் பொழுது சரஸ்வதி நதியும் அந்த பரிமாணத்திற்கு சென்றது. நமது உலகில் இருந்து சரஸ்வதி நதி காணாமல் போனது. அதன் அருகே இருந்த சரஸ்வதி நதி நாகரீகத்தின் எஞ்சிய தன்மைகள் இடப்பெயர்ச்சி அடைந்து காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்ட்ரம் வரை விரிவடைந்து கன்யாகுமாரி வரை புகழ் பெற்றது. அத்தகைய நாகரீகம் நாத பாரம்பரியம் என அழைக்கப்பட்டது.

உலக கால சக்கரத்திற்கும் உயர் பரிமாண சக்கரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிய வேண்டும்.  பைரவர் மற்றும் பைரவி இருக்கும் உயர் பரிமாணத்தில் ஒரு நாள் என்பது உலகில் நமக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு சமம் என கணக்கிடலாம்.



ஆதிநாதரும் உமாநாதரும் தங்களின் இருப்பை தினமும் நமக்கு உணர்த்தினாலும் நம்மால் அதை பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணர முடியும். அத்தகைய காலத்தையே மஹா கும்பமேளா என்கிறோம்.

மஹா கும்பமேளா நடக்கும் தருணத்தில் உயர் பரிமாண நிலையில் இருந்து சரஸ்வதி நதி நமது பரிமாணத்தில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி நாகரீகத்தை பிரதிபலிக்கும் குல வாழ்வியல் முறை மற்றும் சரஸ்வதி நதி ஆகியவை மஹா கும்பமேளாவில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி அப்பரிமாணத்தின் ஆன்மீக ஊற்றாக பெருகி நம் பரிமாணத்தில் நீராக காட்சி அளிக்கிறது. குரு, ஆன்மீக சதனா, சாஸ்திரங்கள் என பல மெய்யறிவை நதியாக கும்பமேளாவில் பெருகச்செய்கிறது.

ஆதிநாதரும் உமா நாதரும் தங்களின் ஆன்மீக ஆற்றல் வடிவமாக ஒவ்வொரு நாளும் இணைகிறார்கள். நமக்கு மஹா கும்பமேளா பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. உயர் பரிமாணத்தில் தினமும் நடக்கும் நிகழ்வாக மஹா கும்பமேளா இருக்கிறது.

ஆதிநாதரின் பரிமாணத்தில் தினமும் அதிகாலை நடைபெறும் முதல் நிகழ்வு மஹா கும்பமேளாவாகும். அப்பரிமாணத்தின் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வே பிற கும்பமேளாவாகும்.

இரு பரிமாணங்கள் எனப்படும் ஆற்றல் உலகுக்கும் பூமி எனும் நம் உலகுக்கும் இருக்கும் தொடர்பை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே கும்பமேளாவை புரிந்துகொள்ள முடியும். இல்லை எனில் மேற்கத்திய கல்வியை படித்தவர்கள் அழுக்கானவர்கள் கூட்டமாக கூடும் நிகழ்வாக மட்டுமே பார்ப்பார்கள்.


 

உயர்பரிமாணம் அருவி போல இறங்கி பிரவாகமாக செயல்படும் மஹா கும்பமேளா என்ற நிகழ்வுக்கு ஞானிகளும், முனிவர்களும், யோகிகளும் ஏன் ஓடோடி வருகிறார்கள் என புரிகிறதா? இது சாதாரண திருவிழாவிற்கு கூடும் கூட்டமல்ல என்பதையும் உணர வேண்டும்.

பேராற்றல் இணையும் இத்தகைய இடத்திற்கு கோவில் அவசியமா? சடங்குகள் அவசியமா என கேள்வியை நாமே கேட்டு பதில் அளிக்கலாம்.


ஆதிநாத ஆற்றலும் நாத பாரம்பரியத்தின் விழிப்புணர்வும் பொங்கி பெருகும் மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள நீங்கள் தயாரா?

ஆம் என்றால் அதற்கான தகவல்களை அளிக்கிறேன்.

(தொடரும்)

Tuesday, July 23, 2024

கும்பமேளா 2025

உலகில் நடக்கும் பெரும் ஆன்மீக கொண்டாட்டம் பற்றி பல்வேறு பரிமாணங்களில் பார்த்து வருகிறோம். புராணங்கள், ஜோதிடம் மற்றும் யோக சாஸ்திரத்தின் வாயிலாக ஓரளவு புரிந்துகொள்ள முடியும். கும்பமேளாவின் வரலாறு பற்றி நாம் தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

மஹா கும்பமேளாவின் விதை யார் போட்டது? அதன் துவக்கம் என்ன ? அதன் பின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் மேலோட்டமான வரலாறு போதாது.

வரலாறு தெரிந்துகொண்டாலும் அது நமக்கு முற்றிலும் புரியாது…!

ஒரு கிராமத்தில் அல்லது நதிக்கரை ஓரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்றால் அங்கே ஒரு கோவிலோ அல்லது கலாச்சாரமோ இருக்க வேண்டும். உதாரணமாக ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரம் சென்றால் மக்கள் கூட்டமாக நீராடுகிறார்கள். அங்கே கோவிலும், சனாதன தர்மத்தின் கலாச்சாரமான நீர்த்தார் கடன் செலுத்துவதையும் காணலாம். ஆடி அமாவாசைக்கு இராமேஸ்வரத்தில் ஏன் கூட்டம் எனக்கேட்டால் எளிமையாக பதில் அளித்துவிடலாம்

பெளர்ணமிக்கு ஏன் திருவண்ணாமலையில் கூட்டம் வருகிறது? சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாருக்கு ஏன் கூட்டம் வருகிறது என கேட்டு வரலாறு புரிந்துகொள்ள முயற்சித்தால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும்

கோவில் இல்லாத இடத்தில், தங்கும் வசதிகளோ, கலாச்சார பின்னனிகளோ இல்லாத நதிகள் மட்டும் இருக்கும் மணல் வெளியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்காணோர் கூடுகிறார்கள் என்றால் எது அவர்களை ஒருங்கிணைத்தது?  

குறிப்பிட்ட மதம் அல்லது இறைவழிபாடு செய்பவர்கள் தான் செல்வார்களா எனப்பார்த்தால் சைவம் மற்றும் வைணவம் துவங்கி அனைத்து கலாச்சாரத்தினரும் பாகுபாடு இன்றி கூடுகிறார்கள். இது என்ன வகையான கூட்டம்? எதற்காக கூடுகிறது? இந்த இடம் சைவர்களுக்கு சிவன் கோவிலோ, வைணவர்களுக்கு திவ்ய தேசமோ இல்லை. சாக்தர்களுக்கு அங்கே சக்திபீடமும் கிடையாது. ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களின் குருமார்களுக்கும் திரிவேணிக்கும் சம்பந்தம் இல்லை

பல வெளிநாட்டு வரலாறு மற்றும் மானுடவியல் அறிஞர்கள் குழப்பத்தில் கொண்டு சேர்த்தது இத்தகைய கேள்வி. ஏன் இவர்கள் கூடுகிறார்கள். வேற்றுமை கொண்ட கொள்கை உடையவர்கள் எப்படி ஒன்றாக நீராடி இரண்டு மாதங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக கொண்டாட முடிகிறது? பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவதற்கு கூட கிரகங்களின் அமைப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் திரிவேணி சங்கமத்திற்கு எது இவர்களை ஈர்க்கிறது? முடிவில்லா விடையின் முடிவு தெரிந்துகொள்ள நாம் நமது உண்மையான வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும்.

கும்பமேளாவின் துவக்கப்புள்ளி உத்திரப்பிரதேசத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனும் இடத்தில் துவங்கவில்லை. இந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.

 சரஸ்வதி நதி நாகரீகம்

இந்தியாவின் அகழ்வாராய்ச்சி வரலாறுகள் இந்திய பாரம்பரியத்தை பற்றி உணராத வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்டது. மேலும் சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய குறிப்புகள் அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்டது. இத்தகைய அகழ்வாராய்ச்சி வரலாற்றுக்கிடையே நம்மிடம் இருந்து விட்டுபோன வரலாறு சரஸ்வதி நாகரீகம் என்பதாகும்.

சரஸ்வதி நதி பள்ளத்தாக்கில் முதன் முதலில் வேதகால வாழ்க்கை முறை துவங்கியது. தற்சமயம் ராஜஸ்தான் என்ற மாநிலத்தில் இருக்கும் பெரும் பாலைவனம் ஒருகாலத்தில் நீர் மிகுந்த ஆற்று படுகையாக இருந்தது. அங்கே ஆன்மீக ஆற்றலுடன் ஓடிக்கொண்டிருந்தாள் சரஸ்வதி.

ரிக் மற்றும் யஜூர் வேதங்களில் சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. சரஸ்வதி நதியின் கரையோரத்தில் மனித குலத்தில் மேன்மை பொருந்திய குழுவினர் வாழ்ந்து வந்தனர்.

அக்குழுவினரின் வேளாண்மை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவை உலகில் வாழ்ந்த மற்றும் தற்சமயம் வாழ்கின்ற மனிதர்களை விட மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தது.

சரஸ்வதி பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இல்லை. பாரத தேசத்தின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் இடப்பெயர்ச்சி அடைந்து அங்கே குழுவாக வாழ்ந்தார்கள்.

இக்குழுவினர்களாலேயே வேதம் மற்றும் சாஸ்திரங்கள் வலிமை பெற்று அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது.

வேதம் என்பது ஒரு சொல் வார்த்தையான ஓம் என்ற சப்தத்தில் இருந்து வந்தது என்பதை போல இவர்கள் பல்வேறு பின்புலம் கொண்டவர்களானாலும் ஒரே வார்த்தையால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

நாதர்கள்….!

சரஸ்வதி நதியின் நாகரீகத்தில் செழிப்புடன் வாழ்ந்த நாதப் பாரம்பரிய மனித குழுவே நாதர்கள் என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் மேன்மையாக வாழ்ந்த இடம் இப்பொழுது பாலைவனமாக இருக்கிறது. அந்த சரஸ்வதி நதிக்கு என்ன ஆயிற்று? நாதர்கள் இப்பொழுது எங்கே?

 

 (தொடரும்)

Friday, July 19, 2024

கும்பமேளா 2025

 யோக மரபு

யோக மரபில் பல பாதைகள் இருந்தாலும் அனைத்துற்கும் உயர் பாதையாக அமைவதும் ராஜ யோக பாதை. இந்த யோக பாதையின் பெயர் அனைத்து பாதைகளில் இது உயர்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மனிதனின் உடலை பிறவியினால் உருவாகும் சாபமாக பார்க்காமல் மனித உடல் ஒரு கருவி என கருதி அதைக்கொண்டே உயர் ஆன்மீக நிலையை அடையும் பாதை ராஜ யோகமாகும். முன்பு உடலை இழுக்கு என்று இருந்தேன் என திருமூலர் கூறுவதை போல பல சித்தாந்தங்களில் உடலை சாபமாக கண்டார்கள். அதில் இருந்து வேறுபட்டு உடலை கருவியாக்கி மேன்மை அடைவது ராஜ யோக பாதையாகும்.



நமது சக்தி உடலில் நாடிகள் என்ற தன்மையை விவரிக்கிறது ராஜ யோகம். பல ஆயிரம் நாடிகள் இருந்தாலும் சக்தியை கடத்தும் சாலைகளாக இருக்கும் நாடிகளில் இடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்ற நாடிகள் முக்கியமானது. நமது உடலின் வலது பக்க செயல்படுகளை இடா நாடியும், இடது பக்க செயல்பாட்டை பிங்கள நாடியும் செயல்படுத்துகிறது. இவை இரண்டும் இணைந்து உடல் முழுமையான வடிவில் செயல்படும் பொழுது அனைத்தையும் சுஷ்மணா நாடி இயக்குகிறது.

மூன்று நாடிகளும் நமது புருவ மையம் இருக்கும் நெற்றிப்பகுதியில் ஒன்றிணைகிறது. சுஷ்மண நாடியில் அதாவது முழுமையான நாடிகளின் செயல்பாட்டில்  இருக்கும் நிலையில் ஒருவரால் உயர் ஆன்மீக நிலையை அடைய முடியும். ஆன்மீக பயிற்சியில் இருப்பவர் நீண்ட நேரம் சுஷ்மண நாடியில் இருக்க முனைந்தால் பல்வேறு உயர் ஆன்மீக சக்திகளை பெற முடியும் என்பது ராஜ யோகத்தின் உட்கருத்தாகும்.

அஷ்டாங்க யோகத்தின் பகுதிகளான ஆசனம், ப்ராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை மற்றும் தியானம் ஆகியவை நீண்ட கால அளவில் நம்மை சுஷ்மண நாடியில் நிலைத்திருக்க செய்கிறது.

நாடிகள் ஒருங்கிணைந்து சுஷ்மண நாடியில் இருந்தாலும் புறச்சூழலில் ஏற்படும் விளைவுகளால் நாடிகள் சலனம் அடைந்து இடா அல்லது பிங்கள நாடிகளின் ஆளுமைக்கு சென்றுவிடும்.

புறச்சூழல் ஆன்மீக தன்மையில் இருக்கும் பொழுது உடல் சுஷ்மண நாடியில் பல மணி நேரங்கள் நிலைத்து இருக்கும்.

நமது உடலில் மூன்று நாடிகள் இருப்பதை போல பூமியை உடலாக கொண்டால் கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் இடா, பிங்களா மற்றும் சுஷ்மணாவை குறிக்கிறது. இதே போல மூன்று நாடிகள் சூரிய மண்டலத்தில் சூரிய,சந்திர மற்றும் குரு கிரகங்களாக இருக்கிறது.

நமது உடல், பூமி மற்றும் சூரிய மண்டலம் ஆகிய மூன்றின் நாடிகளும் ஒன்றிணையும் பொழுது ஆன்மீக பெரும் செயல்பாடுகள் நடக்க வாய்ப்பு உண்டு. நாடிகள் நமது புருவ மையத்தில் ஒன்றிணைவது போல , திரிவேணி சங்கமத்தில் நதிகள் ஒன்றிணைகின்றன. வான மண்டலத்தில் கிரகங்கள் ஒன்றிணைகிறது. இவை அனைத்தையும் சரியாக ஒரு ஆன்மீக சாதகன் பயன்படுத்தினால் இறைநிலையை உணரும் விழிப்புநிலையை அடைவார்கள்.



பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற சொல்லாடலை போல வானில் இருக்கும் ஆற்றல் இறங்கி திரிவேணியில் விழுந்து அது நமது நாடியில் விழும் நிகழ்வே மஹா கும்பமேளா என்பதை உணருங்கள்.

ராஜ யோகிகள் மட்டுமல்லாமல் கர்ம, பக்தி மற்றும் ஞான யோகிகளும் மஹா கும்பமேளாவில் இணைகிறார்கள். பல கோடி உயிர்கள் ஒரே நேரத்தில் இறைவனை பக்தி செலுத்தும் இடம் உலகில் வேறு ஏதேனும் உண்டா? தொடர்ந்து கீர்த்தனைகளும் இறை நாமமும் கும்பமேளா திசை எங்கும் பக்தி யோகிகளால் நிரப்பப்படுகிறது.

சேவை செய்வதையே இறைவனின் பாதையாக கொண்ட கர்ம யோகிகள் ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு தொடர்ந்து அமுது படைத்து இருப்பிடம் கொடுத்து கர்ம யோகத்தில் ஆனந்தம் அடைகிறார்கள். சத்சங்கங்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி இறை உணர்வில் திளைக்கிறார்கள் ஞான யோகிகள். அனைத்து யோக பாதையின் பெரும் திருவிழா கொண்டாட்ட திடலாக இருப்பது மஹாக்கும்பமேளா என்பதை பல நூற்றாண்டுகள் வரலாறு நிரூபித்தவண்ணம் இருக்கிறது.

யோகம் என்றாலே ஒன்றிணைதல் என்பதே அடிப்படை பொருள்.  உடலில் உள்ள நாடி மூலமாக, பூமியில் உள்ள ஜீவ நதி மூலமாக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மூலமாக என அனைத்தையும் ஒன்றிணைப்பது தானே சரியான யோகம் என்பதற்கான பொருளாக இருக்க முடியும்?

மஹா கும்பமேளா என்ற மஹா யோகத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?

 

(தொடரும்)

Wednesday, July 17, 2024

மஹா கும்ப மேளா 2025

 ஜோதிட சாஸ்திரம்

நமது கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மேலோட்டமாக எதுவும் வைக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் பின்புலமாக ஜோதிட சாஸ்திரம் இருக்கிறது.

ஒரு அரசரின் கட்டளையாகவோ அல்லது ஓர் குழுவினரின் முடிவாகவோ நிகழ்வுகளை நாம் கொண்டாடுவதில்லை. வான மண்டலத்தில் இயங்கும் கிரகங்களின் நிலையே நம் கொண்டாட்டத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

சக்கரத்தின் அச்சு எப்படி முக்கியமானதோ அது போல நமது கலாச்சாரம் ஒரு கொண்டாட்டத்திற்கு அச்சாக கிரகங்கள் வான மண்டலத்தில் அமையும் நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது.

நமக்கு தீபாவளி என சொன்னாலும் அது ஐப்பசி திரயோதசி திதி என்பதே தீபாவளியின் பின்புலமாக இருக்கிறது. மகர ராசியில் சூரியன் பிரவேசித்து உத்ராயண காலத்தை துவங்குவதே பொங்கலாக கொண்டாடுகிறோம். மாறாக பானை இருக்கிறது அரிசி இருக்கிறது என்பதற்காக பொங்கல் கொண்டாடுவது இல்லை. நமது மரபின் அடிநாதம் ஜோதிட கிரக தத்துவம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

வருடாந்திர பண்டிகைகளே இத்தகைய ஜோதிட கொள்கையின் மேல் கட்டமைக்கப்படும் பொழுது கும்பமேளா என்பது வெறும் கூட்டம் கூடுவதால் நடந்துவிடுமா என்ன?

சூரியன் நமது ஆன்மாவை குறிக்கும் சந்திரன் நமது மனதை குறிக்கும் குரு என்பது நமது உள்நிலை ஆன்மீக செயல்பாடுகளை குறிக்கும் கிரகங்கள். கும்பமேளா என்பது குரு,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டு உள்ளது.

குரு ரிஷிப ராசியில் இருக்கும் காலத்தில் சூரியன் மற்றும் சந்திரன் மகர கும்ப ராசியில் பயணிக்கும் காலத்தில் மஹா கும்பமேளா ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெறுகிறது.

குரு என்ற கிரகம் ராசி மண்டலத்தை சுற்றி வருவதற்கு 12 வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்தியாவில் நான்கு இடங்களில் கும்பமேளா நடைபெறும்.
அதனால் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஓர் இடத்தில் என நான்கு இடங்களில் நடைபெறுகிறது. மீண்டும் அதே இடத்தில் நடைபெறுவதற்கு பன்னிரெண்டு வருடங்கள் ஆகும்

 இதன் அடிப்படையில் ரிஷப ராசியில் குரு இருக்கும் நேரத்தில் ப்ரயாக் ராஜ் உத்திர பிரதேசத்தில் மஹா கும்பமேளா நடைபெறுகிறது. சூரியன் சிம்ம ராசியில் இருக்கும் நேரத்தில் நாசிக் என்ற இடத்தில் கும்பமேளா நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் குரு இருக்கும் நேரத்தில் உஜ்ஜயின் என்ற இடத்தில் கும்பமேளா நடைபெறும். கும்ப ராசியில் குரு இருக்கும் நேரத்தில் ஹரித் துவாரில் கும்பமேளா நடைபெறும்.

கும்ப என்ற வார்த்தை வருவதால் கும்ப ராசியில் குரு இருக்கும் காலத்தில் நடைபெறும் விழாவை தானே கும்ப மேளா என கூற வேண்டும் என கேள்வி எழலாம். முன்பே சொன்னதை போல நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெற்றாலும் ப்ரயாகையில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் திரிவேணி சங்கமம் உண்டு என்பதே மஹா கும்ப மேளா என அழைக்க காரணமாகிறது. இங்கே கங்கை சூரியனாகவும், யமுனை சந்திரனாகவும், குரு சரஸ்வதி நதியாகவும் இயங்குகிறது.

உண்மையில் கும்பத்தில் இருந்து அமிர்ந்த விழ்ந்தது என புராணங்கள் கூறும் குறியீடு இது தான். கும்ப ராசி என்ற வான மண்டலத்தில் உள்ள இடத்திலிருந்து உயர் ஆற்றல் பூமிப்பகுதியில் வீழும் தன்மையையே புராணங்கள் இப்படி குறியீடாக உருவாக்கி உள்ளனர்.

குரு ரிஷப ராசியில் இருக்கும் பொழுது சூரியன் மகரத்தில் தை மாத உத்திராயண காலத்தை துவங்கும் தருணத்தில் மஹா கும்பமேளா ஆரம்பிக்கிறது. பிறகு மாசி மாதம் சிவ ராத்திரியுடன் நிறைவு பெறுகிறது.


இரு மாதங்கள் நடைபெறும் மஹா கும்பமேளாவில் புனித நீராடும் முக்கிய நாட்கள் என இருக்கிறது. தை மாச பெளர்ணமி, தை அமாவாசை, தை மாத பஞ்சமி (வசந்த பஞ்சமி), தை மாத சப்தமி (ரத சப்தமி), மாசி பெளர்ணமி ஆகியவை முக்கியமான நாட்கள். மஹா கும்பமேளாவின் ஒவ்வொரு நாளும் ஆற்றல் நிறைந்த நாட்கள் என்றாலும் இந்த ஐந்து நாட்கள் கிரகங்கள் சிறப்பான நிலையில் அமைகிறது.

பெளர்ணமி காலத்தில் ராசி மண்டலத்தில் சூரியன் சந்திரன் எதிர் எதிரான நிலையில் இருக்கும். இதற்கு மையத்தில் குரு அமர்கிறது. அமாவாசை காலத்தில் சூரியன் சந்திரன் ஒரே ராசியில் அமர்ந்து குருவிற்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. சூரியன் என்கிற ஆன்மா, சந்திரன் என்ற மனதும் எப்பொழுதும் குரு என்கிற உயர் ஆன்மீக நிலையை நோக்கியே இயங்கும் தன்மையில் கிரக நிலைகள் அமைந்திருக்கிறது.

குரு,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் சிறப்பான காலநிலையில் சூரிய மணடலே ஒரு வித ஆன்மீக உயர்நிலையில் உந்தப்படுகிறது. எந்த ஆன்மீக பின்புலமும் இல்லாத ஒரு மனிதனின் ஆன்மா மற்றும் மனது ஆன்மீக நிலை நோக்கி உந்தப்படுகிறது. இதனால் தான் பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரம் சாதாரண மனிதர்களை கும்பமேளாவை கொண்டாட உந்தி தள்ளுகிறது.

ஜோதிட சித்தாந்தத்தில் பல்வேறு வகையாக கும்பமேளாவை விளக்கினாலும் கும்பமேளா என்பது பூமியில் அதுவும் இந்தியாவில் மட்டும் நடைபெறும் நிகழ்வு அல்ல என்பது புரிந்துகொள்ள வேண்டும். சூரிய மண்டலத்தில் இருக்கும் சூரிய,சந்திர மற்றும் குரு கிரகங்களின் ஒருங்கிணைவு மற்றும் ராசி மண்டலங்களின் தாக்கம் இதற்கு அவசியம். 



பூமியின் வட்டப்பாதை மற்றும் பூமியின் அச்சில் உள்ள சாய்மான நிலை ஆகியவற்றை உண்மையான கிரக நிலைக்கு சரி செய்யும் விதமாக அயனாம்சம் என்ற ஒரு மதிப்பை கிரகங்களின் உண்மையான நிலையில் இருந்து கழித்தே கிரக நிலை கணிக்கப்படுகிறது. கிரகங்களின் உண்மை நிலை சயனம் என்றும் பூமியின் சாய்மான நிலை அயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் பூமியில் இருந்து பார்க்கும் கோணத்தில் கணிக்கப்படுகிறது.

சூரிய மண்டலத்தின் ஆன்மீக நிலையை கருத்தில் கொண்டால் கிரகங்களின் உண்மையான நிலையை எடுத்துக்கொண்டால் போதுமானது. அயனாம்சம் கழிக்கப்படாத கிரக நிலையை எடுத்துக்கொண்டால் குரு என்ற கிரகம் மஹா கும்பமேளா நடக்கும் பொழுது ரிஷப ராசியில் இருக்காது. அது மிதுனத்தில் இருக்கும். மிதுன ராசி என்பது உபய ராசி என்ற தன்மை கொண்டது. மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகியவை உபயராசிகள் என்பதால் சயன தத்துவத்தில் குரு உபய ராசியில் சஞ்சரிக்கும் பொழுது கும்பமேளா நடைபெறுகிறது. ராசி மண்டலத்தில் முதல் உபய ராசியான மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் காலமே மஹா கும்பமேளா என்பதை புரிந்துகொள்வோம்.

குரு மிதுனத்தில் சயன நிலையில் இருக்கும் பொழுது சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும். அதனால் தான் மஹா கும்பமேளா என அழைக்கப்படுகிறது.

ப்ரயாகை தவிர பிற இடங்களில் நடைபெறும் கும்பமேளாக்கள் தை மாதத்தில் நடைபெறுவது இல்லை. அதற்கு என கிரக நிலைகள் உண்டு.

இவ்வாறு குரு-சூரிய சந்திர இணைவின் மூலமே கும்பமேளா என்ற நிகழ்வு கட்டமைக்கப்படுகிறது.

ஆழ்ந்த ஜோதிட பின்புலனை கண்டோம். இனி யோக சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வை காண்போம்.


(தொடரும்)