Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 27, 2009

சுப்பாண்டி கண்ட ஞானக்குழந்தை கிச்சுமணி

பலவருடங்களுக்கு முன் எனக்கு சுப்பாண்டிக்கும் நடந்த சுவாரஸியமான விஷயம் இது.
இதே போல ஒரு கோடைவிடுமுறை சமயம் சுப்பாண்டியின் உறவினர்கள் அவர் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அவர்களை என்னிடத்தில் அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். அவர் குடும்பத்தார் அருகில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். அவனை முன்னால் கொண்டுவந்து என்னிடத்தில் நிற்கவைத்தார்கள். சுமார் ஏழு வயது இருக்கும், குறுகுறு பார்வையும், சுட்டிதனமும் நிறைந்த அவனது முகம் என பார்க்க அழகாக இருந்தான். “ ஸ்வாமி இவன் கிச்சுமணி ஓவர் குறும்பு, நீங்கதான் இவனை சரியாக்கணும்” என்றார்கள்.

நான் என்ன செய்ய? குழந்தைக்கு இது தானே இயல்பு என்றேன்.

உறவினர்கள் அனைவரும்.. “ஸ்வாமி இவனை உங்களுக்கு தெரியாது. பத்து நிமிஷம் இவன் கூட இருந்தா போதும் தலை சுத்திடும்” என்றார்கள்.

எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அப்படி என்ன குறும்பு பண்ணறான் என கேட்டேன் ?.

“சொன்ன பேச்சை கேட்க மாட்டான், எப்ப பார்த்தாலும் கார்டூன் பார்க்கறது. சினிமா பைத்தியம். விஷமம்னா அப்படி ஒரு விஷமம். படிக்கிறது. சாமி கும்பிடறது, சுலோகம் சொல்லறது எல்லாம் இவனுக்கு வேப்பங்காய் சாப்பிடறது மாதிரி.” என்றனர்.

வேப்பங்காய் உடம்புக்கு நல்லது தானே? என எனது மருத்துவ அறிவை எடுத்து விட.. குடும்பமே என்னை முறைத்தார்கள்.

நான் நிலைமையை சுதாரித்து கொண்டு, “ நீங்க சொல்லறது எல்லாம் சரிதான். குழந்தையை குழந்தையாவே இருக்கவிடுங்க. அவங்க மனசில் எதையும் திணிக்காதீங்க. எனக்கு இவனை மாத்தும் அளவுக்கு அறிவெல்லாம் கிடையாது” என்றேன்.

உடனே சுப்பாண்டி, “உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி ஸ்வாமி. எத்தனையோ விஷயங்களை என் கண்ணுமுன்னாடியே பண்ணிருக்கீங்க. இது எல்லாம் பண்ண மாட்டீங்களா?” என்றான்.

எனக்கே ஆச்சரியம் இவன் முன்னாடி நான் என்ன பண்ணினேன் என. சுப்பாண்டியின் முகத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது உண்மை.

சுப்பாண்டி பயல் என்னை பற்றி ஏதேதோ சொல்லி அவர்களை அழைத்துவந்திருக்கிறான்.


“டேய்..கிச்சுமணி. ஸ்வாமியை நமஸ்காரம் பண்ணிக்கோடா. நல்ல புத்திக்கொடு என வேண்டிக்கோ..!” என்றான் சுப்பாண்டி.

என்னை வணங்க வந்த கிச்சுமணியை அரவணைத்து அவனுக்கு இனிப்புகள் வழங்கினேன். சந்தோஷமான கிச்சுமணி ஒரு சினிமா நடிகர் செய்வது போல எனக்கு வணக்கம் வைத்தான்.

“ஸ்வாமி ஆசிர்வாதம் பண்ணீட்டார். வாங்க எல்லாரும் போலாம்.” என சுப்பாண்டியும் குடும்பமும் விடைபெற்றனர்.

உண்மையில் எனக்கு குழந்தைகள் மேல் பிரியத்தை காட்டிலும் மரியாதை உண்டு. ஆணவம் மிகுந்து வளர்ந்த மனிதர்களிடம் அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. தங்களுக்கு எல்லாம் தெரியும் எனும் ஆணவத்தில் இது தான் சரி என பெரியவர்கள் செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் மீண்டு வளர்கிறார்கள் என்பதால் அவர்களிடம் எனக்கு மரியாதை உண்டு.

குழந்தை வளர்ப்பை பற்றி இவர்கள் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது. பிறந்து தவழ துவங்கியதும் சூழலை கவனிக்க துவங்கும் குழந்தையை பராமரிக்க தெரியாமல் அவர்களை டீவியின் முன் போட்டுவிடுவார்கள். சில வருடத்தில் அந்த குழந்தை இதை நன்கு பழகிவிடும். பிறகு பள்ளிக்கு செல்லும் பொழுது உடனே இந்த பழக்கத்தை நிறுத்தவேண்டும் என நினைப்பார்கள் பெற்றோர்கள். என்னிடம் வந்து.. “ஸ்வாமி என்னேரமும் கார்ட்டூன் சானல் பார்க்கிறான். நீங்கதான் வழி சொல்லனும்” என்பார்கள்.

குழந்தை தங்களை தொல்லை செய்ய கூடாது என நினைத்து டீவி முன் உட்கார வைத்தார்கள். இப்பொழுது டீவியே அவர்களுக்கு தொல்லையாகிவிட்டது. குழந்தைக்கு தானே உணவு சாப்பிட கற்றுக்கொடுக்கிறேன் என துரித உணவுகளை (ஜங்க் புட்) கையில் கொடுத்து டீவி முன்னாலோ , வீடியோ கேம் முன்னாலோ அனுப்புவிடுவார்கள். இதை சாப்பிட்டு அந்த சிறுவனோ சிறுமியோ கார்ட்டூனில் வரும் பூதத்தை காட்டிலும் வீங்கிவிடுவார்கள். அப்புறம் என்னிடம் வந்து யோகா செய்து இவன் உடம்பை குறைக்கனும் ஸ்வாமிஜீ என்பார்கள்.உங்களை சுற்றி உள்ள பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கவனித்து பாருங்கள். பழம் மற்றும் தானிய வகைகளை அதிகம் சாப்பிட மாட்டார்கள். ஜங்க் புட் பழக்கம் அதிகமாக இருக்கும்.

குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை யோகபயிற்சி செய்ய தேவை இல்லை. நன்றாக உடல் அசைந்து விளையாடினாலே போது. என்னிடம் உடல் பருமனால் யோக பயிற்சிக்கு வரும் சிறுவர்களுடன் நான் விளையாட துவங்கினால் அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம் இருக்கிறதே... அவர்களின் உடல் வேர்வையை தாண்டி வழியும்.

அறிவியலை பற்றி எழுதினால் நீ என்ன அறிவியல் படித்தவனா என்கிறார்கள் பலர். குழந்தையை பற்றி எழுதினால் நீ என்ன குழந்தை பெற்றவனா உனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்பை பற்றி என்பார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டுகிறேன். நான் குழந்தையை பெற்றவன் அல்ல. எப்பொழுதும் குழந்தையாக இருப்பவன். எனக்கு என்னை எப்படி வைத்துக்கொண்டால் சுகந்திரமாக உணர்வேனோ, அதைத்தான் குழந்தைகளுக்கு செய்ய சொல்லுவேன்.

அடுத்த நாள் காலை 6 மணி.... நான் இருக்கும் அறையின் கதவு தட்டப்பட்டது.. திறந்தால் சுப்பாண்டியும் கிச்சுமணியுன் நின்று கொண்டிருந்தார்கள்.

சுப்பாண்டி கண்கள் கலங்கி ஒரு தெய்வீக பாவனையில் இருந்தான்.

சுப்பாண்டி என்னாச்சு என்றேன்.

“ஸ்வாமி.. எனக்கு ஒன்றும் தெரியாது தெரியாதுனு சொல்லி கடைசியில் இந்த பையனை தெய்வீகமாக்கீட்டீங்களே...!” என்றான்.

என்ன சுப்பு புரியற மாதிரி சொல்லு என்றேன். “ஸ்வாமி உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிகிட்டு போனோம் இல்லையா? அது வர்கவுட் ஆயிடுச்சு. காலையில் தூங்கிகிட்டு இருந்தான் அவனை எழுப்பினேன். எழுத்தவுடனே சுப்ரபாதம் பாடரான் ஸ்வாமி..”

எனக்கே அதிர்ச்சி தாங்கவில்லை. எங்க பாட சொல்லு கேட்போம்...

“டேய் கிச்சு பாடுடா...”

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா” என துவங்கினான் கிச்சு மணி.
இடைமறித்த சுப்பாண்டி பார்த்தீங்களா ஸ்வாமி என்றான்.

எனக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

“கிச்சு கண்ணா.. உனக்கு முழுபாட்டும் தெரியுமா? யாரு கத்துகொடுத்தா? ” என கேட்டேன்.

“முழுசும் தெரியும். தானா கத்துக்கிட்டேன்”

”எங்க பாடு பார்க்கலாம்” இது நான்.

“நேத்து கொடுத்த ஸ்வீட் கொடுங்க அப்பத்தான் பாடுவேன்” இது கிச்சு.

அவன் கைநிறைய இனிப்பும் கொடுத்து கால் சட்டை பையிலும் நிரப்பினேன்.

தொண்டையை செருமிகொண்டே..இடுப்பை லேசாக ஆட்டியவாரே கிச்சு பாடினான்...

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா சமர்பத்தே....
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பார்த்துகிட்டேதான் இருப்பேன். நான் பார்ததுகிட்டேதான் இருப்பேன்.....”

16 கருத்துக்கள்:

Mahesh said...

//தங்களுக்கு எல்லாம் தெரியும் எனும் ஆணவத்தில் இது தான் சரி என பெரியவர்கள் செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் மீண்டு வளர்கிறார்கள் என்பதால் அவர்களிடம் எனக்கு மரியாதை உண்டு.//
//எனக்கு என்னை எப்படி வைத்துக்கொண்டால் சுகந்திரமாக உணர்வேனோ, அதைத்தான் குழந்தைகளுக்கு செய்ய சொல்லுவேன்.//

சரியான கருத்துகள் !!

பரிசல்காரன் said...

அற்புதமான பதிவு ஸ்வாமிஜி!

அதுவும் குழந்தைகளுக்கு நாமே பழக்கப்படுத்தும் சில பழக்கங்களை நாமே நிறுத்த சிரமப்படுவதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!!!

அடியார் said...

உண்மையான கருத்துக்கள் ஸ்வாமி...

நல்ல பதிவு...

ஷண்முகப்ரியன் said...

சிந்தனையும் கூடவே சிரிப்புமாய்..நல்ல பதிவு ஸ்வாமிஜி.

thiru said...

அன்புள்ள ஐயா,

தங்கள் பதிவுகளில் பலவற்றைப் படித்திருக்கிறேன். இப்போது தான் மறுமொழி அளிக்கிறேன். எனவே இந்தப் பதிவிற்கு மட்டுமல்லாமல் தங்கள் மற்ற பதிவுகளுக்குமாக இந்த மறுமொழியை ஏற்றுக் கொள்ளவும்.

எதார்த்தம் என்ற சொல்லின் அர்த்தத்தை உங்கள் பதிவுகளில் காண்கிறேன். விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டையும் சரி சமமாக கலந்து உங்கள் பதிவுகளை இழைக்கிறீர்கள். ஜோதிடம்,ஜோதிடர் - இதற்கு இடையே உள்ள இடைவெளியை உங்கள் பதிவுகள் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. மாலை மயங்கும் நேரத்தில், ஒரு பூங்காவில் அமர்ந்து சுகமான தென்றல் காற்று வருடிச் செல்லும் அனுபவம் உங்கள் பதிவுகளில் கிடைக்கிறது. என்றோ தொலைந்து போன சாவி திடீரென்று கிடைத்த ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தங்கள் பதிவுகளுக்கு நன்றி.

-திருநாவுக்கரசு

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல உள் கருத்துள்ள அருமையான பதிவு.... நெடுநாளைக்கு மனதில் நிற்க வேண்டும் ( என்னோட குழ்ந்தை யசோதா - வயது 7 ..)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

உங்கள் கருத்துக்கு நன்றி. சுழி-சுட்டிக்கும் நன்றி :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அடியார்,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் பின்-ஊட்டம் எனக்கு ஆற்றலை அதிகரிக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திருநாவுக்கரசு,

உங்கள் கருத்துக்கள் மேலோட்டமாக இல்லாமல் முழுமையாக உணர்ந்து வழங்கி இருக்கிறீர்கள்.

உங்களை போன்றவர்களின் விமர்சனம் என்னை மேம்படுத்தும். விமர்சனம் தட்டிகொடுத்து மட்டும் சொல்லவேண்டும் என்பதல்ல.. கொட்டியும் சொல்லலாம்.

உங்கள் உளம்திறந்த கருத்துக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்திர ராமன்,

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தக்க சமயத்தில் தகவல் கிடைத்துள்ளது :)

உங்கள் வருகைக்கு நன்றி.

geethappriyan said...

சுவாமிஜிக்கு வணக்கம்,ஒரு மாதமாக தங்கள் பதிவுகளை பார்த்து படித்து வருகிறேன்.அருமையாக எழுதுகிறீர்கள்.அகோரிகளை பற்றிய சாதாரண எண்ணத்தை தகர்த்தது உங்கள் பதிவுகள்.பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை,ஹிந்து மதம் தான் எவ்வளவு பாரம்பர்யமும் பெருமையும் செறிவும் கொண்டது?அதன் சூட்சுமங்களை எளியவருக்கும் புரியுமாறு சொல்லி வரும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உங்களை என்ன அய்யிரே என்று அழைத்து வரும் கருத்துக்களுக்கும் கோபப்படாமல் விளக்கம் அளிக்கும் பண்பும் அருமை.
எல்லோருக்கும் நீங்கள் அறிந்தவற்றை கற்று கொடுக்க நினைக்கும் உங்களை பார்க்க பெருமையாக உள்ளது உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல்.நீங்கள் ஆசிரமம் வைத்துள்ளீர்களா?
உங்கள் பதிவின் படியே நானும் என் வர்ஷினியை (4 வயது) எதுவும் கட்டாயப்படுத்துவதில்லை.குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள் அல்லவா?(பின்)தொடர்ந்து வருகிறேன்
கார்த்திக்கேயன்
அமீரகம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்த்திகேயன்,

உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.

எனக்கு முடிந்த அளவு பிறருக்கு உபயோகமாக இருக்கிறேன்.

முகவரி தேடி அலையும் பொழுது தெருவில் வழிகாட்டுபவரின் விபரம் தெரிந்து கொள்வோமா? அதுபோல நீங்கள் அடைய வேண்டிய இடத்திற்கு நான் ஒரு வழிகாட்டும் வழிப்போக்கன் அவ்வளவே.... இதை தவிர என்னை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

வர்ஷினிக்கு எனது அன்பும் ஆசியும்.
உங்கள் வருகைக்கு நன்றி.

सुREஷ் कुMAர் said...

உண்மையில் சுவாமிஜியின் மகிமையோ மகிமை தான்..
கிளைமாக்ஸ்ஐ படித்து பயங்கரமா சிரிச்சுட்டேன்..

தமிழ்ப்பிரியா said...

வணக்கம் ஸ்வாமி!
தங்கள்,அனைத்து பதிவுகளையும் படித்தேன்... நகைச்சுவையுடன் கூடிய விஞ்ஞான,மெஞ்ஞான கருத்துக்கள் பாராட்டுதற்குரியது....