Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, January 8, 2009

எந்த கடவுளை வணங்குவது ?

- வேதம் காட்டும் வழி [பாடு]

சனாதான தர்மம் என அழைக்கப்படும் நமது பாரத கலாச்சாரத்தில் வழிபாடு என்பது ஓர் முக்கியமான அங்கமாக இருக்கிறது. மனித குலம் தோன்றிய முதலே வழிபாடு என்பதும் பிறந்தது எனலாம். கற்கால மனிதனாக இருந்த முதல் மனிதன், இயற்கை பொருட்களை வழிபடத் துவங்கினான். தனக்கு புரியாத அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியை வணங்கினான் என சொல்லலாம். உதாரணமாக மின்னல், இடி, சூரியன் இவை அனைத்தும் அவனுக்கு அதிசயமாகவும், அச்சத்தை தூண்டுபவையாகவும் இருந்தன. அதனால் அவற்றை வழிபட ஆரம்பித்தான்.


கற்கால மனித நாகரீகத்தின் செயல் தற்சமயத்திலும் கூட ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் இருப்பதை காண முடிகிறது. காட்டில் சிங்கம் மற்றும் பிற மாமிசம் உண்ணும் விலங்குகள் கொன்று வீசிய மிருக உடல்கள் காய்ந்து அதில் உள்ள எலும்புகள் மட்டும் எஞ்சி இருக்கும். மழை வரும் நேரத்தில் ஏற்படும் மின்னலை வழிபடும் இந்த பழங்குடியினர், மின்னல் விழும் திசையை நோக்கி ஓடுவார்கள். அங்கே குவிந்துகிடக்கும் எலும்புகளை பார்த்து மின்னல்தான் பூமியில் குவிந்துகிடப்பதாக எண்ணி மிருக எலும்பை எடுத்து வந்து வழிபட்டனர். இவ்வாறு இருந்த வழிபாடு மெல்ல முன்னேற்றம் அடைந்தது.

மனித நாகரீகம் வழிபாட்டு முறையை ஏற்படுத்த இருவேறு காரணம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை வணங்கும் தன்மை. இரண்டாவதாக உலக நிகழ்வுகளின் தன்மையை புரிந்துகொள்ளாததனால் ஏற்படும் அச்சம். இந்த இரு காரணமும் மனிதன் உருவாவதற்கு முன்பே அவன் மிருகமாக இருந்த காலத்திலேயே ஏற்பட்டது எனலாம்.

ஓர் மிருகம் தனது சக்தியைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த மிருகத்தை கண்டால் தாழ்ந்து மிகவும் அமைதியாக செல்வதை காணலாம். அதுபோல அச்சம் கொண்டு ஏற்பட்ட வழிபாடு மிருக நிலையில் இருக்கும் பொழுதே தோன்றியது என கூறலாம்.

மனித சமூகம் பழங்காலம் தொட்டுஅச்சத்தினாலும், ஆச்சர்யத்தினாலும் வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வரும் நேரத்தில் பாரத தேசம் தனது அறிவால் வழிபாட்டு முறைகளை கண்டறிந்து ஆழமாக வேர்விட்டு விருட்சமாக உயர்ந்தது.

பரந்து விரிந்த இந்த தேசம் மொழியால் வேறுபடாலும் தனது கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு இருக்கிறது என கூறுவார்கள். உண்மையில் கலாச்சாரத்தினால் என்பதைக் காட்டிலும் வழிபாட்டு முறையினால் ஒன்றுபட்டு இருக்கிறது என கூறலாம். வட இந்தியாவின் வடக்கு பகுதியில் வைணவதேவி என சக்தியை வழிபடும் மக்கள் தென் பகுதியின் தென்முனையில் கன்யாகுமரி என சக்தியை வழிபடுகிறர்கள். சிவ, விஷ்ணு வழிபாடு எங்கும் காணப்படும் ஒன்றாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது பாரத தேசத்தில் மனிதன் வழிபாட்டு முறையை ஒன்று போலவே வைத்திருந்தான் என்றும், அனைத்து வழிபாட்டு முறைக்கும் ஏதோ ஒரு கருத்து பொதுவாக இருந்திருக்க வேண்டும் என்றும் சிந்திக்க முடிகிறது.

கணக்கற்ற கோவில்கள் ஒவ்வொன்றிலும் பல கடவுள் உருவங்கள், அவற்றிற்கு காரண கதைகள், தல புராணங்கள் என பாரத தேச கோவில்கள் பற்றி ஆய்வு செய்தால் அதை வெளியிடும் புத்தகத்தின் பக்க அளவு பிரமாண்டமாக இருக்கும்.நமது சானாதன தர்மத்தின் உள்ளார்ந்த கருத்துக்கள் பற்றிய அறிவு பரவலாக அனைவரிடமும் குறைவு என கூறலாம். இதனால் நவ நாகரீகத்தில் இருக்கும் மக்கள் கோவிலுக்கு செல்வதையும், வழிபடுவதையும் பிற்போக்கான மூட நம்பிக்கையான எண்ணமாக காண்கின்றனர். வழிபாட்டு முறையில் அனைத்து பகுதிகளையும் தொட்ட ஓர் சமுதாயம் நமது பாரத சமுதாயம் என கூறமுடியும்.

எங்கும் வியாபித்து இருப்பவனின் தன்மை சில பொருட்களில் வெளிப்படுவதால், எல்லையற்ற இறை வனை அந்த பொருட்கள் மூலம் வழிபட்டனர். நமது வழிபாட்டு முறையில் உள்ள தத்துவத்தை மேலோட்டமாகப் பார்க்கும் வெளிநாட்டினர் பாரத மக்கள் உருவ வழிபாடு செய்பவர்கள் என எண்ணுங்கள்.

உண்மையில் வேத சாஸ்திரத்தில் ஒரு இடத்தில் கூட கடவுளின் உருவ நிலை விளக்கப்படவில்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் உருவநிலை விளக்கப்படுவதற்கான காரணம் இறைவன் அதில் ஓர் கதாபத்திரமாக வருவதாலும் , பாமர மக்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கவும் உருவாக்கப்பட்டது.

வேத சாஸ்திரத்தில் விளக்கப்பட்ட இறைநிலையை சற்று தெளிவாக காண்போம். அனைவராலும் பயன்படுத்தபடும் காயத்ரி மந்திரம் ரிக், யஜூர், சாம வேத்தில் காணப்படுகிறது. நான்கில் மூன்று வேதங்களிலும் காணப்படும் மந்திரங்களில் காயத்ரியும் ஒன்று. இந்த மந்திரத்தின் பொருளை எளிமையாக கூறவேண்டும் என்றால் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை ஒளிமயமான ஆற்றலை வணங்குகிறேன். இதில் குறிப்பிட்ட ஒளி என்னும் சொல் வெளிச்சத்தை குறிப்பதில்லை. ஒளிர்கின்ற மேல் நிலையை குறிக்கும்.

ரிக், யஜூர் வேதத்தின் சாரங்களான உபநிசத்துக்களில் 'தத்வமஸி','அஹம் பிரம்மாஸ்மி' எனும் இரு வாசகம் புகழ்பெற்றது. "நீயே அது" "உன் உள் பரம்பொருள் உறைகிறது" என்பதே இதன் விளக்கம். வேறு எந்த சாஸ்திரத்திலும் மனித நிலையில் கடவுள் தன்மை உண்டு என கூறப்பட்டது இல்லை. "நீயே அது" என பல விளக்கங்கள் உண்டு. இந்த ஒரு வாசகத்தை கொண்டு பல மணிநேரம் பிரசங்கம் நிகழ்த்தும் அளவுக்கு விஷயம் இதில் புதைந்து கிடக்கிறது.

வேத காலத்திற்கு முன்பு நமது கலாச்சாரத்தில் திகழ்ந்த சித்தாந்தம் சாங்கிய சித்தாந்தம். கபில முனிவர் இதை வரையறுத்தார் என கூறப்படுகிறது. பாரத கலாச்சாரத்தில் தோன்றிய முதல் சித்தாந்தம் என சாங்கியம் புகழப்படுகிறது. சாங்கிய தத்துவத்தில் "இறைவன்" எனும் கொள்கை இல்லை என்பதே ஆச்சர்யம் ஊட்டும் , அதிர்ச்சி கொள்ளச் செய்யும் விஷயம்.

இந்த உலகில்[ஜெகத்] நீ மட்டுமே இருக்கிறாய், உன்னை தவிர அன்னியமாக வேறு எதுவும் இல்லை. நீயே அனைத்திற்கும் கிரியா சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும் இருக்கிறாய். நீ இயற்கையின் ஓர் பிரிவு எனவே நீயே இயற்கை என மிகவும் உயரிய சித்தாந்தம் கொண்டது சாங்கிய தத்துவம். இங்கே நாம் ஒன்று கவனிக்க வேண்டும். மனிதன் ஓர் கண்டுபிடிப்பை கண்டறிகிறான் என்றால், முதலில் அதை முழுமையற்ற நிலையில் கண்டறிவான். பின்பு சிறிது சிறிதாக மேம்படுத்துவான். உதாரணமாக தொலைபேசியை கண்டுபிடிக்கும் பொழுது பெரிய அளவில் அதிக சிக்கலுடன் இருந்தது, இந்த குறைகளை தீர்த்து இப்பொழுது கைபேசியை பயன்படுத்துகிறோம். ஆகவே மனித கண்டுபிடிப்பில் மேம்பட்ட தன்மை கடைசி நிலையிலேயே வர வாய்ப்பு உண்டு. கண்டுபிடித்தது முதலே மேம்பட்ட நிலை வர வாய்ப்பு இல்லை. ஆனால் சாங்கிய தத்துவம் என்பது எடுத்தவுடன் மாபெறும் உயர்நிலையை அடைந்தது என கூறலாம். இக்கருத்தை கொண்டு ஆராய்ந்தால் இந்த உயர் சித்தாந்தம் மனிதனால் உருவாக்கப் பட்டது தானா? என கேள்வி எழுகிறது.

சராசரி மனிதன் சாங்கிய தத்துவத்தை உணர முடியாது. பல குழப்பங்களும், விரக்தியும் அடைய நேரிடும். இதனால் கபிலர் காலத்திற்கு பின்பு வந்தவர்கள் கடவுள் தன்மையை இத்துடன் இணைத்து எளிமைப்படுத்தினார்கள். இதனால்சாங்கிய மதம் தனது உருவை இழந்து பல்வேறு மதங்களாக பாரததில் உருவெடுத்தது. பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற எண்ணற்ற தத்துவங்கள் சாங்கிய சித்தாந்தத்தின் பல பரிணாமங்கள் எனலாம். முன்பு குறிப்பிட்டது போல நமது பாரதத்தில் சித்தாந்தம், முதலில் தோன்றும் பொழுதே உயர்நிலையில் [Advanced stage] இருப்பதாக கொண்டால் அதற்கு பின்பு அந்த உயர்நிலை மேம்பட பரிமாணமடைந்தால் எவ்வளவு உயர்நிலை பெற்றிருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

சாங்கியம் துவங்கி அனைத்து சித்தாந்தங்களிலும் மனித நிலை திரிகுணங்களில் இருக்கிறது என விளக்கப்படுகிறது. சாத்வ, ரஜஸ், தமஸ் எனும் இந்த முக்குணங்கள் நமது இயக்கநிலைக்கு காரணமாக இருக்கிறது. இந்த முக்குணமற்ற நிலை இறை நிலை என அழைக்கப்படுகிறது. இவற்றை மனிதர்கள் சராசரியான நிலையில் புரிந்துகொள்ள முடியாது என்பதால் தான், எளிமையான முறையில் பல மதங்களும் சித்தாந்தமும் நிலவுகிறது.

"தத்வமஸி" எனும் மஹா வாக்கியம், 'நீ அதுவே' என கூறுவதாக சொன்னேன். சிறிது சிந்தித்து பாருங்கள் உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்றால் அது சிறிது சிரமம் தான். கேட்கும் பொழுது புரிந்தது போல இருந்தாலும் உணர்வு நிலையில் இதை புரிந்துகொள்ள முடியாது. இந்த மஹாவாக்கியம் மனிதனை பொறுத்து மாறுபடுகிறது.

பிரம்மா தத்வமஸி எனும் வாக்கியத்தின் பொருளை தேவருக்கும், அசுரருக்கும் போதித்தார். தேவர்களுக்கு ஒரே குழப்பம். அது எப்படி நான் கடவுளாக முடியும் ? மீண்டும் பிரம்மாவிடம் வந்து விளக்கம் கேட்டனர். ஆனால் அசுரர்கள் தாங்களே கடவுள் என்ற எண்ணத்துடன் ஆணவ மிகுதியால் அழிவு செயலை துவங்கினார்கள். இந்த கதை மூலம் விளக்கப்படுவது யாதெனில் அஹம்பாவம் மற்றும் கீழ்குணம் கொண்ட மனிதனால் முழுமுதல் உண்மையான வேத கருத்துக்கள் புரியாது. எனவே அகம்பாவம் குறைய பிற வழிமுறைகளை பின்பற்றி தெளிவுற்றவுடன் 'சத்' தரிசனம் [உண்மை உணர்தல்] கிடைத்தால் மேம்பட்ட நிலை யை அடையலாம். இல்லையேல் மனிதன் அசுர நிலையை அடைய வழிவகுக்கும். நமது கோவில்கள் அதன் அமைப்பு மனித உடலை அடிப்படையாக கொண்டது. முதலில் கடவுளின் இடமாக கருதி வழிபட துவங்கும் மனிதன் இறுதியில் தன்னைத்தானே வழிபடுவதாக உணருவான். அங்கு மஹா வாக்கியம் 'தத்வமஸி' உணரப்படும்.


ஆகம சாஸ்திரம் கோவில் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் அமைப்பு செயல்படும் தன்மை ஆகியவற்றை விளக்குகிறது. நமது உடலில் உள்ள உறுப்புகள், நவ துவாரம், ஐந்து விதமான ப்ராணன், பஞ்ச கோசம், ஐம்புலன்கள் என இதன் அடிப்படையிலேயே கோவில்கள் அமைக்கப்படுகிறது.

நவ கோபுரங்கள் மனித உடலில் நவ துவாரத்தையும் அவனது மூளை மற்றும் சித்ராகாசம் என கூறப்படும் புருவ மத்தியப்பகுதி கருவறையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. நமது வழிபாட்டு முறைகள் மூன்று முக்கிய பிரிவுகளை கொண்டது அவை உருவம், அருவம் மற்றும் அருஉருவம். உருவநிலை இறைவழிபாடு நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான். பெருமாள், முருகன், அம்பாள் என மனித உருவில் அவர்களை வழிபடுகிறோம். இதற்கு உருவ வழிபாடு என பொருள்.

அருவம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. இல்லாத ஒரு விஷயத்திற்கு எப்படி விளக்கம் கூற முடியும் ? அருஉருவம் என்பது அருவ நிலையில் இருக்கும் உருவ அமைப்பு. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 'உருஅருவம்' என கூறாமல் அருஉருவம் என்றே வழங்கப்படும் தன்மை. அருவம் முதலில் இருக்க உருவம் பின்பு வருகிறது. இதற்கு சிவலிங்க ரூபம் ஓர் உதாரணம். சுயம்பு நிலை விக்ரஹங்கள், மஞ்சள் பிள்ளையார் என அனைத்திலும் அருஉருவ நிலை உண்டு. சராசரி மனிதன் படிப்படியாக அருவநிலை வழிபாட்டை அடைய உருவம், அருஉருவம் என அமைப்பை ஏற்படுத்தினார்கள். மூன்று வகையான வழிபாட்டு முறை மூன்று குண ரீதியாகவும் அமைகிறது. ஓர் சிறு குழந்தையை அழைத்து அருவ நிலை வழிபாட்டை விளக்கினால் அக்குழந்தை புரிந்துகொள்ள முடியாது. மாறாக அக்குழந்தைக்கு மன அழுத்தம் உருவாகும். இன்னும் எளிமையாக சொன்னால் குரங்கை நினைக்காமல் மந்திரம் சொல்லும் கதையாக மாறிவிடும்.

நமது உடலில் 72,000 நாடிகள் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த 72,000 நாடிகளில் மூன்று முக்கிய நாடிகள் மனிதன் உயர்நிலைக்கு செல்லவும், கர்மங்கள் செய்யவும் உதவுகிறது. இடா நாடி, பிங்கள நாடி மற்றும் சுழுமுனை என தமிழில் கூறப்படும் இந்த நாடிகள் மனித செயலை தீர்மானிக்கிறது. எனவே இந்த மூன்று தன்மையை உணர்த்தும் நோக்கில் உருவ வழிபாடு அமைகிறது. இவற்றை புரிந்துகொள்ள உருவ நிலை விக்ரஹங்கள் எவ்வாறு மூன்று தன்மை பெறுகிறது என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இறைநிலை ---------------------இடா--------------------- சுழுமுனை---------------- பிங்கலை

பெருமாள் --------------------- பூதேவி ---------------------ஸ்ரீ விஷ்ணு----------------- ஸ்ரீ தேவி
முருகன்------------------------- வள்ளி ---------------------முருகன் ---------------------தெய்வானை
விநாயகர்---------------------- சித்தி ------------------------விநாயகர் --------------------புத்தி
ஸ்ரீ ராமர் ------------------------லஷ்மணர் -----------------ஸ்ரீ ராமர்---------------------- சீதாதேவி
ஜெகந்நாதர் -------------------பலராமர் --------------------ஸ்ரீ கிருஷ்ணர் -------------- சுபத்ரா
சிவன் ---------------------------கங்கை ---------------------சிவன் --------------------------பார்வதி
ஸ்ரீகிருஷ்ணர் ----------------- ருக்மணி -------------------ஸ்ரீ கிருஷ்ணர் ---------------பாமா

நாடிகளின் தன்மை சராசரி மனிதனுக்கு புரிவதில்லை. அவர்கள் இறைவனுக்கு இரு மனைவிகள் என தவறாக பொருள் கொள்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கருவறை 72,000 பொன் ஓடுகளால் அமைக்கப்பட்டு, மூன்று முக்கிய நாடிகளையும் பிரதிபலிக்கும் வண்ணமும் உருவாக்கப்பட்டுள்ளது.


ஆழ்ந்து சிந்திதோமானால் நமது ஒவ்வொரு செயலும் அர்த்தம் கொண்டதாக அமைகிறது. ஐம்புலன்களும் செறிவு பெற்றால் மேம்பாடு அடைந்து இறைநிலை உணரலாம் எனும் தத்துவத்தின் அடைப்படையில் கோயிலில் உள்ள செயல்கள் அமைந்துள்ளது. ஐம்புலன் செயல்படும் தன்மை கோவிலில் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என காண்போம்.

உறுப்பு ------------------செயல்கோவில் -----------------சம்பிரதாயம்
காது ---------------------ஓசை --------------------------------மணிஓசை
மூக்கு -------------------நுகரும் தன்மை ------------------சுகந்த சாம்ராணி - சந்தனம்
வாய் ---------------------ருசி --------------------------------- பிரசாதம், பழங்கள்
தோல் ------------------தொடு உணர்வு ---------------------கற்பூர ஆரத்தி, நமஸ்காரம்
கண் ---------------------பார்வை -------------------------------அலங்காரம், கோவில் சிற்பம்.

மேற்கண்ட செயல்மூலம் தூய்மை அடையும் ஐம்புலனும் சமாதானம் அடைந்து செயலை நிறுத்திவிடும். ஆன்மா தனது செயலை துவங்கி வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது செய்யும் ப்ரார்த்தனை முழுமையான ஆன்ம உயர்வுக்கு வழி ஏற்படும்.



நமது சானதன தர்மங்கள் இவ்வாறு செழித்து வளரும் நிலையில் பல தவறான நபர்களால் சிதறடிகப்பட்டு மூடப்பழக்கங்கள் புகுந்தது. அவற்றை சரியான வழிப்படுத்தி மேன்மை அடைய ஆதிசங்கரர் அவதரித்தார். தனது தெய்வீக ஆற்றலால் ஆறுவிதமான வழிபாட்டுமுறையை ஸ்தாபித்தார். இவை ஷண்மதங்கள் என அழைகப்படுகிறது. சூரியன், சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், விநாயகர் என தனித்தனியே வகை பிரித்து வழிபாட்டு முறையை சரிபடுத்தினார்.

அத்வைத கொள்கை கொண்ட ஆதிசங்கரர் ஷண்மதங்களை கொடுத்த காரணம் என்ன? சராசரி மனிதன் ஷண்மதங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தன்னை மேம்படுத்தினால் இறுதியில் அத்வைத நிலையை உணரமுடியும் என்ற ஆழமான நம்பிகையில் ஷண்மதங்களை உருவாக்கினார்.

ஆதிசங்கரர் கூறிய வழிபாட்டு முறைகளில் எதை தேர்ந்தெடுப்பது எனும் குழப்பம் இயற்கையானது. சிவன் கோவிலை எடுத்துக்கொண்டால் அங்கு பார்வதி, முருகன் மற்றும் விநாயகருக்கு தனி சன்னிதி உண்டு. நவகிரகத்தில் சூரியனும் வீற்றிருப்பார். ஷண்மதங்களில் சிவன் கோவிலிலேயே நான்கு மதங்களும் இருப்பதால் ஷண்மதங்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பவர்கள் குழப்பமடைவார்கள். ஜோதிடம் இதற்கு எளிய தீர்வை வழங்குகிறது. 5ஆம் பாவகம் வழிபாட்டு முறையை குறிக்கும் பாவகம்.

5ஆம் பாவ கிரகங்கள் தொடர்பை பொறுத்த ஷண்மதங்களை தேர்வு செய்யலாம்.

கிரகம்--------------------- ஷண்மதம் மற்றும் ---------------------நடைமுறையில் வழிபாடுகள்
-------------------------பிற வழிபாடு உள்ள தன்மை ----------------------------------------------------------

சூரியன்--------------------- சூரிய வழிபாடு ---------------------சூரிய நாராயணன்
சந்திரன் -------------------- சக்தி வழிபாடு --------------------- பார்வதி - அம்மன்
செவ்வாய் ----------------- கௌமாரம் -------------------------முருகன்
புதன் ------------------------- வைணவம் -------------------------பெருமாள்
குரு -------------------------சைவம் -------------------------------தஷிணாமூர்த்தி, பைரவர்
சுக்கிரன் -------------------அரு உருவ நிலை ----------------ஸ்ரீ வித்யா
சனி -------------------------அருவ நிலை --------------------- அத்வைத நிலை
ராகு -------------------------தாந்த்ரீக முறை -----------------காளி, பலி கொடுக்கும் முறை
கேது -------------------------கணபதியம் ------------------------விநாயகர்

5ஆம் பாவக அதிபதி, உபநட்சத்திரம் மற்றும் 5ஆம் பாவகத்தை தொடர்பு கொள்ளும் கிரகத்தை கொண்டு வழிபடும் இறைநிலையை தேர்ந்தெடுக்கலாம். வழிபாடு என்பது மனிதனை நல்வழிப்படுத்த மட்டுமல்ல, அம்மனிதன் தன்னைத்தானே உணரவேண்டும் என்பதால் தான். நீங்கள் எனக்கு இட்ட ஆணையால் மேற்கண்ட கருத்துக்களை விவரித்து இருக்கிறேன். உங்கள் குழப்பம் புரிகிறது. நீங்கள் எப்பொழுது ஆணையிட்டீர்கள் என யோசிக்க வேண்டாம்.

இறைவனின் ஆணையால் இதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். என்பதையே அப்படி சொன்னேன். நமது வேத சாரம் கூறும் கருத்து அதுதானே / மறந்துவிடாதீர்கள்.


தத்வமஸி - நீயே அது !


சித்திரை ஏப்ரல்- மே 2008

8 கருத்துக்கள்:

sundar said...

Swami,
Its a great analytical article. Can you explain me how to see "UPA nakshatra for a bhavam?

Thank you

Sundar

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்தர்,

நன்றி.

K P முறையில் ஜாதகம் கணித்தால் உபநட்சத்திரம் காண முடியும்.

krish said...

Swami,
Excellent article. Thanks

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருஷ்,

உங்கள் கருத்துக்கு நன்றி.

YOGANANDAM M said...

i have in 5 bhava 2 khiragam. one is sun and second is mercury both are ashvini star. which god i hv 2 follow.

Thank u
yoga

ஸ்வாமி ஓம்கார் said...

திரு யோகாநந்தம்,

உங்கள் தமிழீஷ் நன்றாக இருக்கிறது :)

உங்கள் கருத்தை வைத்து பார்க்கும் பொழுது சூரியன் பலம் பொருந்திய கிரகமாக இருக்கிறது. சூரியனுக்கு உண்டான வழிபாடு செய்யவும்.

மேலும் உங்களுக்கு யோக பயிற்சி செய்வதிலும் ஆத்ம தியானத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அதையும் பின்பற்றவும்.

sarul said...

வணக்கம் ஸ்வாமி
தங்களுடைய தெளிவான பதிவிற்கும் தமிழுக்கும் என்னுடைய நன்றிகள் பல.
என்னுடைய் ஜாதகத்தில் 5 இல் செவ்வாய் ஆட்சி , 5 ம் பாவ உப நட்சத்திராதிபதி புதன் ,இரண்டில் எதை எடுத்துக்கொள்ளவேண்டும் ?

Anonymous said...

வணக்கம் திரு ஓம்கார் சுவாமி, சிறிது நாட்களாக உங்கள் வலைப்பதிவை படித்து வருகிறேன். மிகவும் அறிவுப்பூர்வமாக உள்ளது. தத்வமசி என்ற வாக்கியத்துக்கு "நீ அதுவே", அதனால் எல்லோரிடமும் அது உள்ளது என்றும், அதனால் என்னையும் வணங்கி, எல்லோரிடையும் மரியாதையுடன் இருப்பது என்று அர்த்தம் புரிந்து கொண்டுள்ளேன். இது மட்டுமே சரியான அர்த்தம் என்று நினைக்கவில்லை. இப்போதைக்கு என்னால் தெரிய முடிந்தது என்று சொல்கிறேன். உங்கள் பதிவை மேலும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

PS: I came here accidentally from one of my blog reader's list of blogs that he reads. My Tamil is not very good, So please excuse me.