Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, October 5, 2009

உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..! - பகுதி 2

தங்கம் என்ற உலோகம் தற்சமயம் மக்களின் வாழ்வாதரத்தை முடிவு செய்யும் ஒரு விஷயமாகவிட்டது. ஒருவரிடம் இருக்கும் தங்கம் அவரின் அந்தஸ்த்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டின் பொருளாதர நிலையும் இத்துடன் மறைமுகமாக இணைந்து உள்ளது. இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே அப்படி இருக்கிறது.

ஐநூறு வருடங்களுக்கு முன் தங்கம் மிக மலிவான விஷயமாக பாரதத்தில் இருந்தது. மலிவு என்பது பொருள் நிலையில் அல்ல. பயன்பாட்டு நிலையில் எனலாம். ஆபரணங்கள் உடலில் நகைக்கடை விளம்பர மாடல் போல மக்கள் அணிந்து உலா வந்தார்கள். இன்றும் கூட ராஜஸ்தான் கிராமிய மக்களிடையே இப்பழக்கம் உண்டு. ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்கள் வடமாநில கோவிலை கொள்ளை கொள்ள வரும்பொழுது அந்த கோவிலில் இருக்கும் தங்கத்தை எடுத்த செல்ல தயாராக ஒரு குதிரை படையை கொண்டுவருவார்கள். அதாவது அவர்களுக்கு நிச்சயமாக தெரியும் பல டன் எடைகொண்ட தங்கம் கிடைக்கும் என்பது.

(கி.பி 1020) சோமநாதர் கோவிலை கஜினி கொள்ளைகொள்ளும் பொழுது எத்தனை முறை கொள்ளை கொண்டாலும் அந்த நூற்றாண்டில் நம் மதிப்பில் பத்து கோடிக்கு குறைவில்லாமல் கோவிலில் கொள்ளையடித்தான். வரலாறு சொல்லுவது போல இவர்கள் இஸ்லாமியர்கள் என நான் சொல்ல மாட்டேன். இஸ்லாமை அவர்கள் சரியாக புரிந்துகொண்டால் இவ்வாறு செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார் கஜினி.

காசிவிஸ்வநாதர் கோவிலையும் சோமநாத் கோவிலையும் செங்கல் செங்கலாக உருவி எடுத்து சென்றார்கள். காரணம் செங்கலின் மையப்பகுதி தங்கக்கட்டிகளும் மேல் பகுதி செங்கல்லிலும் செய்து அதன் மேல் தங்ககவசம் போடப்பட்டிருந்தது. கோவிலையே தங்கமாக கட்டவில்லை மற்றபடி தங்கத்தில் அப்படி இழைக்கப்பட்டிருந்தது.

சக்திவாயந்த இந்த இடங்களை அரேபிய, ஆப்கானிஸ்தான் கொள்ளையர்கள் தகர்த்ததற்கு ப்ராயச்சித்தமாக அனேக சூஃபி ஞானிகள் இந்தியாவிற்கு வந்து அந்த இடங்களில் ப்ரார்த்தனை செய்து அடக்கமானார்கள். கொள்ளையர்களை பதிவு செய்தது போல சூஃபி ஞானிகள் வரலாறு பதிவு செய்யவில்லை.

பாரதத்தின் வடகிழக்கு நாடுகள் மலை மற்றும் வரண்ட பாலை பூமியாக இருந்ததால் தங்கம் என்பது அவர்களுக்கு ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. நம் மக்களுக்கு தங்கம் கோவிலில் போடும் காணிக்கையாகவும், நாணயம் பயன்படுத்தும் பொருளாகவும் இருந்தது. இங்கே நாம் கவனிக்கவேண்டும். எந்த பொருள் மலிவாகவும் லகுவாகவும் கிடைக்கிறதோ அப்பொருளிலேயே நாம் நாணயங்கள் செய்வோம். தற்காலத்தில் கரண்ஸி பேப்பரிலும், துருப்பிடிக்காத இரும்பு மலிவக கிடைப்பதால் பயன்படுத்துவதை போல அந்தகாலத்தில் தங்கம் வெள்ளி என்பது மலிவானதாக இருந்தது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆன்மீக ரீதியாகவும் கையாளப்பட்டதால் வாழ்க்கைதரம் மேம்பட நாணயங்கள் தங்கமாக இருந்தது. நமக்கு மலிவானது பிறருக்கு மிகவும் உயர்ந்ததாக இருக்கலாம். அதனால் தான் பிறநாட்டினருக்கு தங்கம் ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. ஒரு வேடிக்கை கதை ஒன்று பார்ப்போம்.

ஒரு வியாபாரி பொருட்களை கப்பலில் கொண்டு சென்று பல தேசங்களில் விற்பவன். ஒரு நாள் பயணமாகும் பொழுது புயலின் காரணமாக கப்பல் திசைமாறி வேறு ஒரு தீவில் ஒதுங்கியது. அங்கே இதுவரை பிற நாட்டினரை பார்க்காத மக்கள் வாழ்ந்துவந்தனர். கப்பல் என்ற ஒரு வாகனத்தையும், வியாபாரியின் உடை ஆகியவை அவர்களுக்கு வித்தியாசமாகப்பட்டது. தான் கொண்டு சென்ற சரக்குகளை அவர்களுக்கு விற்றுவிட்டு செல்லலாம் என எண்ணி அவர்களிடம் தான் கொண்டு வந்த பொருட்களை காட்டினான்.

அதில் ஒரு பொருள் தீவு மக்களை கவர்ந்தது. தீவின் அரசனிடம் வியாபாரியை கொண்டு சென்றார்கள். மக்கள் அரசனிடம் வியாபரியையும் அவனின் நவீன பொருளையும் அறிமுகப்படுத்தினர். அதன் தோலை நீக்கினால் கண்களில் கண்ணீர்வருகிறதாம். அப்படிபட்ட உணவு பொருளை வியாபாரி கொண்டு வந்திருப்பதாக சொன்னார்கள். புரிந்திருக்குமே. ஆம் அது வெங்காயம்.

அரசன் வியாபாரியின் பொருளுக்கு ஈடாக பல வைரம் வைடூரியம் தங்கம் என வெங்காயத்திற்கு எடைக்கு எடை கொடுத்தான். வியாபாரியும் மன நிறைவுடன் தன் நாடு திரும்பினான்.

எப்பொழுதும் கொஞ்சம் பணத்துடன் வரும் வியாபாரி அதிக செல்வத்துடன் வந்திருப்பதன் மாயம் புரியாமல் போட்டி வியாபாரிகள் முழித்தனர். ரகசிய தூதுவர்கள் மூலம் விஷயமும் தெரிந்து கொண்டான் ஒரு போட்டி வியாபாரி. தானும் கப்பலில் புதிய காய்கறிகள் தானியத்துடன் அந்த தீவு நோக்கி சென்றான்.

மக்கள் இவனையும் அரசன் முன் கொண்டு சென்றார்கள். அவன் கொண்டு வந்த பொருட்களை பார்த்த அரசன் மகிழ்ச்சி அடைந்தான். வியாபாரி கொண்டு வந்த பொருளுக்கு சமமான எடையில் தன்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத பொருளான வெங்காயத்தை அவனுக்கு பரிசாக அளித்தான்.


ஒருவருக்கு எளிமையாக கிடைப்பது பிறருக்கு அதிசயமானதாக இருக்கலாம். நம் பாரதத்தில் ஆன்மீகம் எளிமையாக கிடைக்கிறது. அதனால் மேற்கு நாட்டினர் அதை பெரிய விஷயமாக பார்க்கிறார்கள். உள்ளூர்காரர்களுக்கு அது வெங்காயம் ..!

உலகின் வல்லரசு நாடுகளின் நாணய மதிப்பு தங்கத்துடன் மறைமுகமாக இணைந்துள்ளதால் புதிதாக தங்க சுரங்கம் உருவாக பல நாடுகள் எதிர்ப்புடன் இருக்கிறார்கள். தங்க சுரங்கம் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தேவை நிறைவடையும். தேவை அதிகரித்தால்தானே விலை ஏற்ற முடியும்? (supply and demand) அதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என பயப்படும் வல்லரசுகள் புதிய சுரங்கம் என்பதை கானல் நீராக வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனுமதித்து ஒரு இருபது முப்பது சுரங்கங்கள் ஏற்பட்டால் நாம் கோக்கும் பெப்ஸியும் தங்க கேனில் குடிக்கலாம்.

தங்கம் எப்படி நம் சாஸ்திரம் கலாச்சாரம் சார்ந்ததோ அதுக்கு நேர் எதிரான சமாச்சாரம் ராசிகற்கள். தொலைக்காட்சி சேனலில் கூவி கூவி விற்கப்படும் ராசிகற்கள் நம் சாஸ்திரம் சார்ந்தவை அல்ல. அரேபியர்கள் தான் ராசிக்கற்களை நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். யுனானி மருத்துவ முறையில் படிகங்கள் (crystals), படிகாரங்கள் மற்றும் மலை உப்பு கொண்டு செய்யும் மருத்துவ பிரிவு உண்டு.

குறிப்பிட்ட நிற கற்களை அணிந்தால் மன நிலையில் ஏற்றம் மற்றும் வியாதி குணம் என துவங்கிய இப்பழக்கம் உங்கள் ராசியை கேட்டு விற்கும் அளவுக்கு வியாபாரம் ஆகிவிட்டது. வரும் நூற்றாண்டில் குரோசின் மாத்திரை சாப்பிட்டால் செல்வந்தர் ஆகலாம் என சிலர் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் தற்சமயம் யுனானி மருந்தான ரத்தின கற்களை அப்படித்தான் பயன்படுத்துகிறோம். இன்றும் கூட சில தர்க்காவின் வாசலில் கற்களை விற்கும் ஆட்களை பார்க்க முடியும். ராசிகற்கள் இஸ்லாமுக்கு எதிராக இருந்தாலும் சிலர் தங்கள் மனநிறைவுக்கு வாங்கி அணிவதுண்டு.ரத்தின கற்கள் அரபியர் கொண்டுவந்தார்கள் என்பதால் கண்மூடித்தனமாக மறுக்கவில்லை.


நவ ரத்தின கற்களுக்கு ஆற்றல் இல்லையா ? உலகில் இருக்கும் அனைத்து பொருட்களையும் நவகிரகங்கள் தொடர்பு கொள்ளும். நவ தானியம், நவரசம் என சொல்லிக்கொண்டே போகலாம். குரு என்ற கிரகத்திற்கு மஞ்சள் புஷ்பராகம் அணியுங்கள் பலன் கிடைக்கும் என்றால் குரு குறிக்கும் கொண்டைகடலையை உண்டாலும் அதே ஆற்றல் கிடைக்கவேண்டும். காரணம் இரண்டு பொருளும் குரு என்ற கிரகத்தால் உருவானவை.

படிகங்கள் (Crysrals ) ஆற்றலை எதிரொலிக்க செய்யும் வல்லமை கொண்டது. உங்களிடம் எத்தகைய ஆற்றல் உண்டோ அதை பன்மடங்காக எதிரொலிக்கும். இயற்பியல் ஆய்வகங்களில் முப்பெட்டகம்(prism) எப்படி ஒளியை பிரிக்குமோ அதுபோல நவரத்தின கற்கள் ஆற்றலை பிரித்து எதிரொளிக்க செய்யும். அதனால் கோவில்களின் கருவரையில் இறைவனின் விக்ரஹத்தில் அதிகமாக கற்களை பயன்படுத்தினார்கள். கருவறையில் இருக்கும் இறையாற்றல் பன்மடங்காக எதிரொலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் ஒரு முட்டாள் என்றால் நான் ராசிக்கற்களை வாங்கி என் முட்டாள் தனத்தை பன்மடங்காக பெருக்கி என்ன செய்ய போகிறேன்? ஆற்றலே இல்லாத மனிதன் ராசிக்கல் அணிந்து எதை பெருக்க போகிறான்? ராசிக்கற்கள் மிகவும் சக்திவாய்ந்த இடங்களில் இருக்கட்டும். அங்கே சென்று வழிபடுவதாலோ அல்லது நாம் சில மணிகள் செலவிடுவதாலோ அந்த ஆற்றலை நாம் பெற்றுகொள்ளுவோம். அதைவிடுத்து ராசிக்கல் மோதிரம் என்ற பெயரில் வேலைசெய்யாத ஒருவிஷயத்திற்கு அடிமையாக வேண்டாம். நம் சாஸ்திரம் ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் நவரத்தின கற்களை போடசொல்லவில்லை. ஜோதிடத்தின் பெயர் சொல்லி விற்பவர்கள் சாஸ்திரத்திற்கு எதிரானவர்களே...!

வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் சதாம் உசேன் தங்கத்தில் கழிவறை வைத்திருந்தாராம், நம் ஊரில் சாதம் சாப்பிடும் உலக நாதர்கள் ராசிக்கற்களை வாங்கிகொண்டிருக்கிறார்கள்.

உலோகத்தில் வெளிச்சூழலுக்கு வினைபுரியாத சிறப்பு தங்கத்திற்கு உண்டு. உலகத்தின் சூழலுக்கு உருமாறாத தங்கமாக இருப்பது என்பது ஒரு வித யோக நிலை. அகத்தே நீங்கள் தங்கமானால் புறத்தங்கம் தகரமே...!

30 கருத்துக்கள்:

Jawahar said...

கற்கள் பிரதிபலிப்பையும், விஞ்ஞானத்தையும் தொடர்புப் படுத்தி இன்னும் கொஞ்சம் விவரமாக, தனி இடுகையாக எழுதுங்கள். தெரிந்து கொள்ள என் போல பலர் ஆர்வமாக இருக்கிறோம்.

http://kgjawarlal.wordpress.com

எம்.எம்.அப்துல்லா said...

”ஈடுபட்டிருக்கமாட்டார்” கஜினி

//

திருடனுக்கெல்லாம் ஏன் உயர்வு நவிற்சி??? ”மாட்டான்” என்று மாற்றுங்கள் சாமி.


//வரலாறு சொல்லுவது போல இவர்கள் இஸ்லாமியர்கள் என நான் சொல்ல மாட்டேன். இஸ்லாமை அவர்கள் சரியாக புரிந்துகொண்டால் இவ்வாறு செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார் கஜினி.

//

உங்களுக்கு எங்களின் வந்தனங்களும்,பலகோடி நன்றிகளும்.



//சக்திவாயந்த இந்த இடங்களை அரேபிய, ஆப்கானிஸ்தான் கொள்ளையர்கள் தகர்த்ததற்கு ப்ராயச்சித்தமாக
//

சாமி அரேபியாவில் இருந்து திருடர்கள் வரவில்லை வியாபாரிகள்தான் வந்தார்கள். இந்த கேடுகெட்ட கொள்ளையர்கள் வந்தது ஆப்கன்,பாரசீகம் மற்றும் பெர்சியக் கடல் பகுதிகளில் இருந்துதான்.



//அகத்தே நீங்கள் தங்கமானால் புறத்தங்கம் தகரமே...!

//

:)




அப்புறம் சாமி போன இடுகையில் நான் இட்ட பின்னூட்டத்தில் உங்களை என் மனசாட்சின்னு சொல்லிட்டு அப்புறம் பயந்துகொண்டே அமர்ந்திருந்தேன்....எங்க மத்திய அமைச்சர் பதவி கேட்டுருவீங்களோன்னு :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜவஹர்,

உங்கள் வருகைக்கு நன்றி.
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//திருடனுக்கெல்லாம் ஏன் உயர்வு நவிற்சி??? ”மாட்டான்” என்று மாற்றுங்கள் சாமி.
//

திருடனுக்கு தேவை இல்லை என்றால் நமக்கு நாவில் மொழிக்கலாச்சாரம் என்று ஒன்று உண்டே? பகைவனையும் பாராட்டும் மொழி நம்முடையது.

திருடனாக இருந்தாலும் அவனுள் இயங்குவது அது தானே?

//சாமி அரேபியாவில் இருந்து திருடர்கள் வரவில்லை வியாபாரிகள்தான் வந்தார்கள். இந்த கேடுகெட்ட கொள்ளையர்கள் வந்தது ஆப்கன்,பாரசீகம் மற்றும் பெர்சியக் கடல் பகுதிகளில் இருந்துதான்.
//

திருட(ர்)ன் என ஆகிவிட்டது அவர் வானுலகில் இருந்து வந்தவர் என்றாலும் திருடரே.

//..எங்க மத்திய அமைச்சர் பதவி கேட்டுருவீங்களோன்னு :))//

இருக்கிற பதவியையே ஒழுங்க பயன்படுத்த முடியல... என்ன பதிவினு கேட்கறீங்களா? மனுஷன் என்கிற பதவியை கடவுள் குடுத்திருக்கார். அதையே முழுமையா பயன்படுத்தமுடியல இதுல இத்துப்போன மந்திரிபதவி வேறயா :)

இங்கனம் உங்கள் மனசாட்சி

எம்.எம்.அப்துல்லா said...

//திருடனாக இருந்தாலும் அவனுள் இயங்குவது அது தானே //

அட!அட!அட!

நிகழ்காலத்தில்... said...

பதிவு நன்றாகவும் பொறுப்பாகவும் அமைந்துள்ளது,

இது போன்ற விளக்கங்களுடன் தொடர்ந்து பல விசயங்களையும் எழுதுங்கள்,

நான் இராசிக் கற்களைப்பற்றி எதுவும் தெரியாதவனாகவே ஒதுங்கி இருந்தேன், இப்போது காரணம் புரிந்து ஒதுங்கி இருக்கிறேன்.:))

இந்த இடுகை இராசிக்கற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என உணர்கிறேன்.

இராசிக்கற்கள் விற்பவரை, பரிந்துரைப்பவரை நேரடியாக வாருவாரென்று வாராமல், அவர்களை ஒதுக்கி விட்டு மக்களிடையே நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு பல கோடி நன்றிகள், வாழ்த்துக்கள்

இந்த இடுகை நூலாக மாற்றம் பெறத்தகுதியானது என கருதுகிறேன்

Rajagopal.S.M said...

//படிகங்கள் (Crysrals ) ஆற்றலை எதிரொலிக்க செய்யும் வல்லமை கொண்டது. உங்களிடம் எத்தகைய ஆற்றல் உண்டோ அதை பன்மடங்காக எதிரொலிக்கும்//
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர், யோகா பயில ஆரம்பிச்ச கட்டத்தில் Crystal மாலை வாங்கி குருகிட்ட குடுதிருகார். அவர் புதுசா ஏதாவது மாலை வாங்கின குருகிட்ட குடுத்து வாங்குவது வழக்கம். மாலைய வாங்கின குரு, இப்ப இது உனக்கு தேவை இல்லைன்னு சொல்லி அவரே மாலையை வச்சிகிடார். நம்மாளு ஆயிரம் ரூபா குடுத்து வாங்கின மாலை போச்சேன்னு நினைசிருகார். சில வருடங்கள் கழித்து, நம்மாளு குண்டலினி யோகா செய்ய ஆரம்பிச்ச பிறகு, கூட்டத்தில இருந்த இவர கூப்ட்ட குரு ... இப்ப நீ ஒரு Crystal மாலை வாங்கி போடுக்கனு சொல்லிருகார்.. சும்மா ஒரு செய்தி.....

Rajagopal.S.M said...

இதெல்லாம் சரி சுவாமி... இந்த தங்கம் உங்க முகவரி கேட்டு ஒரு வாரத்துக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன்... அந்த மெயில் உங்களுக்கு வந்ததா இல்ல cosmosla கரைஞ்சு காணாம போச்சான்னு தெரியலை..... கொஞ்சம் rajagopalsm@gmail.com மெயில் பண்ணுங்க please.வழக்கமா உங்க article எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து என் பொஞ்சாதிகிட்ட காமிக்கிறது உண்டு... தங்கம் விக்கிற விலையில இத வேற படிச்சு எண்ணாக போகுதோ???

மதி said...

>>அகத்தே நீங்கள் தங்கமானால் புறத்தங்கம் தகரமே...!>>

எவ்வளவு பெரிய விசயத்த இவ்வளவு சுலபமா சொல்லிடிங்களே...

துளசி கோபால் said...

//உள்ளூர்காரர்களுக்கு அது வெங்காயம் ..!//

இப்படிப் பத்தவச்சுட்டீங்களே ஸ்வாமி:-)

raja said...

ஐயா வணக்கம்,

ஜோதிட கல்வி பகுதி 6 க்கு பிறகு வரவில்லையே!!

எப்போது வரும்?

நன்றி

gopi said...

என்னிடம் தாயார் கொடுத்த படிக மாலை உள்ளது. காலை புஜையின் போது அணியலாமா ஸ்வாமிஜி

விஜய் said...

" ராசிகற்கள் இஸ்லாமுக்கு எதிராக இருந்தாலும் "

Agate கல்லை இஸ்லாமியர்கள் புனிதமாக கருதுவார்கள்.

swartham sathsangam said...

சென்ற பதிவில் பிராணனை பற்றிய செய்திகள் எங்கே இருந்து எடுத்தீர்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளீர்கள். பதஞ்சலி யோககேந்திரத்தில் மாணவர்களுக்கு சொல்லி தரப்படும் பாடங்களை இங்கே நாங்கள் பதிவிடுகிறோம். குரு சிஷ்ய பரம்பர மூலமாக சொல்லப்பட்ட செய்திகளின் ஒரு பகுதிதான் இவை. வரும் காலங்களில் பிராணாயாமம் பற்றி நிறைய பதிவிட இருக்கிறோம்.தங்கள் வரவுக்கு நன்றி.

yrskbalu said...

அங்கே சென்று வழிபடுவதாலோ அல்லது நாம் சில மணிகள் செலவிடுவதாலோ அந்த ஆற்றலை நாம் பெற்றுகொள்ளுவோம்.


i also repeating

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜ கோபால்,

குருவின் கதை நன்றாக இருக்கு. ஒரு சின்ன சந்தேகம்... :)

குரு முதலில் வாங்கிய மாலையை என்ன செய்தார் :) ?

எங்கள் இணைய தளத்தில் அலுவலக முகவரி உண்டு. pranavapeetam.org


உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பாததற்கு வருந்துகிறேன்.
வேறு தகவல் வேண்டுமானால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

துளசி அம்மா...

உங்களுக்கு மட்டும் நான் செஞ்ச வில்லங்கம் கண்ணில்படுதே? டீச்சரா இருந்ததால் இருக்குமோ :))

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜா,

விரைவில் பாடங்கள் அதி தொழில் நுட்ப சூழலில் வெளிவரும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோபி,

//என்னிடம் தாயார் கொடுத்த படிக மாலை உள்ளது. காலை புஜையின் போது அணியலாமா ஸ்வாமிஜி//

தாயார் கொடுத்த உடலைதான் கடைசி வரை அணிய போகிறோம். அவர்கள் அளித்தால் ஸ்படிகம் நல்லது தான்.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு குருவழியில் பெறவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கவிதைகள்,

//" ராசிகற்கள் இஸ்லாமுக்கு எதிராக இருந்தாலும் "

Agate கல்லை இஸ்லாமியர்கள் புனிதமாக கருதுவார்கள்.//

நீங்கள் குறிப்பிட்ட வரிகளை மீண்டும் கவனியுங்கள். ராசி கற்கள் என்பது மேஷம் துவங்கி மீனம் வரை உள்ள ராசிகளுக்கு கற்கள் அணிவது. இஸ்லாமில் அது கிடையாது.

சில விஷேஷகாரனத்திற்காக சில வகை கற்களை அனைத்து மதமும் பின்பற்றுகிறது. பாரதத்தில் ஸ்படிகம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

உங்கள் வருகைக்கு நன்றி

Siva Sottallu said...

// உள்ளூர்காரர்களுக்கு அது வெங்காயம் ..! //

சூப்பர் ஸ்வாமி :-)
அருமையான கட்டுரை,
மிக்க நன்றி ஸ்வாமி.


// திருடனாக இருந்தாலும் அவனுள் இயங்குவது அது தானே? //

இதனால் நீங்கள் சொல்லவருவது எனக்கு புரியவில்லை ஸ்வாமி.

முன்பு ஒரு பதிவில், பின்னூடத்திற்கு பதில் கொடுக்கையில் நீங்கள் சொன்னது
// ஒருவன் பல உயிர்களை கொடூரமாக கொன்றுவிட்டு அஹம் பிரம்மாஸ்மி என்றால் அவனை வணங்கலாமா? //

இப்பொழுது ஒரு திருடனையும் மரியாதையுடன் அழைக்கலாம் ஏன் என்றால் அவனுள் இயங்குவது அதுதானே என்கிறிர்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,


// திருடனாக இருந்தாலும் அவனுள் இயங்குவது அது தானே? //

இதனால் நீங்கள் சொல்லவருவது எனக்கு புரியவில்லை ஸ்வாமி.

முன்பு ஒரு பதிவில், பின்னூடத்திற்கு பதில் கொடுக்கையில் நீங்கள் சொன்னது
// ஒருவன் பல உயிர்களை கொடூரமாக கொன்றுவிட்டு அஹம் பிரம்மாஸ்மி என்றால் அவனை வணங்கலாமா? //

இப்பொழுது ஒரு திருடனையும் மரியாதையுடன் அழைக்கலாம் ஏன் என்றால் அவனுள் இயங்குவது அதுதானே என்கிறிர்கள்.//


ஷார்ட் டைம் மெம்மரி லாஸ் இருப்பவர்களே இந்த வலைபக்கத்தில் அனுமதி :)))

அஹம் பிரம்மாஸ்மி என சொல்லிவிட்டு ஒருவன் செய்யும் செயல் அவனின் ஆணவத்தை காண்பிக்கிறது. மேலும் அவனை மரியாதையாக நடத்தலாம் எந்த தவறும் இல்லை. வணங்கத்தக்கவன் அல்ல.

அனால் அனைவரின் ஆன்மாவும் வணங்கத்தக்கது தான். ஆன்மா என்றும் ஆணவத்துடன் செயல்படாது.

Siva Sottallu said...

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

// ஷார்ட் டைம் மெம்மரி லாஸ் இருப்பவர்களே இந்த வலைபக்கத்தில் அனுமதி :))) //

lol :-)

மன்னிக்கவும், உங்கள் கட்டுரைகளை படிக்கும் பொழுது சில வரிகள் என்னுள் ஆழமாக பதிந்துவிடுகின்றது.

ஸ்வாமி, நாடி சலனத்தினால் நாசியில் சுவாசம் மாறுவதை உணர ஒரு சிறிய சோதனை பயிற்சி (கையை தரையில் ஊன்றுதல் ) கொடுத்திர்கள், அதேபோல், உலோகங்கள் அணிவதால் நம்மக்கு ஏற்படும் மாற்றத்தை உணர ஒரு சிறிய பயிற்சி கொடுக்க முடியுமா ஸ்வாமி.

இதன் மூலம் நாம் படிப்பதோடு நின்றுவிடாமல் உணர்ந்து அறியவும் (realization) முடியுமே ஸ்வாமி.

Anonymous said...

நீங்கள் சொல்வது சரிதான் சுவாமி! உள்ளூரில் இருக்கும் பொது எனக்கு "வெங்காயத்தின்" மதிப்பு தெரியவில்லை. வெளிநாடு சென்றபின் இங்கு இந்த "வெங்காயத்தின்" மதிப்பை பார்த்து வியந்து, அதுவே என்னை அந்த "வேங்கயத்திடம்" புதிதாக கவர்ந்தது!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//ஸ்வாமி, நாடி சலனத்தினால் நாசியில் சுவாசம் மாறுவதை உணர ஒரு சிறிய சோதனை பயிற்சி (கையை தரையில் ஊன்றுதல் ) கொடுத்திர்கள், அதேபோல், உலோகங்கள் அணிவதால் நம்மக்கு ஏற்படும் மாற்றத்தை உணர ஒரு சிறிய பயிற்சி கொடுக்க முடியுமா ஸ்வாமி.//

தாராளமாக கொடுக்கலாம் :)
எல்லாரும் கேட்டுக்கங்கப்பா பயிற்சி பற்றி சொல்லறேன்.... உங்க கிட்ட இருக்கும் தங்க நகையெல்லாம் எனக்கு அனுப்பி வையுங்க... நாளைக்கே பயிற்சி ஸ்டார்ட்ஸ்...

எல்லாவற்றிக்கும் பயிற்சி அளிக்க முடியாது சிவா... இங்கே பெற்ற விழிப்புணர்வை கொண்டு உங்களை சுற்றி கவனியுங்கள்.

உதாரணம்...
கிருஸ்துவர்கள் ஏன் திருமணத்தில் பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் ஆபரணம் (மோதிரம்) போட்டுக்கொள்ளுகிறார்கள்
ஆணும் பெண்ணும் ஒரே பக்கம் ஏன் அணியக்கூடாது?

இப்படி கவனிப்பு என்பதே பயிற்சி தானே?

Witnessing itself a great meditation.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ்,

:)

உங்கள் வருகைக்கு நன்றி

Siva Sottallu said...

// எல்லாவற்றிக்கும் பயிற்சி அளிக்க முடியாது சிவா... இங்கே பெற்ற விழிப்புணர்வை கொண்டு உங்களை சுற்றி கவனியுங்கள். //

நன்றி ஸ்வாமி, கண்டிப்பாக செய்கின்றேன் ஸ்வாமி.

// இப்படி கவனிப்பு என்பதே பயிற்சி தானே?
Witnessing itself a great meditation. //

உண்மைதான், மறுக்க முடியாது ஸ்வாமி.

நான் பாட்டுக்க சிறிய பயிற்சி கொடுக்க முடியுமா ஸ்வாமி என்று கேட்டுவிட்டு, எங்கே நீங்கள் அடுத்து நான் மரணத்தை பற்றி பதிவு எலுதபோகின்றேன் அதற்கும் சேர்த்து சிறிய பயிற்சி கொடுக்கட்டுமா என்று கேட்டுவிடிவீர்களோ என்று நினைத்தேன். :-)